"டிமாண்ட்" உள்ள பொருளுக்கு விலையேற்றி விற்பது என்ற கொள்ளை இன்று குறுந்தகவல் வரை வந்து நிற்கிறது. புத்தாண்டு அன்றோ, முதல் நாளோ குறுந்தகவல் அனுப்பினால் அதிக பைசா வசூலாம். நம் மக்கள் அதற்கெல்லாம் சளைத்தவர்களா என்ன. 29ம் தேதி, 30ம் தேதியே வாழ்த்து 'எஸ்.எம்.எஸ்'கள் அனுப்பத் துவங்கி விடுகிறார்கள். இப்படியே அதிக கட்டணங்களுக்கான நாட்களை கூட்டிக் கொண்டே போய் மக்கள் அக்டோபர், நவம்பர் மாதத்திலேயே புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் போல. இருக்கட்டும், நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியாவிட்டாலும், ஜஸ்ட் இன்று உங்களை நினைக்கிறேன் என்ற வகையில் ஒரு குறுந்தகவலும் உவப்பானதே.
ஒரு காலம் இருந்தது. புத்தாண்டு வாழ்த்து சொல்ல, செல்ஃபோனில் உள்ள தொள்ளாயிரத்து சொச்சம் எண்களுக்கும் வரிசையாக குறுந்தகவல் அனுப்புமாறு சிறிய மென்பொருள் "கோட்டிக்காரத்தனம்" செய்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது, வரும் வாழ்த்துகளுக்கு சம்பிரதாய நன்றி சொல்லும் அளவில் நிற்கிறது.
பெரிதாக புத்தாண்டு கொண்டாட்டங்கள், சபதங்கள் என்ற ஆடம்பர அலப்பரைகளில் சிக்கிக் கொள்ளும் பழக்கம் இப்போது வரை இல்லை. எல்லாரும் புத்தாண்டை கொண்டாட "மலையேற" விரும்புகையில், நான் மலைதேசத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது வந்த இரண்டு புத்தாண்டு தினங்களில் மலையிறங்கி மதுரை வந்துவிட்டேன். அந்த அளவு தான் நம் கொண்டாட்ட மனநிலை. ஆனால், ஒரு அளவீடாக கடந்த ஆண்டு எதையெல்லாம் கிழித்திருக்கிறோம் என்று கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதுண்டு. வழக்கமாக கிழித்த பேப்பரெல்லாம் கப்பல் விட்டு விளையாண்டதாய் தான் இருக்கும். இந்த ஆண்டு கொஞ்சம் பெரிய கப்பல் எல்லாம் விட்டிருப்பது போலத் தோன்றுகிறது. இல்லற வாழ்வு துவக்கம், மக்கட்செல்வம், புதுவீடு கட்டி குடியேறுதல், கோவில் குடமுழுக்கு, ஆராய்ச்சிப்படிப்பு துவக்கம், முதன்முதலில் அச்சேறிய படைப்பு என எல்லா விதங்களிலும் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது இந்த ஆண்டு.
அப்புறம், ஒரு சரித்திர சாதனையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பத்து திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். திருமண வருடம் என்றால் அப்படித்தானாம் :)
இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நிச்சயம் இந்த 2011 ஒரு மைல்க்கல். அந்த அளவில் என்றும் நினைவிலிருக்கும் என் இனிய நண்பன் இந்த 2011.
சென்று வா என் நண்பனே!
பிறக்கவிருக்கும் புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும் பெற்றிட இனிய புத்தாண்டு வாழ்த்துகள். :)
******