Monday, July 25, 2022

தவிட்டுக் குருவி

#memoriesforlife 
---
”ஒரு தோட்டத்தில், மரத்தைச் சுற்றி காலாற நடை பயின்று கொண்டிருந்தது ஒரு பூனை. ஒரு தவிட்டுக் குருவி பறந்து பறந்து வந்து அந்த பூனையைக் கொத்திச் சென்றபடியே இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டிருந்த பூனை ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ஒரே தாவலில், அந்தக் குருவியைப் பிடித்துவிட்டது. பூனை குருவியைக் கடிக்கப் போனது.”

இந்தக் கதைக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கள் என்றுதான் இன்று ”வருங்கால எழுத்தாளர்களே” என்ற தலைப்பில் நடந்த வளரிளம் பருவத்து மாணவர்களுக்கான இணைய பயிற்சிப் பட்டறையில் என் பேச்சைத் துவக்கினேன். இதே கதையை பெரியவர்கள் கலந்துகொண்ட வேறு சில நிகழ்வுகளிலும் சொல்லி இருக்கிறேன். பெரியவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல், “வலியவனிடம் வம்பிழுக்கும் எளியவனுக்கான தண்டனை அது” என்றே கூறினர். ஆனால் இன்று சிறுவர்கள் ஒருவர் கூட அந்த திசையில் யோசிக்கவில்லை என்பதோடு, விதவிதமான நேர்மறை முடிவுகளைச் சொல்லி அசத்தினர். வழக்கமாக, கலந்துரையாடல் முடியும் போது, ”அந்த பூனைக்கு அருகில் மரத்தின் மேலிருக்கும் கூட்டில், அந்தக் குருவியின் குஞ்சுகள் இருந்தன” என்று ஒரு துப்பினைக் கொடுத்த பிறகு பெரியவர்கள் அப்படியே முடிவை மாற்றிச் சொல்வார்கள். ஆனால் இன்று அதற்கான தேவைகூட வரவில்லை. கதையின் முடிவை வெவ்வேறு விதங்களில் சொன்ன மாணவர்கள் அனைவருக்குமே குருவியைக் காப்பாற்றுவதே ஒரே எண்ணமாக இருந்தது. அதிலும், ஒரு சிறுமி இன்னும் ஒரு படி மேலே சென்று, “பூனைக்குப் பின்புறம் ஒரு பாம்பு வந்துகொண்டிருந்தது. பாம்பிடமிருந்து பூனையைக் காப்பாற்றும் பொருட்டே குருவி பறந்து பறந்து கொத்தி எச்சரிக்கை செய்தது” என்று கதையின் முடிவைச் சொன்னதுடன் அதை அந்தக் குறைந்த இடைவேளையில் அழகிய படமாகவும் வரைந்து வைத்திருந்தாள். ஒரு நிமிடம் கண் கலங்கிவிட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிக நிறைவான ஒரு நிகழ்வு. நிகழ்வின் முழு காணொளி முதல் மறுமொழியில் இருக்கின்றது. நேரமிருக்கும் நண்பர்கள் பார்க்கலாம்.

இணைய நிகழ்வை திறம்பட நடத்தி, காணொளியும் பதிவு செய்த KenBridge Schoolக்கு நன்றி !

******

Thursday, July 21, 2022

அதிகாரம்!

ஒசூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் வேலைக்குச் சென்று வர சுமார் இரண்டாயிரம் பேர் பயணிகள் ரயிலை நம்பி உள்ளனர். ஏற்கனவே இருக்கும் ரயில் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத நிலையில், பெருந்தொற்றுக் காலத்தில் நிறுத்தப்பட்ட சில ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. மக்கள் அதற்கான கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசியல்வாதிகளிடமும், ரயில்வே அதிகாரிகளிடமும் கொடுத்து பல மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.

தென்மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு ஒசூர் பயணிகளின் மேல் எப்போதும் அளவுகடந்த பாசம். அதற்குத் தற்போதைய எடுத்துக்காட்டு, "கூடுதல் ரயில் தானே கேட்ட, இந்த வச்சுக்கோ!" என்று மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் கிளம்பி, ஒசூருக்கு மாலை 5 மணிக்கு வந்து, மீண்டும் ஒசூரில் இருந்து மாலை 7.30மணிக்கு யஷ்வதந்த்பூர் சென்று சேர்வது போல ஒரு சிறப்பு பயணிகள் ரயிலை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது தேவை அதிகம் இருக்கும் திசைக்கு நேர் எதிரில் சேவையை அதிகரித்துள்ளனர்.

இதே போல தான் ஒசூர்க்காரர்களின் தொல்லை தாங்க மாட்டாமல், சென்ற ஆண்டு மதியம் 12.00 மணிக்கு ஒசூரில் இருந்து கிளம்பி, 1.30 மணிக்கு பெங்களூர் சென்று மீண்டும் 3.00 மணிக்கு ஒசூர் வரும் ஒரு சிறப்பு ரயிலை விட்டனர். அது எதிர்பார்த்தது போலவே, காலி பெட்டிகளுடன் சென்று திரும்பியதால் ஒரு மாதத்தில் "ஓசூர் பயணிகளிடம் பெங்களூர் ரயில்களுக்குப் போதிய வரவேற்பு இல்லை" என்று அந்த ரயிலை ரத்து செய்துவிட்டார்கள். இப்போது அறிவித்திருக்கும் புதிய ரயிலுக்கும் அதே கதி தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு பக்கம் பயணிகள் ரயிலுக்கு இன்றியமையாத தேவை இருக்கும் போது, மக்கள் பலவிதங்களில் அழுத்தம் கொடுத்து சேவைக்கான ஆணைகளைப் பெற்றாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் என்ன நினைக்கிறார்களோ அது தான் நடக்கிறது. கோப்புகளின் சாட்சிகளின் படி, "இந்தத் தடத்தில் புதிய ரயில் விடப்பட்டது, மக்களிடம் ஆதரவு இல்லை, அதற்கான சான்று இணைக்கப்பட்டுள்ளது, எனவே ரயில் ரத்து செய்யப்படுகின்றது" என்று அழகாக நோட் ஷீட் எழுதி மூடி வைத்துவிடுவார்கள். அதனைப் பிற்காலத்தில் யாரும் சோதனை செய்ய வேண்டி வந்தாலும் "ஆமாம் சரி தான்" என்றே தீர்ப்பெழுதப்படும்.

உண்மையில் காலையில் பணிக்குச் செல்ல ஒசூரில் இருந்து பெங்களூருக்கும், மாலையில் பணி முடிந்து பெங்களூரில் இருந்து ஒசூருக்கும் வரும்படியான கூடுதல் ரயில்களை எதிர்பார்த்திருக்கும் ஒசூர் வாசிகள், "எங்களைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது?" என்று யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

#HosurDiary
#TrainStory

- பாலகுமார் விஜயராமன்