Monday, July 25, 2022

தவிட்டுக் குருவி

#memoriesforlife 
---
”ஒரு தோட்டத்தில், மரத்தைச் சுற்றி காலாற நடை பயின்று கொண்டிருந்தது ஒரு பூனை. ஒரு தவிட்டுக் குருவி பறந்து பறந்து வந்து அந்த பூனையைக் கொத்திச் சென்றபடியே இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டிருந்த பூனை ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ஒரே தாவலில், அந்தக் குருவியைப் பிடித்துவிட்டது. பூனை குருவியைக் கடிக்கப் போனது.”

இந்தக் கதைக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கள் என்றுதான் இன்று ”வருங்கால எழுத்தாளர்களே” என்ற தலைப்பில் நடந்த வளரிளம் பருவத்து மாணவர்களுக்கான இணைய பயிற்சிப் பட்டறையில் என் பேச்சைத் துவக்கினேன். இதே கதையை பெரியவர்கள் கலந்துகொண்ட வேறு சில நிகழ்வுகளிலும் சொல்லி இருக்கிறேன். பெரியவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல், “வலியவனிடம் வம்பிழுக்கும் எளியவனுக்கான தண்டனை அது” என்றே கூறினர். ஆனால் இன்று சிறுவர்கள் ஒருவர் கூட அந்த திசையில் யோசிக்கவில்லை என்பதோடு, விதவிதமான நேர்மறை முடிவுகளைச் சொல்லி அசத்தினர். வழக்கமாக, கலந்துரையாடல் முடியும் போது, ”அந்த பூனைக்கு அருகில் மரத்தின் மேலிருக்கும் கூட்டில், அந்தக் குருவியின் குஞ்சுகள் இருந்தன” என்று ஒரு துப்பினைக் கொடுத்த பிறகு பெரியவர்கள் அப்படியே முடிவை மாற்றிச் சொல்வார்கள். ஆனால் இன்று அதற்கான தேவைகூட வரவில்லை. கதையின் முடிவை வெவ்வேறு விதங்களில் சொன்ன மாணவர்கள் அனைவருக்குமே குருவியைக் காப்பாற்றுவதே ஒரே எண்ணமாக இருந்தது. அதிலும், ஒரு சிறுமி இன்னும் ஒரு படி மேலே சென்று, “பூனைக்குப் பின்புறம் ஒரு பாம்பு வந்துகொண்டிருந்தது. பாம்பிடமிருந்து பூனையைக் காப்பாற்றும் பொருட்டே குருவி பறந்து பறந்து கொத்தி எச்சரிக்கை செய்தது” என்று கதையின் முடிவைச் சொன்னதுடன் அதை அந்தக் குறைந்த இடைவேளையில் அழகிய படமாகவும் வரைந்து வைத்திருந்தாள். ஒரு நிமிடம் கண் கலங்கிவிட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிக நிறைவான ஒரு நிகழ்வு. நிகழ்வின் முழு காணொளி முதல் மறுமொழியில் இருக்கின்றது. நேரமிருக்கும் நண்பர்கள் பார்க்கலாம்.

இணைய நிகழ்வை திறம்பட நடத்தி, காணொளியும் பதிவு செய்த KenBridge Schoolக்கு நன்றி !

******

Thursday, July 21, 2022

அதிகாரம்!

ஒசூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் வேலைக்குச் சென்று வர சுமார் இரண்டாயிரம் பேர் பயணிகள் ரயிலை நம்பி உள்ளனர். ஏற்கனவே இருக்கும் ரயில் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத நிலையில், பெருந்தொற்றுக் காலத்தில் நிறுத்தப்பட்ட சில ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. மக்கள் அதற்கான கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசியல்வாதிகளிடமும், ரயில்வே அதிகாரிகளிடமும் கொடுத்து பல மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.

தென்மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு ஒசூர் பயணிகளின் மேல் எப்போதும் அளவுகடந்த பாசம். அதற்குத் தற்போதைய எடுத்துக்காட்டு, "கூடுதல் ரயில் தானே கேட்ட, இந்த வச்சுக்கோ!" என்று மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் கிளம்பி, ஒசூருக்கு மாலை 5 மணிக்கு வந்து, மீண்டும் ஒசூரில் இருந்து மாலை 7.30மணிக்கு யஷ்வதந்த்பூர் சென்று சேர்வது போல ஒரு சிறப்பு பயணிகள் ரயிலை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது தேவை அதிகம் இருக்கும் திசைக்கு நேர் எதிரில் சேவையை அதிகரித்துள்ளனர்.

இதே போல தான் ஒசூர்க்காரர்களின் தொல்லை தாங்க மாட்டாமல், சென்ற ஆண்டு மதியம் 12.00 மணிக்கு ஒசூரில் இருந்து கிளம்பி, 1.30 மணிக்கு பெங்களூர் சென்று மீண்டும் 3.00 மணிக்கு ஒசூர் வரும் ஒரு சிறப்பு ரயிலை விட்டனர். அது எதிர்பார்த்தது போலவே, காலி பெட்டிகளுடன் சென்று திரும்பியதால் ஒரு மாதத்தில் "ஓசூர் பயணிகளிடம் பெங்களூர் ரயில்களுக்குப் போதிய வரவேற்பு இல்லை" என்று அந்த ரயிலை ரத்து செய்துவிட்டார்கள். இப்போது அறிவித்திருக்கும் புதிய ரயிலுக்கும் அதே கதி தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு பக்கம் பயணிகள் ரயிலுக்கு இன்றியமையாத தேவை இருக்கும் போது, மக்கள் பலவிதங்களில் அழுத்தம் கொடுத்து சேவைக்கான ஆணைகளைப் பெற்றாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் என்ன நினைக்கிறார்களோ அது தான் நடக்கிறது. கோப்புகளின் சாட்சிகளின் படி, "இந்தத் தடத்தில் புதிய ரயில் விடப்பட்டது, மக்களிடம் ஆதரவு இல்லை, அதற்கான சான்று இணைக்கப்பட்டுள்ளது, எனவே ரயில் ரத்து செய்யப்படுகின்றது" என்று அழகாக நோட் ஷீட் எழுதி மூடி வைத்துவிடுவார்கள். அதனைப் பிற்காலத்தில் யாரும் சோதனை செய்ய வேண்டி வந்தாலும் "ஆமாம் சரி தான்" என்றே தீர்ப்பெழுதப்படும்.

உண்மையில் காலையில் பணிக்குச் செல்ல ஒசூரில் இருந்து பெங்களூருக்கும், மாலையில் பணி முடிந்து பெங்களூரில் இருந்து ஒசூருக்கும் வரும்படியான கூடுதல் ரயில்களை எதிர்பார்த்திருக்கும் ஒசூர் வாசிகள், "எங்களைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது?" என்று யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

#HosurDiary
#TrainStory

- பாலகுமார் விஜயராமன்

Wednesday, June 29, 2022

தேர்வுகள் கடினமாக்கப்பட வேண்டுமா?

சிறந்த அரசின் கொள்கை என்பது அதன் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்புகள் வழங்குவது மட்டுமல்ல பின் தங்கிய அடித்தட்டு மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்குவது, அவர்கள் மேலெழுந்து வரும் வரை தொடச்சியான வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது.

கல்வித் துறையில் எண்ணிக்கை குறைவாகத் தேர்வாவதால் மட்டுமே ஒரு சிஸ்டம் சிறந்தது என்றோ அதிகமானோரைத் தேர்ச்சி அடையச் செய்வதால் மற்றொன்று தரம் தாழ்ந்ததாகவோ ஆகிவிடாது. இந்தியா போன்ற மக்கள் வளம் மிகுந்த நாடுகளில் இளம் தலைமுறையினரின் ஆற்றலை முறைப்படுத்தி ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.  சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகள் மலிந்து போயிருக்கும் சமூகத்தில் கல்வியும் அதன் மூலம் கிடைக்கும் "சான்றிதழும்", வேலை வாய்ப்பும் ஒருவனை எத்தனை உயரத்திற்கு ஏற்றிச் செல்லும் என்று சிந்திக்க வேண்டும்.

மாறாக, 'தரம்' சரியில்லை என்று ஒரு கோட்டைக் கிழித்து ஒரு வகுப்பில் ஐம்பதுக்கு நாற்பது பேரைத் தோல்வியடையச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அத்தோடு கல்விச் சாலை பக்கம் திரும்பாத அதில் பெரும்பான்மையினர் சமூகத்தின் அதே அடுக்கிலோ அல்லது அதற்குக் கீழேயேயோ தேங்கிவிடுகின்றனர். அப்படியின்றி, எளிய தேர்ச்சி முறைகள் மூலம் அவர்கள் மேல் வகுப்புகளுக்குச் செல்லும் போது கற்றல் அனுபவம் போக, தன்னம்பிக்கை, ஒரு சூழ்நிலையைக் கையாளும் மனப்பக்குவம், பரந்த உலகத்தைக் காணுதல் என்று அதிக அனுபவத்தையே பெறுகின்றனர்.

" பத்தாவது வகுப்பு வரை இந்த அனுபவம் போதும், உயர்கல்விக்கு கறாரான தேர்வு முறை வேண்டும்" என வெளியிலிருந்து பார்க்கும் ஒருவர் யோசிப்பாரேயானால், ஒரு மாணவனின் சமூகக் கற்றல் பயணத்தை அரசும், இப்போதுள்ள கல்வி அமைப்பும் உயர்த்தி விட வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது அதனை நாம் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?

இன்னொரு சாராரின் கருத்து, அரைகுறையாய் பட்டதாரியாக வெளிவரும் ஒருவனைக் காட்டிலும் பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்திவிட்டு ஒரு பட்டறைக்கு வேலைக்குச் செல்லும் ஒருவன் சிறந்த வேலைக்காரனாக வருவான் என்பது. சிறந்த வேலைக்காரனாக வந்து... உங்கள் பைக் டயருக்கு சிறந்த முறையில் பஞ்சர் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? அதற்கு அவன் அரைகுறை பட்டதாரியாகி ஒரு அலுவலகத்தில் மின்விசிறிக்குக் கீழ் குமாஸ்தா வேலை பார்த்துக் கொண்டிருக்கட்டுமே, அவன் தனது முதல் இரண்டு அலுவலகக் கடிதங்களை தப்பும் தவறுமாய் எழுதிப் பின் திருத்திக் கொள்ளட்டுமே... என்ன குறைந்து விடப் போகிறது?

Thursday, May 5, 2022

தமிழ் விக்கி(பீடியா)

தமிழ் விக்கிபீடியா கட்டற்ற களஞ்சியமாக இல்லாமல் குறுங்குழுவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது, எனவே இலக்கியத்தை முழுமையாக உள்ளடக்கும் வகையில் புதிதாக "கட்டுப்பாட்டுடன்' கூடிய இன்னொரு கலைக் களஞ்சியத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் போல. நல்லது, பொது வெளியில் பண்பாடு, கலை, இலக்கியம் சார்ந்த தகவல்கள் நிரம்பி வருவது ஏற்புடையதே. ஆனால் எத்துறையில் ஒரு புதிய முயற்சியைத் துவங்கினாலும் அது ஏற்கனவே அத்துறையில் பலகாலமாக நிகழ்ந்தவைகளின் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும். அப்போது தான் அது இன்னும் செம்மையடைந்து மெருகேறும்.

அப்படியில்லாமல், தமிழ் விக்கிபீடியாவில் இத்தனை ஆண்டுகள் பலரின் கூட்டு முயற்சியால் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல் களஞ்சியத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளி விட்டு, அதே போன்றதொரு வார்ப்பில் மீண்டும் ஒன்றை நிறுவ வேண்டிய தேவை என்ன?

அலுவலகப் பயன்பாட்டில் "Reinventing the wheel" என்று சொல்வார்கள். அதாவது ஒரு திட்டத்தில் இருக்கும் இடத்திலிருந்து முன் நகராமல், செய்த வேலையையே மீண்டும் மீண்டும் செய்வது. எளிமையாகச் சொல்வதானால், ரமணா படத்தில் யூகி சேது, "இப்போ தான் இதையே கண்டுபிடிக்கிறீங்களா?" என்பாரே, அது போல. 

ஆனால் சற்று யோசித்துப் பார்த்தாலே புரிந்துவிடும், கலைக் களஞ்சியம் போன்ற மிகப்பெரிய தகவல் பின்னலை நெய்யும் போது, இருப்பவை அனைத்தையும் விடுத்து சுயம்புவாக இன்னொன்றை உருவாக்குவது சாத்தியமே இல்லை. ஆக, தமிழ் விக்கிபீடியாவின் வடிவமைப்பு, இயங்குமுறை, பார்வை, திருத்தம் முறைகள் இவற்றை மாதிரியாகக் கொண்டு தான் தமிழ் விக்கியை (நாகபதனி, நாகப்பதனி போல இதில் பெயர்க்குழப்பம் வேறு!) வடிவமைக்கப் போகிறார்கள் என்றால், ஒரே துறையின் முன்னோடியாக இருக்கும் பெருமுயற்சியைத் தூற்றி புதியதைத் துவங்குவது அறமாகாது. 

சரி, ஒரிஜினல் தமிழ் விக்கிபீடியாவில் சிலர் பெரிய பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்கள் என்கிறார்களே, நாம் ஏதாவது செய்து பார்ப்போம் என்று தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் ஒருவர் பெயரில் தகவல்களைப் பதிந்தேன். அழகாக ஏற்றுக்கொண்டது. அந்தப் பக்கத்தின் இணைப்பு: https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D#

நன்றி வணக்கம்!

பயணிகள் கவனிக்கவும் - திரை அனுபவம்

#பயணிகள்_கவனிக்கவும்

குறிப்பிடத்தக்க நல்ல முயற்சி, நன்றாகவும் வந்திருக்கிறது. ஒ.டி.டி தளங்களின் பெருக்கத்திற்குப் பிறகு, அவற்றிற்காக சிறிய பொருட்செலவில் தயாராகும் பிரத்யேகத் திரைப்படங்கள் வரத் துவங்கியிருக்கின்றன. எளிய கதை, நல்ல திரைக்கதை மற்றும் கூர்மையான வசனங்கள் மூலம் வீட்டிலிருந்தபடியே ஒரு புதிய திரைப்படத்தைப் பார்த்துவிடக் கூடிய அனுபவத்தை அவை அளிக்கக்கூடியவை. அவ்வாறு வெளியாகும் திரைப்படங்களை, தொலைக்காட்சி நாடகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடியவை பரபரப்பான காட்சியமைப்புகளும், படத்தின் இசையும், வேகமும். ஆனால் பயணிகள் கவனிக்கவும் படம் மிக நிதானமாகத் தான் செல்கிறது, இசையும் காட்சிகளை உயர்த்திக் காட்டும் அளவுக்கு இல்லாமல், அதே நேரம் தொந்தரவு தராத அளவுக்கு மெலிதாகவே இருக்கின்றது.

இப்படி, நாடகமாக மாறியிருக்கக் கூடிய கதையை இயல்பான சினிமாவாக மாற்றியது விதார்த்தின் யதார்த்தமான நடிப்பு, அதை நடிப்பு என்றுகூட சொல்லமுடியாது, கண்களில் தெரியும் தயக்கம், சாய்ந்த உடல்மொழி, வாயசைவு என்று எழிலனாகவே வாழ்ந்திருக்கிறார் மனிதர். எத்தகைய தொழில்நுட்ப ஜாலங்கள் இல்லாமலே ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு விதார்த்தின் அற்புதமான நடிப்பு, வாழ்த்துகள், இப்படம் உங்கள் அடுத்த இன்னிங்ஸின் துவக்கமாக அமையட்டும்.

சமூக வலைதளங்களில் பொறுப்பின்றி பகிரப்படும் தனிநபரின் படங்கள், வைரலாகும் அத்தகைய படங்களை எந்தவித ஆய்வுமின்றி, தங்களுக்குத் தோதான ஒரு பின்னணி கட்டுக்கதையோடு பரப்பி சென்ஷேசனாக்கும் காட்சி ஊடகங்கள், அவை சம்பந்தப்பட்ட மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்று தற்போதைய சமூகக் கதை. மலையாளத்தில் 2019ல் வெளிவந்த  "விக்ருதி" திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது, அதிலிருந்து எவ்வளவு தூரம் இப்படம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. மலையாளப்படத்தையும் பார்க்க வேண்டும்.

எனக்கு இப்படத்தின் மையப்புள்ளியில்  சிறு போதாமை தென்பட்டது. இன்னும் கொஞ்சம் அழுத்தமான நிகழ்வை எடுத்துக்கொண்டு அது தவறாகச் சித்தரிக்கப்பட்டு, வைரலாகி, சம்பந்தப்பட்டவர் மற்றும் படம் எடுத்தவர் இருவர் வாழ்வையும் எப்படி அலைக்கழிக்கிறது என்று பேசியிருக்கலாம்.

இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். 
#Aha_OTT தளத்தில் கிடைக்கிறது, பார்க்கலாம்.

Friday, March 18, 2022

கடைசி விவசாயி !

 கடைசி விவசாயி !


May be an image of 2 people, outdoors and text
தமிழ் சினி்மா விவசாயத்தைக் கொலையாய் கொன்றெடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் விவசாயியை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.

சினிமா பார்ப்பது போலவே இல்லை, இப்படம் மிக இயல்பாக இருக்கிறது என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். எனக்கு அது மட்டுமே கொஞ்சம் குறையாகத் தோன்றியது. இதே சரடை இன்னும் சற்று திரைமொழி சேர்த்து, காட்சிகளை இறுக்கக் கோர்த்திருந்தால் இந்தக் கதை பொதுமக்களின் மனதில் ஆழமாகச் சென்று சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். படத்தில் ஆசுவாசமான மிகப்பெரிய விஷயம், விவசாயியை நல்லவராகக் காட்ட சுற்றி இருப்பவர்களை கொடூரர்களாகச் சித்தரிக்கவில்லை. மனிதர்கள் எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே. அவரவர் வாழ்க்கை முறைக்கு அவரவர் நியாயம் சேர்க்கின்றனர். அதிலும் நீதிபதி தான் சார்ந்துள்ள சட்ட அமைப்பின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்தபடி புழுங்குவதும் முதியவர் இறந்துவிட்டார் என்று குற்றவுணர்வோடு கைகளைக் கோர்த்து வேண்டியபடி பரிதவிப்பதும் மிக இயல்பு.

பணியாரத்தை சிணுக்கருக்கியால் திருப்பிப் போடுகையில் அந்தச் சிறுபெண் ரசித்துச் சிரிக்கும் ஒரு சிரிப்பு, ”என்னவாம்.. உன் வம்சமே கிறுக்குப்பய வம்சமாமே, உன்னை எப்படி கல்யாணம் பண்ணனு எங்கம்மா சொல்லுச்சு” என்று குடத்துடன் தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண் போகுற போக்கில் ஒரு காதலை மறுதலிக்கும் இயல்பு, இராமையா கேட்காமலே பெரியவர் மூன்று பேருக்கு சோறு பரிமாறி வைக்கும் இடத்தில் அவர் அவனை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்ற நுணுக்கம் என்று நிறைய இடங்கள் ரசிக்க வைத்தன.

ஞானக்கிறுக்கனாக இராமையா பாத்திரத்தை விஜய் சேதுபதி மிக விரும்பி ஏற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. இராமையாவின் நடையும் பயணமுமே தனிக்கதை. அந்தப் பாத்திர வார்ப்பும், ஒப்பனையும் அவருக்கு நன்றாகப் பொருந்துகிறது. அதில் சிறு பிசிறு, அரூபமாய் தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு வைத்திருக்கும் தேநீரை இன்னொருவன் எடுத்துக் குடிக்கும் போது, அங்கே விஜய் சேதுபதி இருந்ததால் அவனை வெளுத்துவிடுகிறார். உண்மையில் அந்த இடத்தில் இராமையா ஊர்க்கார்களிடம் அடிவாங்கி, புழுதி மண்ணோடும் சிராய்ப்புகளோடும் சிரித்தபடியே கைச்சுமையைத் தூக்கிக் கொண்டு போய், பூட்டுக் குழம்பும் மோதிர அப்பளமும் சாப்பிட்டுக் கிளம்பியிருப்பான்.

படத்தில் தேவையில்லாத இடைச்செருகல், தனது காட்டை விற்று யானை வாங்கி மேய்த்துக் கொண்டிருக்கும் யோகிபாபு பாத்திரம். இக்கதைக்கு யோகியும் யானையும் எந்தவொரு நியாயத்தையும் சேர்க்கவில்லை என்பதோடு எளிய மனிதர்களின் ஊடே அவர்களது ஊர்வலம் தேவையில்லாத ஆடம்பரமே. அதுபோல, குலசாமி நேர்த்திக்கடனுக்காக நெல்லுப் போடும்போதும் நூறுநாள் வேலையில் இருக்கும் ஊர்மக்கள் யாரும் வரமாட்டார்கள் என்பது, காலாவதியான பூச்சி மருந்தை அடித்ததால் பயிர்கள் செத்துப் போவது என்ற சில இடங்களில் குறைகளும் இல்லாமல் இல்லை. இன்னொரு விஷயம், இக்கதையை இயக்குநர், ரஜினிக்குச் சொன்னார் என்று செய்தி உலவுவதாகக் கேள்விப்பட்டேன். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இயக்குநர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

விவசாயம் என்பது புனிதம் அல்ல, ஒரு விதை எத்தனை காலமானாலும் தனக்குத் தேவையான ஒளியும் நீரும் கிடைக்கும்போது தானாக உயிர்பெறும். அது போல, முறைகள் எப்படி மாறினாலும், நவீனம் புகுந்தாலும் ஒரு பயிர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு எப்படியும் மண்ணில் உயிர்பெறும் என்ற கருத்து மனதுக்கு அணுக்கமாகத் தோன்றியது. ஒரு காட்சியில் சிறைக்கைதி ஒருவன் வெறும் மண்ணைப் பாத்திரத்திலிட்டு அதற்கு நீரும் ஒளியும் தரும்போது அதிலிருந்து ஒரு தளிர் துளிர்க்கிறது. “மண்ணில் ஆயிரக்கணக்கான விதை போட்டுருக்கான். உனக்கு வேப்பங்கன்று கொடுத்திருக்கு பாரு!” என்று விவசாயம் கற்க நினைக்கும் அவனிடம் பெரியவர் கூறுகிறார். எனக்கு நேசமித்ரனின் இக்கவிதை நினைவில் வந்தது.

விற்றபிறகும் சங்கையும் நுகத்தடியையும்
பரணுக்குள்
சொல்ல விரும்பாத அவமானத்தைப் போல்
ஒளித்து வைத்திருக்கிறவனின் நம்பிக்கையை
நாளை என்ற சொல் மீது
நத்தைக் கூடு போல் சுமந்து நகர்கையில்
சீழ்கட்டிய குளம்புகளுள்ள குதிரைகள் பூட்டிய தேரில்
ஒரு நாளை அஸ்தமனத்திற்கு இட்டுச் செல்லும் வதை

தன் கடைசி நாணயத்திற்கான மலினச்சீட்டுப்
பேருந்துக்கு
கர்ப்பவதியுடன் காத்திருத்தல்
யாரோ வந்து எல்லோருக்கும் கொடுத்தது போக
கொண்டு முடியாமல் மீதமிருக்கிறது என்றபடி
ஒரு மலைவேம்புக் கன்றை கையளிக்கிற
இவ்வாழ்வு எவ்வளவு அனிச்சையானது!

(ஜெல்லிமீன்கள் கரையொதுங்கும் கடல் - நாட்குறிப்பு, பக்கம்: 101)