Wednesday, December 13, 2017

கோரிப்பாளயத்தின் கதை

கோரிப்பாளயத்தின் கதை

எழுத்தாளர் எஸ்.அர்ஷ்யா எழுதிய ”சொட்டாங்கல்” புதினம் குறித்த வாசிப்பனுபவம்
பாலகுமார் விஜயராமன்


அடர்வாய் புதர் மன்றிப்போயிருந்த வனம், பண்படுத்தப்பட்டு விளை நிலமாய் மனிதப்பயன்பாட்டுக்கு வந்த போது, வனத்தின் மையமாய் அப்பொழுது தான் தளிர் விட்டிருந்த ஆலங்கன்று ஒன்று தன்னியல்பாய் தப்பிப் பிழைத்தது. விவசாயம் தழைத்து விளை நிலமாய் வனம் செழித்த போது, அந்தக் கன்று வலுவாய் வேறூன்றி ஆகாயம் நோக்கி கிளை பரப்பியது. நகரம் தன் நாகரீகத்தின் கரம் கொண்டு விளை நிலங்களை விழுங்கி கான்கிரீட் காடுகளாக உருமாற்றம் செய்த போது, அக்கன்று மிகப்பெரிய ஆல விருட்சமாய் வளர்ந்து, தன் விழுதுகளை தூண்களாக்கி தன் இருப்பை, தன் பசியத்தை, தன் உயிர்ப்பை தக்க வைத்துக் கொண்டே இருந்தது. நாகரீக மனிதர்கள் வஞ்சத்தை அறமாய் ஏற்று, பொதுப்பணியை சுயலாபத்திற்காய் சுருக்கி, ஒருவரை ஒருவர் புசிக்கத் துவங்கிய போதும், அந்த முதிய மரம், தன் கிளைகளில் இன்னும் இன்னும் புதிய இலைகளை தளிர்க்கச் செய்வதை, தன்னில் வந்து தங்கும் எத்தனையோ பெயர் தெரியாத பறவைகள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நிழற்குடையாக இருப்பதை நிறுத்தவே இல்லை.

மதுரை மாநகரின் மையத்தில், தன்னை நாடி வரும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக, அவர்களின்  பிணிகளைப் போக்கி ஆறுதல் அளிக்கும் ரட்சகனாக, எண்ணற்ற தனது கருணைக் கரங்கள் மூலமாக நிழல்பரப்பி அரவணைக்கும் ஆல விருட்சமாய் இருப்பது, “சையத் சுல்தான் அலாவுதீன் பாதுஷா – சையத் சம்சுதீன் அவுலியா தர்ஹா” அல்லது எளிமையாக “கோரிப்பாளையம் தர்ஹா”. தர்ஹாவோடும், தர்ஹாவைச் சுற்றியும் வளரும் நகரத்தின், அதன் மனிதர்களின் கதையைப் பேசுகிறது எஸ்.அர்ஷியா எழுதிய “சொட்டாங்கல்” என்னும் புதினம். சொட்டாங்கல் விளையாட்டில் ஒரு கல்லைத் தவற விட்டாலும் தோற்றதாகத் தான் அர்த்தம். அது போலவே மேலும் கீழுமாய் தூக்கியடிக்கப்படும் வாழ்க்கையில், தவறவிட்ட கற்களாய் தோற்றுப் போய் கீழே விழுந்தவர்களாயும், பெருங்கருணையின் பிடியில் ஆட்பட்டு கரைந்து போனவர்களாயும் உலவும் மனிதர்களையும் பற்றியது இப்புதினம்.

வாழ்க்கையின் அதன் போக்கில், மகிழ்வாக வாழ நினைக்கும் இளைஞன் காட்டுவா. நண்பர்களின் தூண்டுதலினால் “செய்கை” செய்து ஏரியாவுக்குள் ”பெரிய கையாக” தலையெடுக்க முனைகிறான். அது கைகூடாமல், போலீஸில் மாட்டிக் கொள்ளும் நிலை வரும் போது, தப்பித்து ஊரை விட்டு ஓடுகிறான். ஆண்டுகள் பல சென்ற பின், கனிந்த பழமாகி ஊர் திரும்புகிறான். தான் வாழ்ந்த வீட்டை, தன் நண்பர்களை, உறவினர்களை என்று தேடி அலைகிறான். அத்தனை ஆண்டுகளில் ஊர் அடைந்த மாற்றங்களை, அரசியல் மற்றும் சமூக நோக்கில் அவனது பார்வை வழியாக விவரிக்கிறது புதினம். இடையில் அவனுக்கு ஒரு பொருந்தாக் காதல். பதின் வயது சிறுமியின் தாயான “அழகு” உடனான அவனது தொடர்பு, இடையில் அவன் ஊரை விட்டுச் சென்ற பின், அவள் மனம் பேதலித்து தெருவில் அலைந்தது கடைசி வரை அவனுக்குத் தெரியாமலே போகிறது.

பெரும் பணம் சேர்த்து வைத்திருக்கும் அரசு ஊழியரான தந்தையின் சிபாரிசின் பேரில், மிக எளிதாக அரசு வேலையில் அமரும் ரஃபியுத்தீனுக்கு நான்கு சுவருக்குள், எட்டு மணி நேரம் நாற்காலியில் அமர்ந்தபடி செய்யும் குமாஸ்தா வேலையில் இருப்புக் கொள்ளவில்லை. சொத்து சுகம், வேலை, சொந்த பந்தம் அத்தனையையும் உதறி விட்டு வடக்கு நோக்கி ரயிலேறுகிறான். தில்லியில் அமைச்சகங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் இடையேயான “லயசன் ஆஃபிசராக” சமூக நிலையிலும், பொருளாதாரத்திலும் சரசரவென மேலேறி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். எவ்வளவு பணம், ஆதாயம் கிடைக்குமென்ற போதிலும் தனக்கென வகுத்திருக்கும் கொள்கையிலிருந்து பிறழாதவனாகவே இருக்கிறான். அதன் பொருட்டு இன்னும் நல்ல பெயரை சம்பாதிக்கிறான். ஒரு கட்டத்தில், மனைவியும் இறந்து, மகளும் திருமணம் முடிந்து வெளிநாடு சென்றுவிட்ட பிறகு வாழ்வின் வெறுமையை உணர்ந்து. பிறந்த மண்ணைத் தேடி மீண்டும் மதுரை வருகிறான். அரசியல்வாதிகளால் கையகப்படுத்தப்பட்ட தனது பூர்வீக சொத்தை மீட்க வேண்டி போராடுகிறான்.
  
முப்பது வயதாகியும், வடிவம் குறுகிய உடல்குறை மற்றும் அவ்வப்பொழுது பிசகிப்போகும் மனக்குறைபாடு காரணமாக வீட்டில் உள்ளவர்களாலேயே ஒதுக்கப்படுகிறான் தவுலத் பாட்சா. கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து வந்த அவனது தந்தை “மௌத்” ஆன பிறகு, நிராதரவாய் நிற்கிறான். அவனை யார் வைத்துப் பராமரிப்பது என்ற சண்டை குடும்பத்தினரிடம் நடந்து கொண்டிருக்கும் போதே, யாரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனது இருப்பு மற்றும் செயலகள் குறித்த தெளிவான விவரங்கள் யாருக்கும் புலப்படவில்லை. குரங்கு முகச்சாயல் கொண்ட அவன், அவ்வப்போது கபர்ஸ்தானில் அவுலியாவின் தம்பி அவர்களுக்காக பிரத்யேகமாக வெட்டி வைக்கப்பட்டிருக்கும் குழியில் இருந்து எழுந்து போவதை பார்த்ததாகவும், அவன் தான் கருணை வடிவான அவுலியாவின் தம்பி என்றும் ஊருக்குள் அரசல் புரசலாக பேசத் துவங்குகின்றனர். விகல்பமற்று, மழலையாய் இருந்த அவன் இறுதியில் மீண்டும் தன் பிறந்த மண்ணான தர்ஹாவின் கபர்ஸ்தானில், இறைவனுக்குள் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான்.

இப்படி, வெவ்வேறு சூழ்நிலைகளின் பொருட்டு,  பிறந்த மண்ணை விட்டு விலகிச் செல்லும் வெவ்வேறு நபர்கள், மீண்டும் தாய் மண்ணை அடைய நேர்கையில் அவர்கள் கைகொண்ட ஆன்ம பலம், அனுபவம், இறை நிலை ஆகியவை கோரிப்பாளயம் தர்ஹா என்னும் ஆல விருட்சத்தின்  பெருங்கிளைகளாக எப்படி விரிகிறது என்று காட்சிப்படுத்தியிருக்கிறது இப்புதினம். அதே போல இந்த விருட்சத்தைத் தேடி வரும் பறவைகளுக்கு வாழ்வாதாரமான உணவையையும், இருப்பிடத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதாகவும் வளர்கிறது புதினம்.

பெரிய சம்சாரியான அய்யங்கோட்டை ஆகாசம்பிள்ளை தான் பிறந்த ஊரை விட்டு விட்டு, புதியதொரு இடமான கோரிப்பாளையத்தில் பதியம் போட வைக்கிறது காலம். கனவில் வந்து கருப்பணசாமி சொன்ன இடத்தைத் தேடியலைந்து இறுதியாக கோரிப்பாளையத்தில் வந்தடைந்த போது, அது தான் தனக்கான இடம் என்று உணர்கிறார். அங்கேயே தலைமுறை தலைமுறையாக அவரது வம்சமும் தழைக்கிறது. அதே போல், ஊரில் இருந்து கோயில் காசைத் திருடிக்கொண்டு வரும் சந்தனத்தேவர், காடு, கரை, வெள்ளாமை என்று செழித்து இருந்தாலும், அவரது நிலத்தில் கிடை போட வரும் ராசுக்கோனாரின் வளர்ப்புக் கிடாயின் மூலம் அவரது திருட்டுக்கும் தகுந்த தண்டனை கிடைக்கிறது.

மில் வேலைக்காக மதுரைக்கு வரும் வேலுத்தேவருக்கு மனதுக்குள் ஒரு பெருங்கனவு. தன் அதிகாரத்தை நிலைநிறுத்தவும், தனக்குப் பணிந்து போக, தன் சொல்லை மீறத் துணியாத ஒரு கூட்டத்துக்கு தலைமையேற்கவும் வேண்டும் என்று உள்ளூர ஆசை. அதை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை காலம் வழங்க, அதனைப் பிடித்து மேல் எழுகிறார். அவருக்கு ஏற்ற துணையாக, மனைவி “தண்டட்டி”யும் அமைய அவரது ராஜாங்கம் விரியத்துவங்குகிறது. ஊருக்குள் வட்டிக்கு விட்டு, தவணைத் தொழில் செய்து காசைப் பெருக்குகின்றனர். அதற்கு அவர்களின் இயற்கையான மூர்க்க குணமும், அடாவடித்தனமும் கை கொடுக்க ஊருக்குள் அவர்களின் கொடி பறக்கிறது. ஒரு கட்டத்தில், வேலுத்தேவர் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வர, அவர் விட்ட இடத்திலிருந்து அவரது ஒரே பேரனான சங்கு முத்தையா தொடர்கிறான். அவனுக்கு அரசியல் ஆசையும் சேர்ந்து வர, எதிர்பாராமல் கிடைக்கும் அமைச்சரின் மகனுடனான நட்பை பயன்படுத்தி, தன் எல்லைகளை விஸ்தரிக்கிறான். இவன் மூலமாக, இன்றைய அரசியல் காட்சிகளின் கோர முகம், அதில் நடக்கும் தகிடுதத்தங்கள் மற்றும் சூழ்ச்சிகள் ஆகியவற்றை  புனைவுக்குள் நைச்சியமாக ஒளித்து வைத்து விளையாட்டு காட்டியிருக்கிறது “சொட்டாங்கல்”

அதே போல, சாணி மற்றும் கவிச்சி வாசம் வீசும் நெல்ப்பேட்டை ஆட்டுத்தொட்டி, வகைவகையாய் பிரித்து விற்கப்படும் மீன் கடைகள், தினக்கூலிகளாக சோணையா கோவில் தெருமுனையில் தினமும் காலையில் நிற்கும், கொத்தனார் சித்தாள், நிமுந்தாள் வேலைக்குப் போகின்ற அன்றாடங் காய்ச்சிகளின் பிழைப்பு, செல்லூர் கைத்தறி தொழில் சித்தரிப்புகள், கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என்று நாள் கணக்கு வைத்து, தவணை கொடுக்கும் தண்டல்காரர்களின் மிரட்டல்கள், ரசிகர் மன்றங்களுக்குள் இருக்கும் போட்டி மற்றும் சண்டை சச்சரவுகள், அதனால் ஏற்படுகின்ற தகராறுகள், பெருகி வரும் ஃபிளக்ஸ் பேனர் கலாச்சாரம், மூன்றாம் நிலை அரசியல்வாதிகளின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், கோவில் சர்ச் மற்றும் மசூதி என்று அருகருகே ஒரே நேரத்தில் சமத்துவமாய் நிகழும் திருவிழாக்கள் என்று மதுரை மண்ணுக்கே பிரத்யேகமாக உள்ள நிலக் காட்சிகளை  வாசகனே அருகில் இருந்து பார்ப்பது போன்ற தத்ரூபமான விவரிப்பு ”சொட்டாங்கல்”லின் பெரிய பலம். மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களின் அன்றாடத்தை அப்படியே புதினத்தில், காட்சிப்படுத்தியிருப்பது சிலிர்ப்பை உருவாக்கும் என்றால், மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு மதுரையின் அசல் சித்திரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும்.

“சொட்டாங்கல்” மேலோட்டமான வாசிப்புக்கு அரசியல் களம் சார்ந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கினாலும், உண்மையில் இது மனிதர்களுக்கு தங்கள் மண் மீது இருக்கும் தீராப்பிரியம் பற்றிய கதை தான். சூழ்நிலை காரணமாக மதுரை மண்ணை விட்டுப் பிரிய நேர்ந்தவர்களின் மீள்வருகையை பேசுவது ஒரு புறம் என்றால், உள்ளூரில் அடையாளமற்று சுற்றுக் கொண்டிருப்பவர்கள் தங்களை நிலைநிறுத்தவும், தங்கள் அதிகாரத்தை வலுப்பெறச்செய்யவும் நிலக்கையகப்படுத்துதலை ஒரு கருவியாக ஏற்றுக்கொள்ளுதலும், அதுவே அவர்களுக்கான கொலைக்கருவியாய் மாறுவதும் இன்னொரு பக்கம்.

கோரிப்பாளையம் தர்ஹாவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சியும் புதினத்தில் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாண்டிய மன்னனின் அரண்மனையின் மராமத்து வேலைக்காக, அழகர் கோவிலுக்கு வடக்கிலிருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட பாறை ஒன்று, கோரிப்பாளையம் தர்ஹாவுக்கான விதானக் கல்லாக மாறிய கதை சிலிர்ப்பூட்டக் கூடியது. அதே போல பல்வேறு இடங்களில் இருந்து இங்கே குடிபெயரும் பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கான வாழ்விடமாக இப்பகுதியை மாற்றுவதும், இந்நிலம் தன்னை நெகிழ்த்தி அம்மக்களை தனக்குள் வாழ அனுமதிப்பதும், காலப்போக்கில் அவர்களின் வாழ்வியல் வழிகளிலும், வழிபாட்டு முறைகளிலும் ஏற்படும் மாற்றங்கள் அதனால் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை உணர்வு குலைந்து பகைமையும், பொறாமையும் வேர்விடுவதையும் இயல்பாக விவரித்திருக்கிறது இப்புதினம். இறுதியில், எந்தவித கொள்கை கோட்பாடுமின்றி, தங்களின் சுயலாபத்திற்காகவும், தன் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அரசியலைக் கருவியாகப் பயன்படுத்துபவர்களின் நிலைமை என்னவாகிறது என்பதையும் சொல்லி முடிகிறது “சொட்டாங்கல்”.

மதுரையின் தற்கால நிலவியலையும், சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களையும்  தொடர்ந்து தனது படைப்புகள் மூலமாக பதிவு செய்து வரும் மண்ணின் மைந்தன் எஸ்.அர்ஷியா அவர்களுக்கும், புதினத்தை வெளியிட்ட “எதிர் வெளியீடு” பதிப்பகத்திற்கும் அன்பும், வாழ்த்துகளும்.

*******
சொட்டாங்கல் – புதினம்
எஸ்.அர்ஷியா
எதிர் வெளியீடு
பக்கம்: 264
விலை: ரூ. 220


******
நன்றி: சொல்வனம் இதழ்: https://solvanam.com/?p=50553

Saturday, November 4, 2017

கனவுகள் விற்பனைக்கு !


" நான் மனிதன், ஒரு வண்ணத்துப்பூச்சியாய் உருமாறியதாய் கனவு காண்கிறேன். அல்லது நான் வண்ணத்துப்பூச்சி, ஒரு மனிதனாய் உருமாறியதாய் கனவு கண்டுகொண்டு இருக்கிறேன்" 
- ஸுயாங் ஸீ


கண்கொள்ளுமளவு முழுமையாய் விரிந்து கிடக்கிறது வனம். காலங்களின் ஈரம் அடர்த்தியாய் இறங்கியிருக்கும், சருகுகள் பூத்துக் கிடக்கும் மதிகெட்டான் சோலையில் ஊர்ந்து ஊர்ந்து தடம் தேடிச்செல்கின்றன பாதங்கள். கண்முன்னே ஒரு திசைமாணி, வடக்கை குறித்துக்காட்டிக் கொண்டே முன்னே செல்கிறது. நான் திசைமாணியைப் பார்த்துவிட்டு, வலதுபக்கம் திரும்பித் திரும்பி, கிழக்கை நோக்கி முன்னேறுகிறேன். ஆயுள் ரேகைகளை வட்டவட்டமாய் செதுக்கி வைத்திருக்கும் முதிய மரங்கள் நிறைந்த அடர்வனத்திற்குள் செல்லச் செல்ல, கிளைகள் சரசரக்கும் பேரோசை, பெயர் தெரியாத பறவைகளின் இடைவிடாட கீச்சொலி இவற்றிற்கு அப்பால், சிற்சிறிய குன்றுகளையும், குதித்தோடும் குறு நீரோடைகளையும் தாண்டியபடி கிழக்கு நோக்கிய பயணத்தைத் தொடர்கிறேன். முடிவில் வனத்தைத் தாண்டிய பெரிய புல்வெளியை அடையும் போது, சூரியக்கதிரின் முதல் கீற்று, செம்பழுப்பாய் ஒளிர்விடத் துவங்குகிறது.

வனத்திலிருந்து வெளியேறியதில் ஒருவித விடுதலை உணர்வு தோன்ற, வெளிச்சக்கீற்றினூடே வேகமாக நடக்கிறேன். வழியின் நடுவே கரிய குன்று போல் ஏதோ தடுக்க, தடுமாறி அப்படியே திகைத்தபடி நிற்கிறேன். பார்வைக்கு மிக அருகே, இரு யானைகள் மூர்க்கமாக புணர்ந்து கொண்டிருக்கின்றன. நான் அசைவற்று, சிறு சத்தமும் கொடுக்காமல், அவற்றின் ஆக்ரோசத்தை, கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அவற்றின் இயக்கத்துக்கு இடையூறாக சிறு ஒலி எழுந்தாலும் , அவற்றின் கோபம் என் மீது திரும்பி விடும் என்ற நிலையில், நான் சிலையாய் நிற்கையில், பீப், பீப் … பீப், பீப் … பீப், பீப் … என்று இடைவிடாத இடர் எச்சரிக்கை ஒலி !

திடுக்கிட்டு எழுந்து அலாரத்தை அணைத்தேன். பசியம் நிறைந்த வனத்தின் வாசனையும், பறவைகளின் கீறீச் ஒலியும், அகன்ற புல்வெளி தந்த குளுமையும், யானைகள் அருகில் திடுக்கிட்டு நிற்கும் நிலையும் இன்னும் நினைவில் நிழலாடியது. கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தால், பார்வையின் ஒளி தூரமாய் பரவுவதற்கு வழியின்றி, நான் படுத்திருந்த பத்துக்கு எட்டு அறையின் சுவரில் பட்டு எதிரொளித்தது. சோம்பல் முறித்தபடி எழுந்தேன். இரண்டு வாரங்களாய் துவைக்காத ஆடைகள் அறையெங்கும் விரவிக் கிடந்தன. ஜன்னல் இல்லாத அறையில் எப்போதும் இருக்கும் அழுக்கு வாடையோடு சேர்ந்து, லேசான முடை நாற்றமும் அடித்தது. யானைக்கனவின் கிளர்ச்சியையும், பயத்தையும் நினைத்துக் கொண்டே, தளம் முழுவதும் உள்ள 10 அறைகளுக்கும் பொதுவாக உள்ள கழிப்பறையை நோக்கி நடந்தேன்.

எனக்கு வரும் கனவுகள் எப்போதும் விசித்திரமானவை. நினைவு தெரிந்து முதன் முதலில் வந்த விசித்திர கனவு, எனது திருமணம் தொடர்பானது. அதுவும் எனது ஏழாவது வயதில். அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், வகுப்பில் ஒரு தோழியோடு பென்சிலையும், சாக்பீஸையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது தவறுதலாக அவளது பென்சிலை என் பாக்ஸில் வைத்து எடுத்து வந்துவிட்டதை, மாலை வீட்டுக்கு வந்த பிறகு தான் கவனித்தேன். அந்தப்பெண் தவறாக நினைத்துக் கொள்வாளே என்ற வருத்தம், அன்று தூங்கும் வரை மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது. அன்று இரவு கனவில், எனக்கும் அந்த தோழிக்கும் திருமணம் நடப்பது போல கனவு வந்தது. விடிந்ததும் ஒரு மாதிரி குதூகலமான மனநிலையில் தான் இருந்தேன் என்று இப்பொழுது வரை நினைவிருக்கிறது. வெகு நாட்களாய் அந்த கனவை மனதுக்குள் நினைத்துக் கொண்டே மகிழந்து கொண்டிருந்தது தனிக்கதை. மறுநாள், மிக வருத்தத்துடனேயே அந்த பென்சிலை அவளிடம் கொடுத்தேன். நான் வேண்டுமென்றே அந்த பென்சிலை திருடிக் கொண்டு சென்று விட்டதாகவும், அதனால் முதல் நாள் இரவு முழுவதும் என்னைத் திட்டிக் கொண்டிருந்ததாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவள் சொன்னாள். ஆக, எந்தப் பெண்ணாவது நம்மைத் திட்டினால், அன்று இரவு கனவில், அவளுடன் நமக்குத் திருமணம் நடக்கும் என்று ஒரு தியரியை வடிவமைத்துக் கொண்டேன்.

கனவுக்கான ”ஹேப்பி ஹவர்ஸ்” முடிந்ததும், அன்றைக்கான வழமைக்குள் நம்மை ஒப்புக் கொடுத்து விட வேண்டியது தான். மாநகரத்தின் பரபரப்பான பகுதியில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான மேன்ஷன்களில், உள்ளடங்கிப் போயிருக்கும் “சேவல் பண்ணை”யின் நான்காவது மாடியில், இரண்டு பேர் தங்கக்கூடிய சிறிய அறையில் தான் இப்பொழுதைய எனது இருப்பு. உடன் தங்கியிருப்பவன் கல்லூரித்தோழன் என்றபடியால், அறையில் பெரிய பாகப்பிரிவினை எதுவும் கிடையாது. அறை முழுதும் இருவரின் உடைகளும், புத்தகங்களும், பொருட்களும் தங்கு தடையின்றி எங்கெங்கும் விரவிக் கிடக்கும். அலுவலம் செல்லும் அவசரகதியில், பொதுக் கழிவறை வரிசையைத் தாண்டி, உடை மாற்றி, உடலுக்கு ஒருமுறை, காலுறைக்குள் ஒரு முறை என வாசனை திரவியங்களைத் தெளித்து விட்டு, கசகசக்கும் கழுத்துப் பட்டையையும், இடுப்புபட்டையையும் இறுக்கிக் கொண்டு, வெக்கு வெக்கென்று நேரத்திற்குள் ஓடி, மின்சார ரயிலைப் பிடித்து அலுவலகம் அடைந்து, அங்கே உணவகத்தில் தினமும் ஒரே மாதிரியாய், பரப்பி வைக்கப்பட்டிருக்கும்,  காய்ந்த ரொட்டிகளை ஊறவைத்துத் தின்னும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்... "கனவுகள் எவ்வளவு வண்ணமயமாய், ஒவ்வொரு நாளும் புதுவிதமாய். எதிர்பார்ப்பின் அழகியலோடு தோற்றம் கொண்டிருக்கின்றன. இத்தகைய கனவுகளுக்குள்ளே சென்று சென்று வாழ வழி இருக்கிறதா ? "

விதவிதமான கனவுகள் வருகின்றதே, நாம் வாழ்கின்ற இந்த வாழ்வும் அப்படியே கனவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அவ்வப்பொழுது யோசிக்கத் தோன்றும். தவறவிட்ட தருணங்கள், கொஞ்சம் முயற்சி எடுத்தால் வெற்றியடைந்திருக்கக் கூடிய வாய்ப்புகள், கொஞ்சம் நிமிர்ந்து நின்றிருக்கக் கூடிய சவால்கள், இன்னும் இளகிப்போயிருக்க வேண்டிய கோபங்கள் என்று எல்லாக் கோட்டையையும் அழித்து விட்டு முதலில் இருந்து விளையாடத் தோன்றும் சாகசமும் நன்றாகத் தான் இருந்தது. மனம் குதூகலிக்கும் வேளையில் வாழ்வை அப்படியே உறைந்து போக வேண்டுவதும், துவண்டு போகும் வேளையில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் அப்படியே அழித்துவிட்டு புதிதாய் துவங்கிவிட வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த சாத்தியக் கூறுகள் வாழ்வில் இல்லாவிட்டலும், கனவுகளில் நிரம்ப நிரம்பக் கிடைப்பதாகவே எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.

நிறைவேறாத உள்ளுணர்வு ஆசைகள் தான் கனவுகளாக வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியென்றால், இவ்வளவு ஆசைகள் உள்ளுக்குள் புதைந்து கிடக்கின்றன என்பதே வியப்பாக இருக்கும். வழமையாய் செல்லும் வாழ்க்கைக்கு வண்ணமயமான் கனவுகள் சுவாரஸ்யத்தைக் கொடுப்பதால், இப்பொழுதெல்லாம், அதை வரவேற்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன். இன்று வந்த கனவு இன்னும் வித்தியாசமானது.

இதுவரை அறிந்திராத ஒரு பெயரற்ற ஊரில், வார சந்தை போன்று நடந்துகொண்டிருந்தது. ஓவ்வொரு கடையின் முன்னும் பெருந்திரளான கூட்டம் குழுமியிருந்தது. தேசாந்திரியாக சுற்றித்திருந்து, அந்த ஊருக்குள் பெரும் களைப்புடன் நுழைபவனாக நான், கால் போன போக்கில் சந்தையினூடே நடந்து சென்று கொண்டிருந்தேன். நா வரண்டு, தாகமெடுக்க, தண்ணீர் தேடி ஒவ்வொரு கடையாக பார்த்தபடி நடந்தேன். வித்தியாசமாய் அலங்கரிக்கப்பட்ட ஒரு கடையில், மற்ற கடைகளை விட மிக அதிகமான கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று பார்க்கின்ற ஆர்வத்தில், அந்தக் கடையை எட்டிப் பார்க்க, எனக்குப் பின்னால் வந்த கூட்டம், என்னையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டு கடை வாசல் வரை கொண்டு போய் விட்டது.

வடநாட்டு பாணி உருமாலும், பெரிய மீசையும், வித்தியாசமான உடையும் அணிந்திருந்த கடைக்காரர் என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். எனக்குத் தண்ணீர் தாகம் அதிகமாகி மயக்க வருவது போலத் தோன்றியது. என் தேவையைப் புரிந்து கொண்டவர் போல, ஒரு மண் குவளையில் தண்ணீர் கொடுத்தார். நான் ஆவலாக வாங்கி, நெஞ்சு நனைய வேகமாகக் குடித்தேன். நன்றியுணர்ச்சியாக, இந்தக் கடையில் ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்தவனாய், எனது பர்ஸை எடுத்தேன். அதில் இருந்த சில்லரைக் காசுகளை எண்ணுவதற்கு முன்பாகவே கடைக்காரர், கைகளால் சைகை காட்டி நிறுத்தச் சொன்னார். முதலில் பொருளை உபயோகப்படுத்திப் பார்த்து விட்டு, பின் விலையைப் பேசிக் கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறினார். எனக்கும் அது நல்ல யோசனையாகத் தோன்றவே, சரியென்று பொருட்களைக் காண்பிக்கச் சொன்னேன்.

அவ்வளவு கூட்டத்தையும் விலக்கி, என்னை உள்ளறைக்குக் கூட்டிச் சென்றார். சாணி போட்டு மெழுகியிருந்த மண் தரையும், தென்னங்கீற்று வைத்து கட்டியிருந்த கூரையும், ஒரு கிராமத்து வீட்டை நினைவுபடுத்தியது. அந்த அறை முழுவதும், சிறிதும் பெரிதுமாக மண் தாழிகள் மூங்கில் கூடைகளைக் கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்தன. ஓவ்வொரு தாழியும் வெவேறு வடிவம் கொண்டிந்தன. தாழியில் இருந்தவை என்ன பொருளாக இருக்கும் என்ற ஆர்வத்தில், கைக்கு எட்டிய முதல் தாழியைத் திறந்து பார்த்தேன். அதில் மீன் குஞ்சுகள் நீந்திக் கொண்டிந்தன. மீன்கள் வியாரமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, அடுத்த தாழியைத் திறந்தேன் அதில் மேகப்பொதிகள் மிதந்து கொண்டிருந்தன. இது என்னவிதமான வியாபாரம் என்று குழப்பத்துடன், கடைக்காரரைப் பார்த்தேன். அவர் அர்த்தமான புன்முறுவலுடன், “இது கனவு வியாபாரம், இங்கே, பயமும், சிலிர்ப்பும், கூச்சமும், வெறியும், பக்தியும், மோகமும், சாகசமும், புலம்பலும், சிறியதும், பெரியதுமாக இப்படி ஏகப்பட்ட கனவுகள் விற்பனைக்கு இருக்கின்றன. எந்தக் கனவு வேண்டுமோ, அந்த கனவுக்குள் சென்று வாழ்ந்து பார்த்து பிடித்திருந்தால் வாங்கிச் செல்லலாம்” என்றார். ஆச்சரியமும், எதிர்பார்ப்பும் என்னுள் தொற்றிக் கொள்ள, "ஒரு கனவு வாங்குவதற்கு எத்தனை வாழ்க்கையை வேண்டுமானாலும் இலவசமாய் முயன்று பார்க்கலாம்" என்ற விளம்பரமும் கவரவே, ஒவ்வொரு தாழியாகத் திறந்து பார்த்தேன். அதில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துக் கொண்டிருந்த தாழி கவனத்தை ஈர்த்தது. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை எனும் அந்த கனவுக்குள் நுழைந்து பார்க்க விரும்பினேன். அதைக் கடைக்காரரிடம் தெரிவித்ததும், அவர், அந்த தாழிக்குள் என்னை இறங்கச் சொன்னார். சுவாரஸ்யமும், பயமும் ஒரு சேர பிணைத்துக் கொள்ள, மெல்ல தாழிக்குள் இறங்கினேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு புழுவாய் நெளிந்து கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் தான், பிறகு சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மூச்சு முட்டி, இருட்டறைக்குள் தள்ளுவது போன்று ஒரு உணர்வு. ஏதோ பயம் தொற்றிக் கொள்ள பதறிப் போய், " வேண்டாம், நான் சிட்டுக் குருவியின் கனவை முயற்ச்சிக்கிறேன், இது வேண்டாம்!" என கதற., வெளியே இருந்து கடைக்காரரின் சத்தம்... " இந்த வண்ணத்துப்பூச்சியின் வாழ்வை முடித்து விட்டு வா, பிறகு சிட்டுக் குருவியாகலாம்!". நானும் வேறு வழியின்றி சிட்டுக்குருவின் கனவை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி வாழ்கையின் துவக்கத்தில் உழன்று கொண்டிருந்தேன், அப்பொழுது…."

திடீரென்று, கனவு கலைந்து, முழித்துப் பார்த்தால், என் முதுகில் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் முளைத்து இருப்பது போன்ற உணர்வு. கொஞ்சம் நிதானித்ததும், நினைவு வந்தது. வழக்கமாய் கனவு தான் வரும். இப்பொழுது கனவுக்குள் கனவை வாங்குவது போல ஒரு கனவு வந்திருக்கிறதே என்று யோசித்தவாறே கண்களைக் கசக்கியபடி அமர்ந்திருந்தேன்.
"டீ சாப்பிடப் போகலாமா ?" என்று அறை நண்பன் கேட்கும் போது தான் முழுதாய், சுய நினைவு வந்தது. தலையணையை ஒரு புறமும், கனவை இன்னொரு புறம் ஓரமாய் வைத்துவிட்டு, தெருமுனையில் இருக்கும் கடைக்குத் தேநீர் குடிக்கக் கிளம்பினேன். ம்ம்ம், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தால் மகரந்தத்துடன் தேன் குடித்திருக்கலாம்.

******
நன்றி மலைகள் இதழ் : http://malaigal.com/?p=10984

Friday, October 27, 2017

யாரை எதிர்க்க வேண்டும்?

நம்மை "அவுட் ஆஃப் பாக்ஸ்" யோசிக்க விடாமல், நம் எதிர்ப்பையோ ஆதரவையோ யாருக்குத் தரவேண்டும் என்று எதிர் தரப்பே நமக்கும் சேர்த்து மடைவெட்டி விடுவது தானே ராஜதந்திரம் (உடைச்சு சொல்லணும்னா, பார்ப்பனீயம்). திராவிட இயக்க வரலாற்றை எழுத வேண்டிய அத்தாரிட்டி, "தி இந்து" தான் என்று திமுகவினர் வாயாலேயே சொல்ல வைப்பதும், தமிழ் இன உணர்வாளர் "விஜய்" என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒரே குரலில் சொல்ல வைப்பதும் கூட எதிர்தரப்பு மாஸ்டர் மைண்ட்களின் எண்ணங்களாக இருக்கலாம். அதற்காகவே சில்லுண்டிகளை வைத்து, பலவீனமான அல்லது உப்புக்குப்ப்பெறாத கருத்துக்களைப் பேச வைப்பது. அதில் கடுப்பாகும் எந்த நடுநிலையாளரும் தன்னையும் அறியாமல் அவர்களை எதிர்க்கிறேன் என்ற பெயரில் தகுதியில்லாதவர்களுக்கு கம்பு சுற்றத் துவங்கிவிடுகிறார்கள்.
"பேரியக்கத்தின் அஸ்தமனம்" எழுதிய பத்திரிக்கையின் "திராவிட இயக்க வரலாற்றிற்காக" அதன்பக்கம் நின்று பேச திராவிட அபிமானிகளைத் தூண்டியது எது? தீவிர வலதுசாரிகளின் சல்லி வேர்களை அதற்கு எதிராய் லேசாய் சலம்ப வைத்தது தானே. அதே போல் தான், அன்னா ஹசாரேவின் கூட்டத்தில் முதல் ஆளாய்ப் போய் நின்றவர், பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன் "மரியாதை நிமித்தம்" சந்தித்துப் பேசியவர், ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு என்ற இரண்டு வார்த்தைகளை உச்சரித்த மாத்திரத்தில், அதுவும் ஒரு திரைப்பட காட்சியில் கூறியதற்காக, சில அல்லக்கைகள் எழுதி வைத்ததை ஒப்பிப்பதைப் போல, படம் வந்த முதல் நாளே எதிர்க்கிறார்கள், அது பொதுவானவர்களுக்கும் எரிச்சலூட்டுகிறது, ஆகவே அவர்கள் நடிகரின் பக்கமிருந்து பேசத் துவங்கிவிடுகின்றனர்.
இந்த நாடகத்தின் அடுத்த காட்சி, கொஞ்ச நாள் கழித்து நடிகரும், ஆளும் கட்சியின் தேசியத் தலைவரும் கைகொடுத்து, கட்டிப் பிடித்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதாக இருக்கலாம். அப்போதும் நம்மையும் அறியாமல் நாம் எதிராளியின் விருப்பப்படி, வேறு யாருக்காகவாவது கம்பு சுற்றிக் கொண்டிருப்போம்.
******

Saturday, October 7, 2017

பணியிட பரமபதம் - “கரும்பலகை” புதினம் குறித்த வாசிப்பனுபவம்

கரும்பலகை


அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் கல்வி, பெரும்பகுதி அவனது ஆசிரியர்களின் செயல்பாட்டை மையமாக வைத்தே செழிப்படைகிறது. போதிய அடிப்படை வசதியும், வெளியுலகம் குறித்த பார்வையும் மறுக்கப்படும், தேசத்தின் உள்ளடங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கு, ஒரே ஊற்றுக்கண் அவர்களது கல்வி மட்டுமே. தங்களுக்குக் கிடைக்கக் கூடிய மிக சொற்ப வாய்ப்புகளைக் கெட்டியாக பிடித்து மேல் எழுந்து, தங்கள் தலைமுறையையே முன்னேற்றிய எத்தனையோ கிராமப் புற மாணவர்களைக் கேள்விப் பட்டிருக்கிறோம். அத்தகையோரின் வெற்றிக் கதைகளில், நிச்சயம் அவர்களது பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கு முக்கியப் பங்கு இருக்கும். அத்தகைய பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள மனச்சுமையைப் பேசுகிறது எழுத்தாளர் அர்ஷியா எழுதிய ”கரும்பலகை” என்னும் நாவல். ”அரசு வேலை கிடைத்து விட்டது, அவர்களுக்கென்ன வேலை பார்த்தாலும் பார்க்காட்டியும் கை நிறைய சம்பளம், வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் விடுமுறை” என்ற பொதுப்பார்வைக்குப் பின்னால், அத்தகைய ஆசிரியர்கள் அன்றாடம் சந்திக்கிற பிரச்சனைகள், மன உளைச்சல், சிவப்பு நாடா முறையில் சிக்கி சுண்ணாம்பாகும் அவலம், மிக நியாயமான கோரிக்கைகளைக் கூட கண்டு கொள்ளாதது மட்டுமல்லாமல், அது தான் வழக்கம், இருக்கின்ற வட்டத்திற்குள் நின்று கொண்டு, தேர்வு சதவீதத்தை உயர்த்திக் காட்டு என்று கண்மூடித்தனமாக வாசிக்கப்படும் அறிக்கைகள், குறிப்பாக அரசு ஆசிரியப் பணியின் பொருட்டு, குடும்பத்தை விட்டு வேறு ஏதேனும் ஒரு குக்கிராமத்தில் தங்கியோ அல்லது தினம் நெடுந்தூரம் பயணம் செய்தோ வேலை பார்க்கும் பெண்களின் துயரம் ஆகியவற்றைப் பேசுகிறது நாவல்.

”போஸ்டிங் இலவசம், டிராஸ்ஃபர் காசு” – இது தான் நாவலின் கரு.  மனசாட்சிப்படி, வாங்குகிற சம்பளத்திற்கும், ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியப்பணிக்கும் உண்மையாய் இருக்கவேண்டும் என்ற முனைப்புடன் மாணவர்களிடம், தன்னால் ஆன மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வர முயற்சிக்கிறார், ஆசிரியை ராஜலட்சுமி. அவரின் அன்றாட ஆசிரியப்பணியின் நேர்க்கோட்டுச் சித்திரம் தான் “கரும்பலகை” நாவல். பள்ளிக்கு வந்து போகும் போக்குவரத்து தூரத்தைக் கடக்கவே தங்கள் மொத்த சக்தியையும் இழக்கும் இன்றைய அரசுத் துறை ஆசிரியர்களின் பிரச்சனையைப் பேசுகிறது நாவல்.  நாடகத்தன்மையோ, மிகையுணர்வோ துளியும் இன்றி, நிஜத்தில் பணபலமோ அரசியல் செல்வாக்கோ இல்லாத ஒரு சாதாரண அரசுத்துறை ஆசிரியர் படும் கஷ்டங்களைத் தத்ரூபமாக சித்திரித்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.அர்ஷியா.

நாவலில் எங்கும் அறிவுரை சொல்கின்ற போக்கோ, அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து கிளர்ச்சி செய்யும் பகுதிகளோ இன்றி, இயல்பில் ஒரு பிரச்சனையை தன் எல்லைக்குட்பட்டு ஒரு ஆசிரியை எவ்வாறு எதிர்கொண்டு அதனை சமாளிப்பாரோ அதை அப்படியே எழுத்துக்களாக்கி இருப்பது, நாவலின் உண்மைத் தன்மையை உணர்த்துகிறது. ஆசிரியை ராஜலட்சுமியும், ”பணிமாறுதல்” என்னும் கதாபாத்திரமும் மாறி மாறி தாயக்கட்டை உருட்டி விளையாடுவது தான் கதை. பெயர் தெரியாத ஒரு ஊருக்கு, ராஜலட்சுமியை “பணிமாறுதல்” அனுப்பி வைத்தால், அவர் அங்கே இருக்கும் குறைகளை வென்று தன்னால் ஆன அர்ப்பணிப்பையும், உழைப்பையும் கொடுத்து அந்த “பணிமாறுதலை” தன் வசப்படுத்த முயல்கிறார். ராஜலட்சுமி கொஞ்சம் ஆசுவாசமாய் உணரத் துவங்கும் வேளை, “பணிமாறுதல்” மீண்டும் ஒரு தாயம் போட்டு அவரை வேறு ஒரு புது ஊருக்கு அனுப்பி வைக்கிறது. அங்கு மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டிய நிலைமை. இப்படி இந்த இரண்டு பாத்திரங்களுக்கு இடையே நடக்கும் பரமபதம் தான் இந்தப்புதினம்.

 நேரடி போக்குவரத்து வசதியின்மை, மத / சாதி ரீதியான கட்டுப்பாடுகள், மூட நம்பிக்கைகள், கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இன்மை, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமை, தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளோடு தான், ஒவ்வொரு அரசுத்துறை ஆசிரியரும் போராட வேண்டியிருக்கிறது. இதில், சுயமுனைப்போடு கண்ணும் கருத்துமாய் வேலை செய்பவர்கள் ஒரு சிலர். ஆனால் பெரும்பான்மையினர், கட்டுப்பாடுகளும் சரியான மேற்பார்வையும் இல்லாததாலே எந்தவித முயற்சிகளையும் எடுக்காமல், மாதமானால் சம்பளம் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற மந்த நிலைக்கு வந்து விடுகின்றனர். அத்தகைய ஆசிரியர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த நாவல் ஒரு பாடமாக அமையலாம்.

கதையின் நாயகி, கொள்கைவாதப் பிடிப்புகள் கொண்ட, நூறு சதவீத தூய்மை வாதி, அவரைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் கொடிய வில்லன்கள். அவர்களையும், குலைந்து சரிந்து கிடக்கும் இந்த அமைப்பு முறையையும் நாயகி எப்படி தன் மதியூகத்தாலும், போர்குணத்தாலும் வெற்றி கொள்கிறார் என்றெல்லாம் ”கதை” சொல்லாமல், யதார்த்தத்திற்கு மிக மிக அருகில் நின்று, ராஜலட்சுமி என்னும் ஆசிரியையின் பணி வாழ்வில் இருந்து சில நாட்களை, அவற்றிற்கே உரிய ஏற்றத் தாழ்வுகளோடு மிக இயல்பாக பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் அர்ஷியா. பணம் கொடுத்தாவது, சொந்த ஊரில் இருக்கும் பள்ளிக்கு மாற்றல் வாங்கிச் சென்றுவிடலாம் என்ற எண்ணம் ராஜலட்சுமிக்கும் தோன்றுகிறது. என்ன அமைப்பு முறை இது, உயிரைக் கொடுத்து வேலை பார்த்தாலும் அதற்குரிய அங்கீகாரங்கள் சரிவரக் கிடைப்பதில்லை என்ற ஏக்கம் அவருக்கும் வருகிறது. அவை எல்லாவற்றையும் மீறி, தன்னை நம்பி, தன்னிடம் கல்வி கற்க வரும் பிள்ளைகளை, எப்படியாவது முன்னேற்றி அவர்களை சமூகத்தில் சிறந்த மனிதர்களாக மாற்ற வேண்டும் என்ற வேட்கை அவரைத் தொடர்ந்து, விடாமல் போராட வைக்கிறது. சிறுகச் சிறுகத் தான் விதைக்கும் தானியங்கள் சோலையாகும் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்குள் எப்பொழுதும் ஈரமாய் சுரந்து கொண்டே இருக்கின்றது. அந்தத் திறம் தான் அடுத்து எந்த ஊருக்கு மாற்றல் கிடைத்தாலும், அங்குள்ள கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்ள முடியும் என்று தன்னைத் தானே நம்ப வைக்கிறது. அவரது பயணமும் தொடர்கிறது.

எடுத்துக் கொண்ட கருவின் உண்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் கோர்வையான காட்சிகள், நேர்கோட்டிலிருந்து சிறிதும் விலகாத கதை சொல்லல், சொல்ல வந்த விஷயத்தை இயல்பாகப் பேசிய நடை, பலரும் அறிந்திராத ஒரு சமகாலப் பிரச்சனையின் உண்மையான பதிவு என்று பல விதங்களில் “கரும்பலகை” சிறந்ததொரு படைப்பாக ஆகியிருக்கிறது. அரசுத் துறை ஆசிரியர்களின் பணி மாறுதல், பணி நிரவல் தொடர்பான சிக்கல்களை ஒரு ஆசிரியையின் பார்வையில், நேர்த்தியாக எழுதியிருக்கிறது “கரும்பலகை”
வாழ்த்துகள், எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கும், புதினத்தைப் பதிப்பித்த “எதிர் வெளியீடு” நிறுவனத்தினருக்கும்.

******
கரும்பலகை (புதினம்)
எஸ்.அர்ஷியா
எதிர் வெளியீடு
பக்கங்கள்: 171
விலை: ரூ. 150.

******

Monday, September 18, 2017

கல்வி – மரணம் – பாடம்

தமிழகத்துக் கல்விமுறை என்பது மாணவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது, பின் தங்கிய நிலையில் இருக்கும் ஒரு மாணவனும் தொடர்ந்து எட்டாவது வரை பள்ளிக்கு வந்து, தொடர்ச்சியாக கல்விச் சூழ்நிலையில் இருந்து, முடிந்தமட்டும் கற்று, தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், சமூதாயத்திற்கும் பயனுள்ள வகையில் தன்னைத் தகவமைத்துக்கொள்வது. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்தால், அவனைக் கல்விச் சூழலில் இருந்து விலக்கி, வொர்க் ஷாப் வேலைக்கோ, களையெடுக்கவோ அனுப்பி விடாமல், அடுத்த மாதமே மறு தேர்வு வைத்து, அந்த கல்வியாண்டே அவனுக்கு அடுத்த வகுப்பில் படிக்க வாய்ப்பு வழங்குவது. சமூகத்தில் கடைக்கோடியில் இருக்கும் மாணவனும், கல்வியின் மூலம் ஏதாவது ஒரு நிலையில் தனக்கான ஊன்றுகோலைப் பிடித்து மேல் எழுந்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட கல்வி முறை இது. பள்ளிக்கல்வியில் வெகு சுமாராகப் படிக்கும் எத்தனையோ மாணவர்கள், தொடர் வாய்ப்புகள் மூலம் சிறந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்கு இந்த இலகுவான கல்வி முறை தான் காரணம். தகுதியில்லை என பெரும்பகுதியைக் கழித்துக் கட்டிவிட்டு சிறந்ததற்கு மகுடம் சூட்டும் முறை அல்ல இந்த கல்வி முறை, மாறாக சமூகத்தில் இருக்கும் அனைவருக்கும் தொடர் வாய்ப்புகள் வழங்கி அனைவரையும் மேலே அழைத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கம்.

நூற்றாண்டுகளாக சமூகத்தின் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடும் இந்த அடிப்படையில் தான். ஒரு நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற எல்லா வீரர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவது, அதில் ஊட்டச்சத்து இல்லாமல் இளைத்திருப்பவனுக்கு கொஞ்சம் க்ளுகோஸ் கொடுத்து அவனையும் தேற்றி, பந்தய தூரத்தை கடக்க வைப்பது.

போதுமான நீண்ட கால அவகாசமும், சரியாக முன்னெடுத்துச் செல்கின்ற தலைமையும் இருந்திருந்தால், ”நீட்” தேர்வையும் எதிர்கொள்ள தமிழகம் தயார் ஆகியிருக்கும். ஆனால் நீட் எதிர்ப்புக்கான காரணம் அதுவல்ல. பலதரப்பட்ட பண்பாடு, மொழி, பொருளாதார, சமூக நிலை உள்ள பரந்துபட்ட தேசத்தை, ஒற்றைக் கொள்கை மூலம் அடைக்க நினைக்கும் முட்டாள்த்தனத்துக்கு எதிராக கிளம்பு எதிர்ப்பு இது. ஏற்கனவே கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் தலைநிமிர்ந்து நிற்கும் மாநிலங்களை, தங்கள் பிடிவாதமான கடிவாளப் பார்வை கொண்டு, ஒடுக்க நினைக்கும் அடக்குமுறையாகத் தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. மாநில இனங்களின் அடையாளங்களை அழிப்பதன் மூலமே, அகண்ட பாரதத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து இருக்குமானால், அது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பாதையாக நிச்சயம் இருக்காது.

சமீப காலத்தில், “நீட்” தொடர்பாக, மத்திய மாநில அளவில் நடந்த கலந்துரையாடல்கள் எதுவுமே ஆக்கப்பூர்வமான பாதையில் செல்லவில்லை. நீதிமன்றத்தில் அடிபட்டுப் போகும் என்று தெரிந்தே, மாநில வழிக்கல்விக்கு 85 சதம் ஒதுக்கீடு அளித்தது, மத்திய அமைச்சர்களின் பொய்யான வாக்குறுதிகள், மாநில அமைச்சர்களின் டெல்லி பயண நாடகங்கள் இப்படி எல்லாமே வெறும் கண் துடைப்பாகவே அமைந்தன. உடைத்து சொல்வதானால், இவையணைத்தும் மக்களை ஏமாற்றும் வேலையின்றி வேறு இல்லை. மத்திய மற்றும் மாநில அரசின் பிரதிநிதிகள் தொடர்ந்து தவறான வழிகாட்டுதல்களை செய்து கொண்டே இருந்தார்கள். எப்படியும் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பை மக்களின் மனதில் போலியாக விதைத்துக் கொண்டே இருந்தார்கள். இவர்கள் தங்கள் பதவிகளுக்காக நடந்த பேரங்களை எல்லாம், நீட் குறித்த விவாதம் என்று பரப்பினார்கள். விளைவு, நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல், ஒரு உயிர் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றுக் கணக்கான பிள்ளைகள், மனக்குமுறலோடும் ஆற்றாமையோடும் புழுங்கிக் கொண்டிருக்கிறார்களோ, தெரியவில்லை.

நம்மைச் சுற்றியுள்ள பெரும நிலை அரசியல் இப்படி தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது. பெரும் மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டால் ஒழிய இதற்கான உடனடித் தீர்வு கண்களுக்குத் தென்படுவது போல இல்லை. வழக்கம் போல, அடுத்த தேர்தலுக்காக காத்திருக்கத் தான் வேண்டியிருக்கிறது. மத்தியில் இருப்பவர்களுக்கு, நாமெல்லாம் கிள்ளுக் கீரைகள், இங்குள்ள மக்கள், அவர்களுக்கான முதல்தர குடிமகன்கள் இல்லை. மாநிலத்தில் இருப்பவர்களுக்கோ தங்கள் நாற்காலிகளைக் காத்துக் கொள்ள வேண்டிய பரிதாமான நிலை. இது மேலே இருப்பவர்களுக்கு மிக வசதியாய் போய்விட்டது. நினைத்தபடி எல்லாம் அடித்து ஆடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, அரசன் குடிகளை நினைக்க மறந்தாலும், குடியானவன் உழுவதை நிறுத்தக் கூடாது என்பது தானே விதி. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய சிறுமியின் மன உறுதியை, ”மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போவேன் என்று சொல்லிட்டு இருந்த, இப்போ மாட்டுக்கு வைத்தியம் பார்க்கப் போறியா” என்பது போன்ற எந்த சுடு சொல் வீழ்த்தியதோ தெரியவில்லை.  அவளின் மனவருத்தங்களைப் பகிர்ந்து கொண்டு, அவளுக்கு இருக்கும் மறு வாய்ப்புகள் பற்றி, மாற்றுப் பாதைகள் பற்றி மனம் விட்டு உரையாட, அந்த நேரத்தில் அவள் அருகில், அணுக்கமான ஒரு ஆசிரியரோ அல்லது அவள் உச்சநீதி மன்றம் வரை சென்று வாதாடத் துணை நின்ற ஏதேனும் அமைப்புகளோ இல்லாமல் போனார்களே என்ற ஆதங்கம் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

கிராமப்புற, விளிம்பு நிலை மாணவர்களிடம் பேச வாய்பு கிடைக்கும் போதெல்லாம், நாம் நினைக்கின்ற கனவு தேசம் என்று ஒன்று இல்லவே இல்லை. இங்கே ஏற்றத்தாழ்வுகளும், அவநம்பிக்கைகளும், அவமானங்களும் எப்பொழுதும் நம் வழியை மறித்து நிற்கவே செய்கின்றன. அதற்காக எல்லாம், மனம் நொந்து, உங்கள் பயணத்தை இடையில் நிறுத்திவிடாதீர்கள். உங்கள் தொடர் முயற்சிகள் எப்பாடுபட்டேனும் திறக்காத கதவுகளைத் திறக்க வைக்கும், இல்லையென்றால், உங்கள் பயணத்துக்கான மாற்றுப் பாதையும்  இருக்கலாம், சரியான திசையைக் கண்டறிந்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதே சாதிப்பதற்கான வழி. முழுதும் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும் தேவையில்லை. ஏற்கனவே இதைப் போன்ற இடர்களை எல்லாம் உடைத்து பலர் முன்னேறி இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உங்கள் பயணத்தில் சந்திப்பீர்கள், அவர்களது வழிகாட்டுதல் உங்களுக்கு தக்க நேரத்தில் இளைப்பாறுதலைத் தரும். எப்படி இருந்தாலும், முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். தன் வாழ்நாள் கனவான மருத்துவப்படிப்பு அநியாயமாக மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல், மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட அந்தச்சிறுமியின் மனநிலையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று முன்கூட்டியே அறியும் ஆற்றல் ஒருவருக்குமில்லை. ஆனாலும், இந்தப்பிரச்சனை தான் என்றில்லை, எதுவாக இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி, அவர்களின் தயக்கங்களை விலக்கி, அவர்கள் மனதில் உள்ளதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டு அவர்களுடன் உரையாடினால், அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை கிடைக்கும். அதனால் பல விபரீத நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க முடியும் என்று தோன்றுகிறது. இன்று அந்தச் சிறுமிக்காக கண்ணீர் சிந்துகிற ஒவ்வொருவருக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. ஒரு மரணத்தைக் கொச்சைப் படுத்துகிறவர்களைப் பற்றி பேச எதுவுமில்லை.

(நன்றி மலைகள் : http://malaigal.com/?p=10748)
******

Saturday, June 3, 2017

காவி அரசியல்

இன்று "மோடி ஜி கி ஜே, பாரத் மாதா கி ஜே, குஜராத்தை பாருங்க ஜி, பாலாறும் தேனாறும் ஓடுது, உத்தர் பிரதேஷ்க்கு கிடைச்ச முதல்வர் மாதிரி நமக்கெல்லாம் எந்த ஜென்மத்துல கிடைக்குமோ தெரியலயே ஜி" என்று கூவும் காவி கோஷ்டிகள் எல்லாம் எங்கிருந்தோ வந்தவர்கள் கிடையாது. நேற்று வரைக்கும் திமுக, அதிமுக என்று ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து அரசியல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் தாம். 

"இராஜாஜிக்குப் பிறகு தமிழ்நாட்டுல தலைவர்களே இல்லை. வெளியே மார்தட்டி சொல்லிக்க முடியாட்டியும், நம்மவான்னு சொல்லி மனசுக்குள்ள பூரிச்சுக்குறதுக்கு மேடம் இருந்தாங்க, இப்போ அதுவும் இல்லேன்னு ஆனபிறகு மோடிஜி தான் தமிழ்நாட்டைக் காப்பத்தணும்" என்று புல்லரித்துப் போய் இருக்கும் எலைட் கோஷ்டியைப் பற்றி நான் சொல்லவில்லை. இலாபமோ, நஷ்டமோ தன் நேரத்தையும் வாழ்க்கையையும் பணயம் வைத்து களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தொழில்முறை அரசியல்வாதிகளைச் சொல்கிறேன்.


இவர்களுக்கு அரசியல் தான் வாழ்வு. திராவிடக் கட்சிகளில் வரிசை ரொம்ப நீளம், போதாக்குறைக்கு மாவட்டச் செயலாளருக்குப் பிறகு அவர் மகன் மாவட்டச் செயலாளர், வட்டத்திற்குப் பிறகு மகன் வட்டம், ஒன்றியத்துக்குப் பின் மகன் ஒன்றியம் என்று வாரிசு இட ஒதுக்கீடு வேறு. இந்நிலையில் கடைமட்டத்திலிருந்து மேல் அதிகாரத்திற்கு வர நினைக்கும் ஒருவனின் அடுத்த தேர்வு தேசிய கட்சிகள். இந்த அடிபடையில் தான், தொண்டர்களே இல்லாவிட்டாலும் கூட, அமைப்பு முறை குலையாமல் இத்தனை வருடம் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தாக்குப் பிடித்துக் கொண்டு நிற்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, தங்களுக்கு அவர்களின் தயவு தேவைப்படலாம் என்ற எண்ணத்திலேயே அதனை அழிக்கும் வேலைகளை திராவிடக்கட்சிகள் மேற்கொள்வதில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், தேமுதிகவில் இருந்தும், மதிமுகவில் இருந்தும் கொத்துக் கொத்தாக நிர்வாகிகளை இழுத்த பெரிய கட்சிகள், காங்கிரஸ் அடிமடியில் எப்போதும் கை வைத்ததில்லை. 
இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிலுமே காங்கிரஸ் தேய்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், மத்தியில் ஆளுகின்ற பாஜக தான் அரசியல் தொழில்காரர்களின் அடுத்த தேர்வு. (பர்செண்டேஜ் கமிஷன் அரசியலில் எப்பொழுதும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பெரும் பங்கு இல்லை என்பது என் துணிபு).


இயல்பாகவே அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முனையும் ஒருவன், தலைமையின் கொள்கைகளையும், திட்டங்களையும் விதந்தோதவே செய்வான். அவனுக்கு வேறு வழியில்லை. அதே போல, தேசிய அளவில் இருக்கும் தலைமையும், அந்தந்த பிராந்தியத்தை பிரதிநுவப்படுத்துவது மாதிரியான திட்டங்களை அறிவிக்கும். அதை வைத்து உள்ளூர் நிர்வாகிகள், தலைமையிடம் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கின் மூலமே தங்கள் பிராந்தியத்துக்கான நன்மைகள் கிடைக்கிறது என்ற தங்களையும் தங்கள் கட்சியையும், தங்கள் பகுதிகளில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். 


துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் தமிழகத்தை, கூட்டணி கட்சிகள் தயவில் பத்து எம்.பி.கள் வரை கிடைக்க வாய்ப்புள்ள ஒரு மாநிலம் என்பதைத் தாண்டி வேறு எப்படியும் யோசிக்கவில்லை. இந்த நிலையில் பாஜக இன்னும் மோசம். அவர்களைப் பொறுத்தவரை தமிழகம் என்பது புளிக்கும் திராட்சை. ஆனால், பாஜகவின் தேசியத்தலைமையை நம்பி, களத்திலிருக்கும் மாநில, மாவட்ட தலைவர்களின் நிலைமை தான் பரிதாபம். வெளியில் ஜபர்தஸ்தாக பேசிவிட்டு, வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு, அவர்கள் ஒன்று குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருக்க வேண்டும் அல்லது தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்.


தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். நேர்மையான முறையில்  கைகொள்ள நினைத்திருந்தால், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். ஜெ மர்ம மரணத்திற்குப் பிறகான குழப்பம், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம் என்று வரிசையாய் வந்த பிரச்சனைகளின் போதெல்லாம் "நாங்கள் உங்களோடு இருக்கிறோம்" என்ற பிம்பத்தை (பெயருக்காவது) உருவாக்கி இருக்கலாம். ஆனால் இவர்கள் செய்வதெல்லாம், "என்னையா ஒதுக்கி வைக்கிற, உன்னை என்ன செய்கிறேன், பார்!" என்ற வெறுப்பரசியல் தான். ஆனால் இவர்களை நம்பி, களத்தில் இருக்கும் உள்ளூர் தலைவர்கள் தான் பாவம். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், எதற்கெடுத்தாலும், மோடிஜியைப் பார், யோகிஜியைப் பார் என்று ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் எப்படி வீதி வீதியாக கத்திக் கொண்டிருக்க, எலைட் குரூப்போ, டிவியில் விவாத நிகழ்ச்சியில் உண்மைக்குப் புறம்பான புள்ளி விவரங்களை அள்ளி வீசினோமா, அதன் ஹிந்தி மொழிபெயர்ப்பை டெல்லிக்கு அனுப்புனோமா, சில்லரையைத் தேத்துனோமா என்று காரியத்தில் கண்ணாக இருக்கின்றனர்.

ஆனால், இப்பொழுது தெரிகிறது, இவர்கள் தமிழ்நாட்டை மட்டும் குறிவைத்து எல்லாம் அடிப்பதில்லை. இவர்களின் அரசியலே வெறுப்பின் மூலம் வளர்ந்த அரசியல் தான். பிராந்தியங்களின் தனித்தன்மையை ஒழிப்பது இவர்களின் இரத்தத்தில் ஊறியிருக்கிறது. மொழியாகட்டும், கலாச்சாரமாகட்டும், பழக்கவழக்கங்களாகட்டும், உணவு முறையாகட்டும் எல்லாவற்றிலும் இருக்கும் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்தும் வெறி தான் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. 

"நீ செய்வதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், அதைச் செய்ய உனக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட நான் உனக்காகப் போராடுவேன்" என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் தானே நாமெல்லாம். மண்ணின் மக்களுக்கான அரசியல் செய்யாமல், எதேச்சிகரமான உத்தரவுகளைப் பிறப்பித்து, அதன்படி தான் அனைவரும் நடக்க வேண்டும் எனறு கண்களை மூடிக் கொண்டு ஆணையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அழகல்ல. தன் பரிபாலனையின் கீழ் இருக்கும் எல்லா மக்களும் தம் மக்களே என்று எண்ணாத எந்த சாம்ராஜ்யமும், அது எவ்வளவு அசுர பலத்தோடு இருந்தாலும், நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை. வரலாற்றில் நீங்கள் வில்லன்களாகக் கூட அல்ல, கோமாளிகளாகவே பதிவு செய்யப்படுவீர்கள்.


******

Monday, April 10, 2017

சிறுகதைப் பயிலரங்கு – பிப்ரவரி 2017 குறித்த அனுபவங்கள்



உயிரோடை மற்றும் காலச்சுவடு இணைந்து நடத்திய, உண்டு உறைவிட வசதியுடன் கூடிய கட்டணமில்லா, மூன்று நாள் பயிலரங்கு, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளயத்தில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் பிப்ரவரி 10 முதல் 12 வரை நடைபெற்றது. அதில் பங்கேற்பாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் காணக்கிடைக்காத ஒழுங்கமைவுடனும், துறைசார் தகைமையுடனும் சிறப்பாக நிகழ்ந்தது இப்பயிலரங்கு. மூன்று நாட்களும் நம் மனதுக்குப் பிடித்த, மதிப்பிற்குரிய பேராசிரியர்களுடனும், பிரியமான நண்பர்களுடன் சுற்றுலா சென்று வந்த கல்லூரிக்காலங்களை மீட்டெடுத்தன.

மொத்தம் அனுமதிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் 15 பேர்களுக்குள் தான். பெரும்பாலும் இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள். இவர்களுடன் கலந்துரையாடி, இவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்காக வந்த எழுத்துலக வல்லுநர்கள் எட்டு பேர். யோசித்துப் பாருங்கள், 15 பேருக்குப் பயிற்சியளிக்க 8 பேர், அதுவும் மூன்று நாட்கள். மிகச்சிறப்பான அரிய வாய்ப்பு. பங்கேற்பாளர்கள் இதனை முடிந்தமட்டும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  மூன்று நாட்களில் வெவ்வேறு அமர்வுகளில் ஆளுமைகள் ஒவ்வொருவருடனும் நேருக்கு நேர் விவாதித்து பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான களமாக அமைந்தது. மொத்த நிகழ்வுகளுக்கும் முதுகெலும்பாக நின்று செயலாற்றியவர் கவிஞர் சுகுமாரன் அவர்கள். அவரின் ஞாபகத்திறனும், அர்ப்பணிப்பும் மிகவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு விவாதங்களின் போதும் மிகச்சரியான உதாரணங்களையும், விளக்கங்களையும் சொன்னது மட்டுமல்லாமல், பேச்சுகள் திசைமாற நேர்கையில், நேர்கோட்டிற்கு இழுத்து வந்து நிகழ்வினை செம்மையாக்கியவர் அவர் தான். ஒரு பேராசிரியருக்கே உரிய அக்கறையுடனும், கண்டிப்புடனும் பயிலரங்கை சிறப்பாக வழிநடத்தினார்.

எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள், எளிமையின் மறு உருவம். பங்கேற்பாளர்கள் கேட்ட மிக சாதாரணமாக கேள்விக்களுக்கும் பொறுமையாகவும், விளக்கமாகவும் சிரித்த முகத்துடன் பதில் கூறியபடியே இருந்தார். தூரத்தில், உயரத்தில் வைத்து அண்ணாந்து பார்க்கும் எழுத்தாளுமை எழுத்தாளர் பெருமாள் முருகன். அவருடன் சமமாக அமர்ந்து விவாதிக்கின்ற வாய்ப்பை இப்பயிலரங்கன்றி வேறு எப்படி பெற்றிருப்போம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை பேசும் போதும், கவிஞர் க.மோகனரங்கனின் விஷய ஞானம் பிரமிக்க வைத்தது. கவிஞர் சக்திஜோதி  மற்றும் எழுத்தாளர்கள் சீனிவாசன் நடராஜன், கே.என்.செந்தில், குமாரநந்தன், களந்தை பீர் முகமது, ஸ்டாலின் ராஜாங்கம், பழ.அதியமான் ஆகியோருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

அறிமுகப்படலத்திற்குப் பின்னான முதல் அமர்வில், பயிலரங்கிற்கான நோக்க உரையை எழுத்தாளர் பெருமாள் முருகன் நிகழ்த்தினார். கிரியேடிவ் ரைட்டிங் என்பது சொல்லிக் கொடுத்து வருவதில்லை என்று தான் நம்புவதாகவும் ஆனால் எழுதும் ஆர்வமுள்ள இளையோருக்கு சில அடிப்படைகளை விளக்குவது பயனளிக்கும் என்றும் விளக்கினார். தமிழ் சிறுகதையின் வரலாறு மற்றும் துறை சார்ந்த முன்னோர்கள் பற்றிய அறிவு, புதிய தற்காலத்திற்குண்டான கருப்பொருட்களை எடுத்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும் கூறினார். ஐம்பது வருடங்களுக்கு முன் பூடகமாய் சொன்ன ஒரு விஷயத்தினை இன்று மிகச்சாதாரணமாய் வெளிப்படையாய் சொல்ல முடியும் எனும் போது, என்ன விஷயங்களை எழுத்தாளர்கள் எப்படி எழுத்தில் கொண்டு வரலாம் என்று சில உதாரணங்களுடன் விளக்கினார்.

கு.ப.ரா வின் “விடியுமா” சிறுகதையில், தன்னை கொடுமைப்படுத்தி வந்த கணவன் இறந்த தினத்தில் மனைவிக்கு மனதுக்குள் எழும் மகிழ்ச்சி, அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் அவள் படும் அவஸ்த்தை ஆகியவற்றை இன்றைய தினத்தின் சிறுகதையான வாமு.கோமு வின் ”மயிலாத்தா திருவிழாவிற்குப் போனாள்” கதையில் “ஒன்னும் சரிப்படாட்டா உனக்கு சோத்துல விஷம் வச்சிருவேன்” என்று வரும் உரையாடலோடு ஒப்பிட்டுப்  பேசினார். அகம் சார்ந்த உணர்வுகள் எழுத்தாளனுக்கு உள்ளிருந்து தான் தோன்றவேண்டும் ஆனால் புறம் சார்ந்து எப்படி வெளிப்படுத்துவது என்பதனை பயிற்சி மூலம் பெற முடியும் என்றும் கூறினார்.

இரண்டாம் அமர்வு, தமிழ் சிறுகதைகளின் வரலாறு பற்றி பேராசிரியர். மதிவாணன் பேசினார். மு. வரதராசனார் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வந்த தனக்கு ஏற்பட்ட போதாமை, பின்பு ஜெயகாந்தனிடம் ஈர்ப்பு, அது தனக்குள் இன்று வரை நீடித்து இருப்பது பற்றிய பிரமிப்பு ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்து கொண்டார். மற்ற வடிவங்களுடன் ஒப்பிடும் போது, சிறுகதை வடிவம் தமிழுக்குப் புதிது என்றும், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் பற்றியும், முதல் உரைநடை நூலிலேயே வழக்குச் சொற்கள் வந்துவிட்டன என்றும் கூறினார். அச்சு இயந்திரத்தின் வருகை, நாட்டின் எழுத்தறிவு சதவீதமும் அதிகரிப்பு ஆகியவற்றிற்குப் பின், சமூக அரசியல் சார்ந்த படைப்புகள் வரத் துவங்கின. பண்டித மொழியிலிருந்து எளிய எழுத்துமுறை பரவலான வாசிப்புக்கும் வித்திட்டது. ”தமிழ் சிறுகதை வரலாறும் , வளர்ச்சியும்” என்ற புத்தகம் 1980 வரையிலான படைப்புகளைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. அதை வாசிப்பதன் மூலம் பரந்துபட்ட அனுபவம் கிடைக்குமென்றும் கூறினார்.

தமிழ்சிறுகதை உலகின் பிதாமகனாக வ.வே.சு அய்யரைக் குறிப்பிடலாம். சிறுகதையிலும் கவிதைச் சுவை இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் அவர். சிறுகதை உலகின் பெரிய பாய்ச்சல் என்பது புதுமைப் பித்தனிடமிருந்தே துவங்குகிறது. அவர் எழுதிப்பார்க்காத வகைமைகளே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு இன்றும் மேற்கோள் காட்டக் கூடிய அனைத்து வகைமைகளிலும் அவர் எழுதியிருக்கிறார். அது போல, சமூக சீர்திருத்தக் கதைகளை  எழுதிய அ.மாதவய்யர் படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெறும் கேட்லாக் பத்திரிகை என்ற நிலையிலிருந்து எழுத்தையும் வியாபாரமாக்கலாம் என்று முதலில் நிரூபித்தவர் எஸ்.எஸ்.வாசன். பின்னாளில் அதனைத் திறம்பட செயல்படுத்தியவர் சி.பா. ஆதித்தனார். 1929-30 வாக்கிலேயே வணிக எழுத்து, இலக்கிய நயம் உள்ள எழுத்து என்ற வகைகள் வந்துவிட்டன. கு. அழகிரிசாமியை கரிசல் இலக்கியத்துக்கான முன்னோடி எனலாம். தி.ஜானகிராமனின் “ரசிகனும் ரசிகையும்” முழுக்க உரையாடல்களாலேயே ஆன கதை.  பின் வந்தவர்களின் விளிம்பு நிலை மனிதர்களின் சித்திரத்தை எழுதிய ஜி. நாகராஜனும், ராஜேந்திர சோழனும், பூமணியும் முக்கியமானவர்கள். பின் தொன்னூறுகளுக்குப் பின்னால் வளர்ந்த தலித்திய மற்றும் பெண்/பெண்ணிய எழுத்துக்களும் கவனிக்கத்தக்கவை. இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் கதைகளை எழுதிய மீரான் மைதீனும், கரிசல் கதைகளை எழுதிய கி.ராவும் முக்கியமானவர்கள்.  எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள், தமிழின் முக்கியமானவர்களின் படைப்புகளை ஒரு சேர வாசிப்பதற்கான களமாக இருக்கும். அம்பை, திலீப் குமார், லா.ச.ரா, பா.ஜெயப்பிரகாசம், நகுலன், அசோக மித்ரன், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோரும் குறிப்பிடத்தக்கோரில் சிலர்.

எழுத்தின் மூலமாக நாம் காலத்தோடு உரையாடும் கலையைக் கற்கிறோம். அதனை செம்மையாகக் கையாள தொடர்ந்த பயிற்சி மட்டுமே சிறந்த வழி. மொழியை செறிவாக எழுத, ஒரு எழுத்தாளன் சங்க இலக்கியங்களைப் படித்தே ஆக வேண்டும். இவ்வாறு பேரா. மதிவாணன் கூறினார்.

முதல் நாளின் மூன்றாம் அமர்வில், காலச்சுவடு இணை ஆசிரியர் களக்காடு பீர் முகமது தனது கதைகள் தோன்றிய கதையை பகிர்ந்து கொண்டார். மிக வெள்ளந்தியாகவும், சுவாரஸ்யமாகவும், சம்பவங்கள் எவ்வாறு கதையாக ரசவாதமடைகின்றன என்று உதாரணங்களுடனும் விரிவாகப் பேசினார். அதே அமர்வில் எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் தனது பரந்துபட்ட வாசிப்பனுபவத்தை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். சார்லி சாப்ளினி “தி சர்கஸ்” திரைப்படத்தை முன்வைத்தும், தி.ஜா வின் “சிலிர்ப்பு” சிறுகதையை முன்வைத்தும் அருமையாகப் பேசினார்.

இரண்டாம் நாள் அமர்வில் கவிஞர், விமர்சகர் க. மோகனரங்கன் பேசினார். எழுதும் முறைக்கான சூட்சமத்தை சொல்லிக் கொடுத்து விளக்க முடியும் என்றார். ஹெமிங்வேவுக்கும் ஃபார்டனருக்கும் இருந்த எழுத்துமுறை வித்தியாசங்கள், அதனால் அவர்களுக்குள் இருந்த பனிப்போர் ஆகியவை பற்றியும் கூறினார். எல்லா கலைப்படைப்புகளுமே அறிவு வளர்ச்சிக்காக அல்ல, அவை மனதால் உணர்ந்து கொள்வதற்கான என்ற எண்ணம் எழுதுபவர்களுக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். என்னென்ன வகைமைகளில் எழுதலாம் என்பதற்கு புதுமைப்பித்தனே நூலகம் என்றும் தீவிர தத்துவார்த்தம் சார்ந்த எழுத்துக்களுக்கும், வாசிப்பின்பம் சார்ந்த எழுத்துக்களுக்கும் உள்ள வேற்றுமையை ஒரு எழுத்தாளன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எந்த வகைமை கதையாக இருந்தாலும் அதில் உயிர் இருக்க வேண்டும். இலக்கிய வாசகர்களுக்கான உள்ளடக்கம் சார்ந்த மாற்றும் கலைநேர்த்தியான வாசிப்பின்பத்திற்கு அசோகமித்ரனை வாசிக்கலாம் என்றும் சொன்னார். நாம் பார்த்த, கேட்ட, உணர்ந்த சம்பவங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுதல், அவற்றை சிறுகதைகளாக வளர்க்க உதவும் என்றும் விளக்கினார். ஜெயமோகன் எழுதிய “நவீன இலக்கிய அறிமுகம்” எழுத நினைப்பவர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.

பின்நடந்த கலந்துரையாடலில், கதையின் கரு (Theme) மற்றும் களம் (Plot) பற்றியதொரு விவாதம், பங்கேற்பாளர்களையும், வந்திருந்த ஆளுமைகளையும் உள்ளடக்கி நடந்தது. அதன் பின், தொன்னூறுகளுக்குப் பின்னான எழுத்துலகம் பற்றிய தனது பார்வையை எழுத்தாளர் கே.என்.செந்தில் விவரித்தார். எண்பதுகளின் இறுதியில் யதார்த்தவாதங்கள் தீர்ந்து போய், இசங்களின் துவக்கம் நிகழ்ந்தது. அழகிய பெரியவன், ஜே.பி. சாணக்யா போன்றோர் அது வரை சொல்லப்படாத வாழ்க்கை முறையை பேசினர். அவர்கள் மொழியை ஜோடனையுடன் கையாளாமல், அதனை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தினர். தனிப்பட்ட முறையில் தான் எழுத்தை கூடு விட்டும் கூடு பாயும் விஷயமாகவே பார்ப்பதாகவும், அதுவரி யோசிக்காத ஒரு விஷயம், எழுதும் போது தன்னியல்பாக வர வேண்டும் என்றும் கூறினார்.

அதன் பிறகு, காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேரா. குருவம்மாள் அவர்கள் தனது மணிப்பிரவாக நடையில், சிறுகதைகள் பற்றியதொரு சிற்றுரையை ஆற்றினார். பின் பங்கேற்பாளர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பெருமாள் முருகன், பாவண்ணன், க.மோகனரங்கன், களந்தை பீர் முகமது ஆகியோர் குழுவிற்கு ஒரு ஆலோசகர் என்ற முறையில் நியமிக்கப்பட்டார்கள். பங்கேற்பாளர்களின் சிறுகதைகளை, அவர்கள் வரிக்கு வரி வாசித்து, தங்களது உண்மையான கருத்துக்களையும், கதையை இன்னும் எவ்வாறு மெருகேற்றலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்கினர். வழக்கமான பயிலரங்குகள் ஒரு வழிப்பாதையாகவே சென்று கொண்டிருக்கும். இந்நிகழ்வு அவ்வாறின்றி பங்கேற்பாளர்களையும் உள்ளடக்கியதாக, அவர்கள் ஓவ்வொருவரின் எழுத்துக்களையும் தனிப்பட்ட முறையில் ஊன்றி கவனித்து ஆளுமைகள் கருத்து சொல்வதாக அமைக்கப்பட்டிருந்தது வெகு சிறப்பு. அதுவே இப்பயிலரங்கின் மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது.

அதன் பிறகான நிகழ்வில், எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய “பிரசாதம்” மற்றும் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய “ஒரு மனுஷி” ஆகிய சிறுகதைகளை கவிஞர். எழிலரசி அவர்கள் வாசித்தார். பின் இயக்குநர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொடரில் இருந்து, இந்த இரண்டு கதைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்கள் காட்சியிடப்பட்டன. பிறகு அவற்றைப் பற்றிய விவாதங்களும் நிகழ்ந்தன.

மூன்றாம் நாள் அமர்வில், எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள், தமிழ் எழுத்துலகில் பெண்களின் பங்கு குறித்து  விரிவாகப் பேசினார். 1900களுக்குப் பிறகு, முக்கியமான எழுத்தாளுமைகளான ஆவுடையக்காள், கோதை நாயகி, குமுதினி ஆகியோர் பற்றியும், அதன் பிறகு கிருத்திகா, ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, அம்பை, பிறகு வாசந்தி, சிவசங்கரி, இந்துமதி, லக்‌ஷ்மி, சுகந்தி சுப்ரமணியன் ஆகியோர் பற்றியும் விளக்கமாக உரையாடினார். தொன்னூறுகளுக்குப் பின் வந்த பெண் எழுத்தாளர்களில் சு.தமிழ்செல்வி, உமா மகேஷ்வரி, சந்திரா, பாமா, சிவகாமி, சல்மா ஆகியோர் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் கூறினார். பின்பு எழுத்தாளர் குமாரநந்தன் தன் கதைகள் தோன்றிய அனுபவங்களையும், தான் கதை எழுதும் சூழ்நிலைகள் பற்றியும் கூறினார்.

பின்பு பங்கேற்பாளர்கள் அனுப்பி தேர்வாயிருந்த கதைகள் பற்றிய விவாதமும் நடந்தது. மூன்று நாள் நிகழ்களையும், கிருஷ்ண பிரபு சிறப்பாக நெறியாள்கை செய்தார். இறுதியாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான லாவண்யா சுந்தர்ராஜன், இத்தகைய பயிலரங்குகளின் தேவை குறித்தும், தன் மனதில் தோன்றிய சிறு விதை எவ்வாறு ஒரு வெற்றிகரமான பயிலரங்காக உருமாறியது என்றும், அதற்கு உறுதுணையாக இருந்த காலச்சுவடு பதிப்பகத்தினர், ஒரு சிறந்த வழிகாட்டியாக ஒவ்வொரு அடியிலும் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கவிஞர் சுகுமாரன், தகுந்த ஆலோசனைகள் வழங்கும் கவிஞர் மோகன ரங்கன், இணைந்து பணியாற்றிய கிருஷ்ண பிரபு, இந்த நிகழ்வுக்கு இடம் தந்து உதவிய கவிஞர் சக்தி ஜோதி, பயிலரங்கிற்கு தங்கள் நேரத்தை ஒதுக்கி வருகை தந்த எழுத்துலக ஆளுமைகள், நிதியளித்த புரவலர்கள் மற்றும் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மூன்று நாள் நிகழ்வுகளுக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது கவிஞர் சுகுமாரன் அவர்களின் துணைவியாரின் இரண்டு நிமிடப்பேச்சு. நிகழ்வு முடிகையில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பயிலரங்கில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பார்வையாளராக அமர்ந்திருந்த திருமதி.சுகுமாரனையும் பேசி அழைத்தனர். மிகத் தயக்கத்துக்குப் பின் பேசிய அவர், “நீங்கள் அனைவரும் (சுகுமாரன்) சாரிடம் இருந்து இவ்வளவு கற்றுக் கொண்டதை சொல்கிறீர்கள். கூடவே இருக்கும் நான், இத்தனை நாளில் இவரிடம் இத்தகைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற வருத்தமே வருகிறது. உண்மையில் இந்த பயிலரங்கிற்கு நான் வந்ததற்கான காரணம், இவரை இங்கே விட்டு விட்டு பக்கத்தில் பழனி போன்ற சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் தான். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் என்னையறியாமலே இந்த நிகழ்ச்சியில் மூழ்கிப் போய்விட்டேன். மதிய நேரத்தில் அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால் கூட, சொல்லிக் கொடுப்பதை ஏதாவது மிஸ் பண்ணிவிடுவோமோ என்று வேகமாக ஓடி வந்து அமர்ந்து கொள்வேன். அந்த அளவு எனக்கும் ஈடுபாடு வந்துவிட்டது. சார் எப்போது சொல்லிக் கொண்டிருப்பார், ஏதாவது எழுது என்று. அதெல்லாம் பெரியவர்களின் வேலை, நம்மால் ஆகாது என்று நினைத்துக் கொள்வேன். இந்தப் பயிலரங்கின் மூலம் நானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற உற்சாகத்தைப் பெற்றிருக்கிறேன். நிச்சயம் எழுதவும் செய்தேன்” என்றார்.

நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மீட்டெடுப்பது தானே இலக்கியத்தின் பணி. அதனைப் இப்பயிலரங்கு துல்லியமாகச் செய்திருக்கிறது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி !


******

நன்றி: மலைகள்.காம் http://malaigal.com/?p=9878

Saturday, January 28, 2017

நோயர் ஊர்தி ஓட்டுநன்

காலை பணிக்கு வந்து, உடைமாற்றி, வாகனத்தை உயிர்ப்பித்து மீண்டும் மற்றொரு நாளுக்கான ஜீவமரண விளையாட்டுக்கு ஆயத்தமானபடி காத்திருப்பதில் ஆரம்பிக்கிறது அன்றைய நாளுக்கான ஓட்டம். அழைப்பு வந்ததும், இடத்தையும் வழித்தடத்தையும் குறித்து வைத்துக் கொண்டு, உயிரையும் உடலையும் சேர்த்தள்ளிக் கொண்டு வரும் போராட்டம் துவங்கி விடுகிறது. தாமதிக்கும் ஒவ்வொரும் நொடியும் பாசக்கயிற்றின் நீளம் அதிரிகத்துக் கொண்டே வருகிறதென்ற உணர்வு இன்னும் பதற்றத்தைக் கொடுத்து ஆக்ஸிலேட்டரை அழுத்தச் சொல்கிறது. இத்தனை ஆண்டுகளாய் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஊர்தியின் எச்சரிக்கையொலி காதில் நிரந்தரமாகத் தங்கி விட்டது போலவே தோன்றினாலும் ஒவ்வொரு முறை வாகனத்தை இயக்கத் துவங்கும் போதும் பணியின் முதல் நாளுக்குண்டான படபடப்பும் பிரார்த்தனைகளும் அனிச்சையாக பற்றிக் கொள்கிறது. எப்போதும் சூழ்ந்திருக்கும் நெருக்கடி நிலையில் இருதயம் பன்மடங்கு வேகத்தில் துடிப்பதை நன்றாக உணர முடியும்.

புதிதாக மணமுடித்த இளம் தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு செல்கின்றனர். செல்லும் வழியின் எதிர்புறம் பூக்கடை தென்பட வண்டியை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மனைவிக்கு பூ வாங்க சாலையைக் கடக்கிறான் கணவன், எதிர்புறம் கணவனை நோக்கி வரும் லாரியைப் பார்க்கும் மனைவி, பதட்டத்தில் கத்தியபடி இரண்டடி முன்னால் விரைய, இந்த பக்கமிருந்து வரும் பேருந்தை கவனிக்கத் தவறுகிறாள். ஒரு காதோடு சேர்த்து ஒருபக்க முகத்தில் அடித்து ரோட்டுக்கு வெளியே தூக்கிப் போட்டுவிட்டு விரைகிறது பேருந்து. ரோட்டை கடந்து விட்ட கணவன், திரும்பிப் பார்த்து நிலைகுலைகிறான். மனைவியை மடியிலேந்தி கதறுகிறான். நெடுஞ்சாலை வண்டிகள் ஏதும் நிற்காமல் பறந்து கொண்டே இருக்கின்றன.  முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் இருக்கும் நிலையிலும், பைத்தியமாய் பதறிக் கொண்டிருக்கும் கணவனுக்கு ஆறுதல் சொல்கிறாள், செல்லிலிருந்து 108 ஐ அழைக்க வைக்கிறாள். வாகனம் வந்து ஏறியதும் தன் மடியில் வைத்து கைகள் நடுங்கியபடி அவள் தலையைத் தாங்கிக் கொண்டு வரும் கணவனை பார்வையால் தேற்றிக் கொண்டிருக்கிறாள் அந்த இளம்பெண். அவளது கண் காது மூக்கு வாய் என்று நீக்கமற வழிந்து கொண்டிருக்கிறது உதிரம்.

பள்ளிக்குச் செல்வதாய் சொல்லிவிட்டு நகரத்தைத் தாண்டியிருக்கும் குன்றிற்கு நண்பர்களுடன் விளையாடச் செல்கிறான் பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன். வீட்டிலிருந்தும் பள்ளியிலிருந்தும் சம்பந்தமில்லாத மற்றொரு திசையில் தொலைவில் இருக்கிறது குன்று.  நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே குன்றின் பாதி உயரத்திற்கு ஏறி விடுகிறான். விளையாட்டின் உற்சாகத்தில் ஒரு பாறையிலிருந்து கால் தவறி கீழே விழுகிறான். தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பயந்து போன மற்ற சிறுவர்கள், மயக்கத்தில் கிடக்கும் அவனை விட்டுவிட்டு ஓடி விடுகின்றனர். சற்று நேரத்தில் எதேச்சையாக அங்கே வரும் சில இளைஞர்கள் 108 ஐ அழைக்கிறார்கள். முதலுதவி செய்து வாகனத்தின் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்து செல்ல, சுயநினைவின்றிக் கிடக்கின்றான் சிறுவன். தலையணை முழுக்க இரத்தம் பரவிக் கொண்டே வருகிறது.

தான் பெண் பார்க்கச் செல்லும் முதல் பெண்னையே மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என உறுதியாய் இருக்கும் இளைஞன். ஒரே மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து பார்த்து விட வேண்டும் என பற்பல ஃபோட்டோக்களை அலசி, கடைசியில் ஒரு பெண்ணை பார்க்க தாய், மகன் இருவரும் டூவீலரில் பெண் வீட்டிற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் தவறான பாதையில் வந்த நான்கு சக்கர வாகனம் நேருக்கு நேராய் மோத, இரண்டு பேரும் மொத்தமாய் உருக்குலைந்து கிடக்கின்றனர். அக்கம் பக்கத்திலிருந்து ஓடி வந்தவர்கள் ஆம்புலன்சை அழைக்கின்றனர். இருவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு விரையும் போது, இவர்கள் வரவிற்காக காத்திருக்கும் பெண் வீட்டார் தொடர்ந்து செல்லில் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். இரத்தப்பிசுபிசுப்போடு செல் பாக்கெட்டில் அடிக்க, அவர்களின் பல்ஸ் இறங்கிக் கொண்டே இருக்கிறது.

மில்லில் ஆறு மணி ஷிப்ட் முடிந்து, வீடு வந்தவர் கை கால்களை கழுவி விட்டு சாப்பிட உட்காருகிறார். லேசாக மூச்சுக் குத்து போல வலியெடுக்கவே பிறகு சாப்பிட்டுக் கொள்வதாய் சொல்லி விட்டு தெருமுனையில் இருக்கும் பெட்டிக் கடைக்கு நடந்து செல்கிறார். சுமார் ஐந்து நிமிடம் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர், அங்கேயே மேசையிலிருந்து மயங்கிச் சரிகிறார். அருகிலிருப்பவர்கள் முகத்தில் சோடா அடித்துப் பார்த்தும் நினைவு திரும்பாததால், வீட்டிற்குத் தகவல் சொல்லி விட்டு, 108ஐ அழைக்கிறார்கள். வாகனம் விரைந்து வந்து அவசர சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு செல்லும் போதே, தொண்டையிலிருந்து வாய் வழியாக ஒரு மாதிரி இழுத்து மூச்சுவிட முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறார்.

பதைபதைப்பான தருணங்களினூடாகவே நிதானத்தையும் இழக்காமல், வேகத்தையும் மட்டுப்படுத்தாமல் துரித கதியில் விலைமதிக்கமுடியாத் மணித்துளிகளை மிச்சப்படுத்தி மருத்துவமனைக்குள் கொண்டுவருவதற்குள் ஓட்டுநனுடன் சேந்து நோயர் ஊர்தியும் பதறியடித்து விரைந்து செல்லும். இப்படி, எத்தனையோ தருணங்கள், எத்தனையோ உயிர்கள். சூழ்நிலைகளும், மனிதர்களும் மாறுபட்டாலும் ஒரு வாழ்வு தன்னைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனிக்கும் உயிர்ப்போராட்டதின் வலி எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. வாகனம் ரீங்காரமிட்டு அலறிச்செல்லும் பாதி வழியில் தலை திருப்பி உள் சாளரம் வழி காண நேரும் கணநேர காட்சியில் பரிச்சயமில்லாத ஓர் உயிரின் ஊசலாட்டம் ஒழுங்குமுறையின்றி வாகனம் முழுமைக்கும் அலைந்து ஆடிக்கொண்டிருக்கும். அங்கே கவிந்திருக்கும் ஓலக்குரல்களின் அதிர்வொலி சுற்று வெளியெங்கும் நிரம்பியிருக்கும். நோயர் ஊர்திக்கென தனி விலக்குரிமை வழக்கப்பட்டிருந்தும், பயிற்சியின் போதெல்லாம் மனனம் செய்த அடிப்படை விதிகளை ஒப்புவித்த பின்னரும் கூட சாலைகள் அகன்று வழிவிட மறுப்பவையே அன்றாடம் நிகழும். நகரும் வாகனவோட்டத்தை செங்குத்தாய் பிளந்து சமிக்ஞைகளைப் புறந்தள்ளி விரைந்து செல்வது பிழைத்தெஞ்சி நிற்பதற்கான கடைசி கட்ட முயற்சி. ஒருவழியாய், மருத்துவமனை அடைந்து ஊர்தியின் பின்கதவைத் திறந்து உயிரையும் உடலையும் இணைத்து இறுகக் கட்டி ஸ்ரெட்சருக்கு தாரை வார்க்கும் தருணங்களில் பள்ளிப்பருவத்தின் தேர்வுக்கு முந்தைய நிமிடங்கள் நிழலாடிச் செல்வதை இத்தனை வருடங்களாகியும் தவிர்க்க முடியவில்லை.

வழமையான பரபரப்புகள் நிறைந்த மற்றுமொரு பணிநாள் நிறைவு பெறுகிறது. வாகனத்தை ஷெட்டில் நிறுத்துமுன், அந்நாள் முழுக்க உள்ளே வாகனத்தில் சேர்ந்திருக்கும் பிணியையும், வலியையும், உதிரத்தையும் கழுவித் துடைத்து தூர எறிந்து விட்டு அடுத்த நாளிற்கான புதிய ஓட்டத்திற்கான ஆயத்தங்களை செய்து விட்டு வெளியேற வேண்டும். ஒத்திசைவில் இயங்கிக் கொண்டிருந்த ஓட்டுநனும் ஊர்தியும் அந்த இரவுக்காய் பிரியும் தருணத்தில் தான் இயல்பு நிலை திரும்பி சோர்வும், தனிமையும் ஆட்கொள்ளும். பணியறைக்குச் சென்று வெள்ளுடுப்பைக் கலைந்து விட்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தை முடுக்கி வீட்டுக்கு விரையத் துவங்கும் வேளை, கூடடையச் செல்ல வேண்டிய தூரம் மலைப்பை அதிகரிக்கும். தூக்கத்திற்காய் இரைஞ்சும் கண்களுக்கு ஒளிநிரப்பும் ஆற்றல் சாலையோர நடைபாதைக் கடையின் ஆவி பறக்கும் தேநீரில் ஒளிந்து கிடக்கும். அவ்வொளியை லாவகமாய் மீட்டெடுத்து, நடுநிசியில் ஆளரவற்ற சாலைகளில் எதிர் காற்றினூடே வீடு சேர மேற்கொள்ளும் பதினாறு கிலோமீட்டர் நெடுஞ்சாலைப் பயணம் அன்றைய சுமைகள் ஒவ்வொன்றையும் மெதுவாய் கட்டவிழ்த்து காற்றில் பறக்கச் செய்கிறது. இரவில் வீடு வந்து சேரும் போது மனமானது மௌனமான, பரிசுத்தமான, சலனமற்றதாய் மாறியிருக்கிறது. எதிர்பாராமையை எதிர்நோக்கியிருக்கும் மற்றுமொரு அதிகாலை விடியும் வரை செத்துக்கிடக்கலாம் போலத் தோன்றுகிறது.


***
நன்றி: மலைகள் http://malaigal.com/?p=9699