Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Sunday, January 14, 2024

எங்கள் விஜயகாந்த்

டிசம்பர் 28, 2023 நடிகர் விஜயகாந்த் மறைந்தார்
 அவர் நினைவை ஒட்டொ எழுதியது.
---
தமிழ்த் திரைத்துறையின் ஒரு சகாப்தம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழக நடிகர்களில் அவரைப் போல ஒருவர் அவருக்கு முன்பும் இல்லை, அவருக்குப் பின்னும் இல்லை. அந்தளவு தனித்துவமான ஆளுமையாக விளங்கியிருக்கிறார் விஜயகாந்த்.

ரஜினிக்கும், கமலுக்கும் இளவட்டங்கள் ரசிகப்பட்டாளம் சேர்ந்து கொண்டிருந்த காலத்தில், அமைதியாக அவர்களை விட எண்ணிக்கையில் மிக மிக அதிகமாக பெண்களுக்குப் பிடித்த நடிகராக விஜயகாந்த் வீற்றிருந்தார். இன்று நாற்பதுகளில், ஐம்பதுகளில், அறுபதுகளில் இருக்கும் தமிழகப் பெண்களில் பெரும்பான்மையோர் மனம் கசிந்து ஆத்மார்த்தமாக ஒரு துளிக் கண்ணீரேனும் சிந்தியிருப்பர். தமிழகத்துப் பெண்கள் அந்தளவு தங்கள் மனதிற்கு நெருக்கமானவராக, குடும்பங்களில் ஒருவராக விஜயகாந்த்தை வரித்திருந்தனர்.

தமிழ்த் திரைத்துறையில் இருக்கின்ற ஒருவரால் கூட அவரைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது போல. ஏற்றத் தாழ்வுகளும், அவமானங்களும் மலிந்து போயிருக்கும் திரைத் துறையில் மிக்க பெருந்தன்மையோடும், திறந்த மனதோடும் உண்மையான ஒரு தலைவனாகவே வாழ்ந்திருக்கிறார். கடைநிலை ஊழியர்களின் நலம், தன்னைத் தேடி வந்த அனைவருக்கும் எப்போதும் பசியாற்றும் தன்மை, தனக்கு நியாயம் என்று தோன்றும் விஷயங்களுக்காக எந்தப் பயமும் இன்றி துணிந்து குரல் கொடுப்பது என்று இயல்பிலேயே சிறந்த தலைமைப் பண்புடன் இருந்திருக்கிறார்.

விஜயகாந்தின் திரைத்துறை வாழ்வு முழுமைக்கும், அரசியல் வாழ்வின் துவக்கத்திற்கும் பாதை அமைத்தவர் அவரது உயிர்த் தோழரான இப்ராகிம் ராவுத்தர். தன் நண்பனுக்காக தனது தனிப்பட்ட வாழ்வையே அர்ப்பணித்திருந்தார் ராவுத்தர். விஜயகாந்தும் அவரை முழுமையாக நம்பி தன்னை அவரிடம் ஒப்படைத்திருந்தார். விஜயகாந்த் முப்பது ஆண்டுகள் திரைத் துறையில் பெரும் பெயர் பெறுவதற்கும், சிறந்த ஆளுமையாக நிலைத்து நின்றதற்கும் ஆணிவேராக ராவுத்தர் இருந்தார்.

காலம் அவர்கள் நட்பில் சிறு விரிசல் கொண்டு வர, அதிலிருந்து விஜயகாந்தின் கிரீடம் நழுவத் துவங்கியது. திரைத்துறையில் நிறை வாழ்வு வாழ்ந்து சாதனைகள் புரிந்தவர், அரசியலில் சரியாகச் சென்று கொண்டிருந்த பாதி வழியில் தடம் மாறிவிட்டார். அதன்பிறகு உடலும் மனமும் நலிவுற இறுதி வரை அவரால் மீண்டு வர முடியவில்லை. இப்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு, விஜி தன் பிரியமான நண்பனுடன் சென்று சேர்ந்துவிட்டார். கண்ணீர் அஞ்சலி கேப்டன். என்றும் எங்கள் தலைமுறையின் மனங்களில் நிறைந்திருப்பீர்கள்.  

#Vijayakanth

Monday, November 18, 2019

சிவப்புப் பணம் - அமேசான் #pentopublish2019 போட்டிக்கான புதிய நாவல் (e-book).

 நாவல் (e-book) குறித்து:

சிவப்புப் பணத்தின் மீதான ஆசை, மிகச் சாதாரணமான மூன்று இளைஞர்களை ஒரு சாகசப் பயணத்தை நோக்கி நகர்த்துகிறது. அது அவர்களை நடு இரவில் ஏ.டி.எம். மெஷினைத் தூக்கிச் செல்ல வைக்கிறது, அடர்ந்த வனத்தினூடாக 8000 அடி உயர மலைப்பாதையில் இரவு முழுக்க நடக்க வைக்கிறது, எத்தனையோ அலைச்சல்களில் செத்துப் பிழைத்து வந்தாலும் மீண்டும் சாகசம் செய்யத் துணியும் வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது.

கறுப்புப் பணம் தெரியும், அது என்ன சிவப்புப் பணம்?

மிக வேகமாக மதிப்பு மாறிக்கொண்டிருக்கும் பணம், வியாபார ஏற்ற இறக்கங்களை சமன்படுத்தப் பயன்படும் ரொக்கப் பணம், எதிர்பார்காதபோது கிடைக்கும் அதிர்ஷ்டப் பணம், சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதிக்கப்படும் பணம் என்று பல விளக்கங்களை உள்ளடக்கி இருக்கிறது. அத்தகைய சிவப்புப் பணத்துடனான சாகசப் பயணம் இந்த நாவல்.

ஒரு தேசத்தில் திடீரென பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இனி செல்லாது என்ற அறிவிப்பு வரும்போது நிகழும் அசாதாரண சம்பவங்கள் விறுவிறுப்பான புனைவாக – “சிவப்புப் பணம்” நாவல், உங்கள் பார்வைக்கு.
------

எனது புதிய நாவல் “சிவப்புப் பணம்” #Amazon #pentopublish2019 போட்டியில் இடம்பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு தொடர்பான புனைவு நாவலான இது உங்களுக்கு சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைத் தரும் என நம்புகிறேன்.
இந்த நாவலை (e-book) கீழ்க்காணும் இணைப்பில் வாங்கி ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
நாவலை வாசித்து Amazonல் ”5 Star Rating” மற்றும் positive review (preferrably in english) எழுதவும். உங்கள் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிந்துரை செய்யவும்.
 
நன்றி
பாலகுமார் விஜயராமன்


Thursday, March 28, 2019

வீதிக்கு வரும் தெய்வங்கள்


சித்திரவீதிக்காரன் எழுதிய “திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை” பற்றிய வாசிப்பனுபவம்

  அன்றாட வழமைகளில் இருந்து, கொஞ்சம் விடுதலையாகி இலகுவான மனநிலையில் நம்மை மிதக்க வைப்பவை திருவிழாக்கள். ஊர்கூடி ஒன்றுசேர்ந்து, ஆக்கிப் பொங்கி தின்று, கூட்டத்தோடு சுற்றி அலைந்து, மனதிருப்தியுடன் கூடடையும் போது, ஆசுவாசமும், நிம்மதியும் பொங்கிப் பெருக வைக்கின்ற திருவிழாக்கள் என்பன எளிய மனிதர்களுக்கான புத்துணர்ச்சி முகாம்கள். “திருவிழாக்கள் சமூக இளைப்பாறுதல்கள்” என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம். மதுரை என்பதே ஒரு பெரிய கிராமம். அதுபோக சுற்றியுள்ள அத்தனை கிராமங்களுக்கும் தலைநகரம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்நகரம் உயிர்ப்புடன் இருப்பதற்கு இதன் பண்பாட்டு கட்டுமானமே முக்கியக் காரணம். அத்தகைய பண்பாட்டை தலைமுறை தலைமுறையாகக் கடத்திக் கொண்டுவருவன இந்நகரில் நிகழும் பண்பாட்டுத் திருவிழாக்கள்.

மதுரையை அங்குலம் அங்குலமாக ரசித்திருக்கும் சித்திரவீதிக்காரன் சுந்தரின் திருவிழா அனுபவங்களின் தொகுப்பு, “திருவிழாக்களின் தலைநகரம் - மதுரை” என்னும் புத்தகம். மதுரையில் நடக்கும் அநேகத் திருவிழாக்களின் மரபு, வழிபாட்டு முறை, அங்கே ஆயரக்கணக்கில் கூடும் மக்களின் உற்சாக மனநிலை, தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் பழக்கவழக்கங்கள், தொன்மங்களாக மாறிய சடங்குகள் ஆகியவற்றை அழகாக ஒரு சாமான்யனின் பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் சுந்தர். வைதீகம் சார்ந்து, சாமி ஊர்வலங்களின் புனிதத் தன்மையை விதந்தோதுவது போலின்றி, கடவுள்கள் உற்சவமாய் தெருவில் நகர்ந்துவந்து எளிய மக்களின் வாழிடங்களில் காட்சிதரும் தருணங்களையே சுந்தரின் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றன. அவரது எழுத்தில் மிளிரும் இந்த யதார்த்தமே, இப்புத்தகத்தை ஸ்தல புராணம் பாடும் ஆன்மீக நூலாக்கிவிடாமல், கடவுள்கள் தங்கள் சன்னதிகளில் இருந்து வீதிக்கு வந்து, கடைக்கோடி மனிதர்களோடு வீதிகளில் புழங்கும் நிகழ்வரத்தைப் பேசும் சிறந்த படைப்பாக்குகிறது.

கட்டுரைகளினூடே மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் தொடங்கி, பண்பாட்டு அசைவுகள், அழகர்கோவில், ஏழரைப்பங்காளி வகையறா, சொட்டாங்கல் வரை பல்வேறு நூல்களில் மதுரை சார்ந்து எழுதப்பட்ட பாடல்கள் மற்றும் பத்திகளில் இருந்து காட்டப்பட்ட மேற்கோள்களும், அவற்றைக் கட்டுரைகளுக்கு மிகத் தேவையான இடங்களில் இணைத்ததும் இந்தப் புத்தகத்தில் மிகவும் கவர்ந்தவை. இது கட்டுரைகளுக்கு செறிவான ஆழத்தையும், பண்முகத் தன்மையையும் அளிக்கின்றன.

மதுரையின் பண்பாட்டுத் திருவிழாக்களோடு சேர்த்து, சமூகத் திருவிழாக்களான புத்தகத் திருவிழா மற்றும் பசுமை நடை பயணங்களையும் இணைத்திருப்பதும் மிகச் சிறப்பு. பொதுவாகவே மதுரைக்காரர்களுக்கு ஊர்ப்பாசம் அதிகம் என்பார்கள். அப்படி மதுரையையும், அதன் திருவிழாக்களையும் எளிய மக்களில் ஒருவராக இருந்து, திகட்டத் திகட்ட ரசித்தும், மீண்டும் மீண்டும் இத்திருவிழாக்களின் ஊடான அசைவுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் சித்திரவீதிக்காரன் சுந்தரின் இப்புத்த்கம் இதன் எளிமைத் தன்மைக்காகவே முக்கியத்துவம் பெறுகிறது. மதுரை மக்கள் தாங்கள் இயல்வாழ்வில் பங்குபெறும் இத்திருவிழாக்களின் எழுத்து வடிவத்தை வாசிக்கையில், “அட ஆமால்ல!” என்று மன உற்சாகத்தையும், மெல்லிய புன்னகை கலந்த பெருமிதத்தையும் அடையலாம். மற்ற ஊர்க்காரகள் மதுரையின் தொன்மையான திருவிழாக்களை நேரில் கண்டது போன்ற ஆச்சரியத்தை இப்புத்தகத்தை வாசிக்கையில் பெறமுடியும். முழு அர்ப்பணிப்போடு இத்தகைய திருவிழாக்களைப் பதிவு செய்திருக்கும் சித்திரவீதிக்காரன் சுந்தருக்கும், அழகான வழுவழு தாளில், நேர்த்தியாக வடிவமைத்து, குறைந்த விலையில் வெளியிட்டிருக்கும் பசுமைநடை நண்பர்களுக்கும் மதுரைக்காரனாக வாழ்த்துகளும், நன்றியும்!

******
திருவிழாக்களின் நகரம் – மதுரை (கட்டுரைகள்)
சித்திரவீதிக்காரன் சுந்தர்
பசுமைநடை வெளியீடு
விலை: ரூ. 130
பக்கங்கள்: 200
******

Wednesday, December 13, 2017

கோரிப்பாளயத்தின் கதை

கோரிப்பாளயத்தின் கதை

எழுத்தாளர் எஸ்.அர்ஷ்யா எழுதிய ”சொட்டாங்கல்” புதினம் குறித்த வாசிப்பனுபவம்
பாலகுமார் விஜயராமன்


அடர்வாய் புதர் மன்றிப்போயிருந்த வனம், பண்படுத்தப்பட்டு விளை நிலமாய் மனிதப்பயன்பாட்டுக்கு வந்த போது, வனத்தின் மையமாய் அப்பொழுது தான் தளிர் விட்டிருந்த ஆலங்கன்று ஒன்று தன்னியல்பாய் தப்பிப் பிழைத்தது. விவசாயம் தழைத்து விளை நிலமாய் வனம் செழித்த போது, அந்தக் கன்று வலுவாய் வேறூன்றி ஆகாயம் நோக்கி கிளை பரப்பியது. நகரம் தன் நாகரீகத்தின் கரம் கொண்டு விளை நிலங்களை விழுங்கி கான்கிரீட் காடுகளாக உருமாற்றம் செய்த போது, அக்கன்று மிகப்பெரிய ஆல விருட்சமாய் வளர்ந்து, தன் விழுதுகளை தூண்களாக்கி தன் இருப்பை, தன் பசியத்தை, தன் உயிர்ப்பை தக்க வைத்துக் கொண்டே இருந்தது. நாகரீக மனிதர்கள் வஞ்சத்தை அறமாய் ஏற்று, பொதுப்பணியை சுயலாபத்திற்காய் சுருக்கி, ஒருவரை ஒருவர் புசிக்கத் துவங்கிய போதும், அந்த முதிய மரம், தன் கிளைகளில் இன்னும் இன்னும் புதிய இலைகளை தளிர்க்கச் செய்வதை, தன்னில் வந்து தங்கும் எத்தனையோ பெயர் தெரியாத பறவைகள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நிழற்குடையாக இருப்பதை நிறுத்தவே இல்லை.

மதுரை மாநகரின் மையத்தில், தன்னை நாடி வரும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக, அவர்களின்  பிணிகளைப் போக்கி ஆறுதல் அளிக்கும் ரட்சகனாக, எண்ணற்ற தனது கருணைக் கரங்கள் மூலமாக நிழல்பரப்பி அரவணைக்கும் ஆல விருட்சமாய் இருப்பது, “சையத் சுல்தான் அலாவுதீன் பாதுஷா – சையத் சம்சுதீன் அவுலியா தர்ஹா” அல்லது எளிமையாக “கோரிப்பாளையம் தர்ஹா”. தர்ஹாவோடும், தர்ஹாவைச் சுற்றியும் வளரும் நகரத்தின், அதன் மனிதர்களின் கதையைப் பேசுகிறது எஸ்.அர்ஷியா எழுதிய “சொட்டாங்கல்” என்னும் புதினம். சொட்டாங்கல் விளையாட்டில் ஒரு கல்லைத் தவற விட்டாலும் தோற்றதாகத் தான் அர்த்தம். அது போலவே மேலும் கீழுமாய் தூக்கியடிக்கப்படும் வாழ்க்கையில், தவறவிட்ட கற்களாய் தோற்றுப் போய் கீழே விழுந்தவர்களாயும், பெருங்கருணையின் பிடியில் ஆட்பட்டு கரைந்து போனவர்களாயும் உலவும் மனிதர்களையும் பற்றியது இப்புதினம்.

வாழ்க்கையின் அதன் போக்கில், மகிழ்வாக வாழ நினைக்கும் இளைஞன் காட்டுவா. நண்பர்களின் தூண்டுதலினால் “செய்கை” செய்து ஏரியாவுக்குள் ”பெரிய கையாக” தலையெடுக்க முனைகிறான். அது கைகூடாமல், போலீஸில் மாட்டிக் கொள்ளும் நிலை வரும் போது, தப்பித்து ஊரை விட்டு ஓடுகிறான். ஆண்டுகள் பல சென்ற பின், கனிந்த பழமாகி ஊர் திரும்புகிறான். தான் வாழ்ந்த வீட்டை, தன் நண்பர்களை, உறவினர்களை என்று தேடி அலைகிறான். அத்தனை ஆண்டுகளில் ஊர் அடைந்த மாற்றங்களை, அரசியல் மற்றும் சமூக நோக்கில் அவனது பார்வை வழியாக விவரிக்கிறது புதினம். இடையில் அவனுக்கு ஒரு பொருந்தாக் காதல். பதின் வயது சிறுமியின் தாயான “அழகு” உடனான அவனது தொடர்பு, இடையில் அவன் ஊரை விட்டுச் சென்ற பின், அவள் மனம் பேதலித்து தெருவில் அலைந்தது கடைசி வரை அவனுக்குத் தெரியாமலே போகிறது.

பெரும் பணம் சேர்த்து வைத்திருக்கும் அரசு ஊழியரான தந்தையின் சிபாரிசின் பேரில், மிக எளிதாக அரசு வேலையில் அமரும் ரஃபியுத்தீனுக்கு நான்கு சுவருக்குள், எட்டு மணி நேரம் நாற்காலியில் அமர்ந்தபடி செய்யும் குமாஸ்தா வேலையில் இருப்புக் கொள்ளவில்லை. சொத்து சுகம், வேலை, சொந்த பந்தம் அத்தனையையும் உதறி விட்டு வடக்கு நோக்கி ரயிலேறுகிறான். தில்லியில் அமைச்சகங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் இடையேயான “லயசன் ஆஃபிசராக” சமூக நிலையிலும், பொருளாதாரத்திலும் சரசரவென மேலேறி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். எவ்வளவு பணம், ஆதாயம் கிடைக்குமென்ற போதிலும் தனக்கென வகுத்திருக்கும் கொள்கையிலிருந்து பிறழாதவனாகவே இருக்கிறான். அதன் பொருட்டு இன்னும் நல்ல பெயரை சம்பாதிக்கிறான். ஒரு கட்டத்தில், மனைவியும் இறந்து, மகளும் திருமணம் முடிந்து வெளிநாடு சென்றுவிட்ட பிறகு வாழ்வின் வெறுமையை உணர்ந்து. பிறந்த மண்ணைத் தேடி மீண்டும் மதுரை வருகிறான். அரசியல்வாதிகளால் கையகப்படுத்தப்பட்ட தனது பூர்வீக சொத்தை மீட்க வேண்டி போராடுகிறான்.
  
முப்பது வயதாகியும், வடிவம் குறுகிய உடல்குறை மற்றும் அவ்வப்பொழுது பிசகிப்போகும் மனக்குறைபாடு காரணமாக வீட்டில் உள்ளவர்களாலேயே ஒதுக்கப்படுகிறான் தவுலத் பாட்சா. கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து வந்த அவனது தந்தை “மௌத்” ஆன பிறகு, நிராதரவாய் நிற்கிறான். அவனை யார் வைத்துப் பராமரிப்பது என்ற சண்டை குடும்பத்தினரிடம் நடந்து கொண்டிருக்கும் போதே, யாரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனது இருப்பு மற்றும் செயலகள் குறித்த தெளிவான விவரங்கள் யாருக்கும் புலப்படவில்லை. குரங்கு முகச்சாயல் கொண்ட அவன், அவ்வப்போது கபர்ஸ்தானில் அவுலியாவின் தம்பி அவர்களுக்காக பிரத்யேகமாக வெட்டி வைக்கப்பட்டிருக்கும் குழியில் இருந்து எழுந்து போவதை பார்த்ததாகவும், அவன் தான் கருணை வடிவான அவுலியாவின் தம்பி என்றும் ஊருக்குள் அரசல் புரசலாக பேசத் துவங்குகின்றனர். விகல்பமற்று, மழலையாய் இருந்த அவன் இறுதியில் மீண்டும் தன் பிறந்த மண்ணான தர்ஹாவின் கபர்ஸ்தானில், இறைவனுக்குள் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான்.

இப்படி, வெவ்வேறு சூழ்நிலைகளின் பொருட்டு,  பிறந்த மண்ணை விட்டு விலகிச் செல்லும் வெவ்வேறு நபர்கள், மீண்டும் தாய் மண்ணை அடைய நேர்கையில் அவர்கள் கைகொண்ட ஆன்ம பலம், அனுபவம், இறை நிலை ஆகியவை கோரிப்பாளயம் தர்ஹா என்னும் ஆல விருட்சத்தின்  பெருங்கிளைகளாக எப்படி விரிகிறது என்று காட்சிப்படுத்தியிருக்கிறது இப்புதினம். அதே போல இந்த விருட்சத்தைத் தேடி வரும் பறவைகளுக்கு வாழ்வாதாரமான உணவையையும், இருப்பிடத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதாகவும் வளர்கிறது புதினம்.

பெரிய சம்சாரியான அய்யங்கோட்டை ஆகாசம்பிள்ளை தான் பிறந்த ஊரை விட்டு விட்டு, புதியதொரு இடமான கோரிப்பாளையத்தில் பதியம் போட வைக்கிறது காலம். கனவில் வந்து கருப்பணசாமி சொன்ன இடத்தைத் தேடியலைந்து இறுதியாக கோரிப்பாளையத்தில் வந்தடைந்த போது, அது தான் தனக்கான இடம் என்று உணர்கிறார். அங்கேயே தலைமுறை தலைமுறையாக அவரது வம்சமும் தழைக்கிறது. அதே போல், ஊரில் இருந்து கோயில் காசைத் திருடிக்கொண்டு வரும் சந்தனத்தேவர், காடு, கரை, வெள்ளாமை என்று செழித்து இருந்தாலும், அவரது நிலத்தில் கிடை போட வரும் ராசுக்கோனாரின் வளர்ப்புக் கிடாயின் மூலம் அவரது திருட்டுக்கும் தகுந்த தண்டனை கிடைக்கிறது.

மில் வேலைக்காக மதுரைக்கு வரும் வேலுத்தேவருக்கு மனதுக்குள் ஒரு பெருங்கனவு. தன் அதிகாரத்தை நிலைநிறுத்தவும், தனக்குப் பணிந்து போக, தன் சொல்லை மீறத் துணியாத ஒரு கூட்டத்துக்கு தலைமையேற்கவும் வேண்டும் என்று உள்ளூர ஆசை. அதை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை காலம் வழங்க, அதனைப் பிடித்து மேல் எழுகிறார். அவருக்கு ஏற்ற துணையாக, மனைவி “தண்டட்டி”யும் அமைய அவரது ராஜாங்கம் விரியத்துவங்குகிறது. ஊருக்குள் வட்டிக்கு விட்டு, தவணைத் தொழில் செய்து காசைப் பெருக்குகின்றனர். அதற்கு அவர்களின் இயற்கையான மூர்க்க குணமும், அடாவடித்தனமும் கை கொடுக்க ஊருக்குள் அவர்களின் கொடி பறக்கிறது. ஒரு கட்டத்தில், வேலுத்தேவர் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வர, அவர் விட்ட இடத்திலிருந்து அவரது ஒரே பேரனான சங்கு முத்தையா தொடர்கிறான். அவனுக்கு அரசியல் ஆசையும் சேர்ந்து வர, எதிர்பாராமல் கிடைக்கும் அமைச்சரின் மகனுடனான நட்பை பயன்படுத்தி, தன் எல்லைகளை விஸ்தரிக்கிறான். இவன் மூலமாக, இன்றைய அரசியல் காட்சிகளின் கோர முகம், அதில் நடக்கும் தகிடுதத்தங்கள் மற்றும் சூழ்ச்சிகள் ஆகியவற்றை  புனைவுக்குள் நைச்சியமாக ஒளித்து வைத்து விளையாட்டு காட்டியிருக்கிறது “சொட்டாங்கல்”

அதே போல, சாணி மற்றும் கவிச்சி வாசம் வீசும் நெல்ப்பேட்டை ஆட்டுத்தொட்டி, வகைவகையாய் பிரித்து விற்கப்படும் மீன் கடைகள், தினக்கூலிகளாக சோணையா கோவில் தெருமுனையில் தினமும் காலையில் நிற்கும், கொத்தனார் சித்தாள், நிமுந்தாள் வேலைக்குப் போகின்ற அன்றாடங் காய்ச்சிகளின் பிழைப்பு, செல்லூர் கைத்தறி தொழில் சித்தரிப்புகள், கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என்று நாள் கணக்கு வைத்து, தவணை கொடுக்கும் தண்டல்காரர்களின் மிரட்டல்கள், ரசிகர் மன்றங்களுக்குள் இருக்கும் போட்டி மற்றும் சண்டை சச்சரவுகள், அதனால் ஏற்படுகின்ற தகராறுகள், பெருகி வரும் ஃபிளக்ஸ் பேனர் கலாச்சாரம், மூன்றாம் நிலை அரசியல்வாதிகளின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், கோவில் சர்ச் மற்றும் மசூதி என்று அருகருகே ஒரே நேரத்தில் சமத்துவமாய் நிகழும் திருவிழாக்கள் என்று மதுரை மண்ணுக்கே பிரத்யேகமாக உள்ள நிலக் காட்சிகளை  வாசகனே அருகில் இருந்து பார்ப்பது போன்ற தத்ரூபமான விவரிப்பு ”சொட்டாங்கல்”லின் பெரிய பலம். மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களின் அன்றாடத்தை அப்படியே புதினத்தில், காட்சிப்படுத்தியிருப்பது சிலிர்ப்பை உருவாக்கும் என்றால், மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு மதுரையின் அசல் சித்திரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும்.

“சொட்டாங்கல்” மேலோட்டமான வாசிப்புக்கு அரசியல் களம் சார்ந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கினாலும், உண்மையில் இது மனிதர்களுக்கு தங்கள் மண் மீது இருக்கும் தீராப்பிரியம் பற்றிய கதை தான். சூழ்நிலை காரணமாக மதுரை மண்ணை விட்டுப் பிரிய நேர்ந்தவர்களின் மீள்வருகையை பேசுவது ஒரு புறம் என்றால், உள்ளூரில் அடையாளமற்று சுற்றுக் கொண்டிருப்பவர்கள் தங்களை நிலைநிறுத்தவும், தங்கள் அதிகாரத்தை வலுப்பெறச்செய்யவும் நிலக்கையகப்படுத்துதலை ஒரு கருவியாக ஏற்றுக்கொள்ளுதலும், அதுவே அவர்களுக்கான கொலைக்கருவியாய் மாறுவதும் இன்னொரு பக்கம்.

கோரிப்பாளையம் தர்ஹாவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சியும் புதினத்தில் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாண்டிய மன்னனின் அரண்மனையின் மராமத்து வேலைக்காக, அழகர் கோவிலுக்கு வடக்கிலிருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட பாறை ஒன்று, கோரிப்பாளையம் தர்ஹாவுக்கான விதானக் கல்லாக மாறிய கதை சிலிர்ப்பூட்டக் கூடியது. அதே போல பல்வேறு இடங்களில் இருந்து இங்கே குடிபெயரும் பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கான வாழ்விடமாக இப்பகுதியை மாற்றுவதும், இந்நிலம் தன்னை நெகிழ்த்தி அம்மக்களை தனக்குள் வாழ அனுமதிப்பதும், காலப்போக்கில் அவர்களின் வாழ்வியல் வழிகளிலும், வழிபாட்டு முறைகளிலும் ஏற்படும் மாற்றங்கள் அதனால் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை உணர்வு குலைந்து பகைமையும், பொறாமையும் வேர்விடுவதையும் இயல்பாக விவரித்திருக்கிறது இப்புதினம். இறுதியில், எந்தவித கொள்கை கோட்பாடுமின்றி, தங்களின் சுயலாபத்திற்காகவும், தன் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அரசியலைக் கருவியாகப் பயன்படுத்துபவர்களின் நிலைமை என்னவாகிறது என்பதையும் சொல்லி முடிகிறது “சொட்டாங்கல்”.

மதுரையின் தற்கால நிலவியலையும், சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களையும்  தொடர்ந்து தனது படைப்புகள் மூலமாக பதிவு செய்து வரும் மண்ணின் மைந்தன் எஸ்.அர்ஷியா அவர்களுக்கும், புதினத்தை வெளியிட்ட “எதிர் வெளியீடு” பதிப்பகத்திற்கும் அன்பும், வாழ்த்துகளும்.

*******
சொட்டாங்கல் – புதினம்
எஸ்.அர்ஷியா
எதிர் வெளியீடு
பக்கம்: 264
விலை: ரூ. 220


******
நன்றி: சொல்வனம் இதழ்: https://solvanam.com/?p=50553

Tuesday, September 8, 2015

மதுரை புத்தகத் திருவிழா 2015

வழக்கமான உற்சாகத்துடன் நிறைவடைந்திருக்கிறது, இந்த வருட புத்தகத் திருவிழா. காசு கொடுத்து வாங்கும் புத்தகங்களின் தேர்வு எப்போதும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்த பின்பே நிகழும். கொடுக்கும் காசுக்கு பிரயோஜனமா என்ற எண்ணம் எப்போதும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அப்படி வாங்கும் புத்தகங்கள் எப்படி இருந்தாலும்,  எப்பாடு பட்டாவது வாசித்து முடித்து விட்டால் தான் செய்த செலவுக்கு பிரயோஜனம் என்ற நினைப்பு சிறிது காலம் முன் வரை ஊறிப் போயிருந்தது. சமீப காலங்களில் தான், “காசையும் கொடுத்துட்டு இந்த கருமாந்திரத்தையும் ஏன் கட்டி அழ வேண்டும்” என்ற ஞானோதயம் பிறந்து, வாசிக்க சுகப்படாத புத்தகங்களை அப்படியே தூக்கி அலமாரியின் கடைசி அடுக்குகளில் ஒளித்து வைத்து விட்டு, பின் காலம் வாய்க்கையில் வாசித்துக் கொள்ளலாம் என்ற பக்குவம் பிறந்திருக்கிறது.

வாசிப்பின் இத்தனை ஆண்டுகளில், தற்பொழுது புத்தகத் தேர்வுகளிலும் கூட மாறுதல் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. முன்னெல்லாம், சுவாரஸ்யம் என்ற ஒற்றை செயல்திட்டம் மட்டும் தான் குறிக்கோளாக இருக்கும். இப்பொழுது வாசிப்பின் தளம் விரிவடைந்திருப்பதை உணரமுடிகிறது. அது போல, மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்றால் வேற்றுக்கிரக வாசிகள் என நினைத்து ஒதுங்கிப் போய்விடுவதுண்டு. சமீப காலங்களில் அந்தப்பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்த்து பேசுபொருள் போக மொழிபெயர்ப்பின் தரத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் இணையத்தால் கிடைக்கும் “யானைப்பால்”.

இருநூற்றி சொச்சம் அரங்குகளில் மலை மலையாய் புத்தகங்களை குவித்து வைத்திருக்கிறார்கள். எல்லா வகையான புத்தகங்களுக்கும் சந்தை இருக்கத்தான் செய்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து, சிலவற்றை வாங்கிச் செல்லவும் செய்கிறார்க்ள். பெரிதாய் பெயர் அறிமுகமில்லாத ஒரு அரங்கில், உள்நுழைந்து பத்து நிமிடம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே மக்கள் விசாரித்த தலைப்புகளில், வாங்கிச் சென்ற புத்தகங்களில் சத்தியமாய் ஒன்று கூட இதுவரை கேள்விப்பட்டதில்லை.

இத்தகைய சமுத்திரத்தில் நமக்கான புத்தகங்களை தேர்வு செய்வது என்பது, சும்மா இருபது நொடி வாசித்துப் பார்த்து விட்டு சட்டென வாங்கி விடுகிற காரியமில்லை. வாங்க வேண்டும் என்று ஏற்கனவே குறித்து வைத்திருக்கும் புத்தகங்கள் போக, அரங்கில் கண்ணில்படும் புத்தகங்களில் தெரிந்த எழுத்தாளர்கள், படித்த மதிப்புரைகள், ஏற்கனவே நண்பர்களுடனோ, வாசிப்பிலோ அடிபட்ட பெயர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்வேன். இன்னொரு முக்கியமான நிபந்தனை கட்டுபடியாகும் விலை. இப்படி எல்லாம் கலந்து கட்டி இந்த வருடக் கண்காட்சியில் வாங்கியிருக்கும் புத்தகங்கள்.

கொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கி - பாரதி புத்தகாலயம்
மதினிமார்கள் கதை - கோணங்கி - பாரதி புத்தகாலயம்
மறநிறப்பட்டாம்பூச்சிகள் - கார்த்திகைப்பாண்டியன் - எதிர் வெளியீடு
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் - பா.திருச்செந்தாழை - காலச்சுவடு
கீதாரி - சு.தமிழ்ச்செல்வி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சந்துருவுக்கு என்னாச்சு ? - யெஸ்.பாலபாரதி - பாரதி புத்தகாலயம் - புக் ஃபார் சில்ரன்
மாயி-சான் ஹிரோஷிமாவின் வானம்பாடி - தோசி மாருகி (தமிழில் கொ.மா.கோ.இளங்கோ) - பாரதி புத்தகாலயம் - புக் ஃபார் சில்ரன்
பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் – கட்டுரைகள் – மலைகள் பதிப்பகம் (அன்பளிப்பாகக் கிடைத்தது)


பக்க எண்ணிக்கையில் எல்லாம் சிறிய புத்தகங்கள் என்பதால் சீக்கிரம் வாசித்து விடுவேன். சோம்பேறித்தனத்தை ஒத்தி வைத்து விட்டு வாசிப்பனுபவத்தை எழுத வேண்டும்… பார்ப்போம் !
******