Monday, December 24, 2018

வாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்




பத்தாண்டுகளுக்கு முன், வலைப்பூ (Blog) மூலமாக எழுத ஆரம்பித்தவர்களில் கணிசமானவர்கள் இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் இருந்து, இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

22/12/2018 அன்று வாசகசாலை சென்னையில் ஏற்பாடு செய்திருந்த “முப்பெரும்விழா”, அவர்களோடு இணைந்திருக்கும் வாய்ப்பைத் தந்தது. நிகழ்வு நிறைவான ஒன்றாக இருந்தது.

வாசகசாலை இந்த ஆண்டுதான், மொழிபெயர்ப்பு பிரிவுக்கு விருதுகள் அறிவித்திருந்தது. இருப்பதிலேயே காஸ்ட்லியான கோட்-சூட் காஸ்ட்யூம் கொடுத்திருந்தாலும், தாலிகட்டும் நேரத்தில் நேக்காகக் கழற்றிவிடப்படும் தமிழ்சினிமாவின் அமெரிக்க மாப்பிள்ளை போல் இருந்த மொழிபெயர்ப்பாளர்களை, நான்கு ஹீரோக்களில் ஒருவராக்கி மேடையில் அமரவைத்ததற்கு நன்றி என்று எனது ஏற்புரையில் குறிப்பிட்டேன்.

எனது மொழிபெயர்ப்பின் துவக்கவிடமான ’வலசை’ மற்றும் இந்நூலில் உள்ள கதைகள் தேர்வின்போது  கவிஞர் நேசமித்ரன், மறைந்த எழுத்தாளர் அர்ஷியா, நண்பர் கார்த்திகைப்பாண்டியன் ஆகியோருடனான எனது தொடர் உரையாடல்கள் குறித்தும் சிறிது பேசினேன்.

இன்னும் நிறைய பேசக் குறிப்புகள் வைத்திருந்தேன். புத்தகங்கள் வெளியீடு, வாசகசாலை ஆண்டுவிழா, விருதுகள் வழங்குதல் என்று மூன்று நிகழ்வுகள் இருந்ததால், மிக நீண்ட மாலை போலத் தோன்றியது. அரங்கில் பொறுமையாக அமர்ந்திருந்தவர்களுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும் என்பதால், சுருக்கமாக முடித்துக்கொண்டேன்.
நீண்ட தூரத்திலிருந்து க.ரா வந்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்தான் பதிப்பாளர் ‘நூல்வனம்’ மணிகண்டனை தொலைபேசி பேச்சின் வழியாக அறிமுகப்படுத்தினார். எனது இரண்டு புத்தங்கள் ‘நூல்வனம்’ மூலமாக வெளிவந்துவிட்டன. இப்போது தான் மணிகண்டன் அவர்களை முதன்முறையாக நேரில் சந்தித்தேன்.

நிகழ்வு இடைவெளியில் அருணாச்சலம் சார் உடனும், எழுத்தாளர் கணேசகுமாரனோடும் பேசிக்கொண்டிருந்ததில் சிறுதானிய ஸ்நாக்ஸ் சாப்பிடவிட்டுப்போய்விட்டது. உமா மோகன் மேடம், ஜான்சி மேடம், கலையரசி மேடம் ஆகியோரை அருணாச்சலம் சார் அறிமுகப்படுத்திவைத்தார்.

விருது அறிவித்ததில் இருந்து, கார்த்திகேயன் தொடர்பில் இருந்தபடியே இருந்தார். குடும்பத்தோடு வருகிறேன் என்றதும், பயண ஏற்பாடு, தங்கும் வசதி போன்றவற்றை கூடுதல் அக்கறையோடு கவனித்துக்கொண்டார். விழாவுக்குச் சென்றதும் அவரையும், அருணையும் பார்த்ததும் சரியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.

பி.கு.விடம் நீங்கள் மாரி செல்வம் தானே என்று கேட்டு பல்பு வாங்கியபின், மாரி செல்வம் தானாகவே வந்து அறிமுகம் செய்துகொண்டார். சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் சு.வெங்கடேசனிடமும், எழுத்தாளர் எஸ்.பாலபாரதியிடமும் அறிமுகம் செய்துகொண்டு இரண்டு வார்த்தைகள் பேசினேன்.

விக்னேஷ்வரன், விருதுக்குத் தேர்வான எனது “கடவுளின் பறவைகள்” புத்தகத்தை முழுமையாக வாசித்திருந்தார். கணவனையும், மகனையும் கொன்றவனை சட்டத்திற்குமுன் நிறுத்தும் பெண்ணின் போராட்டம் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது, பிசிறில்லாத மொழிபெயர்ப்பு (’காட்டுமிராண்டிகள்’ சிறுகதை) என்று வாழ்த்தினார். மகிழ்வாக இருந்தது.

கார்த்திகைப்பாண்டியனின் ஃபிரண்ட் என்று ஓர் இளம்பெண் (செல்வராணியா, யோகநந்தினியா? ) அறிமுகம் செய்துகொண்டு பேசினார். நானும் அவர் ஃபிரண்ட்தாங்க! என்று பதில் அறிமுகம் செய்துகொண்டேன்.

ஃபெட்ரிக்கும், பிரவீண் குமாரும் சிரமம் பார்க்காமல், நாங்கள் தங்கியிருந்த அறைக்கே வந்து, வசதிகள் குறித்து சரிபார்த்துவிட்டுச் சென்றனர்.

திருமணத்திற்குப் பந்தல்கால் நட்டதுமுதல், விருந்தினர் உபசரிப்பு, மண்டப ஏற்பாடு, சமையல் மெணு, போக்குவரத்து, ஆடை ஆபரணங்கள் என்று ஒவ்வொன்றாய் பார்த்துப்பார்த்துத் திட்டமிட்டாலும், முகூர்த்ததின்போது தாலிசெயினை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடித்துலாவி, பின் சரி அதற்குபதில் சாமி கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை எடுத்துக்கட்டுங்கள் என்பது போன்ற சுவாரஸ்யமான குளறுபிடிகள் நடந்தன.

சிறப்புரை ஆற்றவந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பேசுவதற்குமுன் இடைவேளை அறிவித்து, பாயாசம் சாப்பிட அழைப்புவிடுத்தது, புத்தக வெளியீட்டின் போது, வேறு புத்தகம் உள்ள பார்சலை வைத்தது, புத்தகம் பெற்றுக்கொள்பவர் என்று பெயர் அறிவிக்கப்பட்டபின் அவரைத்தேடி வாசலுக்கு ஓடி, அவரை அங்கே காணாமல், அவருக்கு மாற்றாக அருகில் நின்றுகொண்டிருந்த வேறு ஒரு நண்பரை புத்தகம் பெற்றுக்கொள்ள வைத்தது என்று இந்த சுவாரஸ்ய தருணங்களில், ஒருங்கிணைப்பாளர்களுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை, எதிரில் இருந்து வேடிக்கை பார்க்கையில் நமக்கு ரசிக்கும்படி ஜாலியாக இருந்தது.

சிறப்புரையில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எந்தவிஷயம் செய்வதானாலும், அதற்குரிய முக்கியத்துவத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று வாழ்த்தினார்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த இளைஞர்கள், ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொள்வது, அவர்கள் நிகழ்வுக்கு அவர்களே மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பது என்பதுபோன்ற மேம்போக்கான விஷயங்கள் மட்டுமே தெரிந்தாலும், உண்மையில் இத்தகைய நிகழ்வுகளை நடத்துவதற்கு இவர்களிடம் இருக்கும் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகச்சிறப்பானவை. அதற்குண்டான நீண்டகால வெற்றி அவர்களுக்கு உரித்தாகட்டும்.

பொதுமக்களின் தளத்திற்கு இலக்கியம் சென்றடைய, நிச்சயம் பெண்களின் பங்கேற்பு இருந்தால் மட்டுமே முடியும். அவ்வகையில் வாசகசாலை பெண்களின் தொடர்பங்களிப்பு மிகவும் பாராட்டப்படவேண்டியது. முப்பெரும் விழா ஏற்பாட்டிலும், ஒருங்கிணைப்பிலும், விருதுக்குரிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதிலும், தொகுத்து வழங்கியதிலும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

அடுத்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முகத்தை மாற்றியமைப்பதில், வாசகசாலையின் பங்கு நிச்சயம் முக்கியமானதாக இருக்கும். வாழ்த்துகள் நண்பர்களே, தொடர்ந்து பயணிப்போம்.

#வாசகசாலை
#முப்பெரும்விழா2018
******

Friday, December 21, 2018

'கடவுளின் பறவைகள்’ - வாசகசாலை விருது 2018



வாசகசாலை - விருது குறிப்பு
-----------------------------------------------
#வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2018-ல் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பிற்கான விருது: "கடவுளின் பறவைகள்"
பெறுபவர்: பாலகுமார் விஜயராமன்
வெளியீடு: நூல் வனம்

வழக்கமான அன்றாடத்தின் அழுத்தங்களில் இருந்து விடுபடலுக்காக கைக்கொண்ட செல்லப் பறவைகள் வளர்ப்பு என்பதில் இருந்து துவங்குகிறது பாலகுமார் விஜயராமனின் இந்தத் தொகுப்பிற்கான ஆதிப்புள்ளி.

அங்கிருந்து துவங்கிய அவரின் ஆர்வமானது வளர்ப்புப் பறவைகள் மற்றும் விலங்குகள் சார்ந்த கதைகள் வாசிப்பு, சூழலியல் சார்ந்த உலகக் கதைகள் வாசிப்பு என கிளை பரப்பி வளர்ந்துள்ளது. அவ்வாறு வாசித்தவற்றில் பிடித்தவற்றை மொழியாக்கம் செய்வதில் துவங்கிய ஆர்வம், நல்லதொரு தொகுப்பாய் நம்முன் இன்று நிற்கிறது.

பாலகுமாரின் இந்தத் தொகுப்பை மேலும் சுவராசியமாக்குவது வெவ்வேறு நாடுகள் சார்ந்த அவரின் கதைகள் மற்றும் எழுத்தாளர்கள் தேர்வுதான். எழுத்தாளர்களில் அநேகம் பேர் உங்களுக்குப் புதியவர்கள் என்பதால் முன்முடிவுகள் ஏதுமின்றி ஆழ்ந்து வாசிக்கலாம்.

அதேபோல் இந்தப் பத்து கதைகளுமே கால, தேச வர்த்தமானம் தாண்டி, இந்தப் பூமிப் பந்தின் கோடுகளுக்குள் அடைக்கலமாகியுள்ள எளிய மனிதர்களை, அவர்களது இச்சைகளை, அவர்களது நிலம் மற்றும் வாழ்வியல் சார்ந்து இணைந்துள்ள விலங்குகளுடன் அவர்களுக்குள்ள உறவு மற்றும் பிரிவு, கோபம், சோகம் என பல்வேறு தருணங்களை அழகாக காட்சிப்படுத்துகிறது.

மிக முக்கியமாக இந்தத் தொகுப்பை நம் மனதுக்கு மேலும் நெருக்கமாக்குவது பாலகுமாரின் மொழியும், வார்த்தைகளின் பயன்பாடும்தான். படைப்பின் நிலம், சூழல் மற்றும் காலம் சிதையாமல், அதே நேரம் படிப்பவரையும் சலிப்புற வைக்காத, பிசிறு தட்டாத இலகுவானதொரு மொழி லாகவம் பாலகுமாருக்கு கைவசமாகி இருக்கிறது. அத்துடன் மறைந்த எழுத்தாளர் அர்ஷியாவின் எடிட்டிங்கில் இப்படைப்பு மேலும் மெருகேறியுள்ளது.

மொழிபெயர்ப்பை விரும்பி வாசிப்பவர்களுக்கு நல்லதொரு தேர்வாக அமையும் இந்த படைப்பிற்காக விருதுபெறும் எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் மற்றும் நூல்வனம் பதிப்பகத்திற்கு வாசகசாலை தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. #மகிழ்ச்சி.

******

Saturday, December 15, 2018

செல்ஃபோன் கதிர்வீச்சு ஆபத்தானதா?

 
 
செல்ஃபோன் கதிர்வீச்சின் அபாயம் பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுவதால், அத்துறையில் இருப்பவன் என்ற முறையில் சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.

செல்ஃபோன் கம்பெனிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அலைக்கற்றையை (Frequency band / Spectrum) அதிகரிக்கமுடியாது. ஆனால் Radiating power ஐ அதிகரிக்க முடியும்.

ஒரு செல்ஃபோன் டவரில் (BTS) இருந்து வரும் Radiating power standard உலக அளவில் 12 வாட்ஸ். இந்திய அளவில் 15 முதல் 18 வாட்ஸ். இந்த அளவில் இருந்தால் பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

சில தனியார் நிறுவனங்கள் 60 வாட்ஸ் வரை வைத்திருப்பதாகக் கேள்வி. (TRAI விதிமுறைப்படி இதற்கு அனுமதியில்லை என்றாலும், நம் நாட்டில் விதிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிந்தது தான்)

இதனால் பறவைகளுக்கு மட்டுமல்ல, மனிதனின் காது, மூளை ஆகியவையும் பாதிப்படையும். இது நீண்ட கால அடிப்படையிலானது என்பதால் இன்னும் முழுதாக நிரூபிக்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல். நினைத்தாலும் இப்படி தனியார் போல வேண்டுமென்ற power radiationஐ அதிகப்படுத்திக்கொள்ள முடியாது. காரணம், தொழிலில் இலாபம் வரும் என்றாலும், ஓர் அரசு நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பான, மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களைச் செய்யமுடியாது, செய்யக்கூடாது.

அதனால் தான் தனியார் செல்ஃபோன் சிக்னல், கண்ணாடி அறை, அண்டர்கிரவுண்ட் குடோன் என்று நீக்கமற எங்கும் துல்லியமாகக் கிடைக்கிறது. ஆனால் பி.எஸ்.என்.எல். செல்லுக்கு அழைப்பு வந்தால் செல்லை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு ஓடவேண்டி இருக்கிறது.

இதைத் தான் இத்தனை நாள், xxxxxxx சிக்னல் கக்கூஸில் கூட கிளியரா கிடைக்கும், பி.எஸ்.என்.எல். வேஸ்ட் என்று நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

மற்ற நாடுகளில் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்றால், செல்ஃபோன் என்பது வெளியிடங்களில் பயன்படுத்துவதற்கு மட்டுமே. வீட்டுக்கு வந்துவிட்டால் லேண்ட்லைன் தான் என்ற புரிதல் அவர்களிடம் இருக்கிறது.

லேண்ட்லைனில், தரைவழி கம்பிகள் வழியாக இணைப்பு கொடுப்பதால், Radiation என்ற பேச்சே அதில் கிடையாது.

என் செல்ஃபோனுக்குத் தான் அழைப்பு வரும். ஒவ்வொருமுறையும் லேண்ட்லைனுக்கு மாற்றி அழைக்கச் சொல்லமுடியாது என்றால், நீங்கள் வீட்டில் இருக்கும் போது, உங்கள் செல்லுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைனிற்கு 'கால் டைவர்ட்' செய்துகொள்ளலாம்.

செல்ஃபோன் Radiationக்கு தீர்வு, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதல்ல. Radiation powerஐ, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் வைக்க வலியுறுத்துவதே. இதை பொதுமக்கள் நேரடியாகப் பார்த்து உணரமுடியாது என்பதால் கயவர்களுக்கு வசதியாகிவிடுகிறது.

தொலைத்தொடர்புத் துறையில் இருந்துகொண்டு, செல்ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள் என்று பயமுறுத்த மாட்டேன். ஆனால் உங்கள் தேர்வு எது என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

இன்னும் 2.0 பார்க்கவில்லை. அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாகத் தெரியவில்லை.

******

சகமனிதனுடனான உரையாடல்


(முனைவர் வா.நேருவின் “நெருப்பினுள் துஞ்சல்” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்)


சாதியக் கட்டுப்பாடுகளும், பிற்போக்குத்தனங்களும். மூடநம்பிக்கைகளும் மண்டிக்கிடக்கும் சமுதாயத்தின் கடைநிலை வாழ்விலிருந்து, தன் கல்வியாலும் பணியாலும் மேலெழுந்து வரும் ஒருவன், தனது சக மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எவ்வாறு அறவுணர்வோடு அனுகுகிறான் என்பதைப் பேசுகின்றன, முனைவர். வா.நேரு அவர்கள் எழுதி, எழிலினி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் “நெருப்பினுள் துஞ்சல்” என்னும் சிறுகதைத் தொகுப்பு.

மொத்தம் பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொப்பில், இலக்கிய ரசனை மிகுந்த சொற்சரங்களோ, வர்ணனைகளோ, அலங்கார விவரிப்புகளோ இல்லை. மாறாக இக்கதைகள், நம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு நடந்த அல்லது தாங்கள் எதிர்கொண்ட அன்றாட சம்பவங்களை நேரடிப் பேச்சில் விவரிப்பதைப் போன்ற சரளமான மொழியில் அமைந்திருக்கின்றன. கதையின் மையக்கருத்தை முகத்தில் அடிப்பதைப் போலக் கூறும் இந்த எளிய நடை, படைப்பிற்கு பெரும்பலத்தை அளித்திருக்கின்றது. சாதாரணமாக வாசித்துச் செல்லும் இடங்களில் கூட திடீரென நம்மையும் அறியாமல் மனம் கனத்து, கண்களில் நீர் கோர்த்து விடுகின்றது.

நோயினாலோ, விபத்துக்களினாலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவருக்குத் துணையாக, வாசலில் காத்துக் கிடப்பவர்களின் மனவோட்டத்தையும், பதற்றத்தையும் சொல்லிச் செல்லும் கதை முக்கியமானது. அங்கே காத்திருக்கும் நேரங்களில் அருகில் இருப்பவர்களும் உருவாகும் நட்பு, பரஸ்பரம் தங்கள் துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருவருக்கு ஒருவர் ஆறுதல் வார்த்தைகள் கூறிக் கொள்ளுதல், உள்ளே எவரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அங்கே ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் எழும் பதைபதைப்பு, வெவ்வேறு வகையான பிரார்த்தனைகள், அவர்களின் துக்கங்களுக்கு வடிகாலாக மருத்துவமனை வளாகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பல மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத்தளங்கள், அது குறித்த மாற்றுப் பார்வை என்ற பல்வேறு சித்திரங்களையும் வழங்குகிறது அக்கதை.

சமூகத்தின் அடி ஆழத்தில் கிடக்கிறவன், மேலே ஏறி வர அவனுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான கல்வியை எவ்வாறு இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும். தன்னால் முடியாததை ஒரு சவாலாக ஏற்று எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்பதை மிக யதார்த்தமான மொழியில் சொல்கிறது ஒரு கதை. கிராமப்புற மாணவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆங்கிலப் பாடத்தைக் கற்பதை நீச்சல் அடிக்கப் பழகுவதோடோ அல்லது சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதோடோ ஒப்பிடும் போது, அது ஒரு மாணவனின் மனதில் எத்தகைய நேர்மறை உணர்வுகளை விதைக்கிறது என்பதை அழகாக எடுத்துரைக்கிறது.

குடும்பத்தில் ஒரு விழா நடத்தும் போது ஏற்படும் பொருளாதார முடைகளைக் குறைக்க உதவும் விதமாக உருவான மொய் எழுதும் பழக்கம், காலப்போக்கில் பெருவட்டி போட்டுத் திருப்பிச் செலுத்தும் நிர்பந்தமாகி விட்டது. மதுரை பக்கங்களில் மொய் வசூல் செய்வதற்காகவே குடும்ப விழாக்கள் நடத்துவார்கள். இலட்சங்களில் வசூல் ஆகும் பணத்தை வட்டியோடு திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அவமானத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. அவ்வாறு சீர் செய்கையில் எழும் சமூக அழுத்தத்தைப் பேசுகிறது ஒரு கதை.
ஒரு புரோட்டா கடையில் வேலை பார்க்கும் மாஸ்டருக்கும், சப்ளை செய்பவருக்கும் இடையேயான இயல்பான கேலி, கிண்டல் கலந்த நட்பையும், அதில் ஒருவர் பிரியும் போது, மற்றொருவரின் இயல்பான மனநிலை மாற்றத்தையும், அதனூடாக தினம் பதினாறு மணி நேரத்திற்கு மேலாக உழைக்கும் ஒரு எளிய மனிதனின் உடல்நலம் பாதிக்கப்படும் போது, அவனது குடும்பம் அடையும் இன்னல்களையும், வெள்ளத்தில் மூழ்குபவனுக்கு கையில் கிடைக்கும் சிறு மடத்துண்டு போல உதவும் அரசுக் காப்பீட்டுத் திட்டம் பற்றியும், அரசின் இத்தகைய திட்டங்கள் பரம்பரை சொத்தை சொகுசாக அனுபவித்து வரும் சமூகப் புரிதலற்ற ஒருவனின் மனதில் என்னவிதத்தில் பதிவாகுகிறது என்பதையும் சொல்கிறது இன்னொரு கதை.

இக்கதைகள் முழுவதையும் வாசித்து முடித்த பிறகு, அவை மனதில் அதிக சலனத்தை ஏற்படுத்தி இருந்தன. சமுதாயத்தில் உள்ள சகமனிதர்களுக்கு உதவுவது என்பது ஏதோ அரசாங்கம் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்து ஆற்றக் கூடிய பெரும்பணிகளோ, சிறந்த தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் உதவிகளோ மட்டுமல்ல. எளியவன் ஒருவன் போகிற போக்கில் செய்துவிட்டுப் போகின்ற ஏதோவொரு நற்செயல் இன்னொருவனுடைய வாழ்க்கையையே மாற்றிப் போடக்கூடியதாக இருக்கலாம். பெரிய முனைப்புகள் இன்றி, தன் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் நல்லறத்தை விதைத்து விட்டுச் செல்லும் ஓர் எளிய மனிதனின் டைரிக்குறிப்புகளே இத்தொகுப்பில் உள்ள கதைகள். சரளமான வாசிப்பு அனுபவத்தையும் தாண்டி, இக்கதைகளின் மனிதர்கள் மனிதில் நிற்கிறார்கள்.

வாசிப்பு இன்பத்திற்காக கதைகளை அனுகும் சிறிய வட்டத்தைத் தாண்டி, இக்கதைகள் பொதுசமூகத்தின் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் உரையாடப்படவும், விவாதிக்கப்படவும் வேண்டுமென விரும்புகிறேன். நகர்ப்புற ஆடம்பரங்களுக்கு பரிச்சயமற்று, உள்ளடங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் மட்டுமன்றி, ஓரளவு பொருளாதார தன்னிறைவும், கேட்டது கேட்டவுடன் கிடைக்கும் குடும்பச் சூழ்நிலையில் வளரும் மேல்மத்திய வர்க்க குழந்தைகளுக்கும் இத்தகைய கதைகள் சென்று சேர வேண்டும். ஒரு கப் இட்லி மாவு விற்பனையில் ஒரு குடும்பம் ஜீவித்திருக்கும் சூழ்நிலையும், ஒரு கலைக்கல்லூரியில் இடம் கிடைக்க பெயர் தெரியாத எத்தனை பேரிடம் ஒருவன் சிபாரிசுக்கு அலைய வேண்டி இருக்கிறது என்பதையும், ஒரு புரோட்டா மாஸ்டரின் நெஞ்சு வலிக்கு அரசின் காப்பீட்டுத் திட்டம் எவ்வாறு அவனது உயிரைக் காக்கிறது என்பதையும், தொழிற்சங்கங்கள் இன்றும் ஏன் தேவையாய் இருக்கின்றன என்பதையும் சமூகத்தின் பல படிநிலைகளில் இருக்கும் பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். நல்லறத்தை வாழ்வின் அன்றாட நடைமுறையில் தன்னியல்பில் போற்றும் எழுத்தாளர் முனைவர் வா.நேரு அவர்களுக்கும், இத்தொகுப்பை பதிப்பித்து வெளியிட்டு இருக்கும் எழிலினி பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

******************************************
நெருப்பினுள் துஞ்சல் (சிறுகதைத் தொகுப்பு)
முனைவர் வா.நேரு
எழிலினி பதிப்பகம்
பக்கங்கள்: 98
விலை: ரூ. 120/-
******************************************

(28/10/2018 அன்று தமுஎகச், பொள்ளாச்சி கிளை சார்பாக நடத்தப்பட்ட நூல் அறிமுக நிகழ்வில், தோழர்கள் மூலம் வாசிக்கப்பட்ட எனது கட்டுரை. நன்றி !)