Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Thursday, March 26, 2026

தன்நெஞ்சறிவது! - வைரமுத்து - ஞானபீடம் தொடர்பான கட்டுரை

 

தன்நெஞ்சறிவது!

பாலகுமார் விஜயராமன்

---

கவிஞர் வைரமுத்துவுக்கு 2025ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகியும் இன்னும் சர்ச்சைகளும், விவாதங்களும் முடிந்தபாடில்லை. தமிழ்ச் சூழலில் வழக்கமாக எந்த விருது அறிவிப்புக்குப் பின்னும் அத்தேர்வு குறித்த போதாமைகளும், அவநம்பிக்கைகளும் எழுவது இயல்புதான் ஆனால் இம்முறை எதிர்ப்புகள் இவ்வளவு காத்திரமாக வெளிவருவதற்கு விருதாளர் வைரமுத்து என்பதே முக்கியக் காரணம். முற்போக்காளர்கள், இடதுசாரிகள், நடுநிலையாளர்கள், அடிப்படைவாதிகள், வலதுசாரிகள், சங்கிகள், தீவிர இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டோரும் வைரமுத்துவின் தேர்வை விமர்சிக்கிறார்கள். ஏனென்றால் வைரமுத்து அவர்களின் முந்தைய வரலாறு அப்படி இருக்கிறது.  ஞானபீடம் போன்ற இந்திய அளவில் மிக உயரிய இலக்கிய அந்தஸ்து உள்ள விருதுக்கு வைரமுத்து தகதியானவர் இல்லை என்று சொல்வதற்கு மூன்று வகையான காரணங்கள் காணக் கிடைக்கின்றன.

1. வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகள் ஞானபீட விருதுக்கான தரத்தில் இல்லை. அவர் பெரும்பாலும் கூட்டு உழைப்பைக் கோரும் திரையிசைப் பாடல்கள் எழுதுவதில் வல்லுநர். அவரது தனிப்பட்ட கவிதைத் தொகுப்புகளும், புதினங்களும் மிகவும் மேம்போக்கானவை. அவற்றிற்கு இலக்கிய மதிப்பு இல்லை.

2. வைரமுத்து நேர்மையான முறையில் இவ்விருதைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அவர் விருதுக் குழுவினர்கள், பரிந்துரையாளர்கள், அதிகார மையத்திலிருப்போர், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் என அனைவர் மீதும் செல்வாக்கு செலுத்தி, நீண்ட கால காய்நகர்த்தலின் தொடர்ச்சியாக இவ்விருதைக் கைக்கொண்டிருக்கிறார்.

3. வைரமுத்து #metoo தொடர்பாக பெண்கள் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர். தார்மீக அடிப்படையில் அவருக்கு இவ்விருதை வழங்கக் கூடாது.

முதல் விஷயத்திற்கான விளக்கம் நேரடியானது. ஞானபீட விருது என்பது தீவிர இலக்கிய எழுத்துக்கான விருது மட்டுமா? சாமானியர்களின் உணர்வுகளைத் தீண்டும் திரையிசை போன்ற மற்ற கலை வடிவங்களுக்கு அதில் இடமில்லையா? இவற்றிற்கான பதில்: ஞானபீடம் பல்துறை வகைமைகளைச் சேர்ந்த கலை வடிவங்களை உள்ளடக்கிய தேர்வாகவே இதுவரை இருந்திருக்கிறது. 2023ம் ஆண்டு உருது/இந்தி கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் குல்சாருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட போதும் சர்ச்சைகள் வெடித்தன. குல்சாருக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருதை அங்கீகரிக்காத தீவிர இலக்கியவாதிகள் ஒருபுறமென்றால், குல்சாரோடு சேர்ந்து அவ்வருடம் ஞானபீட விருது பகிர்ந்தளிக்கப்பட்ட இன்னொரு நபர் குறித்தும் சர்ச்சை எழுந்தது. 2023ம் ஆண்டு கவிஞர் குல்சார் மற்றும் சம்ஸ்கிருத அறிஞர்/ஆன்மீக வழிகாட்டி/ பக்தி இலக்கிய குரு ராம்பத்ராச்சாரியா ஆகிய இருவருக்கு ஞானபீட விருது சேர்ந்தளிக்கப்படது. குல்சார் போன்ற திரைப்பட பாடலாசிரியருக்கு ஞானபீட விருதை அளிப்பதா என்றும், குல்சார் போன்ற தேர்ந்த கவிஞருக்கு ராம்பத்ராச்சாரியா போன்ற ஒரு மதத் தலைவரை இணை வைத்து விருது கொடுத்து அவரை அவமானப்படுத்துவதா என்றும், ஞானபீட விருதை ராமர் கோயில் கட்டுவதற்காகத் தொடர் பிரச்சாரம் செய்த ஒரு மதகுருவிற்கு அளிப்பதா என்றும் பல்முனைகளில் விமர்சனங்கள் எழுந்தன. அதே போல, 1998ம் ஆண்டு புகழ்பெற்ற கன்னட நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னாட் அவர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. கன்னட இலக்கிய அடையாளம் என்பது தீவிர எழுத்து வடிவம் மட்டுமல்ல அது நாடக அரங்கிலும் சமானமான உயிர்ப்புடன் இயங்கிறது என்பதை அவ்வருட விருது அறிவிப்பு உணர்த்தியது. இன்னும் பின்னே போனால், 1972ல் தேசியவாதக் கவிஞரான ராம்தாரி சிங் தினகருக்கு (இந்தி) வழங்கப்பட்ட விருது முக்கியமாக அவர் ஆற்றிய நாட்டுப்பற்று மிக்க அரசியல் உரைகளுக்கானதே. இலக்கியம் என்பது தனிப்பட்ட வாசிப்பு இன்பம் மட்டுமல்ல, அது வாய்மொழி மரபும்கூட என்ற செய்தியை அறிவிப்பதாக அமைந்தது. 1982ல் விருது பெற்ற கவிஞர், ஓவியர் மகாதேவி வர்மா (இந்தி) அவரது கவிதைகளைப் போலவே சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண்கள் உரிமை மற்றும் கல்விக்காக அவர் கொடுத்த குரலுக்காகவும் போற்றப்பட்டவர். 1996ல் விருது வென்ற மகஸ்வேதா தேவி (வங்கம்) தீரமிக்க மனித உரிமைப் போராளி மற்றும் பத்திரிகையாளர். பொதுவெளியில் அவரது இலக்கியத்தைக் காட்டிலும் பழங்குடியினர் நல்வாழ்வு மற்றும் கொத்தடிமைத் தொழிலுக்கெதிரான நேரடிச் சமூகச் செயல்பாடு வீரியமிக்கவை. இப்படி பன்முக இலக்கிய, பண்பாட்டு வடிவங்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது ஞானபீட விருது. ஆயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களை, கவிதைகளை, சில புதினங்களை எழுதிய வைரமுத்துவும் செழுமையான மொழிப்பங்காற்றியிருக்கிறார். பல முறை தன் திரையிசைப் பாடல்கள்களுக்காக தேசிய அளவிலான அங்கீகாரமும், தனது “கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக 2003ம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருதும் பெற்றிருக்கிறார். அவர் சாகித்ய அகாடெமி விருது பெறும் போதும் சில சர்ச்சைகளை எதிர்கொண்டார். எனினும் இத்தகைய அவரது சாதனைகள், அவருக்கான ஞானபீட விருதுத் தேர்வுக்கு பலமான அடித்தளம் அமைக்கின்றன.

இரண்டாவது விஷயம், வைரமுத்து நேர்மையற்ற முறையில் மறைமுக அழுத்தங்கள் மற்றும் சிபாரிசுகள் மூலமே ஞானபீட விருதினைப் பெற்றிருப்பார் என்று நம்பப்படும் யூகம். இதனை வைரமுத்துவின் மீதான வெற்றுக் காழ்ப்பு என்ற ஒற்றை வரியில் சுருக்கிவிடவும் முடியாது. தமிழின் தன்னிகற்ற படைப்பாளி எனத் தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் வைரமுத்து, எப்போதும் ஆட்சியாளர்களின் நன்மதிப்புப் பட்டியலில் இடம் பெறத் தவறியதே இல்லை. திராவிட இயக்கத் தலைவர்களோடு நட்பு பாராட்டி அவர்களின் நெருங்கிய வட்டத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் அதே வேளையில் ஒன்றிய அரசுப் பிரதிநிதிகளுடனும் அமைச்சர்களுடனும் இணக்கத்தை வளர்க்கத் தவறியதும் இல்லை. ஒன்றிய நிதியமைச்சரை “நட்டு வைத்த வேலுக்குப் பொட்டு வைத்தது போல இருக்கிறார் என்று பாராட்டியது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹரித்வாரில் திருவள்ளுவருக்கு சி்லை நிறுவ முன்னெடுக்கையில் வலியச் சென்று வாழ்த்தியது, முக்கியமாக, தற்போதைய பிரதம மந்திரியின் இந்தி மொழி கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து கலந்து கொண்டு அவரின் “கவிப்புலமையை வானளாவப் புகழ்ந்து தள்ளியது இவையெல்லாம் பொதுப்பார்வையாளர்களுக்கு அவர் மீது அசூயையை ஏற்படுத்தின. அவரது இத்தகைய செயல்கள் மூலம் அவர் எத்தகைய நேரடி, மறைமுகப் பலன்கள் பெற்றிருப்பார் என்று தங்கள் யூகங்களை வளர்க்க அவரது நடவடிக்கைகள் துணைபோயின. ஞானபீடம் போன்ற உயரிய விருதுகளுக்குத் தகுதியுடைய பலர் தேர்வுப் பரிசீலனையில் இருக்கும் போது, ஆட்சி அதிகாரத்தில் ஆளுமை செலுத்துபவர்கள், முக்கிய படைப்பாளுமைகள் போன்றோரின் பரிந்துரைகள் முக்கியப் பங்கு வகிக்கும் சூழ்நிலையில் வைரமுத்து அதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பார் என்ற சந்தேகத்தை, அவருக்கு ஞானபீட விருது அறிவித்திருக்கும் இவ்வேளையில் தங்கள் எதிர்ப்புக்கான காரணமாக முன்வைக்கின்றனர். இச்சங்கிலியில் முக்கியமான இன்னொரு கண்ணி, தமிழில் இதற்கு முன் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் இறுதிக் காலத்தில் இருக்கும் போது, வைரமுத்து வலியச் சென்று அவரிடம் தனது சிறுகதைகள் குறித்து  ஜெயகாந்தன் எழுதியது போல ஒரு பாராட்டுக் கடிதம் எழுதி அவரது கையெழுத்தைப் பெற்றார் என்று ஜெயகாந்தன் அவர்களின் மகள் முன்வைத்த குற்றச்சாட்டு. அதற்கு வைரமுத்து தரப்பில் இருந்து ஜெயகாந்தனின் ஒப்புதலின் பெயரிலேயே அந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டது என்று மறுப்பு வந்தாலும், கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அப்படியே தான் இருக்கின்றன.

 வெளியில் இருந்து பார்ப்பதற்கு இவை நேர்மையற்ற செயல்களாகத் தோன்றலாம். ஆனால் தகுதியுடைய தனது படைப்புகள் உயரிய இடங்களுக்குச் சென்று சேரத் தானே அதற்கான சந்தைப்படுத்துதலையும் செய்வதில் என்ன தவறு என்று வைரமுத்து நினைத்திருக்கலாம். தகுதியற்ற ஒன்றிற்காக சமூகத்தின் பிரபலர்களும், ஆளுமைகளும், ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் வலிய வந்து பாரட்டுப்பத்திரங்கள் வாசிப்பதில்லை. தான் முறையாக தன் படைப்பாற்றலை அவர்கள் முன் ‘கூச்சமின்றி (இதனைப் படைப்பாளர்களுக்கு உள்ள பொதுவான அவையடக்கம்/கூச்சம் என்ற பொருளில் வாசிக்கவும்) நடத்திக் காட்டுவதால் தன் படைப்புகளுக்கான சிபாரிசும் அங்கீகாரமும் கிடைக்கின்றன என்பது விருதாளரின் வாதமாக இருக்கலாம். ஒரு மனிதன் பல வருடங்களாகப் கணக்குகள் போட்டு, முன்னேறி, தனக்கு முன்பிருந்த விருது பெற வாய்ப்பிருந்த படைப்பாளுமைகளைப் புறந்தள்ளி, தன் சுயவிவரக் குறிப்புகளை மெருகேற்ற தகுதியான பரிந்துரைக் கடிதங்களைச் சேகரித்து அவற்றை வலுவுள்ளதாக்கி, விருதுக் குழுவின் பல படிநிலைகளைத் தனது செல்வாக்கினால் தகர்த்து, இறுதி வெற்றியையும் பெற்றிருப்பார் என்று நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் இன்றைய சமூக சூழ்நிலையில் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று முற்றாகப் புறந்தள்ளிவிடவும் முடியாது. ஆனால் அத்தகைய வழிமுறைகளில் தான் வைரமுத்து ஞானபீட விருதினைப் பெற்றிருப்பார் என்று பொது சமூகம் யூகித்தாலும், வலுவான ஆதாரங்களின்றி அதனை எதிர்க்க பொது சமுதாயத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவர் நேர்மையற்ற முறையில் இவ்விருதை அடைந்திருப்பார் எனில் அவ்விருதின் பொதுமதிப்பு குறைகிறதே ஒழிய, வேறொரு வெளிப்பாடும் அதன் மூலம் கிடைக்கப்போவதில்லை.

மூன்றாவது விஷயம், பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான #metoo சர்ச்சை.  பிரபலங்கள் தங்கள் செல்வாக்கினைப் பயன்படுத்தி தம் அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும் பணிந்து போக வேண்டிய இடத்தில் இருக்கும் எளியவர்களை பாலியல் ரீதியாக சீண்டல்கள்/அத்துமீறல்கள் / துன்புறுத்தல்கள் செய்ததை சமூகத்தின் பார்வைக்கு அம்பலப்படுத்தும் ஒரு பேரியக்கமாக உலகம் முழுவதும் வெடித்தெழுந்தது #metoo அதாவது ”நானும் பாதிக்கப்பட்டேன் எனும் கையறு நிலையின் முழக்கம்.  2017ம் ஆண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக எழுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அதன் மூலம் அவர் வகித்துவந்த துறை சார்ந்த பதவிகள் பறிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் #metoo ஒரு இயக்கியமாகப் பரவியது.  பின்னர் வெயின்ஸ்டீன் மீதான குற்றங்கள் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனையும் கிடைத்தது. அவர்  தொடர்பான செய்திகளை ஆழமாகவும், விரிவாகவும் பிரசுரித்ததற்காக, நியூ யார்க் டைம்ஸ் மற்றும் நியூ யார்க்கர் பத்திரிகைகளுக்கு 2018ம் ஆண்டு பொதுச் சேவைக்கான மதிப்புமிக்க “புலிட்சர் விருதும் வழங்கப்பட்டது. ஆனால் #metoo பரவலாகியபின், ஆதாரப்பூர்வமாகவும் சட்டப்படியும் நிரூபிக்க வாய்ப்பில்லாத / விருப்பமில்லாத பாலியல் சீண்டல்களை, பாதிக்கப்பட்டவர்கள் பொதுவெளியில் வெளிப்படுத்துவதன் மூலம் குற்றம்சாட்டப்படும் பிரபலங்களின் சமூக மதிப்பைக் குலைக்கும் சிறிய ஆயுதமாக அது பயன்படத் துவங்கியது. அதே சமயம், சட்டப்படியான அல்லது ஆதாரப்பூர்வமான இறுகியப் பிடிப்பு இல்லாத காரணங்களினால் #metoo என்பது பிரபலங்களின் சமூக நன்மதிப்பைக் கெடுக்கும் வெறும் அவதூறாக நீர்த்துப் போகும் வாய்ப்புகளும் பெருகின.

தமிழ்ச் சூழலில், 2018ம் ஆண்டு வைரமுத்துவுக்கு எதிரான #metoo பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை பிரபல பாடகி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முன்வைத்தனர். இன்று வரை அவை சட்டப்பூர்வமான வழக்காக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகள், திரைத்துறையைத் தாண்டி சமூகத்திலும் அரசல் புரசலாக ஒரு வதந்தியைப் போலவே சுற்றியபடியே இருக்கின்றன. ஒரு பக்கம் அவருக்கு எதிராக புகாரளித்தவர்களுக்கு வாய்ப்புகள் இரகசியமாக மறுக்கப்படுகின்றன. அதே போல வைரமுத்துவுடன் பணிபுரிந்த பிரபல இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மௌனமாக அவருக்கு வாய்ப்புகள் வழங்குவதை நிறுத்திவிடுகின்றனர். அவர் மீது குற்றம் சாட்டியவர்கள் தொடர்ந்து பொதுவெளியில் அவரைப் பற்றி விமர்சித்தபடியே இருக்கின்றனர். ஆனால் இவையாவும் தன் சட்டை நுனி தூசி என்பது போல, தட்டிவிட்டு வைரமுத்து தொடர் தனியிசைப் பாடல்கள் வெளியிட்டுக் கொண்டே இருந்தார், பொதுநிகழ்வுகளில் வலிய தலையை நிமிர்த்திக் கொண்டு நின்றார், புத்தகங்கள் எழுதி தன்னைவிடப் பிரபலங்களின் முன்னிலையில் பிரமாண்ட வெளியீட்டு விழாக்கள் நடத்திக் கொண்டே இருந்தார்.  தனது படைப்பாளுமை பற்றி வாய்ப்புள்ள சந்தைகளில் எல்லாம் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார். இன்று மதிப்புமிக்க ஞானபீட விருதையும் பெற்றிருக்கிறார். அதற்கு சமூகத்தின் மேன்மை மிக்க பல ஆளுமைகள் தஙகள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.  அவர் புதிய சிறகுகளுடன் தான் இன்னும் உயரப்பறக்க இவ்விருது சிறந்த உத்வேகத்தை அளித்திருக்கிறது என்று பேருவகை கொள்கிறார். அதே வேளையில் அவர் மீது அபிமானம் கொண்டோர், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிண்ணனியில் இருந்து வந்த ஒருவர் ஞானபீடம் போன்ற உயரிய விருதினை பெறுவது பொறுக்காத மேட்டிமைக் குழுவின் சூழ்ச்சியே அவர் மீதான இத்தகைய அவதூறுகள் என்கின்றனர்.

வைரமுத்து ஞானபீட விருதுக்குத் தகுதியற்றவர் என்று நம்புபவர்கள் அவருக்கு அவ்விருது வழங்கியதை, தங்களுக்குச் சரியென்று தோன்றும் தேற்றத்தை வைத்து எதிர்க்கிறார்கள். ஆங்கிலம் உள்ளிட்ட ஊடகத் துறையில் செல்வாக்கு உள்ளோர் அவருக்கு எதிராகக் கட்டுரை எழுதுகின்றனர். சிலர் விருதுக்குழுவுக்கு நேரடியாகக் கடிதம் எழுதுகின்றனர். எழுத்தாளர்கள், தீவிர இலக்கியவாதிகள், வாசகர்கள் சேர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். இன்னும் சிலர், ஒரு படி மேலே போய், தங்களது தனிப்பட்ட செல்வாக்கினைக் கொண்டு, இவ்விருது அவருக்குக் கிடைப்பதைத் தடுத்து நிறுத்த முயற்சித்ததாகவும், அதனையும் மீற இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டதால், தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேறொரு விருதுக்கு, ஞானபீடத்திற்கு மாற்று என்ற சாயத்தைப் பூசி கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கிறார்கள்.

தேரளத்தைச் சேர்ந்த ஒ.என்.வி. பண்பாடுக் கழகம் சார்பாக பழம்பெரும் மலையாளக் கவிஞர் ஒ.என்.வி. குரூப் நினைவாக  வழங்கப்படும் இலக்கிய விருது 2021ம் ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டது. கவிஞர் ஒன்.என்.வி. குரூப் 2007ம் ஆண்டு இதே ஞானபீட விருதை வென்றவர் என்பது இதில் இன்னொரு உபசெய்தி. #metoo தொர்பான சர்ச்சைகள்,  சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மலையாளத் திரைத் துறையினரின் எதிர்ப்பு காரணமாக விருதுக் குழுவினர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட அவ்விருது குறித்த தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தனர். ஆனால் விருதுக்குழு தன் மறுமுடிவை அறிவிக்கும் முன்பே, தான் அந்த விருதை ஏற்க மறுப்பதாகவும்/திருப்பித் தருவதாகவும் விருதுத் தொகையான மூன்று லட்ச ரூபாயை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துவிடும்படியும் வைரமுத்து அவசரமாக ஒரு காணொளி அறிக்கை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அவரை அந்த முடிவு நோக்கி உந்தித் தள்ளியது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

 "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்"

 பள்ளிப்பருவத்தில் படித்த குறள், இப்போது ஏனோ பொருத்தப்பாடுடனோ, பொருத்தமின்றியோ திடீரென மனதில் தோன்றுகிறது. தன் நெஞ்சு அறிய ஒருவன் பொய் சொல்வானெனில் அந்தப் பொய்யே அவனைச் சுட்டுப் பொசுக்கும். கவிஞர் வைரமுத்துவுக்கான ஞானபீட அறிவிப்புக்குப் பின்னால், (தீவிர இலக்கியவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத) அவரது பாடல்கள், கவிதைகள், புதினங்கள் என்று நிறைய ஆக்கங்கள் இருக்கின்றன. அவை இலட்சக்கணக்கான சாமனியர்களை ஆற்றுப்படுத்தி இருக்கிறது. (அவர் பரிந்துரைக் கடிதங்களை எப்படிப் பெற்றிருப்பார் என்று பலவித யூகங்கள் இருந்தாலும்), மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் தன் சுயவிவரக் குறிப்பினை பலப்படுத்துவதற்கான போதுமான துணைக் கோப்புகளை இத்தனை ஆண்டுகளாகச் சேகரித்து அடுக்கியிருக்கிறார். ஆகவே முதல் இரண்டு விஷயங்களில், படைப்பாளர் சமூகமாக அவரை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதில் நியாயமில்லை. மூன்றாவது விஷயமுமே, நிரூபிக்கப்படாதவரை யாரும் குற்றவாளி இல்லை, அவதூறுகளுக்காக மனம் ஒடுங்கி ஓரமாக அமர்ந்திருக்க வேண்டியதும் இல்லை. எனவே வெளியில் இருந்து இக்காரணத்திற்காக அவருக்கான விருதை எதிர்ப்பது சரியா என்று தெரியவில்லை. ஆனால் தன் நெஞ்சறிய பொய்யை வைத்துக் கொண்டு ஒருவன் உயரிய மேடையில் தலை நிமிர்ந்து வீற்றிருப்பானெனில், அப்பொய் அவனைச் சுடும் என்று மட்டும் நம்புகிறேன், அவ்வளவுதான்.

--- 
பாலகுமார் விஜயராமன்

******



Monday, December 24, 2018

வாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்




பத்தாண்டுகளுக்கு முன், வலைப்பூ (Blog) மூலமாக எழுத ஆரம்பித்தவர்களில் கணிசமானவர்கள் இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் இருந்து, இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

22/12/2018 அன்று வாசகசாலை சென்னையில் ஏற்பாடு செய்திருந்த “முப்பெரும்விழா”, அவர்களோடு இணைந்திருக்கும் வாய்ப்பைத் தந்தது. நிகழ்வு நிறைவான ஒன்றாக இருந்தது.

வாசகசாலை இந்த ஆண்டுதான், மொழிபெயர்ப்பு பிரிவுக்கு விருதுகள் அறிவித்திருந்தது. இருப்பதிலேயே காஸ்ட்லியான கோட்-சூட் காஸ்ட்யூம் கொடுத்திருந்தாலும், தாலிகட்டும் நேரத்தில் நேக்காகக் கழற்றிவிடப்படும் தமிழ்சினிமாவின் அமெரிக்க மாப்பிள்ளை போல் இருந்த மொழிபெயர்ப்பாளர்களை, நான்கு ஹீரோக்களில் ஒருவராக்கி மேடையில் அமரவைத்ததற்கு நன்றி என்று எனது ஏற்புரையில் குறிப்பிட்டேன்.

எனது மொழிபெயர்ப்பின் துவக்கவிடமான ’வலசை’ மற்றும் இந்நூலில் உள்ள கதைகள் தேர்வின்போது  கவிஞர் நேசமித்ரன், மறைந்த எழுத்தாளர் அர்ஷியா, நண்பர் கார்த்திகைப்பாண்டியன் ஆகியோருடனான எனது தொடர் உரையாடல்கள் குறித்தும் சிறிது பேசினேன்.

இன்னும் நிறைய பேசக் குறிப்புகள் வைத்திருந்தேன். புத்தகங்கள் வெளியீடு, வாசகசாலை ஆண்டுவிழா, விருதுகள் வழங்குதல் என்று மூன்று நிகழ்வுகள் இருந்ததால், மிக நீண்ட மாலை போலத் தோன்றியது. அரங்கில் பொறுமையாக அமர்ந்திருந்தவர்களுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும் என்பதால், சுருக்கமாக முடித்துக்கொண்டேன்.
நீண்ட தூரத்திலிருந்து க.ரா வந்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்தான் பதிப்பாளர் ‘நூல்வனம்’ மணிகண்டனை தொலைபேசி பேச்சின் வழியாக அறிமுகப்படுத்தினார். எனது இரண்டு புத்தங்கள் ‘நூல்வனம்’ மூலமாக வெளிவந்துவிட்டன. இப்போது தான் மணிகண்டன் அவர்களை முதன்முறையாக நேரில் சந்தித்தேன்.

நிகழ்வு இடைவெளியில் அருணாச்சலம் சார் உடனும், எழுத்தாளர் கணேசகுமாரனோடும் பேசிக்கொண்டிருந்ததில் சிறுதானிய ஸ்நாக்ஸ் சாப்பிடவிட்டுப்போய்விட்டது. உமா மோகன் மேடம், ஜான்சி மேடம், கலையரசி மேடம் ஆகியோரை அருணாச்சலம் சார் அறிமுகப்படுத்திவைத்தார்.

விருது அறிவித்ததில் இருந்து, கார்த்திகேயன் தொடர்பில் இருந்தபடியே இருந்தார். குடும்பத்தோடு வருகிறேன் என்றதும், பயண ஏற்பாடு, தங்கும் வசதி போன்றவற்றை கூடுதல் அக்கறையோடு கவனித்துக்கொண்டார். விழாவுக்குச் சென்றதும் அவரையும், அருணையும் பார்த்ததும் சரியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.

பி.கு.விடம் நீங்கள் மாரி செல்வம் தானே என்று கேட்டு பல்பு வாங்கியபின், மாரி செல்வம் தானாகவே வந்து அறிமுகம் செய்துகொண்டார். சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் சு.வெங்கடேசனிடமும், எழுத்தாளர் எஸ்.பாலபாரதியிடமும் அறிமுகம் செய்துகொண்டு இரண்டு வார்த்தைகள் பேசினேன்.

விக்னேஷ்வரன், விருதுக்குத் தேர்வான எனது “கடவுளின் பறவைகள்” புத்தகத்தை முழுமையாக வாசித்திருந்தார். கணவனையும், மகனையும் கொன்றவனை சட்டத்திற்குமுன் நிறுத்தும் பெண்ணின் போராட்டம் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது, பிசிறில்லாத மொழிபெயர்ப்பு (’காட்டுமிராண்டிகள்’ சிறுகதை) என்று வாழ்த்தினார். மகிழ்வாக இருந்தது.

கார்த்திகைப்பாண்டியனின் ஃபிரண்ட் என்று ஓர் இளம்பெண் (செல்வராணியா, யோகநந்தினியா? ) அறிமுகம் செய்துகொண்டு பேசினார். நானும் அவர் ஃபிரண்ட்தாங்க! என்று பதில் அறிமுகம் செய்துகொண்டேன்.

ஃபெட்ரிக்கும், பிரவீண் குமாரும் சிரமம் பார்க்காமல், நாங்கள் தங்கியிருந்த அறைக்கே வந்து, வசதிகள் குறித்து சரிபார்த்துவிட்டுச் சென்றனர்.

திருமணத்திற்குப் பந்தல்கால் நட்டதுமுதல், விருந்தினர் உபசரிப்பு, மண்டப ஏற்பாடு, சமையல் மெணு, போக்குவரத்து, ஆடை ஆபரணங்கள் என்று ஒவ்வொன்றாய் பார்த்துப்பார்த்துத் திட்டமிட்டாலும், முகூர்த்ததின்போது தாலிசெயினை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடித்துலாவி, பின் சரி அதற்குபதில் சாமி கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை எடுத்துக்கட்டுங்கள் என்பது போன்ற சுவாரஸ்யமான குளறுபிடிகள் நடந்தன.

சிறப்புரை ஆற்றவந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பேசுவதற்குமுன் இடைவேளை அறிவித்து, பாயாசம் சாப்பிட அழைப்புவிடுத்தது, புத்தக வெளியீட்டின் போது, வேறு புத்தகம் உள்ள பார்சலை வைத்தது, புத்தகம் பெற்றுக்கொள்பவர் என்று பெயர் அறிவிக்கப்பட்டபின் அவரைத்தேடி வாசலுக்கு ஓடி, அவரை அங்கே காணாமல், அவருக்கு மாற்றாக அருகில் நின்றுகொண்டிருந்த வேறு ஒரு நண்பரை புத்தகம் பெற்றுக்கொள்ள வைத்தது என்று இந்த சுவாரஸ்ய தருணங்களில், ஒருங்கிணைப்பாளர்களுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை, எதிரில் இருந்து வேடிக்கை பார்க்கையில் நமக்கு ரசிக்கும்படி ஜாலியாக இருந்தது.

சிறப்புரையில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எந்தவிஷயம் செய்வதானாலும், அதற்குரிய முக்கியத்துவத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று வாழ்த்தினார்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த இளைஞர்கள், ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொள்வது, அவர்கள் நிகழ்வுக்கு அவர்களே மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பது என்பதுபோன்ற மேம்போக்கான விஷயங்கள் மட்டுமே தெரிந்தாலும், உண்மையில் இத்தகைய நிகழ்வுகளை நடத்துவதற்கு இவர்களிடம் இருக்கும் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகச்சிறப்பானவை. அதற்குண்டான நீண்டகால வெற்றி அவர்களுக்கு உரித்தாகட்டும்.

பொதுமக்களின் தளத்திற்கு இலக்கியம் சென்றடைய, நிச்சயம் பெண்களின் பங்கேற்பு இருந்தால் மட்டுமே முடியும். அவ்வகையில் வாசகசாலை பெண்களின் தொடர்பங்களிப்பு மிகவும் பாராட்டப்படவேண்டியது. முப்பெரும் விழா ஏற்பாட்டிலும், ஒருங்கிணைப்பிலும், விருதுக்குரிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதிலும், தொகுத்து வழங்கியதிலும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

அடுத்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முகத்தை மாற்றியமைப்பதில், வாசகசாலையின் பங்கு நிச்சயம் முக்கியமானதாக இருக்கும். வாழ்த்துகள் நண்பர்களே, தொடர்ந்து பயணிப்போம்.

#வாசகசாலை
#முப்பெரும்விழா2018
******

Friday, December 21, 2018

'கடவுளின் பறவைகள்’ - வாசகசாலை விருது 2018



வாசகசாலை - விருது குறிப்பு
-----------------------------------------------
#வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2018-ல் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பிற்கான விருது: "கடவுளின் பறவைகள்"
பெறுபவர்: பாலகுமார் விஜயராமன்
வெளியீடு: நூல் வனம்

வழக்கமான அன்றாடத்தின் அழுத்தங்களில் இருந்து விடுபடலுக்காக கைக்கொண்ட செல்லப் பறவைகள் வளர்ப்பு என்பதில் இருந்து துவங்குகிறது பாலகுமார் விஜயராமனின் இந்தத் தொகுப்பிற்கான ஆதிப்புள்ளி.

அங்கிருந்து துவங்கிய அவரின் ஆர்வமானது வளர்ப்புப் பறவைகள் மற்றும் விலங்குகள் சார்ந்த கதைகள் வாசிப்பு, சூழலியல் சார்ந்த உலகக் கதைகள் வாசிப்பு என கிளை பரப்பி வளர்ந்துள்ளது. அவ்வாறு வாசித்தவற்றில் பிடித்தவற்றை மொழியாக்கம் செய்வதில் துவங்கிய ஆர்வம், நல்லதொரு தொகுப்பாய் நம்முன் இன்று நிற்கிறது.

பாலகுமாரின் இந்தத் தொகுப்பை மேலும் சுவராசியமாக்குவது வெவ்வேறு நாடுகள் சார்ந்த அவரின் கதைகள் மற்றும் எழுத்தாளர்கள் தேர்வுதான். எழுத்தாளர்களில் அநேகம் பேர் உங்களுக்குப் புதியவர்கள் என்பதால் முன்முடிவுகள் ஏதுமின்றி ஆழ்ந்து வாசிக்கலாம்.

அதேபோல் இந்தப் பத்து கதைகளுமே கால, தேச வர்த்தமானம் தாண்டி, இந்தப் பூமிப் பந்தின் கோடுகளுக்குள் அடைக்கலமாகியுள்ள எளிய மனிதர்களை, அவர்களது இச்சைகளை, அவர்களது நிலம் மற்றும் வாழ்வியல் சார்ந்து இணைந்துள்ள விலங்குகளுடன் அவர்களுக்குள்ள உறவு மற்றும் பிரிவு, கோபம், சோகம் என பல்வேறு தருணங்களை அழகாக காட்சிப்படுத்துகிறது.

மிக முக்கியமாக இந்தத் தொகுப்பை நம் மனதுக்கு மேலும் நெருக்கமாக்குவது பாலகுமாரின் மொழியும், வார்த்தைகளின் பயன்பாடும்தான். படைப்பின் நிலம், சூழல் மற்றும் காலம் சிதையாமல், அதே நேரம் படிப்பவரையும் சலிப்புற வைக்காத, பிசிறு தட்டாத இலகுவானதொரு மொழி லாகவம் பாலகுமாருக்கு கைவசமாகி இருக்கிறது. அத்துடன் மறைந்த எழுத்தாளர் அர்ஷியாவின் எடிட்டிங்கில் இப்படைப்பு மேலும் மெருகேறியுள்ளது.

மொழிபெயர்ப்பை விரும்பி வாசிப்பவர்களுக்கு நல்லதொரு தேர்வாக அமையும் இந்த படைப்பிற்காக விருதுபெறும் எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் மற்றும் நூல்வனம் பதிப்பகத்திற்கு வாசகசாலை தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. #மகிழ்ச்சி.

******

Monday, January 25, 2016

விருதைத் துறந்த கலைஞன்

கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது. நாட்டின் உயரிய கௌரவங்களில் ஒன்றான “பத்மஸ்ரீ” விருதினை எழுத்தாளர் ஜெயமோகன் மறுத்திருப்பதாகத் தெரிகிறது. இதனை இணைய வழக்கப்படி ஒரு “மீம்” தயாரித்துப் போட்டு கலாய்த்துவிட்டு கடந்து செல்ல வேண்டுமா இல்லை அவரது ரசிகத் தொண்டர்கள் போல அவரது அருமை பெருமையை சில பல பத்திகள் எழுதி, அவர் இந்த விருதுக்கெல்லாம் மேலே என்பது போன்ற வரிகளை நடுநடுவே தூவி, இறுதியில் அவர் இதனைப் பெற்றுக்கொள்ளாததால் பச்சைத்தண்ணீர் பருகாமல் வாடிக்கொண்டிருக்கின்றேன் என்று இரண்டு சொட்டுக் கண்ணீரை காணிக்கையாக்கி முடிக்க வேண்டுமா தெரியவில்லை.
நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகிவருவதால் பலரும் தாம் வாங்கிய விருதுகளை திருப்பித்தருவதாக கூறிவரும் காலகட்டத்தில், தற்பொழுதைய மத்திய அரசின் சித்தாந்தங்களில் ஒத்துப் போகிற, இந்து ஞான மரபைப் போற்றுகின்ற ஜெயமோகன் அவர்கள் இந்த விருதை மறுத்திருப்பது வியப்பையே தருகிறது. தான் இந்த விருதைப் பெற்றுக்கொள்வது என்பது, தன் ஆகச்சிறந்த படைப்பான “வெண்முரசு” எழுதிவருவதும், தன்னுடைய தொடர்ந்த இலக்கிய செயல்பாடுகளும் இத்தைய விருதுகளுக்காகத் தாம் என்று தன்னைத் தூற்றுபவர்கள் பேச வழிவகை செய்துவிடும். அதனாலேயே இந்த விருதினை தான் மிகுந்த மன வருத்தத்தோடு மறுப்பதாக பதிவு செய்திருக்கிறார். இது மிக வலிமையற்ற வாதம் என்பது அவருக்கே கூட தெரிந்திருக்கக்கூடும்.
மத்திய அரசின் முன்னாள் ஊழியர் என்ற முறையில் நாட்டில் விருதுகளுக்கான தகுதியுரைகள் (citations) மற்றும் பரிந்துரைகள் (recommendations) எவ்வாறு தயார் செய்யப்படுகின்றன, கோப்புகளுக்கான தரவுகள் எவ்வாறு திரட்டபடுகின்றன, அதிலுள்ள காரியச்சிக்கல்கள், விடுபடல்கள், தொடர்முயற்சிகள் இவற்றையெல்லாம் அவர் நன்கு அறிந்திருப்பார் என்றே நம்புகிறேன். இருந்தும் கடைசி நேரத்தில் விருதினை அவர் மறுத்திருக்கிறார். தான் இதற்கெல்லாம் தகுதியுள்ளவன் தான் என்று நிரூபித்துப் பிறகு இது தன்னை எவ்விதத்திலும் சலனப்படுத்தவில்லை என்று நிறுவது ஒரு வகை ஹீரோயிஸம் அல்லது ஒரு வகை பற்றற்ற நிலை. இதில் எந்த எண்ணத்தில் அவர் விருதினை மறுத்தார் என்று தெரியவில்லை. அல்லது தனது தகுதிக்கு இந்த விருது ஏற்புடையதல்ல என்று அவர் எண்ணியிருந்தாலும், அடுத்து பிற்காலத்தில் இன்னும் பெரிய விருதுகளுக்கு இவர் பெயர் பரிந்துரை செய்யப்படும் பொழுது இச்சம்பவம் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படும் என்பதே உண்மை. இவர் உள்ளூர் சண்டை காரணமாக இதனை மறுத்தார் என்ற சம்பவம் எல்லாம் அரசாங்கத்தின் கோப்புகளில் பதிவாகப்போவதே இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, “வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும், அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது” என்று அவர் கூறியது சத்தியமென்றால், தன் வாழ்நாள் அனைத்தையும் தன் எழுத்துக்காக, தனக்குக் கிடைக்கின்ற தனிப்பட்ட புகழை ஒதுக்கிவிட்டு தன் படைப்பின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் இந்தக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். (ஆனாலும் கூட இவர் இவ்விருதினை மறுப்பதால் அது வெண்முரசிற்கு பெருமை சேர்க்கும் என்று கூறுவதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.)
மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதுப்பக்கங்களை மேய்ந்ததில் சில தகவல்கள் கிடைத்தன. நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”விற்கு மட்டும் பிரதமர் நேரடியாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யலாம் போல. மற்ற விருதுகளான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகியவற்றிற்கு மாநில அரசுகள், மத்திய அமைச்சகம், மத்திய அரசுத்துறை, ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் பரிந்துரை செய்யலாம். இவர்கள் தவிர சுயபரிந்துரைகளும் ஏற்கப்படும். பிரதமரை உள்ளடக்கிய குழு வந்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து தகுதியுள்ளோர்க்கு விருதுகளை வழக்க ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்கள், ஜனாதிபதியின் பார்வைக்குப் பிறகு அவர் விருதுகளை அறிவிப்பார் என்று அறிகிறேன். ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பரிந்துரைகள் பெறப்பட்டு அடுத்த ஆண்டு குடியரசு தினத்தின் போது விருதுகள் அறிவிக்கப்படும். ஆயிரக்கணக்கில் பரிந்துரைகள் பெறப்பட்டாலும், ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 120 பேர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சுவாரஸ்யமாக இன்னொரு தகவல், இந்த “பத்ம விருது” பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ இந்த விருதின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இந்த விருதுகளுக்கு பணப்பரிசு எதுவும் கிடையாது. அப்புறம் மிக முக்கியமான இன்னொன்று, விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை சில நாட்களுக்குப் பின் அரசின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் வெளியிடுகிறார்கள். உண்மையில் யார் யார் பெயர் பரிந்துரையில் இருந்தது என்ற தகவல் அதில் இருக்கும் :)

பத்ம விருதுகள் பெற்றிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள் !
தரவுகள்:
http://mha.nic.in/awards_medals
http://mha.nic.in/sites/upload_files/mha/files/Scheme-BR.pdf
http://timesofindia.indiatimes.com/india/Govt-invites-nominations-for-Padma-awards-2016/articleshow/48526263.cms
http://www.jeyamohan.in/83792#.VqY2Q5p97IU

******