Friday, December 21, 2018

'கடவுளின் பறவைகள்’ - வாசகசாலை விருது 2018



வாசகசாலை - விருது குறிப்பு
-----------------------------------------------
#வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2018-ல் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பிற்கான விருது: "கடவுளின் பறவைகள்"
பெறுபவர்: பாலகுமார் விஜயராமன்
வெளியீடு: நூல் வனம்

வழக்கமான அன்றாடத்தின் அழுத்தங்களில் இருந்து விடுபடலுக்காக கைக்கொண்ட செல்லப் பறவைகள் வளர்ப்பு என்பதில் இருந்து துவங்குகிறது பாலகுமார் விஜயராமனின் இந்தத் தொகுப்பிற்கான ஆதிப்புள்ளி.

அங்கிருந்து துவங்கிய அவரின் ஆர்வமானது வளர்ப்புப் பறவைகள் மற்றும் விலங்குகள் சார்ந்த கதைகள் வாசிப்பு, சூழலியல் சார்ந்த உலகக் கதைகள் வாசிப்பு என கிளை பரப்பி வளர்ந்துள்ளது. அவ்வாறு வாசித்தவற்றில் பிடித்தவற்றை மொழியாக்கம் செய்வதில் துவங்கிய ஆர்வம், நல்லதொரு தொகுப்பாய் நம்முன் இன்று நிற்கிறது.

பாலகுமாரின் இந்தத் தொகுப்பை மேலும் சுவராசியமாக்குவது வெவ்வேறு நாடுகள் சார்ந்த அவரின் கதைகள் மற்றும் எழுத்தாளர்கள் தேர்வுதான். எழுத்தாளர்களில் அநேகம் பேர் உங்களுக்குப் புதியவர்கள் என்பதால் முன்முடிவுகள் ஏதுமின்றி ஆழ்ந்து வாசிக்கலாம்.

அதேபோல் இந்தப் பத்து கதைகளுமே கால, தேச வர்த்தமானம் தாண்டி, இந்தப் பூமிப் பந்தின் கோடுகளுக்குள் அடைக்கலமாகியுள்ள எளிய மனிதர்களை, அவர்களது இச்சைகளை, அவர்களது நிலம் மற்றும் வாழ்வியல் சார்ந்து இணைந்துள்ள விலங்குகளுடன் அவர்களுக்குள்ள உறவு மற்றும் பிரிவு, கோபம், சோகம் என பல்வேறு தருணங்களை அழகாக காட்சிப்படுத்துகிறது.

மிக முக்கியமாக இந்தத் தொகுப்பை நம் மனதுக்கு மேலும் நெருக்கமாக்குவது பாலகுமாரின் மொழியும், வார்த்தைகளின் பயன்பாடும்தான். படைப்பின் நிலம், சூழல் மற்றும் காலம் சிதையாமல், அதே நேரம் படிப்பவரையும் சலிப்புற வைக்காத, பிசிறு தட்டாத இலகுவானதொரு மொழி லாகவம் பாலகுமாருக்கு கைவசமாகி இருக்கிறது. அத்துடன் மறைந்த எழுத்தாளர் அர்ஷியாவின் எடிட்டிங்கில் இப்படைப்பு மேலும் மெருகேறியுள்ளது.

மொழிபெயர்ப்பை விரும்பி வாசிப்பவர்களுக்கு நல்லதொரு தேர்வாக அமையும் இந்த படைப்பிற்காக விருதுபெறும் எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் மற்றும் நூல்வனம் பதிப்பகத்திற்கு வாசகசாலை தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. #மகிழ்ச்சி.

******

No comments:

Post a Comment