Monday, July 8, 2013

புனைப்பெயர்

பன்னெடுங்காலமாக இலக்கியம சமைக்கும் பெருங்கூட்டத்தில் துவங்கி இன்று ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் வறுப்பவர்கள் வரை முக்காலே அரைக்கால் வீசம் பேர் புனைப்பெயரில் தான் எழுதுகிறார்கள். நாமும் சீத்தலை சாத்தனார், நரிவெருவூர்த்தலையார் என்று ஆரம்பித்து  டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி, பன்னிக்குட்டி ராமசாமி வரை பற்பல நாமகரணங்களையும் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். ஆனால் ஒருவர் தன் இயற்பெயரை விட்டு புனைப்பெயரில் எழுதுவதன் உளவியல் தான் என்ன? அதிலும் ஒரு ஆண் எழுத்தாளர் எதற்காக பெண் பெயரில் எழுத வேண்டும் என்ற சந்தேகமெல்லாம் நடிகை சுஜாதா வேறு, எழுத்தாளர் சுஜாதா வேறு என்று தெளிந்த காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதிலும் புனைப்பெயர்கள் போக சில பட்டப்பெயர்கள் வேறு.

இதில் என் நண்பன் ஒருவன் சொல்லும் லாஜிக் மிகவும் எளிமையானது. “உனக்கு மத்தவங்க வச்சா பட்டப்பெயர், உனக்கு நீயே வச்சுக்கிட்டா அது புனைப்பெயர். அவ்வளவு தான்”. அவ்வாறு தொடர்ந்த விவாதத்தில், தனக்கான பெயர் இன்னதென்று முடிவெடுக்கும் ஞானம் அடையுமுன்னே குழந்தைப்பருவத்திலேயே பெயர் சூட்டு விழா நடத்தி விடும் சமுதாயத்தில், பிற்காலத்தில் தனக்கான பெயரைத் தானே புனைந்து கொள்வதில் தவறனென்ன இருக்க முடியும் என்று முடிவுரை வாசித்தோம். புனைப்பெயர் வைத்துக் கொள்வதில் பலவகை. காரணப்பெயராக நினைத்து வைத்துக் கொள்வது ஒரு புறமென்றால் அழகுணர்ச்சிக்காகவும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் வைத்துக் கொள்ளும் பெயர்களும் இருக்கத்தான் இருக்கின்றன. 

ஆனால் புனைப்பெயராளர்களே! பெயர் வைத்துக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக ”ஆக்கங்கெட்ட கூகை”, "அகிலத்தால் நிராகரிக்கப்பட்ட அரைவேக்காட்டு ஆஃப்பாயில் வாயன்" என்பது போன்றெல்லாம் பெயர் வைத்தால் அழைப்பதற்கு சற்று சிரமமாய் இருக்கிறது என்று புரிந்து கொண்டு பெயர் வையுங்கள். உங்களுக்கு தன்னடக்கம் தலைவிரித்து தாண்டவமாடுகிறது என்றாலும் கூட அதைப் பெயரில் எல்லாம் வெளிக்காட்ட வேண்டும் என்பதில்லை. பெயர் என்பது நமக்கே நமக்கானது தான் என்றாலும் அதை பெரும்பான்மையான சமயங்களில் நம்மைத் தவிர பிறரும் பயன்படுத்தும் போது அவர்களை தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ள வேண்டாமே!. இவர்களாவது பரவாயில்லை, சிம்பதி சிகாமணிகள். ஏதோ போகட்டும் என்று விட்டுவிடலாம். சில தலைப்பிரட்டைகள் இருக்கின்றன, அவர்களின் புனைப்பெயரைக் கேட்டவுடனேயே “ஆளை விடுங்கடா சாமி” என்று நம்மைத் தெறித்து ஓட வைக்கும். இதற்கு இணையத்திலேயே நிறைய உதாரணங்கள் சொல்லலாம். யாரிடமும் சண்டை போட்டு பிரபலம் ஆகும் எண்னம் எதுவும் எனக்கில்லாததால் அத்தகைய பெயர்களை குறிப்பிட முடியவில்லை.

இணையம் பிரபலமாகிக் கொண்டிருந்த காலத்தில் “யாகூ சேட் ரூம்” என்று ஒரு சேவை இருந்தது. அங்கே காளையர்களும் கன்னியர்களும் வைத்துக் கொண்டிருந்த புனைப்பெயர்கள் எல்லாம் ரொம்ப ஓபன் ரகம். அதன் நீட்சி இன்று “ஃபேஸ்புக்” வரை தொடர்கிறது என்றாலும் ஃபேக் ஐடி பற்றிய அறிவு சார் சிந்தனைகள் இப்பொழுது போல அப்போது சரிவர புரிபடாத பருவமாதலால், சேட் ரூம் பெண் பெயர்களுக்குப் பின்னால் எல்லாம் பெண்கள் தான் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்ட காலம் எல்லாம் ஒன்று இருந்தது... ம்ம்ம் அது ஒரு காலம். இப்போதைய இணைய பிரபலங்கள் பலரும் யாகூ சேட் ரூமில தாங்கள் வைத்திருந்த பெண் ஐடி பிரஸ்தாபங்களை அளந்து விடும் போது, “இவன் தான் மாப்ள எங்கயோ செமத்தியா வாங்கியிருக்கான். இங்க வந்து வேற யாரோ மாதிரி கதை விடுறான்” என்பது தான் ஞாபகம் வருகிறது. முதலில் ஏமாறுவது, பிறகு போதுமான பல்புகள் பெற்று ஞானம் அடைந்தபின் அடுத்து வருபவர்களை ஏமாற்றுவது. இது தானே பாஸ் காலங்காலமாய் தொடரும் வழக்கம். இன்று பத்துப்பதினைந்து ஃபேக் ஐடி வைத்து சுத்திக்கொண்டிருக்கும் எந்தப் பிரபலமும் ஒரு காலத்தில் “ஏ.எஸ்.எல் ப்ளீஸ்” கேட்டுத் தான் இணைய வாழ்வை துவக்கியிருப்பார் என்பதை மறந்து விடக்கூடாது.

சரி, உண்மையில் புனைப்பெயர் என்பது நிஜ வாழ்க்கையின் சுவடுகளின்றி முற்றிலும் ஒரு புதிய ஆளுமையாய் வெளிப்படுவதற்கான வாய்ப்பு என்பதற்காகவே பலர் புதிய பெயர் வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. அதுவும் அரசு அலுவலகங்கள், ஐ.டி கம்பெனிகள் போன்று கட்டுப்பெட்டியான இடத்தில் வேலை செய்து கொண்டு அதே பெயரில் புரட்சிப் போராட்டம் நடத்துவது என்பதெல்லாம் சட்டச்சிக்கலை உண்டாக்குற காரியம் தானே. எனவே, தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவற்காக தன் சுயத்தை மறைத்துக் கொண்டு புனைப்பெயரில் எழுதுபவர்களும் உண்டு. அப்படி எழுதும் போது, கவன ஈர்ப்புக்காகவோ அல்லது தங்கள் கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாகவோ அல்லது சொல்ல வந்த கருத்துக்கு ஏற்ற மாதிரியோ பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள் போலும். முதலில் நிஜப்பெயர் வாழ்க்கைக்கும், புனைப்பெயர் வாழ்க்கைக்கும் நடுவில் கோடு கிழித்துக் கொண்டு டபுள் கேம் ஆடத்துவங்குபவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் பிரபல லெவல் மேலேறும் போது இயற்பெயர் அமிழ்ந்து போய் புனைப்பெயரே சாஸ்தவமாகி அதன் மூலமாகவே அவர்கள் முகமும் வெளி உலகின் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. தெரிந்தவர்களிடம் இருந்து தனது இருப்பை மறைப்பதற்காக புனைந்த கொண்ட பெயர் மூலமாகவே இன்னும் பெரிய வட்டத்திற்கு அடையாளம் காட்டப்பட்ட பலர் இருக்கிறார்கள். எது எப்படியோ பத்தோடு பதினொன்றாக செல்லும் ரமேஷ், சுரேஷ், ராமசாமி, குப்புசாமி வகையறாவிற்கு பதிலாக புதுமையான புனைப்பெயர்கள் வைத்திருப்பவர்கள் முதல் பார்வையில் கவனம் ஈர்க்கவே செய்கிறார்கள். ஆனால் நிலைத்து நிற்க.... என்றென்றைக்கும் உள்ளது போல எழுதும் விஷயம் தான்.

-வி.பாலகுமார்.
******
நன்றி: மலைகள் இணைய இதழ் http://malaigal.com/?p=2416

Friday, July 5, 2013

வாதனை



தாழிமரங்களை வனையோட்டுத் தொட்டிகளில்
வளர்க்கும் அடுக்ககங்களின்
குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்ட
குறுங்கணினிகள் தேவையாய் இருக்கின்றன.

மிளகாய்ச்செடிக்கு 
அடிக்க வைத்திருந்த ரோக்கருக்கும் 
எறும்புப்பொடியின் சுவைதான் இருக்குமென 
எண்ணியவளின் விளையாட்டு
எப்படி முடிந்ததென சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

கனரக வாகனத்தில அடிபட்டு 
குடல்சரிந்து கிடக்கும் குரங்குக்குட்டியை 
செவ்வரளிப்பூ கொண்டு உரசிச்செல்கிறது
மலையை வகுந்து போடப்பட்ட
நெடுஞ்சாலையின் கோரக்காற்று.

ஸ்திரி பார்ட் போடுபவனின் கனவில்
விடாது இம்சிக்கும் கத்திச்சண்டை.

முடிவுறாமல் நீளுமொரு தற்கொலைக்குறிப்பில்
சுருக்கிட்டுக் கொள்ளும் செய்முறையை
விடாமல் அழித்து அழித்து
வரைவுத் திருத்தம் செய்யும்
மொழிபெயர்ப்புக்காரனின் வாதனை
புரிகிறதா உங்களுக்கு!


******
படம் உதவி: http://www.wallpaperswala.com/bonsai-tree/

Wednesday, July 3, 2013

வாட்டர் ரெசிஸ்டெண்ட் வடை

டீக்கடை உளுந்தவடையில் இப்பொழுதெல்லாம் ஏன் பச்சைமிளகாய் சேர்ப்பதில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்க முடியுமா?
#மத்தியானசிந்தனை

************************************************
புதுசா “வாட்டர் ரெசிஸ்டெண்ட் வடை”னு எதும் கண்டுபிடிச்சிருக்காங்களா என்ன? அரை மணி நேரமா ஊற வச்ச பிறகும் ஒரு சொட்டு சாம்பாரைக் கூட உள்ளே விடாமல் தம் கட்டி நிக்குது உளுந்தவடை.

************************************************
ரொம்ப வருசமா ஊத்தப்பத்தை தான் தோசைனு சொல்லி எங்கம்மா ஏமாத்தி இருக்காங்கன்னு ஹோட்டல்ல சாப்பிட ஆரம்பிச்ச பிறகு தான் தெரிஞ்சுது. 
#அது ஒரு காலம், உலகம் தெரிய ஆரம்பிச்ச காலம் !

************************************************
டிபன் பாக்ஸை திறந்தால் புளியோதரைக்கு வெண்டைக்காய் பொரியல்.... குட் காம்பினேசன்.
எப்படி இப்படியெல்லாம் என்று கேட்டால் வெரைட்டி ட்ரை பண்றேனு பதில் வரும், எதுக்கு வம்பு!
#சத்தம் போடாம சாப்பிடனும் குமாரு.

************************************************
"வடை போச்சே” என்று உணரும் தருணங்களில் எல்லாம் இழந்தது உளுந்தவடை தான் என நம்மை அறியாமலே மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறோம். இதைப் புரிந்து கொள்ளாதவரை இந்த இனத்திற்கு விடிவில்லை.
#statuslikeilakiyavaadhis

************************************************

Monday, July 1, 2013

ஃபேஸ்புக் கலவரம் - வெள்ளைக்கொடிக்கு வேலை

ஃபேஸ்புக்கை பற்றி அவ்வப்பொழுது ஃபேஸ்புக்கில் எழுதிய்வை. சேமிப்புக்காக இங்கேயும்.

**************************************
ஃபேஸ்புக்கில் சும்மா வேடிக்கை பார்ப்பதற்கும் கூகுள் ப்ளஸ்ஸில் சும்மா வேடிக்கை பார்ப்பதற்கும் இடையேயான உளவியல் வேறுபாடுகளை யோசித்துப் பார்க்கிறேன்.

**************************************
மேற்பார்வை பார்த்தபடி நெஞ்சு நிமுத்தி, மீசை முறுக்கி சுத்திட்டு இருக்க பெரியாம்பளைக எல்லாம்  கெத்தா மெயின் ரோட்டு வழியாவே போறது தான் நல்லது போல. சும்மா, சில்லுண்டிப் பயலுக ஏன் இப்படி சலம்புறாய்ங்கன்னு முட்டுச்சந்துக்கு வந்து எட்டிப் பார்த்தா... இப்ப பாருங்க மானாவாரியா  லந்தக் கொடுத்து வழிய மறிக்கிறாய்ங்க...

#பெரியமனுசனுக்கு மரியாதை கொடுங்கடான்னு சொன்னா, எங்கண்ணே கேக்குறாய்ங்க!!!
#ஃபேஸ்புக்கலாட்டா

**************************************
என்னை யாரும் “டேக்” பண்ணக்கூடாது.
என் டைம்லனில் எவனாவது கவிதை எழுதினீங்க, பிச்சுப்புடுவேன் பிச்சு.
எதையாவது திரும்பத் திரும்ப ஷேர் பண்ணீங்க, செம காண்டாகிடுவேன்.
வீடியோ லிங்க் அது இதுனு எதுனா போட்டீங்க, கொன்னேபுடுவேன்.
ஐயோ, ஏன் தான் தினமும் எனக்கு இத்தனை பேர் ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து உயிரை வாங்குறீங்களோ?
ரொம்ப சாதாரணமான ஒரு மொக்கை ஸ்டேடஸ். அதுக்குப் போய் நூத்தி சொச்சம் லைக். நீங்களெல்லாம் எப்ப திருந்தப்போறீங்க.

#இல்ல சார், இப்ப கொஞ்ச நாளா தான்... சீக்கிரம் சரியாயிடும்ல சார்?
#நானும் இப்படி எல்லாம் “பிகு” பண்ணலாம்னு தான் பார்க்குறேன், ஆனா ஒரு பயபுள்ள கூட நம்ம பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டுது!
#ஃபேஸ்புக்காமிடி
  
**************************************
ஃபேஸ்புக் பிரபலங்களுக்கு வர்ற கமெண்ட்டுகளைப் பார்த்தா, உண்மையிலேயே ரசிகக் கண்மணிகள் தான் அப்படி சிலாகிச்சுக்கிறாய்ங்களா இல்ல, இதுக்குனு சம்பளத்துக்கு ஆள் கீள் போட்டுருப்போய்ங்களோன்னு ஒரே டவுட்டு.

#ச்சீ.. பொறாமையெல்லாம் இல்ல பாஸ், நாம அதுக்கு சரிப்பட மாட்டோம் !

**************************************
வந்த நாலு லைக்ல மூனு ஃபேக் ஐடியா இருந்தாக்கூட மீதி ஒன்னு ஒரிஜனலாத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் நடமாடும், பெருமை பீத்தக்களையன்களால் நிறைந்திருக்கிறது ஃபேஸ்புக்

#ஃபேஸ்புக்கை ஃபுல் அன் ஃபுல் ஃபிகர் மடிக்கும் இடமென்னே நினைச்சுட்டானுக போல. :)

**************************************
எங்க பெரியாத்தா அப்பவே சொல்லுச்சு, “பெரியாம்பளய எப்பவும் மரியாதை குறைவா பேசாத கண்ணு... நாளப்பின்ன அவுக குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தரும் போது, உனக்கு நாக்கு ஊறும்.. வேண்டாம்னு வீராப்பா இருக்கவும் முடியாது, இப்படித்தா பெருசுனு உரிமையா பிடுங்கித் தின்னவும் கூசும்”னு...
நாந்தான் கேட்கல!

#சமகால “போயட்டு”கள்

**************************************
ஹாய் டெக்கீஸ், நாப்பது நாப்பத்தஞ்சுக்கு மேலுள்ள பெருசுங்க கேர்ள் ஃபிரண்டு புராணம் பாடும் ஸ்டேடஸ்களை மட்டும் தடை செய்யும் ஆப்ஸ் எதுவும் கண்டுபிடிக்க முடியுமா... அர்ஜண்ட் ப்ளீஸ்!

#முடீலிங்கசாமி
#ப்ளஸ் சொக்கத்தங்கம், நான் பேச்சுபுக்கை சொன்னேன் :)

**************************************
போர் மேகங்கள் சூழ்வதைப் பாத்தால், வேடிக்கை பார்ப்போர் சங்கம் சார்பாக அணிசேரா இயக்கம் ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

#வெள்ளைக்கொடிக்குவேலை
#பேச்சுபுக்கு கலவரம்

**************************************