Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, September 19, 2015

கனவுக்கதை – மொழிபெயர்ப்பு கவிதை

கனவுக்கதை - ரபியா அல் பாஸ்ரி
(தமிழில் பாலகுமார் விஜயராமன்)
-------------------------------------------------------------------
எனது நினைவுகளுக்கு அப்பாற்பட்ட அழகிய, பரந்த பசுமைத் தோட்டத்தில் நான் இருப்பதை உணர்ந்தேன். இத்தோட்டத்தில் ஒரு சிறுமி என்னுடன் இருந்தாள். அவள் என்னிடம் “இவ்விடம் எத்தனை அழகுடன் இருக்கிறது, பாருங்கள் !” என்று வியந்தாள்.

அவள், “நீங்கள் இதனைக்காட்டிலும் வியத்தகு அழகுடன் உள்ள மற்றோர் இடத்தைக் காண விரும்புகிறீர்களா ?” என்றாள்

நான் “ஆம்” என்றதும், என் கரம் பற்றி அழைத்துச் சென்றாள். அவ்விடம் இதுவரை மனிதக் கண்கள் கண்ணுற்றிராத மேன்மை பொருந்திய அழகுடன் திகழ்ந்தது. அச்சிறுமி ஒரு கதவைத் தட்டியதும், யாரோவொருவர் வந்து திறந்தார். உடனே நாங்கள் இருவரும் பெருவொளிப் பிரவாகத்தில் நனைந்தோம்

நாங்கள் அங்கே கண்ணுற்ற கன்னிப்பெண்களின் செயல்களின் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவாரென உணர்ந்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் ஒளி நிரம்பிய பரிமாறும் தட்டை ஏந்தியவாறு சென்றனர். என்னுடன் வந்த சிறுமி அவர்கள் என்ன செய்கின்றனர் என்று கேட்டதும், “கடலில் மூழ்கி உயிர்த்தியாகம் செய்த ஒருத்தியை நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம். அவள் இரவில் ஒருபொழுதும், ஓர் இமைப்பொழுதும் உறங்காதவளாக இருந்தாள். நாங்கள் அவளது உடலில் ஈமக்கடனின் வாசனைத் திரவியத்தை பூசப்போகிறோம்.

“அவ்வாறென்றால், சிறிது திரவியத்தை இங்கிருக்கும் என் தோழியின் மீதும் பூசவும்” சிறுமி என்னைச் சுட்டிக்காட்டி கூறினாள்.

“ஒரு காலத்தில், இந்த வாசனைத் திரவியத்தின் நறுமணம் இவள் உடலெங்கும் பரவியிருந்தது, ஆனால் இவள் பயங்கொண்டு அதனை துறந்து விட்டாள்”

உடனே அந்த சிறுமி என் கையை விடுத்து விலகிச் சென்று, திரும்பி என்னை நோக்கிக் கூறினாள்:

”உனது பிரார்த்தனையே உனது ஒளி;
உனது பக்தியே உனது பலம்;
உறக்கம் இவை இரண்டுக்குமான எதிரி.
உனது ஜீவனே வாழ்க்கை உனக்குக்கொடுக்கும் ஒரே வாய்ப்பு.
அதை நீ உதாசீனம் செய்தால், அதை நீ வீணாக்கினால்,
உன் நிலையிலிருந்து நீயே தாழ்ந்து போவாய் !”

பிறகு அச்சிறுமி என் பார்வையிலிருந்து மறைந்து போனாள்

****** 
மூலம்: http://hellopoetry.com/poem/73235/dream-fable/
நன்றி: http://malaigal.com/?p=7177

Friday, July 24, 2015

உங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் !


உங்கள் கல்விச்சாலைகளின் பெருங்கருணை
எங்களை மழைக்கு ஒதுங்க அனுமதி வழங்கியிருக்கின்றன

உங்கள் தொழுகைக்கூடங்களின் உள்ளேயமர்ந்து
நாங்கள் யாசிக்க நன்னயத்தோடு இடம் தந்திருக்கிறீர்கள்

உங்கள் கேளிக்கை விடுதி வளாகங்களின் பின்புறச்சுவர்கள்
பெருந்தன்மையோடு எங்கள் ஒட்டுக்கூடாரங்களை
தாங்கிப் பிடிக்க சம்மதித்துள்ளன

மேன்மை பொருந்திய உங்கள் திருக்கரங்கள்
எங்களை ஆசீர்வதிக்கக் காத்திருக்கையில்
நாங்கள் எப்போதும் போலவே
உங்களை உதாசீனப்படுத்திவிட்டு
எங்கள் வயிற்றுப்பாட்டிற்கான பாவங்களை செய்து கொண்டிருக்கின்றோம்
உங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் !

*******

Saturday, October 18, 2014

முப்பத்தைந்து வயது


இந்த முப்பத்தைந்து வயது...
விலக்கிவைக்க முடியாத பொறுப்புணர்வை
உங்கள் மீது வலுக்கட்டாயமாக சுமத்துகிறது
முதலீடுகளில், ஜாமின் கையெழுத்துகளில்,
வரவு செலவு கணக்குகளின் இடைவெளிகளில்
தயவு தாட்சண்யமின்றி உங்களை பணயமாக வைக்கிறது
நீங்கள் விரும்பாத ஒழுங்கு முறைக்கு
உங்களை ஒப்புக் கொடுக்கிறது
ஓர் இரவு வெளியே தங்க வேண்டுமென்றாலும்
மறுநாளுக்கான அடுக்கி வைக்கப்பட்ட
நேர அட்டவணையை குலைத்துப் போடுகிறது
எவ்வளவு நேரமானாலும் வீடு திரும்ப வேண்டுமென்ற
நிர்பந்தத்தை ஈவு இரக்கமின்றி திணித்து விடுகிறது
லேசான வாயுப்பிடிப்பு மாரடைப்புக்கான அறிகுறியோ
என்ற பதட்டம் கொள்ளச்செய்கிறது
இந்த ஆண்டுக்கான போனஸில் கண்டிப்பாக
மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்ளவேண்டுமென்று
நினைக்கச் செய்கிறது, கையில் பணம் வந்ததும்
அதை அடுத்த வருடத்திற்கு ஒத்திப் போட வைக்கிறது
தினம் காலை சோற்றுப்பொட்டலத்தை சுமந்து கொண்டு
அலுவலகம் செல்ல வைக்கிறது
அரை நாள் மதிய தூக்கத்திற்காக
ஆறு நாட்கள் விரட்டி விரட்டி ஓட வைக்கிறது
ஒரு வாளித் தண்ணீருக்கு
இரண்டு கை ஏரியல் பவுடர் என்று பாடம் புகட்டுகிறது
உள்ளாடைகளை கொல்லைப்புறத்து கொடியில்
மறைவாய் காயப் போடும்
சூட்சமத்தை சொல்லிக் கொடுக்கிறது
இந்த முப்பத்தைந்து வயது...
யுவதிகளை சிறுமிகளாக பார்க்க வைக்கிறது
ஒன்றாம் தேதியை எதிர்பார்த்து காக்க வைக்கிறது
காப்பீட்டு ஒப்பந்தங்களை வரிவிடாமல் படிக்க வைக்கிறது
இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டுப்பெட்டி மாட்ட வைக்கிறது
இன்னும்...
உங்களின் எந்தவொரு செயலுக்கும்
குழந்தைகள் பார்க்கிறார்கள் என்ற எதிர்வினையை
சதா நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

********
நன்றி மலைகள்: http://malaigal.com/?p=5666

Thursday, August 21, 2014

சமாதானம்

ஏழெட்டு தவணை தவறிப் போனதற்காக
வீட்டுப் பெண்ணை கூப்பிட்ட
தண்டல்காரன் முன்
தலைகவிழ்ந்து நின்று விட்டு
அவன் போன பின்பு
“கண்டார*** மக உன்னால தான்டி எல்லாம்...
மினுக்கிட்டு முன்னால வந்து நிக்குறா!”
என்று மனைவியை அறைகிறான் சம்சாரி

”இந்த பொழப்புக்கு நாண்டுகிட்டு தொங்கலாம்”
என்ற வார்த்தைகளை கடந்து செல்ல
ஏதாவதொரு சமாதானம்
தேவையாய் இருக்கிறது அல்லது
போதுமானதாய் இருக்கிறது

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5419
******

Wednesday, August 20, 2014

கனிந்ததொரு பார்வை

அவநம்பிக்கையின் நிழல்
படரத் துவங்கும் தருணத்தில்
எப்படியோ ஒரு பெருமழை
பொழிந்து விட்டுச் செல்கிறது

பருவம் பொய்த்து
வாய்பிளந்து கிடக்கும் நிலங்களைப்
பார்க்கும் போதெல்லாம்
அனிச்சையாய் ஒரு நேர்த்திக்கடன்
மனதிற்குள் வேண்டப்படுகிறது

இத்தோடு விலகிக் கொள்ளுங்கள்
என்ற அறிவிப்பை
எந்தக்கூட்டுப்பிரார்த்தனையும்
சொல்லிக் கொடுப்பதே இல்லை

யாரோ போகிற போக்கில்
பார்த்துவிட்டுச் சென்ற
ஒரு கருணைப்பார்வையில்
பட்ட மரங்கள் துளிர்விட்ட
கதைகள் நமக்குத் தெரியும் தானே !

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5419
******

Tuesday, August 19, 2014

வாதையின் இசை

சருகுகள் பூத்துக் கிடக்கும்,
மதிகெட்டான் சோலையில்
ஊர்ந்து ஊர்ந்து
தடம் தேடிச்செல்கிறது திசைமாணி

காலங்களின் ஈரம்
அடர்த்தியாய் இறங்கியிருக்கும்
விருட்சத்தின் பெருங்கிளைகள்
தோலுரித்துக் கொள்கின்றன

பொருள் விளங்கவியலா
ஆதிக்குடியின் பாடலாய் ஒலிக்கிறது,
தன் இணையை
துப்பாக்கிக் குண்டுக்குப் பறிகொடுத்த
பெயர் தெரியாத பறவையின் கேவலோசை

காலம், மொழி, பெயர் மறந்து
வாதையின் இசையை நுகர்ந்தபடி
திட்டுத் திட்டாய் உதிரப்போக்கை
முதன்முறையாக உணர்கின்றாள்
மலையக கிராமத்து சிறுமியொருத்தி

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5419
******

Tuesday, August 12, 2014

அந்தரங்க அடையாளம்


கடவுச்சொல்லை களவாட நடக்கும் 
முயற்சியின் எச்சரிக்கை சமிக்ஞை 
ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது

இவ்வளவு பதற்றத்துடன்
இத்தனை வரிசைவகுதி சேர்மானங்களில்
என் கதவுக்கு கள்ளச்சாவி முயற்சிக்கும்
பெயரிலியின் முகம் காண ஆசை

ப்ராக்ஸிகளின் தோலுறித்துக் காட்டும் 
தளங்களுக்கான பயனர் கணக்கு
என்னிடம் ஏற்கனவே இருக்கிறது

அடுத்தவர் அந்தரங்கத்தை 
எட்டிப்பார்க்கும் கிளர்ச்சியும்
பெயரிலியின் முகமூடியை 
உருவிப்பார்க்கும் கிளர்ச்சியும் 
இணை மாற்றாகுமா தெரியவில்லை

******

Wednesday, May 7, 2014

நினைவு


கண்ணாடி சட்டத்துக்குள்
சாஸ்தவமாயிருக்கும்
செம்பருத்தியின் புன்னகையை
ஏக்கத்துடன் பார்க்கிறது
ஊர்ந்து செல்லும் எறும்புச் சாரை.

குளிரூட்டப்பட்ட அரங்கிற்கு
வெளியிலிருந்து எட்டிப்பார்க்கும்
பட்டாம்பூச்சியை நினைத்து
விசனம் கொள்கிறது
உறைந்திருக்கும் பூவின் ஆன்மா.

*****

Wednesday, January 22, 2014

நோய்மை



தலைச்சன் பிள்ளையை
கொள்ளை நோய்க்குப் பறிகொடுத்த
நிறைசூலியைத் தேடும் துர்சொப்பனங்கள்
அவள் கால்மாட்டில் கிடக்கும்
விளக்குமாறோடு மல்லுக்கு நிற்கின்றன

திண்ணையில் புரண்டு படுக்கும்
பிறழ்மன பதின்ம வயதினன்
இருளைக் கக்க வரும் வலுசர்ப்பங்களை
காலைப் பிணைத்திருக்கும் சங்கிலியால்
விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றான்

செக்கு மாட்டுக் குளம்பில் பந்தமேற்றி
மொச்சைப் பயிரை அவித்து வைத்து 
ஒப்பாரி பாடிக் கொண்டிருக்கையில்
முந்தாநாள் இறந்த மூப்பன்
முச்சந்தி இருட்டில்
கொட்டாங்குச்சி நீரை
வெறித்துப் பார்க்கின்றான்

நேர்ச்சைக்காக ஏங்கிக்கிடக்கும்
கருப்பசாமியின் புரவி வாகனம்
கல்லடிபட்ட நாய்களை காவலுக்கு அனுப்பி விட்டு
நின்றவாக்கில் தூங்கிக் கொண்டிருக்கிறது

******

Wednesday, October 30, 2013

விடுதலை

சோதனைக்குழாய் சரிந்து
மேஜை நடுவில் 
சமுத்திரமாய் விரிகிறது
ஒற்றை பாதரசம்

அள்ளியெடுக்கும்
வடிகுழலுக்கு அடங்காமல்
உடைகிறது சமுத்திரம்

ஒவ்வொரு துளியும்
தனித்தனி வாழ்க்கை...
தனித்தனி உலகம்...
தனித்தனி சமுத்திரம்...


Tuesday, September 10, 2013

பாழி நோக்கிய பயணம்

வாவலின் அதிர்வொலிப்பெருக்கம்
திணைப்பெயர்வுக்கான பேரூழி
வன்மம் செய்பொருளாகிய வதனத்தில்
கவணம் போர்த்திய மறைவெறியீடு

ஓர் ஓலச்சத்த தூரத்திலிருக்கும்
விடுபடலுக்கஞ்சி
தொங்கிதழின் கீழ் குரல்வளையில் 
பாரமாய் தொக்கி நிற்கும் மொழி

புலரியின் உரித்தீட்டை மறுதலித்து
அசுரசந்தியொளியில் இறக்கை விரித்து 
காத்திருக்கையில் இறுதி எரிமீன் வீழ்ச்சி

சோடு பிரிந்த இணைபட்சியின்
கேவல் பொதிந்த இசைச்சுரம்
நெடுவழிப்பயணத்தின் சமிக்ஞை

துர்க்கந்தம் வீசும் பாழ்நத்தத்தின்
எஞ்சிய ஆன்மா புதைமணலில் அமிழும்
உடற் பாய்மத்தில் மிதக்கும் நோய்க்குறியோ
நாவாய் திசையின் முற்றொருமையாகும்

குகியம் நிறைந்த பாதைவழி
பற்றெல்லையை காணாக்கிரகணமாக்கி
பாழி நோக்கிய பயணம் நெடுகப்பிடிக்கிறது...

செல்வோம்!


Saturday, September 7, 2013

பெயரற்றவன் கனவு

குழு நிழற்படங்களின் ஓரத்தில்
பாதியாய் தெரிபவன்

எதற்கான எதிர்வினையாயும்
தலைகவிழந்த ஒற்றை சிரிப்பை உதிர்ப்பவன்

நன்றியறிவித்தலில்
தன் பெயர் விடுபட்டதை
பொருட்டாக எண்ணாதவன்

கடைசிக்கு இரண்டு வரிசை முந்திய
இருக்கையை எப்போதும்
தேர்ந்து கொள்பவன்

மஞ்சள் முடிந்து 
பச்சை தெரியக் காத்து நிற்பவன்

அவனுக்குள்ளும் இருக்குமோ
ஆளம்புசேனை கொண்டு
பிரபஞ்சத்தைக் கட்டியாளும் பெருங்கனவு !


Monday, August 12, 2013

ஒரு போத்தல் மது


ஒரு போத்தல் மது...

கொஞ்சம் கிறக்கத்தை கொடுத்து,
குழறல் பேச்சில் சில தற்பெருமைகளை
வெளிக்கொணர்ந்திருக்கும்

மூளையை மழுங்கடித்து
ஏதேனுமொரு ஒழுக்கக்கோட்டின்
எல்லையை தொட வைத்திருக்கும்

அர்த்தமில்லாதவொரு கொண்டாட்டத்தில்
வெற்றுக்கூச்சலை கொட்டியிருக்கும்

மனதை சொஞ்சம் பூஞ்சையாக்கி,
வாய்விட்டு அழ வைத்திருக்கும்

வாழ்நாளின் சில மணித்துளிகளை
குறைத்திருக்கும்.

இல்லையென்றால்....

சொந்த ஊரிலிருந்து
முன்னூறு கிலோமீட்டர் தள்ளிப்போய்
கவனமாய் தகுந்த அடையாளங்களை
பதிந்து எடுத்த அறையினுள்,
மிரிண்டாவில் பொட்டாஷியம் சல்ஃபேட்
கலந்து குடித்து மரித்துக் கிடந்த ஒருவனின்
தற்கொலையைத் தவிர்த்திருக்கும்.

******

Friday, July 5, 2013

வாதனை



தாழிமரங்களை வனையோட்டுத் தொட்டிகளில்
வளர்க்கும் அடுக்ககங்களின்
குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்ட
குறுங்கணினிகள் தேவையாய் இருக்கின்றன.

மிளகாய்ச்செடிக்கு 
அடிக்க வைத்திருந்த ரோக்கருக்கும் 
எறும்புப்பொடியின் சுவைதான் இருக்குமென 
எண்ணியவளின் விளையாட்டு
எப்படி முடிந்ததென சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

கனரக வாகனத்தில அடிபட்டு 
குடல்சரிந்து கிடக்கும் குரங்குக்குட்டியை 
செவ்வரளிப்பூ கொண்டு உரசிச்செல்கிறது
மலையை வகுந்து போடப்பட்ட
நெடுஞ்சாலையின் கோரக்காற்று.

ஸ்திரி பார்ட் போடுபவனின் கனவில்
விடாது இம்சிக்கும் கத்திச்சண்டை.

முடிவுறாமல் நீளுமொரு தற்கொலைக்குறிப்பில்
சுருக்கிட்டுக் கொள்ளும் செய்முறையை
விடாமல் அழித்து அழித்து
வரைவுத் திருத்தம் செய்யும்
மொழிபெயர்ப்புக்காரனின் வாதனை
புரிகிறதா உங்களுக்கு!


******
படம் உதவி: http://www.wallpaperswala.com/bonsai-tree/

Tuesday, May 28, 2013

மழலை


யானை நடை போட்டு
டொண்டாய்ங் ஆடுகிறோம்
கன்னத்தை பொப் செய்து
பலூன் மூட்டை உடைக்கிறோம்
காக்கா நரிக்கதைக்கு
கைகால் முளைக்கவிட்டு
தூரப் பயணம் போகின்றோம்

மறந்து போன பால்யம் எல்லாம்
சட்சட்டென துளிர்விட்டு
துள்ளல் நடை போடுமிந்த
வரம் தந்து சிரிக்கின்றாள்
மகளென்னும் தேவதை.


****
படம் உதவி: http://www.priestsforlife.org/blog/index.php/todays-pro-life-reflection-176/father-watching-his-infant-sleep


Wednesday, May 1, 2013

மொழிபெயர்ப்புக் கவிதைகள்


சினுவா ஆச்சிபி கவிதைகள் (தமிழில் வி.பாலகுமார்)



அகதிகள் முகாமில் ஒரு தாய்
------------------------------------------------
 எந்த மாதரசியும் பச்சிளம் குழந்தையும் கூட

தனது மகனின் இனமென்மைக்கு அருகிலும் வர முடியாது.

என்ற நினைவை அவள் விரைவில் மறக்கத்தான் வேண்டும்…


துருத்தும் விலாவெலும்புகளையும்

வற்றிய வயிறையுமுடைய குழந்தைகள்

வலியால் முனகிய படி குதித்தோடுகின்றன

குளிப்பாட்டப்படாத அவர்களின் மேனியிலிருந்து வீசும்

வயிற்றுப்போக்கின் துர்நாற்றம்

காற்றெங்கும் அடர்ந்திருந்தது


மற்ற தாய்மாரெல்லாம்

எப்பொழுதோ குழந்தைகளுக்கான

பிரத்யேக கவனிப்பை நிறுத்தியிருந்தனர்

ஆனால் அவளால் அவ்வாறு

இருக்க முடியவில்லை.

அவள் இதழோரம் வறட்டுப் புன்னகையும்

கண்களில் தாய் என்ற பெருமையையும்

இப்போதும் ஏந்தியபடியிருந்தாள்.


அவள் தனது வெற்று உள்ளங்கைகளினால்

மகனைத் தேய்த்துக் குளிப்பாட்டினாள்,

தான் வைத்திருந்த உடைமைகளின்

பொதி மூட்டையிலிருந்து

ஓர் உடைந்த சீப்பை எடுத்து

செம்பட்டை படிந்த அவனது முடியினை

நிதானமாக சிக்கெடுத்து தலை வாரினாள்.


இது அவர்களது முந்தைய வாழ்க்கையில்

அவன் பள்ளிக்குச் செல்லும் போது

காலை உணவுக்குமுன் அன்றாடம் நிகழக்கூடிய

ஒரு சாதாரண நிகழ்வு

ஆனால் இப்பொழுது அவளது இந்த செய்கை…

ஒரு சிறிய கல்லறையில்

மலர்களை வைத்து

அஞ்சலி செலுத்துவது போல இருந்தது.

***********

வண்ணத்துப்பூச்சி
---------------------------
 வேகம் எனபது வன்முறை

திறன் என்பது வன்முறை

நிறை என்பது வன்முறை


எடையற்று அலையூசலாடிப் பறக்கையில்

கனமின்மையில் பாதுகாப்பை நாடுகிறது

வண்ணத்துப்பூச்சி


ஆனால், பல்வண்ண படரொளி விழும்

சரளைக் கற்கள் பரவிக்கிடக்கும்

நெடுஞ்சாலையின் சந்திப்புகளில்

நமது ஒருங்கூடும் பிரதேசங்கள் இணைகையில்…


நான் திறம்பெருக்கி இறுமாப்புடன்

மோதலுக்குத் தயாராகத்தான் வந்தேன்

எனினும்

மென்மையானதொரு வண்ணத்துப்பூச்சி

ஒளிரும் மஞ்சள் நிவேதனத்தால்

எனது கடின மண்ணியக்கவசத்தின் மீது

தன்னையே முழுதாய் சமர்ப்பிக்கிறது

 *********************

வசந்தகாலபைன்மரம்
-------------------------------------------------

 தனித்திருக்கும் நேரங்களின் மீறலினூடே

பசுமை நினைவுகளை

தாங்கி நிற்கும் முன்னோடி இந்த பைன் மரம்


இயற்கையின் கிடைநிலை படிமத்தின்

கொடும் மரகதத்தீவிலும்

தனித்துக் காவல் நிற்கும் விசுவாசி இந்த மரம்


வெட்கங்கெட்டு பகட்டாக,

வஞ்சனைகளுடன் பவனி வரும்

துரோகத்தின் நிழலில்

தற்பொழுது

தொலைந்து நிற்கிறது இந்த மரம்


நேர்த்தியுடன் நிமிர்ந்து நிற்கும் உன்னத மரமே,

எந்தப்பள்ளி எனக்கு கற்றுக் கொடுக்கப்போகிறதோ,

உனது அமைதியான உறுதியான நாணயத்தை?

***********************
நன்றி: மலைகள் இணைய இதழ்

Wednesday, March 27, 2013

நதியின் பெயர் கொண்டோடும் ரயில்

மேனியிலிடும் சித்திரவித்தையின்
துகிலிகை ஓட்டத்திற்கு
தன் கூச்சத்தைப் பழகக் கொடுத்த
முதல் நாளை நினைத்துப் பார்க்கிறாள்
அயல்தேசத்து நடனக்காரி

தூரதேசப் பிரயாணம் போகிறவர்களின்
வீடுகளில் நாய்க்குத் துணையாக 
வயோதிகர்கள்
காவல் இருக்கிறார்கள்.

அடுக்ககங்களின்
கழிவுநீரை மறுசுழற்சி செய்து
தோட்டம் வளர்க்கும் திட்டத்திற்கு
எதிர்ப்பு வாக்குகள் முதலில் பதிவாகின்றன

எந்நேரமும் கஞ்சா புகை மிதக்கும்
கருவேலம்புதரை இன்னும் 
நந்தவனம் என்று தான் அழைக்கிறார்கள்

முன்பு பசியாற்றிக் கொண்டிருந்த
விளைநிலத்தில் மலம் கக்கிச் செல்லும்
அதிவேக ரயிலுக்கு 
நதியின் பெயரைச் சூட்டி
வேடிக்கை பார்க்கிறது காலம் !

******

Tuesday, November 6, 2012

துறவுரை



துறவுரை
-----------------------

காற்றிலிட்ட கற்பூரம் போல
மெல்லமாய், மௌனமாய்
கரைந்து காணாமல் போகவே விரும்புவேன்,
என் தலைப்பாடுகளின் கடவுச்சொல்லை
மூடி வைத்திருக்கும் பெட்டகம்
முளைவிடுமா, முடநாற்றம் வீசுமா
என்ற அச்சம் மட்டும் இல்லாதிருந்தால்

துறவுரை எழுதிச் செல்லும்
நாட்குறிப்பின் கடைசிப் பக்கத்தில்
கைவிரல் ரேகை பதிக்கும் போது,
புத்தர் இறந்தார்,
சித்தார்த்தன் சிரித்து விட்டு வீடு திரும்பினான்.


- வி.பாலகுமார்

( 05/11/2012 தேதியிட்ட “உயிரோசை” இணைய இதழில் வெளிவந்துள்ள எனது கவிதை.
நன்றி : http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6062 )

Tuesday, July 17, 2012

அன்பென்னும் சித்திரவதை!



என் பரிகாசம், துரோகம்
அலட்சியம், மறுதலிப்பு 
அனைத்தையும் புறந்தள்ளி
ஆத்மார்த்தமாய் ஏற்றுக் கொண்டாய் !

உன் கருணை மலர்கள் 
மொட்டவிழுக்கும் சிலிர்ப்புகள்
என்னைக் குற்றவாளியாக்கி
கூசச் செய்கின்றன.

எதிர்பார்ப்புகளற்ற உன் அரவணைப்பில்
புழுங்கித் தவிக்கிறேன்.
ஒரு சுடுசொல், சுளிப்பு, அழுகை, வெறுப்பு
ஏதேனும் செய்தாவது
என் ரணங்களைக் கீறி சுத்தப்படுத்து.
அறுவை சிகிச்சை தேவைப்படும்
புரையோடிப்போன புண்ணுக்கு
ஒத்தடங்கள் போதாது.

பொரித்து வெளிவருவேன் என்று
பொறுமையாய் அடைகாக்கிறாய்.
உள்ளே அழுகிப்போயிருக்கையில்,
நிபந்தனைகளற்ற உன் பேரன்பின் 
வெப்பம் தாளாமல்
வெடித்துச் சிதறிவிடுவேனோ என்ற
எனது பயம் உனக்குப் புரியவில்லையா? 

*************
படம்: இணையம்  http://www.mymodernmet.com/profiles/blogs/the-beauty-and-pain-of-love

Tuesday, July 10, 2012

செல்ல மகள் வருகை !


காய்க்கவில்லை என்று கல்லடி பட்டு
தூரதேசம் போனவர்கள் திரும்பி வந்தார்கள்
இளந்தளிரை சுமந்து கொண்டு.
பத்து மாத புதினத்தை
அத்தியாயங்களாக்கி அடுக்கினார்கள்
ஆசிரமம் ஆசிரமமாய் அலைந்த வலி மறைத்து.

குமட்டலை, தலைசுற்றலை
மேடிட்ட வயிற்றின் ஊரலை
சோகையில் வெளிறிய முகத்தை
நீர்வைத்து வீங்கிய காலை
இளக்கம் கொடுக்க இடுப்பில் ஊற்றிய சுடுநீரை
குடம் உடைந்து மருத்துவமனை விரைந்ததை
தலைதிருப்ப பட்ட பிரயத்தனத்தை
சுகப்பிரசவத்தில் பெண்மகவு பிறந்ததை என

கற்பனை செய்து வைத்த கதையனைத்தையும்
உண்மை போலவே கோர்த்துக் கோர்த்து 
புனைந்தார்கள் கணவனும் மனைவியும்.

சொன்ன பொய்களின் பாரம் தாங்காது
மூச்சழுத்த மார்பு விம்ம
மூர்ச்சையாகி கீழே சரிந்தாள் மனைவி.......

பாதுகாப்பின்மை உணர்ந்து
பரிதவிக்கிறது புதுவரவு.
மயங்கிய நிலையிலும்
குழந்தையின் அழுகைச்சத்தம்
கேட்கக் கேட்க புதிதாய்
பொங்கிக் கசிகிறது மார்பூறும் பால்.

காய்க்காமலே கனிந்து போகிறாள் தாயாக.

******