Tuesday, October 11, 2011

வாகை சூடவா - நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!



குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் பொருட்டு ஒரு குக்கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ஓர் இளைஞன். அந்த மக்களிடமும், சிறுவர்களிடமும் அவன் படும் அவஸ்தைகளையும், அவர்களுக்கு விழிப்புணர்வூட்ட அவன் மேற்கொள்ளும் முயற்சிகளையும் நகைச்சுவையாக பேசுகிறது “வாகை சூடவா”. ஒரு எளிய கதை, அதற்குத் தேவையான சின்னஞ்சிறிய கட்டமைப்பு இதில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வருவது போல கலகமும் இவ்வளவு சீக்கிரம் நடந்து, எளியவர்கள் தங்கள் உரிமைகளைக் கோரிப் பெறும் நிலையும், சர்க்கார் பெயரைச் சொல்லி ஒரு முறை மிரட்டுவதற்கே ஆண்டைகள் விலகி போவதுவும் நிஜத்திலும் நடந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் “இப்படி இருக்குமா”, “அப்படி இருக்குமா” என்ற யூகங்களை விட்டுவிட்டுப் பார்த்தால் இயக்குநர் தான் எடுத்துக் கொண்ட கருவிற்கு நேர்மையாக உழைத்திருக்கிறார். இரண்டு மணி நேரத்திற்குள்ளாக முடியும் சிறிய படம், தெள்ளிய நீரோடை போல மிதமாக செல்கிறது. தொய்வென்று சொல்லும் படியாகவெல்லாம் இல்லை. காட்சிகளை ஆற அமர ரசிக்கும் மனநிலையில் இருந்த எனக்குப் பிடித்தே இருந்தது. அதிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஆவணப்படுத்தப் பட வேண்டிய ஏதேனும் ஒரு விசயம் இருந்து கொண்டே இருக்கிறது. 

“போஸ்ட் வுமனை” அறிமுகப்படுத்தும் காட்சியில் “ஒரு கனவுப்பாட்டை புகுத்திடுவானுகளோ” என்ற சிறிய சஞ்சலம் தோன்றியது. நல்ல வேளையாக அப்படியேதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடவில்லை. காபிக் கொட்டை அரைக்கும் கருவி, ரேக்லா வண்டி, ஆண்டையின் பிரம்பு, சைக்கிள் முன்விளக்கு, பெரிய மூக்கு பஸ் என அறுபதுகளைக் கண்முன் கொண்டு நிறுத்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செதுக்கப் பட்டிருக்கின்றன. “சூதாடி சித்தன்” போன்ற தோற்றத்தில் ஒரு கிழவனைப் பார்த்ததும், “ஐயோ, இந்த கேரக்டர் ஹீரோவிற்கு அப்பபோ வந்து அறிவுரையா சொல்லுமே” என பயந்தேன். அது போல் தான் நடந்தது, ஆனாலும் ஓரிரு வார்த்தைகளிலேயே அந்த கிழவன் பேசுவது நன்றாகவே இருந்தது. அதுவும் காட்டை அழித்த தன் தவறுக்கு வருந்தி “குருவிச்சத்தம் கேக்குது” என புலம்புவதும் யதார்த்தம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு என்று எந்த நுன்னறிவும் புலப்படாத எனக்கே இந்த படத்தின் முழுமைக்கு இவையெல்லாம் கண்டிப்பாக உதவியிருக்கிறது என்று நிச்சயமாக சொல்ல முடிகிறது. இன்னொரு மிகப்பெரிய ஆச்சர்யம், நாயகியின் நடிப்பும் பின்னனிக் குரலும். அழகு! நாயகனும் எங்கும் வீராவேசம் காட்டாமல் இயற்கையாக இருக்கிறார். போக, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும், குறிப்பாக சிறுவர்கள் அனைவரும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு இனிய அனுபவத்தைத் தந்த மொத்த குழுவிற்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.

சரி, நம் கதைக்கு வருவோம். படத்தின் முடிவில் இன்னொரு கதை துவங்குகிறது. அதைப் பற்றி உரையாடுகையில் களம் இன்னும் விரியக்கூடும். செங்கல் சூளையில் இறக்கும் கற்களை விலைக்கு எடுக்கும் புதியவனும் ஒரு முதலாளி தானே. அவனையும் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வரும் போது வேலு அதை எப்படி எதிர்கொள்வான். தோற்றுப் போன ஆண்டை பழி தீர்க்க என்னென்ன செய்வான். இதையெல்லாம் விட முக்கியமாக இரண்டு காசு, மூன்று காசு என ரகம் வாரியாக ”டீ” விற்கும் மதி ஊர் மதிக்கும் வாத்தியாரின் மனைவியான பின்பு அவள் நடவடிக்கை எப்படி இருக்கும். 

”யதார்த்ததில் வேலுவின் அடுத்த தலைமுறை ஒரு பண்ணையார் குடும்பமாகவே திகழும் அல்லது அவ்வாறு ஊராரால் பார்க்கப்படும். பிறகு அக்குடும்பத்தின் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்க இன்னொருவன் வருவான். பிறகு அவனைத் தலைவனாக்கி அவன் பின்னும் செல்வார்கள். அவனுக்கும் ஒரு ஒளி வட்டத்தை ஏற்படுத்துவார்கள். இயக்குநர் இதனைத் தொடர்கதையாக்கி படங்கள் இயக்கலாம்” என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

அது இருக்கட்டும், ஒரு படத்தைப் படமாக பார்க்காமல் அகழ்வாராய்ச்சி செய்வதே என் பொதுப்புத்தியின் நோக்கமாய் போய்விட்டது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!

******