Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Saturday, December 15, 2018

செல்ஃபோன் கதிர்வீச்சு ஆபத்தானதா?

 
 
செல்ஃபோன் கதிர்வீச்சின் அபாயம் பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுவதால், அத்துறையில் இருப்பவன் என்ற முறையில் சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.

செல்ஃபோன் கம்பெனிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அலைக்கற்றையை (Frequency band / Spectrum) அதிகரிக்கமுடியாது. ஆனால் Radiating power ஐ அதிகரிக்க முடியும்.

ஒரு செல்ஃபோன் டவரில் (BTS) இருந்து வரும் Radiating power standard உலக அளவில் 12 வாட்ஸ். இந்திய அளவில் 15 முதல் 18 வாட்ஸ். இந்த அளவில் இருந்தால் பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

சில தனியார் நிறுவனங்கள் 60 வாட்ஸ் வரை வைத்திருப்பதாகக் கேள்வி. (TRAI விதிமுறைப்படி இதற்கு அனுமதியில்லை என்றாலும், நம் நாட்டில் விதிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிந்தது தான்)

இதனால் பறவைகளுக்கு மட்டுமல்ல, மனிதனின் காது, மூளை ஆகியவையும் பாதிப்படையும். இது நீண்ட கால அடிப்படையிலானது என்பதால் இன்னும் முழுதாக நிரூபிக்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல். நினைத்தாலும் இப்படி தனியார் போல வேண்டுமென்ற power radiationஐ அதிகப்படுத்திக்கொள்ள முடியாது. காரணம், தொழிலில் இலாபம் வரும் என்றாலும், ஓர் அரசு நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பான, மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களைச் செய்யமுடியாது, செய்யக்கூடாது.

அதனால் தான் தனியார் செல்ஃபோன் சிக்னல், கண்ணாடி அறை, அண்டர்கிரவுண்ட் குடோன் என்று நீக்கமற எங்கும் துல்லியமாகக் கிடைக்கிறது. ஆனால் பி.எஸ்.என்.எல். செல்லுக்கு அழைப்பு வந்தால் செல்லை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு ஓடவேண்டி இருக்கிறது.

இதைத் தான் இத்தனை நாள், xxxxxxx சிக்னல் கக்கூஸில் கூட கிளியரா கிடைக்கும், பி.எஸ்.என்.எல். வேஸ்ட் என்று நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

மற்ற நாடுகளில் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்றால், செல்ஃபோன் என்பது வெளியிடங்களில் பயன்படுத்துவதற்கு மட்டுமே. வீட்டுக்கு வந்துவிட்டால் லேண்ட்லைன் தான் என்ற புரிதல் அவர்களிடம் இருக்கிறது.

லேண்ட்லைனில், தரைவழி கம்பிகள் வழியாக இணைப்பு கொடுப்பதால், Radiation என்ற பேச்சே அதில் கிடையாது.

என் செல்ஃபோனுக்குத் தான் அழைப்பு வரும். ஒவ்வொருமுறையும் லேண்ட்லைனுக்கு மாற்றி அழைக்கச் சொல்லமுடியாது என்றால், நீங்கள் வீட்டில் இருக்கும் போது, உங்கள் செல்லுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைனிற்கு 'கால் டைவர்ட்' செய்துகொள்ளலாம்.

செல்ஃபோன் Radiationக்கு தீர்வு, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதல்ல. Radiation powerஐ, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் வைக்க வலியுறுத்துவதே. இதை பொதுமக்கள் நேரடியாகப் பார்த்து உணரமுடியாது என்பதால் கயவர்களுக்கு வசதியாகிவிடுகிறது.

தொலைத்தொடர்புத் துறையில் இருந்துகொண்டு, செல்ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள் என்று பயமுறுத்த மாட்டேன். ஆனால் உங்கள் தேர்வு எது என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

இன்னும் 2.0 பார்க்கவில்லை. அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாகத் தெரியவில்லை.

******

Saturday, January 28, 2017

உள்ளங்கை தொழில்நுட்பம்

உள்ளங்கை தொழில்நுட்பம்
-          ஷான் எழுதிய “ஆண்ட்ராய்டின் கதை” புத்தகம் குறித்த வாசிப்பனுபவம்
பாலகுமார் விஜயராமன்
----------------------------------------

“புதிய விஷயத்தை விளக்க, பழக்கமான சொற்களையே பயன்படுத்துங்கள்” என்பார்கள். எந்தவொரு சிக்கலான தொழில்நுட்பமும் அதனைப் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு எளிமையாக இருக்கும்பட்சத்திலேயே அது வெற்றியடையும். அதே போல ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிமுகமும் எளிய வார்த்தைகளால் சொல்லப்படும் பொழுது தான், அதன் மீதான ஆர்வமும், விருப்பமும் அதிகரிக்கும்.

கவிஞராக, ஓட்டப்பந்தய வீரராக, நீச்சல்க்காரராக, சைக்கிள் வீரராக, சமூக செயல்பாட்டாளராக இணையத்தில் அறியப்படும் ஷான் கருப்பசாமி என்கிற ஷான் அவர்களின் இன்னொரு அடையாளமான தொழில்நுட்பத் திறனை வெளிக்கொணர்ந்திருக்கும் புத்தகம் “ஆண்ட்ராய்டின் கதை”. ஆண்ட்ராய்டு பற்றிய எளிய அறிமுகக் கையேடாக, கைக்கு அடக்கமான சிறிய புத்தகமாக அழகாக வந்திருக்கிறது. மொத்தமே 10 அத்தியாயங்கள், எழுபதே பக்கங்களுக்குள்… யாரும் ஒரே அமர்வில் படித்துவிடக்கூடிய எளிய மொழியில்… இன்றைக்கு உலகளவில் பெருமளவில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பமான “ஆண்ட்ராய்டு” பற்றி சிறப்பானதொரு அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார் ஷான்.

தொழில்நுட்பம் சார்ந்த புத்தகம் என்றவுடன், வறட்சியான மொழியில் எக்கச்சக்க தரவுகள் கொண்ட, வல்லுநர்களுக்கான சமாச்சாரம் என்று மற்றவர்கள் ஒதுங்கி விடவேண்டாம். நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட் போன் தோன்றிய வரலாறையும், அதன் தொழில்நுட்பம் அடைந்த பரிணாம வளர்ச்சியையும் கதை போல விவரித்திருக்கிறார் ஷான். வரலாறு, பரிணாம்ம் என்ற காலகட்டம் எல்லாம் இன்றைய தொழில்நுட்ப அசுர வளர்ச்சியில் வெறும் பத்து ஆண்டுக்குள் நடந்த மாற்றங்கள் தான். நோக்கியா 1100 முதல் சியோமி வரையிலான பெரும்பயணத்தின் ஆதி முதல் இன்று வரையான எல்லாவற்றையும் நாம் பயனர்களாக அனுபவித்திருக்கிறோம். இப்புத்தகம் இவ்வளர்ச்சியின் பின்னாலான தொழில்நுட்பத்தையும், வர்த்தகத்தையும்  நமக்குப் புரியும் மொழியில் பேசுகிறது, அவ்வளவு தான்.

Howstuffworks மாதிரியான தளங்கள் பிரபலம். ஒரு தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கிறது என்று எளிய உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கும். இப்புத்தகமும் அத்தகையதொரு சிறந்த முயற்சி. ஷான் அவர்கள் தொடர்ச்சியாக இது போன்று தொழில்நுட்பங்களின் புத்தக வரிசையை மேற்கொள்ள வேண்டும்.

நாம் பார்க்கும் பணி சார்ந்த விஷயங்களையே அலுவலகம் தாண்டி, பொது மக்களுக்கான படைப்பாக வெளியிடக்கூடிய வாய்ப்பு உண்மையில் ஒரு படைப்பாளிக்கு ஆத்மதிருப்தி அளிக்கக்கூடிய விஷயமாகவே இருக்கும். அவ்வகையில் முதல் அடி எடுத்து வைத்திருக்கும் ஷான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் இருந்து இதனை எழுத  ஷானை ஊக்கப்படுத்தி, அது புத்தகமாக வருவதற்கும் முன்னின்று செயலாற்றிய யாவரும் பப்ளிஷர்ஸ் ஜீவகரிகாலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பதின் வயது மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசளிக்க உகந்த நூல். தயங்காமல் உங்கள் பரிசுப்பட்டியலில் இந்த புத்தகத்தை சேர்க்கலாம்.

ஆண்ட்ராய்டின் கதை – கட்டுரைகள்
ஷான்
யாவரும் பப்ளிஷர்ஸ்
பக்கம் – 75
விலை – ரூ. 70

******

 நன்றி மலைகள்: http://malaigal.com/?p=9778

Friday, February 28, 2014

”பழைய பன்னீர் செல்வம்” மொமெண்ட்


மூன்று வருடங்களுக்கு முன்பு, தொழில்நுட்பப் பிரிவில் இருந்து வர்த்தகப் பிரிவுக்கு மாற்றலாகி வந்த போது, இனி தொழில்நுட்ப நுணுக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும் என்ற வருத்தம் லேசாக இருந்தது. அது வரை பணியாற்றியது, டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் - DBA, மாறறலாகி வந்த இடம் - கஸ்டமர் ரிலேஷன் மேனேஜ்மெண்ட் - CRM. சரி, மாற்றத்தை மறுக்காமல் ஏற்றுக்கொள்வோம் (வேற வழி!!!) என்ற மனநிலைக்கு வந்த பிறகு, புது இடத்துக்கேற்றவாறு மேலாண்மை விஷயங்களில் கவனம் செலுத்த, இதுவும் பிடித்தமானதொரு வேலையாக மாறிவிட்டது. இப்படியாப்பட்ட சூழ்நிலையில் நேற்று ஒரு சத்திய சோதனை. 

மாலை அலுவலகம் முடியப்போகும் நேரத்தில், தூத்துக்குடி அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. இயங்கிக் கொண்டிருந்த ஒரு டேட்டாபேஸ் படுத்து விட்டது போல. பழைய ஞாபகத்தில் என்னை அழைத்து விட்டார்கள். நானும் “இந்தமாதிரி இந்தமாதிரி.... நான் யூனிஃபார்ம்மை கழற்றி மூனு வருஷமாச்சு. இப்போ மறுபடி மாட்டுனா... அளவு சரியா இருக்காது, கரண்ட்ல யூனிஃபார்ம் போட்டு ட்யூட்டி பாக்குற ஆபீஸர் யாரையாவது கூப்பிடுங்க” என்று சொல்லிப் பார்த்தேன். அவர்கள் விடாப்பிடியாக “தீவிரவாதிகளை அடக்கனும்னா நீங்க தான் துப்பாக்கியை எடுத்துட்டு எல்லைக்கு வந்தே ஆகனும், உங்களால மட்டும் தான் இந்த மிஸனை கம்ப்ளீட் பண்ண முடியும். (என்ற அளவுக்கு இல்லாட்டியும்) யூனிஃபார்ம் இல்லேன்னா பரவால்ல, மஃப்டிலயே சார்ஜ் எடுங்க” என்று ஒரே பிடிவாதம் பிடித்தார்கள். பிறகு... ”ஏத்தி விட்டால், ஏறாதார் யாருமுண்டோ...?” நானும் சிக்கிட்டேன். 

கடைசியாக எஸ்.க்யூ.எல் கமாண்ட் அடித்துப் பார்த்தே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போதெல்லாம், நமது மல்லுக்கட்டு எல்லாம் இயந்திரமயமான மனிதர்களோடு தான். செல்லமான செர்வர்களுடனும், பிரியமான டேட்டாபேஸ்களுடனும் பழக்கவழக்கம் சுத்தமாய் நின்று பலகாலம் ஆகிவிட்டது. அதுக்காக எடுத்துக் கொண்ட டாஸ்கை பார்த்து பயப்படவா முடியும். டபுள்யூ டபுள்யூ டபுள்யூ டாட் கூகுள் டாட் காம் என்ற அதிநவீன ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு  “குதிச்சுற்றா கைப்புள்ள...” என்று மனதை திடப்படுத்திக் கொண்டு, களத்தில் இறங்கியாயிற்று. “நாலு மணி நேரம், திணறத் திணற... சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம, ரிமோட் டெக்ஸ்டாப்க்கு உள்ளேயே மூழ்கி தூத்துக்குடிக்கே போய்விட்டேன். சுத்தமாக மறந்து விட்டது என்றே நம்பிக் கொண்டிருந்த பல விஷயங்கள், ஆட்டோ ரீவைண்ட் செய்து தானாக மனத்திரையில் ஓட ஆரம்பித்து விட்டது. மூளையும் விரல்களும் தானாக கூட்டு சேர்ந்து அதுவாக வேலை பார்க்க நான் சும்மா வெளியே இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்பது போல இருந்தது. 

ஒரு வழியாக சுயநினைவுக்கு வரும் போது, எந்தவித சேதாரமும் இல்லாமல் டேட்டாபேஸ் மீண்டும் பழைய நிலையை அடைந்து ஓடிக் கொண்டிருந்தது. “சக்சஸ்” என்று கத்தலாம் என பார்த்தால், இங்கே அலுவலகத்தில் ஒரு காக்கா குருவியைக் கூட காணோம். சரியென மானிடருக்கும், சிபியூவுக்கும் டாட்டா சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்தாலும் “ஐயோ, இப்போ எதையாவது வாங்கனுமே!”னு துடிக்கிற கவுண்டமணி மனநிலை தான். இதற்கு முன்னர் இதை விட பலமடங்கு பெரிய வேலைகள் எல்லாம் செய்திருக்கிறோம் தான். ஆனால் குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகு, எந்தவித முன்னேற்பாடும் இன்றி, சடாரென களத்தில் குதித்தவுடன், பழைய அனுபவம் எல்லாம் லைன் கட்டி மனத்திரையில் வந்ததும், “குமாரு ஹேப்பி அண்ணாச்சி!”. சரி, அதைப் பகிர்ந்து கொள்ள இணையத்தை விட்டா வேறு வழி? அதான் உங்ககிட்ட கொட்டிட்டேன். இனி நார்மலாகி விடுவேன்.

ஆங், இதனால் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், “நமக்குள்ள இருக்க வித்தக்காரன் எத்தனை வருசமானாலும் உள்ளே தூங்கிட்டு தான் இருப்பான் போல, தேவைப்படும் போது தானா விழுச்சுக்குறான். நாம தான் அப்படி ஒருத்தன் இருக்கதையே மறந்துட்டு “பே”னு சுத்திட்டு இருக்கோம்”. :)

******

Tuesday, May 14, 2013

செல்ஃபோன் - வரமா சாபமா?


தொலைத்தொடர்பின் அசுரத்தனமான வளர்ச்சியினால் இன்று செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. குழந்தை பிறப்பு முதல் இறுதி யாத்திரை வரை செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை. தொன்னூறுகளில் நூற்றுக்கு ஏழு என்று இருந்த தொலைதொடர்பு அடர்த்தி இன்று இந்தியாவில் நூற்றுக்கு சுமார் என்பது பேர் தொலைபேசி சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்த வளர்ச்சியினால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு என்றாலும் சில பக்க விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

செல்ஃபோன் என்பது மின்காந்தவியல் கதிர்வீச்சின் மூலமாகவே இயங்குகிறது. நாம் கையில் வைத்திருக்கும் செல்ஃபோன் சாதனம், பேஸ் ஸ்டேசன் என்று சொல்லக்கூடிய மொபைல் டவரின்  ஆண்டனாவை கம்பியில்லா இணைப்பின் மூலம் கதிர்வீச்சினால் தொடர்பு கொள்வதன் மூலம் இணைப்பு கிடைத்து நாம் தேவையானவர்களுடன் உரையாடுகிறோம். இதில் ஒவ்வொரு செல்ஃபோன் சாதனமும் ஒன்று முதல் மூன்று வாட் (watt) வரையில் கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. அதே போல் மொபைல் டவரின்  ஆண்டனாவும் தன் பங்குக்கு சுமார் பணிரெண்டு வாட் கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. இது அரசினால் நிர்ணயிக்கப்பட்ட அளவு. 

ஆனால் கொடுமை என்னவென்றால் இந்தியாவில் பெரும்பான்மையான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதில்லை. (பி.எஸ்.என்.எல் மட்டும் விதிவிலக்கு. ஏன்னென்றால் அரசுத் துறையாதலால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக கதிர்வீச்சை வெளியேற்ற விதியும் இடம் தராது, இயந்திரங்களும் ஒத்துழைக்காது) மாறாக பனிரெண்டு வாட் என்ற அளவுக்குப் பதிலாக சுமார் அறுபது வாட் வரை கதிர்வீச்சை வெளியேற்றுகின்றனர் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். விளைவு, எட்டு டவர்கள் பொருத்த வேண்டிய இடத்தில் ஒரு டவர் பொருத்தினால் போதுமானது. இதன் மூலம் அவர்களின் செலவு கணக்கும் குறைகிறது. கதிர்வீச்சின் தன்மை மிக அதிகமாக இருப்பதனால் கண்ணாடி அறை, உள்ளடங்கிய பகுதி, குடோன், அடித்தளம், பரண் என்று சகல இடங்களுக்கும் கதிர்வீச்சு ஊடுருவி சிக்னலும் நன்றாகக் கிடைக்கிறது. சரி, சிக்னல் நன்றாகக் கிடைத்தால் நல்லது தானே. எங்கிருந்தாலும் தெளிவாக இடையூறு இன்றி பேசலாமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தோராயமாக 40 மீட்டர் உயரமுள்ள செல்ஃபோன் டவர் ஆண்டனாவில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கும் பட்சத்தில், டவருக்கு அருகில் சுமார் 10 மீட்டர் தூரத்தில் இருந்தால் கூட அதன் வீச்சு மிக குறைந்து மில்லி வாட் அளவிலேயே இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் நமது உடலின் ஒரு அங்கம் போல் எப்போதும் உடன் வைத்திருக்கும் செல்ஃபோன் சாதனத்திலிருந்து வரும் கதிர்வீச்சானது டவர் ஆண்டனாவில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை விட கிட்டத்தட்ட நூறு மடங்கு அதிகமாக இருக்கும். அதிலும் சிக்னல் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளில் நமது செல்ஃபோன் சாதனம் தானாகவே அதிக கதிர்வீச்சி வெளியேற்றி சிக்னலைப் பெற முயற்சி செய்து கொண்டிருக்கும். இதனால் வரும் அபாயங்களே அதிகம் அச்சுறுத்துவதாக உள்ளது.

கதிர்வீச்சு அதிகமாக இருந்தால், நாம் தொடர்ந்து அதிக அளவிலோ, நீண்ட நேரமோ செல்ஃபோனை பயன்படுத்தும்போது அதிலிருந்து வரும் கதிர்வீச்சை நாமே நம் உடலுக்குள் செலுத்திக் கொள்கிறோம். இதனால் மூளைப் புற்று நோய், காது கேளாமை, மரபியல் சார்ந்த பிரச்சனைகள் வரலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 

சரி, மாறி வரும் உலக நடைமுறையில் தொலைத்தொடர்பில்லாமல் இருப்பது என்பது சாத்தியமே இல்லை. அவ்வாறெனில், நாம் செய்ய வேண்டியது என்ன?

வரும் முன் காப்போம்:
  • நீண்ட நேர உரையாடல்களுக்கு எப்போதும் செல்ஃபோனைத் தவிர்த்து, தரைவழி தொலைபேசியையே பயன்படுத்துங்கள். தரைவழி தொலைபேசிகள் முழுவதும் வயர்கள் மூலமாக இணைக்கப்பட்டிருப்பதால் கதிர்வீச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை.
  • முடிந்த மட்டும் செல்ஃபோனை உடலுக்கு அருகாமையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பேசும் போது கண்டிப்பாக ஹெட்செட்டோ, ப்ளூடூத் சாதனமோ பயன்படுத்தவும்
  • குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட பி.எஸ்.என்.எல். சேவையை உபயோகியுங்கள்.
  • மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற செல்ஃபோன் சாதனங்களை பயன்படுத்தாமல், குறைந்த அளவு கதிர்வீச்சு அளவுகோல் கொண்ட சாதனமா என்று பரிசோதித்து வாங்கவும்
  • குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனமாக செல்ஃபோனை ஒருபோதும் அறிமுகப்படுத்தாதீர்க்ள். 
  • செல்ஃபோன் என்பது நாம் அலுவலகத்திலோ, வீட்டிலோ இல்லாத பொழுது நம்மை தொடர்பு கொள்வதற்காக உள்ள ஒரு அவசர கால கருவி மட்டுமே என்பதை உணருங்கள்.
  • சுருக்கமாக தெரிவிக்க வேண்டிய செய்திகளுக்கு எஸ்.எம்.எஸ். சேவையை பயன்படுத்துங்கள்
  • ஃபேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டவர் செல்ஃபோன் உபயோகிப்பதனால் தனிப்பட்ட அளவில் பாதிப்புகள் வருவதாக இது வரை உறுதி செய்யப்படவில்லை, இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபேஸ்பேக்கர் பொருத்தப்பட்ட பகுதிக்கு எதிர்ப்புறமுள்ள காதில் வைத்து செல் பேசலாம். மேலும் ஆன் செய்யப்பட்ட செல்லை ஃபேஸ்மேக்கர் கருவிக்கு அருகே கொண்டு செல்லாமல் இருப்பதும் நல்லது.

ஒரு தொழில்நுட்பத்தின் வெற்றி அதை உபயோகிப்பவர்களின் கைகளில் தான் இருக்கிறது என்பார்கள். செல்ஃபோனும் அதற்கு விதிவிலக்கல்ல. அற்புதமான இந்த தகவல் தொழில்நுட்ப சாதனத்தை அளவாக மற்றும் முறையாக பயன்படுத்தி வளம் பெறுவோம்.

தரவுகள்:
http://en.wikipedia.org/wiki/Telecommunications_statistics_in_India
http://en.wikipedia.org/wiki/Mobile_phone_radiation_and_health
http://www.lef.org/magazine/mag2007/aug2007_report_cellphone_radiation_01.htm
http://www.consumer.tn.gov.in/pdf/CP-TelecomCons-Seminar.pdf
http://www.psrast.org/mobileng/mobilstarteng.htm

(ஒரு தொழிழ்நுட்ப கருத்தரங்கிற்காக தயாரித்த கட்டுரை)

******

Monday, June 25, 2012

ஆண்ட்ராய்டு - ஓர் எளிய அறிமுகம்



இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இணையத்தின் தேவை இன்றியமையாதது. டயல்-அப் இணைப்பில் இருந்து பிராட்பேண்ட் மற்றும் அலைபேசி மூலம் இரண்டாம் தலைமுறை (2ஜி), மூன்றாம் தலைமுறை (3ஜி) என்று இணைய வேகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக கணினியையும், அலைபேசியையும் இணைத்த புதிய தொழில்நுட்பம் இன்று சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ”வில்லைக் கணினி”(tablet pc) என்று சொல்லக்கூடிய இந்த கையகல கணினியில் அலைபேசிக்கான வசதிகள் மட்டுமின்றி சிறிய அளவில் ஒரு கணினி செயல்படுவதற்கான தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது.

தற்பொழுது பரவலாகிக் கொண்டிருக்கும்  மூன்றாம் தலைமுறை (3ஜி)  அலைபேசி இணைப்பு மூலம் அதிவேக இணைய வசதி (சராசரி 2 Mbps) கிடைத்தாலும், அதை அலைபேசி மூலமாக இயக்குவது சற்று சிரமமான ஒன்று தான். ஏனெனில் தற்பொழுதுள்ள அலைபேசிகளில் உள்ள மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைப்பு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டவை, அவற்றில் இணையத்தில் உலாவுவதற்கான வசதிகள் சிறிதளவே உள்ளன. எனவே பெருகி வரும் இணைய பயனீட்டாளர்களின் தேவையைக் கருதி, தற்பொழுது புதிதாக சந்தைப்படுத்தப் பட்டிருக்கும் இந்த வில்லைக் கணினிகள் பேசும் வசதி மற்றுமின்றி டேட்டா பறிமாற்றத்திற்கும் இலகுவானதாய் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒரு கணினியின் சீரிய செயல்பாட்டிற்கு அதில் நிறுவியிருக்கும் இயக்குதளம் (operating system) முக்கிய பங்கு வகிக்கிறது. அது போலவே இந்த  வில்லைக் கணினி இயங்குவதற்கும் இதில் நிறுவப்பட்டிருக்கும் இயக்குதளம் இன்றியமையாதது. இந்த இயக்குதளம் எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பல்வேறு பயன்பாடுகளுக்குத் தேவையான நிரல்களை இயக்குவதற்கு தோதானதாகவும் இருத்தல் அவசியம். நாம் இப்பொழுது சாதாரண அலைபேசியில் கூட அலாரம், கேல்குலேட்டர், பன்பலை வானொலி என ஏகப்பட்ட வசதிகளை உபயோக்கிறோம். இவையனைத்தும் இணையம் சாராத பயன்பாடுகள் (applications). ஆனால் இதே அடிப்படையில் வில்லைக் கணினி மூலமாக இணையம் சார்ந்தும், சாராமலும் இன்று இலட்சக்கணக்கான பயன்பாடுகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்று நவீன வடிவமைப்பில் வெளிவரும் வில்லைக் கணினியை பார்த்தவுடன் நாம் முதலில் கேட்கும் கேள்வி, “இது ஆண்ட்ராய்டு ஃபோனா?” என்பது தான். ஆண்ட்ராய்டு என்பது புதியரக அலைபேசி, ஸ்மார்ட்ஃபோன் மற்றும் வில்லைக் கணினியை இயக்கப் பயன்படும் ஒரு இயக்குதளம் தான். இது, கூகுள் மற்றும் சில நிறுவனங்களின் கூட்டமைப்பான ”ஓபன் ஃஹேண்ட்செட் அலையன்ஸ்” (open handset alliance) மூலம் வெளிவரும் ஒரு இலவச மென்பொருள் (open source). இது லினக்ஸ் (linux) இயக்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் வெற்றியின் இரகசியம் என்னவென்றால், ஒரு நிறுவனத்திற்கு மட்டும் சொந்தம் என்றில்லாமல் பலதரப்பட்ட அலைபேசி நிறுவனங்களும் இந்த இயக்குதளத்தை தங்கள் அலைபேசியில் வடிவமைத்துக் கொள்ளலாம். அதே போல ஆண்ட்ராய்டு நிறுவப்பட்டுள்ள ஒரு அலைபேசியிலோ, வில்லைக் கணினியிலோ எந்தவிதமான ஒரு மூன்றாம் நபர் (third party) வடிவமைத்த பயன்பாட்டினையும் இணைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, ஷேர் மார்க்கெட் குறித்த ஒரு பயன்பாடு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள், ஆனால் அது உங்கள் அலைபேசியில் இல்லை. இப்பொழுது உங்கள் அலைபேசியில் ஆண்ட்ராய்டு இயக்குதளம் இருந்தால், இணையத்திலிருந்து ஷேர் மார்க்கெட் தொடர்பான தகுந்த பயன்பாட்டை (apps) தரவிறக்கம்  செய்து அதை உங்கள் அலைபேசியில் நிறுவிக் கொள்ளலாம். இப்படி, உலகம் முழுவதுமாக இலட்சக்கணக்கான பயன்பாடுகள் இணையம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. அந்த பயன்பாடுகள் இலவசமாகவோ இல்லை குறிப்பிட்ட விலையிலோ இருக்கலாம்.

நிற்க நேரமின்றி ஓடுகின்ற வாழ்க்கை முறை பரவலாகிக் கொண்டிருக்கும் சமூகத்தில், உலகத்து நிகழ்வுகள் அனைத்தையும் தரவுகளாக்கி விரல் நுனியில் தெரிந்து கொள்ளும் தொழில்நுட்பத்தின் தேவை இன்றியமையாததாகிறது. மக்களின் தேவைக்குத் தீனி போட புதிய புதிய நுட்பங்களும் வந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைய உலகில் அலைபேசியின் வருகை மூலமும், அதன் மூலம் இணையத்தை எளிதாக இயக்கும் வசதியும் அதற்கொரு சிறப்பான மற்றும் எளிய கருவியாக உருவாகி இருக்கும் ஆண்ட்ராய்டு இயக்குதளத்தின் வளர்ச்சியும் பயன்பாடும் பிரமிக்க வைக்கிறது.  

******

Monday, July 26, 2010

ஆரக்கிள் எனும் குறி சொல்லும் தேவதை !



பண்டைய கிரேக்க காலத்தில் கடவுள்கள் "ஆரக்கிள்" என்று அழைக்கப்பட்ட தேவதைகள் மூலமாக மக்களிடம் பேசினார்களாம். அல்லது மக்கள் தங்கள் சுக துக்கங்களை, தங்களுக்குத் தெரியாத‌ செய்திகளை அறிய ஆரக்கிள் என்னும் "குறி" சொல்லும் தேவதைகளை நாடினார்கள் யாரோ ஒருவர் ஆழ்மனதின் ஏதோ ஒரு அற்புத சக்தி மூலமாக, உங்களுக்கு நடந்த‌ ஒரு செயலைப் பற்றியோ அல்லது நீங்கள் மட்டுமே அறிந்த ஒரு நிகழ்வைப் பற்றியோ கூறும் போது ஒரு ஆச்சர்யம் உண்டாகும் தானே....

ஆனால் நாம் இப்போது ஆன்மீகம் பேசப்போவதில்லை, இந்த புள்ளியில் இருந்து தொடங்கி தொழில்நுட்பம் பேசப் போகிறோம். சரி, இப்போ இன்னும் ஒரு 40 வருடம் கழித்து நீங்கள் உங்களது அறுபதாவது பிறந்தநாளையோ, என்பதாவது பிறந்தநாளையோ கொண்டாடும் போது, உங்கள் பேரன் உங்களுக்கு ஒரு பரிசளிக்கிறான். திற‌ந்து பார்த்தால், நீங்கள் உங்கள் மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளின் தொகுப்பு ... அதுவும்... அவர் உங்களுக்கு அறிமுகமான போது, உங்கள் தோழியான பிறகு, உங்கள் காதலில் திளைத்திருந்த போது, உங்கள் மனைவியான புதிதில், திருமணத்திற்குப் பிறகு முதன்முதலில் நீங்கள் இருவரும் பிரிந்த்திருந்த சமயங்களில்......நீங்கள் அனுப்பிய தொகுப்பு. (சரி, "பொக்கிஷம்" கதை மாதிரி போகுதா, இருங்க விசயத்துக்கு வர்றேன்.)

இது சாத்தியமா ? இன்றைய நிலைமமைக்கே நிச்சயம் சத்தியம் தான். இப்படி எண்ணிலடங்கா செய்திகளை, எண்களை, இன்றைய‌ கணினி யுகத்தில் பரிமாறப்படும் அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்து நாம் "குறி" கேட்கும் போது வழங்கும் தேவதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் ஒன்று "ஆரக்கிள்" எனும் டேட்டாபேஸ்.
இப்போ "ஆரக்கிள்" எனும் இந்த குறி சொல்லும் தேவதை எப்படி வேலை செய்கிறது என கொஞ்சம் சுருக்கமாவே பார்க்கலாம்.

ஆரக்கிள் சர்வர்(server) இரண்டு பகுதிகளைக் கொண்டது. பயனாளிகள் தகவலை அடைய உதவும் வழி, இன்ஸ்டன்ஸ் (instance) முதலாவது. மற்றொன்று தகவல் பெட்டகம் (database). ஒரு பயனாளி இந்த தகவல் பெட்டகத்திலிருந்து ஒரு தகவலைப் பெறவோ, புதிய தகவலை சேர்க்கவோ, அல்லது இருக்கும் தகவலை மாற்றவோ வேண்டுமென்றால், அவர் எஸ்.க்யு.எல் (SQL) என்ற கணினி மொழி மூலமே செய்ய முடியும். அதற்கு தேவையானவை இரண்டு.

1. ஆரக்கிள் சர்வராக(server) நிறுவப்பட்டுள்ள கணினிக்கும், பயனாளி உபயோகைக்கும் கணினிக்கும் இடையேயுள்ள நெட்வர்க். இது சரியாக இருக்கும் பட்சத்தில் பயனாளியின் கேள்வி (query) சர்வரை அடைந்து விடும்.
2. ஆரக்கிள் டேட்டாபேஸில் பயனாளிக்கு அளிக்கப் பட்டிருக்கும் உரிமைகள் (privileges). இந்த உரிமை சரியாக இருக்கும் பட்சத்தில் தனக்குத் தேவையானவற்றை பயனாளி பெற்றுக் கொள்ள முடியும்.

சரி, ஆரக்கிள் எப்படி தகவல்களை சேர்த்து வைக்கிறது? 

ஆரக்கிள் டேட்டாபேஸில் தகவல்கள் பட்டியல்களாகவே (tables) சேமிக்கப் படுகின்றன். இந்த பட்டியல்கள் அடங்கிய கோப்புகள் (files), முக்கியத்துவம் கருதி மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளன.

1. தகவல் கோப்பு (datafile)
2. கட்டுப்பாட்டு கோப்பு (controlfile)
3. தகவல் பரிவர்த்தனைக் குறிப்புக்கான கோப்பு (redo log file).

இந்த கோப்புகளில் எழுதப்படும் தகவல்கள் அனைத்தும் "ஆரக்கிள் ப்லாக்ஸ்" (oracle blocks) எனப்படும் சிற்சிறு துண்டுகளாகவே சேமிக்கப்படுகின்றன. இப்பொழுது நமக்குத் தேவையான ஒரு தகவலை ஆரக்கிள் டேட்டபேஸிலிருந்து எப்படி பெறுவது என பார்ப்போம்.

1. பயனாளி தனக்குத் தேவையான கேள்வியை எஸ்.க்யு.எல் கணினி மொழியில் கேட்கிறார்.
2. நெட்வொர்க் இணைக்கும் பட்சத்தில் அது ஆரக்கிள் சர்வரை அடைகிறது.
3. ஆரக்கிள் இன்ஸ்டன்ஸ் அந்த கேள்வியின் பொருளை கிரகித்து அதற்கான தகவலைப் பெற முனைகிறது.
4. அதற்காக இன்ஸ்டன்ஸிலிருந்து டேட்டாபேஸை இணைக்கும் பின்புல செயல்முறைகள் செயல்படத் தொடங்குகிறது.
5. பின்புல செயல்முறைகள் சரியான தகவலை கட்டுப்பாட்டு கோப்பு (through controlfile) உதவியுடன் தகவல் கோப்பிலிருந்து (from datafile) பெற்று
 இன்ஸ்டன்ஸ் வழியாக பயனாளிக்கு தெரிவிக்கிறது.
6. இணையாக, என்ன பரிவர்த்தனை நடந்துள்ளது என்ற முழு விவரத்தையும் தகவல் பரிவர்த்தனைக் குறிப்புக்கான கோப்பில் (redo log file) சேமித்தும் வைக்கிறது. 

இவை அனைத்தும் சரியாக இயங்கும் பட்சத்தில், பயனாளி கேட்ட தகவல் நொடிப் பொழுதில் அவருக்குக் கிடைக்கிறது. 


இன்றைய எண்மயமாக்கப்பட்ட கணினி உலகில், வங்கி கணக்கு முதல் ரயில்வே முன்பதிவு வரை,  மின்னஞ்சல் கணக்கு முதல், தொலபேசி இணைப்பு வரை, குறுந்தகவல் முதல் தேர்தல் முடிவு வரை எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அனைத்துமே ஏதேனும் ஒரு தகவல் பெட்டகத்தில் (database) இருந்து தான் இயங்குகிறது. எல்லையற்ற தகவல்களை ஒருங்கிணைத்து, பட்டியலிட்டு தேவையான நேரத்தில், தேவையான அளவில், தேவையான நபருக்கு வழங்குவதில் தான் இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் சூட்சமம் இருக்கிறது.

***

Thursday, November 26, 2009

பி.எஸ்.என்.எல் - 3ஜி மொபைல் சேவை

தொலைதொடர்புத் துறையின் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் (3 ஜி) இயங்கும் செல்போன் சேவையை இந்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சென்னையில் இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.



சரி, இந்த 3ஜி என்றால் என்ன, இப்பொழுது பயன்படுத்தப்படும் செல்போன் சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ?
இருக்கிறது. தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில்(2 ஜி) வாய் வலிக்க வலிக்க பேசலாம், பேசலாம். மிகத் துல்லியமாக பேச்சுக்கள் கேட்க பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் மொபைல் வழி இணையத் தொடர்பு என்பது ஊறுகாய் போலத் தான்.  அதுவும் சும்மா உங்கள் இன்பாக்ஸை எட்டிப்பார்ப்பது, ஒரு சாட் (chat) செய்திக்கு "நான் இப்போ மொபைலுக்குள்ள இருக்கேன், அப்பாலிக்கா பேசுறேன்", இல்லையென்றால் ஒரு இணையதளத்தை திறந்து வைத்து விட்டு, போய் ஒரு காஃபி குடித்துவிட்டு வந்து பார்த்தால் "என்ன அதுக்குள்ள அவசரம், போய் மதிய் சாப்பாட்டை முடிச்சிட்டு வா ! " என்ற ரீதியில் தான் இருக்கும். ஆனால் இந்த 3ஜி தொழில்நுட்பத்தில் தரைவழி அகண்ட அலைவரிசை (landline broadband) இணைய வேகத்திற்கு இணையாக அதிவேக இன்டர்நெட், வேகமான தரவிறக்கம் மற்றும் மொபைல் டிவி, ஆன்லைன் கேம்ஸ் எனப் பலப்பல வசதிகள் மொபைல்போன் மூலமாகவே சாத்திய்ம். 
ஆனால் இவை அனைத்தையும் விட சிறப்பான ஒரு சேவை 3ஜி ல் இருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாளில், "இந்த சேவை இல்லாமல் மொபைல்போனா?  போங்க சித்தப்பா, அந்த் காலத்து ஆளா இருக்கீங்களே !" என்று சொல்லத்தான் போகிறோம். அந்த அற்புத வசதி, நம்மை அழைப்பவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசக்கூடிய "வீடியோ காலிங்" எனும் சேவை. 


ரொம்ப செலவாகுமோ ?
இப்பொழுது தான் சந்தைக்கு வந்துள்ளதால், கட்டணம் எல்லாம் தாறுமாறாக இருக்கும், கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறீர்களா, அது தான் இல்லை. ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பது.... "கிடைத்தவரை சுருட்டிக்கலாம், பின்னாடி போட்டி வந்தா வாடிக்கையாளர்களுக்கு கண்கட்டு வித்தை காட்டி பில்லில் தெரிஞ்சு கொஞசம், தெரியாம கொஞ்சம் முழுங்கிக்கலாம் !" என நினைக்கும் தனியார் நிறுவனங்கள் இல்லை. பில்லிங்கில் என்றும் நம்பகமான்  பி.எஸ்.என்.எல் இந்த 3ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதால், மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.  சும்மா ஒரு எடுத்துக்காட்டுக்கு,  3ஜி சேவை மூலம் பேசுவதற்கான ( voice call) கட்டணம், அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா, வெளியூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.50 பைசா மட்டுமே.


(கட்டணம் பற்றிய முழு விவரங்களுக்கு : 
மற்றும் http://bsnl.in/service/3G/3GHomepage.htm )
3ஜி வசதி எனக்கும் வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் ?
ரொம்ப சுலபம் தான். 
ஒரு எஸ்.எம்.எஸ். மூலமாகக் கூட நீங்கள் பி.எஸ்.என்.எல்  3ஜி க்கு மாறலாம். உங்களது 2ஜி மொபைலில் இருந்து M3Gxxx  (xxx என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ப்ளான்) என டைப் செய்து 53733 எண்ணிற்கு அனுப்பினால் போதும்.  
புதிய இணைப்புக்கு : நீங்கள் சென்னையில் இருந்தால் 
http://chennai.bsnl.co.in/CIP/NewLineRequest.asp?RequestType=PROVIDE%203G%20MOBILE%20SERVICE - இந்த தளத்திற்கு சென்று பதிந்து கொள்ளலாம். 
மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்ய 
http://portal.bsnl.in/BSNLCCA/ThreeGRegistration.aspx ஐ அழுத்தவும்
அல்லது 1500, 1503, 9400024365 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
முக்கியமானது, 3ஜி சேவையைப் பெற உங்கள் செல்போன் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
3ஜி வசதியை ஏற்கக்கூடிய சில மாடல்கள
• Nokia N95,N96,N82,N73
       • Nokia 6233, 3120 Classic
• G700, G900, G502
        • K 660i, K 610i, K530i
       • P1i, W980i, W910i, W760i
• Samsung SGH J800
        • Touch wiz, Innov 8
• LG Viewty , LG KU 250
• Motorola Q, A925
        • MotoRazor V9
  • Apple 3G I Phone • HTC
       • Blackberry Bold 9000        
வேறென்ன சிறப்புகள் ?
3ஜி க்கு மாறினாலும் நீங்கள் இப்பொழுது வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல் செல் நம்பரையே தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
3G தொழில்நுட்பம் மூலம் "டேட்டா கார்டு" (Data Card) சேவையும் உள்ளது.
இன்னும் ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கு... விவரங்களுக்கு http://bsnl.in/service/3G/3GHomepage.htm ஐ பாருங்கள்.

தகவல் தொழில்நுட்பமும், தொலைதொடர்பும் விரைகின்ற வேகம் ரொம்ப பிரம்மிப்பா இருக்குல்ல.
தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.
நன்றி, தகவல் உதவி...
http://bsnl.in/service/3G/3GHomepage.htm
http://chennai.bsnl.co.in/News/2gto3g.pdf
http://www.chennai.bsnl.co.in/index.html
http://www.bsnl.in/faq/faqans.php?paramCategory=3G%20Mobile%20Services
http://www.viparam.com/index.php?news=18750
http://www.maalaimalar.com/2009/11/19145338/CNI04901901109.html
http://www.dinaithal.com/business/10281--3-
http://therinjikko.blogspot.com/2009/10/blog-post_8694.html#ixzz0XsyCS2fb