Wednesday, January 22, 2014

நோய்மை



தலைச்சன் பிள்ளையை
கொள்ளை நோய்க்குப் பறிகொடுத்த
நிறைசூலியைத் தேடும் துர்சொப்பனங்கள்
அவள் கால்மாட்டில் கிடக்கும்
விளக்குமாறோடு மல்லுக்கு நிற்கின்றன

திண்ணையில் புரண்டு படுக்கும்
பிறழ்மன பதின்ம வயதினன்
இருளைக் கக்க வரும் வலுசர்ப்பங்களை
காலைப் பிணைத்திருக்கும் சங்கிலியால்
விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றான்

செக்கு மாட்டுக் குளம்பில் பந்தமேற்றி
மொச்சைப் பயிரை அவித்து வைத்து 
ஒப்பாரி பாடிக் கொண்டிருக்கையில்
முந்தாநாள் இறந்த மூப்பன்
முச்சந்தி இருட்டில்
கொட்டாங்குச்சி நீரை
வெறித்துப் பார்க்கின்றான்

நேர்ச்சைக்காக ஏங்கிக்கிடக்கும்
கருப்பசாமியின் புரவி வாகனம்
கல்லடிபட்ட நாய்களை காவலுக்கு அனுப்பி விட்டு
நின்றவாக்கில் தூங்கிக் கொண்டிருக்கிறது

******

Wednesday, January 15, 2014

”வீரம்” - செம மாஸ்

”இந்தப்படத்தை இவரைத் தவிர வேறு யார் நடித்தாலும் விளங்காது” என்று வழக்கமாக ரஜினி படங்களுக்குத் தான் சொல்லி வந்திருக்கோம். போகிறபோக்கைப் பார்த்தால் அஜித் படங்களுக்கும் அப்படியொரு உயர்வு கிடைத்துவிடும் போல. “வீரம்” முழுதும் செம மாஸ். அஜித் எப்பவும் போல படம் முழுவதும் ஸ்லோ மோசனில் நடந்து தான் வருகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அறிமுகக் காட்சி போல விசிலும், கைத்தட்டலும், தொண்டை கிழிய கத்துவதுமாக தியேட்டர் முழுவதும் கொண்டாட்டத்தில் திளைக்கிறது.

படம் முடிந்து வெளியே வந்த பிறகு யோசித்தால், படத்தில் சொல்லிக் கொள்ளும் படியாக எதுவுமே இருந்தமாதிரி நினைவில்லை. அதுவும் இயக்குநர் பழைய ”சிறுத்தை” பாசத்தில் தமன்னாவை அஜித்துக்கு நாயகியாய் தேர்வு செய்தது எல்லாம் மனிதத்தன்மையற்ற செயல். இயக்குநருக்கு தயாரிப்பாளர் செலவில் வெளிநாடு செல்ல ஆசையிருந்தால், லொகேசன் பார்க்கப்போகிறேன் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு எழவோ சொல்லி விட்டோ சென்று இருக்கலாம். “ரெண்டு டூயட் ஃபாரின்ல ஸூட் பண்றோம் சார்” என்று சொல்லி படத்தோட ஃப்ளோவையே கெடுத்து இருக்கிறார். படத்துக்கு கொஞ்சமும் ஒட்டாமல், நாயக நாயகி இணையும் பொருத்தமில்லாமல் தனியாக துருத்திக் கொண்டிருக்கின்றன இரண்டு டூயட் பாடல்களும். 

படத்துக்கான இசையும் அது போல தான். சிறு நகர பின்னனி கதைக்கு “பீட்டர்” விடும் டி.எஸ்.பி இல்லாமல் இமான் மாதிரி லோக்கலாய் இறங்கி அடிக்கும் நேடிவிட்டி இருந்திருந்தால் இன்னும் கூட மாஸ் கூடியிருக்கும். அப்புறம், அஹிம்சாவாதியாகவே வாழ்ந்து வரும் நாசர், தன் குடும்பத்துக்காக அஜித் வில்லன்களை கொன்று குவிப்பதை நேருக்கு நேர் பார்த்தாலும், அது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாதது போல, நாமும் அலட்டிக் கொள்ளக் கூடாது. ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி,  படம் பார்க்கும் போது அஜித்தின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மட்டும் தான் நம்மை ஆக்கிரமிக்கிறது. மற்ற எதுவும் தெரியவில்லை. அப்படியும் தொய்வு விழும் சில இடங்களில் கூட முந்திய மாஸ் காட்சிகளின் வைப்ரேசன் நீடிப்பதால் படம் முடியும் வரையுமே ஹை எக்ஸைட்மெண்ட் வெலவில் உற்சாகமாக அம்ர்ந்து ரசிக்க முடிகிறது.

நான்கு சில்லரைப் பசங்களுக்கு சரிக்குசமமாக நடி(ட)க்க விட்டு அஜித்தை தரம் தாழ்த்திய “மங்காத்தா”வையே ஹிட் அடிக்க வைத்த ரசிகர்கள், பெரியண்ணனாய் செம கெத்து காட்டும் “வீரத்தையா” வீழ்த்துவார்கள். நெவர்ர்ர்ர்ர். அதுவும் வில்லனுக்கு எதிரா எண்ட்ரி கொடுக்குற மாஸ் ஸீன் வித் மழை பேக்ரவுண்ட், இண்டர்வல் ப்ளாக்ல “ரிஸ்க் எடுத்து டூப் போடாமல் சண்டையிட்ட” என்று பக்காவாய் விளம்பரப்படுத்திய ஒரு ட்ரெய்ன் ஃபைட், நேட்டிவிட்டிக்காக ஒரு மாட்டு வண்டி சீன், ஒரு திருவிழா டான்ஸ், கிளைமாக்ஸில் ஒரு சென்டிமெண்ட் ஃபைட்,  இன்னும் சில பல மசாலாக்கள் என்று கலந்துகட்டி தயாரித்து இருக்கும் பொங்கல் விருந்து அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சாதாரண பார்வையாளர்களுக்குமே நல்ல பொழுது போக்காக இருக்கும்.

”நம்ம கூட இருக்கவங்களை நாம பார்த்துக்கிட்டா, நம்ம மேல இருக்கவன் நம்ம பார்த்துப்பான்” - இது படத்தின் பிரதான பன்ச். அஜித்தும் இந்த ஃபார்முலா நன்றாகவே தெரிந்திருக்கிறது. ”என்ன நான் சொல்றது !”