Wednesday, January 22, 2014

நோய்மை



தலைச்சன் பிள்ளையை
கொள்ளை நோய்க்குப் பறிகொடுத்த
நிறைசூலியைத் தேடும் துர்சொப்பனங்கள்
அவள் கால்மாட்டில் கிடக்கும்
விளக்குமாறோடு மல்லுக்கு நிற்கின்றன

திண்ணையில் புரண்டு படுக்கும்
பிறழ்மன பதின்ம வயதினன்
இருளைக் கக்க வரும் வலுசர்ப்பங்களை
காலைப் பிணைத்திருக்கும் சங்கிலியால்
விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றான்

செக்கு மாட்டுக் குளம்பில் பந்தமேற்றி
மொச்சைப் பயிரை அவித்து வைத்து 
ஒப்பாரி பாடிக் கொண்டிருக்கையில்
முந்தாநாள் இறந்த மூப்பன்
முச்சந்தி இருட்டில்
கொட்டாங்குச்சி நீரை
வெறித்துப் பார்க்கின்றான்

நேர்ச்சைக்காக ஏங்கிக்கிடக்கும்
கருப்பசாமியின் புரவி வாகனம்
கல்லடிபட்ட நாய்களை காவலுக்கு அனுப்பி விட்டு
நின்றவாக்கில் தூங்கிக் கொண்டிருக்கிறது

******

No comments:

Post a Comment