Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, July 30, 2023

வீரமே ஜெயம்

மகனின் தொடர் தோழமைச் சுட்டலின் விளைவாக நேற்று மாவீரன் படம் பார்த்தோம். மூன்றாம் வார சனிக்கிழமை மதியக் காட்சிக்கும் பாதி அரங்கு நிறைந்திருந்தது. முதல் பார்வை போஸ்டரில் 'தளபதி' ரஜினியை நினைவுபடுத்தும் சிவகார்த்தியின் சிகையலங்காரமும், படம் பற்றிய நேர்மறைச் செய்திகளும் எனக்குமே படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியிருந்தது.

'ரமணா' படம் போல அடுக்குமாடிக் கட்டிடத் தொகுப்பு இடிந்து விழுவதற்கான ஒரு வலுவான காரணம், சுவர் பெயர்ந்து விழுவதையே திரும்பத் திரும்பக் காட்சிப் படுத்தியது, தேர்தல் வருகிறது, பொறுமையாக இருங்கள் என்ற தேய்வழக்கு கதைந்கர்த்தல் போன்ற சில பிசிறுகள் தவிர்த்துப் படம் காட்சி அனுபவமாக நல்ல கோர்வையாகத் தொய்வின்றிச் சென்றது.

டான், பிரின்ஸ் போன்ற காவியங்களுக்குப் பிறகு இதனைப் பார்த்ததும் ஒரு வலுவான காரணமாய் இருக்கலாம். டானின் வெற்றி பிரின்ஸுக்கு வழிவகுத்தது. பிரின்ஸின் தோல்வி மாவீரனுக்கான பாதையை அமைத்திருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி.

சிவா கோழைத்தனத்தின் உச்சமாகத் தற்கொலைக்கு முயல்கிறார், அதன் பின் மாவீரன் அவதாரம் நிகழுமென யூகிக்க முடிந்தாலும், அரங்கில் நிறைய சிறுவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பது உறுத்தியது. மாடியிலிருந்து கீழே விழுந்தால் சக்திமான் வந்து காப்பாற்றுவார் என தொன்னூற்றுக் குளவிகள் சில நம்பியது போன்ற அபத்தம் இதன் மூலம் ஏற்படும் என பயந்தேன். பழைய 'மாவீரன்' பார்த்துவிட்டு வந்து, படத்தில் வந்தது போல கத்தியால் கையில் 'மாவீரன்' என என் தம்பி எழுதத் துவங்கி, கத்தி கீறலை விட அதிக வலியெடுக்க எங்கள் அம்மாவிடம் அடி வாங்கியதும் நினைவில் வந்தது. ஆனால் அந்தக் காட்சியை ஒருமாதிரி 'பேட்ச் வொர்க்' செய்து சுவர் முனை பெயர்ந்து இடறி விழுவதாக எடுத்திருந்தார்கள், நல்லது.

வில்லன் கார்ட்டூன் பதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் மிகை செய்கை தோற்றம் கொடுக்கும் அரசியல்வாதி, அதற்கு பெரிய கண்களை உருட்டும் மிஸ்கின் நன்றாகப் பொருந்தியிருந்தார். அவருக்கு உதவியாளராக, தனக்கென எந்தத் தனிப்பட்ட வாழ்வும் இல்லாத பள்ளி/கல்லூரி நண்பன் என்ற சரடும் பிடித்திருந்தது. இவர்கள் இருவரின் வளர்ச்சியும் வாழ்க்கையும் வைத்தே அழகான தனிக் கதை எழுதலாம்.

நாயகனுக்கு ஒரு மனக்குரல் ஒலிக்கிறது. அது அவனைக் கோழைத்தனத்திலிருந்து விடுத்து மாவீரனாக்குகிறது எனற ஐடியா நன்று. அதற்கு படத்தில் சொல்வது போல், 'உனக்குத் தெரியாத எதையும் அந்தக் குரல் பேசாது' என்ற அளவிலேயே கொண்டு முடித்திருக்கலாம். அமானுஷக் கதை போல அவனுக்குத் தெரியாததை எல்லாம் சொல்லி வழிநடத்துகிறது என்று கொஞ்சம் கதை சொல்லிவிட்டார்கள்.
படம் தயாராகும் நிலையில், இயக்குநருக்கும் நாயகனுக்கும் மனக்கசப்பு, நாயகனின் கதை நகர்வின் மூக்கை நுழைக்கிறார் என பல செய்திகள் காற்றில் உலாவிக் கொண்டிருந்தன. வெளிவந்திருக்கும் படைப்பாக நிறைவான அனுபவத்தையே தந்தது. குழந்தைகளையும் குடும்பங்களையும் மனதில் வைத்துப் பொறுப்புடன் எடுத்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இயக்குநர் மடோன் அஸ்வின், நாயகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவிற்கு வாழ்த்துகள்.

#Maaveeran
#வீரமேஜெயம்
#மாவீரன்

Thursday, May 5, 2022

பயணிகள் கவனிக்கவும் - திரை அனுபவம்

#பயணிகள்_கவனிக்கவும்

குறிப்பிடத்தக்க நல்ல முயற்சி, நன்றாகவும் வந்திருக்கிறது. ஒ.டி.டி தளங்களின் பெருக்கத்திற்குப் பிறகு, அவற்றிற்காக சிறிய பொருட்செலவில் தயாராகும் பிரத்யேகத் திரைப்படங்கள் வரத் துவங்கியிருக்கின்றன. எளிய கதை, நல்ல திரைக்கதை மற்றும் கூர்மையான வசனங்கள் மூலம் வீட்டிலிருந்தபடியே ஒரு புதிய திரைப்படத்தைப் பார்த்துவிடக் கூடிய அனுபவத்தை அவை அளிக்கக்கூடியவை. அவ்வாறு வெளியாகும் திரைப்படங்களை, தொலைக்காட்சி நாடகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடியவை பரபரப்பான காட்சியமைப்புகளும், படத்தின் இசையும், வேகமும். ஆனால் பயணிகள் கவனிக்கவும் படம் மிக நிதானமாகத் தான் செல்கிறது, இசையும் காட்சிகளை உயர்த்திக் காட்டும் அளவுக்கு இல்லாமல், அதே நேரம் தொந்தரவு தராத அளவுக்கு மெலிதாகவே இருக்கின்றது.

இப்படி, நாடகமாக மாறியிருக்கக் கூடிய கதையை இயல்பான சினிமாவாக மாற்றியது விதார்த்தின் யதார்த்தமான நடிப்பு, அதை நடிப்பு என்றுகூட சொல்லமுடியாது, கண்களில் தெரியும் தயக்கம், சாய்ந்த உடல்மொழி, வாயசைவு என்று எழிலனாகவே வாழ்ந்திருக்கிறார் மனிதர். எத்தகைய தொழில்நுட்ப ஜாலங்கள் இல்லாமலே ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு விதார்த்தின் அற்புதமான நடிப்பு, வாழ்த்துகள், இப்படம் உங்கள் அடுத்த இன்னிங்ஸின் துவக்கமாக அமையட்டும்.

சமூக வலைதளங்களில் பொறுப்பின்றி பகிரப்படும் தனிநபரின் படங்கள், வைரலாகும் அத்தகைய படங்களை எந்தவித ஆய்வுமின்றி, தங்களுக்குத் தோதான ஒரு பின்னணி கட்டுக்கதையோடு பரப்பி சென்ஷேசனாக்கும் காட்சி ஊடகங்கள், அவை சம்பந்தப்பட்ட மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்று தற்போதைய சமூகக் கதை. மலையாளத்தில் 2019ல் வெளிவந்த  "விக்ருதி" திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது, அதிலிருந்து எவ்வளவு தூரம் இப்படம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. மலையாளப்படத்தையும் பார்க்க வேண்டும்.

எனக்கு இப்படத்தின் மையப்புள்ளியில்  சிறு போதாமை தென்பட்டது. இன்னும் கொஞ்சம் அழுத்தமான நிகழ்வை எடுத்துக்கொண்டு அது தவறாகச் சித்தரிக்கப்பட்டு, வைரலாகி, சம்பந்தப்பட்டவர் மற்றும் படம் எடுத்தவர் இருவர் வாழ்வையும் எப்படி அலைக்கழிக்கிறது என்று பேசியிருக்கலாம்.

இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். 
#Aha_OTT தளத்தில் கிடைக்கிறது, பார்க்கலாம்.

Friday, March 18, 2022

கடைசி விவசாயி !

 கடைசி விவசாயி !


May be an image of 2 people, outdoors and text
தமிழ் சினி்மா விவசாயத்தைக் கொலையாய் கொன்றெடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் விவசாயியை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.

சினிமா பார்ப்பது போலவே இல்லை, இப்படம் மிக இயல்பாக இருக்கிறது என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். எனக்கு அது மட்டுமே கொஞ்சம் குறையாகத் தோன்றியது. இதே சரடை இன்னும் சற்று திரைமொழி சேர்த்து, காட்சிகளை இறுக்கக் கோர்த்திருந்தால் இந்தக் கதை பொதுமக்களின் மனதில் ஆழமாகச் சென்று சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். படத்தில் ஆசுவாசமான மிகப்பெரிய விஷயம், விவசாயியை நல்லவராகக் காட்ட சுற்றி இருப்பவர்களை கொடூரர்களாகச் சித்தரிக்கவில்லை. மனிதர்கள் எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே. அவரவர் வாழ்க்கை முறைக்கு அவரவர் நியாயம் சேர்க்கின்றனர். அதிலும் நீதிபதி தான் சார்ந்துள்ள சட்ட அமைப்பின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்தபடி புழுங்குவதும் முதியவர் இறந்துவிட்டார் என்று குற்றவுணர்வோடு கைகளைக் கோர்த்து வேண்டியபடி பரிதவிப்பதும் மிக இயல்பு.

பணியாரத்தை சிணுக்கருக்கியால் திருப்பிப் போடுகையில் அந்தச் சிறுபெண் ரசித்துச் சிரிக்கும் ஒரு சிரிப்பு, ”என்னவாம்.. உன் வம்சமே கிறுக்குப்பய வம்சமாமே, உன்னை எப்படி கல்யாணம் பண்ணனு எங்கம்மா சொல்லுச்சு” என்று குடத்துடன் தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண் போகுற போக்கில் ஒரு காதலை மறுதலிக்கும் இயல்பு, இராமையா கேட்காமலே பெரியவர் மூன்று பேருக்கு சோறு பரிமாறி வைக்கும் இடத்தில் அவர் அவனை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்ற நுணுக்கம் என்று நிறைய இடங்கள் ரசிக்க வைத்தன.

ஞானக்கிறுக்கனாக இராமையா பாத்திரத்தை விஜய் சேதுபதி மிக விரும்பி ஏற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. இராமையாவின் நடையும் பயணமுமே தனிக்கதை. அந்தப் பாத்திர வார்ப்பும், ஒப்பனையும் அவருக்கு நன்றாகப் பொருந்துகிறது. அதில் சிறு பிசிறு, அரூபமாய் தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு வைத்திருக்கும் தேநீரை இன்னொருவன் எடுத்துக் குடிக்கும் போது, அங்கே விஜய் சேதுபதி இருந்ததால் அவனை வெளுத்துவிடுகிறார். உண்மையில் அந்த இடத்தில் இராமையா ஊர்க்கார்களிடம் அடிவாங்கி, புழுதி மண்ணோடும் சிராய்ப்புகளோடும் சிரித்தபடியே கைச்சுமையைத் தூக்கிக் கொண்டு போய், பூட்டுக் குழம்பும் மோதிர அப்பளமும் சாப்பிட்டுக் கிளம்பியிருப்பான்.

படத்தில் தேவையில்லாத இடைச்செருகல், தனது காட்டை விற்று யானை வாங்கி மேய்த்துக் கொண்டிருக்கும் யோகிபாபு பாத்திரம். இக்கதைக்கு யோகியும் யானையும் எந்தவொரு நியாயத்தையும் சேர்க்கவில்லை என்பதோடு எளிய மனிதர்களின் ஊடே அவர்களது ஊர்வலம் தேவையில்லாத ஆடம்பரமே. அதுபோல, குலசாமி நேர்த்திக்கடனுக்காக நெல்லுப் போடும்போதும் நூறுநாள் வேலையில் இருக்கும் ஊர்மக்கள் யாரும் வரமாட்டார்கள் என்பது, காலாவதியான பூச்சி மருந்தை அடித்ததால் பயிர்கள் செத்துப் போவது என்ற சில இடங்களில் குறைகளும் இல்லாமல் இல்லை. இன்னொரு விஷயம், இக்கதையை இயக்குநர், ரஜினிக்குச் சொன்னார் என்று செய்தி உலவுவதாகக் கேள்விப்பட்டேன். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இயக்குநர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

விவசாயம் என்பது புனிதம் அல்ல, ஒரு விதை எத்தனை காலமானாலும் தனக்குத் தேவையான ஒளியும் நீரும் கிடைக்கும்போது தானாக உயிர்பெறும். அது போல, முறைகள் எப்படி மாறினாலும், நவீனம் புகுந்தாலும் ஒரு பயிர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு எப்படியும் மண்ணில் உயிர்பெறும் என்ற கருத்து மனதுக்கு அணுக்கமாகத் தோன்றியது. ஒரு காட்சியில் சிறைக்கைதி ஒருவன் வெறும் மண்ணைப் பாத்திரத்திலிட்டு அதற்கு நீரும் ஒளியும் தரும்போது அதிலிருந்து ஒரு தளிர் துளிர்க்கிறது. “மண்ணில் ஆயிரக்கணக்கான விதை போட்டுருக்கான். உனக்கு வேப்பங்கன்று கொடுத்திருக்கு பாரு!” என்று விவசாயம் கற்க நினைக்கும் அவனிடம் பெரியவர் கூறுகிறார். எனக்கு நேசமித்ரனின் இக்கவிதை நினைவில் வந்தது.

விற்றபிறகும் சங்கையும் நுகத்தடியையும்
பரணுக்குள்
சொல்ல விரும்பாத அவமானத்தைப் போல்
ஒளித்து வைத்திருக்கிறவனின் நம்பிக்கையை
நாளை என்ற சொல் மீது
நத்தைக் கூடு போல் சுமந்து நகர்கையில்
சீழ்கட்டிய குளம்புகளுள்ள குதிரைகள் பூட்டிய தேரில்
ஒரு நாளை அஸ்தமனத்திற்கு இட்டுச் செல்லும் வதை

தன் கடைசி நாணயத்திற்கான மலினச்சீட்டுப்
பேருந்துக்கு
கர்ப்பவதியுடன் காத்திருத்தல்
யாரோ வந்து எல்லோருக்கும் கொடுத்தது போக
கொண்டு முடியாமல் மீதமிருக்கிறது என்றபடி
ஒரு மலைவேம்புக் கன்றை கையளிக்கிற
இவ்வாழ்வு எவ்வளவு அனிச்சையானது!

(ஜெல்லிமீன்கள் கரையொதுங்கும் கடல் - நாட்குறிப்பு, பக்கம்: 101)

Thursday, October 17, 2019

தெக்கூரானின் கதை - அசுரன் திரைப்படம் குறித்த பார்வை



'வெக்கை' நாவல் ரொம்ப முன்னாடி வாசித்தது. கதைக்கரு மற்றும் கதையோட்டம் தவிர காட்சிவாரியான நிகழ்வுகள் கிட்டத்தட்ட மறந்துவிட்ட்டது. 'அசுரன்' அந்நாவலைத் தழுவியது என்றதும் நாவலை மறுபடி வாசிக்கும் ஆசையைக் கட்டுப்படுத்தி ஒரு புதிய படமாகப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்தேன். எனவே இது அசுரன் - வெக்கை பற்றிய ஒப்பீடு அல்ல.

படத்தின் முதல் பாதி காட்சிகள் முழுக்க லகானின் பிடி எங்குமே நழுவாமல், கச்சிதமாகக் கோர்க்கப்ப்பட்டிருக்கின்றன. தனுஷ் சிவசாமியின் குணவார்ப்புக்கு நிச்சயம் நியாயம் சேர்த்திருக்கிறார் அல்லது அவரது தனித்தன்மையால் மெருகேற்றி இருக்கிறார். அவரது மூத்த மகனாக வரும் டிஜேய். அருணாசலமும் துடிப்பான ஓர் இளைஞனை இயல்பாகக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். இடைவெளிக்குப் பிரகான முன்னிகழ்வு காட்சிகள், இளமையான தனுஷ், அதில் ஒரு சிறிய காதல், ஒரு பாடல் என்ற வட்டத்திற்குள் நின்றுதான் ஆட முடியும் என்ற நிலையில், மூல நாவலின் ஆன்மாவை சிதைக்காமல், வணிக எல்லை துருத்திக் கொண்டு தெரியாத வண்ணம் அழகாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

முதல் பாதியில் இயல்பாய் வந்திருந்த “மாஸ்” காட்சிகள், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கனமற்று செயற்கையாக இருந்தன என்பதையும் சொல்லத்தான் வேண்டும். திரைக்கதைக்கான முதல் வரைவில் (first draft) இருந்திருக்கக் கூடிய முதல் பாதிக் காட்சிகளைக் காட்டியிலும் பின்பு சேர்த்திருக்க வாய்ப்புள்ள இரண்டாம் பாதி காட்சிகள் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது போலத் தோன்றியன.

இன்றைய இணைய உலகில், ஒரு படம் வருவதற்கு முன்பே, படத்தின் தொழில்நுட்பம், கதையின் அவுட்லைன் மற்றும் படத்தில் பணிபுரிபவர்களின் மனவோட்டம் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு பார்வையாளனுக்கு இருக்கின்றன. வெற்றிமாறன் போன்ற நுண்கலைஞனின் படம் எனும் போது, படம் குறித்த தேடல் இன்னும் விரிவடையவே செய்யும். அப்படி ஏற்றிக்கொண்ட தகவல்கள், படத்தைப் பார்க்கும் போது குறுக்கிடுவதை தவிர்க்க முடிவதில்லை. அசுரன் வெளி வருவதற்கு முன்பான பேட்டி ஒன்றில், இந்தப் படத்தில் தான், முதன்முறையாக இரண்டாம் குழுவை (second unit) வைத்து சில காட்சிகளை எடுத்திருப்பதாகவும், தான் மிகக் குறுகிய காலத்தில் எடுத்த படம் இது எனவும் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார்.

படத்தில் பெயர் போடும் போது, இரண்டாம் குழுவின் இயக்குநர், படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவராகிய மணிமாறன் என்று கண்ணில்பட்டது. படம் முடிகையில் மணிமாறன் பெயர் நினைவிலாட, இது இரண்டு இயக்குநர்கள் இயக்கிய படங்களின் கலவையோ என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அதோடு குறிப்பிட்ட காலத்தில் ஒரு படத்தை தயாரித்து முடித்து வெளியிடும் வழக்கம் கொண்ட தயாரிப்பாளர் தாணுவின் சிக்கன நடவடிக்கைகளால், நுணுக்கங்களுக்குள் (detailing) செல்லாமல், குறிப்பிட்ட கால அளவிற்குள் எடுக்க முடிந்த காட்சிகளை வைத்து, விடுபட்ட இடங்களை தூரக்காட்சி மற்றும் பின்னணி வசனங்கள் மூலமாகக் கதையை நகர்த்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்குமோ என்றும் தோன்றியது. அதும்போக, நடிகர்களின் வாயசைவிற்கும், பின்னணி குரலுக்கும் ஏகப்பட்ட வசன மாற்றங்கள்.

எப்போதும் தேர்வுகளில் 98சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவன், ஏதேதோ நெருக்கடியினால் முழுதாய்ப் படிக்க நேரமில்லாமல் 80சதவீத மதிப்பெண் எடுத்தது போல இருந்தது ‘அசுரன்’. 80சதவீதம் என்பதும் மிகச் சிறந்த மதிப்பெண் என்ற எண்ணத்திலேயே இதைப் பதிவு செய்கிறேன். யோசித்துப் பார்த்தால், தயாரிப்பின் கால அளவு நீட்டம், அதற்குண்டான செலவுகள், கச்சிதத்தை நோக்கி மீண்டும் மீண்டும் மெனக்கெடுதல் ஆகியவற்றால், படம் நன்றாக இருந்தும் அதிகமாகும் தயாரிப்புச் செலவுகளால், வணிக ரீதியாக வெற்றியடைய முடியாமல் போவதைக் காட்டிலும், குறுகிய காலத்தில் நல்ல கதைகளை சீக்கிரமாக படமெடுத்து ஒரு ஸ்பார்க் தெறிக்கவிட்டு வணிகரீதியாகவும் வெற்றிப் படமாக ஆக்குவதே இன்றைக்குத் தேவை என்று தோன்றுகிறது. இத்தகைய படங்களின் வணிக வெற்றி மட்டுமே, தொடர்ந்து இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வருவதற்கான உந்துசக்தி.

இந்த சிறு மனக்குறை கூட, வெற்றிமாறன் ஏற்கனவே நின்றிருக்கும் உயரம் காரணமாகவே. இதைத் தாண்டியும், ‘அசுரன்’ சிறந்த படம் தான். தனுஷ் இறுதிக் காட்சியில் சொல்லும், “படிப்பை மட்டும் தான் நம்மகிட்ட இருந்து புடுங்கிக்க முடியாது சிதம்பரம்” என்னும் வசனம் இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே கருதுகிறேன். சமூக அடுக்கில் கீழே உள்ளவன், படித்து வந்தாலும் அந்தப் படிப்பு பயனற்றுப் போகிறது எனும் போது, அந்த வசனம் காலாவதியான ஒன்று என்ற கருத்தை இணையத்தில் பார்த்தேன். பாதாளத்தில் கிடக்கிறவன் கல்வி என்ற ஒற்றைக் கொம்பைப் பிடித்துத் தான் மேலேறி வர வேண்டியிருக்கிறது. இதற்கு முன் கல்வியின் மூலம் மேலேறி வந்தவர்களுக்கு அதன் போதாமைகள் தெரியலாம். ஆனால் இன்னும் கீழே கிடப்பவனுக்கு அதுதான் ஒற்றை வழி எனும் போது, அது குறித்து அவநம்பிக்கைகளை விதைக்கலாகாது. எனவே அசுரன் சொல்லும் “படிச்சு அதிகாரத்திற்கு வா சிதம்பரம். வந்து உனக்கு செஞ்ச கொடுமைய நீ யாருக்கும் செய்ய நினைக்காதே!” என்னும் செய்தி இன்றைக்கும் முக்கியமானது தான். 


******

Friday, October 27, 2017

யாரை எதிர்க்க வேண்டும்?

நம்மை "அவுட் ஆஃப் பாக்ஸ்" யோசிக்க விடாமல், நம் எதிர்ப்பையோ ஆதரவையோ யாருக்குத் தரவேண்டும் என்று எதிர் தரப்பே நமக்கும் சேர்த்து மடைவெட்டி விடுவது தானே ராஜதந்திரம் (உடைச்சு சொல்லணும்னா, பார்ப்பனீயம்). திராவிட இயக்க வரலாற்றை எழுத வேண்டிய அத்தாரிட்டி, "தி இந்து" தான் என்று திமுகவினர் வாயாலேயே சொல்ல வைப்பதும், தமிழ் இன உணர்வாளர் "விஜய்" என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒரே குரலில் சொல்ல வைப்பதும் கூட எதிர்தரப்பு மாஸ்டர் மைண்ட்களின் எண்ணங்களாக இருக்கலாம். அதற்காகவே சில்லுண்டிகளை வைத்து, பலவீனமான அல்லது உப்புக்குப்ப்பெறாத கருத்துக்களைப் பேச வைப்பது. அதில் கடுப்பாகும் எந்த நடுநிலையாளரும் தன்னையும் அறியாமல் அவர்களை எதிர்க்கிறேன் என்ற பெயரில் தகுதியில்லாதவர்களுக்கு கம்பு சுற்றத் துவங்கிவிடுகிறார்கள்.
"பேரியக்கத்தின் அஸ்தமனம்" எழுதிய பத்திரிக்கையின் "திராவிட இயக்க வரலாற்றிற்காக" அதன்பக்கம் நின்று பேச திராவிட அபிமானிகளைத் தூண்டியது எது? தீவிர வலதுசாரிகளின் சல்லி வேர்களை அதற்கு எதிராய் லேசாய் சலம்ப வைத்தது தானே. அதே போல் தான், அன்னா ஹசாரேவின் கூட்டத்தில் முதல் ஆளாய்ப் போய் நின்றவர், பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன் "மரியாதை நிமித்தம்" சந்தித்துப் பேசியவர், ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு என்ற இரண்டு வார்த்தைகளை உச்சரித்த மாத்திரத்தில், அதுவும் ஒரு திரைப்பட காட்சியில் கூறியதற்காக, சில அல்லக்கைகள் எழுதி வைத்ததை ஒப்பிப்பதைப் போல, படம் வந்த முதல் நாளே எதிர்க்கிறார்கள், அது பொதுவானவர்களுக்கும் எரிச்சலூட்டுகிறது, ஆகவே அவர்கள் நடிகரின் பக்கமிருந்து பேசத் துவங்கிவிடுகின்றனர்.
இந்த நாடகத்தின் அடுத்த காட்சி, கொஞ்ச நாள் கழித்து நடிகரும், ஆளும் கட்சியின் தேசியத் தலைவரும் கைகொடுத்து, கட்டிப் பிடித்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதாக இருக்கலாம். அப்போதும் நம்மையும் அறியாமல் நாம் எதிராளியின் விருப்பப்படி, வேறு யாருக்காகவாவது கம்பு சுற்றிக் கொண்டிருப்போம்.
******

Friday, October 7, 2016

”ஜோக்கர்” – அதிகாரத்திற்கு எதிரான கோமாளி முகமூடி / பாலகுமார் ( மதுரை )

“Every nation gets the government it deserves.”
-    Joseph de Maistre


விளிம்பு நிலையிலிருக்கும் ஒரு சாதாரண குடிமகன், அதிகார வர்க்கத்தின் வருகைக்காக விரிக்கப்படும் சிவப்புக் கம்பளத்தின் அடியில் புழுவாக நசுக்கப்படுகிறான். அதன் வலி பொறுக்க மாட்டாமல், மனம் பேதலித்து தன்னையே அதிகாரத்தின் தலைமை பீடமாக உருவகித்துக் கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறான், ஆட்சி அதிகாரமும் அரசும் தனக்குக் கீழே என்ற கற்பிதத்தில் உலவத் துவங்குகிறான். அவன் செய்யும் கோமாளித்தனங்களுக்கான அரச, அதிகார அமைப்பின் எதிர்வினை தான் “ஜோக்கர்”. “வட்டியும் முதலும்”, “குக்கூ” என மக்களின்  இயக்குநர் ராஜூ முருகனின் இரண்டாவது படம்.

சமபலம் கொண்ட இரண்டு நபர்களுக்குள்ளான பகை ஆக்ரோசமான சண்டையாக மாறும். பலம் பொருந்திய ஒருவனுடன் மோதும் பலவீனமானவனோ, அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் இயலாமையை வெளிப்படுத்துவான். தன்னை விட அசுர பலம் கொண்ட மிகப்பெரிய அதிகார அமைப்புடன் மோதும் சாமான்யன் தன்னை கோமாளியாக்கிக் கொண்டு தான் தன் கோபத்தைக் காட்டுவான், தனது கோமாளித்தனங்களின் மூலமே அதிகாரத்தை பதட்டமடையச் செய்வான்.

அந்த வகையில் தனது ஆற்றாமையை, மன்னர் மன்னன் என்னும் சமான்யன் தன்னை “மக்கள் ஜனாதிபதியாக” நினைத்துக் கொண்டு, தனக்குத்தானே சட்டங்கள் இயற்றிக் கொண்டு, அரசும் அதிகாரமும் தனக்குக் கீழே இருப்பதாக நம்புகிறான். அது, அவன் சத்துக்கான எதிர்வினை. ஆனால், இடதுசாரி சிந்தனை கொண்டு, மக்களுக்காக தனி மனிதனாக போராடக்கூடிய பொன்னூஞ்சலும், குடியால் கணவனை இழந்து நிற்கும் இசையும் உண்மையான போராளிகள். அவர்கள் ஏன் “மக்கள் ஜனாதிபதி”யின் உதவியாளர்களாக சுருங்கிப் போனார்கள் என்பது விளங்கவில்லை. அது இயக்குநர் தான் சொல்ல விரும்பிய கருத்தை தானே பகடி செய்து கொள்வது போலத் தான் தோன்றுகிறது.

நுகர்வுக் கலாச்சாரம், சுயநலம், உலகமயமாக்கல் என்ற எல்லா மாயைகளுக்குப் பின்னும் இன்றும் வீதியில் இறங்கிப் போராடக்கூடிய கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு (ஓட்டு அரசியலில் அது பிரதிபலிக்கவில்லை என்றாலும், கம்யூனிஸ்ட் தொண்டன் என்றால் காசுக்கு ஆசைப்பட மாட்டான் என்று) பொதுமக்கள் மத்தியில் ஓரளவு மரியாதை இருக்கிறதென்றால் அது கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் இயக்கக் கொள்கைகளின் மீது கொண்டிருக்கக் கூடிய சமரசமற்ற பற்றும், அமைப்பு ரீதியாக ஏற்படுத்தப் பட்டுள்ள ஒழுங்குமுறையுமே காரணம். அத்தகைய போராட்டங்களுக்கு வலுசேர்க்கக்கூடிய காட்சிகளை அமைத்தால் “க்ளிஷே” ஆகிவிடும் என்ற இயக்குநர் நினைத்தாரோ என்னவோ, “ஜோக்கர்” தலைமையேற்று நடத்தும் கவன ஈர்ப்பு கலை நிகழ்ச்சிகளாய் அமைத்து பார்வையாளர்களை வெறும் சிரிப்போடு நகர்ந்து போகச் செய்திருக்கிறார்.

ஆரம்ப காட்சிகளில் எங்கெல்லாம் மக்கள் ஜனாதிபதி சென்று உத்தரவு இடுகிறாரோ அங்கே அவரை சமாதானம் செய்து தள்ளிக்கொண்டு செல்ல ஒரு கடைநிலை ஊழியர் வருகிறார், அவ்வளவு தான். அதிகாரத்தில் இருப்பவர், மக்கள் ஜனாதிபதியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அது தான் நிதர்சனம். ஆனால் சமூக வலைதளங்கள் முழுவதிலும் அவருக்கு ஆதரவு பொங்கி வழிவது போலவும், அதனால் புரட்சி வெடிக்கக் காத்திருப்பது போலவும் காட்சிப்படுத்தியிருப்பது, இணையத்தில் இயங்கும் ஐயாயிரத்து சொச்சம் பேர் தனது படத்தை ஓட்டித் தள்ளிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக அவர்களையும் தன் பக்கம் கூட்டு சேர்த்துக் கொள்வதற்காக, இணைக்கப்பட்ட காட்சிகள் போலவே தான் தோன்றியது.

ஆனால், நீதித்துறையின் முன் காவல்துறை அடிபணிந்து நிற்பதையும், அந்த கோபத்தை எல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காட்டும் வன்மத்தையும் உண்மையாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

அரசின் கடைநிலை ஊழியர் முதல், உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் என சகலரையும் ஊழல் பெருச்சாளிகளாக்கி, கடைக்கோடி சாமான்யன் மட்டும் தூய்மைவாதியாக வாழ்கிறான் என்பது என்ன “இஸம்” என்று தெரியவில்லை. நிஜ உலகில் கழிப்பறைகள் கட்டியதாக கணக்குக் காட்டி, புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வைபவங்களும் நடக்கத்தான் நடக்கின்றன. ஆனால் அங்கே சாமான்யன் வெறும் கோப்பையை மட்டும் பெற்றுக் கொண்டு செல்வதில்லை, அவனது பங்காக ஐநூறோ, ஆயிரமோ பெற்றுக் கொண்டு அந்த ஊழலில் தன்னையும் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்வது தான் வாடிக்கையாக இருக்கிறது. சமூகத்தை பிரதியெடுக்கும் கலை எல்லா திசைகளிலும் ஒரே துலாக்கோலை பயன்படுத்த வேண்டும் தானே.

படத்தின் பலம், கூர்மையான மற்றும் துணிவான வசனங்கள். ஹெலிகாப்டரை வணங்குவது முதல் அரை மணி நேர உண்ணாவிரதம் வரை சமகால அரசியலை நேரடியாகவே பகடி செய்யும் வசனங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் இறுதிக் காட்சியில், பொன்னூஞ்சல் திரையைப் பார்த்து பேசுவதெல்லாம் சொஞ்சம் மேடை நாடக பாணியில் இருப்பது போலத் தோன்றியது. “நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா !” என்ற வாசகங்களுடன் படம் முடிகிறது.

படம் முடிந்து வெளிவரும் போது, குற்றவுணர்வா அல்லது போதாமையா அல்லது எரிச்சலா என்று வகைப்படுத்த முடியாத ஒரு பாரம் அழுத்திக் கொண்டிருந்தது. இயக்குநர் சொல்ல விரும்பிய செய்தி என்னவாயிருக்கும் என்ற குழப்பத்துடனே திரையரங்கை விட்டு வெளியேறினேன். பலருக்கும் இதே போன்ற உணர்வுகள் தோன்றியதோ என்னவோ, சலசலப்புடன் வெளியேறும் கூட்டத்திலிருந்து வந்த குரல்களில், “இதை மறக்கணும்னா அடுத்து கிடாரியோ, தர்மதுரையோ பார்த்தா தான் சரியா வரும்” என்ற வார்த்தைகள் கேட்டன. இது தான், இவ்வளவு தான் இன்றைய சராசரி ரசிகனின் மனநிலை என்பதாகப் புரிந்து கொண்டு வந்தேன்.

***
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=9015

Thursday, May 21, 2015

வெல்டன் மிஸஸ். வசந்தி தமிழ்ச்செல்வன் - 36 வயதினிலே


திருமணத்திற்கு முன் தனித்துவமாக சிறந்து விளங்கும் ஒரு பெண், திருமணத்திற்குப் பின் குடும்பம், குழந்தை என்று சிறு வட்டத்திற்குள் அமிழ்ந்து, தன் சுயத்தை இழந்து விட்டு வாழ்கிறாள். பின் தனது சுயமரியாதைக்கு இழுக்கு வரும் பொழுது எவ்வாறு அவள் தன்னை மீண்டும் கண்டெக்கிறாள் என்பதை பிரச்சார தொனியோ, ஒரே பாடலில் உலகப்புகழ் அடைவது போன்ற குருட்டு அதிர்ஷ்ட நிகழ்வுகளோ இன்றி இயல்பாக சொல்கிறது வசந்தியின் வாழ்க்கை, அல்லது “36 வயதினிலே” என்ற திரைப்படம்

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த சமயத்தில், அந்த நட்சத்திர அந்தஸ்த்தை சட்டென உதறிவிட்டு குடும்பத்தலைவியாக மாறிய ஜோதிகா, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையினூடே நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வந்திருக்கும் திரைப்படம் “36 வயதினிலே”. வேலைக்குச் செல்லும் மத்தியதரவர்க்கத்து பெண்களின் பிரதிநிதியாய் ஜொலித்திருக்கிறார் ஜோ. பெண்களை மையப்படுத்தி அரிதாக வரும் சில படங்களில் கூட குடும்பத்திலும் சமூகத்திலும் இருக்கும் அனைவரும் அவர்களை கொடுமைப்படுத்துவது போலவும், அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு தியாகத்திருவுருவாய் இருக்கும் நாயகி, ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து சீறுப்பாய்வது போன்ற மிகையுணர்ச்சிப் பிரதிபலிப்புகளையே பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் “36 வயதினிலே”வில் இயல்பான காட்சியமைப்புகளோடு வசந்தியின் வெற்றிக்கு உடன் இருப்பவர்களும் துணை நிற்பது போன்ற வடிவமைப்பு, படத்திற்கு உயிரோட்டத்தையும், நாம் அன்றாடம் நமது பக்கத்து வீடுகளில், நமது சுமூகத்தில் நடப்பது போன்ற உணர்வையும் தந்திருக்கிறது.

கணவன், குழந்தை, குடும்பம் இதைத்தவிர எதைப்பற்றியும் யோசிக்காமல் கண்களையும், மனதையும் கட்டி வைத்திருந்தவளுக்கு தன்னை விட்டுவிட்டு தனது கணவனும், மகளும் மட்டும் வெளிநாடு சென்று வாழ முடிவெடுக்கும் போது தான் தோன்றுகிறது... “இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் நான் இவர்களுக்கு என்னவாக இருந்திருக்கிறேன்? கணவனுக்கு மனைவியாக, ஒரே மகளுக்குத் தாயாக நான் இனி இவர்களுக்குத் தேவையே இல்லையா ? அப்படியென்றால் நான் இத்தனை நாள் இவர்களுக்காக வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் தான் என்ன ?” இந்த கேள்விகள் தாம் அவள் தன்னை தனக்குள்ளிருந்து மீட்டெடுப்பதற்க்கான விடைகளைத் தேடச் சொல்கின்றன. அதற்கு உறுதுணையாக, காபி போட்டுக் கொண்டு வந்து தரும் மாமனாராகவும், அவளை நம்பி தன் வீட்டு கல்யாணத்திற்கான காய்கறிகளை ஆர்டர் செய்யும் நகைக்கடைக்காரராகவும், அலுவல சிக்கல்களில் அவள் பக்கமிருந்து உற்சாகமூட்டி உதவி செய்யும் உடன் பணிபுரியும் அலுவலராகவும், மொட்டை மாடித்தோட்டம் என்ற அவளது ஐடியாவிற்கு துணை நிற்கும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களாகவும்,  சக மனிதர்கள் எப்போதும் அவள் உடனிருக்கிறார்கள். அவர்களின் துணைகொண்டே அவள் சாதனை புரிகிறாள். 

சில மாதங்களுக்கு முன், நானும் எனது மனைவியும் இன்றைய சமூக சூழ்நிலையில் பெண்கள் வேலைக்கு செல்வது அவர்களது குழந்தை வளர்ப்பில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது என் மனைவி அவர் பணிபுரிந்த கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவிற்கு மாணவர்கள் பயிற்றுவிக்கும் பொறுப்பில் இருந்தார். அப்போது மாணவர்கள், தங்களை சுய அறிமுகம் செய்து கொள்ளும் போது பெரும்பான்மையினர் தங்கள் தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்கின்றனர் என்று பெருமை பொங்க கூறியிருக்கின்றனர். அந்த மாணவர்களில் என் மனைவி ட்யூட்டராக இருக்கும் பிள்ளைகளும் அடக்கம். அதில் மூன்று மாணவ, மாணவிகளின் அம்மா வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தலைவியாகத் தான் இருந்தனர் என்பது என் மனைவிக்கு நன்றாகத் தெரியும். எனவே பிறகு அவர்களை தனித்தனியாக அழைத்து ஏன் தங்கள் அம்மா வேலைக்கு செல்வதாகக் கூறினர் என்று கேட்டால், சொல்லி வைத்தது போல எல்லோரும் ஒரே பதிலைத் தான் கூறியிருக்கின்றனர் “ எல்லா ஸ்டூடன்ஸ்க்கும் முன்னாடி அம்மா வீட்டுல தான் இருக்காங்கன்னு சொல்றதுக்கு அவமானமா இருந்துச்சு மேம், அம்மா வொர்க் பண்றாங்கன்னு சொன்னாத்தான் கௌரவம்” என்பது தான் அவர்களின் பதில். இந்த மாணவர்களில் யாரேனும் ஒருவருடைய தாய், திருமணத்திற்குப் பிறகு தனது குழந்தைக்காக வேலையை விட்டவராகவும் இருக்கக்கூடும். அவர் தனது மகனின்/மகளின் இந்த பதிலைக் கேட்க நேர்ந்தால் அவரது மனநிலை என்னவாக இருக்கும் ?.  சென்ற தலைமுறை குழந்தைகளுக்கு தாங்கள் பள்ளியிலிருந்து வரும் போது அம்மா வீட்டில் இருந்து தங்களை வரவேற்க வேண்டும். தங்கள் கூடவே இருந்து தங்களை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் இன்றைய குழந்தைகளின் எண்ணவோட்டம் எவ்வளவு மாறியிருக்கிறது பாருங்கள். அவர்களுக்கு பள்ளிகளில், கல்லூரிகளில் தங்கள் தாய் ஒரு ”சாதாரண” குடும்பத்தலைவி என்று சொல்லிக்கொள்ள அவமானமாக இருக்கிறது. தங்கள் தாய் இந்த துறையில், இந்த வேலையில் இருக்கிறார் என்று சொல்லிக்கொள்வதில் தான் அவர்களுக்க்குப் பெருமை. 

இந்த தலைமுறையில் பிரதிபலிப்பாய் தான் வசந்தியின் மகளும் இருக்கிறாள். அவளுக்குப் பெரிய பெரிய கனவுகள் இருக்கிறது. தன் தாய் தன் அளவு ஈடுகொடுத்து வரமுடியாதவளாய் இருக்கிறாள் என்று அவள் மீது ஆற்றாமை இருக்கிறது. அது சமயங்களில் கோபமாய், உதாசீனமாய் வெளிப்படுகிறது. ஒரு சமயம் வசந்தி “உனக்காகத் தானேடீ நான் என் கனவுகளையெல்லாம் விட்டுட்டு இருக்கேன்” என்று கூறுவதற்கு “உன் சோம்பேறித்தனத்திற்கு என்னை காரணம் சொல்லாதே” என்று அவளால் உடனே பதில் சொல்லி வசந்தியை நிலைகுலைய வைக்கவும் முடிகிறது. அதே போல இக்கட்டான சூழ்நிலையில் வசந்தி தங்களோடு வெளிநாட்டில் வந்து தங்கிவிட வேண்டும் என்று அவளது கணவன் வற்புறுத்தும் போது தங்கள் மகளையே துருப்புச்சீட்டாக உபயோகிக்கிறான். ஆனால் வசந்தி சொல்லும் பதிலைக் கேட்டு அவள் மகளால் சமாதானம் ஆகவும் முடிகிறது. பின் தன் தாய் சாதித்து விட்டதை பெருமை பொங்க உலகத்துக்கு தெரிவிக்கவும் முடிகிறது.

வசந்தியின் கணவனான தமிழ்ச்செல்வன், ஒட்டுமொத்த இந்திய நடுத்தரவர்க்கத்து ஆண்களின் பிரதிநிதி. எப்படியாவது முட்டிமோதி அன்றாட பஞ்சப்பாட்டுகளின் கெடுபிடிகளில் இருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற வெறி அவனிடம் இருக்கிறது. அவனது கனவுகள் நொறுங்கும் வேளையில், பகடைக்காயாக மனைவியை உருட்டுகிறான். தனது தோல்விகளுக்கு அவளைக் காரணமாக்குகிறான். மனைவியை சுதந்திரமாக சிந்திக்கவும் விடாமல், தான் நினைப்பதை அவளை செய்ய வைத்து விட்டு பின் அவள் எதற்கெடுத்தாலும் தன்னை எதிர்பார்த்து நிற்கும் போது அதற்காகவும் சினம் கொள்கிறான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மத்தியவர்க்கத்து கணவன்மார்கள் எல்லோருக்குள்ளும் அவனது சாயல் இருப்பதைக் காணலாம்.  வழமையாக, பெண்களை மையப்படுத்தும் திரைப்படங்களில் நாயகனின் கதாப்பாத்திரம் தொய்வாகவோ அல்லது கொடூரமாகவோ சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் அவ்வாறு இல்லாமல், தன் மகளைத் தன் பக்கத்து நியாயங்களை நம்ப வைப்பவனாக, அவளது நல்ல எதிர்காலத்திற்காக தன்னுடன் வெளிநாட்டிற்கு அழைத்து செல்பவனாக நல்ல தந்தையாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. தான் தவறு செய்யும் இடங்களில் கண்களைத் தாழ்த்தி குற்றயுணர்ச்சியோடு அதே சமயம் மனைவியின் சொற்களை ஏற்காமல் நிலைகுலையும் இடங்களில் இரகுமான் நன்றாக நடித்திருக்கிறார். நாயகன் கதாப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வும் கூட.

சமூக ஊடகங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் என்னென்ன சலனங்களை, பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது இத்திரைப்படம். வழக்கமாக, ஃபேஸ்புக்கில் தான் திரைப்படங்களை கிண்டல் செய்வார்கள். அதனால் இயக்குநருக்கு ஃபேஸ்புக் பயனர்கள் மீது இருக்கும் கோபத்தையும் லேசாக காட்டியிருக்கிறார். மொத்ததில், தன் தனித்திறமைகளை மறந்து வீட்டு வாழ்க்கைக்குள் முடங்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான திருமதிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும், மனம் நிறைந்த உற்சாகம் கொடுக்கும் வகையிலும் 36 வயதினிலே வென்றிருக்கிறார் மிஸஸ். வசந்தி தமிழ்ச்செல்வன். 

******

Monday, April 7, 2014

"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி !


”சிவகார்த்திகேயன்” - இன்று தமிழகம் முழுதும் பேசப்படக்கூடிய ஒரு பெயராக மாறியிருக்கிறார். இது அவரது தொடர் உழைப்புக்கும், கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தும் சாமர்த்தியத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி. அவரைப்பற்றி, ”நமது பக்கத்து வீட்டுப் பையன் போல, நாம் பார்க்கும் போதே விறுவிறுவென வெற்றிப்படிகளை கடந்து கொண்டிருக்கிறான்” என்று பெருமிதம் கொள்வோர் ஒரு புறமென்றால், “நம்ம மாதிரி சாதாரணமா சுத்திட்டு இருந்த பய, அவனுக்கு வந்த வாழ்வா” என பொறாமை கொள்வோரும் மறுபுறம் உண்டு. போதாக்குறைக்கு இந்த விஜய் டீவி செய்த / செய்யும் அலப்பறைகள், ஓவர்-பில்டப்புகள் வேறு. அதே ரூட்டில் விகடன் தொடங்கி பெரும்பாலான பத்திரிக்கைகள், டீவி, இணைய ஊடகங்கள் அனைத்தும் ஏகத்துக்கும் அவரை “அடுத்த சூப்பர் ஸ்டார்” ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருக்கின்றன. ”இதெல்லாம் மாய பிம்பங்கள். ஒரு படம் ஊத்திக்கொண்டால், இந்த காக்கா கூட்டம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்” என்று சிவகார்த்திகேயனுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ம்ம்ம்... நாம் விரும்பி என்ன செய்ய !

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு வந்திருக்கும், சிவகார்த்திகேயன் நடித்த “மான் கராத்தே” படத்தை சென்ற வாரயிறுதியில் பார்த்தோம். ”இது அப்படி இருந்திருக்கலாம், அது இப்படியிருந்திருக்கலாம்” என்று சில பல குறைகள் தெரிந்தாலும் அதை நான் சொல்லி யாரும் கேட்கப்போவதில்லை என்ற கான்ஃபிடன்ஸ் ஹெவியாக இருப்பதால், ”படம் அவ்வளவு மோசமில்லை” என்ற ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். ஆனால் “உலகத்திரைப்பட வரலாற்றில் இல்லாத சில பல ஸ்பெஷல்கள் இந்தப்படத்தில் ஆங்காங்கே தென்பட்டன. அவை மட்டும் இங்கே...

வொய் “மான் கராத்தே” பிகம்ஸ் ய மஸ்ட் ஸீ மூவி, லெட்ஸ் ஸீ தீஸ் பாய்ண்ட்ஸ்....

ஹீரோ அறிமுக பாட்டில் சிவகார்த்திகேயன் வேகமா ஓடி வர்றதப்பார்த்து “ஆஹா அடுத்த தளபதி வந்துட்டாரா, போச்சுடா” என்று கிர்ர்ராகி உட்கார்ந்துட்டேன். நல்லவேளை பாட்டு முடிந்தவுடன் நம்ம கண்ணை குத்தி “பஞ்ச் டயலாக்” எல்லாம் பேசாமல், கொஞ்சம் பீட்டரோடு நிறுத்திக் கொண்டார்.

குத்து பாட்டில் அனிருத்துக்கு கொடுத்த இண்ட்ரோவிலே ஆடிப்போயிருக்கும் ஆடியன்ஸுக்கு மேலும் ஒரு இடியாய் ஏ.ஆர்.முருகதாஸைக் காட்டினாங்க. அவர் (”அவர்”னா நம்ம) குட் டைம், தலைவர் டான்ஸ் எதும் ஆடி மரண பீதி ஏற்படுத்தாம ஜெண்டிலா நடந்து கேமராவைத் தாண்டி சென்றுவிட்டார்

டைரக்டர் சிவகார்த்திகேயனுக்கு “புலிக்குட்டி தம்பி பூனைக்குட்டியோட கீரிப்புள்ள ஹேர்ஸ்டைல்” தான் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது “கரையான் புத்துக்குள்ள போன கரப்பான் பூச்சி” அளவுக்கு தான் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. சிவா தான் மாஸ் ஹீரோ ஆகிட்டாப்ளேல, அதை வைத்தே சமாளித்து விட்டார்.

காலங்காலமாய் தமிழ் சினிமாவில் தோழிகள் கேரக்டர் என்றாலே “சுமார் மூஞ்சி குமாரி”களேயே பார்த்த வந்த ரசிகர்கள், இதில் “நச்” காஸ்டியூமில் ரெண்டு “ரிச்” கேர்ள்ஸை பார்த்து பரம திருப்தி அடைவதாக உளவுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன

சிவா அப்படியே வில்லன் கால்ல விழுந்து,  மண்ணுல புரள்றாப்புல ஒரு அழுகாச்சி சீன் வச்சா போதும், லேடீஸ் சைடு செம செண்டிமெண்ட் ஃபீலிங்கா இருக்கும்னு  ஐடியா கொடுத்த உதவி இயக்குநர் யாரா இருந்தாலும் அவருக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.. “நீயெல்லாம் நல்ல வருவ, தம்பி !”

”குங்பூ பாண்டா” படத்தோட தழுவல் தான் இந்தப்படம்னு அரசல் புரசலா வதந்தி வந்ததே என்று நண்பரிடம் கேட்டேன். அவர் ”இந்தப் படத்துல பாக்ஸிங் தானே இருக்குது, குங்பூ இல்லேல, பிறகெப்படி இது அந்தப்படத்தோட காப்பி ஆகும்”னு விஞ்ஞானப்பூர்வமா பதில் சொன்னார். நான் அப்படியே ஷாக் ஆகி ஆமாம்னு ஒதுங்கிட்டேன்

குமரன் S/o மகாலட்சுமி படத்துல ஐஸ்வர்யா செய்த கேரக்டரை இந்த படத்துல சிவாவோட நண்பரா வர்றவர் செய்திருக்கிறார் போல. சிவா வில்லனை அடிக்கும் போது அவர் காட்டும் ரியாக்‌ஷன் எல்லாம் “தாருமாறு, தக்காளி சோறு”

அப்புறம், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... படத்துல பி.எஸ்.என்.எல். லோகோவைக் காட்டும் போதே தெரிஞ்சுருச்சு. இது சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான்னு. (இது சைடு கேப்புல சேவல் வெட்டுற சின்ன விளம்பரம், கண்டுக்காதீங்க!)

அவ்ளோதான்பா !!!

******

Wednesday, January 15, 2014

”வீரம்” - செம மாஸ்

”இந்தப்படத்தை இவரைத் தவிர வேறு யார் நடித்தாலும் விளங்காது” என்று வழக்கமாக ரஜினி படங்களுக்குத் தான் சொல்லி வந்திருக்கோம். போகிறபோக்கைப் பார்த்தால் அஜித் படங்களுக்கும் அப்படியொரு உயர்வு கிடைத்துவிடும் போல. “வீரம்” முழுதும் செம மாஸ். அஜித் எப்பவும் போல படம் முழுவதும் ஸ்லோ மோசனில் நடந்து தான் வருகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அறிமுகக் காட்சி போல விசிலும், கைத்தட்டலும், தொண்டை கிழிய கத்துவதுமாக தியேட்டர் முழுவதும் கொண்டாட்டத்தில் திளைக்கிறது.

படம் முடிந்து வெளியே வந்த பிறகு யோசித்தால், படத்தில் சொல்லிக் கொள்ளும் படியாக எதுவுமே இருந்தமாதிரி நினைவில்லை. அதுவும் இயக்குநர் பழைய ”சிறுத்தை” பாசத்தில் தமன்னாவை அஜித்துக்கு நாயகியாய் தேர்வு செய்தது எல்லாம் மனிதத்தன்மையற்ற செயல். இயக்குநருக்கு தயாரிப்பாளர் செலவில் வெளிநாடு செல்ல ஆசையிருந்தால், லொகேசன் பார்க்கப்போகிறேன் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு எழவோ சொல்லி விட்டோ சென்று இருக்கலாம். “ரெண்டு டூயட் ஃபாரின்ல ஸூட் பண்றோம் சார்” என்று சொல்லி படத்தோட ஃப்ளோவையே கெடுத்து இருக்கிறார். படத்துக்கு கொஞ்சமும் ஒட்டாமல், நாயக நாயகி இணையும் பொருத்தமில்லாமல் தனியாக துருத்திக் கொண்டிருக்கின்றன இரண்டு டூயட் பாடல்களும். 

படத்துக்கான இசையும் அது போல தான். சிறு நகர பின்னனி கதைக்கு “பீட்டர்” விடும் டி.எஸ்.பி இல்லாமல் இமான் மாதிரி லோக்கலாய் இறங்கி அடிக்கும் நேடிவிட்டி இருந்திருந்தால் இன்னும் கூட மாஸ் கூடியிருக்கும். அப்புறம், அஹிம்சாவாதியாகவே வாழ்ந்து வரும் நாசர், தன் குடும்பத்துக்காக அஜித் வில்லன்களை கொன்று குவிப்பதை நேருக்கு நேர் பார்த்தாலும், அது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாதது போல, நாமும் அலட்டிக் கொள்ளக் கூடாது. ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி,  படம் பார்க்கும் போது அஜித்தின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மட்டும் தான் நம்மை ஆக்கிரமிக்கிறது. மற்ற எதுவும் தெரியவில்லை. அப்படியும் தொய்வு விழும் சில இடங்களில் கூட முந்திய மாஸ் காட்சிகளின் வைப்ரேசன் நீடிப்பதால் படம் முடியும் வரையுமே ஹை எக்ஸைட்மெண்ட் வெலவில் உற்சாகமாக அம்ர்ந்து ரசிக்க முடிகிறது.

நான்கு சில்லரைப் பசங்களுக்கு சரிக்குசமமாக நடி(ட)க்க விட்டு அஜித்தை தரம் தாழ்த்திய “மங்காத்தா”வையே ஹிட் அடிக்க வைத்த ரசிகர்கள், பெரியண்ணனாய் செம கெத்து காட்டும் “வீரத்தையா” வீழ்த்துவார்கள். நெவர்ர்ர்ர்ர். அதுவும் வில்லனுக்கு எதிரா எண்ட்ரி கொடுக்குற மாஸ் ஸீன் வித் மழை பேக்ரவுண்ட், இண்டர்வல் ப்ளாக்ல “ரிஸ்க் எடுத்து டூப் போடாமல் சண்டையிட்ட” என்று பக்காவாய் விளம்பரப்படுத்திய ஒரு ட்ரெய்ன் ஃபைட், நேட்டிவிட்டிக்காக ஒரு மாட்டு வண்டி சீன், ஒரு திருவிழா டான்ஸ், கிளைமாக்ஸில் ஒரு சென்டிமெண்ட் ஃபைட்,  இன்னும் சில பல மசாலாக்கள் என்று கலந்துகட்டி தயாரித்து இருக்கும் பொங்கல் விருந்து அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சாதாரண பார்வையாளர்களுக்குமே நல்ல பொழுது போக்காக இருக்கும்.

”நம்ம கூட இருக்கவங்களை நாம பார்த்துக்கிட்டா, நம்ம மேல இருக்கவன் நம்ம பார்த்துப்பான்” - இது படத்தின் பிரதான பன்ச். அஜித்தும் இந்த ஃபார்முலா நன்றாகவே தெரிந்திருக்கிறது. ”என்ன நான் சொல்றது !”

Sunday, June 16, 2013

நீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு!

இந்த வாரம் ரெண்டு படம் போட்டியில் இருந்தது. சித்தார்த்தா ஷிவாவா என்று யோசிச்சாக்கூட ஷிவா தான் லீடிங்ல இருந்தார். ரெண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் மொக்கையா இருக்குனு எக்ஸ்பர்ட் ஒபீனியனும், எக்ஸிட் போல் நிலவரமும் சொல்லுச்சு. சரி, படம் பிடிக்கலைனாலும் தில்லு முல்லு போன்ற க்ளாசிக்கை குதறிட்டாங்கன்னு ஃபீல் பண்ண வேண்டாமேனு “தீயா வேலை செய்யனும் குமாரு” படத்துக்கு கிளம்பினோம்.

படம் முழுவதுமே ஏகப்பட்ட நாஸ்டால்ஜியா. பத்து பதினைந்து வருடம் ஆனப்பிறகு கூட இன்னும் சித்தார்த் ”பாய்ஸ்”ல பார்த்த மாதிரி இருக்கார். அவ்வளவு சார்மிங்கானு கேக்காதீங்க. ஒரு ”ஐட்டத்தை” எதிர்கொள்ள அப்போ எப்படி பயந்தாரோ அதே மாதிரி தான் இப்பவும் பயப்படுறார். இண்டஸ்ட்ரில இத்தனை வருசம் என்னப்பா எக்ஸ்பீரியன்ஸ் எடுத்தீங்க. அப்புறம் சுந்தர்.சி. தன் கம்பெனி ஆர்டிஸ்ட்களுக்கெல்லாம் கொஞ்சம் ரிச் காஸ்ட்யூம் போட்டுப் பார்க்கனும் ஆசைப்பட்டார் போல, “கலகலப்பு” குரூப்ஸை அப்படியே மொத்தமாய் ஐ.டி. என்வராய்ன்மெண்ட்ல இறக்கி விட்டிருக்கார். அஞ்சலி கொஞ்ச நாள் காணாமல் போயிருந்ததால அவர் மட்டும் தான் தலையைக் காட்டலை. 

படத்துல சந்தானத்துக்குத் தான் செம மாஸ். அவர் இண்ட்ரோல என்னா க்ளாப்ஸ் அள்ளுது...மனுசன் பீக் ஃபார்ம்ல இருக்கார். அடிச்சு தூள் பண்றார். என்ன,  “கிரி”ல வடிவேலு வச்சிருந்த பேக்கரியை இப்ப இவருக்கு தான் எழுதி கொடுத்துட்டு போயிருக்கார் போல, நல்லா மெய்ண்டென் பண்ணியிருக்கார். பாஸ்கி எல்லாம் வாயைத் திறக்காமல் நடித்திருப்பதே மிகப்பெரிய ஆறுதல். அதுக்கு பதில் ஆர்.ஜே பாலாஜி கிடைச்ச கேப்ல எல்லாம், கிடா வெட்ற அளவுக்கு இல்லேனாலும் கிச்சடி கிண்டற அளவுக்காவது பெர்பார்ம் செய்திருக்கிறார். ஆனாலும் ஆனானப்பட்ட சந்தானத்துக்கே பல படங்களுக்கப்பறம் தன் ஜோடி கிடைச்சது, இவர் வந்த புதுசுலயே ஃபிகர் உஷார் பன்ணீடுறார், அதுவும் ஹீரோவின் தங்கையை.. ம்ம்ம் ஃபேட் ஆப் த முண்டக்கண் ஃபிகர் ஆப் கான்ஸ்டிட்யூசன் ஆப் இந்தியா

ப்ரொடக்‌ஷன் யூனிட்ல இருந்து, ”நம்ம சுந்தர் சார் படம், சொந்த பந்தத்தோட தவறாம வந்து சூட்டிங் ஸ்பாட்டை சிறப்பிக்கனும்”னு கம்பெனி ஆர்டிஸ்ட் ஒவ்வொருத்தர் வீட்டுக்கா போய் பணம் பாக்கு வச்சு சிறப்பு செஞ்சிருப்பாங்க போல, அவர்களும் குடும்பம் சகிதமாய் வந்து ஃபுல் மீல்ஸ் சாப்ட்டுட்டு திருப்தியா நடிச்சுக் கொடுத்திருக்காங்க. ஃப்ரேம்ல தூரமா அவுட்டாஃப் ஃபோகஸ்ல சும்மா என்வய்ரான்மெண்ட்டுக்கு நிக்கிற ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட நமக்குத் தெரிஞ்ச முகமாத்தான் இருக்காங்க. ஆனா இந்த மொத்த கூட்டத்துலயும் ஒரு ஜீவன் மட்டும் திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி திருதிருனு முழுச்சுட்டே இருக்கு. பொதுவா, சித்தார்த்தை பார்த்தாலே பீட்டர் பாய் மாதிரி தான் தெரியும். அவருக்கெல்லாம் இந்த “அம்மாஞ்சி” கேரக்டர் சுத்தமா செட்டாகவே இல்லை. படம் முழுதும் பொழுதுதன்னைக்கும் சந்தானம் ஓட்டு ஓட்டுனு ஒட்டிட்டு இருக்கார், இவர் என்னடான்னா “தேமே”னு நின்னு குச்சி மிட்டாய் சாப்பிடுற மாதிரி வேடிக்கை பார்க்குறார். ஐய்யயய்யே, இதுக்கு உதயநிதி பரவால்ல போலயே. வேணாம்... இப்படியே இன்னும் இரண்டு படம் ”நடிச்சா” ஃபீல்டவுட் பண்ணீடுவானுக. நீ திரும்ப தெலுங்கு சினிமாவுக்கே போய்ரு குமாரு. பாவம், ஜெயம் ரவியும், ராஜாவும் வேற சரியான படம் கிடைக்காம கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க, அவுங்களுக்காவது ஹெல்ப்பா இருக்கும்

ஜிம்முக்குப் போன சாம்பார், கணேஷ் வெங்கட்ராம் பத்தியெல்லாம் படத்துலயே போதுமான அளவு ஓட்டிட்டதால, நாம் அவரை விட்டு விடுவோம். ஆனா மனசாட்சியே இல்லாமல் அவரை பார்த்து ஜொள்ளு விடும் ஒட்டுமொத்த அலுவலகத்தையும் நினைத்தால் தான் பாவமா இருக்கு. யாராவது ஐ.டி. ஆண்ட்டி முன் வந்து “இந்தப்படத்துல எங்களின் ரசனையை கேவலப்படுத்துற மாதிரி காட்சி வச்சிருக்காங்க. இந்தப்படத்தை தடை செய்யனும்”னு வழக்கு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். முதல் பாதி முழுக்க லெவல் ஒன்னு, லெவல் இரண்டுன்னு “மருதம் க்ரூப்ஸ் ஹோம் ஸ்வீட் ஹோம்” ரேஞ்சுக்கு ப்ளேடு போட்டுட்டு இருந்த சந்தானம் இரண்டாம் பாதில தான் அடிச்சு ஆடிருக்கார். பள்ளிக்கூட ஃப்ளாஷ்பேக் அப்புறம் “வீடா இல்ல விக்ரமன் சார் படமா” டைமிங் எல்லாம் செம செம. மொத்தத்தில் ஒண்டைம் டைம்பாஸர்.

இவ்ளோ பேசுறியே குமாரு... ஹன்சிகாவைப் பத்தி மட்டும் ஒரு தப்பு சொல்ல மாட்றியே, இன்னா விஷயம்?னு யாரும் சவுண்ட் விட்றீங்களா என்ன, எனக்கு எதுவும் கேட்கவே இல்லையே !

******

Monday, June 10, 2013

வேண்டாவெறுப்பா பார்த்த குட்டிப்புலியும், ஏனோ தானோனு எழுதும் திரைப்பார்வையும்

வார இறுதி திரைப்படக்கணக்கை தீர்க்க வேண்டி சும்மா போய்ட்டு வரலாம்னு தான் போனேன். பிறகு தான் ஒரு பேனா பேப்பர் கொண்டு வரலையேன்னு ரொம்ப ஃபீலிங்கா போயிடுச்சு. கவுண்ட்டர் காமெடி கொடுக்க வாய்ப்புள்ள காட்சிகள் வரிசையா வந்துட்டே இருக்கு. ச்சே நோட்ஸ் எடுத்து வச்சா ஒரு பதிவுக்குத் தேறுமேனு ஃபீல் பண்ற அளவு போயிடுச்சுன்னா பார்த்துக்கங்க. படம் முழுக்க அவ்வளவு பன்ச்சை பிச்சுப் போட்டு வச்சிருக்காங்க. அடுத்த சூப்பர் ஸ்டார் யார், அடுத்த உலகநாயகன் யார் என்று ஆளாளாளுக்கு சண்டை போட்டுட்டு இருக்காங்க. ஆனா சந்தேகமே இல்ல சார், கன்பார்ம் சார்...  அடுத்த புரட்சி கலைஞர், சசியண்ணன் தான் சார்... என்ன பாடி லேங்குவேஜ், என்ன ரொமாண்டிக் லுக், என்ன ஆக்‌ஷன்... ப்ப்ப்ப்ப்பாஆ. அதுமட்டுமில்ல கறுப்பு கம்பளி போர்த்துன ராம்கி, தொடை தெரிய கைலி கட்டுன ராஜ்கிரண், ஸ்டைலாய் தலையை சிலுப்பும் டி.ஆர், பெத்த தாய் சேலையைப் போர்த்தி தூங்கும் ராமராஜன் இப்படி அவருக்குள் படுக்கப் போட்டிருந்த பல ரூபங்கள் இந்தப்படத்துல தான் முழிச்சிருக்கு. நீங்கலெலாம் நல்லா வரனுண்ணே!

அப்புறம், பெரிசு சிறுசெல்லாம் சிலம்பாட்டம் ஆடுனப்போ நல்லா கம்பை சுத்துனாங்கல்ல, ஒழுங்கா அதோட பந்தயத்தை முடிச்சுட்டு சசியண்ணன் குட்டியா ஒரு புலியாட்டம் போட்டுட்டு போயிருக்கலாம். படம் டைட்டிலுக்கு பொருத்தமாவாது இருந்திருக்கும். அதை விட்டுட்டு அவரும் சிலம்பாட்டம் ஆடுறேனு கம்பை சுத்தி சுத்தி வர, கேமரா கஷ்டப்பட்டு அவரை சுத்தி சுத்தி, ஒரு வழியா சிலம்பு சுத்துற மாதிரியே சமாளிக்க எடிட்டர் எவ்வளவு சிரமப்பட்டாரோ தெரியல.

ஆனா சசியண்ணே,  சுப்பிரமணியபுரத்தில் இருந்தே உங்களுக்கு இதே வேலையா போச்சு. கூட நாலஞ்சு சின்ன பசங்க கூட சேர்ந்து சுத்துனா உங்களையும் யூத்தா ஒத்துக்குவோம்னு என்னவொரு தன்னம்பிக்கை. நியாயப்படி பார்த்தா கனாகாணும் காலங்கள் பாலாவுக்கெல்லாம் நீங்க சித்தப்பா முறை வேணும். அவனுக செட்டோட சேர்ந்து சுத்துறதெல்லாம் கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவரோ ஓவர். அப்புறம், தொடர்ந்து இரண்டு படத்துல வாய்ப்பு கொடுத்தீங்கங்க்றதுக்காக அந்த லட்சுமி ஆண்ட்டி வேணுமினா உங்க ரொமாண்டிக் லுக்குக்கு மயங்கலாம், ஆனா காசு கொடுத்து படம் பார்க்க வந்த நாங்கல்லாம் என்ன பாவம் பண்ணோம், கொஞ்சம் யோசிங்க. அந்த அம்மையாரை பார்ர்கும் போதெல்லாம், மேம்பாலம் மேல நடந்து போற ஆளை  தரைப்பாலத்திலிருந்து பார்ப்பது போல எட்டி பார்க்க வேண்டி இருக்கிறது. அதுவும் அப்பு, பப்பு கோஷ்டி எல்லாம் அவரை சைட்டடிப்பது எல்லாம் ஸ்கூல் பசங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டிட்ட சாக்லேட் கேட்க லுக் விடுவது போல தான் இருக்கிறது. 

எங்கூர் லோக்கல் சேனல்ல எல்லாம் சுரேஷ் பீட்டர்ஸின் “அக்கா மக, அக்கா மக” பாட்டுக்கு மைக்கல் ஜாக்சன் ஆல்பத்தை தான் தோர்த்து வச்ச்சிருப்பாங்க. அந்த ஸ்டைல்ல சசியண்ணனை பார்த்தவுடனே நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு பார்த்தா, ஃப்ரேம்லயே குட்டிப்பசங்க பேஸ்த்தடிச்சுப் போய் பேயறைஞ்ச மாதிரி பார்த்துட்டு இருந்தாங்க. சரி தியேட்டர்ல பார்க்குற நமக்கே இப்படி இருக்கே, இதெயெல்லாம் சூட்டிங் ஸ்பாட்லயே பார்த்த அந்த சின்னப்பசங்க மனசு என்ன பாடுபட்டுருக்கும் யோசிச்சுப் பார்த்தேன்... பாவம் தான். பின்னனி இசையமைக்க தனியா எதுக்கு காசு கொடுக்கனும், பேசாம பழைய பாட்டெல்லாம் எடுத்துப் போட்டா யாரென்ன கேட்கப்போறாங்கன்னு புகுந்து விளையாடி இருக்காங்க. அதுவே கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிப் போச்சு.

உண்மையில், தென் தமிழக கிராமங்களின் ஒவ்வொரு சிறுதெய்வத்திற்கும் ஒரு கதை உண்டு. நம்ப முடியாத பல சுவாரஸ்யமான, பரிதாபமான, அமானுஷ அல்லது கொடூரமான நிகழ்வினால் அவர்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள் என்ற கர்ண பரம்பரைக் கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். இயக்குநரும் அதை தான் படமாக்க நினைத்திருப்பார் போல. ஆனால் அதை செறிவூட்டும் ஒரு நேர்மறைக்கதையாய் சொல்லாமல், சொந்த சாதிப் பெண்களை கிண்டல் செய்தததற்கு, சாதி மானம் காப்பதற்கு என்று பிற்போக்குத்தனமாய் எடுத்து அட போங்கப்பா என்றாக்கி விட்டார். ”அட போங்கப்பா!”

******


Monday, February 4, 2013

கடல் - பெருங்காயம்



வாரயிறுதிக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு ஏதேனும் ஒரு திரைப்படத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த மத்தியவர்க்க கணவனுக்கு, திரைத்துறை சென்ற வாரம் அருளியது இரண்டு படங்கள் தான், டேவிட் மற்றும் கடல். ஏ.ஆர்.ரஹ்மான் கொஞ்சம் ஆசை காட்டி வைத்திருந்ததால் “கடலுக்குள்” குதிப்பது என முடிவானது.

நவீன மணிரத்னம் படங்களின் மீது எப்போதும் ஒருவித ஒவ்வாமை உண்டு. செயற்கை அழகியல் வலிந்து திணிக்கப்பட்டு, எல்லா பாத்திரங்களிலும் இயக்குநரின் முகமே பிரதிபலிக்கும் கொடுமை நிறைந்திருக்கும். போதாதற்கு, செழுமையான தொழில்நுட்பக் குழுவை சேர்த்துக் கொண்டு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊடக உதவியுடன் பயங்கர எதிர்பார்ப்புகளை ஏற்றி விட்டு கல்லா கட்டிக் கொண்டு, புஸ்வானம் பற்ற வைப்பது. பிறகு படத்தின் தோல்வி சுவடுகள் மறைந்த பிறகு மீண்டும் அடுத்த படத்துக்கான துவக்க விழா, அடுத்த புஸ்வானம். எனவே அன்னாரின் படங்கள் என்றால் தொலைக்காட்சியில் பாட்டு பார்ப்பதோடு நின்று விடும் என் கலையார்வம்.

ஆனால், கடல் துவங்கி முதல் பாதி வரை வேறு மாதிரியான தோற்றத்தைக் காட்டியது. ”சேவகர்களை வெட்டுக் கொடுத்து, குதிரைகளை யானைகளை இழந்து, மந்திரிகளை பணயம் வைத்து, அரசியை கேடயமாக்கி ராஜ்ஜியத்தை காத்து வெற்றியை சுவைப்பதாய் முடியும், மதிநுட்பம் பொருந்திய போர் விளையாட்டாக ஆடப்படும் கடவுளுக்கும் சாத்தானுக்குமான சதுரங்க ஆட்டம். கடவுள் கடவுளாக இருக்கிறபடியால் நேர்வழியில் சென்று தீமைக் காரியங்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாதவராகவும், அதே போல சாத்தானும் தன் குணத்திற்கேற்ப, கிடைக்கின்ற வாய்ப்பில் கீழ்மையான காரியங்களைச் செய்து கடவுளை வெற்றி கொள்கிறான். கடவுளை வெல்ல சாத்தனுக்கு ஒரு தேவதையின் உதவி தேவைப்படுகிறது. அதே போல இறுதியில் கடவுள் சாத்தானை அடக்க இன்னொரு தேவதையின் அருகாமையால் தேவதூதனாக மாறிக் கொண்டிருக்கும் சிறிய சாத்தானை துணைக்கு வைத்துக் கொள்கிறான்.” இது தான் இயக்குநர் நினைத்திருந்த கதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த தோல்வி-வெற்றி, வெற்றி-தோல்வி என்ற பரமபத நிகழ்வுகள் எதுவுமின்றி தட்டையாக இருக்கிறது படம். சாத்தான் கடவுளை வீழ்த்திய முதல் சுற்றோடு ஆட்டம் முடிந்து விட்டது. பின்னர் வந்தவையெல்லாம் நேரநிரப்பிகள் தாம். அதுவும் ஒருவன் தன்னைத் தானே ”சாத்தான் சாத்தான்” என்று உரக்கக் கத்திக் கொண்டு எதுவுமே செய்யாமல் தோற்றுப் போவதை பார்க்கையில் “இதுக்குத்தானா இவ்வளவு அலப்பறையக் கூட்டுன?” என்று தான் கேட்கத் தோன்றியது.

பராமரிப்பின்றி காட்டுச்செடி போல வளரும், பதின்மத்தின் துவக்கத்திலிருக்கும் சிறுவன் ஒருவனது அழுக்கெல்லாம் வார்த்தைகளாக, வன்சொற்களாக வெளியேறி இறுதியில் தன் தாயை, தான் தந்தையாக நம்பும் ஒருவனை ஏங்கி அழைக்கும் அழுகையாக முடியும் காட்சி ஒரு தரிசனம். ஆனால் அப்படிப்பட்ட தருனங்கள் படத்தில் மிக சொற்பான இடங்களில் மட்டுமே கிடைத்தது துரதிஷ்டம். அது கடலில் கரைந்த பெருங்காயமாகி விட்டது என்ற வாக்கியத்தை சேர்த்து தலைப்பிற்கு ஒரு இணைப்பு ஏற்படுத்திக் கொள்கிறேன்.

படம் முழுவதும் துருத்திக் கொண்டிருந்த செயற்கைத்தனம் அம்மக்களின் வழக்கு மொழி. வட மாநில திரைத்துறையினருக்கு தமிழர்கள் என்றாலே ஒவ்வொரு வாக்கியத்தையும் “ஐயோ” என்று சொல்லித்தான் துவக்குவார்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை. அதே போல நெல்லை மக்கள் என்றாலே “ஏலே” தவிர வேரெதையும் விளிச்சொல்லாக்க மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை இயக்குநருக்கும் இருந்திருக்கும் போல. படம் நெடுக எல்லோரும் எப்போதும் “ஏலே”மயமாகித் திரிகிறார்கள். இன்னொரு உறுத்தல், எப்பொழுது ஃபிரேம் முழுதும் அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு லோடு துணை நடிகர்கள். அவர்களும் கடமை தவறாது ஒவ்வொரு காட்சியிலும் இரண்டடி முன்னே வந்து கேமிராவைப் பார்த்து இரண்டு வரி வசனத்தை ஒரு நான்கைந்து ”ஏலே” சேர்த்துச் சொல்லிவிட்டு பின் செல்கின்றனர். அப்புறம், வில்லன் தான் சுட்டுக் கொல்லும் ஒருவனை, கடலில் தூக்கிப் போடச் சொல்லி விட்டு, ”கடலுக்கு போறவங்களை பக்கத்து ஊர்க்காரங்க சுட்டு கடல்ல போட்றாங்க” என்று சிரித்துக் கொள்கிறான். போகிற போக்கில் வரும் இந்த வசனத்தின் உள்ளர்த்தம் எத்தனை பேருக்கு விளங்கியதோ தெரியவில்லை.

ஒரு படத்தின் நுண்ணிய கூறுகளையெல்லாம் அலசி ஆராய்ந்து சீர்தூக்கும் பக்குவம் எல்லாம் வாய்க்கப்பெறாததால், என்னளவில் திரைப்படங்களில் இரண்டே இரண்டு பிரிவுகள் தாம். ஒன்று தலைவலி தரக்கூடியது மற்றொன்று தலைவலி தராதது. கடல் என்ன மாயம் செய்ததோ தெரியவில்லை, நேற்று பார்த்ததற்கு இன்று வரை தலை “வின்வின்”னென்று தெறித்துக் கொண்டிருக்கிறது. 

படம் உதவி: http://www.zastavki.com/eng/Fantasy/wallpaper-23319-18.htm
******

Wednesday, December 19, 2012

கும்கி - வெற்றிகொண்டான் !



கொடியவன் ஒருவனிடமிருந்து ஊரைக் காப்பதற்காக வெளியூரிலிருந்து அழைத்து வரப்படும் காவல் வீரன். அவனை தெய்வமாக மதிக்கும் ஊர்மக்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உண்மையான காவல் வீரனுக்கு பதிலாக ஒப்புக்கு வரும் ஒரு கோழை. அவனை வைத்து சில நகைச்சுவை. இறுதியில் தன் உயிர்த்தோழனின் உயிருக்கு ஆபத்து வரும் பொழுது வீராவேசம் கொண்டு எதிரியை வீழ்த்தி தானும் மடியும் வழக்கமான “திரை”க்கதை தான். ஆனால் இயக்குநர் பிரபு சாலமன் எடுத்து ஆண்டிருக்கும் களமும், அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் சுகுமாரின் ஒளிப்பதிவும், துணை நின்றிருக்கும் இமானின் இசையும், ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பும் நிச்சயம் “கும்கி”யை மறக்க முடியாதவனாக உருவாக்கியிருக்கிறது.

எந்தவொரு அறிமுக நாயகணும் எதிர்பார்த்துத் தவம் கிடக்கும் “பாத்திரம்” நாயகனுக்கு. “யானையின் பலம் பாகனின் தைரியம் தான்” என்று படத்தில் ஒரு வசனம் வரும். இவரின் நடிப்பும் அப்படித் தான். யானையுடன் நடித்த எந்த காட்சியிலும் சிறு மிரட்சி கூட காட்டாமல் திறம்படவே நடித்திருந்தார். குரலின் ஏற்ற இறக்கத்திலும் குறையொன்றுமில்லை. இவர் கொஞ்சம் சறுக்கியிருந்தாலும், அல்லது ஹீரோயிஸம், காமெடி செய்கிறேன் பேர்வழி என்று இறங்கியிருந்தாலும் மொத்த படமும் படுத்திருக்கும். நல்ல வேளை அப்படியான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. நாயகன் யானையின் தந்தங்களைப் பிடித்து எழும்பி நெற்றியில் முத்தமிடும் அந்த ஒரு காட்சிக்காகவே படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். அவ்வளவு கவித்துவமான, அழகான காட்சியமைப்பு. திரையில் காணும் போது ஏனோ மனம் நிறைய சிலிர்ப்பு. பொம்மனுக்கு “நல்வரவு”.

உண்மையில் இந்தப்படம தான் நாயகிக்கும் அறிமுகப்படமாக வந்திருக்க வேண்டும். வடு பதிந்த முகத்தாலும், மருளும் விழியாலும் அல்லியாகவே மாறிவிட்டார். 

படம் முழுவதும் எவ்வளவு அபத்தங்கள் இருந்தாலும் இறுதியில் நாயகன் நாயகியின் கரம் பிடித்துத் தொடுவானை நோக்கிப் பயணிக்கும் காட்சிகளையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் கண்களுக்கு இப்படத்தின் முடிவு ஒரு போதாமையை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக இல்லாமல், ஒருவன் தன் சுயநலனிற்காக தன்னை அண்டியிருந்த மூன்று உயிர்களையும் காவு கொடுத்து விட்டு, ஒரு நம்பிக்கை துரோகத்தை செய்து தன் வாழ்வை துவங்கவும் துணிவுமின்றி நிர்கதியாய் நிற்பது தான் அவனுக்கு விதிக்கப்பட்ட முடிவு. அதை நாம் அவ்வாறே ஏற்றுக் கொள்வது தான் சரியாக இருக்குமென தோன்றுகிறது.

இப்படம் பழங்குடியினரின் வாழ்வை உண்மையாக பிரதிபலிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் இயக்குநர் தான் வரைந்து கொண்ட வட்டத்திற்குள் நின்று கச்சிதமாகவே விளையாடி இருக்கிறார். வணிக ரீதியான சில சமாதானங்களை செய்து கொண்டிருந்தாலும் அவை மிகவும் உறுத்தாத அளவிலேயே இருந்தன. உதாரணமாக பழங்குடியினரின் அறுவடைப்பாடலை குத்துப் பாட்டாக மாற்றி விட்டார் என்று சொல்வார்கள் என்பதற்காகவே இரண்டு மூன்று இடங்களில் “வெளியூர் ஆட்டக்காரர்களை வரச்சொல்லிட்டியா?” என்று கொஞ்சம் அழுத்தமாகவே கூறும் படி செய்திருந்தார் :)

படத்தில் கொஞ்சம் ஒட்டாமல் உறுத்திக் கொண்டிருந்தது நாயகனின் தாய்மாமனின் ஓயாத தொணதொணப்பான உரையாடல்களும், புலம்பலும் தான். இறுக்கமாக இருக்க வேண்டாமே என நினைத்து படம் முழுவதும் அவரைப் பேசவிட்டு இடநிரப்பியாக பயன்படுத்த நினைத்திருப்பார்கள் போல. ஆனால் அவரது ஆங்கில சொல்லாடல்கள் பல இடங்களில் அந்நியத்தனத்தையே தந்தன. சில இடங்களில் சிரிக்கவும் வைத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. 

எப்படியிருந்தாலும், படைப்பின் மீது இயக்குநருக்கு இருந்த ஆளுமை படம் முழுவதும் நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியிருக்கிறார்கள் என்று சொல்வார்களே, அது போல காணக் காண கண் நிறைந்த காட்சிகள். மொத்த படக்குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். நல்லதொரு திரையனுபவத்தைத் தந்தீர்கள், நன்றி !

Monday, October 22, 2012

மாற்றான் - போட்டுத் தாக்குறான்


சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக வாழ்ந்திருக்கும் “மாற்றானைக்” காணும் வாய்ப்பு கிட்டியது. சரி, “கழுத, நாமும் ஒரு விமர்சனத்தைப் போடுவோமேனு பார்த்தா” ஒரு விஷயமும் தோணல. சரி ஏன் மாற்றான் என்ற பெயர் எனறு யோசித்துப் பார்த்தேன். அதிலேயே ஒரு நுட்பமான செய்தி ஒளிந்திருப்பது கண்டு வியந்தேன். மரபணுவில் மாற்றம் செய்து பிறந்ததால் வந்த பெயர்க்காரணம் தான் மாற்றான். அப்படியும் “மாற்றான்கள்” என்று வந்திருக்க வேண்டுமே என்றால் சூர்யாவின் விஞ்ஞானி அப்பா எதிர்பார்த்தது ஒரு சூர்யாவைத் தான். இயக்குநனரும் அதை நம்பி “மாற்றான்” என்று பெயர் ரிஜிஸ்டர் செய்து விட்டார். ஆனால் இரட்டையராய் பிறந்து “ஃபிளாப்” ஆக்கிவிட்டனர், படத்தையா என்று தெரியவில்லை, ஆனால் இயக்குநர் சொன்னது அப்பா சயிண்டிஸ்டின் திட்டத்தை மட்டும் தான் என நம்புகிறேன். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் சூர்யா அப்பாவிற்கே தான் ஒரு விஞ்ஞானி என்று இடைவேளி வரை தெரியவில்லை. பிறகு ஒருவாறு வெள்ளைக் கோட்டை மாட்டிக் கொண்டு ஆராய்ச்சி செய்து சமாளித்து விடுகிறார்.

படம் முழுக்க டிவிஸ்ட்டோ, டிவிஸ்ட்டு தான். ஆனால் முதல் ரீலில் டெரர் லுக்குடன் வில்லி போன்று ஒரு வெள்ளைக்கார ஆண்ட்டியை டைட் கிளோசப்பில் காட்டும் போதே நான் பக்கத்து சீட்டைப் பிராண்டிக் கொண்டிருந்தவரிடம் சொல்லி விட்டேன். “இந்த ஆண்ட்டி நல்லவஙகளாத்தான் இருப்பாங்க, பாருங்களேன்”. பின்னர் நான் சொன்னது பலித்தவுடன் அவர் என்னை ஆச்சர்யமாய் பார்க்க, ”அந்த ஆண்ட்டியைப் பார்த்தால் ”டபிள்யூ.டபிள்யூ.எஃப்” டீவி ஷோவில் வரும் ஆயா போலவே இருந்தாங்க. அவுங்க நல்லவங்கன்னா, இவங்களும் நல்லவங்களாத்தான் இருக்கனும்” என்று லாஜிக்காக மடக்கினேன். சரி படத்தில் லாஜிக் இல்லை என்பதற்காக நானும் லாஜிக் இல்லாமல் பேச முடியுமா என்ன!

ஒரு காட்சியில் சும்மா ஒரு கிரிப்புக்காக காஜலின் இடுப்பைப் பிடிக்கும் சூர்யா, அவர் வழக்கமாய் படம் முழுதும் காட்டும் ஒரே ரியாக்‌ஷனனான “சாணியை மிதித்தது போன்ற கண்களின் அகலவிரிப்பையும், உதடு நெளிப்பையும்”  வெளிப்படுத்தவும், சரி இது வேலைக்காகாது என்று தன் சகோதரனை அணைப்பது போன்று சீன் போடுகிறார்.  செண்டிமெண்டுக்கு மடங்காத தமிழ் ஹீரோயின் எந்த படத்திலும் இல்லை என்ற விதிக்கேற்ப காஜலும் லைட்டா வழிக்கு வருகிறார். ஆனால் அப்போது கூட முழு சம்மதம் தெரிவிக்காதவர், சூர்யா ஒரு ரஷ்ய ஆண்ட்டியுடன் டான்ஸ் ஆடும் போது, “ஜெலசி” அதிகமாகி “ஜாயின்” ஆகிவிடுகிறார். ஆயிரந்தான் பல நூறு மொழிகள் பயின்று சுவிஷேச கூட்டங்களில் பிரசங்கம் செய்தாலும் அவளும் ஒரு பெண் தானே !

பிறகு, புது பாஸ்போர்ட் கிடைத்த உற்சாகத்தில் சூர்யா வெளிநாடு சுற்றுப் பயணம் கிளம்ப, கூடவே காஜலும் கைடாக கிளம்புகிறார். அங்கே புரட்சியாளர் லெனினின் ஒன்று விட்ட வகையறாவைச் சேர்ந்த ஒரு ஹெட் கான்ஸ்டபிள் கோல்ட் மெடல் வாங்கிய விளையாட்டு வீரர்களை எல்லாம் டாய்லெட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஹாலில் அடைத்து வைத்திருக்கிறார். அங்கு உள்ள அனைவரும் சேது பார்ட் 2 வில் நடிக்க ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டாய்லட் செல்ல வரும் சூர்யா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, அவர்களின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கிறார். பின்னர் ஈஸ்ட்மென் கலர் மாதிரியான சித்திரத்தில் அவர்களின் சாதனைகளை நினைத்துப் பார்க்கிறார். அதே எஃபெக்டில் பின்னர் தன் அப்பாவிடம் “அத்த்த்த்தனையும் நடிப்ப்ப்ப்ப்பா?” என்று கேட்டு கண்கலங்குகிறார். இதைத்தான் விமர்சகர்கள் “உலக நடிப்புடா சாமி” என்று கூறுகிறார்கள்.

ஆனால் சூர்யாவுக்கு அநியாயத்துக்கு “மாஸ் மர்டரை” தடுத்து நிறுத்தும் அஸைன்மெண்டாக தான் வந்து வாய்க்கிறது. அவரும் ரஷ்யாவுக்குப் பக்கத்திலுள்ள உஸ்கா புஸ்கா என்று ஏதோவொரு நாட்டுக்குப் போய் பெல்லி டான்ஸ் எல்லாம் ஆடி, ராக்கெட் லான்ச்சருக்கெல்லாம் தப்பி, கடைசியில் குஜராத்தில் லேண்டாகி, “போதி தர்மர்” தவம் செய்த குகைக்குள் வசிக்கும் பெருச்சாளிகளுக்கு தீனி வைத்து விட்டு ஜனாதிபதியிடம் விருதெல்லாம் வாங்குகிறார். ஆனால் அப்போது கூட அவர் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு கனவிலும் களங்கம் விளைவிக்க முற்படாதவராக இருக்கிறார். அதற்கு காரணம் இயக்குநர் ஆனந்த் சாரிடம் இருக்கும் கம்யூனிச சிந்தனை தான். நாடி நரம்பெல்லாம் கம்யூனிச வெறி ஊறிக் கிடக்கும் ஒருவரால் மட்டிமே இப்படி ஒரு திரைக்காவியத்தை எடுக்க முடியும் என்று நான் முழுமனதாக நம்புகிறேன். முதலில் கே.எஃப்.சி மூலம் உழைப்பாளர்களின் பசிப்பிணியைப் போக்குவதாகட்டும், பின்னர் “ரஷ்யர்கள் எல்லாம் பேசிக்கலி வெரி குட், பட் எங்களுக்கு திருட்டுத்தனம் சொல்லித்தந்தது எல்லாம் உங்க தமிழ்நாட்டு மாட்டு டாக்டர் தான்” என்று தாத்தா விஞ்ஞானி அப்ரூவர் ஆகி சூர்யாவுக்கு ஆராய்ச்சிக்கூடத்தின் கொல்லைப்புற ரகசிய வழியைக் காட்டி அனுப்பி வைப்பதாகட்டும் இயக்குநரின் சோஷியலிச வெறி கண்ணாபின்னாவென தலைவிரித்தாடுகிறது.

அப்புறம் இயக்குநரிடம் இருக்கும் கெமிஸ்ட்ரி செமயாக படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. “அயன்” படத்தில் கூகிள் செய்தே போதை மருந்தைக் கண்டுபிடித்து, டெல்லி கனேஷ் போன்ற உயர் அதிகாரியை வியக்க வைத்த ஆனந்த் சார் தான், இந்த படத்தில் தாத்தா விஞ்ஞானியின் உருவத்தில் நடித்திருக்கிறார் போல. ”எனர்ஜியான்” பாலை ஆராய்ச்சி செய்ய கம்ப்யூட்டருக்கு ஊசி போட்டு, “மேட்லாப்” அவுட்புட் கிராப் எல்லாம் பார்த்து ஒருவழியாய் பிரச்சனையைக் கண்டுபிடித்து, மாற்று மருந்துக்கான “பிராஜக்ட் ரிபோர்டையும்” கையோடு கொடுத்த்து விட்டு படம் கிளைமாக்ஸை நோக்கி நகருவதற்கு பெரும்பாடு பட்டிருக்கிறார் தாத்தா விஞ்ஞானி.

அப்புறம் சூர்யாவுக்கு பத்து அப்பா என்றொரு புத்தம் புதிய கான்செப்ட். அதிலும் உலக அறிவாளிகளாக தேர்ந்தெடுத்து கலந்து செய்த கலவை. எல்லாருமே பெயர் தெரியாத அப்பாட்டக்கர்களாக இருந்தால் ரசிகர்களுக்குப் புரியாது என்ற காரணத்தால், ரசிகக்கண்மணிகள் அறிந்த உலக விஞ்ஞானிகளான ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களின் பெயர்களை வைத்து வகுப்பெடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர்.

படக்குழுவுக்கு கடைசி வரை படத்தை சன் டீவிக்குக் கொடுக்கப் போகிறோமா, ஜெயா டீவிக்குக் கொடுக்கப் போகிறோமா என்று தெளிவில்லாமலே இருந்திருப்பார்கள் போல. போனால் போகுது என்று பொதுவாக டி.டி.பொதிகை சேனலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் சபாஷ் பெரும் இடங்களில் இதுவும் ஒன்று. 

கே.வி.ஆனந்த் சார் ஒவ்வொரு படத்திலும், தன்னுடைய முந்தைய படங்களையே ஸ்பூஃப் செய்வார். இந்த முறை அவருக்கு எந்த கவலையுமில்லை. மாற்றானை ஸ்பூஃப் செய்தே இன்னும் ஒரு நான்கைந்து படங்கள் செய்யலாம். அப்படி செய்யும் போது இந்த பதிவிலுள்ள பாயிண்ட்டுகளையும் நோட் செய்ய வேண்டும். பதிவுக்கு கிரடிட் கொடுக்காவிட்டாலும் செக் மட்டுமாவது கரெக்ட்டாக அனுப்பி வைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடைசி வரி பன்ச் டயலாக்கிற்கு தலைப்பை பார்த்துக் கொள்ளவும்.

Tuesday, September 4, 2012

முகமூடி - நாங்களும் இருக்கோம்


உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக என்று அவ்வப்போது சீன மொழிமாற்றப் படங்களை தமிழ் அலைவரிசைகளில் ஒளிபரப்புவார்கள். மிக சாதாரண வேலை செய்து கொண்டு ஒரு பெரியவர் இருப்பார். அவர் தான் உலகின் மிகச்சிறந்த தற்காப்புக்கலை நிபுணர். அவரிடம் வித்தை கற்ற சீடர்களில் ஒரு ’கெட்ட’ சீடர் தீயவழியில் சென்று, கற்ற தற்காப்புக் கலைகளை சமூகத்தை சீரழிப்பதற்காகவும், பொதுமக்களை கொல்வதற்காகவும், குறுக்கு வழியில் பெரும்பொருள் ஈட்டுவதற்காகவும் பயன்படுத்துவார். அதை தட்டிக்கேட்கும் குருவையும் கொன்று விடுவார். குரு இறப்பதற்கு முன்பாக தன்னிடம் உள்ள அரிய வித்தை ஒன்றை மற்றொரு ’நல்ல’ சீடருக்கு கற்றுக் கொடுத்து விட்டு இறந்து விடுவார். அந்த ’நல்ல’ சீடர் இறுதிக் காட்சியில் ‘கெட்ட’ சீடரை அந்த பிரத்யேக வித்தை மூலமாக வீழ்த்துவார். இடையில் நேர நிரப்பியாக சில கோமாளித்தனங்கள் செய்வார். நாயகியை கவர முயற்சிப்பார். அப்பாவுக்கு கெட்ட பிள்ளையாகவும், தாத்தாவுக்கு நல்ல பிள்ளையாகவும் நடந்து கொள்வார். முடிவில் நாயகியை கைகோர்ப்பார், சுபம்.

வழக்கமாக, நான் பார்க்க நினைக்கும் படங்களுக்கான விமர்சனங்களை முன்னரே படிப்பதில்லை. “முகமூடி”யை பார்க்க எந்த முன்முடிவும் இல்லாததால் இணையத்தில் கிழித்துத் தொங்க விட்டிருந்த அனைத்து தோரணங்களையும் கண்ணாரக் கண்டிருந்தேன். படம் வெளியாகிய முதல் வாரயிறுதியிலேயே பார்க்க வாய்க்கும் என நினைக்கவும் இல்லை. குடும்ப விழாவிற்கான முதல் நாள் இரவு, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏதேனும் புதுப்படம் செலவது மரபு. கண்ணில் தெரிந்தது “முகமூடி” தான். 

பசங்களாக சேர்ந்து ஒரு பத்து பேர் சென்றோம். போகும் போதே “நான் அப்பவே சொன்னேன்ல” விருது பெறும் பொருட்டு படத்தின் சூப்பர் ஹீரோ தன்மையை லைட்டா சொல்லி மக்களை திடப்படுத்தப் பார்த்தேன். ”ப்ளாக்ன்னு ஒன்னு கிடக்கு, பொழுதன்னைக்கும் அதப் படிச்சிட்டு இப்படித்தான் அண்ணன் எதையாவது உளறும்” என்று தம்பிமார்கள் அண்ணனுக்கு மதிப்பளித்து விட்டு படம் பார்க்க ஆர்வமாகினர். நான் எங்கே என்ன குறியீடு இருக்கிறது என்று அலர்ட்டானேன். முதல் காட்சியிலேயே ஒரு பூனையைக் காட்டினார் தமிழகத்தின் ஒரே உலக இயக்குநர். அப்புறம் ஒரு நாய், பிறகு அந்த நாயின் குரைப்பு. பிறகு சிறிது நேரம் கழித்து, “பாருக்குள்” செல்வதற்கு முன் ஹிட்லராக இருந்தவர், வெளியே வரும் போது சாப்ளினாக மாறினார். அப்புறம் கொஞ்ச நேரத்தில் லேசா தலைவலி.  சரி, நிறுத்திக்குவோம், இதுக்குமேல் உற்றுப் பார்த்தால் உலக சினிமா தாங்காது என்று முடிவு செய்து உலகக் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு சும்மா படம் பார்ககத் துவங்கினேன். படம் முடியும் போது மேலே சொன்ன சீன டப்பிங் மாதிரி ஒருவழியாக “சுபம்” சொல்லி அனுப்பினார்கள்.

எனக்கும் என்ன சந்தேகம்னா... சூப்பர் ஹீரோ, சூப்பர் ஹீரோ என்று பயங்கரமாக விளம்பரப்’படுத்தி எடுத்தார்களே, அந்த சூப்பர் ஹீரோவை கடைசி வரை கண்ணிலேயே காட்டவில்லையே. ஒரு வேளை இரண்டாம் பாகம் எதும் வருகிறதா என்று தெரியவில்லை. அப்புறம் அந்த ரோபோ செய்யும் தாத்தா கேரக்டரில் ரஜினியையும், குறுந்தாடி தாத்தா கேரக்டரில் கமலையும் ஏன் உலக இயக்குநர் கிண்டல் அடித்திருக்கிறார் என்று புரியவில்லை.

ஒருவேளை இவர்கள் விளம்பரம் ஏதும் செய்யாமல் சும்மா இருந்திருந்தாலே, இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்காதோ என்று தோன்றுகிறது. தங்களை அறிவாளிகளாக கற்பிதம் செய்து கொள்ளும் சாமானியர்கள் பாவம், இந்தப்பக்கமும் செல்ல முடியாமல் அந்தப்பக்கமும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள் போலும்.

இணையத்தின் எதிர்மறை விமர்சனங்களை முழுதும் சுமந்து கொண்டு படம் பார்த்த எனக்கு, அவ்வளவு ஒன்றும் மோசமில்லை என்று தான் தோன்றியது. ஆனால் இணையம் சாராத பார்வையாளனுக்கு படம் பயங்கர ஏமாற்றத்தையே தந்திருக்கும். உலக இயக்குநரின் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என தெரியவில்லை. 

சுபம் !
******

Tuesday, October 11, 2011

வாகை சூடவா - நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!



குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் பொருட்டு ஒரு குக்கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ஓர் இளைஞன். அந்த மக்களிடமும், சிறுவர்களிடமும் அவன் படும் அவஸ்தைகளையும், அவர்களுக்கு விழிப்புணர்வூட்ட அவன் மேற்கொள்ளும் முயற்சிகளையும் நகைச்சுவையாக பேசுகிறது “வாகை சூடவா”. ஒரு எளிய கதை, அதற்குத் தேவையான சின்னஞ்சிறிய கட்டமைப்பு இதில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வருவது போல கலகமும் இவ்வளவு சீக்கிரம் நடந்து, எளியவர்கள் தங்கள் உரிமைகளைக் கோரிப் பெறும் நிலையும், சர்க்கார் பெயரைச் சொல்லி ஒரு முறை மிரட்டுவதற்கே ஆண்டைகள் விலகி போவதுவும் நிஜத்திலும் நடந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் “இப்படி இருக்குமா”, “அப்படி இருக்குமா” என்ற யூகங்களை விட்டுவிட்டுப் பார்த்தால் இயக்குநர் தான் எடுத்துக் கொண்ட கருவிற்கு நேர்மையாக உழைத்திருக்கிறார். இரண்டு மணி நேரத்திற்குள்ளாக முடியும் சிறிய படம், தெள்ளிய நீரோடை போல மிதமாக செல்கிறது. தொய்வென்று சொல்லும் படியாகவெல்லாம் இல்லை. காட்சிகளை ஆற அமர ரசிக்கும் மனநிலையில் இருந்த எனக்குப் பிடித்தே இருந்தது. அதிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஆவணப்படுத்தப் பட வேண்டிய ஏதேனும் ஒரு விசயம் இருந்து கொண்டே இருக்கிறது. 

“போஸ்ட் வுமனை” அறிமுகப்படுத்தும் காட்சியில் “ஒரு கனவுப்பாட்டை புகுத்திடுவானுகளோ” என்ற சிறிய சஞ்சலம் தோன்றியது. நல்ல வேளையாக அப்படியேதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடவில்லை. காபிக் கொட்டை அரைக்கும் கருவி, ரேக்லா வண்டி, ஆண்டையின் பிரம்பு, சைக்கிள் முன்விளக்கு, பெரிய மூக்கு பஸ் என அறுபதுகளைக் கண்முன் கொண்டு நிறுத்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செதுக்கப் பட்டிருக்கின்றன. “சூதாடி சித்தன்” போன்ற தோற்றத்தில் ஒரு கிழவனைப் பார்த்ததும், “ஐயோ, இந்த கேரக்டர் ஹீரோவிற்கு அப்பபோ வந்து அறிவுரையா சொல்லுமே” என பயந்தேன். அது போல் தான் நடந்தது, ஆனாலும் ஓரிரு வார்த்தைகளிலேயே அந்த கிழவன் பேசுவது நன்றாகவே இருந்தது. அதுவும் காட்டை அழித்த தன் தவறுக்கு வருந்தி “குருவிச்சத்தம் கேக்குது” என புலம்புவதும் யதார்த்தம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு என்று எந்த நுன்னறிவும் புலப்படாத எனக்கே இந்த படத்தின் முழுமைக்கு இவையெல்லாம் கண்டிப்பாக உதவியிருக்கிறது என்று நிச்சயமாக சொல்ல முடிகிறது. இன்னொரு மிகப்பெரிய ஆச்சர்யம், நாயகியின் நடிப்பும் பின்னனிக் குரலும். அழகு! நாயகனும் எங்கும் வீராவேசம் காட்டாமல் இயற்கையாக இருக்கிறார். போக, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும், குறிப்பாக சிறுவர்கள் அனைவரும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு இனிய அனுபவத்தைத் தந்த மொத்த குழுவிற்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.

சரி, நம் கதைக்கு வருவோம். படத்தின் முடிவில் இன்னொரு கதை துவங்குகிறது. அதைப் பற்றி உரையாடுகையில் களம் இன்னும் விரியக்கூடும். செங்கல் சூளையில் இறக்கும் கற்களை விலைக்கு எடுக்கும் புதியவனும் ஒரு முதலாளி தானே. அவனையும் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வரும் போது வேலு அதை எப்படி எதிர்கொள்வான். தோற்றுப் போன ஆண்டை பழி தீர்க்க என்னென்ன செய்வான். இதையெல்லாம் விட முக்கியமாக இரண்டு காசு, மூன்று காசு என ரகம் வாரியாக ”டீ” விற்கும் மதி ஊர் மதிக்கும் வாத்தியாரின் மனைவியான பின்பு அவள் நடவடிக்கை எப்படி இருக்கும். 

”யதார்த்ததில் வேலுவின் அடுத்த தலைமுறை ஒரு பண்ணையார் குடும்பமாகவே திகழும் அல்லது அவ்வாறு ஊராரால் பார்க்கப்படும். பிறகு அக்குடும்பத்தின் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்க இன்னொருவன் வருவான். பிறகு அவனைத் தலைவனாக்கி அவன் பின்னும் செல்வார்கள். அவனுக்கும் ஒரு ஒளி வட்டத்தை ஏற்படுத்துவார்கள். இயக்குநர் இதனைத் தொடர்கதையாக்கி படங்கள் இயக்கலாம்” என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

அது இருக்கட்டும், ஒரு படத்தைப் படமாக பார்க்காமல் அகழ்வாராய்ச்சி செய்வதே என் பொதுப்புத்தியின் நோக்கமாய் போய்விட்டது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!

******

Tuesday, September 21, 2010

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் "மருதநாயகம்"


தமிழ்த் திரையலகை ஹாலிவுட் தரத்துக்கு மாற்றும் முயற்சியில் சிறிதும் தளராத சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அடுத்து தயாரிக்கும் திரைப்படம் "மருதநாயகம்". சன் டி.வி. அலுவலத்திற்கு சென்ற கமலஹாசன், கலாநிதி மாறனை மரியாதை நிமித்தமாக சந்தித்தபிறகு வரலாற்று சிறப்புபிக்க இந்த  நிகழ்வு நடந்ததாக சன் டி.வி. ஃப்ளாஷ் நியூஸ் தெரிவித்தது. தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காக சன் பிக்சர்ஸ் எப்போதும் தயாராக இருப்பதாகவும், போதிய நிதியுதவி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த படத்துக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளது என்றும் விரிவான செய்திகளில் ஒரு மணி நேரத்திற்கு மூன்று தரம் வீதம் மூன்று நாட்களுக்கு ஒளிபரப்பட்டது.

******
இன்று "மருதநாயகம்" படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  முதல்வர் கலைஞர் பேனாவை எடுத்துக் கொடுக்க, நடிகர் கமலஹாசன் கோப்பை பிடித்துக் கொள்ள கலாநிதி மாறன் கையெழுத்திட்டார். தமிழ் திரையுலகமே திரளாகக் கலந்து கொண்டது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இயக்குநர் சந்தானபாரதி ஏதேதோ பேசினார். ஆனால் எதுவும் புரியாவிட்டாலும், அந்த சூழ்நிலையில் அவர் கமலஹாசனை நிறையவும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனை அதை விட நிறையவும் புகழ்ந்து தான் பேசியிருப்பார் என்பதைப் புரிந்து கொண்டு மக்கள் பெருத்த கரகோஷம் எழுப்பினர். 

******
இன்று சன் பிக்சர்ஸ் வழங்கும் "மருதநாயகம்" திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டும் விழா தலைமைச் செயலக வளாகத்தில், புதிதாக அமைக்கப் பட்டுள்ள "கலைத்துறை கமாண்டோ டாக்டர் கலைஞர் திரைப்பட கிராமத்தில்" மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக சோனியா காந்தி அவர்களும், அவருக்குத் துணையாக ராகுல் காந்தி அவர்களும், இவர்கள் இருவரும் வருவதால் வேறு வழி இல்லாமல் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கலைஞர் அவர்கள், "திக்கெட்டும் பரணி பாடும் தமிழ் மண்ணில் சட்டென்று செட்டு போட ஓர் இடமில்லை என, திரைத் துறையை தன் செங்கரத்தால் தாங்கும் தம்பி கலாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க தலைமைச் செயலகத்திலேயே இடம் தந்து திரைத்துறையை வாழ வைக்கும் இந்த அரசு, இது ஏழை எளிய மக்களை மகிழ்விக்கும் கலைத்துறைக்கு நம் கழக ஆட்சி தரும் பரிசு" என்று பெருமை கொண்டார். படத்துக்கான முதல் போஸ்டருக்கு கலைஞர் பசை தடவிக் கொடுக்க, சோனியா காந்தி அதை தலைமைச் செயலக வளாகத்தின் முகப்பு வாயிலில் ஒட்டினார். 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், " எந்திரன் ரிலீஸ் ஆகி, 100வது நாள் விழாவில் கலாநிதி மாறன்ட்ட பேசிட்டு இருக்கும் போது, இந்த மாதிரி... உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையா சன் டி.வி. யில எந்திரன் ஒளிபரப்பும் வரை நம்ம பாண்டு இருக்கு. அதுக்கு முன்னாடி ஒரு நாலு நாள் லீவு கொடுத்தீங்கன்னா, இமயமலைக்கு ஒரு ஷார்ட் ட்ரிப் போய்ட்டு வந்திருவேன் அப்டீன்னு கேக்கும் போது, ரொம்ப பெரிய மனசு பண்ணி நாலு நாள் லீவு தந்தார். இத நான் இங்கே ஏன் சொல்றேனா, கமல் என் உயிர் நண்பர், கலையுலத் தாய் எங்களையெல்லாம் நடக்க விட்டு கூட்டுட்டுப் போதும் போது, கமலை மட்டும் தோளில் தூக்கி வச்சு தூக்கிப் போனா, அந்த அளவு கலைக்காக பாடுபட்டவர். அவர் கூச்சப்படாம,  நடுவுல ரெண்டு நாளோ, மூணு நாளோ லீவு கேட்டு வாங்கிக் கொள்ளலாம், அந்த அளவு பெருந்தன்மை கொண்டவர் கலாநிதி மாறன், மற்றபடி "மருதநாயகம்" படத்துக்கும் இத்தாலிய மொழியில் வெளிவந்த "மஷிதோநாய்கா" படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்!" என்று பாராட்டினார்.

கலாநிதி மாறன் அடுத்ததாக நேரடி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக வந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலையடுத்து இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான தெலுங்கு நடிகர்கள் கலந்து கொண்டு கலாநிதி மாறனை மனம் குளிரப் பாராட்டினர்.

******
சன் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சியாக, "மருதநாயகம் படம் போஸ்டர் ஒட்டும் பசை உருவான விதம்" ஒளிபரப்பப்பட்டது. இதில் பசைக்கான மைதா மாவு வாங்குவதில் துவங்கி, பசை காய்ச்சும் அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாகக் காட்டப்பட்டன. இதில பேட்டியளித்த கிரேசி மோகன், "பசையுள்ள பார்ட்டி தான் மருதநாயகத்தை தயாரிக்க முடியும்னு நான் கமல்கிட்ட முன்னயே சொன்னேன். அது கலாநிதி மாறன் தான் னு கண்டுபிடிக்க கமலால் மட்டும் தான் முடியும். ஏன்னா அவர் தான் ஒரு படம் விட்டு ஒரு படத்துக்கு எனக்கு வசனமெழுத வாய்ப்பு தருவார். எல்லாரும் சொல்ற மாதிரி இந்த படத்தோட போஸ்டர், மழை வெயில் எல்லாத்தையும் தாங்கி ஒரு வருசம், ரெண்டு வருசம் கிழியாம, சாயம் போகாம இருக்கனும்னு கடவுளை வேண்டிக்கிறேன்" என்றார். 

இதையடுத்து தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் "மருதநாயகம்" படத்துக்கு போஸ்டர் ஒட்டும் விழா அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்றும் அதை சன் டி.வி. நேரடி ஒளிபரப்பு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

******
இன்று சன் பிக்சர்ஸ் வழங்கும் "மருதநாயகம்" திரைப்படத்துக்கு டிக்கட் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட்டை அடுத்துள்ள 100 ஏக்கர் அளவுள்ள காலியிடத்தில் மிகப்பிரம்மாண்டமான டிக்கெட் கவுண்ட்டர் செட் அமைத்து, நடைபெற்றது.
விழாவில் முதல் டிக்கெட்டை அமெரிக்க அதிபர் ஒபாமா கிழித்துக் கொடுக்க, உகாண்டா நாட்டு அதிபர் யோவெரிமுசுவெனி பெற்றுக் கொண்டார். டிக்கெட் விலைக்கான செலவை உலக வங்கி சலுகை வட்டியில் உகாண்டா நாட்டுக்கு வழங்கியிருப்பதாக பி.பி.சி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் வையாபுரி, "நமது படம் ஹாலிவுட் தரத்தையும் தாண்டியது என்பதை நிரூபிக்கவே ஹாலிவுட்டைத் தாண்டி உள்ள இடத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றோம். இந்த சாதனையை நிகழ்த்த திரு.கலாநிதி மாறன் அவர்களைத் தவிர வேறு எவராலும் முடியாது" என்றார். டிக்கெட் கவுண்ட்டர் செட்டுக்கு முன்,  தோட்டா தரணி கைவண்ணத்தில் உருவான 400 அடி ஆஸ்கார் விருதின் கட் அவுட் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நடிகர் கமலஹாசன், "சொல்லனும், சொல்லனும்னு முடிவு செய்துவிட்டபடியால் எல்லாத்தையும் சொல்லனும், சொல்ல வேண்டாம்னு நினைச்சிருந்தா சொல்லாமலே இருந்திருப்பேன். ஆனால் சொல்லனும்னு முடிவு செய்துவிட்டதால் எல்லாத்தையும் சொல்றேன். கலைஞர், தலைவர், முதல்ல சொல்லனும்னா முதல்வர். அவர் என் தகப்பனார். இதை சொல்ல எனக்கு எந்த மேடையும் தேவையில்லை, இருந்தாலும் சொல்வேன். என்னை தமிழ் படிக்க வைத்த வாத்தியார் என்றும் சொல்வேன். மருதநாயகம் பற்றி சொல்லனும், அதற்குமுன் இதைப் பெற்றுத் தந்த கலாநிதி மாறனைப் பற்றி சொல்லனும்.  நன்றி என்ற செம்மொழி சொல் கொண்டு சொல்லலாம், ஆனால் 'என்னிடம் வந்து நீயும் மாட்டிக் கொண்டதற்கு நன்றி, கொஞ்சம் ஓராமாய் நின்று வேடிக்கை பார்' என்று என்னிடம் அவரே சொல்லிவிட்ட பிறகு நான் என்ன சொல்ல முடியும். இருந்தாலும் சொல்வேன் நன்றி." எனறு கண்கலங்கினார்.

அடுத்து பேச வரும் கலாநிதி மாறன், "மன்னிக்கனும், வால்ட் டிஸ்னி மூவீஸ் தயாரிப்பில் பாதியில் நிற்கும் ஒரு படம் விலைக்கு வந்திருக்கு. அது பற்றி பேசி முடிக்க வேண்டியிருப்பதால், இப்பொழுது விடை பெறுகிறேன். நன்றி!' என்று கூறிவிட்டு அவசரமாக கிளப்பிச் சென்றார்.

எச்சரிக்கை:
இவையெல்லாம் நடக்க அநேக வாய்ப்புகள் இருந்தாலும், இப்பொழுதைக்கு "இது முழுதும் எனது கற்பனை" என்றும்,  இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்ட நிகழ்வுகளோடு இணைத்து யோசிப்பது அவரவர் கற்பனை சக்தியைப் பொறுத்ததே என்றும் என் சுயநலம் கருதி இந்த அறிவிப்பு. 

******

Monday, December 21, 2009

சினிமாக்காரன்

அடுத்த பாட்டு முடிந்தவுடன்
பணக்காரனாவேன் என்று தெரிந்தால்,
நானும் கூடத் தான் இந்நேரம்
தொடை தட்டி சவால் விட்டுக் கொண்டிருப்பேன்.

******

என்னை வாழ வைக்கும்
அன்பு தெய்வங்களே,
சீக்கிரம் வந்து என்
செருப்பை துடையுங்கள் !


******

கெட்ட சினிமா பார்த்து
கெட்டுப் போகாதீர்கள் !
நம் அடுத்த படத்தில்
இளமை குலுங்கும்
மூன்று ஹீரோயின்கள்,
மறந்து விடாதீர்கள் !


******

"தமிழ் தான் என் பேச்சு,
தமிழகமே என் மூச்சு !"
படம் அங்கேயும் 
ரிலீஸ் ஆகுதுல்ல, சரி 
இதையே தெலுங்குலயும் 
ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கோங்க.


******

அடுத்த பிறந்தநாளுக்கு
ரெயின் கோட் கொடுப்போம்,
நிறைய தோல்விகளை
மூடி மறைக்க வேண்டியிருக்கு !


******

கருப்பு பணத்தை ஒழிக்கிறது தான்
கதைக்கருவா ?
கண்டிப்பா பண்ணலாம்.
பேமண்ட் எப்பவும் போல
ப்ளாக்லயே தந்திடுங்க.


******

"பையன் ஒன்னுக்கும் உதவாம
சும்மா தான் சுத்திட்டு இருக்கான்.
அதான் கழுத,
ஹீரோவாக்கிறலாம்னு பார்க்குறேன்.
பின்னால முதலமைச்சர் வேலைக்கு
அப்ளை பண்ணலாம் பாருங்க !"
--- மதுரைப் பக்கமிருந்து
மூட்டையுடன் வந்தவர்,
சந்தேகமாகத்தான் கேட்டார்.
நான் தான் வாழும் 
உதாரணங்களை எடுத்துக் காட்டி,
வரிசையில் நிற்க வைத்திருக்கிறேன்.

******

Wednesday, March 18, 2009

ரஜினியை மிஞ்சிவிட்டார் விஜயகாந்த் (வீடியோ ) !

ரஜினிகாந்த் - மேஜிக்





விஜயகாந்த் - மேஜிக்



என்ன தான் இருந்தாலும், பேரரசு அளவிற்கு சுந்தர்.சி. க்கு கிரியேட்டிவிட்டி கிடையாது. 


( வீடியோ படம் போட்டாத்தான் ஹிட்ஸ் கூடுமாமே, அப்படியா ??? )