Thursday, October 17, 2019

தெக்கூரானின் கதை - அசுரன் திரைப்படம் குறித்த பார்வை



'வெக்கை' நாவல் ரொம்ப முன்னாடி வாசித்தது. கதைக்கரு மற்றும் கதையோட்டம் தவிர காட்சிவாரியான நிகழ்வுகள் கிட்டத்தட்ட மறந்துவிட்ட்டது. 'அசுரன்' அந்நாவலைத் தழுவியது என்றதும் நாவலை மறுபடி வாசிக்கும் ஆசையைக் கட்டுப்படுத்தி ஒரு புதிய படமாகப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்தேன். எனவே இது அசுரன் - வெக்கை பற்றிய ஒப்பீடு அல்ல.

படத்தின் முதல் பாதி காட்சிகள் முழுக்க லகானின் பிடி எங்குமே நழுவாமல், கச்சிதமாகக் கோர்க்கப்ப்பட்டிருக்கின்றன. தனுஷ் சிவசாமியின் குணவார்ப்புக்கு நிச்சயம் நியாயம் சேர்த்திருக்கிறார் அல்லது அவரது தனித்தன்மையால் மெருகேற்றி இருக்கிறார். அவரது மூத்த மகனாக வரும் டிஜேய். அருணாசலமும் துடிப்பான ஓர் இளைஞனை இயல்பாகக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். இடைவெளிக்குப் பிரகான முன்னிகழ்வு காட்சிகள், இளமையான தனுஷ், அதில் ஒரு சிறிய காதல், ஒரு பாடல் என்ற வட்டத்திற்குள் நின்றுதான் ஆட முடியும் என்ற நிலையில், மூல நாவலின் ஆன்மாவை சிதைக்காமல், வணிக எல்லை துருத்திக் கொண்டு தெரியாத வண்ணம் அழகாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

முதல் பாதியில் இயல்பாய் வந்திருந்த “மாஸ்” காட்சிகள், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கனமற்று செயற்கையாக இருந்தன என்பதையும் சொல்லத்தான் வேண்டும். திரைக்கதைக்கான முதல் வரைவில் (first draft) இருந்திருக்கக் கூடிய முதல் பாதிக் காட்சிகளைக் காட்டியிலும் பின்பு சேர்த்திருக்க வாய்ப்புள்ள இரண்டாம் பாதி காட்சிகள் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது போலத் தோன்றியன.

இன்றைய இணைய உலகில், ஒரு படம் வருவதற்கு முன்பே, படத்தின் தொழில்நுட்பம், கதையின் அவுட்லைன் மற்றும் படத்தில் பணிபுரிபவர்களின் மனவோட்டம் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு பார்வையாளனுக்கு இருக்கின்றன. வெற்றிமாறன் போன்ற நுண்கலைஞனின் படம் எனும் போது, படம் குறித்த தேடல் இன்னும் விரிவடையவே செய்யும். அப்படி ஏற்றிக்கொண்ட தகவல்கள், படத்தைப் பார்க்கும் போது குறுக்கிடுவதை தவிர்க்க முடிவதில்லை. அசுரன் வெளி வருவதற்கு முன்பான பேட்டி ஒன்றில், இந்தப் படத்தில் தான், முதன்முறையாக இரண்டாம் குழுவை (second unit) வைத்து சில காட்சிகளை எடுத்திருப்பதாகவும், தான் மிகக் குறுகிய காலத்தில் எடுத்த படம் இது எனவும் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார்.

படத்தில் பெயர் போடும் போது, இரண்டாம் குழுவின் இயக்குநர், படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவராகிய மணிமாறன் என்று கண்ணில்பட்டது. படம் முடிகையில் மணிமாறன் பெயர் நினைவிலாட, இது இரண்டு இயக்குநர்கள் இயக்கிய படங்களின் கலவையோ என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அதோடு குறிப்பிட்ட காலத்தில் ஒரு படத்தை தயாரித்து முடித்து வெளியிடும் வழக்கம் கொண்ட தயாரிப்பாளர் தாணுவின் சிக்கன நடவடிக்கைகளால், நுணுக்கங்களுக்குள் (detailing) செல்லாமல், குறிப்பிட்ட கால அளவிற்குள் எடுக்க முடிந்த காட்சிகளை வைத்து, விடுபட்ட இடங்களை தூரக்காட்சி மற்றும் பின்னணி வசனங்கள் மூலமாகக் கதையை நகர்த்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்குமோ என்றும் தோன்றியது. அதும்போக, நடிகர்களின் வாயசைவிற்கும், பின்னணி குரலுக்கும் ஏகப்பட்ட வசன மாற்றங்கள்.

எப்போதும் தேர்வுகளில் 98சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவன், ஏதேதோ நெருக்கடியினால் முழுதாய்ப் படிக்க நேரமில்லாமல் 80சதவீத மதிப்பெண் எடுத்தது போல இருந்தது ‘அசுரன்’. 80சதவீதம் என்பதும் மிகச் சிறந்த மதிப்பெண் என்ற எண்ணத்திலேயே இதைப் பதிவு செய்கிறேன். யோசித்துப் பார்த்தால், தயாரிப்பின் கால அளவு நீட்டம், அதற்குண்டான செலவுகள், கச்சிதத்தை நோக்கி மீண்டும் மீண்டும் மெனக்கெடுதல் ஆகியவற்றால், படம் நன்றாக இருந்தும் அதிகமாகும் தயாரிப்புச் செலவுகளால், வணிக ரீதியாக வெற்றியடைய முடியாமல் போவதைக் காட்டிலும், குறுகிய காலத்தில் நல்ல கதைகளை சீக்கிரமாக படமெடுத்து ஒரு ஸ்பார்க் தெறிக்கவிட்டு வணிகரீதியாகவும் வெற்றிப் படமாக ஆக்குவதே இன்றைக்குத் தேவை என்று தோன்றுகிறது. இத்தகைய படங்களின் வணிக வெற்றி மட்டுமே, தொடர்ந்து இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வருவதற்கான உந்துசக்தி.

இந்த சிறு மனக்குறை கூட, வெற்றிமாறன் ஏற்கனவே நின்றிருக்கும் உயரம் காரணமாகவே. இதைத் தாண்டியும், ‘அசுரன்’ சிறந்த படம் தான். தனுஷ் இறுதிக் காட்சியில் சொல்லும், “படிப்பை மட்டும் தான் நம்மகிட்ட இருந்து புடுங்கிக்க முடியாது சிதம்பரம்” என்னும் வசனம் இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே கருதுகிறேன். சமூக அடுக்கில் கீழே உள்ளவன், படித்து வந்தாலும் அந்தப் படிப்பு பயனற்றுப் போகிறது எனும் போது, அந்த வசனம் காலாவதியான ஒன்று என்ற கருத்தை இணையத்தில் பார்த்தேன். பாதாளத்தில் கிடக்கிறவன் கல்வி என்ற ஒற்றைக் கொம்பைப் பிடித்துத் தான் மேலேறி வர வேண்டியிருக்கிறது. இதற்கு முன் கல்வியின் மூலம் மேலேறி வந்தவர்களுக்கு அதன் போதாமைகள் தெரியலாம். ஆனால் இன்னும் கீழே கிடப்பவனுக்கு அதுதான் ஒற்றை வழி எனும் போது, அது குறித்து அவநம்பிக்கைகளை விதைக்கலாகாது. எனவே அசுரன் சொல்லும் “படிச்சு அதிகாரத்திற்கு வா சிதம்பரம். வந்து உனக்கு செஞ்ச கொடுமைய நீ யாருக்கும் செய்ய நினைக்காதே!” என்னும் செய்தி இன்றைக்கும் முக்கியமானது தான். 


******

No comments:

Post a Comment