Thursday, May 29, 2014

சமிக்ஞை

பேச்சரவம் முற்றிலும் நின்று போன கிராமத்தில் மனிதர்களின் இயக்கம்  ஊரெங்கும் வியாபித்திருக்கும் கருவேலங்காடுகளை மையமாய் வைத்தே சுழன்று கொண்டிருந்தது. கூர்மையான முட்களையுடைய கிளைகளின் மூலம் காற்றின் ஈரத்தையும் மிச்சம் வைக்காமல் உறிஞ்சிக் கொண்ட அம்மரங்கள்,சதா வெக்கையை கக்கிக் கொண்டிருந்தன. முன்பு செழிப்பாய் இருந்த காலத்தில் நெல் போட்டு அறுத்த நன்செய் நிலங்கள் ஓய்வெடுக்கும் பருவங்களிலும்மழை பொய்த்துப் பெருதானியங்கள் தோற்று பஞ்சம் எட்டிப் பார்க்கும் கடும் பொழுதுகளிலும் கூட பெருமுயற்சிகளோ முதலீடுகளோ இன்றி சிறுதாணியங்கள் விளைவித்துத் தந்து குடி காத்த புன்செய் நிலங்களும்,இப்போது கருவேலங்காடாய் மாறிக் கிடந்தன.

கருவேலம் மரங்களை வெட்டி விறகாக்கி அவற்றை எரித்து கரிமூட்டமிட்டு நகரங்களுக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் வரத்துவங்கிய முதல் நாளன்று மறைந்து போன சிட்டுக்குருவிகளை அதன் பின் எப்போதும் அந்த கிராமத்தில் காணமுடியவில்லை. ஊரை அடைத்துக் கொண்டிருந்த கருவேல மரங்கள் கரிக்கட்டைகளாய் மாறிக் கொண்டிருக்கையில்காற்றின் பரப்புகளில் எல்லாம் கரித்துகளின் நெடி முழுமையாய் போர்த்திச் செல்ல துவங்கியிருந்தது. குத்துயிராய் போராடிக் கொண்டிருந்த ஒரு சில நிலங்களும் அடுத்தடுத்த மகசூல்களில் சாவிகளை பெற்றெடுத்துதாங்கள் தற்கொலை செய்து கொண்டதை சொல்லிவிட்டுத்தான் மரித்தன என்றாலும் அதனை உணர்ந்து கொள்ளும் நிலையில் குடியானவர்கள் இல்லை. மாறாக நிமித்தப் போக்கைக் காட்டி எச்சரித்த அயலூர்க்காரர்களையும் விரக்தியுடன் விரட்டியடித்தனர். ஊரெங்கும் பரவியிருந்த கரித்துகள்கள்காலம் தப்பியேனும் பெய்யும் சில பருவமழைகளையும் உள்ளே வரவிடாமல் மூடி போட்டு விட்டன. அதன் பின் ஊரின் விளைநிலங்களையெல்லாம் மொத்தமாய் சுடுகாடாய் மாற்றி எப்போதும் பிணங்களற்ற கட்டைகளை எரித்து கரியாக்கும் நிகழ்வுகள் தாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

அழிந்து கொண்டிருக்கும் ஊருக்கான சகல சமிக்ஞைகளும் கனவில் தெரியத் தொடங்கிய நாளில் கிராமத்து வயசாளிகளின் தூக்கம் முற்றிலுமாய் அற்றுப் போனது. அவர்கள் இரவைக் குடித்தபடி ஊளையிடும் நாய்களுக்கு காவல் இருக்கத் துவங்கி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. தவறியும் கண்ணசரும் அதிகாலைப் பொழுதுகளில் கொடுங்கனவுகளின் வதைக்கும் நிழற்படங்கள்,தாங்கள் அனுபவிக்கும் நரகம் இன்னும் விரியப் போகிறது என்பது போலவும் மரணத்திற்கும் தங்களுக்குமான தூரம்நாவரண்டு தேடியலையும் போது கண்கட்டு வித்தை காட்டும் கானல்நீரைப் போலவும்நுரையீரல் துடிக்க தொடர்ந்து ஓடி எட்டிப்பிடிக்க முயலும் தொடுவானம் போலவும் துன்புறுத்தின. முன்பொரு காலத்தில் மிளகாய்ச்செடிக்குக் களையெடுக்கையில் கையில் பட்ட தளிரைப் பத்திரப்படுத்தி தனி பக்குவம் பார்த்துவயிற்றுப் பாட்டுக்கு கொண்டு சென்ற நீராகாரத்தைக்கூட ஆசையாய் அதன் மீது உமிழ்ந்து வளர்த்தெடுத்து,அது விருவிருவென வளர்ந்து இரண்டொரு ஆண்டுகளில் அத்துவான பொட்டக்காட்டில் குடைபிடித்து நிற்கும் ஒற்றை மாமரமாக சிரித்திருந்ததையும்அரசங்குட்டியை விடவும் வேப்பங்கன்று தடித்திருக்கிறது என்று அரசுக்கு தனி எருகிட்டு அது சத்துப் பிடித்ததும் இரண்டையும் பிணைத்து விட்டு விழாக்காலங்களில் வழிபாட்டிற்காயும்வேலை முடித்த காலங்களில் இளைப்பாறுதலுக்குமாய் பயன்படுத்திய கதையையும்இன்னும் அதுபோன்ற பலநூறு நினைவுகளையும் செறிக்கவும் முடியாமல் ஞாபக இடுக்குகளில் தொலைக்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.

அயல்தேசத்தைவை போல தோற்றங்கொண்ட பறவைகளின் பெருங்கூட்டம் வரண்டு கிடக்கும் ஊரணியின் கருவேலம் மரங்களில் அடைந்திருந்த விடிகாலைப் பொழுது வேறு மாதிரியாக தோற்றங்கொண்டிருந்தது. ஊரைப் பிடித்திருந்த கிரகணம் விடுபடுவதற்கான அறிகுறி என்றும் அந்தப் பறவைகள் தங்களுடன் கருமேகங்களைக் கொண்டு வந்திருப்பவை என்றும் அவை மழையாய் பொழிந்து ஊரின் கரிய முகமூடி கிழிக்கப்படும் என்றும் நம்பிக்கைகள் துளிர்விடத்துவங்கின. அந்தப்பறவைகளும் வந்தது முதல்,மயான அமைதியில் ஆண்டாண்டுகளாய் உறைந்திருந்த கிராமத்தை தங்களது ஓயாத சத்தத்தினால் கொத்தியவாறு இருந்தன. அவை இனப்பெருக்கம் செய்வதற்கான சூழலை அந்த கிராமத்து தட்பவெப்பத்தில் உணர்ந்திருக்கின்றன என்று தோன்றும் படியாக கருவேலம்மரங்களின் கிளைகளெங்கும் கூடுகள் கட்டுவதற்கான முனைப்பில் இருந்தன. நீர்க்குளியல் இல்லாத பொழுது தங்கள் உடலின் சூட்டைத் தனித்துக் கொள்ள மண்குளியலெடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்த அந்தப் பறவைகள் ஊரெங்கும் படர்ந்திருக்கும் கரிய மண்ணைப் பார்த்து திகைத்தன. பின் அந்த நிறம் தான் அந்த மண்ணின் இயல்பு என்ற எண்ணங்கொண்டவைகளாய் நீண்டு கூர்மையாய் இருக்கும் தங்கள் கால் நகங்களால் மண்ணை பறிக்க ஆரம்பித்தன.

காலையில் வெள்ளை நிறமாய் கருவேலமெங்கும் படர்ந்திருந்த பறவைக்கூட்டத்தைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சும்அடக்கவியலா ஆர்வமும் கொண்டிருந்த அவ்வூர் மக்கள்மாலைப்பொழுது சாய்கையில் அவை ஊரணி மரங்களில் அடைந்து கொண்டிருப்பதைக் கண்டு உடல் வியர்ப்பதும் கால் தடுமாறுவதுமாக முற்றிலும் அதிர்ந்தனர். தங்களுக்கான விடியல் ஒரு போதும் வரப்போவதில்லைதற்பொழுது பார்ப்பது இனி வரும் காலங்களில் தாங்கள் எதிர் கொள்ள வேண்டிய கோர நிகழ்வுகளின் இன்னொரு காட்சிப் படிமம் தான் என்பதை உணர்ந்து தலை கவிழ்ந்தவாறு தத்தம் வீடுகளை நோக்கிச் சென்றனர். அது பற்றி அனைத்தும் அறிந்தோ இல்லை எதுவும் அறியாமலோ பெரும்சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன இறகுகள்,சிறகுகள் என உடல் முழுதும் கரியப்பிய பிசுபிசுப்பில்காலனைப் போன்று கொடூரமாய் காட்சியளித்த அப்பறவைகள்.

நாட்கள் செல்லச் செல்ல அந்தப்பறவைகள் இருக்கும் பகுதியில் இருந்து கொடிய துர்நாற்றம் வீசுத்துவங்கியதுஅந்தப்பறவைகளின் சத்தம் நாராசமாய் ஒலிப்பது போலிருந்தது. அது எப்போதும் மரண ஒலத்தை ஒத்திருப்பதாக உணர்ந்த மக்கள்அவற்றை தங்கள் ஊரிலிருந்து விரட்டியடிப்பதற்கான முடிவினை எடுத்தனர். மறுநாள் விடியலில் ஊரணியின் கருவேலங்களை வெட்டிவிறகைத் தீயிட்டு கரிமூட்டமிட வேண்டும் எனவும் நெருப்புக்குப் பயந்து அந்தப் பறவைகள் மீண்டும் அங்கோ சுற்றுப் புறத்தில் வேறு எங்குமோ தங்காது என்றும் தங்களுக்குள் தீர்மாணித்த தினத்தின் நள்ளிரவில் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகள் படையெடுத்து வந்து வீட்டின் உட்புற பரண்களிலும்படுக்கைகளுக்கு அடியிலும் உரி கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் தாழிகளிலும் குடுவைகளிலும்அடுப்படிகளிலும்கொட்டில்களிலும் ஆக்கிரமிக்கத் துவங்கின. குடியானவர்கள் மயக்கம் கொண்டவர்களைப் போல உறங்கிக் கொண்டிருக்க,திண்ணையில் வெறித்தபடி அதனைக் கண்ணுற்ற முதியவர்கள் இனி வேறு மாதிரியான நரகம் காத்திருக்கிறது என்றும் அது ஜென்ம ஜென்மத்திற்கும் தங்கள் சந்ததியினரைத் தொடரும் தொற்றாக இருக்கும் என்றும் உணரத் துவங்கினர். அவற்றை வாய் திறந்து சொல்லி சிறு எச்சரிக்கையாவது செய்யலாம் என்று எண்ணியவர்களின் நினைவும் சொல்லும் வெவ்வேறாய் பிரிந்து அவர்கள் அது வரை காத்துவந்த அத்தனை மௌனத்திற்கும் சேர்த்து மொத்தமாய் பெருங்குரலெடுத்து கத்தத் துவங்கினர். அது மனம் பிறழ்ந்தவர்களின் கூச்சலாக வெளி வந்தது.

முன்பொரு காலத்தில் சம்சாரியாய் இருந்தவர்களாதலால்பறவைக்கூடுகளை முட்டைகளோடும் குஞ்சுகளோடும் எரிப்பதற்கு அவர்களுக்கு மனம் வரவில்லை. எனவே பறவைகளை முதலில் அப்புறப்படுத்தி விட்டு குஞ்சுகளை பெருவலி ஏற்படா வண்ணம் கொன்று புதைக்க முடிவெடுத்தனர். அவ்வாறே,கரிப்பிடித்து கோர உருவம் கொண்டு அழிவின் முன்னோட்டமாய் தோற்றம் கொண்டிருந்த பறவைகளை நெருப்புப் பந்தங்களைக் காட்டி விரட்டி விட்டு கூடுகளை அடைந்தனர். அங்கே கடின ஓடில்லாமல் மெல்லிய தொலியுடன் கூடிய முட்டைகளையே அந்தப்பறவைகள் பெரும்பாலும் இட்டிருப்பதையும் அவையும் அடைகாக்கப்படும் பக்குவம் முழுவதும் இல்லாமல் பாதி அடையில் தொலி கிழிந்து கருச்சிதைவான பிண்டங்களாய் கூடுகள் தோறும் நிறைந்திருப்பதைக் கண்டனர். அப்படியும் தப்பிப் பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அங்ககீனமாய் விகாரமாய் காட்சியளித்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அங்கே வீசிய துர்நாற்றம் தங்கள் மயக்கமடையச் செய்யும் என்று தோன்றவே உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். அந்தப்பறவைகளின் பிணி குறித்து அச்சம் கொண்டு வெளிறிய பார்வையுடன் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி முத்திரையிட்ட வாகனமொன்று மணியொலிக்க வந்தது.


விவசாயம் பொய்த்துப் போய் பஞ்சம் பிழைக்கவும் வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலங்களை எடுத்துக் கொண்டு அனைவருக்கும் நிரந்தர வேலை கிடைக்குமென்ற உறுதிப்பத்திரம் வாசிக்கப்பட்ட நாளில் நீண்ட யுகங்களுக்குப் பிறகு தங்களுக்கான காலம் மீண்டும் வந்திருப்பதாகவே அவர்கள் மனதார நம்பினர். ஒப்பங்களிட்டு தாரை வார்த்துவிட்டு,  நாளது தேதியில் சம்பளத்துடன்பயணப்படியும்பஞ்சப்படியும் கிடைப்பது பற்றி அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கையில் இரண்டு உலைகள் நிறுவதற்கான வரைவுகளுடன் அரசாங்க இயந்திரம் தன் இரும்புக் கரங்களைப் பதித்து வானம் தோண்ட பள்ளம் பறிக்கஅது காற்று வெளியெங்கும் கரிய நெடியை புழுதி வாறித் தூற்றியது.

(வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டிக்காக எழுதியது:  http://vettibloggers.blogspot.in/2013/11/shortstory5.html )
******

Monday, May 26, 2014

மணமுறிவு நாள்


கடந்த ஒரு வருடத்தில், வழக்குமன்ற வளாகத்தின் பிரத்யேக இடமாக, பூவரசம்பூ உதிர்ந்து கிடக்கும்மிந்த மேடை மாறியிருக்கிறது. இனி ஒரு போதும் இந்த ஊருக்கோ இந்த வளாகத்திற்கோ இந்த மரநிழலில் மணிக்கணக்கில் அமர்ந்து புதினம் வாசிப்பதற்கான சூழ்நிலையோ வரப்போவதில்லை. தூரத்திலிருந்து அழைக்கும் ஒவ்வொரு குரலுக்கும் தலையுயர்த்தி திரும்பிப் பார்த்து தனது முறைக்கான அழைப்பிற்குக் காத்திருக்கும் அவஸ்தை இனியில்லை. சரத்துகளும், உடன்படிக்கை அறிக்கைகளும் ஒப்படைக்கப்பட்டு விட்டன. மனமொத்து  பிரிந்த மணமுறிவுக்கான ஒப்பந்தத்தை நான்காவது முறையாக மீண்டும் நிதானமாக வாசித்தான். எழுத்துகளால் விளக்கவியலாதொரு கசப்பு வரிகளுக்கிடையில் ஊர்ந்து கொண்டே வந்தது. இறுதியாய் ஒரு முறை இந்தப் பிரதேசத்து தேநீரை சுவைக்க விரும்பியவன் சரத்துகளை மடித்து கைகளில் பிடித்தபடி, எதிர்ப்புறம் இருந்த தேநீர் கடைக்குச் சென்று, கடை வாசலில் எதிர்வெயிலை வெறித்துப் பார்த்தபடி நின்றான்.

 மலையடிவாரத்தில் இருக்கும் அந்த ஊருக்கு முதன்முதலில் அவன் வந்த நாளை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாய் இருந்தது. பிறந்து முதலே பெருநகரத்து நெருக்கடியோடும், இடைவிடாத கூச்சலோடும் வாழந்து வந்தவனை, தெற்கத்திப் பகுதியிலிருக்கும் அறிமுகமில்லா அந்த ஊருக்கு அழைத்து வந்ததன் பெயர் தான் விதியோ என்னவோ. முந்திய ஆண்டு புதிதாய் பிறந்த மாவட்டத்தின் தலைநகராக இருந்தாலும் கிராமத்தின் இயல்புகளை தன்னுள்ளே இன்னும் பொதிந்து வைத்திருந்தது அந்த ஊர். நகரத்தின் அடைசல்களில் தனியனாய் சுழன்று திரிந்தவனுக்கு அமைதியான சூழ்நிலையில் மெதுவாய் நெட்டி முறித்து ஊர்ந்து செல்லும் அந்த ஊர் மனதுக்கு இதமாய் தோன்றியது. மூன்று மாதங்கள் அங்கே தங்கியிருக்கப்போகிறோம் என்ற உணர்வே அவனுக்கு உற்சாகத்தையும் மனநிறைவையும் தந்தது. வேலையும் பெரிய அளவில் இல்லை. புதிதாக அமைந்த ஆட்சியர் அலுவகத்தில் கோப்புகளில் ஒழுங்குமுறை பயன்பாடு தொடர்பாக அங்குள்ள அலுவலர்களுக்கு சில பயிற்சிகள் அளிக்கும் குறுகிய கால சிறப்புப் பணிக்காக அங்கே அனுப்பப்பட்ட்டிருந்தான்.

 சிறப்புப் பணி முடித்து, ஊருக்குத் திரும்பிய ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் அங்கே செல்ல அழைப்பு வந்தது. இம்முறை அழைப்பு வந்தது, அந்த ஊரிலிருந்த ஒரு பெண் வீட்டாரிடமிருந்து. அவன் அங்கு இருந்த சமயத்தில் அவன் அறியாத வண்ணம் அவனது குணம், நடத்தை, பணி பாதுகாப்பு, சம்பளம், சொந்தபந்தம் ஒருவருமின்றி தனியாளாய் இருப்பது அனைத்தும் குறித்து விசாரித்திருப்பார்கள் போல. அலுவலகத்துக்கே ஆள் அனுப்பி விட்டார்கள். அவனும் அந்த ஊர் தந்த இனிய அனுபவத்தில் மனம் ஒத்துப் போய், நண்பர்களுடன் வந்து பெண் பார்த்து, பெண்ணும் பிடித்துப் போய், பெரிய அளவில் சம்பிரதாயங்கள் ஏதுமின்றி  எளிமையாய் திருமணமும் செய்து கொண்டான்.

 திருமணமாகி வீடு பிடித்து தனிக்குடித்தனம் சென்றவுடனேயே தெரிந்து விட்டது. அவளால் அந்தப் பெருநகரத்து அடுக்கக வாழ்க்கைக்கு தன்னை பொருத்திக் கொள்ள முடியவில்லை என்று. அவனும் எவ்வளவோ இளக்கங்கள் கொடுத்துப் பார்த்தும் அவளால் நிறை சேர்க்க முடியவில்லை. திருமணமான முதல் மாதமே அவள் மசக்கையாகிவிட அவர்களுக்குள்ளான புரிதல், மலர்வதற்கு முன்பாகவே கருகத் துவங்கியது. விளைவு, தன்முனைப்பு போட்டிகளும், எதற்கெடுத்தாலும் எதிர்வாதமும் என வாழ்க்கை போர்க்களமாக மாறியது. தென்றல் வருட வளர்ந்த அவளால் அந்த நகரத்துப் புழுக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. காயப்படுத்தும் சொற்களை சரளாமாக வீசிப்பழகியவன், வார்த்தைகளை எவ்வளவு குறைத்த பொழுதும் அவற்றின் வெம்மையை அவளால் தாங்க முடியவில்லை. எனவே அவனை குற்றவுணர்ச்சியில் தள்ள புதுப்புது காரணங்களை தானாகவே புனையத் துவங்கியவள், அந்தப் பெருநகரிலிருந்து தன்னை விடுவித்து கிராமத்திற்குள் தஞ்சம் புக எத்தனிக்கும் முயற்சியிலேயே இருந்தாள். அவனும் சிறிது நாட்கள் பிறந்தவீட்டில் இருந்தால் சரியாகி விடுவாள் என்று நினைத்து, அவளை கிராமத்தில் கொண்டு விட்டு விட்டு வந்தான். ஆனால் அவள் மீண்டும் ஒரு போதும் நகரத்திற்குள் வர மாட்டேன் என்று உறுதியாய் சொன்ன போது, அது வரை பிரியமாய் இருந்த அந்த ஊரின் மீதே அவனுக்கு வெறுப்பு வரத்துவங்கியது.

 வேலை மாற்றலாகி அந்த ஊருக்கே வந்து நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று அவள் சொன்ன யோசனை, அவனது தன்மானத்தை உரசிப்பார்க்க, அதற்கான வாய்ப்பு ஒரு போதும் இல்லை என்று அவனை உறுதியாக சொல்ல வைத்தது. அவளும் தனது பிடியை மேலும் இறுக்க, இருவருக்குமே மூச்சு முட்டத் துவங்கியது. ஒரு கட்டத்தில், தற்பொழுது இருக்கும் நிலையில் அவள் மீண்டும் நகரத்திற்கு வரப்போவதில்லை என்பதை உணர்ந்தவன் தற்காலிக ஏற்பாடாக, குழந்தை பிறக்கும் வரை அவ்வப்போது வந்து அவளைப் பார்த்துக் கொள்வதாகவும், குழந்தை பிறந்தவுடன் அவள் தன்னுடன் கட்டாயம் வந்தாகவேண்டும் என்றும் உறுதி செய்தான். அவளும் பிறகு அந்த சூழ்நிலை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று குடும்பத்தினர் சொன்ன யோசனையின் படி சரியென சம்மதித்தாள். சில காலம், ஒழுங்கு இடைவெளியில் வந்து கொண்டிருந்தவன், வேலைப்பளு காரணமாகவும், அலுப்பின் காரணமாகவும், அவளது பிடிவாதத்தின் எரிச்சல் காரணமாகவும் தனது வருகையை குறைத்துக் கொண்டான். போதாத குறைக்கு, அவளது வீட்டாரின் மரியாதைக்குறைவான நடத்தையும், வீட்டோடு மாப்பிள்ளை என்று மறைவில் பேசும் எக்காளமும் அவனை விரக்தி கொள்ளச்செய்தன.

 அவனது வரத்து அநேகமாக அருகிவிட்ட சமயத்தில், அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தத் தகவல அவனைச்சேரவே ஒரு வாரம் ஆகியது. பெண்பிள்ளையின் வரவை கேட்டு, ஆவலுடன் ஓடி வந்தவனுக்கான மரியாதை உவப்பானதாக இல்லை. அந்த ஊரின் பனிக்காற்று அவனை ஊசியால் தொடர்ந்து குத்தத் துவங்கியது அன்றிலிருந்து தான். முள்ளின் மீதான படுக்கையாய் அந்த ஊரின் நினைவு அவனை எப்பொழுதும் உறுத்தத் துவங்கியது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் அவனுடன் வர வேண்டுமென்ற அவனது கோரிக்கையும் எந்தவித சமாதானுமின்றி முற்றாக நிராகரிக்கப்பட்டது. குடும்ப வாழ்வில் தனக்காகப் பேச ஒருவரும் இல்லை என்ற நிதர்சனம் அவனை சுட்டது. தனியனாய் தவித்துக் கிடந்தவனுக்கு அதன் பின், பிள்ளைப் பாசத்தையும் மீறி, அவனுக்கு அந்த ஊரின் மீதும் அவளின் மீதும் அமில ஊற்றாய் வெறுப்பு ஊறத்துவங்கியது. அதற்கேற்றாற் போல, அவனது ஊழ்பயனோ என்னவோ, நகரத்தில் அவனுக்கு இன்னொரு தொடுப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் தான் அவன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க வருவதேயில்லை எனவும் அவளுக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. கணவன் மனைவிக்குள்ளான பேச்சு வார்த்தையோ, தொடர்போ அற்றுவிட்ட நிலையில் அவளும் அதனை நம்பத் துவங்கினாள். நாட்கள் செல்லச்செல்ல அவன் தனக்குத் தேவையில்லை என்ற நிலைக்கு அவள் வந்தாள்

 சபிக்கப்பட்ட ஒரு தினத்தில், அவனிடமிருந்து தனது வாழ்வை விடுவித்துக் கொள்வதற்கான விவாகரத்துக்கோரிக்கையை அவளிடமிருந்து தபாலில் பெற்றான். தனக்கும் அவளுக்கும் இடையேயான சேணிலை உணர்வாட்சி ஒரு போதும் நிகழவில்லை என்று நம்பியிருந்த அவன், இனியும் அதற்கான வாய்ப்பு ஏற்படப்போவதில்லை என உணர்ந்து தானும் சம்மதம் தெரிவித்து பதில் அறிவிப்பு வெளியிட்டான். காலம் மிக சிறந்த விளையாட்டை விரும்பாத மைதானத்தில் வைத்தே நிகழ்த்த விரும்பியது. எந்த ஊருக்கு இனி ஒரு போதும் வரக்கூடாது என்று நம்பியிருந்தானோ, அங்கேயே அவர்களுக்கான விவாகரத்து வழக்கு பதியப்பட்டது. விசாரணை வரும் போதெல்லாம், அவன் நேரில் வந்தாக வேண்டிய கட்டாயம். வேண்டா வெறுப்பாக, வழக்காடு மன்றத்தின் வளாகமே கதியென இருந்துவிட்டு திரும்பிச் சென்றுவிடுவான்.

 இன்று இந்த ஒரு வருடத்துக் மேலான அலைக்கழிப்பில் இருந்து விடுதலை. இனி ஒரு போதும் இந்த ஊரின் திசை நோக்கித் திரும்ப வேண்டியதில்லை என்று நினைத்தவன், கடைசி முறையாக அந்த பிரதேசத்துத் தேநீரை சுவைக்க விரும்பி அருகிலிருந்த தேநீர்க்கடைக்குச் சென்றான். அந்தி சாயும் வெயிலை வெறித்துக் கொண்டிருந்தவன், தேநீர் வந்ததும் ஆவி பறக்கும் கண்ணாடிக் குவளையில் உதடு பதிக்கையில், தூரத்தில் “அப்பா” என்ற குரல் ஒலிப்பதை உணர்ந்தான். குரல் கேட்ட திசையில் தன்னிச்சையாய் திரும்பிப் பார்த்தவன், அது தனக்கானதில்லை என்று உணர்ந்த நொடி, உயர்ந்த தலையைத் தாழ்த்தி தேநீர் குவளைக்குள் முகத்தை அமிழ்த்துக் கொண்டான். தேநீர் லேசாக உப்புக் கரித்தது.

******
மலைகள் இணைய இதழில் வெளியான எனது சிறுகதை: http://malaigal.com/?p=4769
******

Monday, May 19, 2014

வாழ்த்துகள் திரு.பிரதமர் அவர்களே !

இலாபமோ, நஷ்டமோ இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிறவர்கள் இவர்கள் தாம். வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவோம் என்று பரப்புரை செய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். மாற்றுக்கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்தவர்களுக்கும் சேர்த்து தான் “மோடி” பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பொறுப்பில் இருந்தவர்களிடம் அதிகாரம் இல்லை, அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்கள் நேரடியாக எந்த முடிவுகளுக்கும் பொறுப்பேற்கவில்லை என்ற நிலையிலேயே கடந்த பத்தாண்டு ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. தன்முனைப்பின்றியும், வேண்டாவெறுப்பாகவும் சூழ்நிலைக்கைதியாக தலைமைப் பொறுப்பை வைத்திருந்தவரிடமிருந்து, “எனக்கு 60 மாதங்கள் மட்டும் தாருங்கள், நான் வளமான எதிர்காலத்தைத் தருகிறேன்” என்று சூளுரைத்தவரிடம் அடைக்கலம் அடைந்திருக்கிறது பதவியும், அதிகாரமும். அவர் அதனை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார், நாட்டின் இறையாண்மைக்கும், வளர்ச்சிக்கும், முக்கியமாக சிறுபான்மையினர், ஏழை எளியவர்கள் என நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் எவ்வாறு அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கைமுறையை வழங்கப்போகிறார் என்று உலகமே உற்று நோக்குகிறது. மோடி அவர்களுக்கு மக்கள் அளித்திருப்பது வெற்றி அல்ல, மிகப்பெரிய வாய்ப்பு. 

பலமான எதிர்க்கட்சிகள் இல்லாமல், மிகப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருப்பவர்கள், தங்களுக்கான எல்லைக்கோட்டை தாங்களே நிர்ணயம் செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இது மிகவும் சவாலான பணி. தங்களை நம்பி அருதிப் பெரும்பான்மை வழங்கியிருக்கும் மக்களுக்கு நேர்மைக்கேடு செய்யாமல் இருப்பதே நல்லது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருக்கும் நிலையில், ஊடகத்துறை எதிர்க்கட்சியாக செயல்படுவதே நல்லாட்சி வழங்க ஏதுவாயிருக்கும்.  வெற்று பிம்பங்களை ஊதிப் பெரிதாக்காமல் அரசின் தவறுகளை சரியாக சுட்டிக்காட்ட வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்” - இது அனைவருக்கும் தெரிந்தது தான். குற்றங்களை எடுத்து உணர்த்துபவர்கள் இல்லையென்றால, அந்த அரசு தானே கெடும். அதே சமயம், எதிர்க்கட்சிகளும் வெறுப்பரசியலைக் கையிலெடுத்துக் கொண்டு, சாமான்ய மக்களை பயமுறுத்தும் வேலையை செய்யாமல் நாட்டின் வளர்ச்சிக்காகவும், அமைதிக்காகவும் பிரதமருடன் கைகோர்க்க வேண்டியது அவசியம். நல்ல திட்டங்கள் வரும் பொழுது, அரசியல் நிலை காரணமாக வாழ்த்த முடியாவிட்டாலும் மௌனமாக இருப்பது கூட சிறந்ததாக இருக்கும். அதை விடுத்து மக்களை அச்சுறுத்தும் வகையில் பிரச்சாரங்கள் செய்து தேவையில்லாத குழப்பங்களுக்கு வழிவகை செய்யாமல் இருக்க வேண்டும். ஊழல் கறை படிந்து புரையோடிப்போயிருக்கும் அரசுத்துறை வழிமுறைகளையும், அதள பாதாளத்தில் இருக்கும் நிதிநிலைமையையும் சீர்செய்ய ஆளும்கட்சிக்கு சில காலம் தேவைப்படலாம். அரசியல் விமர்சகர்களும், நடுநிலையாளர்களும் அதற்கான நியாயமான் அவகாசத்தை அவர்களுக்கு வழங்குவதே சிறந்தது. 

முறையான சந்தைப்படுத்துதலும், கவர்ச்சிகரமான விளம்பரங்களும் ஒரு பொருளை நல்ல விலைக்கு விற்க உதவும். ஆனால் முறையான வாடிக்கையாளர் சேவையும், பராமரிப்பும் இருந்தால் மட்டுமே அந்த பொருள் சந்தையில் நிலைத்து நிற்கும். தனது தேர்ந்த அனுகுமுறையால் தெளிவான விளம்பர யுக்தி கொண்டு, இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி காஷ்மீர் முதல் கடைக்கோடி கன்னியாகுமரி வரை தனது பிம்பத்தை மக்கள் மனதில் பதியவைத்து, தான் வந்தால் மட்டுமே நாட்டுக்கு சுபிட்சம் பிறக்கும் என்று நம்ப வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் மோடி. அரசியலை ”சேவை” என்பதைத் தாண்டி ஒரு தொழிலாக ஏற்றுக்கொண்டாலும் கூட, தனக்குக் கிடைக்கும் நியாமான ஊதியத்தைக் கொண்டு, அதன் வாடிக்கையாளர்களான மக்களுக்கு சிறப்பானை வசதிகளை செய்து கொடுக்க முடியும். இந்தத் தொழிலில் பரிவர்த்தனை அரசுக்கும், மக்களுக்கும் இடையே மட்டும் தான். இடைத்தரகர்களான பெருமுதலாளிகளுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டால் நலம். 

மக்கள் காத்திருக்கிறார்கள், கவனிக்கிறார்கள் ...!

வாழ்த்துகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் அவர்களே !

******

Friday, May 9, 2014

முதல் தாயம்


முழுதாய் பத்து மணிநேரம் கரைந்திருந்தது, அவன் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து. அதற்கு முன் மூன்று மணி நேரம் வெளியே வரிசையில் காத்திருந்தது வேறு. பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான தேர்வு என்றாலும் ரேஷன் கடை போல அடித்துப் பிடித்துக் கொண்டு தான் இடம் பிடித்து உள் நுழைய வேண்டியிருக்கிறதுபெருகிக் கிடக்கும் கல்லூரிகளின் புண்ணியத்தில் ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வெளியே வரும் புதுமுக பொறியாளர்களின் எண்ணிக்கை அவ்வளவு இருக்கிறதுசுற்றுமுற்றும் அனைவரும் மிக பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தாலும் தன்னை ஒருவரும் கண்டுகொள்ளாமல் தனித்தீவில் இருப்பது
 போன்ற ஒரு பிரமை.

இவ்வளவு நேர காத்திருப்பில்இடையில் அவ்வப்பொழுது தேநீர் அருந்துவதற்காகவும், சிறுநீர் கழிப்பதற்காகவுமே இடத்தை விட்டு நகர்ந்தது. உணவருந்தவென்று எந்தவொரு இடைவேளையும் விடப்படவில்லை. நடுவே நேரமேற்படுத்திச் சென்று, சாப்பிட்டு விட்டு வரும் மனநிலையும் இல்லை. உடல் அயற்சியை மீறி மனபாரம் தான் பெரும்பாறையாய் அழுத்தியது. ஏனோ, இது தான் கடைசி வாய்ப்போ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதில், ஐம்பதில் வந்து நின்றது தற்பொழுதைய கணக்கு. இறுதிச்சுற்று முடிவிற்காக ஐம்பது பேரில் ஒருவனாய் அவன் காத்திருந்தான்.

பள்ளிப்படிப்பு முடிந்துமாநிலத்தின் பெரிய அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்ததும்குடும்பத்தின் மொத்த நம்பிக்கையும் அவன் மீது ஏற்றப்பட்டதுகல்லூரிக்குள் நுழையும் போதே, குடும்பத்தினர் அனைவராலும் மந்திரித்து அனுப்பப்பட்ட ஒரே சொல். “படிச்சு முடிக்கும் போது வேலையோடு தான் வெளியே வரனும். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மதியதர வர்க்கத்தில் குடும்பத்தின் மூத்த பிள்ளை மீதும் இருக்கும் பிரத்யேக எதிர்பார்ப்புகளுக்கு அளவுண்டாஎன்ன! அவனும் அதற்கேற்றவாறு தன்முனைப்புடன் படித்தான்எந்தவித அவச்சொல்லுக்கும் இடம் தராமல் தன் எல்லைகளை சிறுகச் சிறுக விரித்து துறை அளவிலும்கல்லூரி அளவிலும் சிறந்தே விளங்கினான்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில்திருவிழாவாய் வளாகத்தேர்வு வைபவங்கள் துவங்கினமிகப்பெரிய நிறுவனங்களிடம் தங்களை இணைத்துக் கொள்ள மிக எளிய வாய்ப்பு இந்த வளாகத்தேர்வு.   மாணவர்கள் அனைவருக்கும் அத்தேர்வின் முக்கியத்துவம் தெரிந்தே இருந்ததுஒவ்வொரு தேர்வுக்கும் அவனும் பிரத்யேகமாக தயாரித்துக் கொண்டாலும் இறுதியில் ஏதேனும் ஒரு முட்டுக்க்ட்டை அவனது வெற்றியை தடுத்துக் கொண்டே இருந்தது.இறுதிச்சுற்று வரை முன்னேறி கடைசியாய் வெளியேறுபவனாய் வெகுவிரைவிலேயே கல்லூரி முழுவதும் பிரபலம் ஆகியிருந்தான்.

இன்னது தான் பிரச்சனை என்று தெரிந்து கொள்ள முடியாதது தான் அவனது பெரும் பிரச்சனையாக இருந்ததுஎழுத்துத்தேர்வுகுழுவிவாதம்தொழில்நுட்ப நேர்முகத்தேர்வுமனிதவள நேர்முகத்தேர்வு என்று பல படிகள் இருந்த பொழுதும்எல்லா நிறுவனங்களும் ஒவ்வொரு வரிசையில் இந்த தேர்வு முறைகளை நடத்துவார்கள்எந்த முறையாக இருந்தாலும் மிகச்சரியாக கடைசி சுற்றில் கடைசியாக வெளியேறுபவாக அவன் இருந்தான்தவறு எங்கு என்று தெரிந்தாலாவது சரி செய்து கொள்ளத் தயாராகவே இருந்தான்.இருந்தாலும் எங்கு இடர்கிறான் என்ற ஆணிவேர் மட்டும் புலப்பட்டதே இல்லைஎல்லாம் சரியாக செய்தது போலவே தான் தோன்றும்இறுதிப் பெயர்ப்பட்டியலில் அவன் பெயர் மட்டும் எப்படியோ ஒவ்வொரு முறையும் விடுபட்டுப் போகும் 

மற்ற துறை பேராசிரியர்களும்விரிவுரையாளர்களும் அவன் படிக்கும் துறையின் ஆசிரியர்களிடம் பேசும் போது உங்க டிபார்ட்மெண்ட்ல வளர்த்தியா ஒரு பையன் இருப்பானேஎல்லா கேம்பஸ் இண்டர்வ்யூலயும் கடைசி ரவுண்ட் வரை போவானேஅவன் ப்ளேஸ் ஆகிட்டானா?”  என்று கேட்டுக்கொள்ளும் அளவுக்கெல்லாம் இருந்தது.

ஒவ்வொரு வளாகத்தேர்வின் முடிவிலும் நண்பர்கள அவனை தேற்ற வந்தாலும் கூட அவர்களுக்கு அவன் ஆறுதல் கூறி அனுப்புவான். ”ஒன்னும் பிரச்சனை இல்லைவிடுங்கடா... என்னைப் போன்ற ரிசோர்ஸை உபயோகிக்க அந்த கம்பெனிக்கு கொடுத்து வைக்கல.. எனக்கான ஐடியல் கம்பெனி நிச்சயம் எங்கேயோ இருக்குஅதுவும் நானும் இன்னும் நேருக்கு நேர் சந்திக்கலை.அப்படி நடக்குற நாள் என் மேஜிக் துவங்கும்”. நண்பர்களும் உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமாடா” என்று சிரித்துச் செல்வார்கள்.

ல்லூரி முடித்து பெருங்கூட்டமாய் இந்த மாநகருக்கு வந்து சேர்ந்து, ஒவ்வொரு அலுவலகமாய் ஏறியிறங்கிய உற்சாகமெல்லாம் சில மாதங்களிலேயே வடிந்து விட்டது. மயிரிழையில் தவறவிட்ட வளாகத்தேர்வு வாய்ப்புகள் கொடுங்கனவாய் துரத்தத்துவங்கிய இரவிலிருந்து, அதனை வென்று வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு வேகவேகமாய் தாவிச் செல்லும் நண்பர்களுடனான ஆத்மார்த்தமான உறவு மெதுவாக பொறாமைக்குரியதாய் மாறத்துவங்கியது. இயலாமை வெறுப்பாய் மாறிய போது, மௌனம் மிகப்பெரிய தடுப்புச்சுவராய் மாறி, உள்ளெரியும் தீயை மறைத்துக் கொள்ள உதவியது. கொடும்பசியில் தூங்குகின்றவனை தட்டி எழுப்பி, இன்று உனக்கு உணவு இல்லை, படுத்துறங்கு!” என்று கூறிச் செல்லும் அசரிரியாய்த்தான் ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் இருந்தது. பகல்வேளையில் தனியனாய் அறையில் அமர்ந்திருக்கும் போது பெருங்குரலெடுத்துக் கத்தி, சுற்றிச் சுற்றி கண்ணாமூச்சு காட்டிக்கொண்டிருக்கும் கடவுளை பளாரென கன்னத்தில் அறையத் தோன்றும்.

கல்லூரி சமயத்தில் விட்டேர்த்தியாய் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் கூட, எப்படியெப்படியோ பணியில் சேர்ந்து தங்களது அன்றாட அட்டவனையை ஏதோவொரு விதத்தில் பூரித்தி செய்து கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய முக்கியத்துவம் தந்து பொறுப்புடன் நடந்து கொண்ட தனக்கான வாய்ப்பு மட்டும் எப்பொழுதும் இறுதி நிலை வரை கூட வந்து, வெற்றிக்கோட்டைத் தொடும் அந்த நிர்ணயிக்கும் நொடியில் கைநழுவிப் போவதற்கான காரணம் ஏனென்று புரிந்ததில்லை. உற்சாகக்குறைவு நிரந்தரமாகத் தங்கத் துவங்கினால, தனக்கான குழியைத் தானே வெட்டுவது போலாகி விடும் என்று உணர்ந்த தருணங்களில் தன்னம்பிக்கை உதாரணங்களை முன்னிறுத்தி ஒரு உந்துதல் கொடுப்பதற்காக, தோல்வி குறித்து மனதுக்குள் கூறிக்கொண்ட வெற்று சமாதானங்கள் எல்லாம் தீரத் துவங்கி விட்டன.

மலையுச்சி வரை மூச்சு முட்ட ஏறி, இறுதியில் விளிம்பினைப் பிடிக்கத் தவறி மீண்டும் கீழே விழுந்த ஒரு நாள், தோற்றுத் தான் போய் விட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. அந்த ஒரு நொடி, இத்தோடு முடித்துக் கொள்ளலாம்!”என்ற சாத்தானின் அழைப்பை, எப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு சிலிர்த்துக் கொள்ளும். தற்கொலையுணர்வினை சுவைத்த அந்த ஒரு நொடி எவ்வளவு மகத்தானது. அவ்வாறான ஒரு உணர்வு இனியொருபோதும் துளிர்க்கக் கூடாது!” என்று உள்ளுக்குள் சபதமெடுத்துக் கொண்டாலும், வாழ்வின் முழுமைக்கும் அந்த நொடியின் கசப்பை நினைவடுக்குகளில் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள்  வலுப்பெற்றுக் கொண்டே வந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிலிருந்த ஒவ்வொரு பெயராக எச்சரிக்கையாக உச்சரிக்கப்பட்டு, ஒலிபெருக்கி வழி அதிர்ந்து கருத்தரங்கக்கூடத்தின் உட்கூரையெங்கும் எதிரொலித்து, காத்திருந்தவர்களின் காதுகளை துளைக்கத் துவங்கியது. ஆரம்ப கால பரபரப்புகள் இப்பொழுதெல்லாம் வற்றி தூர்ந்து விட்ட போதும்,  பிறைத்துக் கிடக்கும் சூரியன் போல தன்னை நினைத்துக் கொண்டு, விடியலுக்கான நேரத்தை நோக்கி கண்களை தாழ்த்தி, பற்களை கடித்துக் கொண்டு செவிகளை மட்டும் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கையில்... வானில் வெகுதூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த பறவை கண்படும் தூரத்தில் வட்டமடித்து, இறுதியில் சிறகை விசிறி விசிறி வந்து அருகிலுள்ள மரக்கிளையில் அமர்வது போல, பறவையின் அமர்வின் மெல்லிய அதிர்வில், கிளையில் ஒட்டிக் கொண்டிருந்த சருகு மெதுவாய் விடைபெற்று, ஆடியசைந்து கீழிருக்கும் கிணற்று நீரினில் விழுந்து மிதப்பது போல, சருகின் படர்வில் நீரினுள் நீந்திக் கொண்டிருந்த மீன் லேசாக விலகி வட்டமடித்துச் செல்வது போல... அவ்வளவு இயல்பாய் நிகழ்ந்துவிட்டது அந்த நிகழ்வு. அதனை எதிர்கொண்ட அவனது செவி தான் தாங்கமாட்டாமல் தகவலை மூளைக்கு அனுப்பி விட்டு அடைத்துக் கொண்டு விட்டது. மூளையோ உச்சரிக்கப்பட்ட பெயருடன் நாளையை இணைத்து பெரும்பாய்ச்சலாக மொத்த உதிரவோட்டத்தையும் இதயத்திற்கு மடைமாற்றி, எக்குத்தப்பாய் துடிக்க விட்டுவிட்டது. இதயத்தின் துடிப்பு அரங்கமெங்கும் பெருங்குரலெடுத்துக் கத்தியது. ஹ்ம்ம்ம்... இந்தத் திறப்பிற்குத் தான் இத்தனை நாள் காத்திருப்பு... சிறிது நேர இந்த உணர்வுக்கிளர்ச்சிக்குப் பின் மனது மெதுவாக சமநிலையடைந்து பணியாணையைப் பெற்றுக் கொள்ள எழுகையில், தரையில் அவனது கால் அழுத்தமாகப் பதிந்தது. ஆட்டத்திற்கான முதல் தாயம் விழுந்து விட்டது. பயணம் துவங்கியது.

(வெட்டி பிளாகர்ஸ் - சிறுகதைப்போட்டி 2014க்காக எழுதியது: http://vettibloggers.blogspot.in/2014/01/71.html)
******

Wednesday, May 7, 2014

நினைவு


கண்ணாடி சட்டத்துக்குள்
சாஸ்தவமாயிருக்கும்
செம்பருத்தியின் புன்னகையை
ஏக்கத்துடன் பார்க்கிறது
ஊர்ந்து செல்லும் எறும்புச் சாரை.

குளிரூட்டப்பட்ட அரங்கிற்கு
வெளியிலிருந்து எட்டிப்பார்க்கும்
பட்டாம்பூச்சியை நினைத்து
விசனம் கொள்கிறது
உறைந்திருக்கும் பூவின் ஆன்மா.

*****