Thursday, August 18, 2011

உலர்த்திக் காயப்போட்டிருக்கும் விதை நெல்



இந்த 'டீம் அன்னா'னா யாரு, மிஸ்டுகால் கொடுத்தா, SMS 10 பேருக்கு ஃபார்வேட் பண்ணா புரட்சி வெடிக்கும்னு சொன்னாய்ங்களே, அந்த குரூப் தானே பாஸ்?

வங்கிகளின் கண்காணிப்பு கேமிராக்கள் வாடிக்கையாளர்களை மட்டும்தான் பார்க்குமா? அரட்டையடிக்கும், குமுதம் படிக்கும் அலுவலர்களை கண்டுகொள்ளாதா?

ஆடி மாதத்தில், நாம் தூங்கும் நேரத்தை மாரியம்மன் கோவில் மைக்செட்காரர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் # விடிகாலை 5 மணிக்கு 'ஆடி வாறா மாரி ...'

'நான்' என்று எழுதாமல், 'நாம்' சென்றோம் 'நாம்' வந்தோம் என்று பதிவெழுதுபவர்கள் பத்திரிக்கைக்காரர்கள். # வெளியே ஒரு உருவம்,உள்ளே பல ரூபங்கள்

’கே’டிவியில் 'முத்து’ திரைப்படம்.ரஜினி யாரையோ நினைத்து மீனாவிடம் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்.அல்லது நாம் அப்படி நினைத்துக்கொள்கிறோம்

விலங்கு இறந்ததும், அதற்கு வைக்கப்பட்ட விஷமும் உடன் இறக்கிறது #படித்ததில்பிடித்தது

நடிகர் விக்ரமின் அனைத்து பேட்டிகளிலும் ஒரு 'லபக்குத்தன்மை' இருப்பதை கவனித்திருக்கிறீர்களா!!! ( வீரா இஸ் ய ஸ்வீட் கேரக்டர் யு நோ...)

கிரிக்கெட்டில் வேணுகோபால்ராவ், ரஜத்பாட்டியா, லெக்ஷ்மிரதன்சுக்லா, முரளிகார்த்திக் போன்றோரை கவனிக்கிறீர்களா? நீங்கள் என் இனம்.

அதிகாரத்தையும், செல்வாக்கையும், புகழையும் இப்பொழுதெல்லாம் பணமாக மாற்றி வைத்துக் கொள்ளும் கலையை கற்க ஆரம்பித்து விட்டார்கள் பிரபலங்கள்.

மங்குனிப்பாண்டியர்கள் என்பவர்கள் போரில் வெல்பவர்களும்அல்ல,தோற்பவர்களும்அல்ல.வேடிக்கைபார்த்து கருத்துசொல்லும் புனிதமான இடத்தை சேர்ந்தவர்கள்

சமூக வலைத்தளங்களில் "அடங்கமறு, அத்துமீறு!" ... சமூகத்தில் "அடங்கு, அப்பீட்டாகு!"

உருகிஉருகி எழுதிய கவிதையை படித்துவிட்டு நண்பன் நக்கலாக சிரித்தான்.இந்த‘டீஸர்’கூட உனக்கு புரியலையான்னு நானும் சிரித்து சமாளித்தேன் #யாருகிட்ட

பிரபல எழுத்தாளர்களின் பெயர்தெரியா வாசகர்கள் நுன்னறிவுபடைத்தவர்கள், எழுத்தாளர்கள் சொல்ல விரும்பும் பதிலுக்கான கேள்விகளையே எப்போதும் கேட்கிறார்கள்

கறுப்பு பணத்திற்கு எதிரான பாபாராம்தேவ் உண்ணாவிரதம் அபாரவெற்றி #முதல்ல பாபாவிடமிருந்தே ஆரம்பிக்க சிபிஐ முடிவு #பாஸ், அந்த தீவை மறந்துறாதீங்க‌

'பச்சை'யை சமாளிக்க 'மஞ்சள்'உதவியது.இப்போ 'சிவப்பு'க்கு எதிர்ப்பான் என்னன்னு கண்டுபிடிக்கனுமே #எங்கள் ஆடைகளையும் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்

உங்களை 'நுன்மான் நுழைபுலம் பெற்ற சிறந்தவிமர்சகர்' என்றே நினைத்திருந்திருப்பேன், நீங்கள் உங்கள் முதல்கவிதையை எழுதாமலே இருந்திருந்தால்! ;)

உங்களை 'நுன்மான் நுழைபுலம் பெற்ற சிறந்தவாசகர்' என்றே நினைத்துக்கொண்டு இருந்திருப்பேன், நீங்கள் உங்கள் முதல்கவிதையை எழுதாமலே இருந்திருந்தால் ;)

பலே திருடன் என வரையப்படும் 'கபாலி'க்கு எப்போதும் ஏன் கோடு போட்ட பனியனும், கைலியும் மட்டுமே அணிவிக்கப்படுகிறது. # வேட்டிசட்டை?கோட்சூட்??

496/500 எடுத்த மாநிலத்தின் முதல் மாணவியிடம் சன் டி.வி. நிருபர் கேக்குறார், "எந்த பாடத்துல மார்க் குறைந்ததுன்னு நினைக்கிறீங்க?" :(

ஜிலேபிக்கும், ஜாங்கிரிக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து ஏதேனும் திறனாய்வுக் கட்டுரை வந்துள்ளதா?

ஏதோவொரு நெடுந்தொடரில், 'மனுசன்னா நீதி,நேர்மை,மனசாட்சி இருக்கனும்' னு பேசிட்டிருந்தார் 'மகாநதி' துலுக்கானம். ம்ம் எப்படி இருந்த மனுசன் :(

தமிழ்சினிமாவில் கல்லூரி நண்பர்கள் சேர்ந்து புரட்சியெல்லாம் செய்கிறார்கள். இங்கே ஒரு 'டீ'க்கு காசுகொடுக்க மூக்கால்அழுகிறான் உயிர்த்தோழன் :(

சகுனமே சரியில்லை. ரஜினி 'ராணா' படத்தை நிறுத்திடுவார் என்று தான் நினைக்கிறேன். # நிறுத்துனா ஜக்குபாய், வந்தா பாபா?

கடவுள் இறந்த பிறகு தான் அடுத்த கடவுளுக்கான தேவையும் தேர்தலும் துவங்கியது. 

வீட்டில் "திருந்தாத ஜென்மம்" என்று வாழ்த்துப்பெற்றவர்கள் தாம் நாட்டை திருத்த கிளம்பி விடுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பஞ்சர் கடை முன் வண்டி பஞ்சராவது, என் அதிர்ஷ்டமா இல்லை கடைக்காரர்களின் தொழில் ரகசியமா?

கிரிக்கெட் வர்ணனையில் மைக்குடன் கங்குலியைப் பார்க்கும் பொழுது, படையப்பாவில் சுடிதார் அணிந்து, வீணை வாசிக்கும் ரஜினி நினைவுக்கு வருகிறார் :(

நான் கூட விக்கிலீக்ஸ்னா பெரிய புலனாய்வுப் புலி ரேஞ்சுக்கு நினைச்சுட்டேன் #நம்ம ஜல்லிக்கட்டுக்கு ஸ்பெயினிலிருந்து கமெண்ட்ரி தர்ற மாதிரி தான்

கிட்டாதாயினும் கிட்டக்கப் போய் என்னன்னு பார் !

நடுநிசி நாய்களைப் பார்க்க நேரிடும் போது தான், தவமாய் தவமிருந்தவர்களின் மேல் மதிப்பு கூடுகிறது.

விருந்துகளில், "ஒன்னு சரக்கு தீரனும், இல்லை நான் தீரனும்!" என்று முழுமூச்சாய் இறங்கியடிக்கும் நண்பர்கள் மகிழ்வூட்டுகிறார்கள்.

ஹோட்டலில் சில்லிபரோட்டா சாப்பிடாமல் ஏன் போயும் போயும் இட்லி, தோசை ஆர்டர் செய்கிறார்கள் என்று பரிதாபப்பட்ட பால்யம் அழகாக இருந்தது.

தாம் குடிப்பதை பெருமையாக பறைசாற்றிக் கொள்பவர்ளை, "குடிகாரர்கள்" என்று சொன்னால் மட்டும் தன்மானம் சிலிர்த்தெழுந்து சினம் கொள்வதேன்?

Tuesday, August 16, 2011

ஒரு கதை சொல்லவா?


இன்று வண்டிக்கு பெட்ரோல் போடும் போது, முன்னூறு ரூபாய்க்கு போடச் சொல்லி விட்டு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். ‘பங்க்’கில் இருந்த நபர் முன்னூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு மீதி ஆறு ஐம்பது ரூபாய் நோட்டுகளாக மொத்தம் முன்னூறு ரூபாய் கொடுத்தார். எண்ணிக் கொண்டே பர்ஸில் வைக்கச் சென்ற நான் இதை கவனித்து விட்டு மீண்டும் ரூபாயை அவரிடமே கொடுத்து, “சரியா எண்ணிப் பார்த்து கொடுங்கண்ணே!” என்றேன். அவரும் எண்ணிப் பார்த்து விட்டு இரண்டு ஐம்பது ரூபாய் தாள்களை எடுத்துக் கொண்டு சரியான சில்லரையான இருநூறு ரூபாயை கொடுத்து விட்டு, “ரொம்ப நன்றி சார், ரொம்ப ரொம்ப நன்றி சார்” என்றார். நான் லேசாக சிரித்துக் கொண்டே, “பரவால்லண்ணே!” என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பினேன்.

ஆனால் இந்த கதையை நீங்கள் கேட்கும் போது, மீதி முன்னூறு ரூபாயை பர்ஸுக்குள் வைக்கப் போன அந்த ஒரு நொடியின் சபலத்தை மறைத்து விட்டுத் தான் சொல்வேன். பரவாயில்லையா?

Monday, August 15, 2011

மூன்றை எடுத்த பின்னிருக்கும் முடிச்சு


"மூன்று முடிச்சு" தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் 'ஸ்ரீ' க்கு நன்றி.

மூன்று என்று எண்ணிக்கையில் இல்லாமல் பொதுவாக எழுதலாம் என நினைக்கிறேன். அப்புறம், இதை புறம் சார்ந்த விஷயமாக கருதாமல் அகம் சார்ந்து எழுத முயற்சிக்கிறேன். 

விரும்பும் விஷயம்

தனிமை
அதுவும் இரவில் விடுதி அறையில் கரண்ட் போகும் சமயம் கதவு, ஜன்னல் மற்றும் வெளிச்சம் வரும் எல்லா வழிகளையும் அடைத்து விட்டு இருட்டை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு இருப்பேன். தனிமை - அமைதி. 

விரும்பாத விஷயம்

தற்பெருமை
ஒருவர் தொடர்ந்து தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் என்னால் ஒன்றி இருக்க முடிவதில்லை, பெரும்பாலும் ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன், சில சமயம் லேசான மனநிலையில் இருக்கும் போது ஏதேனும் சுயபுராண பார்ட்டி மாட்டினால் நான் சொல்லும் ஓரிரு ‘கமெண்ட்டில்’ டோட்டல் டேமேஜ் ஆகிவிடுவார் 

பயப்படும் விஷயம்

எனது கோபம்
பூச்சி போல அமைதியாய் ஊர்ந்து கொண்டிருக்கும், ஆனால் ஒரு முறை கொட்டினாலும் வலி உயிர் போய் விடும். ’தேள்’ கொட்டக்கூடாது என்று நினைப்பதில்லை, அதே போல் கொட்ட வேண்டும் என்றும் நினைப்பதும் இல்லை.

புரியாத விஷயம்

நான் தான்.
’வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வது’ என்று தான் நினைக்கிறேன். ஆனாலும் எதையோ தேடுவது போல தோன்றிக் கொண்டே இருக்கிறது. எதைத் தேடுகிறேன் என தெரியாமலே ரொம்ப சின்ஸியரா தேடிட்டு இருக்கேன். இலக்கு இன்னும் பிடிபடவில்லை.

மேஜையில் உள்ள பொருள்

இப்பொழுது மடிக்கணினி வைத்து தட்டச்சு செய்து கொண்டிருக்கும் மேஜையில் மடிக்கணினி மட்டுமே இருக்கிறது. இது நான் சிறு வயது முதல் வீட்டுப்பாடம் எழுத பயன்படுத்தும் சின்ன ‘ரைட்டிங் டெஸ்க்’

சிரிக்க வைக்கும் விஷயம்/மனிதர்கள்

சமீபத்தில் சிரிக்க வைத்தவர்கள், கோவை சரளாவும், தேவதர்ஷினியும் - ’காஞ்சனா’ படத்தில்.

தற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்

அன்றாட அலுவல் போக, நல்லபடியாய் முடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் துவங்கியிருக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்பு

வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

ஒரு கல்வி நிறுவனம் துவங்க வேண்டும்

உங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்

காரியம் எதுவாகினும், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று நம்புகிறேன்.

கேட்க விரும்பாத விஷயம்

நம்பிக்கைக்குரியவர்களின் பொய் - இதை மட்டும் எப்போதும் ஒத்துக் கொள்ள மனம் வருவதேயில்லை.

கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்

முன்பு புல்லாங்குழல், இப்பொழுது கணினி வரைகலை. பிறகு வாய்ப்பு அமைந்தால் ‘கார்ட்டூன் பொம்மைகளுக்கு’ குரல் கொடுக்க வேண்டும்

 பிடிச்ச உணவு வகை?

முன்பு நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு எழுப்பி ஊட்டிவிடப்பட்ட பட்டர் பன், முட்டை பரோட்டா. இவற்றின் சுவை இப்போதும் நாக்கில் ஒட்டிக் கொண்டுள்ளது.

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்

முணுமுணுப்பதெல்லாம் இல்லை, ஆனால் ஒருவர் பாடக் கேட்டால் கரைய வைக்கும் “கங்கைக்கரைத் தோட்டம்...”
   
பிடித்த படம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியாய் போய் படம் பார்க்க பிடிக்காமல், பெங்களூரிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த நண்பனை, வழியில் மதுரையில் இறங்க வைத்து, முதன்முதலாய் பிளாக்கில் டிக்கெட் எடுத்து இரண்டாவது வரிசையில் கழுத்து வலிக்க வலிக்க பார்த்து ரசித்த படம் “ஆட்டோகிராப்”, ஏமாற்றவில்லை ... ம்ம்ம் அது ஒரு காலம் :)

இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்

தன்னம்பிக்கை

இதை எழுத அழைக்கப்போகும் நபர்

அண்ணன் முரளிகண்ணன் - நேரம் இருந்தால் எழுதுங்களேன். 

-- 
நட்புடன், 
பாலகுமார்.

Wednesday, August 10, 2011

'வலசை' புதிய காலாண்டிதழ் துவக்கம் - வாழ்த்துகள்

நண்பர்கள் நேசமித்ரன், கார்த்திகைப்பாண்டியன் இருவரும் இணைந்து 'வலசை' எனும் புதிய காலாண்டு இதழைத் துவக்கியிருக்கிறார்கள்.

'வலசை' என்பதற்கு பறவைகளின் இடப்பெயர்ச்சி என்று பொருள் சொல்லப்படுகிறது. நண்பர்கள் என்ன பொருளில் இப்பெயரை சூட்டியுள்ளனர் என்றும், இதழின் உள்ளடக்கம் குறித்தும் அறிய ஆவல். 

இதழ் வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.




***

Saturday, August 6, 2011

தகத்தாய சூரியன் - சிறப்பு கார்ட்டூன் கிறுக்கல்

பொழுது போகாத பொழுதில் கிறுக்கியவை 

(பெரிதாக பார்க்க, படங்களின் மேல் சுட்டவும்)

1. பறக்க நினைப்பவர்களுக்கான பிரத்யேக யோகாசனம். கொதிக்கும் என்ணெய் சட்டியின் மேல் தியானிப்பவர்கள் ஒரே 'தம்'மில் பறந்து விடலாம்.


2. தகத்தாய சூரியனின் "கோர்ட் சீன்"


3. ரயில் பயணத்தின் 'சன்னல்' பார்வையில் பதிந்த சென்னை


உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.