Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Wednesday, October 9, 2019

குருவிகள் திரும்பும் காலம்


அழியும் ஊரின் சாட்சியங்களாய் வெற்றுத் திண்ணையைக் காத்துக்கிடந்த முடமான வயசாளிகளும், வாழ்ந்துகெட்ட ஞாபகத்தின் பாரத்தை சுமந்தபடி எந்தவித எதிர்பார்ப்புகளின் தளிரும் துளிர்விடாதபடியான கட்டந்தரை மனதோடு நடைபிணமாய்த் திரியும் சம்சாரிகளும், அத்துவானக்காட்டிற்குள் மைல்க்கணக்கில் நடந்துபோய் தும்பிக்கை நீள அகப்பை போட்டு உச்சிப்பகல் வரை அடைகாத்து காற்குடம் நிறைந்த கலங்கிய நீரைப் பொக்கிஷமாகப் பொதிந்துவரும் பெண்களும், கொடுக்காப்புளி ஞாபகத்தில் கருவேல நெற்றுகளைப் பறித்துத் தின்ற கசப்பை அடிவயிற்றிலிருந்து குமட்டி ஓங்கரிக்கும் சவலைப்பிள்ளைகளும் தவிர உயிர்ப்பின் நடமாட்டம் என எதுவும் எஞ்சியிருக்காத அந்த ஊரின் சித்திரம் இரண்டு வாரங்களாய் வளர்மதியின் கனவில் அலைக்கழித்தபடியே இருந்தது.

தலைப்பிள்ளையைப் பாதிக் கருவில் பறிகொடுத்த பிறகு, மூன்று வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் அடுத்ததை வயிறு சரியத் தாங்கியிருந்தாள். தனக்கு நடுக்காட்டம் தந்த கெட்ட கனவுகளை விரட்டும் பொருட்டு, கால்மாட்டில் போட்டு வைத்திருந்த விளக்குமாறு சர்ப்பமாகத் தோற்றம் கொண்டு அவள் காலை உரசியபடி இருந்தது. அதனை லேசாக விலக்கித் தள்ளிவிட்டவள்,  தூக்கமும் பிடிக்காமல் திரும்பிப்படுக்கவும் முடியாமல் ஒருக்களித்தபடி, சுண்ணாம்புக் காரை பொக்குவிட்டு பெயர்ந்துபோயிருந்த சுவரை மெல்லிய விளக்கொளியில் வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தாள். அவளின் முதுகுக்குப் பின்னே குப்புறப் படுத்திருந்த தனசேகர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நள்ளிரவைத் தாண்டி, அதிகாலை வேளையில் தன்னையும் அறியாமல் அவளது கண்கள் செருகிய அடுத்த அரைநொடி, பாழ்பட்ட எச்சங்களைச் சுமந்து திரியும் அந்த ஊர் கனவில் வந்ததை அவளால் தவிர்க்கமுடியவில்லை.

ஒரே கட்டிடத்தில், பக்கவாட்டில் கீழே நான்கும் மேலே நான்குமாக இருந்த கூட்டு வீடுகளின் கீழ்த்தளத்தில் கடைசி வீட்டில் அவர்கள் வசித்தனர். பத்துக்கு பனிரெண்டில் ஒற்றை படுக்கையறை, ஒரு ஆள் நின்று சமைக்கும் அளவிற்கான அடுப்படி, நான்கு பேர் உட்காரும் அளவுக்கான ஹால் என்று சிக்கனமாகக் கட்டப்பட்ட தொகுப்பு. அதில் தெருவைப் பார்த்திருக்கும் தலைவாசலை இந்த வாரம் கூட்டிப்பெருக்கிக் கோலமிடவேண்டிய முறை வளர்மதியுடையது. சரியாகத் தூங்காததால், எழும்போதே தலை வெடித்துவிடுவது போன்ற பெருத்த வலி எடுப்பது இந்த இரண்டு வாரங்களில் அவளுக்கு அன்றாட நிகழ்வாகியிருந்தது. தனசேகரை வேலைக்கு அனுப்பிவிட்டு காலை உணவுக்குப் பின் சற்று நேரம் உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்து இருந்தால் தலைவலி சரியாகிவிடும் என்று நினைத்தவளாய் தண்ணீர் வாளியையும் கோலப்பொடி டப்பாவையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். இரண்டு குடம் தண்ணீர் பிடிக்க, ரோட்டுக் குழாயில் வரிசை போட்டு நான்கு மணி நேரம் காத்திருந்து அடித்து வர வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஒருநாள் வாசல் தெளிக்காவிட்டாலும் ஓனரம்மா வேலை மெனக்கெட்டு வீட்டுக்குள் வந்து அரைமணி நேரம் வகுப்பெடுக்கும். வளர்மதி திருமணம் முடிந்த கையோடு இந்த வீட்டில் குடியேறி மூன்று வருடங்களுக்கு மேலாகவிட்டது. வீட்டுக்குள் தண்ணீர் குழாய் இல்லை. வாசலில் இருக்கும் குழாயில் தான் எட்டு வீட்டுக்காரர்களும் முறை வைத்து நல்ல தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் போக புழங்குவதற்கான உப்புத் தண்ணீரை தெருமுக்கில் இருக்கும் அடி குழாயிலிருந்து பிடித்துவர வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை தவிர வேறு பெரிய குறைகளும் இல்லாத சிறிய வீடு. அவர்கள் இருவருக்கு அது போதுமானதாகவே இருந்தது. மற்ற வீடுகளிலும் என்ன வாழ்கிறது. இந்த கோடையில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குப் போன பிறகு, தெருவில் இருக்கும் எல்லா வீடுகளிலும் மோட்டர் போட்டால் காற்றுதான் வருகிறது. வாரத்துக்கு இரண்டு நாள் வரும் காப்பரேஷன் நல்ல தண்ணீர் போக, புழக்கத்துக்கு எல்லோரும் தெருமுக்கில் இருக்கும் அடிகுழாயைத் தான் நம்பி இருக்கிறார்கள்.

முன்வீட்டு அக்கா வளர்மதியின் முகம் வீங்கிப்போய் இருந்ததைப் பார்த்து, நன்றாக நீர் போகவதற்கு பார்லித் தண்ணீர் வைத்துக் குடிக்கச் சொன்னாள். சரியென்று தலையாட்டிவிட்டு, வாசலைப் பெருக்கி பேருக்கு நான்கு கை நீரள்ளித் தெளித்துவிட்டுக் குனிந்து கோலமிடுகையில் சுருக்கென இடுப்பு வலிப்பது போலிருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் வேலையை முடித்து வீட்டிற்குள் வந்து, தனசேகருக்கு மதியத்துக்குக் கட்டிகொடுத்துவிட வேண்டியவற்றையும், காலைக்கானதையும் தனித்தனியாய் சமைத்து எடுத்துவைத்துவிட்டு நிமிர்ந்தாள். தனசேகர் குளித்து முடித்துவந்து சாப்பிட உட்காருகையில் வளர்மதி வழக்கத்தைவிட அதிகம் சோர்ந்துபோயிருப்பதைக் கவனித்தான். மருத்துவமனைக்குச் செல்லலாமா என்றதற்கு வேண்டாமென்றவள், முந்தைய இரவு தனக்கு வந்த கனவினைக் கூறினாள். அதேபோன்று, சென்றவாரம் முழுவதும் அவள் அந்த ஊர் பற்றிய துர்கனவுகளைச் சொன்னபோது உதாசீனப்படுத்தி எரிச்சலடைந்தவன், இந்த முறை ஏதோ ஆழ்ந்த யோசனைக்குச் சென்றான். வெகுநேரமாய் தட்டு காலியாகாமல் இருந்ததைப் பார்த்தவள், அவனைச் சாப்பிட நினைவுபடுத்திவிட்டு, தன் கனவின் தீவிரத்தன்மையை அவன் உணர்ந்ததை எண்ணி பெருமூச்சுவிட்டாள்.

வளர்மதியின் கனவில் வந்த அந்த ஊர் தனசேகரின் பூர்வீக ஊரான பெரியகுட்டம். அவனது பால்யத்தில் பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு மதுரைக்கு வந்தவர்கள், வந்த இடத்தில் வேறூன்றிவிட்டனர். அவனது சிறுவயதில் எப்போதேனும் முளைப்பாரித் திருவிழாவிற்குச் சென்றுவந்தது, அவனது பெற்றோர்கள் இறந்தபின் ஊருக்குச் செல்வது அடியோடு நின்றுவிட்டது. வானம் பார்த்த பூமியில் பசுமை மறைந்து, கரட்டுக்காடாய் மாறிய ஊரிலிருந்து ஒவ்வொரு குடும்பமாய் அருகிலும் தூரத்திலுமாக புலம்பெயர்ந்தபின் ஊரே தரிசாகிப்போனது. அவன் மகிழ்வாய் இருக்கும் அரிய தருணங்களில் அவன் தந்தை அவனுக்குச் சொன்ன, ஊரோடுத் தன்னைப் பிணைத்திருக்கும் சில பால்யக் கதைகளை அவளிடம் உற்சாகம் பொங்கச் சொல்வான். அன்றாடங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து செக்கு மாட்டு வாழ்க்கையாய் நூற்பாலையில் சுற்றிக்கொண்டிருப்பவனுக்குள் ஒளிந்திருக்கும் சிறுவன் எட்டிப்பார்க்கும் அத்தகைய தருணங்களை அவள் தவறவிட்டதே இல்லை. 

பெரியகுட்டம் கிராமத்தை வளர்மதி ஒரு முறைகூட நேரில் பார்த்ததில்லை. ஆனால் தனசேகர் சொன்ன கதைகள் மூலமாக ஒரு அழகிய சித்திரத்தையே மனதிற்குள் வரைந்து வைத்திருந்தாள். அதற்கு மாறாக, முதல் முறை நாள் தள்ளிப்போய் தான் கருவுற்றிருப்பதாய் அவள் நம்பத் துவங்கிய அன்று இரவு அந்த ஊரைப் பற்றிய மங்கலதானதொரு சித்திரம் அவள் கனவில் வந்தது. அக்கனவின் தன்மை இன்னதென்று பிரித்தறிய முடியாமல் பதறிப்போய் வியர்த்து விறுவிறுத்து எழுந்து அமர்ந்தாள். பின் நான்காவது மாதத்தில் மீண்டும் அத்தகைய துர்கனவினவினூடாகவே அடிவயிற்று வலியோடு பாவாடை முழுதும் உதிரம் கசிய கரு கலைந்து நழுவுவதை உணர்ந்தாள். அதன் பின் அத்தகைய கனவுகள் வராமல் இருந்தாலும் கூட, ஒவ்வொரு மாதமும் பத்து நாட்கள், இருபது நாட்கள் தள்ளிப்போவதும், சோதித்துப் பார்க்கும்போது கர்ப்பமில்லை என்பதும் தொடர்கதையாகியது. பின், பிசிஓடிக்காக மாத்திரைகள் எடுக்கத் துவங்கியதும், ஒவ்வொரு மாதமும் சரியான நாளில் தீட்டானது. ஆனால், மாத்திரையின் விளைவா அல்லது அவளின் மனப்பதற்றமா தெரியவில்லை, தீட்டாவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக வயிற்று வலியின் அறிகுறிகள் தெரியும் போதே, எரிச்சலும் தூக்கமின்மையும் அவளை ஆட்டிப் படைக்கத் துவங்கின. அப்படியும் பின்னிரவில் சோர்வினால் கண்ணயர்ந்ததும், அந்த ஊர் பற்றிய துர்கனவுகள் அவளைச் சூழந்துகொள்ளும். அந்த மனப்போராட்டத்திலிருந்து வெளிவரவும் முடியாமல், கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போன்ற மனநிலையிலிருந்து தப்பிக்க எண்ணி ஒரு முறை டாக்டரிடம் கேட்டபோது, பீரியட்ஸை சீராக்க, பக்கவிளைவுகளாய் வரும் அத்தகைய வேதனைகளைக் கடந்துதான் ஆக வேண்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

ஒரு வருடம் மாத்திரை சாப்பிட்ட பின், டாக்டரின் அறிவுரைப்படி மாத்திரையை நிறுத்திய அடுத்த மாதமே மீண்டும் கரு உண்டானது. மாத்திரைகளின் பக்கவிளைவுகளில் இருந்து விடுதலை, அதோடு கரு உருவாகியிருந்தது என்ற இரட்டை மகிழ்ச்சியில் அவள் மனம் அமைதியடைந்தது. அதிலிர்ந்து கடந்த எட்டரை மாதங்களும் முகத்தெளிச்சியும், அமைதியும் கூட, கெட்ட கனவுகளின் அறிகுறிகள் எதுவுமின்றி நிம்மதியாகத் தூங்கி எழுந்தாள். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக பிரசவத்திற்கான நாள் நெருங்க நெருங்க மீண்டும் ஊர் பற்றிய கொடுங்கனவுகள் தினமும் வந்து அவள் தூக்கத்தையும் மனநிம்மதியையும் கெடுத்தது.

மாலை வேலை முடிந்து தனசேகர் வீட்டிற்கு வரும்போது, வளர்மதியின் நெற்றி நிறைய மஞ்சள் காப்பும், குங்குமமும் இருந்ததைப் பார்த்து, ’எங்கெயாவது கோவிலுக்கு போய்ட்டு வந்தியா?’ என்றான். ’சாயங்காலமா ஓனரம்மா வந்தாங்க. நான் சோர்ந்து போயிருக்கதைப் பார்த்து, என்ன ஏதுன்னு கேட்டாங்க. நான் கண்ட கனவாப் பத்தி சொன்னேன். குலதெய்வத்துக்கு ஏதாச்சும் குறையிருக்கும். அதான் பூர்வீக ஊரை அடையாளம் காட்டுதுனு சொன்னாங்க’  என்றாள். அதை கவனித்தும் கவனியாதவன் போல, காக்கி சட்டையைக் கழட்டி கொடியில் போட்டுவிட்டு, கைலிக்கு மாறியபடி, ‘காபி போடு” என்றான். அமர்ந்திருந்தவள் வலது கையைத் தரையில் ஊன்றி மெதுவாக எழுந்தாள். அடுப்பில் பாலை வைத்துவிட்டு, அவன் வாங்கி வந்திருந்த பொட்டலத்தில் இருந்து ஒரு தேய்ங்காய் போளியையும், தூள் வெங்காய பஜ்ஜியையும் ஒரு தட்டில் வைத்து, வாசலில் முகம் கழுவிவிட்டு வந்தவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கியபடி, அடுத்து என்ன என்பது போல லேசாகச் செருமினான். அதற்காகவே காத்திருந்தவள் போல, ’ஏங்க, ஒரு தாட்டி நம்ம குலசாமி கோயிலுக்கு போய்ட்டு வருவோமா?’ என்று மெதுவாகக் கேட்டாள். அவன் என்ன நினைத்தான் என்று அவனது முகக்குறிப்பில் அவளால் உணர முடியவில்லை. அவன் முகத்தையே பார்த்தபடி நின்றாள். அவன் இரண்டு நிமிட மௌனத்திற்குப் பிறகு, ‘பார்ப்போம்” என்று மட்டும் கூறினான்.

தன் ஆயுள் முழுதும் செக்கில் சுற்றி மொளி தேய்ந்து இறந்துபோன காளையின் காற்குளம்பு எலும்பில் ஏற்றி வைத்த பந்தம் அணையப் போவது போல மாடத்தில் படபடத்து எரிந்தபடி இருந்தது. வாசல் திண்ணையில் புரண்டு படுத்திருந்த பிறழ்மனம் கொண்ட பதின்ம வயதினன் ஒருவன், இருளைக் கக்க வரும் வலுசர்ப்பங்களை தன் கால்களைப் பிணைத்திருக்கும் சங்கிலியால் விரட்டியடித்துக் கொண்டிருந்தான். வீட்டின் முன்முற்றத்தின் நடுவே வாழை இலையில் குவித்து வைத்திருந்த அவித்த மொச்சைப் பயிறு படையலைச் சுற்றி ஒப்பாரிப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. படையலுக்கு உரியவனான மூப்பன் வீட்டுக்கு வெளியே முச்சந்தியில், குத்துக்காலிட்டு அமர்ந்து கன்னத்தில் கைவைத்தபடி, மையிருட்டில் தனக்கு முன்னிருக்கும் கொட்டாங்குச்சி நீரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பளிங்கைக் கண்களாய்க் கொண்ட ஊர்க்காவல் நாய்கள் மூப்பனுக்குச் சற்றி தள்ளி நின்றபடி, இடைவிடாமல் ஊளையிட்டபடி இருந்தன. அந்த நாய்களின் ஓலம் வளர்மதியின் செவிப்பறைகளுக்குள் விடாமல் ஒலித்தபடி அவளை எங்கோ துரத்திக்கொண்டே இருந்தது.

பதறியடித்து எழுந்தவளின் அலறல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த தனசேகரையும் அச்சம்கொண்டு எழச் செய்தது. வேகமாக எழுந்தவன், அவள் தலைமாட்டில் வைத்திருந்த தண்ணீர் செம்பை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதை வாங்கி ஒரு மடக்கு குடித்தவள், மீண்டும் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். அவளுக்குப் பின்புறம் அமர்ந்திருந்தவன் மெதுவாக அவளது முதுகைத் தடவிக் கொடுத்தான். அவள் உடல் படபடத்து நடுங்கியதை அவனால் உணர முடிந்தது. அவள் பயம் போக்க, ஊருக்குச் சென்று குலசாமியைக் கும்பிட்டு வர வேண்டும் என்று தீர்மானித்தான்.

மதுரையிலிருந்து கமுதி செல்லும் பேருந்தில் நல்லூர் விலக்கில் இருங்கி அங்கிருந்து மூன்று மைல்தூரம் ஓடைப்பாதையில் நடந்து தனது பெரியகுட்டம் கிராமத்திற்குச் சென்றது அவனக்கு நினைவிருந்தது. இப்போது கமுதி வரை சென்று அங்கிருந்து ஏதேனும் ஆட்டோ பிடிக்கலாம் என்று எண்ணியவனுக்கு, பேருந்து நடத்துநர் நல்லூர் விலக்கிலிருந்தே பெரியகுட்டத்திற்கு ஷேர் ஆட்டோக்கள் இருக்கின்றன என்ற கூறிய தகவல் வியப்பாக இருந்தது. ஆளரவமற்று அழிந்த ஊரில் யாருக்காக ஆட்டோக்கள் ஓடுகின்றன என்ற கேள்வியும் அவனது குழப்பத்தை அதிகரித்தன.

முன்னொரு காலத்தில், விதையில்லா பயிர்களை விளைவிக்கத் துவங்கிய நாளில்தான் அந்த ஊரின் அழிவுக்கான விதை விழுந்தது என்று சொன்ன குருவிக்காரனை குடியானவர்கள் எல்லாம் சேர்ந்து கல்லால் அடித்துத் துரத்தியதாகவும், இரத்தக் காயங்களுடன் அவன் அந்த ஊரை விட்டுச் செல்லும் பொழுது அந்த ஊரிலிருந்த குருவிகள் உட்பட அனைத்து பறவைகளும் அவனுடன் சென்று விட்டதாகவும், அப்போது அவன் காகங்களை மட்டும் ஊரிலிருக்கச் சொல்லி கட்டளையிட்டதால், கோபத்தில் அவை தினமும் விடிகாலையில் ஊரிலுள்ள குடியானவர்களை சபித்துக் கொண்டிருப்பதாகவும் தனசேகரின் தந்தை சொன்ன கதை ஏனோ அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஊர் பற்றிய தந்தையின் கதைகளோடு அவனும், அவன் அருகில் பதற்றமும் கவலையும் சூழ்ந்தவளாக வளர்மதியும் பேருந்தில் பயணித்தனர்.

தற்காலிக பஞ்சத்தைத் தீர்க்க, உலங்கூர்தியில் மூலம் ஊரெங்கும் கருவேல விதைகளைத் தூவ அரசாங்கம் உத்தரவிட்ட நாளில் தாங்கள் பருத்தி போட்ட காடெல்லாம் பாழாய்ப்போனது என்ற தனது தந்தையின் ஓலம் தனசேகரின் மனதில் இப்போது ஒலித்தது. கருவேலமரங்கள் காற்றெங்குமிருந்த ஈரப்பதத்தை உறிஞ்சி வளர்ந்து, பின் தமது தண்டையும், தூரையும் கரிமூட்டமாகி ஊர் முழுவதையும் சுடுகாடாக்கிவிட்டு மூட்டை மூட்டையாய் சுமையூர்திகளில் சவ ஊர்வலம் போன கதைகளையும், இனி அங்கு நமக்கு வேலையில்லை என்று பதறித் திசைமாறிச் சென்ற கருமேகங்களை சமாதானம் செய்து அழைத்துவந்து மழை பெறவைக்கவும், தரிசாகிப் போன நிலங்கள மீட்கவும் வழியில்லாமல், அருகிலும் தூரத்திலுமாக புலம்பெயர்ந்து பசியாற்றப் பழகியிருந்த தனது தலைமுறைக் கதைகளை நினைத்தபடியே அமர்ந்திருந்தவனின் தோளில் சாய்ந்து கண்ணயர்ந்தபடி வந்தாள் வளர்மதி.

நல்லூர் விலக்கில் அவர்கள் இறங்கும்போது அநேகமாக பேருந்தில் பாதி காலியாகி அவர்களுடன் இறங்கியது. தினக்கூலி வேலைக்குச் செல்பவர்களைப் போல இருந்தவர்கள் அங்கிருந்த ஷேர் ஆட்டோக்களில் ஏறினர். தனசேகர் ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் சந்தேகத்தோடு, பெரியகுட்டம் என்று இழுக்க, அவர் ‘ஏறுங்க, எல்லாரும் அங்க தான். ஆளுக்கு பத்து ரூபாய்’ என்று வண்டியைக் கிளப்பினார். பிள்ளைத்தாச்சிக்கு கொஞ்சம் இடம்விட்டு மற்ற பெண்கள் ஆட்டோவை நிறைத்தனர். ஓட்டுநருக்கு அருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்த தனசேகர், ‘பெரியகுட்டத்துல ஏதேனும் வேலை நடக்குதா?’ என்பது போல ஓட்டுநரிடம் மெதுவாய்க் கேட்டான்.
‘என்ன தம்பி வேலைனு சாதாரணமா கேட்டுப்புட்டீங்க. சுத்துவட்டாரமே எவ்ளோ பரபரப்பா ஓடிட்டு இருக்கு. ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க’
‘இல்லண்ணே, நமக்கு சொந்த ஊர் பெரியகுட்டம் தான். ஊருப்பக்கம் வந்து வருஷக்கணக்காச்சு. குலசாமியக் கும்பிட்டுப் போகலாம்னு இப்போதான் வாறோம்’.
‘பெரியகுட்டம் ஊருல மக்க நடமாட்டம் இல்லாம இருந்தது உண்மைதான். ஒரு ஆறுமாசம் முந்தி வடநாட்டு சேட்டு ஆளுங்க ஏக்கர் கணக்குல சுத்துவட்டாரத்து நிலங்களை விலை பேசி வாங்குனாங்க. அத்துவானக் காட்டுக்குள்ள, மானம் பார்த்த பூமியா கிடக்குற தரிசு நிலத்தை ஆயிரக்கணக்குல காசு போட்டு வாங்குறானுக கிறுக்குப் பயலுகன்னு, ஊரக் காலி பண்ணிட்டு எங்கெங்கோ போய் செட்டிலானவுங்க எல்லாம் கூட்டம் கூட்டமா வந்து பத்திரம் முடிச்சுக் கொடுத்தாங்களே. ஊரக் கெட்டிப் புடிச்சுட்டுக் கெடுக்குற கொஞ்சம் குடியானவங்க தான் பாக்கி. உங்களுக்கு அது பத்தி எதுவும் தெரியாதா?”
“இல்லண்ணே, நாங்க ஊரை விட்டுப் போனதும், நிலம் நீச்சு எல்லாத்தையும் பங்காளிங்க பராமரிப்புல விட்டுவிட்டு வந்துட்டார் அப்பா. அதுக்கப்புறம் நான் வந்து போய் இருக்கல. ஊர்க்காரவுங்க யாரு கூடயும் அவ்ளோ நெருக்கத்துல இல்லை. சரி, வடக்கத்தி சேட்டுக எதும் தொழிற்சாலை கட்றானுகளா… பரவால்ல, ஊரு முன்னேறுனா நல்லதுதான்.”
“மயித்துல முன்னேத்துவானுக. எரநூறு வருஷத்துக்கு முந்தி இந்த பகுதி முழுக்க பாம்பாறுன்னு ஒரு பெரிய ஆறு ஓடுன படுகை தம்பி. சுமார் நூறு அடிக்குக் கீழே பெரியகுட்டம் முழுக்க நஞ்சை, புஞ்சை, கரட்டுக்காடு, கருவக்காடு எல்லா இடத்துலயும் சுத்தமா சலிச்ச தங்கம் போல ஆத்து மணல் அடுக்கடுக்கா கொட்டிக் கிடந்திருக்கு. இன்னிக்கு நெலமைக்கு கோடி கொடுத்தாலும் கிடைக்காத சொத்து. அதை வடக்கத்தியானுக எப்படியோ மோப்பம் பிடிச்சு உள்ள வர்றானுக. நம்ம ஆளுகளும் வெவரம் தெரியாம, தண்ணி இல்லாத காட்டை வச்சு என்ன பண்ணன்னு வந்த வெலைக்கு வித்துட்டுப் போறாங்க.”

பேசிக் கொண்டே ஆட்டோ ஓட்டி வந்தவர், பெரியகுட்டம் கிராமத்தின் எச்சமாய் இருந்த சிதிலமடைந்த வீடுகளைக் கடந்து, கிழக்குப் பக்கம் வரண்டு போயிருந்த ஊரணியைத் தாண்டி ஆட்டோவை நிறுத்தினார். முன்னும் பின்னுமாக பத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் வந்து நின்றன. ஆண்களும் பெண்களுமாக அவற்றிலிருந்து இறங்கியவர்கள், கிழக்குப் பக்கமாக நடக்கத் துவங்கினர். ஊரணியைத் தாண்டி ரெண்டு பர்லாங்கு பருத்திக் காடுகளின் வழியே சென்றால் தென்திசை ஓரத்தில் பாம்பாளம்மாள் கோவில் வரும் என்று தனசேகருக்கு நினைவிருந்தது. ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘ஒரு அரை மணி நேரம் காத்திருக்க முடியுமாண்ணே. போய் சாமி கும்பிட்டுட்டு இதே ஆட்டோல விலக்கு வரை வந்துருவோம்’ என்றான். அவர் ’சரி காத்திருக்கிறேன்’ என்றதும் தனசேகரைத் தொடர்ந்து, வளர்மதியும் மெதுவாக ஆட்டோவில் இருந்து இறங்கினாள். சாமி கும்பிட இங்கே எதுவும் கிடைக்காது என்பதால் மதுரையிலிருந்தே தேங்காய், பழம், சூடம் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள். அவளிடமிருந்த கட்டைப் பையை வாங்கியவன், சற்று தூரம் நடந்தனர். கோவில் திசையை உத்தேசித்துத் திரும்பியவன் விநோதமான காட்சிகள் தெரிந்தன.

அங்கே பருத்திக் காடுகள் இருந்த எந்த அடையாளமும் இன்றி, ஏக்கர் கணக்கில் சுமார் நூற்றைம்பது அடிக்குக் குறைவில்லாத ராட்சச பள்ளத்தாக்குகளும், அவற்றைச் சுற்றி நீண்ட ஓடுபாதைகளின் மீது லாரிகள் செல்லும் பாதைகளுமாக மிகப் பெரிய மணல் குவாரியைப் போல அந்த சுற்றுவட்டாரமே காட்சியளித்தன. பத்துப் பதினைந்து ராட்சச கிரேன்களும், ஜே.சி.பி கனரக ஊர்திகளும் நடுவில் அலைந்தபடி இருக்க, சுற்றி நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நின்றிருந்தன. மிகப்பெரிய இயந்திரக் கைகள் பள்ளத்தாக்குகளில் பொதிந்து பரவிக் கிடக்கும் பொன்னிற ஆற்று மணலை அள்ளி அள்ளி, வரிசையாக நின்றிருந்த லாரிகளின் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. 

பருத்திக் காடுகளின் இடையே தென்திசையோரமாய் இருந்த ஒற்றைக் குத்துக்கல் தான் தனசேகரின் குலதெய்வமான பாம்பாளம்பாள் கோவில். இப்போது திசைகெட்டு திணை கெட்டுக் கிடக்கும் அந்தப் பள்ளத்தாக்குகளையும் ஓடுபாதைகளையும் பார்க்க, தனசேகருக்குத் தன் ஈரல்குலையை யாரோ ரம்பம் கொண்டு அறுப்பது போலிருந்தது. அவன் அப்படியே பிரமை பிடித்தவனைப் போல நிற்க, அந்நிலக் காட்சிகளைப் பார்த்த வளர்மதியின் கண்களில் இன்னெதென்று தெரியாமல் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவள் கேவியழும் தேம்பலை உணர்ந்த தனசேகர் சுயநினைவுக்கு வந்தவனாய் அவளைத் தேற்றுவது போலத் தோளோடு அணைத்தான். அவனது இடக்கையில் இருந்த கட்டைப்பையின் பாரம் இன்னும் இன்னும் அழுத்தத் துவங்கியது. மணல் குவாரிக்கு வேலைக்குச் செல்பவர்கள் அவர்களைக் கடந்து நடந்துகொண்டிருந்தார்கள். தான் வாழ வந்த குடும்பத்தின் மூதாதையர்களின் உடல் பொருள் அனைத்துமாக அவர்களுக்குப் பசியாற்றிய விளைநிலங்களின் அடிமடியை அறுத்து அவை குடல் சரியக் கிடக்கும் இந்நிலையைக் காணத்தான் இத்தனை வருடங்கள் கழித்து பாம்பாளம்பாள் தன்னை இங்கே அழைத்தாளா என்றூ விசும்பியபடி இருந்தாள் வளர்மதி. 

குனிந்த தலை நிமிராமல், திரும்பிய இருவருக்குள்ளும் பேசிக்கொள்ள வார்த்தைகள் அனைத்தும் தூர்ந்துபோனதாய்த் தோன்றியது. செல்லும் முன், குலசாமிக்கென தாங்கள் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனாலும் அரூபமாய் பாம்பாளம்பாள் அங்கே தான் எங்கேயோ குடிகொண்டிருக்க வேண்டும் என்று தனது மனதை ஆற்றுப்படுத்திய வளர்மதி, தென்கிழக்கு திசையை நோக்கி கையெடுத்து கும்பிட்டுவிட்டு, நின்ற இடத்திலேயே தேங்காயை உடைத்து, வழிந்த நீரை நிலத்துக்கு விளாவி, குனிந்து சூடம் பாக்கெட் மொத்தத்தையும் அங்கேயே குவித்துப் பொருத்தி கண்களின் ஒற்றிவிட்டு, அந்த மண்ணை எடுத்து நிலக்காப்பாய் நெற்றியிலும், கழுத்திலும், வயிற்றிலும் பூசிக்கொண்டாள். நிலக்காப்பை அடி வயிற்றில் பூசுகையில் பனிக்குடம் நிறைந்து தளும்புவதை, அது உடைந்து ஒரு புதிய உயிர் ஜனிக்கும் தருணம் சமீபிப்பதை அவளால் நன்றாக உணர முடிந்தது. அவளைத் தொடர்ந்து தனசேகரும் சூடத்தைத் தொட்டு கும்பிட, இருவரும் சற்று தூரத்தில் காத்திருக்கும் ஆட்டோவை நோக்கி நடக்கத் துவங்கினர்.

ஆட்டோவை நெருங்கும் போது, குவாரி பக்கமிருந்து கூச்சலும் குழப்பமுமாய் பெருங்குரலெடுத்தபடி ஆண்களும் பெண்களும் வேகமாக ஓடி வந்தனர். இவர்களைக் கடந்து செல்பவர்களை என்ன என்பது போல இவர்கள் பார்க்க, அடுத்து வந்த ஒரு நடுத்தர வயது பெண், “நிலமும் பொம்பளதானே. அவ அடிமடி வரை குதறி எடுத்தா சும்மா இருப்பாளா. மொத்தமா பொங்கிட்டா. நூறு அடிக்கு மேல தோண்டுன அத்தனை பள்ளத்துலயும் ஆயிரக்கணக்குல ஊத்துக்கண் ஒரே நேரத்துல திறந்து நாலு, எட்டு, பதினாறு திசைகள்லயும் மடை வெள்ளமா பீச்சி அடிக்குறா. உள்ள நின்னு மண்ண அள்ளுன ஆளு, அம்பு, சேனை, மெசினு, வண்டி, லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் முக்கி ஏப்பம் விட்டுட்டா. குவாரி முழுக்க வெள்ளக்காடு. சீக்கிரம் வண்டியைக் கிளப்பிட்டு நீங்களும் வெளியேறுங்க.” என்றபடி ஆவேசமாகக் கத்தியபடி அந்தப் பெண் ஓடினாள். இவர்கள் அவள் சொல்வது இன்னதென்று புரிந்து விளங்கிக் கொள்வதற்குள் கிழக்குப் பக்கமிருந்து குவாரித் தடுப்புகளைப் ஊடாக முதலில் ஊர்ந்தும், சற்று நேரத்திற்கெல்லாம் பெருகி ஓடிவந்த ஊற்றுத் தண்ணீர் கீழே பூஜை செய்துவிட்டு மண்ணில் வைத்திருந்த தேய்ங்காய் முடிகளை சுழற்றி அடித்து அள்ளிக்கொண்டு, இவர்களின் கால்களைத் தழுவியபடி ஊரணியை நோக்கி பெருக்கெடுத்து ஓடியது.

****** 
நன்றி: கனலி http://kanali.in/kurivakal-thirumbum-kaalam/

Saturday, November 4, 2017

கனவுகள் விற்பனைக்கு !


" நான் மனிதன், ஒரு வண்ணத்துப்பூச்சியாய் உருமாறியதாய் கனவு காண்கிறேன். அல்லது நான் வண்ணத்துப்பூச்சி, ஒரு மனிதனாய் உருமாறியதாய் கனவு கண்டுகொண்டு இருக்கிறேன்" 
- ஸுயாங் ஸீ


கண்கொள்ளுமளவு முழுமையாய் விரிந்து கிடக்கிறது வனம். காலங்களின் ஈரம் அடர்த்தியாய் இறங்கியிருக்கும், சருகுகள் பூத்துக் கிடக்கும் மதிகெட்டான் சோலையில் ஊர்ந்து ஊர்ந்து தடம் தேடிச்செல்கின்றன பாதங்கள். கண்முன்னே ஒரு திசைமாணி, வடக்கை குறித்துக்காட்டிக் கொண்டே முன்னே செல்கிறது. நான் திசைமாணியைப் பார்த்துவிட்டு, வலதுபக்கம் திரும்பித் திரும்பி, கிழக்கை நோக்கி முன்னேறுகிறேன். ஆயுள் ரேகைகளை வட்டவட்டமாய் செதுக்கி வைத்திருக்கும் முதிய மரங்கள் நிறைந்த அடர்வனத்திற்குள் செல்லச் செல்ல, கிளைகள் சரசரக்கும் பேரோசை, பெயர் தெரியாத பறவைகளின் இடைவிடாட கீச்சொலி இவற்றிற்கு அப்பால், சிற்சிறிய குன்றுகளையும், குதித்தோடும் குறு நீரோடைகளையும் தாண்டியபடி கிழக்கு நோக்கிய பயணத்தைத் தொடர்கிறேன். முடிவில் வனத்தைத் தாண்டிய பெரிய புல்வெளியை அடையும் போது, சூரியக்கதிரின் முதல் கீற்று, செம்பழுப்பாய் ஒளிர்விடத் துவங்குகிறது.

வனத்திலிருந்து வெளியேறியதில் ஒருவித விடுதலை உணர்வு தோன்ற, வெளிச்சக்கீற்றினூடே வேகமாக நடக்கிறேன். வழியின் நடுவே கரிய குன்று போல் ஏதோ தடுக்க, தடுமாறி அப்படியே திகைத்தபடி நிற்கிறேன். பார்வைக்கு மிக அருகே, இரு யானைகள் மூர்க்கமாக புணர்ந்து கொண்டிருக்கின்றன. நான் அசைவற்று, சிறு சத்தமும் கொடுக்காமல், அவற்றின் ஆக்ரோசத்தை, கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அவற்றின் இயக்கத்துக்கு இடையூறாக சிறு ஒலி எழுந்தாலும் , அவற்றின் கோபம் என் மீது திரும்பி விடும் என்ற நிலையில், நான் சிலையாய் நிற்கையில், பீப், பீப் … பீப், பீப் … பீப், பீப் … என்று இடைவிடாத இடர் எச்சரிக்கை ஒலி !

திடுக்கிட்டு எழுந்து அலாரத்தை அணைத்தேன். பசியம் நிறைந்த வனத்தின் வாசனையும், பறவைகளின் கீறீச் ஒலியும், அகன்ற புல்வெளி தந்த குளுமையும், யானைகள் அருகில் திடுக்கிட்டு நிற்கும் நிலையும் இன்னும் நினைவில் நிழலாடியது. கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தால், பார்வையின் ஒளி தூரமாய் பரவுவதற்கு வழியின்றி, நான் படுத்திருந்த பத்துக்கு எட்டு அறையின் சுவரில் பட்டு எதிரொளித்தது. சோம்பல் முறித்தபடி எழுந்தேன். இரண்டு வாரங்களாய் துவைக்காத ஆடைகள் அறையெங்கும் விரவிக் கிடந்தன. ஜன்னல் இல்லாத அறையில் எப்போதும் இருக்கும் அழுக்கு வாடையோடு சேர்ந்து, லேசான முடை நாற்றமும் அடித்தது. யானைக்கனவின் கிளர்ச்சியையும், பயத்தையும் நினைத்துக் கொண்டே, தளம் முழுவதும் உள்ள 10 அறைகளுக்கும் பொதுவாக உள்ள கழிப்பறையை நோக்கி நடந்தேன்.

எனக்கு வரும் கனவுகள் எப்போதும் விசித்திரமானவை. நினைவு தெரிந்து முதன் முதலில் வந்த விசித்திர கனவு, எனது திருமணம் தொடர்பானது. அதுவும் எனது ஏழாவது வயதில். அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், வகுப்பில் ஒரு தோழியோடு பென்சிலையும், சாக்பீஸையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது தவறுதலாக அவளது பென்சிலை என் பாக்ஸில் வைத்து எடுத்து வந்துவிட்டதை, மாலை வீட்டுக்கு வந்த பிறகு தான் கவனித்தேன். அந்தப்பெண் தவறாக நினைத்துக் கொள்வாளே என்ற வருத்தம், அன்று தூங்கும் வரை மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது. அன்று இரவு கனவில், எனக்கும் அந்த தோழிக்கும் திருமணம் நடப்பது போல கனவு வந்தது. விடிந்ததும் ஒரு மாதிரி குதூகலமான மனநிலையில் தான் இருந்தேன் என்று இப்பொழுது வரை நினைவிருக்கிறது. வெகு நாட்களாய் அந்த கனவை மனதுக்குள் நினைத்துக் கொண்டே மகிழந்து கொண்டிருந்தது தனிக்கதை. மறுநாள், மிக வருத்தத்துடனேயே அந்த பென்சிலை அவளிடம் கொடுத்தேன். நான் வேண்டுமென்றே அந்த பென்சிலை திருடிக் கொண்டு சென்று விட்டதாகவும், அதனால் முதல் நாள் இரவு முழுவதும் என்னைத் திட்டிக் கொண்டிருந்ததாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவள் சொன்னாள். ஆக, எந்தப் பெண்ணாவது நம்மைத் திட்டினால், அன்று இரவு கனவில், அவளுடன் நமக்குத் திருமணம் நடக்கும் என்று ஒரு தியரியை வடிவமைத்துக் கொண்டேன்.

கனவுக்கான ”ஹேப்பி ஹவர்ஸ்” முடிந்ததும், அன்றைக்கான வழமைக்குள் நம்மை ஒப்புக் கொடுத்து விட வேண்டியது தான். மாநகரத்தின் பரபரப்பான பகுதியில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான மேன்ஷன்களில், உள்ளடங்கிப் போயிருக்கும் “சேவல் பண்ணை”யின் நான்காவது மாடியில், இரண்டு பேர் தங்கக்கூடிய சிறிய அறையில் தான் இப்பொழுதைய எனது இருப்பு. உடன் தங்கியிருப்பவன் கல்லூரித்தோழன் என்றபடியால், அறையில் பெரிய பாகப்பிரிவினை எதுவும் கிடையாது. அறை முழுதும் இருவரின் உடைகளும், புத்தகங்களும், பொருட்களும் தங்கு தடையின்றி எங்கெங்கும் விரவிக் கிடக்கும். அலுவலம் செல்லும் அவசரகதியில், பொதுக் கழிவறை வரிசையைத் தாண்டி, உடை மாற்றி, உடலுக்கு ஒருமுறை, காலுறைக்குள் ஒரு முறை என வாசனை திரவியங்களைத் தெளித்து விட்டு, கசகசக்கும் கழுத்துப் பட்டையையும், இடுப்புபட்டையையும் இறுக்கிக் கொண்டு, வெக்கு வெக்கென்று நேரத்திற்குள் ஓடி, மின்சார ரயிலைப் பிடித்து அலுவலகம் அடைந்து, அங்கே உணவகத்தில் தினமும் ஒரே மாதிரியாய், பரப்பி வைக்கப்பட்டிருக்கும்,  காய்ந்த ரொட்டிகளை ஊறவைத்துத் தின்னும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்... "கனவுகள் எவ்வளவு வண்ணமயமாய், ஒவ்வொரு நாளும் புதுவிதமாய். எதிர்பார்ப்பின் அழகியலோடு தோற்றம் கொண்டிருக்கின்றன. இத்தகைய கனவுகளுக்குள்ளே சென்று சென்று வாழ வழி இருக்கிறதா ? "

விதவிதமான கனவுகள் வருகின்றதே, நாம் வாழ்கின்ற இந்த வாழ்வும் அப்படியே கனவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அவ்வப்பொழுது யோசிக்கத் தோன்றும். தவறவிட்ட தருணங்கள், கொஞ்சம் முயற்சி எடுத்தால் வெற்றியடைந்திருக்கக் கூடிய வாய்ப்புகள், கொஞ்சம் நிமிர்ந்து நின்றிருக்கக் கூடிய சவால்கள், இன்னும் இளகிப்போயிருக்க வேண்டிய கோபங்கள் என்று எல்லாக் கோட்டையையும் அழித்து விட்டு முதலில் இருந்து விளையாடத் தோன்றும் சாகசமும் நன்றாகத் தான் இருந்தது. மனம் குதூகலிக்கும் வேளையில் வாழ்வை அப்படியே உறைந்து போக வேண்டுவதும், துவண்டு போகும் வேளையில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் அப்படியே அழித்துவிட்டு புதிதாய் துவங்கிவிட வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த சாத்தியக் கூறுகள் வாழ்வில் இல்லாவிட்டலும், கனவுகளில் நிரம்ப நிரம்பக் கிடைப்பதாகவே எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.

நிறைவேறாத உள்ளுணர்வு ஆசைகள் தான் கனவுகளாக வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியென்றால், இவ்வளவு ஆசைகள் உள்ளுக்குள் புதைந்து கிடக்கின்றன என்பதே வியப்பாக இருக்கும். வழமையாய் செல்லும் வாழ்க்கைக்கு வண்ணமயமான் கனவுகள் சுவாரஸ்யத்தைக் கொடுப்பதால், இப்பொழுதெல்லாம், அதை வரவேற்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன். இன்று வந்த கனவு இன்னும் வித்தியாசமானது.

இதுவரை அறிந்திராத ஒரு பெயரற்ற ஊரில், வார சந்தை போன்று நடந்துகொண்டிருந்தது. ஓவ்வொரு கடையின் முன்னும் பெருந்திரளான கூட்டம் குழுமியிருந்தது. தேசாந்திரியாக சுற்றித்திருந்து, அந்த ஊருக்குள் பெரும் களைப்புடன் நுழைபவனாக நான், கால் போன போக்கில் சந்தையினூடே நடந்து சென்று கொண்டிருந்தேன். நா வரண்டு, தாகமெடுக்க, தண்ணீர் தேடி ஒவ்வொரு கடையாக பார்த்தபடி நடந்தேன். வித்தியாசமாய் அலங்கரிக்கப்பட்ட ஒரு கடையில், மற்ற கடைகளை விட மிக அதிகமான கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று பார்க்கின்ற ஆர்வத்தில், அந்தக் கடையை எட்டிப் பார்க்க, எனக்குப் பின்னால் வந்த கூட்டம், என்னையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டு கடை வாசல் வரை கொண்டு போய் விட்டது.

வடநாட்டு பாணி உருமாலும், பெரிய மீசையும், வித்தியாசமான உடையும் அணிந்திருந்த கடைக்காரர் என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். எனக்குத் தண்ணீர் தாகம் அதிகமாகி மயக்க வருவது போலத் தோன்றியது. என் தேவையைப் புரிந்து கொண்டவர் போல, ஒரு மண் குவளையில் தண்ணீர் கொடுத்தார். நான் ஆவலாக வாங்கி, நெஞ்சு நனைய வேகமாகக் குடித்தேன். நன்றியுணர்ச்சியாக, இந்தக் கடையில் ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்தவனாய், எனது பர்ஸை எடுத்தேன். அதில் இருந்த சில்லரைக் காசுகளை எண்ணுவதற்கு முன்பாகவே கடைக்காரர், கைகளால் சைகை காட்டி நிறுத்தச் சொன்னார். முதலில் பொருளை உபயோகப்படுத்திப் பார்த்து விட்டு, பின் விலையைப் பேசிக் கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறினார். எனக்கும் அது நல்ல யோசனையாகத் தோன்றவே, சரியென்று பொருட்களைக் காண்பிக்கச் சொன்னேன்.

அவ்வளவு கூட்டத்தையும் விலக்கி, என்னை உள்ளறைக்குக் கூட்டிச் சென்றார். சாணி போட்டு மெழுகியிருந்த மண் தரையும், தென்னங்கீற்று வைத்து கட்டியிருந்த கூரையும், ஒரு கிராமத்து வீட்டை நினைவுபடுத்தியது. அந்த அறை முழுவதும், சிறிதும் பெரிதுமாக மண் தாழிகள் மூங்கில் கூடைகளைக் கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்தன. ஓவ்வொரு தாழியும் வெவேறு வடிவம் கொண்டிந்தன. தாழியில் இருந்தவை என்ன பொருளாக இருக்கும் என்ற ஆர்வத்தில், கைக்கு எட்டிய முதல் தாழியைத் திறந்து பார்த்தேன். அதில் மீன் குஞ்சுகள் நீந்திக் கொண்டிந்தன. மீன்கள் வியாரமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, அடுத்த தாழியைத் திறந்தேன் அதில் மேகப்பொதிகள் மிதந்து கொண்டிருந்தன. இது என்னவிதமான வியாபாரம் என்று குழப்பத்துடன், கடைக்காரரைப் பார்த்தேன். அவர் அர்த்தமான புன்முறுவலுடன், “இது கனவு வியாபாரம், இங்கே, பயமும், சிலிர்ப்பும், கூச்சமும், வெறியும், பக்தியும், மோகமும், சாகசமும், புலம்பலும், சிறியதும், பெரியதுமாக இப்படி ஏகப்பட்ட கனவுகள் விற்பனைக்கு இருக்கின்றன. எந்தக் கனவு வேண்டுமோ, அந்த கனவுக்குள் சென்று வாழ்ந்து பார்த்து பிடித்திருந்தால் வாங்கிச் செல்லலாம்” என்றார். ஆச்சரியமும், எதிர்பார்ப்பும் என்னுள் தொற்றிக் கொள்ள, "ஒரு கனவு வாங்குவதற்கு எத்தனை வாழ்க்கையை வேண்டுமானாலும் இலவசமாய் முயன்று பார்க்கலாம்" என்ற விளம்பரமும் கவரவே, ஒவ்வொரு தாழியாகத் திறந்து பார்த்தேன். அதில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துக் கொண்டிருந்த தாழி கவனத்தை ஈர்த்தது. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை எனும் அந்த கனவுக்குள் நுழைந்து பார்க்க விரும்பினேன். அதைக் கடைக்காரரிடம் தெரிவித்ததும், அவர், அந்த தாழிக்குள் என்னை இறங்கச் சொன்னார். சுவாரஸ்யமும், பயமும் ஒரு சேர பிணைத்துக் கொள்ள, மெல்ல தாழிக்குள் இறங்கினேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு புழுவாய் நெளிந்து கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் தான், பிறகு சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மூச்சு முட்டி, இருட்டறைக்குள் தள்ளுவது போன்று ஒரு உணர்வு. ஏதோ பயம் தொற்றிக் கொள்ள பதறிப் போய், " வேண்டாம், நான் சிட்டுக் குருவியின் கனவை முயற்ச்சிக்கிறேன், இது வேண்டாம்!" என கதற., வெளியே இருந்து கடைக்காரரின் சத்தம்... " இந்த வண்ணத்துப்பூச்சியின் வாழ்வை முடித்து விட்டு வா, பிறகு சிட்டுக் குருவியாகலாம்!". நானும் வேறு வழியின்றி சிட்டுக்குருவின் கனவை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி வாழ்கையின் துவக்கத்தில் உழன்று கொண்டிருந்தேன், அப்பொழுது…."

திடீரென்று, கனவு கலைந்து, முழித்துப் பார்த்தால், என் முதுகில் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் முளைத்து இருப்பது போன்ற உணர்வு. கொஞ்சம் நிதானித்ததும், நினைவு வந்தது. வழக்கமாய் கனவு தான் வரும். இப்பொழுது கனவுக்குள் கனவை வாங்குவது போல ஒரு கனவு வந்திருக்கிறதே என்று யோசித்தவாறே கண்களைக் கசக்கியபடி அமர்ந்திருந்தேன்.
"டீ சாப்பிடப் போகலாமா ?" என்று அறை நண்பன் கேட்கும் போது தான் முழுதாய், சுய நினைவு வந்தது. தலையணையை ஒரு புறமும், கனவை இன்னொரு புறம் ஓரமாய் வைத்துவிட்டு, தெருமுனையில் இருக்கும் கடைக்குத் தேநீர் குடிக்கக் கிளம்பினேன். ம்ம்ம், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தால் மகரந்தத்துடன் தேன் குடித்திருக்கலாம்.

******
நன்றி மலைகள் இதழ் : http://malaigal.com/?p=10984

Friday, July 24, 2015

உங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் !


உங்கள் கல்விச்சாலைகளின் பெருங்கருணை
எங்களை மழைக்கு ஒதுங்க அனுமதி வழங்கியிருக்கின்றன

உங்கள் தொழுகைக்கூடங்களின் உள்ளேயமர்ந்து
நாங்கள் யாசிக்க நன்னயத்தோடு இடம் தந்திருக்கிறீர்கள்

உங்கள் கேளிக்கை விடுதி வளாகங்களின் பின்புறச்சுவர்கள்
பெருந்தன்மையோடு எங்கள் ஒட்டுக்கூடாரங்களை
தாங்கிப் பிடிக்க சம்மதித்துள்ளன

மேன்மை பொருந்திய உங்கள் திருக்கரங்கள்
எங்களை ஆசீர்வதிக்கக் காத்திருக்கையில்
நாங்கள் எப்போதும் போலவே
உங்களை உதாசீனப்படுத்திவிட்டு
எங்கள் வயிற்றுப்பாட்டிற்கான பாவங்களை செய்து கொண்டிருக்கின்றோம்
உங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் !

*******

Friday, May 22, 2015

திருவாளர் பொதுஜனம்

பெருநகரத்து அரசாங்க அலுவலகங்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு புழுக்கம் இருக்கும். அதுவும் கோடைக்கால மதியங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கசகசப்பிற்கும், எரிச்சலுக்கும் எந்தக் குறையும் இருக்காது. நகரின் மத்தியில் நெருக்கடியான ஏரியாவில் ஐந்தடுக்கு மாடி கட்டிடத்தில் நான்காவது தளத்தில் அமைந்திருக்கும், எங்களது அலுவலக அறை இன்னும் சிறப்பு வாய்ந்தது. முன்பு உயரதிகாரி இருந்த அறையாதலால் குளிர் சாதன வசதி எல்லாம் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு மேம்படுத்தப்பட்ட வேறு அறை வழங்கப்பட்டு குளிர்சாதன வசதியும் அவருடன் சென்று விட்டபடியால், வெறும் அறையில் மின்விசிறி மாட்டப்பட்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. காற்று புக எந்த வசதியும் இல்லாமல் நல்லா கொதிக்கின்ற இட்லி கொப்பரைக்குள் அமர்ந்து வேலை பார்ப்பது போல் இருக்கும். 

அலுவலக விதிமுறைகள் இன்னும் சுவாரஸ்யமானவை. ஒரு கடிதத்தை தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் முதலில் எங்கள் அதிகாரி சொல்வதை நோட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை டைப் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து ஃபைலில் இண்டக்ஸ் செய்து அவர் சரி பார்ப்பதற்காக வைக்க வேண்டும். அதில் பிழைகள் ஏதும் இல்லையென்றாலும் ஓரிரண்டு வார்த்தைகளை மாற்றிப் போட்டு நம் உழைப்பை செம்மைப் படுத்திய பெருமிதத்தோடு எங்களைப் பார்ப்பார். நாங்களும் “அதிகாரி, அதிகாரி தான்” என்ற பாவனையோடு ஒரு நன்றி உதிர்க்கும் பார்வையை சமர்ப்பித்து விட்டு மீண்டும் கோப்பை சரி செய்து அவர் பார்வைக்கு வைப்போம். அதை மீண்டும் முதலிலிருந்து ஒரு முறை நிதானமாகப் படித்துப் பார்த்து, பின் பேனா சரியாக எழுதுகிறதா என்று அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தாளில் சிறு கிறுக்கல் கிறுக்கிப்பார்த்து விட்டு, அதில் திருப்தியடைந்தவராய் கோப்பில் தனது பொற்கரங்களால் கையெழுத்திட்டு விட்டு தலைமையிடத்துக்கு அனுப்பச் சொல்வார்.

இனி தான் இருக்கிறது தொழில்நுட்பம். கையெழுத்தான லெட்டரை ஸ்கேன் செய்து தலைமையிடத்துக்கு இமெயிலில் அனுப்ப வேண்டும். அங்குள்ளவர்கள் அலுவலக மின்னஞ்சல்களைப் பார்ப்பதே குதிரைக்கொம்பு. எனவே உடனுக்குடன் தகவல் பார்வையில் படும் பொருட்டு ஒரு ஃபேக்ஸ் காப்பியும் அனுப்ப வேண்டும். அரசாங்க அலுவகத்து ஃபேக்ஸ் மிசின்கள் வேலை செய்வதெல்லாம் தெய்வச் செயல் தான். ஒன்று அணைத்து வைக்கப்பட்டிருக்கும், இல்லை பேப்பர் அவுட் ”சிவப்பு” மிணுங்கிக் கொண்டிருக்கும். அதை சரி செய்ய அங்குள்ளவர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, பின் அவர்கள் அதை சரி செய்த பின் ஃபேக்ஸ் அனுப்பி  அதை உறுதிப்படுத்த மீண்டும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டும். அது போக “அக்நாலேட்ஜ்மெண்ட்” ஸ்லிப்பையும் கோப்பில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ஆனால் அரசாங்க அலுவகங்களில் இமெயில், ஃபேக்ஸ் எல்லாம் நிரந்தர தகவல் தொடர்பு முறை இல்லை, அவசரத்துக்குத் தான். எனவே ஃபேக்ஸ் அனுப்பிய லெட்டரை ஒரு ஜெராக்ஸ் எடுத்து நகலை எங்களது அலுவலக கோப்பில் வைத்து விட்டு ஒரிஜினலை பதிவுத்தபால் தபால் மூலம் தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டும். பிறகு அதற்கான “அக்நாலேட்ஜ்மெண்ட்” ஸ்லிப்பையும் கோப்பில் போட்டு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். 

இந்த சுலபமான நடைமுறையெல்லாம் ஒரே கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருக்கும் எங்களது கிளை அலுவலகத்திலிருந்து, அதே கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருக்கும் தலைமையிடத்துக்கு அனுப்புவதற்கு மட்டுமே. வேறு ஊர்களுக்கு அனுப்புவதற்கு ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இருக்கும் கூண்டிற்குள் உள்ள கிளிக்கு தினமும் பச்சை மிளகாய் வைத்து அதனைப் பேசப்பழக்குவது போல, எழுநூறு என்னூறு பக்க செயல்முறைக் கையேடு இருக்கிறது. அதன்படி, அது அது, அதன் அதன் செய்நேர்த்தியோடு நடைபெற வேண்டும். 

இப்படியாய் வியர்வை ஊற்றாய் கொட்டிக் கொண்டு, அரும்பாடுபட்டு அரசு இயந்திரத்தை சுழல வைத்துக் கொண்டிருந்த சுபயோக சுபதினமான ஒரு விசாலக்கிழமை நன்பகல் மணி ஒன்றரை - மூன்று கொழுத்த இராகு காலத்தில் திருவாளர் பொதுஜனம் எங்கள் அலுவலகத்திற்குள் காலடியெடித்து வைத்தார்.  வைத்தாரென்ன... அறைக்குள் நுழையும் போதே, கண்ணாடிக் கதவைத் திறந்தவர் தனது செல்ஃபோனின் ரிங் டோடான ”வந்தே மாதரம், ஜெய வந்தே மாதரம்” ஒலிக்கவும் ஒரு நொடி பெருமிதத்தோடு எங்களைப் பார்த்தவர் பின் சுதாரித்துக் கொண்டு “மன்னிக்கனும், சைலண்ட் மோடில் போட மறந்துட்டேன்” என்று கதவில் வைத்திருந்த கையை தன் கழுத்தில் ”டேக்” போட்டு தொங்கப்போட்டிருந்த செல்ஃபோனை நோக்கிக் கொண்டு சென்றார். எங்கள் அறைக்கதவும் அரசாங்க ஊழியராயிற்றே... இரண்டு நொடி அதே நிலையில் நின்று யோசித்து விட்டு பின் தன்னுடைய நெற்றியில் ”டோர் க்ளோசர்” மாட்டியிருக்கிறதே என்ற சுயநினைவு வந்து படாரென சாத்தத் துவங்கியது. அது சென்ற வேகத்தில் நமது பொதுஜனத்தை இரண்டு அடிக்கு வெளியே தள்ளி சமர்த்தாக மறுபடி பூட்டிக்கொண்டது. எது சொன்னாலும் குறைந்தது மூன்று முறை செயல்முறை விளக்கம் கொடுத்தால் மட்டுமே “என்ன, அப்படியா!” என்பது போல் திரும்பிப் பார்க்கும் எங்கள் அலுவலக சிப்பந்தியே அறைக்கதவின் இந்த செயல் கண்டு “படாரென” பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டார். அப்போதாவது இன்று ஒரு அசாதாரணமான நாள் என்று நான் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ம்ச்ச்... விதி வலியது போலும், துர்சகுணத்தை உணர்ந்து கொண்டேனில்லை.

சிப்பந்தி வேகமாக சென்று அவருக்கேயுரிய பிரத்யேக முறையில், பாதத்தால் தடுப்பு ஏற்படுத்தி, அறைக்கதவின் ஆற்றலை மட்டுப்படுத்தி, நிலை குலைந்திருந்த இராமசாமியை உள்ளே அழைத்து வந்தார். 
“சார், எத்தனை நாளா சொல்றேன், இந்த டோர் க்ளோசரை கழட்டி விட்றலாம்னு.. இப்ப பாருங்க ஐயாவை கழுத்தப் பிடிச்சு நாமே வெளியே தள்ளுனா மாதிரி ஆகிருச்சு”

அவர் சொல்வதும் வாஸ்தவம் தான். ஆனால் அரசாங்க அலுவலக பகவத் கீதையான “ஸ்வாமீஸ் கைடில்” தலைமை அலுவலகத்தின் முன்னனுமதியின்றி “டோர் க்ளோசரின்” ஸ்க்ரூவில் திருப்புளியை வைப்பதற்கு எந்த சரத்தும் இடம் கொடுக்காததால், அறைக்கதவை டோர் க்ளோசரிடமிருந்து விவாகரத்து செய்யும் விழா நிலுவையில் இருக்கிறது. இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தும் புதிதாய் ஒருவர் வந்திருக்கிறார் இல்லையா, அவர் முன் தான் ஒரு சிப்பந்தி மட்டுமல்ல, தவறென்றால் அலுவலரேயானாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்கும் ”தோழர்”  என்ற ஜபர்ஜஸ்த்தை காட்ட வேண்டுமென்ற முனைப்பு.
“ஏ, சும்மா இருப்பா... நீ வேற !” என்று அவரது அறச்சீற்றத்தை தற்காலிகமாக அமர்த்தி விட்டு, 
“ஐயா, ஒன்னும் அடிபடலியே... பார்த்து வரக்கூடாதா” என்று பொதுவாகத் தான் கேட்டேன். அதற்கு மையமாய் ஒரு பார்வையை மட்டும் வீசி விட்டு, தனது செல்போனை கழுத்துப் பட்டையிலிருந்து விடுவித்து, இரண்டொரு சங்கேத குறியீடுகளை செலுத்தி மௌன நிலைக்கு அனுப்பி விட்டு, மீண்டும் தாலிக்கொடியில் மாட்டிக் கொண்டு செருமியபடி பேசத்துவங்கினார் பொதுஜனம்.

”வணக்கம், தகவலறியும் சட்டத்தின் படி, எனக்கு ஒரு தகவல் தெரியனும்”
“நல்லதுங்கய்யா... அதற்கான அலுவலகம் மேலே ஐந்தாவது மாடில இருக்கு. அங்க பி.ஆர்.ஓ இருப்பார், அவரப்பாருங்க”
“இதான், நாடு நாசமாப் போறதுக்கான காரணமே இதான்... உங்களோட சேர்த்து பதிமூனு பேர். எனக்குத் தெரியாது, இங்க கேளு, அங்க கேளுன்னு ஒரு அலக்கழிப்பு. ஏன் சார், நான் தெரியாமத் தான் கேக்குறேன் அரசாங்கம் உங்களுக்கெல்லாம் எதுக்கு சார் சம்பளம் கொடுக்குது, எனக்கு எதுவும் தெரியாது வெளியே போன்னு கைய விரிக்குறதுக்கா?

அறைக்கதவு சம்பவத்தால் முதல் ஓவர் “மேட்-இன்” ஆகிவிட்டதே என்ற கவலையில் இருந்திருப்பார் போல, அடுத்த ஓவர் சிக்ஸரா வெளுக்கிறார்.

“ஐயா, நீங்க சொல்றது ஓகே தான்.. ஆனாலும் அதுக்குன்னு ஒரு அதிகாரி இருக்கார்ல , சரியா அவரப்போய் பார்த்தா தானே தேவையான தகவல் கிடைக்கும்”
“ஸீ... மிஸ்டர்  கவர்மெட் செர்வண்ட், இதெல்லாம் நல்லா பேசுறீங்க, உங்க ஆஃபிஸில் இதுவரை மொத்தம் எத்தனை ஃபைல்ஸ் உபயோகிச்சிருக்கீங்கன்னு ஒரு லிஸ்ட். இது தான் என்னோட ஸிம்பிள் க்வஸ்டீன். அதை சொல்றதுக்கு இவ்ளோ அலைக்கழிக்கிறீங்களே !”

நான் நாற்காலியில் உட்கார்ந்தபடியே ஒரு 360 டிகிரி வட்டம் போட்டு பார்த்தேன். பத்து அடி உயரத்துக்கு நாலா பக்கமும் கோப்புகள்.  இந்த நான்காவது மாடியில் மட்டும் இது மாதிரி சுமார் 20 அறைகள். அலுவலகத்திற்கு மொத்தம் ஐந்து தளங்கள்... ஐந்து பெருக்கல் இருபது, சுமார் நூறு அறைகள், ஒவ்வொரு அறை முழுதும் இவ்வளவு கோப்புகள்... அலுவலகம் 1996ல் இருந்து இந்த கட்டிடத்தில் இயங்குகிறது. இப்போ 2015, மொத்தம் பத்தொன்பது வருடம் உபயோகப்படுத்தின மொத்த கோப்புகளையும் தெரிந்து கொண்டு திருவாளர். பொதுஜனம் என்ன ஆராய்ச்சி செய்யப்போகிறார் என்று எனக்குத் தீராத ஆர்வம் பற்றிக்கொண்டது. நாக்கில சனி நர்த்தனமாடி விட, வாய்திறந்து கேட்டு விட்டேன். 

“ஐயா, இவ்ளோ ஃபைல் லிஸ்ட் வச்சு என்ன பண்ணபோறீங்க”
“மிஸ்டர்... ஆர்.டி.ஐ ல அப்ளிகண்ட் ரீசன் ஃபார் ஆஸ்கிங் டீடைல்ஸ் கொடுக்கவேண்டியதில்லை, தெரியும் தானே !”
இதெல்லாம் நல்லா தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால் யாரிடம் கேட்க வேண்டும் என்று தான் தெரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்.
”சரிங்கய்யா... நீங்க பி.ஆர்.ஓ வைப் பாருங்க, ப்ளீஸ்!”
“முடியாது சார்... எனக்கு தகவல் தெரியாம இங்கே இருந்து நகல மாட்டேன்”

அடுத்த பாலும் ஃபுல்டாஸா போச்சா. பவுண்டரிக்கு தூக்கி தூக்கி அடிக்கிறார். நான் மாட்டிக் கொண்டு விழிப்பதில், உடனிருக்கும் சிப்பந்திக்கு அப்படியொரு சந்தோஷம். அறையின் ஈசானி மூலையில் மூன்று செங்கோனங்கள் எப்படி சந்திக்கின்றன என்று அளவெடுத்துக் பார்த்துக் கொண்டே இருந்தார். என் பக்கம் தலையை சாய்க்கக் கூட மாட்டேன் என்கிறார். சரி, நம் வயிற்று வலிக்கு நாமே தான் கசாயம் காய்ச்ச வேண்டும் போலிருக்கிறது.

“அது சரிய்யா, ஆர்.டி.ஐ. ல தகவல் கேட்க பத்து ரூபாய்க்கு பி.ஓ எடுக்கனுமே, எடுத்துட்டு வந்துர்றீங்களா?
பனிரெண்டு எலிகள் தொட்டுப்பார்க்காத மசால் வடையை பதிமூன்றாவது ஆளாய் வந்த நான் மட்டும் ஏன் கடித்துத் தொலைக்க வேண்டும். அதன் பெயர் தான் விதி.
பேட்ஸ்மேனுக்கு சாதகமாய் எல்லா விதிகளும் மாற்றப்பட்ட வேளையிலும், கஷ்டப்பட்டு வீசும் பவுன்சருக்கு கொஞ்சம் மதிப்பிருக்கத் தான் செய்கிறது. மிஸ்டர் பொதுஜனம் இந்தக் கேள்விக்கு லேசாக பம்மினார் (என்று நானாக நினைத்துக் கொண்டேன்)
“ஓ, அப்படியா... சரி இதப்பிடிங்க”

என் கை ஓங்கி இருக்கின்ற தைரியத்தில், அவர் கிளம்பிச் சென்றால் போதும் என்ற ஆவலாதியில் அவர் கொடுத்த அந்த வஸ்துவை “கை” நீட்டி பெற்றுக்கொண்டு என்னவென்று பார்த்தேன். ஜோலி முடிந்தது என்று அப்போது தெரியவில்லை.

“சார்... பி.ஓ இல்லாட்டி கேஷா கூட கொடுக்கலாம்ல, அதான்.... இப்ப சொல்லுங்க, உங்க ஆஃபிஸ்ல மொத்தம் எத்தனை ஃபைல்?”
“ஐயா, என்கிட்ட எதுக்கு பணம் கொடுக்குறீங்க.. இந்தாங்க முதல்ல பிடிங்க.. பி.ஆர்.ஓ வைப் பாருங்க, தயவு செய்து இப்போ இடத்தை காலி பண்ணுங்க”
“என்ன சார், கவர்மெண்ட்ல வேலை இருக்கு, கை நிறைய சம்பளம், ஒரு வேலையும் கிடையாது, காலாட்டிட்டே சாகுற வரை பென்சன்... இதுல பப்ளிக்கை வேற இன்சல்ட் பண்ணுவீங்க... கவர்மெண்ட் மக்களுக்கு செய்றதை குட்டிச்சுவராக்குறதே உங்கள மாதிரி அரசாங்க ஊழியருங்க தான். இப்போல்லாம் காலம் முன்ன மாதிரி இல்ல சார்..  பப்ளிக் அவேர்னஸ் வந்திருச்சு சார். என்ன நடக்கும் தெரியுமில்ல”
“ஐயா, நான் ஒரு சாதாரண குமாஸ்தா.. எனக்குன்னு சில வரைமுறை அரசாங்கம் விதிச்சிருக்கு. அதை மீறிய விஷயத்தை என்கிட்ட கேட்டா என்ன சொல்ல... என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க, இப்போ முதல்ல இடத்தை காலி பண்ணுங்க”

ஒரு வழியாக வேண்டா வெறுப்பாக ஏதோ சவால் விட்டபடி கிளம்பிச் சென்று விட்டார். 

சரியாக ஒரே வாரம், அடுத்த விசாலக்கிழமைக்கு அலுவலம் முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது. எங்களது அலுவலகத்தில் ஒருவர் லஞ்சம் வாங்குற நேரடி வீடியோ க்ளிப்பிங் இண்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸப் எல்லாத்துலயும் சுத்திட்டு இருக்கிறது என்று ஆளாளுக்கு அள்ளி விட்டுகொண்டிருக்கிறார்கள். இதில் வரலாறு காணாத விதமாய் ஒரே வாரத்தில் ஒன்னரை லட்சம் வியூஸ் என்று ஆச்சர்யமாய் வேறு பேசிக்கொண்டார்கள். நானும் தேமே என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.  மதியத்துள் விஷயம் ஸ்படஷ்டமாக விளங்கி விட்டது. ஒரு காப்பி என் மொபைல் வரை வந்துவிட்டது, “இந்த கயவனை செருப்பாலடிக்க, ஐந்து பேருக்கு ஷேர் செய்யுங்கள்” என்ற தலைப்போடு. திருவாளர் பொதுஜனம் வேலையைக் காண்பித்து விட்டார்.  அன்று நடந்த அனைத்தையும் கழுத்தில் தொங்கவிட்டிருந்த மொபைல் மூலமாக படம் பிடித்து, வீட்டில் உட்கார்ந்து நல்லா எடிட்டிங், டப்பிங் எல்லாம் செய்து நான் பத்து ரூபாய் லஞ்சம் வாங்குவது போல ஐம்பது செகண்ட் படமாக ஓட்டி விட்டார். இதில் எனது முகத்துக்கு இரண்டு முறை டைட் க்ளோசப் வேறு. சாயங்காலம் வீட்டிற்கு கை நிறைய சஸ்பென்ஸன் ஆர்டரோடு சென்று கொண்டிருக்கிறேன். வாழ்க தகவலறியும் உரிமை, வாழ்க திருவாளர் பொதுஜனம், வாழ்க வாட்ஸப் புரட்சிப் போராட்டம் !

******