Wednesday, December 19, 2012

கும்கி - வெற்றிகொண்டான் !



கொடியவன் ஒருவனிடமிருந்து ஊரைக் காப்பதற்காக வெளியூரிலிருந்து அழைத்து வரப்படும் காவல் வீரன். அவனை தெய்வமாக மதிக்கும் ஊர்மக்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உண்மையான காவல் வீரனுக்கு பதிலாக ஒப்புக்கு வரும் ஒரு கோழை. அவனை வைத்து சில நகைச்சுவை. இறுதியில் தன் உயிர்த்தோழனின் உயிருக்கு ஆபத்து வரும் பொழுது வீராவேசம் கொண்டு எதிரியை வீழ்த்தி தானும் மடியும் வழக்கமான “திரை”க்கதை தான். ஆனால் இயக்குநர் பிரபு சாலமன் எடுத்து ஆண்டிருக்கும் களமும், அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் சுகுமாரின் ஒளிப்பதிவும், துணை நின்றிருக்கும் இமானின் இசையும், ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பும் நிச்சயம் “கும்கி”யை மறக்க முடியாதவனாக உருவாக்கியிருக்கிறது.

எந்தவொரு அறிமுக நாயகணும் எதிர்பார்த்துத் தவம் கிடக்கும் “பாத்திரம்” நாயகனுக்கு. “யானையின் பலம் பாகனின் தைரியம் தான்” என்று படத்தில் ஒரு வசனம் வரும். இவரின் நடிப்பும் அப்படித் தான். யானையுடன் நடித்த எந்த காட்சியிலும் சிறு மிரட்சி கூட காட்டாமல் திறம்படவே நடித்திருந்தார். குரலின் ஏற்ற இறக்கத்திலும் குறையொன்றுமில்லை. இவர் கொஞ்சம் சறுக்கியிருந்தாலும், அல்லது ஹீரோயிஸம், காமெடி செய்கிறேன் பேர்வழி என்று இறங்கியிருந்தாலும் மொத்த படமும் படுத்திருக்கும். நல்ல வேளை அப்படியான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. நாயகன் யானையின் தந்தங்களைப் பிடித்து எழும்பி நெற்றியில் முத்தமிடும் அந்த ஒரு காட்சிக்காகவே படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். அவ்வளவு கவித்துவமான, அழகான காட்சியமைப்பு. திரையில் காணும் போது ஏனோ மனம் நிறைய சிலிர்ப்பு. பொம்மனுக்கு “நல்வரவு”.

உண்மையில் இந்தப்படம தான் நாயகிக்கும் அறிமுகப்படமாக வந்திருக்க வேண்டும். வடு பதிந்த முகத்தாலும், மருளும் விழியாலும் அல்லியாகவே மாறிவிட்டார். 

படம் முழுவதும் எவ்வளவு அபத்தங்கள் இருந்தாலும் இறுதியில் நாயகன் நாயகியின் கரம் பிடித்துத் தொடுவானை நோக்கிப் பயணிக்கும் காட்சிகளையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் கண்களுக்கு இப்படத்தின் முடிவு ஒரு போதாமையை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக இல்லாமல், ஒருவன் தன் சுயநலனிற்காக தன்னை அண்டியிருந்த மூன்று உயிர்களையும் காவு கொடுத்து விட்டு, ஒரு நம்பிக்கை துரோகத்தை செய்து தன் வாழ்வை துவங்கவும் துணிவுமின்றி நிர்கதியாய் நிற்பது தான் அவனுக்கு விதிக்கப்பட்ட முடிவு. அதை நாம் அவ்வாறே ஏற்றுக் கொள்வது தான் சரியாக இருக்குமென தோன்றுகிறது.

இப்படம் பழங்குடியினரின் வாழ்வை உண்மையாக பிரதிபலிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் இயக்குநர் தான் வரைந்து கொண்ட வட்டத்திற்குள் நின்று கச்சிதமாகவே விளையாடி இருக்கிறார். வணிக ரீதியான சில சமாதானங்களை செய்து கொண்டிருந்தாலும் அவை மிகவும் உறுத்தாத அளவிலேயே இருந்தன. உதாரணமாக பழங்குடியினரின் அறுவடைப்பாடலை குத்துப் பாட்டாக மாற்றி விட்டார் என்று சொல்வார்கள் என்பதற்காகவே இரண்டு மூன்று இடங்களில் “வெளியூர் ஆட்டக்காரர்களை வரச்சொல்லிட்டியா?” என்று கொஞ்சம் அழுத்தமாகவே கூறும் படி செய்திருந்தார் :)

படத்தில் கொஞ்சம் ஒட்டாமல் உறுத்திக் கொண்டிருந்தது நாயகனின் தாய்மாமனின் ஓயாத தொணதொணப்பான உரையாடல்களும், புலம்பலும் தான். இறுக்கமாக இருக்க வேண்டாமே என நினைத்து படம் முழுவதும் அவரைப் பேசவிட்டு இடநிரப்பியாக பயன்படுத்த நினைத்திருப்பார்கள் போல. ஆனால் அவரது ஆங்கில சொல்லாடல்கள் பல இடங்களில் அந்நியத்தனத்தையே தந்தன. சில இடங்களில் சிரிக்கவும் வைத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. 

எப்படியிருந்தாலும், படைப்பின் மீது இயக்குநருக்கு இருந்த ஆளுமை படம் முழுவதும் நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியிருக்கிறார்கள் என்று சொல்வார்களே, அது போல காணக் காண கண் நிறைந்த காட்சிகள். மொத்த படக்குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். நல்லதொரு திரையனுபவத்தைத் தந்தீர்கள், நன்றி !

2 comments:

  1. us,nj,marai thats wonderfull movie

    ReplyDelete
  2. நல்லதொரு திரைப்படம் ....ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து!!

    -மதன்

    ReplyDelete