Saturday, September 19, 2015

கனவுக்கதை – மொழிபெயர்ப்பு கவிதை

கனவுக்கதை - ரபியா அல் பாஸ்ரி
(தமிழில் பாலகுமார் விஜயராமன்)
-------------------------------------------------------------------
எனது நினைவுகளுக்கு அப்பாற்பட்ட அழகிய, பரந்த பசுமைத் தோட்டத்தில் நான் இருப்பதை உணர்ந்தேன். இத்தோட்டத்தில் ஒரு சிறுமி என்னுடன் இருந்தாள். அவள் என்னிடம் “இவ்விடம் எத்தனை அழகுடன் இருக்கிறது, பாருங்கள் !” என்று வியந்தாள்.

அவள், “நீங்கள் இதனைக்காட்டிலும் வியத்தகு அழகுடன் உள்ள மற்றோர் இடத்தைக் காண விரும்புகிறீர்களா ?” என்றாள்

நான் “ஆம்” என்றதும், என் கரம் பற்றி அழைத்துச் சென்றாள். அவ்விடம் இதுவரை மனிதக் கண்கள் கண்ணுற்றிராத மேன்மை பொருந்திய அழகுடன் திகழ்ந்தது. அச்சிறுமி ஒரு கதவைத் தட்டியதும், யாரோவொருவர் வந்து திறந்தார். உடனே நாங்கள் இருவரும் பெருவொளிப் பிரவாகத்தில் நனைந்தோம்

நாங்கள் அங்கே கண்ணுற்ற கன்னிப்பெண்களின் செயல்களின் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவாரென உணர்ந்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் ஒளி நிரம்பிய பரிமாறும் தட்டை ஏந்தியவாறு சென்றனர். என்னுடன் வந்த சிறுமி அவர்கள் என்ன செய்கின்றனர் என்று கேட்டதும், “கடலில் மூழ்கி உயிர்த்தியாகம் செய்த ஒருத்தியை நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம். அவள் இரவில் ஒருபொழுதும், ஓர் இமைப்பொழுதும் உறங்காதவளாக இருந்தாள். நாங்கள் அவளது உடலில் ஈமக்கடனின் வாசனைத் திரவியத்தை பூசப்போகிறோம்.

“அவ்வாறென்றால், சிறிது திரவியத்தை இங்கிருக்கும் என் தோழியின் மீதும் பூசவும்” சிறுமி என்னைச் சுட்டிக்காட்டி கூறினாள்.

“ஒரு காலத்தில், இந்த வாசனைத் திரவியத்தின் நறுமணம் இவள் உடலெங்கும் பரவியிருந்தது, ஆனால் இவள் பயங்கொண்டு அதனை துறந்து விட்டாள்”

உடனே அந்த சிறுமி என் கையை விடுத்து விலகிச் சென்று, திரும்பி என்னை நோக்கிக் கூறினாள்:

”உனது பிரார்த்தனையே உனது ஒளி;
உனது பக்தியே உனது பலம்;
உறக்கம் இவை இரண்டுக்குமான எதிரி.
உனது ஜீவனே வாழ்க்கை உனக்குக்கொடுக்கும் ஒரே வாய்ப்பு.
அதை நீ உதாசீனம் செய்தால், அதை நீ வீணாக்கினால்,
உன் நிலையிலிருந்து நீயே தாழ்ந்து போவாய் !”

பிறகு அச்சிறுமி என் பார்வையிலிருந்து மறைந்து போனாள்

****** 
மூலம்: http://hellopoetry.com/poem/73235/dream-fable/
நன்றி: http://malaigal.com/?p=7177

No comments:

Post a Comment