Monday, December 24, 2018

வாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்




பத்தாண்டுகளுக்கு முன், வலைப்பூ (Blog) மூலமாக எழுத ஆரம்பித்தவர்களில் கணிசமானவர்கள் இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் இருந்து, இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

22/12/2018 அன்று வாசகசாலை சென்னையில் ஏற்பாடு செய்திருந்த “முப்பெரும்விழா”, அவர்களோடு இணைந்திருக்கும் வாய்ப்பைத் தந்தது. நிகழ்வு நிறைவான ஒன்றாக இருந்தது.

வாசகசாலை இந்த ஆண்டுதான், மொழிபெயர்ப்பு பிரிவுக்கு விருதுகள் அறிவித்திருந்தது. இருப்பதிலேயே காஸ்ட்லியான கோட்-சூட் காஸ்ட்யூம் கொடுத்திருந்தாலும், தாலிகட்டும் நேரத்தில் நேக்காகக் கழற்றிவிடப்படும் தமிழ்சினிமாவின் அமெரிக்க மாப்பிள்ளை போல் இருந்த மொழிபெயர்ப்பாளர்களை, நான்கு ஹீரோக்களில் ஒருவராக்கி மேடையில் அமரவைத்ததற்கு நன்றி என்று எனது ஏற்புரையில் குறிப்பிட்டேன்.

எனது மொழிபெயர்ப்பின் துவக்கவிடமான ’வலசை’ மற்றும் இந்நூலில் உள்ள கதைகள் தேர்வின்போது  கவிஞர் நேசமித்ரன், மறைந்த எழுத்தாளர் அர்ஷியா, நண்பர் கார்த்திகைப்பாண்டியன் ஆகியோருடனான எனது தொடர் உரையாடல்கள் குறித்தும் சிறிது பேசினேன்.

இன்னும் நிறைய பேசக் குறிப்புகள் வைத்திருந்தேன். புத்தகங்கள் வெளியீடு, வாசகசாலை ஆண்டுவிழா, விருதுகள் வழங்குதல் என்று மூன்று நிகழ்வுகள் இருந்ததால், மிக நீண்ட மாலை போலத் தோன்றியது. அரங்கில் பொறுமையாக அமர்ந்திருந்தவர்களுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும் என்பதால், சுருக்கமாக முடித்துக்கொண்டேன்.
நீண்ட தூரத்திலிருந்து க.ரா வந்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்தான் பதிப்பாளர் ‘நூல்வனம்’ மணிகண்டனை தொலைபேசி பேச்சின் வழியாக அறிமுகப்படுத்தினார். எனது இரண்டு புத்தங்கள் ‘நூல்வனம்’ மூலமாக வெளிவந்துவிட்டன. இப்போது தான் மணிகண்டன் அவர்களை முதன்முறையாக நேரில் சந்தித்தேன்.

நிகழ்வு இடைவெளியில் அருணாச்சலம் சார் உடனும், எழுத்தாளர் கணேசகுமாரனோடும் பேசிக்கொண்டிருந்ததில் சிறுதானிய ஸ்நாக்ஸ் சாப்பிடவிட்டுப்போய்விட்டது. உமா மோகன் மேடம், ஜான்சி மேடம், கலையரசி மேடம் ஆகியோரை அருணாச்சலம் சார் அறிமுகப்படுத்திவைத்தார்.

விருது அறிவித்ததில் இருந்து, கார்த்திகேயன் தொடர்பில் இருந்தபடியே இருந்தார். குடும்பத்தோடு வருகிறேன் என்றதும், பயண ஏற்பாடு, தங்கும் வசதி போன்றவற்றை கூடுதல் அக்கறையோடு கவனித்துக்கொண்டார். விழாவுக்குச் சென்றதும் அவரையும், அருணையும் பார்த்ததும் சரியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.

பி.கு.விடம் நீங்கள் மாரி செல்வம் தானே என்று கேட்டு பல்பு வாங்கியபின், மாரி செல்வம் தானாகவே வந்து அறிமுகம் செய்துகொண்டார். சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் சு.வெங்கடேசனிடமும், எழுத்தாளர் எஸ்.பாலபாரதியிடமும் அறிமுகம் செய்துகொண்டு இரண்டு வார்த்தைகள் பேசினேன்.

விக்னேஷ்வரன், விருதுக்குத் தேர்வான எனது “கடவுளின் பறவைகள்” புத்தகத்தை முழுமையாக வாசித்திருந்தார். கணவனையும், மகனையும் கொன்றவனை சட்டத்திற்குமுன் நிறுத்தும் பெண்ணின் போராட்டம் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது, பிசிறில்லாத மொழிபெயர்ப்பு (’காட்டுமிராண்டிகள்’ சிறுகதை) என்று வாழ்த்தினார். மகிழ்வாக இருந்தது.

கார்த்திகைப்பாண்டியனின் ஃபிரண்ட் என்று ஓர் இளம்பெண் (செல்வராணியா, யோகநந்தினியா? ) அறிமுகம் செய்துகொண்டு பேசினார். நானும் அவர் ஃபிரண்ட்தாங்க! என்று பதில் அறிமுகம் செய்துகொண்டேன்.

ஃபெட்ரிக்கும், பிரவீண் குமாரும் சிரமம் பார்க்காமல், நாங்கள் தங்கியிருந்த அறைக்கே வந்து, வசதிகள் குறித்து சரிபார்த்துவிட்டுச் சென்றனர்.

திருமணத்திற்குப் பந்தல்கால் நட்டதுமுதல், விருந்தினர் உபசரிப்பு, மண்டப ஏற்பாடு, சமையல் மெணு, போக்குவரத்து, ஆடை ஆபரணங்கள் என்று ஒவ்வொன்றாய் பார்த்துப்பார்த்துத் திட்டமிட்டாலும், முகூர்த்ததின்போது தாலிசெயினை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடித்துலாவி, பின் சரி அதற்குபதில் சாமி கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை எடுத்துக்கட்டுங்கள் என்பது போன்ற சுவாரஸ்யமான குளறுபிடிகள் நடந்தன.

சிறப்புரை ஆற்றவந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பேசுவதற்குமுன் இடைவேளை அறிவித்து, பாயாசம் சாப்பிட அழைப்புவிடுத்தது, புத்தக வெளியீட்டின் போது, வேறு புத்தகம் உள்ள பார்சலை வைத்தது, புத்தகம் பெற்றுக்கொள்பவர் என்று பெயர் அறிவிக்கப்பட்டபின் அவரைத்தேடி வாசலுக்கு ஓடி, அவரை அங்கே காணாமல், அவருக்கு மாற்றாக அருகில் நின்றுகொண்டிருந்த வேறு ஒரு நண்பரை புத்தகம் பெற்றுக்கொள்ள வைத்தது என்று இந்த சுவாரஸ்ய தருணங்களில், ஒருங்கிணைப்பாளர்களுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை, எதிரில் இருந்து வேடிக்கை பார்க்கையில் நமக்கு ரசிக்கும்படி ஜாலியாக இருந்தது.

சிறப்புரையில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எந்தவிஷயம் செய்வதானாலும், அதற்குரிய முக்கியத்துவத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று வாழ்த்தினார்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த இளைஞர்கள், ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொள்வது, அவர்கள் நிகழ்வுக்கு அவர்களே மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பது என்பதுபோன்ற மேம்போக்கான விஷயங்கள் மட்டுமே தெரிந்தாலும், உண்மையில் இத்தகைய நிகழ்வுகளை நடத்துவதற்கு இவர்களிடம் இருக்கும் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகச்சிறப்பானவை. அதற்குண்டான நீண்டகால வெற்றி அவர்களுக்கு உரித்தாகட்டும்.

பொதுமக்களின் தளத்திற்கு இலக்கியம் சென்றடைய, நிச்சயம் பெண்களின் பங்கேற்பு இருந்தால் மட்டுமே முடியும். அவ்வகையில் வாசகசாலை பெண்களின் தொடர்பங்களிப்பு மிகவும் பாராட்டப்படவேண்டியது. முப்பெரும் விழா ஏற்பாட்டிலும், ஒருங்கிணைப்பிலும், விருதுக்குரிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதிலும், தொகுத்து வழங்கியதிலும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

அடுத்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முகத்தை மாற்றியமைப்பதில், வாசகசாலையின் பங்கு நிச்சயம் முக்கியமானதாக இருக்கும். வாழ்த்துகள் நண்பர்களே, தொடர்ந்து பயணிப்போம்.

#வாசகசாலை
#முப்பெரும்விழா2018
******

No comments:

Post a Comment