Thursday, July 21, 2022

அதிகாரம்!

ஒசூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் வேலைக்குச் சென்று வர சுமார் இரண்டாயிரம் பேர் பயணிகள் ரயிலை நம்பி உள்ளனர். ஏற்கனவே இருக்கும் ரயில் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத நிலையில், பெருந்தொற்றுக் காலத்தில் நிறுத்தப்பட்ட சில ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. மக்கள் அதற்கான கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசியல்வாதிகளிடமும், ரயில்வே அதிகாரிகளிடமும் கொடுத்து பல மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.

தென்மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு ஒசூர் பயணிகளின் மேல் எப்போதும் அளவுகடந்த பாசம். அதற்குத் தற்போதைய எடுத்துக்காட்டு, "கூடுதல் ரயில் தானே கேட்ட, இந்த வச்சுக்கோ!" என்று மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் கிளம்பி, ஒசூருக்கு மாலை 5 மணிக்கு வந்து, மீண்டும் ஒசூரில் இருந்து மாலை 7.30மணிக்கு யஷ்வதந்த்பூர் சென்று சேர்வது போல ஒரு சிறப்பு பயணிகள் ரயிலை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது தேவை அதிகம் இருக்கும் திசைக்கு நேர் எதிரில் சேவையை அதிகரித்துள்ளனர்.

இதே போல தான் ஒசூர்க்காரர்களின் தொல்லை தாங்க மாட்டாமல், சென்ற ஆண்டு மதியம் 12.00 மணிக்கு ஒசூரில் இருந்து கிளம்பி, 1.30 மணிக்கு பெங்களூர் சென்று மீண்டும் 3.00 மணிக்கு ஒசூர் வரும் ஒரு சிறப்பு ரயிலை விட்டனர். அது எதிர்பார்த்தது போலவே, காலி பெட்டிகளுடன் சென்று திரும்பியதால் ஒரு மாதத்தில் "ஓசூர் பயணிகளிடம் பெங்களூர் ரயில்களுக்குப் போதிய வரவேற்பு இல்லை" என்று அந்த ரயிலை ரத்து செய்துவிட்டார்கள். இப்போது அறிவித்திருக்கும் புதிய ரயிலுக்கும் அதே கதி தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு பக்கம் பயணிகள் ரயிலுக்கு இன்றியமையாத தேவை இருக்கும் போது, மக்கள் பலவிதங்களில் அழுத்தம் கொடுத்து சேவைக்கான ஆணைகளைப் பெற்றாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் என்ன நினைக்கிறார்களோ அது தான் நடக்கிறது. கோப்புகளின் சாட்சிகளின் படி, "இந்தத் தடத்தில் புதிய ரயில் விடப்பட்டது, மக்களிடம் ஆதரவு இல்லை, அதற்கான சான்று இணைக்கப்பட்டுள்ளது, எனவே ரயில் ரத்து செய்யப்படுகின்றது" என்று அழகாக நோட் ஷீட் எழுதி மூடி வைத்துவிடுவார்கள். அதனைப் பிற்காலத்தில் யாரும் சோதனை செய்ய வேண்டி வந்தாலும் "ஆமாம் சரி தான்" என்றே தீர்ப்பெழுதப்படும்.

உண்மையில் காலையில் பணிக்குச் செல்ல ஒசூரில் இருந்து பெங்களூருக்கும், மாலையில் பணி முடிந்து பெங்களூரில் இருந்து ஒசூருக்கும் வரும்படியான கூடுதல் ரயில்களை எதிர்பார்த்திருக்கும் ஒசூர் வாசிகள், "எங்களைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது?" என்று யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

#HosurDiary
#TrainStory

- பாலகுமார் விஜயராமன்

No comments:

Post a Comment