Friday, April 24, 2026

ஏன் தொடர வேண்டும் திமுக அரசு?

இந்தத் தேர்தலில் என் வாக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே. அதற்கான காரணங்கள்:

1. ஒன்றிய அரசின் அசுரப் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காத்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேற்றிச் செல்ல திமுக அரசு தொடர வேண்டும்.

2. கல்விக்கும், மாணவர்கள் நலனுக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் (நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், காலைச் சிற்றுண்டி)என  இந்த திமுக அரசு செய்திருப்பவை ஏராளம். அவை யாவும் தங்குதடையின்றி தொடர திமுக அரசு தொடர வேண்டும்.

3. மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை - இவை பெண்களுக்கு சிறகுகளையும், பொருளாதார விடுதலையையும்  கொடுத்த புரட்சிகரத் திட்டங்கள். 

4. திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை போன்று பக்தி சார்ந்த விஷயங்களில் பாஜக மதக் கலவரங்கள் செய்ய முனைந்த போது, அதனை தீரமான ஒற்றைக் குரலில் ஒடுக்கியது, தமிழ்நாட்டில் மத அரசியலுக்கு இடமில்லை என்ற உறுதியான நிலைப்பாடு.

5. திமுக 2021ல் ஆட்சிக்கு வந்த போது, ஒன்றிய பாஜக அரசை எதிர்த்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. நிதி கிடைக்காது, கைது அச்சுறுத்தல்கள் இருக்கும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் குறிவைக்கப்படுவார்கள்/விலைபேசப் படுவார்கள் என்று பல பிரச்ச்னைகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே எல்லாப் பிரச்சனைகளும் வந்தன. ஆனால் திமுக இவை எதற்கும் அஞ்சாமல் மதவாத/சனாதன/வலதுசாரி ஃபாசிச எதிர்ப்பு அரசியலை இன்னும் தீவிரமாக முன்னெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக வை வைத்துப் பார்த்தாலே போதும், தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு திமுக ஏன் தேவை என்று புரிந்துவிடும்.

 6. சமூக நீதி, இட ஒதுக்கீடு, மாநில நலன் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் திமுக வே ஒரே தேர்வு.

7. தொழில் வளர்ச்சி, பெருநிறுவன முதலீடுகள் ஆகியவற்றை ஈர்க்க தொலைநோக்குடன் கூடிய  நிலையான, தன்னிச்சையான முடிவுகள் எடுக்கக் கூடிய அரசு வேண்டும். 2016-2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநில நலன்கள் அனைத்தும் அடகுவைக்கப் பட்டிருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.

8. "பாஜக உள்ளே புகுந்துவிடும்" என்பது என்று கேலிச் சொல் ஆகிவிட்டது. அதன் உண்மையான பதற்றத்தை தமிழக மக்களை அண்ட விடாமல் திமுக அரசு இந்த ஐந்து வருடங்களில் உண்மையில் அரணாகக் காத்து இருக்கிறது. இந்தக் கோட்டையில் விரிசல் விட வழிவகுக்கக் கூடாது.

9. கலை, இலக்கியம், வாசிப்பு தொடர்பான அறிவுசார் நிகழ்வுகளுக்கு ஓர் அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதே ஆட்சியின் செழிப்புக்கான அளவுகோல். அவ்வகையில் பல்நோக்கு நூலகங்கள், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகள், கலை இலக்கியத் திருவிழாக்கள், நூலகங்களுக்கான வெளிப்படையான நூல் கொள்முதல்கள் என்று நிறைய செய்திருக்கிறது, இன்னும் செய்யும்.

10. திராவிட மாடல் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்தவித பாகுபாடுமின்றி தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது. திராவிடத்தின் பயனாளியாக, நம் அடுத்த தலைமுறைகளுக்கும் அத்தகைய தொடர் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக எனது தேர்வு திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே!

சரி 2021-2026 குறைகளே இல்லாத பொற்கால ஆட்சியா என்றால், குறைகளும் இருந்தன. அவை திமுக அரசின் தோல்வி என்ற பொய்ப் பரப்புரைகளைப் புறந்தள்ளி இந்தக் காலத்தின் பெருகி வரும் ஆபத்துகள் என்ற வகையில் வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதிக கவனம் செலுத்தத் தேவையான சில விஷயங்களும் உள்ளன.

1. அதிகாரிகளின் ஆட்சியாக இல்லாமல், உண்மையான பொருளில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியாக இருப்பது.

2. போதைக் கலாச்சாரம் - வயது வித்தியாசமின்றி காலத்தின் சீரழிவாகப் பெருகிக் கொண்டிருக்கும் போதை அதன் தொடர்ச்சியான குற்றச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் பட வேண்டும்.

3. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு - இன்னும் தீவிரமாக எல்லா மட்டங்களிலும் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.

4. குடிநோய் மறுவாழ்வு - சமுதாயத்தின் பெரும்பகுதியை அழித்துக் கொண்டிருக்கும் அரசு மதுக்கடைகள் முறைப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

இவை அடுத்து வரும் திராவிட மாடல் 2.0 தீவிரமாகச் செயல்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையுடன்...

ஸ்டாலின் தொடரட்டும்,
தமிழ்நாடு வெல்லட்டும்!

Thursday, March 26, 2026

தன்நெஞ்சறிவது! - வைரமுத்து - ஞானபீடம் தொடர்பான கட்டுரை

 

தன்நெஞ்சறிவது!

பாலகுமார் விஜயராமன்

---

கவிஞர் வைரமுத்துவுக்கு 2025ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகியும் இன்னும் சர்ச்சைகளும், விவாதங்களும் முடிந்தபாடில்லை. தமிழ்ச் சூழலில் வழக்கமாக எந்த விருது அறிவிப்புக்குப் பின்னும் அத்தேர்வு குறித்த போதாமைகளும், அவநம்பிக்கைகளும் எழுவது இயல்புதான் ஆனால் இம்முறை எதிர்ப்புகள் இவ்வளவு காத்திரமாக வெளிவருவதற்கு விருதாளர் வைரமுத்து என்பதே முக்கியக் காரணம். முற்போக்காளர்கள், இடதுசாரிகள், நடுநிலையாளர்கள், அடிப்படைவாதிகள், வலதுசாரிகள், சங்கிகள், தீவிர இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டோரும் வைரமுத்துவின் தேர்வை விமர்சிக்கிறார்கள். ஏனென்றால் வைரமுத்து அவர்களின் முந்தைய வரலாறு அப்படி இருக்கிறது.  ஞானபீடம் போன்ற இந்திய அளவில் மிக உயரிய இலக்கிய அந்தஸ்து உள்ள விருதுக்கு வைரமுத்து தகதியானவர் இல்லை என்று சொல்வதற்கு மூன்று வகையான காரணங்கள் காணக் கிடைக்கின்றன.

1. வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகள் ஞானபீட விருதுக்கான தரத்தில் இல்லை. அவர் பெரும்பாலும் கூட்டு உழைப்பைக் கோரும் திரையிசைப் பாடல்கள் எழுதுவதில் வல்லுநர். அவரது தனிப்பட்ட கவிதைத் தொகுப்புகளும், புதினங்களும் மிகவும் மேம்போக்கானவை. அவற்றிற்கு இலக்கிய மதிப்பு இல்லை.

2. வைரமுத்து நேர்மையான முறையில் இவ்விருதைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அவர் விருதுக் குழுவினர்கள், பரிந்துரையாளர்கள், அதிகார மையத்திலிருப்போர், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் என அனைவர் மீதும் செல்வாக்கு செலுத்தி, நீண்ட கால காய்நகர்த்தலின் தொடர்ச்சியாக இவ்விருதைக் கைக்கொண்டிருக்கிறார்.

3. வைரமுத்து #metoo தொடர்பாக பெண்கள் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர். தார்மீக அடிப்படையில் அவருக்கு இவ்விருதை வழங்கக் கூடாது.

முதல் விஷயத்திற்கான விளக்கம் நேரடியானது. ஞானபீட விருது என்பது தீவிர இலக்கிய எழுத்துக்கான விருது மட்டுமா? சாமானியர்களின் உணர்வுகளைத் தீண்டும் திரையிசை போன்ற மற்ற கலை வடிவங்களுக்கு அதில் இடமில்லையா? இவற்றிற்கான பதில்: ஞானபீடம் பல்துறை வகைமைகளைச் சேர்ந்த கலை வடிவங்களை உள்ளடக்கிய தேர்வாகவே இதுவரை இருந்திருக்கிறது. 2023ம் ஆண்டு உருது/இந்தி கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் குல்சாருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட போதும் சர்ச்சைகள் வெடித்தன. குல்சாருக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருதை அங்கீகரிக்காத தீவிர இலக்கியவாதிகள் ஒருபுறமென்றால், குல்சாரோடு சேர்ந்து அவ்வருடம் ஞானபீட விருது பகிர்ந்தளிக்கப்பட்ட இன்னொரு நபர் குறித்தும் சர்ச்சை எழுந்தது. 2023ம் ஆண்டு கவிஞர் குல்சார் மற்றும் சம்ஸ்கிருத அறிஞர்/ஆன்மீக வழிகாட்டி/ பக்தி இலக்கிய குரு ராம்பத்ராச்சாரியா ஆகிய இருவருக்கு ஞானபீட விருது சேர்ந்தளிக்கப்படது. குல்சார் போன்ற திரைப்பட பாடலாசிரியருக்கு ஞானபீட விருதை அளிப்பதா என்றும், குல்சார் போன்ற தேர்ந்த கவிஞருக்கு ராம்பத்ராச்சாரியா போன்ற ஒரு மதத் தலைவரை இணை வைத்து விருது கொடுத்து அவரை அவமானப்படுத்துவதா என்றும், ஞானபீட விருதை ராமர் கோயில் கட்டுவதற்காகத் தொடர் பிரச்சாரம் செய்த ஒரு மதகுருவிற்கு அளிப்பதா என்றும் பல்முனைகளில் விமர்சனங்கள் எழுந்தன. அதே போல, 1998ம் ஆண்டு புகழ்பெற்ற கன்னட நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னாட் அவர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. கன்னட இலக்கிய அடையாளம் என்பது தீவிர எழுத்து வடிவம் மட்டுமல்ல அது நாடக அரங்கிலும் சமானமான உயிர்ப்புடன் இயங்கிறது என்பதை அவ்வருட விருது அறிவிப்பு உணர்த்தியது. இன்னும் பின்னே போனால், 1972ல் தேசியவாதக் கவிஞரான ராம்தாரி சிங் தினகருக்கு (இந்தி) வழங்கப்பட்ட விருது முக்கியமாக அவர் ஆற்றிய நாட்டுப்பற்று மிக்க அரசியல் உரைகளுக்கானதே. இலக்கியம் என்பது தனிப்பட்ட வாசிப்பு இன்பம் மட்டுமல்ல, அது வாய்மொழி மரபும்கூட என்ற செய்தியை அறிவிப்பதாக அமைந்தது. 1982ல் விருது பெற்ற கவிஞர், ஓவியர் மகாதேவி வர்மா (இந்தி) அவரது கவிதைகளைப் போலவே சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண்கள் உரிமை மற்றும் கல்விக்காக அவர் கொடுத்த குரலுக்காகவும் போற்றப்பட்டவர். 1996ல் விருது வென்ற மகஸ்வேதா தேவி (வங்கம்) தீரமிக்க மனித உரிமைப் போராளி மற்றும் பத்திரிகையாளர். பொதுவெளியில் அவரது இலக்கியத்தைக் காட்டிலும் பழங்குடியினர் நல்வாழ்வு மற்றும் கொத்தடிமைத் தொழிலுக்கெதிரான நேரடிச் சமூகச் செயல்பாடு வீரியமிக்கவை. இப்படி பன்முக இலக்கிய, பண்பாட்டு வடிவங்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது ஞானபீட விருது. ஆயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களை, கவிதைகளை, சில புதினங்களை எழுதிய வைரமுத்துவும் செழுமையான மொழிப்பங்காற்றியிருக்கிறார். பல முறை தன் திரையிசைப் பாடல்கள்களுக்காக தேசிய அளவிலான அங்கீகாரமும், தனது “கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக 2003ம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருதும் பெற்றிருக்கிறார். அவர் சாகித்ய அகாடெமி விருது பெறும் போதும் சில சர்ச்சைகளை எதிர்கொண்டார். எனினும் இத்தகைய அவரது சாதனைகள், அவருக்கான ஞானபீட விருதுத் தேர்வுக்கு பலமான அடித்தளம் அமைக்கின்றன.

இரண்டாவது விஷயம், வைரமுத்து நேர்மையற்ற முறையில் மறைமுக அழுத்தங்கள் மற்றும் சிபாரிசுகள் மூலமே ஞானபீட விருதினைப் பெற்றிருப்பார் என்று நம்பப்படும் யூகம். இதனை வைரமுத்துவின் மீதான வெற்றுக் காழ்ப்பு என்ற ஒற்றை வரியில் சுருக்கிவிடவும் முடியாது. தமிழின் தன்னிகற்ற படைப்பாளி எனத் தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் வைரமுத்து, எப்போதும் ஆட்சியாளர்களின் நன்மதிப்புப் பட்டியலில் இடம் பெறத் தவறியதே இல்லை. திராவிட இயக்கத் தலைவர்களோடு நட்பு பாராட்டி அவர்களின் நெருங்கிய வட்டத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் அதே வேளையில் ஒன்றிய அரசுப் பிரதிநிதிகளுடனும் அமைச்சர்களுடனும் இணக்கத்தை வளர்க்கத் தவறியதும் இல்லை. ஒன்றிய நிதியமைச்சரை “நட்டு வைத்த வேலுக்குப் பொட்டு வைத்தது போல இருக்கிறார் என்று பாராட்டியது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹரித்வாரில் திருவள்ளுவருக்கு சி்லை நிறுவ முன்னெடுக்கையில் வலியச் சென்று வாழ்த்தியது, முக்கியமாக, தற்போதைய பிரதம மந்திரியின் இந்தி மொழி கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து கலந்து கொண்டு அவரின் “கவிப்புலமையை வானளாவப் புகழ்ந்து தள்ளியது இவையெல்லாம் பொதுப்பார்வையாளர்களுக்கு அவர் மீது அசூயையை ஏற்படுத்தின. அவரது இத்தகைய செயல்கள் மூலம் அவர் எத்தகைய நேரடி, மறைமுகப் பலன்கள் பெற்றிருப்பார் என்று தங்கள் யூகங்களை வளர்க்க அவரது நடவடிக்கைகள் துணைபோயின. ஞானபீடம் போன்ற உயரிய விருதுகளுக்குத் தகுதியுடைய பலர் தேர்வுப் பரிசீலனையில் இருக்கும் போது, ஆட்சி அதிகாரத்தில் ஆளுமை செலுத்துபவர்கள், முக்கிய படைப்பாளுமைகள் போன்றோரின் பரிந்துரைகள் முக்கியப் பங்கு வகிக்கும் சூழ்நிலையில் வைரமுத்து அதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பார் என்ற சந்தேகத்தை, அவருக்கு ஞானபீட விருது அறிவித்திருக்கும் இவ்வேளையில் தங்கள் எதிர்ப்புக்கான காரணமாக முன்வைக்கின்றனர். இச்சங்கிலியில் முக்கியமான இன்னொரு கண்ணி, தமிழில் இதற்கு முன் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் இறுதிக் காலத்தில் இருக்கும் போது, வைரமுத்து வலியச் சென்று அவரிடம் தனது சிறுகதைகள் குறித்து  ஜெயகாந்தன் எழுதியது போல ஒரு பாராட்டுக் கடிதம் எழுதி அவரது கையெழுத்தைப் பெற்றார் என்று ஜெயகாந்தன் அவர்களின் மகள் முன்வைத்த குற்றச்சாட்டு. அதற்கு வைரமுத்து தரப்பில் இருந்து ஜெயகாந்தனின் ஒப்புதலின் பெயரிலேயே அந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டது என்று மறுப்பு வந்தாலும், கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அப்படியே தான் இருக்கின்றன.

 வெளியில் இருந்து பார்ப்பதற்கு இவை நேர்மையற்ற செயல்களாகத் தோன்றலாம். ஆனால் தகுதியுடைய தனது படைப்புகள் உயரிய இடங்களுக்குச் சென்று சேரத் தானே அதற்கான சந்தைப்படுத்துதலையும் செய்வதில் என்ன தவறு என்று வைரமுத்து நினைத்திருக்கலாம். தகுதியற்ற ஒன்றிற்காக சமூகத்தின் பிரபலர்களும், ஆளுமைகளும், ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் வலிய வந்து பாரட்டுப்பத்திரங்கள் வாசிப்பதில்லை. தான் முறையாக தன் படைப்பாற்றலை அவர்கள் முன் ‘கூச்சமின்றி (இதனைப் படைப்பாளர்களுக்கு உள்ள பொதுவான அவையடக்கம்/கூச்சம் என்ற பொருளில் வாசிக்கவும்) நடத்திக் காட்டுவதால் தன் படைப்புகளுக்கான சிபாரிசும் அங்கீகாரமும் கிடைக்கின்றன என்பது விருதாளரின் வாதமாக இருக்கலாம். ஒரு மனிதன் பல வருடங்களாகப் கணக்குகள் போட்டு, முன்னேறி, தனக்கு முன்பிருந்த விருது பெற வாய்ப்பிருந்த படைப்பாளுமைகளைப் புறந்தள்ளி, தன் சுயவிவரக் குறிப்புகளை மெருகேற்ற தகுதியான பரிந்துரைக் கடிதங்களைச் சேகரித்து அவற்றை வலுவுள்ளதாக்கி, விருதுக் குழுவின் பல படிநிலைகளைத் தனது செல்வாக்கினால் தகர்த்து, இறுதி வெற்றியையும் பெற்றிருப்பார் என்று நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் இன்றைய சமூக சூழ்நிலையில் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று முற்றாகப் புறந்தள்ளிவிடவும் முடியாது. ஆனால் அத்தகைய வழிமுறைகளில் தான் வைரமுத்து ஞானபீட விருதினைப் பெற்றிருப்பார் என்று பொது சமூகம் யூகித்தாலும், வலுவான ஆதாரங்களின்றி அதனை எதிர்க்க பொது சமுதாயத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவர் நேர்மையற்ற முறையில் இவ்விருதை அடைந்திருப்பார் எனில் அவ்விருதின் பொதுமதிப்பு குறைகிறதே ஒழிய, வேறொரு வெளிப்பாடும் அதன் மூலம் கிடைக்கப்போவதில்லை.

மூன்றாவது விஷயம், பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான #metoo சர்ச்சை.  பிரபலங்கள் தங்கள் செல்வாக்கினைப் பயன்படுத்தி தம் அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும் பணிந்து போக வேண்டிய இடத்தில் இருக்கும் எளியவர்களை பாலியல் ரீதியாக சீண்டல்கள்/அத்துமீறல்கள் / துன்புறுத்தல்கள் செய்ததை சமூகத்தின் பார்வைக்கு அம்பலப்படுத்தும் ஒரு பேரியக்கமாக உலகம் முழுவதும் வெடித்தெழுந்தது #metoo அதாவது ”நானும் பாதிக்கப்பட்டேன் எனும் கையறு நிலையின் முழக்கம்.  2017ம் ஆண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக எழுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அதன் மூலம் அவர் வகித்துவந்த துறை சார்ந்த பதவிகள் பறிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் #metoo ஒரு இயக்கியமாகப் பரவியது.  பின்னர் வெயின்ஸ்டீன் மீதான குற்றங்கள் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனையும் கிடைத்தது. அவர்  தொடர்பான செய்திகளை ஆழமாகவும், விரிவாகவும் பிரசுரித்ததற்காக, நியூ யார்க் டைம்ஸ் மற்றும் நியூ யார்க்கர் பத்திரிகைகளுக்கு 2018ம் ஆண்டு பொதுச் சேவைக்கான மதிப்புமிக்க “புலிட்சர் விருதும் வழங்கப்பட்டது. ஆனால் #metoo பரவலாகியபின், ஆதாரப்பூர்வமாகவும் சட்டப்படியும் நிரூபிக்க வாய்ப்பில்லாத / விருப்பமில்லாத பாலியல் சீண்டல்களை, பாதிக்கப்பட்டவர்கள் பொதுவெளியில் வெளிப்படுத்துவதன் மூலம் குற்றம்சாட்டப்படும் பிரபலங்களின் சமூக மதிப்பைக் குலைக்கும் சிறிய ஆயுதமாக அது பயன்படத் துவங்கியது. அதே சமயம், சட்டப்படியான அல்லது ஆதாரப்பூர்வமான இறுகியப் பிடிப்பு இல்லாத காரணங்களினால் #metoo என்பது பிரபலங்களின் சமூக நன்மதிப்பைக் கெடுக்கும் வெறும் அவதூறாக நீர்த்துப் போகும் வாய்ப்புகளும் பெருகின.

தமிழ்ச் சூழலில், 2018ம் ஆண்டு வைரமுத்துவுக்கு எதிரான #metoo பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை பிரபல பாடகி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முன்வைத்தனர். இன்று வரை அவை சட்டப்பூர்வமான வழக்காக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகள், திரைத்துறையைத் தாண்டி சமூகத்திலும் அரசல் புரசலாக ஒரு வதந்தியைப் போலவே சுற்றியபடியே இருக்கின்றன. ஒரு பக்கம் அவருக்கு எதிராக புகாரளித்தவர்களுக்கு வாய்ப்புகள் இரகசியமாக மறுக்கப்படுகின்றன. அதே போல வைரமுத்துவுடன் பணிபுரிந்த பிரபல இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மௌனமாக அவருக்கு வாய்ப்புகள் வழங்குவதை நிறுத்திவிடுகின்றனர். அவர் மீது குற்றம் சாட்டியவர்கள் தொடர்ந்து பொதுவெளியில் அவரைப் பற்றி விமர்சித்தபடியே இருக்கின்றனர். ஆனால் இவையாவும் தன் சட்டை நுனி தூசி என்பது போல, தட்டிவிட்டு வைரமுத்து தொடர் தனியிசைப் பாடல்கள் வெளியிட்டுக் கொண்டே இருந்தார், பொதுநிகழ்வுகளில் வலிய தலையை நிமிர்த்திக் கொண்டு நின்றார், புத்தகங்கள் எழுதி தன்னைவிடப் பிரபலங்களின் முன்னிலையில் பிரமாண்ட வெளியீட்டு விழாக்கள் நடத்திக் கொண்டே இருந்தார்.  தனது படைப்பாளுமை பற்றி வாய்ப்புள்ள சந்தைகளில் எல்லாம் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார். இன்று மதிப்புமிக்க ஞானபீட விருதையும் பெற்றிருக்கிறார். அதற்கு சமூகத்தின் மேன்மை மிக்க பல ஆளுமைகள் தஙகள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.  அவர் புதிய சிறகுகளுடன் தான் இன்னும் உயரப்பறக்க இவ்விருது சிறந்த உத்வேகத்தை அளித்திருக்கிறது என்று பேருவகை கொள்கிறார். அதே வேளையில் அவர் மீது அபிமானம் கொண்டோர், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிண்ணனியில் இருந்து வந்த ஒருவர் ஞானபீடம் போன்ற உயரிய விருதினை பெறுவது பொறுக்காத மேட்டிமைக் குழுவின் சூழ்ச்சியே அவர் மீதான இத்தகைய அவதூறுகள் என்கின்றனர்.

வைரமுத்து ஞானபீட விருதுக்குத் தகுதியற்றவர் என்று நம்புபவர்கள் அவருக்கு அவ்விருது வழங்கியதை, தங்களுக்குச் சரியென்று தோன்றும் தேற்றத்தை வைத்து எதிர்க்கிறார்கள். ஆங்கிலம் உள்ளிட்ட ஊடகத் துறையில் செல்வாக்கு உள்ளோர் அவருக்கு எதிராகக் கட்டுரை எழுதுகின்றனர். சிலர் விருதுக்குழுவுக்கு நேரடியாகக் கடிதம் எழுதுகின்றனர். எழுத்தாளர்கள், தீவிர இலக்கியவாதிகள், வாசகர்கள் சேர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். இன்னும் சிலர், ஒரு படி மேலே போய், தங்களது தனிப்பட்ட செல்வாக்கினைக் கொண்டு, இவ்விருது அவருக்குக் கிடைப்பதைத் தடுத்து நிறுத்த முயற்சித்ததாகவும், அதனையும் மீற இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டதால், தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேறொரு விருதுக்கு, ஞானபீடத்திற்கு மாற்று என்ற சாயத்தைப் பூசி கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கிறார்கள்.

தேரளத்தைச் சேர்ந்த ஒ.என்.வி. பண்பாடுக் கழகம் சார்பாக பழம்பெரும் மலையாளக் கவிஞர் ஒ.என்.வி. குரூப் நினைவாக  வழங்கப்படும் இலக்கிய விருது 2021ம் ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டது. கவிஞர் ஒன்.என்.வி. குரூப் 2007ம் ஆண்டு இதே ஞானபீட விருதை வென்றவர் என்பது இதில் இன்னொரு உபசெய்தி. #metoo தொர்பான சர்ச்சைகள்,  சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மலையாளத் திரைத் துறையினரின் எதிர்ப்பு காரணமாக விருதுக் குழுவினர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட அவ்விருது குறித்த தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தனர். ஆனால் விருதுக்குழு தன் மறுமுடிவை அறிவிக்கும் முன்பே, தான் அந்த விருதை ஏற்க மறுப்பதாகவும்/திருப்பித் தருவதாகவும் விருதுத் தொகையான மூன்று லட்ச ரூபாயை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துவிடும்படியும் வைரமுத்து அவசரமாக ஒரு காணொளி அறிக்கை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அவரை அந்த முடிவு நோக்கி உந்தித் தள்ளியது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

 "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்"

 பள்ளிப்பருவத்தில் படித்த குறள், இப்போது ஏனோ பொருத்தப்பாடுடனோ, பொருத்தமின்றியோ திடீரென மனதில் தோன்றுகிறது. தன் நெஞ்சு அறிய ஒருவன் பொய் சொல்வானெனில் அந்தப் பொய்யே அவனைச் சுட்டுப் பொசுக்கும். கவிஞர் வைரமுத்துவுக்கான ஞானபீட அறிவிப்புக்குப் பின்னால், (தீவிர இலக்கியவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத) அவரது பாடல்கள், கவிதைகள், புதினங்கள் என்று நிறைய ஆக்கங்கள் இருக்கின்றன. அவை இலட்சக்கணக்கான சாமனியர்களை ஆற்றுப்படுத்தி இருக்கிறது. (அவர் பரிந்துரைக் கடிதங்களை எப்படிப் பெற்றிருப்பார் என்று பலவித யூகங்கள் இருந்தாலும்), மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் தன் சுயவிவரக் குறிப்பினை பலப்படுத்துவதற்கான போதுமான துணைக் கோப்புகளை இத்தனை ஆண்டுகளாகச் சேகரித்து அடுக்கியிருக்கிறார். ஆகவே முதல் இரண்டு விஷயங்களில், படைப்பாளர் சமூகமாக அவரை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதில் நியாயமில்லை. மூன்றாவது விஷயமுமே, நிரூபிக்கப்படாதவரை யாரும் குற்றவாளி இல்லை, அவதூறுகளுக்காக மனம் ஒடுங்கி ஓரமாக அமர்ந்திருக்க வேண்டியதும் இல்லை. எனவே வெளியில் இருந்து இக்காரணத்திற்காக அவருக்கான விருதை எதிர்ப்பது சரியா என்று தெரியவில்லை. ஆனால் தன் நெஞ்சறிய பொய்யை வைத்துக் கொண்டு ஒருவன் உயரிய மேடையில் தலை நிமிர்ந்து வீற்றிருப்பானெனில், அப்பொய் அவனைச் சுடும் என்று மட்டும் நம்புகிறேன், அவ்வளவுதான்.

--- 
பாலகுமார் விஜயராமன்

******



Tuesday, April 23, 2024

நோ சொல்லுங்க!

"உங்கள் பாட்டி உங்களுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக் கொள்கிறார். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை, என்ன சொல்வீர்கள்?"

"விளையாட்டில் உங்கள் அணிக்கும், எதிர் அணிக்கும் சண்டை வருகிறது. எதிர் அணியைச் சேர்ந்த பையனை அடிக்கச் சொல்லி உங்கள் நண்பர்கள் தூண்டுகிறார்கள். என்ன செய்வீர்கள்?"
 
இப்படி எளிய கேள்விகள் மூலமாகவும், சிறு கதைகள் மூலமாகவும் சிறார்களுடன் உரையாடுகிறது "நோ சொல்லுங்க" புத்தகம். மிக எளிமையான வாக்கிய அமைப்புகளில், சின்னச் சின்ன எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, குழந்தைப் பருவத்தில் இருந்தே பிடிக்காத விஷயங்களில் 'நோ' சொல்லும் பழக்கத்தை எப்படி வளர்ப்பது என்று கூறுகிறது இந்நூல்.  புத்தகம் என்பதை விட எளிமையான பயிற்சிக் கையேடு என்றே கூறலாம்.

முக்கியமாக, 'நோ' சொல்வது சொல் பேச்சுக் கேளாமை இல்லை, தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்பதையும் பெற்றோர்கள் அத்தகைய சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது புத்தகம். குழந்தை பொய் சொல்லிப் பழகாமல் இருக்க முதலில் வீட்டில் அது மறுத்துப் பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதையும், அதனைக் காரணங்களோடு விவரிக்கும் சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்பதையும் பேசுகிறது.

சிறார்களும், பெற்றோர்களும் படிக்க வேண்டிய நூல்.

"நோ சொல்லுங்க" - மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல். 

ஆசிரியர்களும் வாசிப்பு இயக்கச் செயற்பாட்டாளர்களுமான சக.முத்துக்கண்ணன் மற்றும் ச.முத்துக்குமாரி இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

மேஜிக் லாம்ப் பதிப்பாக இப்புத்தகத்தை கொண்டு வந்திருக்கும்
எதிர் வெளியீடு நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை. இத்தகைய சிறந்த புத்தகத்தை மலிவு விலை சிறப்புப் பதிப்பாக வெளியீட்டு குழந்தைகள்/சிறார்/பெற்றோர்கள் மத்தியில் இதனைப் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும்.

Saturday, March 9, 2024

கமல் - அரசியல்

உண்மையில் இதுதான் கமலுக்கான இடம். கட்சி ஆரம்பிக்காமல் அப்படியே பொதுவாக நான்கு கருத்துக்களைச் சொன்னோமா, அறிவுஜீவிப் பிம்பத்துடன் கெத்தாக அலைந்தோமா என்றே இருந்திருக்கலாம். 

ரஜினி எப்படியும் கட்சி ஆரம்பிப்பார், எதிர்முனையில் நாம் நின்றால் அவருக்கு மாற்று நாம் என்று மக்கள் மனதில் பதிந்து  அரசியல் பாதை எளிதாக இருக்குமென நினைத்துவிட்டார். 

அதோடு சுற்றியிருந்தவர்கள் வெற்றிடம் சுற்றிடம் என்று ஆசைகாட்டிவிட ஏமாந்துவிட்டார்.  கட்சி ஆரம்பித்து அவர் முன்னெடுத்தது எல்லாம் என்.ஜி.ஓ வேலைகள் தாம். அதோடு இந்தப்பக்கம் இரண்டு அந்தப்பக்கம் இரண்டு என்று பஞ்ச் டயலாக் என்று நினைத்துக்கொண்டு விட்டவை வெற்றுச் சத்தங்களே. தமிழ்நாட்டு மக்கள் அவருக்கான சரியான இடத்தை அவரது முதல் தேர்தலில் காட்டியதும்  அடுத்த தேர்தலுக்கு முன்பே அவர் அதனைப் புரிந்து கொண்டதும் மகிழ்ச்சி. வருங்கால ராஜ்ய சபா எம்.பி.க்கு வாழ்த்துகள்.

ஆனால் உலகத்தின் ஆகச் சிறந்த இந்த முடிவைத் தான் எடுத்ததற்கென்று காரணங்களை தன் வழக்கமான ஜாங்கிரி சுற்றல் மொழியில் பிழிவாரே, அதைத் தான் தாங்கிக் கொள்ள முடியாது.

Friday, January 19, 2024

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2024

தமிழை உலகுக்கு எடுத்துச் செல்லவும், உலகைத் தமிழுக்கு கொண்டு வரவும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சி, சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா. இரண்டாம் ஆண்டாக இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

தமிழ்ப் படைப்புகள் மற்றும் பதிப்பகங்கள் பற்றிய அறிமுகத்தை விழாவிற்கு வந்திந்த பன்னாட்டு பதிப்பகங்கள் தெரிந்துகொள்ளவும், போலவே பிற உலக மொழிப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வரவும் இவ்விழா ஒருங்கிணைப்பு மேடை அமைத்துக் கொடுத்தது.

மூன்று நாள் நிகழ்வில் நூற்றுக் கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.  ஆர்வமாய் பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இது முதற்படி மட்டுமே. இவை ஒப்பந்தங்களோடு நின்றுவிடாமல் மொழியாக்கப் படைப்புகளாக, மொழிபெயர்ப்புக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கைகளைப் பெறுபவைகளாக முழுமை அடைய வேண்டும். அதற்கு பதிப்பாளர்கள், படைப்பாளர்கள் மற்றும் முகவர்களின் தொடர் உழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவை. அப்போது தான் அரசின் இம்முயற்சிகள் முழு வெற்றியடைந்தவை ஆகும்.

இப்போது, ஒரு நினைவோடை... சென்ற ஆட்சியில், உலகத் தரமான அண்ணா நூற்றாண்டு நூலகமே பராமரிப்பின்றி கவலைக்கிடமாகக் கிடந்தது. இந்த அரசு, இருக்கும் நூலகங்களை புணரமைத்து திறம்பட செயல்பட வைப்பது மட்டுமின்றி கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்தது, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவது, முத்தாய்ப்பாக ஆண்டுதோறும் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நடத்துவது என்று அறிவுசார் உலகில் தமிழையும், தமிழ்நாட்டையும் முன்னிறுத்திக் கொண்டே இருக்கிறது. 

இத்தகைய அறிவுசார் நிகழ்வுகள் நடத்துவது ஓர் அரசின் கடமை தானே... இதில் கூடவா அரசியல் பேசுவது என்று கேட்பீர்களானால், ஆம் நம் மக்களுக்கு, அதுவும் இத்தகைய நிகழ்வுகளால் பயன்பெறும் இலக்கியச் சான்றோர்களுக்கு எப்போதும் ஞாபக மறதி அதிகம். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாம் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. 

மூன்று நாள் விழாவில் ஒரு நாளேனும் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. செறிவான ஓர் அனுபவம் தவறிவிட்டது. குறையொன்றுமில்லை, ஒரு நாள் இத்தகைய அறிவுசார் விழாக்களை எடுத்து நடத்தும், ஒருங்கிணைக்கும் குழுவில் இருப்பேன்.

எந்தவொரு நிறுவனப் பின்புலமும், அதிகாரத் தொடர்புகளும் இல்லாமல், படைப்பாளியாக நாமே கலந்துகொள்ள முடியும் என்பதே இவ்விழாவின் சிறப்பு. உதவி தேவை எனில், தமிழ்நாடு அரசால் பயிற்சி பெற்ற இலக்கிய முகவர்கள் மூலமாகவும் விழாவிற்கு வந்திருந்த பன்னாட்டுப் பதிப்பகங்களை அனுகலாம். அதைச் சொல்லவே இப்பதிவு. அடுத்த ஆண்டு நம்மில் இன்னும் பலர் கலந்துகொள்ள வேண்டும்.

நம் படைப்புகளைப் பற்றி நாம் பேசாவிட்டால், வேறு யார் பேசுவது!

#CIBF2024
#StalinEra

Sunday, January 14, 2024

எங்கள் விஜயகாந்த்

டிசம்பர் 28, 2023 நடிகர் விஜயகாந்த் மறைந்தார்
 அவர் நினைவை ஒட்டொ எழுதியது.
---
தமிழ்த் திரைத்துறையின் ஒரு சகாப்தம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழக நடிகர்களில் அவரைப் போல ஒருவர் அவருக்கு முன்பும் இல்லை, அவருக்குப் பின்னும் இல்லை. அந்தளவு தனித்துவமான ஆளுமையாக விளங்கியிருக்கிறார் விஜயகாந்த்.

ரஜினிக்கும், கமலுக்கும் இளவட்டங்கள் ரசிகப்பட்டாளம் சேர்ந்து கொண்டிருந்த காலத்தில், அமைதியாக அவர்களை விட எண்ணிக்கையில் மிக மிக அதிகமாக பெண்களுக்குப் பிடித்த நடிகராக விஜயகாந்த் வீற்றிருந்தார். இன்று நாற்பதுகளில், ஐம்பதுகளில், அறுபதுகளில் இருக்கும் தமிழகப் பெண்களில் பெரும்பான்மையோர் மனம் கசிந்து ஆத்மார்த்தமாக ஒரு துளிக் கண்ணீரேனும் சிந்தியிருப்பர். தமிழகத்துப் பெண்கள் அந்தளவு தங்கள் மனதிற்கு நெருக்கமானவராக, குடும்பங்களில் ஒருவராக விஜயகாந்த்தை வரித்திருந்தனர்.

தமிழ்த் திரைத்துறையில் இருக்கின்ற ஒருவரால் கூட அவரைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது போல. ஏற்றத் தாழ்வுகளும், அவமானங்களும் மலிந்து போயிருக்கும் திரைத் துறையில் மிக்க பெருந்தன்மையோடும், திறந்த மனதோடும் உண்மையான ஒரு தலைவனாகவே வாழ்ந்திருக்கிறார். கடைநிலை ஊழியர்களின் நலம், தன்னைத் தேடி வந்த அனைவருக்கும் எப்போதும் பசியாற்றும் தன்மை, தனக்கு நியாயம் என்று தோன்றும் விஷயங்களுக்காக எந்தப் பயமும் இன்றி துணிந்து குரல் கொடுப்பது என்று இயல்பிலேயே சிறந்த தலைமைப் பண்புடன் இருந்திருக்கிறார்.

விஜயகாந்தின் திரைத்துறை வாழ்வு முழுமைக்கும், அரசியல் வாழ்வின் துவக்கத்திற்கும் பாதை அமைத்தவர் அவரது உயிர்த் தோழரான இப்ராகிம் ராவுத்தர். தன் நண்பனுக்காக தனது தனிப்பட்ட வாழ்வையே அர்ப்பணித்திருந்தார் ராவுத்தர். விஜயகாந்தும் அவரை முழுமையாக நம்பி தன்னை அவரிடம் ஒப்படைத்திருந்தார். விஜயகாந்த் முப்பது ஆண்டுகள் திரைத் துறையில் பெரும் பெயர் பெறுவதற்கும், சிறந்த ஆளுமையாக நிலைத்து நின்றதற்கும் ஆணிவேராக ராவுத்தர் இருந்தார்.

காலம் அவர்கள் நட்பில் சிறு விரிசல் கொண்டு வர, அதிலிருந்து விஜயகாந்தின் கிரீடம் நழுவத் துவங்கியது. திரைத்துறையில் நிறை வாழ்வு வாழ்ந்து சாதனைகள் புரிந்தவர், அரசியலில் சரியாகச் சென்று கொண்டிருந்த பாதி வழியில் தடம் மாறிவிட்டார். அதன்பிறகு உடலும் மனமும் நலிவுற இறுதி வரை அவரால் மீண்டு வர முடியவில்லை. இப்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு, விஜி தன் பிரியமான நண்பனுடன் சென்று சேர்ந்துவிட்டார். கண்ணீர் அஞ்சலி கேப்டன். என்றும் எங்கள் தலைமுறையின் மனங்களில் நிறைந்திருப்பீர்கள்.  

#Vijayakanth

கலைஞர் பல்கலைக்கழகம்

கலைஞர் பல்கலைக்கழகம் எந்த ஊரில் அமைய வேண்டுமென நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அது குறித்து எனக்குத் தோன்றியவை...

1. ஏற்கனவே பெரிய பல்கலைக்கழகங்கள் இல்லாத மாவட்டமாக இருக்க வேண்டும்.
2. வான் வழி போக்குவரத்துக்குத் தோதாகவும், தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடமாக இருக்க வேண்டும்.
3. பின் தங்கிய பகுதியாய் இருப்பின் கல்வியில் மேலோங்க நல்ல வாய்ப்பு
4. பரப்பளவில் விரிய, ஊர்/மாவட்டம் பெரிதாக வாய்ப்புள்ள, வளர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடிய பகுதியாக இருக்க வேண்டும்.
5. மாணவர்கள் உண்டு உறைவிட படிப்புகள் பயில, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தகுந்த இனிமையான தட்பவெட்ப நிலை.
6. பிற மாநில/பிற நாட்டு அறிஞர் பெருமக்கள் வந்து போகத் தோதுள்ள பகுதி
7. சர்வதேச நிகழ்விடங்களின் அருகாமை, மாணவர்கள் கண்ணோட்டமும், அறிவுத் திறனும் வளர உதவும்.
Update:
8. பன்னாட்டுத் தொழிற்சாலைகள் உள்ள பகுதியாய் இருப்பின், தொழிற்கூடம் - கல்விக்கூடம் இணைந்த ஆராய்ச்சிகளுக்கு, பொருளாதார நல்கைகளுக்கு வழிவகுக்கும்.
(பல்கலைக்கழகம் அமைக்கும் இடம் சார்ந்து வேறு என்ன அடிப்படைத் தேவை, நீங்களும் சொல்லலாம்)

ஆகவே, இத்தகைய தேவைகளைக் கருத்தில் கொண்டு, வேகமாக வளர்ந்து வரும், எதிர்காலத்தில் தமிழகத்தின் தொழில்நுட்பமாக மாறப் போகும், Little England என்று அழைக்கப்படும் ஒசூரில் "கலைஞர் சர்வதேச தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" அமைக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்...றோம்...றோம்...
#hosurdiary
#kalaignaruniv

Monday, January 1, 2024

2023

#2023
மற்றுமோர் ஆண்டு முடிகிறது, அலுவக ரீதியாக மிகச் சிறப்பான ஆண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கின் பொருட்டு இரண்டு வாரங்கள் தில்லியில் தங்கி இருந்தேன். பலதரப்பட்ட அனுபவங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், பயிற்சி என்று சிறப்பாகச் சென்றது. அதோடு இணையப் பாதுகாப்புத் துறையில் தேசிய அளவில் முக்கியமான ஓர் அங்கீகாரமும் கிடைத்தது. இந்த உத்வேகத்தையும், கற்றலையும் தொடர வேண்டும். 

தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பைக் கடைசி மாதத்தில் தந்துவிட்டு நகர்கிறது இவ்வாண்டு. எனது பணியின் முதல் மூன்றாண்டுகள் கொடைக்கானலில் தொழிலாளர் மேலாண்மை சார்ந்தே சென்றது. அதன் பின் மதுரை வந்து முழுமையாகத் தொழில்நுட்பத்தில் இறங்கி, தென் தமிழகத்தின் பத்து தொலைதொடர்பு மாவட்டங்களுக்கான “டாட்சாஃப்ட்” சர்வரில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், எங்கள் மேலதிகாரியாக வேறு பிரிவில் இருந்து மாற்றலாகி வந்தார் அருண்மொழி அம்மா. துறையில் ஏற்கனவே கடுமையான அதிகாரியாக அறியப்பட்டவர் ஆதலால் அனைவரும் அவரை வரவேற்று வணக்கம் வைத்து வந்தனர். இயல்பாக எனக்கிருந்த தயக்கத்தாலும், நம் வேலையை நம் இடத்தில் இருந்து பார்ப்போம் என்ற உந்துதலாலும் நான் மட்டும் சென்று அவரைப்  பார்க்கவில்லை. ஒரு சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் என்னை அவர் தனது அலுவலக அறையில் வந்து பார்க்கும்படி கூப்பிட்டு விட்டார். நான் சென்று பார்த்த போது, நான் வேலை பார்த்த தொழில்நுட்பம் குறித்து அனைவருக்கும் ஒரு செமினார் கொடுக்கச் சொன்னார். சரியென்று ஒத்துக் கொண்டேன். இருந்தும் என்னைச் சோதிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தேவையில்லாத வேலை என்ற எரிச்சல் மனதிற்குள் மண்டியிருந்தது.

அறை நிறைய அதிகாரிகளும் சக பணியாளர்களும் அமர்ந்திருக்க, அவர் மட்டும் நேர்காணல் எடுக்கும் தொனியில் டைரி, பேனா என்று முழுத் தயாரிப்புடன்  செமினாருக்கு வந்திருந்தார். “நீங்க என்ன என்னை சோதித்து மதிப்பெண் கொடுப்பது?” என்ற ஈகோவில் ஏனோ தானோவென்று துவங்கினேன். இரண்டே நிமிடத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார். கேள்வியின் உண்மைத் தன்மை என்னைச் சுட்டது. அவர் என்னைச் சோதிக்க வரவில்லை,  உண்மையில் அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறார் என்று எனக்குப் புலப்பட்டது. பிறகு அவர் சந்தேகத்துக்கு விளக்கம் கொடுத்து, உண்மையான அர்ப்பணிப்புடன் எனக்குத் தெரிந்த விஷயங்களை எளிமையாக ஆரம்பித்து, கடுமையான பகுதிகள் வரை ஒவ்வொன்றாக விளக்கம் கொடுத்தேன். சுமார் ஒருவாரம், தினமும் மதிய உணவு இடைவேளையின் போது நடந்த செமினாரின் முடிவில் இருவரும் சீனியர் ஜூனியர் பாகுபாடின்றி அலுவலக ரீதியாக இயல்பாகக் கலந்துரையாடும் நிலைக்கு வந்திருந்தோம். துறையில் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர் என்று பெயரெடுத்தவர், உண்மையான திறமைக்கு எவ்வளவு மதிப்புக் கொடுப்பார் என்று நேரடியாக உணர்ந்தேன். அது நடந்து ஆகின்றன 19 ஆண்டுகள்  ...

அப்போதே, அருண்மொழி அம்மா அவரது மகள் நினைவாக, சமூக நிலையில், பொருளாதாரத்தில், குடும்ப அமைப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்விச் சேவையில் பங்காற்றி வந்தார். அவருக்கு உதவியாக நானும், என் அலுவலக நண்பர்களும் பணி முடிந்த மாலை நேரங்களில் தினமும் செல்லத் துவங்கினோம்.  அவர் தலைமையில் சேவாலயம்  மாணவர் விடுதிக்குச் சென்று மாணவர்களுக்குத் தனிவகுப்புகள் நடத்தினோம், பொருளாதார உதவிகள் செய்தோம், மாணவர்களின் மேல்படிப்புக்காக துறை வல்லுநர்களை, புரவலர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டினோம். தனித்தனியாகச் செய்து வந்த உதவிகளை ஒருங்கிணைத்து, பின்பு “சியாமளா கல்வி அறக்கட்டளை” என்ற குடையின் கீழ், மாணவர்களுக்கான உதவியைத் தொடர்ந்தார் அருண்மொழி அம்மா. நானும் சில நண்பர்களும் உடன் இருந்து பணியாற்றுகிறோம். இத்தகைய எனது ”மெண்ட்டாரை” இந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி இழந்துவிட்டேன். சமூகத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் எனக்கு பேரிழப்பு.

இப்போது எழுதும் போது, “அம்மா” என்று விளித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவரும் அதனை விரும்பியிருப்பார், ஆனால் அவருடன் பேசும்போது “மேடம்” என்பதைத் தாண்டி வாய் எழவேயிவில்லை. பெரிதாக எந்தக் காரணமும் இல்லை என்றாலும்,  முதலில் இருந்த அந்தத் தயக்கம் அப்படியே இறுதி வரை தங்கிவிட்டது. ஆனால், மாணவர் விடுதிக்குத் தனி வகுப்புகள் எடுக்கச் செல்கையில்  எங்களைத் தொடர்ந்து மாணவர்களும் அவரை “மேடம்” என்று அழைக்கத் துவங்க, அதனை கட்டாயமாக மாற்றி, மாணவர்கள் அனைவரையும் அவரை “அம்மா” என்று அழைக்க வைத்தேன். இழந்த தன் ஒரு மகளின் நினைவாக அவர் செய்த நற்செயல்களின் பொருட்டு அவர் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு “அம்மா”வானார்.

அலுவலகம் சார்ந்தும், சமூக நலம் சார்ந்தும் அவர் மூலம் கற்றுக் கொண்டது ஏராளம். அதைவிட மிக மிக முக்கியமான தருணம், என் வாழ்க்கைத் துணையை நான் கண்டடைந்தது அவரது அறிமுகத்தின் மூலமே. அதற்காக என் வாழ்நாள் நன்றிக்கடனுக்கு உரியவர் அவர். ஆனால் அதன் பொருட்டே சில பிணக்குகளும் ஏற்பட்டன. அவரைப் பொருத்தவரை, அன்பென்றாலும், ஆத்திரமென்றாலும் அதிரடி தான். சில ஆண்டுகள் தனிப்பட்ட முறையில் எங்கள் மேல் கோபம் கொண்டிருந்தார். ஆனாலும் அலுவகப் பணியிலும், அறக்கட்டளைப் பணியிலும் எந்த விலக்கமும் இன்றி தொடர்ந்து வழிநடத்திய வண்ணமே இருந்தார். நானும் கேட்டதற்கு பதில் சொல்லி, கொடுத்த பணியை மனசாட்சிப்படி திறம்பட செய்தேன் என்றே நினைக்கிறேன். அதன் பிறகு, அவரது பெருந்தன்மை காரணமாக மீண்டும் எங்களுடன் நன்றாகப் பேசத் துவங்கினார். பணி மாறுதல் காரணமாக உள்ளூரை விட்டு ஒசூர் வந்தபோதும் அவரது அணுக்கமும், வழிகாட்டுதலும் தொடர்ந்தபடியே இருந்தது.

சமூகக் கடமைகள் போக, தொன்னூறுகளின் இறுதியில் இருந்த அவரது அப்பாவைப் பராமரிக்கும் பணி அவருக்கு இருந்தது. பல ஆண்டுகளாக தீவிரமாக விபாசனா தியானத்தை மேற்கொண்ட அனுபவம் உள்ள அவர், தனது அப்பா காலத்திற்குப் பிறகு முழுமையாக விபாசனா தியானத்திற்குத் தன்னைப் ஒப்புக்கொடுத்துப் பணி செய்ய எண்ணியிருந்தார். ஆனால் காலம், அப்பா இறந்ததும் அவர் பூமிக்கு வந்த பணி முடிந்தது என்று தீர்மானித்துவிட்டது போல. அவரது அப்பா இறந்த ஒரு மாதத்திற்குள் அருண்மொழி அம்மாவும் திடீரென இறந்துவிட்டார். அவர் விட்டுச் சென்ற “சியாமளா கல்வி அறக்கட்டளை” பணி மீதமிருக்கிறது.  சுமார் நூறு உறுப்பினர்களோடும், முப்பதுக்கும் மேற்பட்ட மாணவப் பயனாளர்களோடும் இயங்கி வரும் அறக்கட்டளையை திறம்பட நடத்த, அவர் வழிகாட்டிய எங்கள் குழுவிற்குக் காலம் உறுதுணை புரியவேண்டும்.

இந்த ஆண்டும் கணிசமான அளவு எழுதினேன். இயக்குநர் நண்பர் ஒருவருக்காக நான்கு திரைக்கதைகளின் ஒன்-லைனர்களையும், காட்சிச் சுருக்கங்களையும் எழுதினோம், இருந்தும் முழுமையான திரைக்கதை வடிவமாக மாற்றவில்லை. இரண்டு நாவல்கள் பாதி எழுதி நிற்கின்றன. இவை எவையுமே முழுமை பெறாதாதால் இவற்றை எழுத்துப் பணி கணக்கில் சேர்க்க முடியாது. நேரம் போதவே இல்லை என்று அழகாகக் காரணம் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் ஒழுங்கான நேர மேலாண்மையில் இவற்றை முடித்திருக்க முடியும் என்று உள்ளுக்குள் உறுத்தியபடியே தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சாக்குப் போக்கு சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும், பிறகு வேலைகள் தாமாக நடந்து முழுமை பெறத் துவங்கும். ஆண்டு இறுதியில் “நஞ்சுக் கொடி” சிறுகதைத் தொகுப்பு மட்டும் வெளியாகிறது. புத்தாண்டில் புத்தகம் உங்கள் கைகளில் கிடைக்கும். வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள். கேட்கவும், கற்றுக்கொள்ளவும் காத்திருக்கிறேன்.

இந்த வருடம் தங்கள் புதிய புத்தகங்கள் குறித்துக் முன்னுரை, விமர்சனம், மதிப்புரை கேட்டுச் சிலர் அணுகினர். அவை ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், “அடே நான் எழுத நினைத்து எழுதாததே இன்னும் நிறைய இருக்கேடா, அதுக்குள்ள சீனியர் சிட்டிசனாக்கி கருத்து கேட்குறீங்களே” என்று தோன்றாமல் இல்லை. கேட்டவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். இன்னும் நாம் இளையர் இல்லை. காலம் கடத்தாமல் எழுத வேண்டியதை சீக்கிரம் எழுத வேண்டும் என்று எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறது. வரும் வருடமும் எழுத்து, வாசிப்பு, கற்றல் உட்பட மனதிற்குப் பிடித்ததை செய்துகொண்டு இங்கே தான் ஓரமாக சுற்றிக் கொண்டிருப்பேன். 

மற்றுமொரு துவக்கம், அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக 2024 அமையட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்!

#HappyNewYear2024

Tuesday, August 8, 2023

வீரப்பன் வேட்டை

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய மற்றுமோர் ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது. வீரப்பனைப் பற்றி பெரிய அளவில் அறிமுகம் இல்லாத இன்றைய தலைமுறை இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்கான ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை நான்கு பகுதிகள் கொண்ட இந்தப் படம் வழங்குகிறது. ஆனால் இதனைப் பார்க்கப் போகும் பெரும்பான்மையோர், வீரப்பனைப் பற்றி தொன்னூறுகளில், ஈராயிரத்தின் துவக்கத்தில் ஊடகங்கள் வாயிலாக அறிந்தவர்களாகவே இருப்பர்.

ஆவணப்படத்தின் பெரும்பகுதி கர்நாடக மாநில காவல்துறையினர், வனத்துறையினர், ஊடகவிலளாலர்கள் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. இடையிடையே வீரப்பன் கூட்டாளிகள், மற்றும் ஊர் மக்களின் கருத்துக்களும் நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏனோ வீரப்பன் மனைவியின் பதிவு, வீரப்பன் குறித்த அவரது பெருமிதம் சார்ந்த பகுதியாக மட்டுமே சுருங்கிவிட்டது.

இதில் உணர்வுப் பூர்வமான ஒரு விஷயம், ஸ்ரீநிவாஸ் எனும் கர்நாடக வன அதிகாரியின் வாழ்வும் மரணமும். காந்திய வழியில் வீரப்பனை  சரணடைய வைக்க முடியும் என்று அவர் நம்புகிறார். வீரப்பனின் கோபிநத்தம் கிராமத்திலேயே அலுவலகம் அமைத்து அங்கேயே தங்குகிறார், ஊர் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் செய்ய முனைகிறார், மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறார். இடையில் வீரப்பனின் தங்கை மாரி அவருக்குச் சில உதவிகள் செய்கிறார். ஊர்மக்கள் மூலமாகவும், மாரி மூலமாகவும் வீரப்பனை நெருங்கி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வீரப்பனைச் சரணடைய வைக்க முடியும் என நினைக்கிறார், அதற்காக உண்மையாகப் பணியாற்றுகிறார். ஒரு கட்டதில் மாரியை ஊர் மக்கள் தவறாகப் பேச, மாரி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். தன் தங்கையின் மரணத்திற்கு ஸ்ரீநிவாஸ் தான் காரணமென வீரப்பனின் கோபம் தனிப்பட்ட முறையில் அவர் மீது திரும்புகிறது. சில நாட்களில் வீரப்பன் சரணடைய விரும்புவதாகவும், ஸ்ரீநிவாஸ் தனியாக காட்டுக்குள் வர வேண்டும் என்றும் அவருக்குத் தகவல் வருகிறது. அதை நம்பி காட்டுக்குள் செல்லும் ஸ்ரீநிவாஸை வீரப்பன் சுட்டுக் கொன்று, அவர் உடலை அங்கேயே எரித்தும் விடுகிறான். வீரப்பனை சரணடைய வைக்க வேண்டும் என்ற ஸ்ரீநிவாஸின் காந்திய வழிமுறை அவ்வாறு முடிகிறது.

படத்தின் இறுதிப் பகுதி, இதே போன்று இன்னொரு நிகழ்வு. வீரப்பனின் கண்களில் புரை விழுந்து பார்வை மங்குகிறது. விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய ஆயுதத் தரகர் என்று பழக்கமாகும் ஒருவர், அவனின் கண் அறுவை சிகிச்சைக்கு வழிசெய்து, அவனை இலங்கையில் கொண்டு விடுவதாக வாக்களிக்கிறார். அதனை நம்பி நோயர் ஊர்தியில் வரும் வீரப்பனும் அவனது எஞ்சிய கூட்டாளிகளும், துப்பாக்கி ரவைகள் துளைக்கப்பட்ட பிணங்களாகவே மிஞ்சுகிறார்கள்.  ஆயுதத் தரகர் வேடமேற்றவர் காவல்துறை உயரதிகாரி. வீரப்பனின் போரட்டமான வாழ்வும், சுமார் முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்த அவனது தேடுதல் வேட்டையும் முடிவுக்கு வருகிறது. 

அவன் இறந்த சமயத்தில், அவன் கொல்லப்பட்ட விதம் குறித்து பல வதந்திகள் காற்றில் உலாவின. படத்தின் இறுதியில் வரும் சிறப்பு அதிரடிப்படையில் இருந்த தமிழகக் காவல் அதிகாரியின் கூற்று முக்கியமானது. வீரப்பன் இறந்தது உண்மை, அதற்கு சிறப்புக் காவல்படை தான் காரணம் என்பது உண்மை. இடையில் என்னவிதமான கதைகளை வைத்தும் நிரப்பிக் கொள்ளலாம் என்று அவர் கூறிய செய்தி வீரப்பன் மரணம் குறித்து காற்றில் உலவி வரும் செய்திகளை இன்னும் அலைவுறவே வைக்கின்றன.

குறைந்த காலத்தில், ஏற்கனவே இருக்கின்ற தகவல்களையும், காட்சிப் பதிவுகளையும் வைத்துக் கொண்டு சிலரின் அனுபவப் பகிர்வுகளை சேர்த்து, பறவைப் பார்வையாக இந்த ஆவணப்படத்தைச் செய்திருக்கிறார்கள். இதில் முக்கிமான விடுபடல்களாக இருப்பவை, வெறுமனே மேலோட்டமாக மட்டும் சொல்லப்பட்டு, கடந்து செல்லப்படும் 'ஒர்க்‌ஷாப்பில்' வைத்து நடத்தப்பட்ட சிறப்பு அதிரடிப் படையின் அத்துமீறல்களும், மனித உரிமை மீறல்களும். இன்னொரு விடுபடல், சிறப்பு அதிரடிப்படைத் தலைவராக இருந்து காவல் அதிகாரி விஜயகுமார் மற்றும் கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கத் தூது சென்ற பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் இருவரின் அனுபவப் பகிர்வுகளோ நேர்காணலோ இல்லாதது. 

 காட்டு வாழ்க்கை, யானை வேட்டை, சந்தனக்கடத்தல், அரசியல்வாதிகளின் தெரிந்த, தெரியாத வாக்குறுதிகள், போராளிக்குழுக்கள் உடனான தொடர்பு, நடிகர் ராஜ்குமார் கடத்தல், ஊடக வெளிச்சம்  ஒலிநாடாக்கள், வீடியோ பதிவுகள், காட்டுக்குள் நேர்காணல்கள், இரு மாநில அரசுகளுக்கும் காவல்துறைக்கும் உண்டான நெருக்கடி, அதிரடிப் படையின் அத்துமீறல்கள், அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட சொல்லவியலாத் துன்பங்கள், வீரப்பனின் அந்திம நாட்கள், இறுதி நாடகம் என்று ஏற்கனவே சொல்லப்பட்டதும், சொல்லப்படாததுமாக ஆனால் இனியும் வெளிவர வாய்ப்பில்லாததுமாக ஏகப்பட்ட செய்திகளையும் இரகசியங்களையும் கொண்டது கட்ததல்க்காரன் வீரப்பனின் வாழ்வும் மரணமும். அதில் ஏற்கனவே பொதுவெளியில் பதிவாகியிருப்பதில் சில பகுதிகளைத் தொகுப்பாக்கி வந்திருக்கிறது, #HuntforVeerappan எனும் இந்த ஆவணப்படம். நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.

Sunday, July 30, 2023

வீரமே ஜெயம்

மகனின் தொடர் தோழமைச் சுட்டலின் விளைவாக நேற்று மாவீரன் படம் பார்த்தோம். மூன்றாம் வார சனிக்கிழமை மதியக் காட்சிக்கும் பாதி அரங்கு நிறைந்திருந்தது. முதல் பார்வை போஸ்டரில் 'தளபதி' ரஜினியை நினைவுபடுத்தும் சிவகார்த்தியின் சிகையலங்காரமும், படம் பற்றிய நேர்மறைச் செய்திகளும் எனக்குமே படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியிருந்தது.

'ரமணா' படம் போல அடுக்குமாடிக் கட்டிடத் தொகுப்பு இடிந்து விழுவதற்கான ஒரு வலுவான காரணம், சுவர் பெயர்ந்து விழுவதையே திரும்பத் திரும்பக் காட்சிப் படுத்தியது, தேர்தல் வருகிறது, பொறுமையாக இருங்கள் என்ற தேய்வழக்கு கதைந்கர்த்தல் போன்ற சில பிசிறுகள் தவிர்த்துப் படம் காட்சி அனுபவமாக நல்ல கோர்வையாகத் தொய்வின்றிச் சென்றது.

டான், பிரின்ஸ் போன்ற காவியங்களுக்குப் பிறகு இதனைப் பார்த்ததும் ஒரு வலுவான காரணமாய் இருக்கலாம். டானின் வெற்றி பிரின்ஸுக்கு வழிவகுத்தது. பிரின்ஸின் தோல்வி மாவீரனுக்கான பாதையை அமைத்திருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி.

சிவா கோழைத்தனத்தின் உச்சமாகத் தற்கொலைக்கு முயல்கிறார், அதன் பின் மாவீரன் அவதாரம் நிகழுமென யூகிக்க முடிந்தாலும், அரங்கில் நிறைய சிறுவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பது உறுத்தியது. மாடியிலிருந்து கீழே விழுந்தால் சக்திமான் வந்து காப்பாற்றுவார் என தொன்னூற்றுக் குளவிகள் சில நம்பியது போன்ற அபத்தம் இதன் மூலம் ஏற்படும் என பயந்தேன். பழைய 'மாவீரன்' பார்த்துவிட்டு வந்து, படத்தில் வந்தது போல கத்தியால் கையில் 'மாவீரன்' என என் தம்பி எழுதத் துவங்கி, கத்தி கீறலை விட அதிக வலியெடுக்க எங்கள் அம்மாவிடம் அடி வாங்கியதும் நினைவில் வந்தது. ஆனால் அந்தக் காட்சியை ஒருமாதிரி 'பேட்ச் வொர்க்' செய்து சுவர் முனை பெயர்ந்து இடறி விழுவதாக எடுத்திருந்தார்கள், நல்லது.

வில்லன் கார்ட்டூன் பதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் மிகை செய்கை தோற்றம் கொடுக்கும் அரசியல்வாதி, அதற்கு பெரிய கண்களை உருட்டும் மிஸ்கின் நன்றாகப் பொருந்தியிருந்தார். அவருக்கு உதவியாளராக, தனக்கென எந்தத் தனிப்பட்ட வாழ்வும் இல்லாத பள்ளி/கல்லூரி நண்பன் என்ற சரடும் பிடித்திருந்தது. இவர்கள் இருவரின் வளர்ச்சியும் வாழ்க்கையும் வைத்தே அழகான தனிக் கதை எழுதலாம்.

நாயகனுக்கு ஒரு மனக்குரல் ஒலிக்கிறது. அது அவனைக் கோழைத்தனத்திலிருந்து விடுத்து மாவீரனாக்குகிறது எனற ஐடியா நன்று. அதற்கு படத்தில் சொல்வது போல், 'உனக்குத் தெரியாத எதையும் அந்தக் குரல் பேசாது' என்ற அளவிலேயே கொண்டு முடித்திருக்கலாம். அமானுஷக் கதை போல அவனுக்குத் தெரியாததை எல்லாம் சொல்லி வழிநடத்துகிறது என்று கொஞ்சம் கதை சொல்லிவிட்டார்கள்.
படம் தயாராகும் நிலையில், இயக்குநருக்கும் நாயகனுக்கும் மனக்கசப்பு, நாயகனின் கதை நகர்வின் மூக்கை நுழைக்கிறார் என பல செய்திகள் காற்றில் உலாவிக் கொண்டிருந்தன. வெளிவந்திருக்கும் படைப்பாக நிறைவான அனுபவத்தையே தந்தது. குழந்தைகளையும் குடும்பங்களையும் மனதில் வைத்துப் பொறுப்புடன் எடுத்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இயக்குநர் மடோன் அஸ்வின், நாயகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவிற்கு வாழ்த்துகள்.

#Maaveeran
#வீரமேஜெயம்
#மாவீரன்

Monday, July 25, 2022

தவிட்டுக் குருவி

#memoriesforlife 
---
”ஒரு தோட்டத்தில், மரத்தைச் சுற்றி காலாற நடை பயின்று கொண்டிருந்தது ஒரு பூனை. ஒரு தவிட்டுக் குருவி பறந்து பறந்து வந்து அந்த பூனையைக் கொத்திச் சென்றபடியே இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டிருந்த பூனை ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ஒரே தாவலில், அந்தக் குருவியைப் பிடித்துவிட்டது. பூனை குருவியைக் கடிக்கப் போனது.”

இந்தக் கதைக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கள் என்றுதான் இன்று ”வருங்கால எழுத்தாளர்களே” என்ற தலைப்பில் நடந்த வளரிளம் பருவத்து மாணவர்களுக்கான இணைய பயிற்சிப் பட்டறையில் என் பேச்சைத் துவக்கினேன். இதே கதையை பெரியவர்கள் கலந்துகொண்ட வேறு சில நிகழ்வுகளிலும் சொல்லி இருக்கிறேன். பெரியவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல், “வலியவனிடம் வம்பிழுக்கும் எளியவனுக்கான தண்டனை அது” என்றே கூறினர். ஆனால் இன்று சிறுவர்கள் ஒருவர் கூட அந்த திசையில் யோசிக்கவில்லை என்பதோடு, விதவிதமான நேர்மறை முடிவுகளைச் சொல்லி அசத்தினர். வழக்கமாக, கலந்துரையாடல் முடியும் போது, ”அந்த பூனைக்கு அருகில் மரத்தின் மேலிருக்கும் கூட்டில், அந்தக் குருவியின் குஞ்சுகள் இருந்தன” என்று ஒரு துப்பினைக் கொடுத்த பிறகு பெரியவர்கள் அப்படியே முடிவை மாற்றிச் சொல்வார்கள். ஆனால் இன்று அதற்கான தேவைகூட வரவில்லை. கதையின் முடிவை வெவ்வேறு விதங்களில் சொன்ன மாணவர்கள் அனைவருக்குமே குருவியைக் காப்பாற்றுவதே ஒரே எண்ணமாக இருந்தது. அதிலும், ஒரு சிறுமி இன்னும் ஒரு படி மேலே சென்று, “பூனைக்குப் பின்புறம் ஒரு பாம்பு வந்துகொண்டிருந்தது. பாம்பிடமிருந்து பூனையைக் காப்பாற்றும் பொருட்டே குருவி பறந்து பறந்து கொத்தி எச்சரிக்கை செய்தது” என்று கதையின் முடிவைச் சொன்னதுடன் அதை அந்தக் குறைந்த இடைவேளையில் அழகிய படமாகவும் வரைந்து வைத்திருந்தாள். ஒரு நிமிடம் கண் கலங்கிவிட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிக நிறைவான ஒரு நிகழ்வு. நிகழ்வின் முழு காணொளி முதல் மறுமொழியில் இருக்கின்றது. நேரமிருக்கும் நண்பர்கள் பார்க்கலாம்.

இணைய நிகழ்வை திறம்பட நடத்தி, காணொளியும் பதிவு செய்த KenBridge Schoolக்கு நன்றி !

******

Thursday, July 21, 2022

அதிகாரம்!

ஒசூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் வேலைக்குச் சென்று வர சுமார் இரண்டாயிரம் பேர் பயணிகள் ரயிலை நம்பி உள்ளனர். ஏற்கனவே இருக்கும் ரயில் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத நிலையில், பெருந்தொற்றுக் காலத்தில் நிறுத்தப்பட்ட சில ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. மக்கள் அதற்கான கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசியல்வாதிகளிடமும், ரயில்வே அதிகாரிகளிடமும் கொடுத்து பல மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.

தென்மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு ஒசூர் பயணிகளின் மேல் எப்போதும் அளவுகடந்த பாசம். அதற்குத் தற்போதைய எடுத்துக்காட்டு, "கூடுதல் ரயில் தானே கேட்ட, இந்த வச்சுக்கோ!" என்று மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் கிளம்பி, ஒசூருக்கு மாலை 5 மணிக்கு வந்து, மீண்டும் ஒசூரில் இருந்து மாலை 7.30மணிக்கு யஷ்வதந்த்பூர் சென்று சேர்வது போல ஒரு சிறப்பு பயணிகள் ரயிலை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது தேவை அதிகம் இருக்கும் திசைக்கு நேர் எதிரில் சேவையை அதிகரித்துள்ளனர்.

இதே போல தான் ஒசூர்க்காரர்களின் தொல்லை தாங்க மாட்டாமல், சென்ற ஆண்டு மதியம் 12.00 மணிக்கு ஒசூரில் இருந்து கிளம்பி, 1.30 மணிக்கு பெங்களூர் சென்று மீண்டும் 3.00 மணிக்கு ஒசூர் வரும் ஒரு சிறப்பு ரயிலை விட்டனர். அது எதிர்பார்த்தது போலவே, காலி பெட்டிகளுடன் சென்று திரும்பியதால் ஒரு மாதத்தில் "ஓசூர் பயணிகளிடம் பெங்களூர் ரயில்களுக்குப் போதிய வரவேற்பு இல்லை" என்று அந்த ரயிலை ரத்து செய்துவிட்டார்கள். இப்போது அறிவித்திருக்கும் புதிய ரயிலுக்கும் அதே கதி தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு பக்கம் பயணிகள் ரயிலுக்கு இன்றியமையாத தேவை இருக்கும் போது, மக்கள் பலவிதங்களில் அழுத்தம் கொடுத்து சேவைக்கான ஆணைகளைப் பெற்றாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் என்ன நினைக்கிறார்களோ அது தான் நடக்கிறது. கோப்புகளின் சாட்சிகளின் படி, "இந்தத் தடத்தில் புதிய ரயில் விடப்பட்டது, மக்களிடம் ஆதரவு இல்லை, அதற்கான சான்று இணைக்கப்பட்டுள்ளது, எனவே ரயில் ரத்து செய்யப்படுகின்றது" என்று அழகாக நோட் ஷீட் எழுதி மூடி வைத்துவிடுவார்கள். அதனைப் பிற்காலத்தில் யாரும் சோதனை செய்ய வேண்டி வந்தாலும் "ஆமாம் சரி தான்" என்றே தீர்ப்பெழுதப்படும்.

உண்மையில் காலையில் பணிக்குச் செல்ல ஒசூரில் இருந்து பெங்களூருக்கும், மாலையில் பணி முடிந்து பெங்களூரில் இருந்து ஒசூருக்கும் வரும்படியான கூடுதல் ரயில்களை எதிர்பார்த்திருக்கும் ஒசூர் வாசிகள், "எங்களைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது?" என்று யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

#HosurDiary
#TrainStory

- பாலகுமார் விஜயராமன்

Wednesday, June 29, 2022

தேர்வுகள் கடினமாக்கப்பட வேண்டுமா?

சிறந்த அரசின் கொள்கை என்பது அதன் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்புகள் வழங்குவது மட்டுமல்ல பின் தங்கிய அடித்தட்டு மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்குவது, அவர்கள் மேலெழுந்து வரும் வரை தொடச்சியான வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது.

கல்வித் துறையில் எண்ணிக்கை குறைவாகத் தேர்வாவதால் மட்டுமே ஒரு சிஸ்டம் சிறந்தது என்றோ அதிகமானோரைத் தேர்ச்சி அடையச் செய்வதால் மற்றொன்று தரம் தாழ்ந்ததாகவோ ஆகிவிடாது. இந்தியா போன்ற மக்கள் வளம் மிகுந்த நாடுகளில் இளம் தலைமுறையினரின் ஆற்றலை முறைப்படுத்தி ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.  சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகள் மலிந்து போயிருக்கும் சமூகத்தில் கல்வியும் அதன் மூலம் கிடைக்கும் "சான்றிதழும்", வேலை வாய்ப்பும் ஒருவனை எத்தனை உயரத்திற்கு ஏற்றிச் செல்லும் என்று சிந்திக்க வேண்டும்.

மாறாக, 'தரம்' சரியில்லை என்று ஒரு கோட்டைக் கிழித்து ஒரு வகுப்பில் ஐம்பதுக்கு நாற்பது பேரைத் தோல்வியடையச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அத்தோடு கல்விச் சாலை பக்கம் திரும்பாத அதில் பெரும்பான்மையினர் சமூகத்தின் அதே அடுக்கிலோ அல்லது அதற்குக் கீழேயேயோ தேங்கிவிடுகின்றனர். அப்படியின்றி, எளிய தேர்ச்சி முறைகள் மூலம் அவர்கள் மேல் வகுப்புகளுக்குச் செல்லும் போது கற்றல் அனுபவம் போக, தன்னம்பிக்கை, ஒரு சூழ்நிலையைக் கையாளும் மனப்பக்குவம், பரந்த உலகத்தைக் காணுதல் என்று அதிக அனுபவத்தையே பெறுகின்றனர்.

" பத்தாவது வகுப்பு வரை இந்த அனுபவம் போதும், உயர்கல்விக்கு கறாரான தேர்வு முறை வேண்டும்" என வெளியிலிருந்து பார்க்கும் ஒருவர் யோசிப்பாரேயானால், ஒரு மாணவனின் சமூகக் கற்றல் பயணத்தை அரசும், இப்போதுள்ள கல்வி அமைப்பும் உயர்த்தி விட வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது அதனை நாம் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?

இன்னொரு சாராரின் கருத்து, அரைகுறையாய் பட்டதாரியாக வெளிவரும் ஒருவனைக் காட்டிலும் பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்திவிட்டு ஒரு பட்டறைக்கு வேலைக்குச் செல்லும் ஒருவன் சிறந்த வேலைக்காரனாக வருவான் என்பது. சிறந்த வேலைக்காரனாக வந்து... உங்கள் பைக் டயருக்கு சிறந்த முறையில் பஞ்சர் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? அதற்கு அவன் அரைகுறை பட்டதாரியாகி ஒரு அலுவலகத்தில் மின்விசிறிக்குக் கீழ் குமாஸ்தா வேலை பார்த்துக் கொண்டிருக்கட்டுமே, அவன் தனது முதல் இரண்டு அலுவலகக் கடிதங்களை தப்பும் தவறுமாய் எழுதிப் பின் திருத்திக் கொள்ளட்டுமே... என்ன குறைந்து விடப் போகிறது?

Thursday, May 5, 2022

தமிழ் விக்கி(பீடியா)

தமிழ் விக்கிபீடியா கட்டற்ற களஞ்சியமாக இல்லாமல் குறுங்குழுவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது, எனவே இலக்கியத்தை முழுமையாக உள்ளடக்கும் வகையில் புதிதாக "கட்டுப்பாட்டுடன்' கூடிய இன்னொரு கலைக் களஞ்சியத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் போல. நல்லது, பொது வெளியில் பண்பாடு, கலை, இலக்கியம் சார்ந்த தகவல்கள் நிரம்பி வருவது ஏற்புடையதே. ஆனால் எத்துறையில் ஒரு புதிய முயற்சியைத் துவங்கினாலும் அது ஏற்கனவே அத்துறையில் பலகாலமாக நிகழ்ந்தவைகளின் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும். அப்போது தான் அது இன்னும் செம்மையடைந்து மெருகேறும்.

அப்படியில்லாமல், தமிழ் விக்கிபீடியாவில் இத்தனை ஆண்டுகள் பலரின் கூட்டு முயற்சியால் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல் களஞ்சியத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளி விட்டு, அதே போன்றதொரு வார்ப்பில் மீண்டும் ஒன்றை நிறுவ வேண்டிய தேவை என்ன?

அலுவலகப் பயன்பாட்டில் "Reinventing the wheel" என்று சொல்வார்கள். அதாவது ஒரு திட்டத்தில் இருக்கும் இடத்திலிருந்து முன் நகராமல், செய்த வேலையையே மீண்டும் மீண்டும் செய்வது. எளிமையாகச் சொல்வதானால், ரமணா படத்தில் யூகி சேது, "இப்போ தான் இதையே கண்டுபிடிக்கிறீங்களா?" என்பாரே, அது போல. 

ஆனால் சற்று யோசித்துப் பார்த்தாலே புரிந்துவிடும், கலைக் களஞ்சியம் போன்ற மிகப்பெரிய தகவல் பின்னலை நெய்யும் போது, இருப்பவை அனைத்தையும் விடுத்து சுயம்புவாக இன்னொன்றை உருவாக்குவது சாத்தியமே இல்லை. ஆக, தமிழ் விக்கிபீடியாவின் வடிவமைப்பு, இயங்குமுறை, பார்வை, திருத்தம் முறைகள் இவற்றை மாதிரியாகக் கொண்டு தான் தமிழ் விக்கியை (நாகபதனி, நாகப்பதனி போல இதில் பெயர்க்குழப்பம் வேறு!) வடிவமைக்கப் போகிறார்கள் என்றால், ஒரே துறையின் முன்னோடியாக இருக்கும் பெருமுயற்சியைத் தூற்றி புதியதைத் துவங்குவது அறமாகாது. 

சரி, ஒரிஜினல் தமிழ் விக்கிபீடியாவில் சிலர் பெரிய பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்கள் என்கிறார்களே, நாம் ஏதாவது செய்து பார்ப்போம் என்று தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் ஒருவர் பெயரில் தகவல்களைப் பதிந்தேன். அழகாக ஏற்றுக்கொண்டது. அந்தப் பக்கத்தின் இணைப்பு: https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D#

நன்றி வணக்கம்!

பயணிகள் கவனிக்கவும் - திரை அனுபவம்

#பயணிகள்_கவனிக்கவும்

குறிப்பிடத்தக்க நல்ல முயற்சி, நன்றாகவும் வந்திருக்கிறது. ஒ.டி.டி தளங்களின் பெருக்கத்திற்குப் பிறகு, அவற்றிற்காக சிறிய பொருட்செலவில் தயாராகும் பிரத்யேகத் திரைப்படங்கள் வரத் துவங்கியிருக்கின்றன. எளிய கதை, நல்ல திரைக்கதை மற்றும் கூர்மையான வசனங்கள் மூலம் வீட்டிலிருந்தபடியே ஒரு புதிய திரைப்படத்தைப் பார்த்துவிடக் கூடிய அனுபவத்தை அவை அளிக்கக்கூடியவை. அவ்வாறு வெளியாகும் திரைப்படங்களை, தொலைக்காட்சி நாடகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடியவை பரபரப்பான காட்சியமைப்புகளும், படத்தின் இசையும், வேகமும். ஆனால் பயணிகள் கவனிக்கவும் படம் மிக நிதானமாகத் தான் செல்கிறது, இசையும் காட்சிகளை உயர்த்திக் காட்டும் அளவுக்கு இல்லாமல், அதே நேரம் தொந்தரவு தராத அளவுக்கு மெலிதாகவே இருக்கின்றது.

இப்படி, நாடகமாக மாறியிருக்கக் கூடிய கதையை இயல்பான சினிமாவாக மாற்றியது விதார்த்தின் யதார்த்தமான நடிப்பு, அதை நடிப்பு என்றுகூட சொல்லமுடியாது, கண்களில் தெரியும் தயக்கம், சாய்ந்த உடல்மொழி, வாயசைவு என்று எழிலனாகவே வாழ்ந்திருக்கிறார் மனிதர். எத்தகைய தொழில்நுட்ப ஜாலங்கள் இல்லாமலே ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு விதார்த்தின் அற்புதமான நடிப்பு, வாழ்த்துகள், இப்படம் உங்கள் அடுத்த இன்னிங்ஸின் துவக்கமாக அமையட்டும்.

சமூக வலைதளங்களில் பொறுப்பின்றி பகிரப்படும் தனிநபரின் படங்கள், வைரலாகும் அத்தகைய படங்களை எந்தவித ஆய்வுமின்றி, தங்களுக்குத் தோதான ஒரு பின்னணி கட்டுக்கதையோடு பரப்பி சென்ஷேசனாக்கும் காட்சி ஊடகங்கள், அவை சம்பந்தப்பட்ட மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்று தற்போதைய சமூகக் கதை. மலையாளத்தில் 2019ல் வெளிவந்த  "விக்ருதி" திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது, அதிலிருந்து எவ்வளவு தூரம் இப்படம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. மலையாளப்படத்தையும் பார்க்க வேண்டும்.

எனக்கு இப்படத்தின் மையப்புள்ளியில்  சிறு போதாமை தென்பட்டது. இன்னும் கொஞ்சம் அழுத்தமான நிகழ்வை எடுத்துக்கொண்டு அது தவறாகச் சித்தரிக்கப்பட்டு, வைரலாகி, சம்பந்தப்பட்டவர் மற்றும் படம் எடுத்தவர் இருவர் வாழ்வையும் எப்படி அலைக்கழிக்கிறது என்று பேசியிருக்கலாம்.

இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். 
#Aha_OTT தளத்தில் கிடைக்கிறது, பார்க்கலாம்.

Friday, March 18, 2022

கடைசி விவசாயி !

 கடைசி விவசாயி !


May be an image of 2 people, outdoors and text
தமிழ் சினி்மா விவசாயத்தைக் கொலையாய் கொன்றெடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் விவசாயியை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.

சினிமா பார்ப்பது போலவே இல்லை, இப்படம் மிக இயல்பாக இருக்கிறது என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். எனக்கு அது மட்டுமே கொஞ்சம் குறையாகத் தோன்றியது. இதே சரடை இன்னும் சற்று திரைமொழி சேர்த்து, காட்சிகளை இறுக்கக் கோர்த்திருந்தால் இந்தக் கதை பொதுமக்களின் மனதில் ஆழமாகச் சென்று சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். படத்தில் ஆசுவாசமான மிகப்பெரிய விஷயம், விவசாயியை நல்லவராகக் காட்ட சுற்றி இருப்பவர்களை கொடூரர்களாகச் சித்தரிக்கவில்லை. மனிதர்கள் எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே. அவரவர் வாழ்க்கை முறைக்கு அவரவர் நியாயம் சேர்க்கின்றனர். அதிலும் நீதிபதி தான் சார்ந்துள்ள சட்ட அமைப்பின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்தபடி புழுங்குவதும் முதியவர் இறந்துவிட்டார் என்று குற்றவுணர்வோடு கைகளைக் கோர்த்து வேண்டியபடி பரிதவிப்பதும் மிக இயல்பு.

பணியாரத்தை சிணுக்கருக்கியால் திருப்பிப் போடுகையில் அந்தச் சிறுபெண் ரசித்துச் சிரிக்கும் ஒரு சிரிப்பு, ”என்னவாம்.. உன் வம்சமே கிறுக்குப்பய வம்சமாமே, உன்னை எப்படி கல்யாணம் பண்ணனு எங்கம்மா சொல்லுச்சு” என்று குடத்துடன் தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண் போகுற போக்கில் ஒரு காதலை மறுதலிக்கும் இயல்பு, இராமையா கேட்காமலே பெரியவர் மூன்று பேருக்கு சோறு பரிமாறி வைக்கும் இடத்தில் அவர் அவனை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்ற நுணுக்கம் என்று நிறைய இடங்கள் ரசிக்க வைத்தன.

ஞானக்கிறுக்கனாக இராமையா பாத்திரத்தை விஜய் சேதுபதி மிக விரும்பி ஏற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. இராமையாவின் நடையும் பயணமுமே தனிக்கதை. அந்தப் பாத்திர வார்ப்பும், ஒப்பனையும் அவருக்கு நன்றாகப் பொருந்துகிறது. அதில் சிறு பிசிறு, அரூபமாய் தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு வைத்திருக்கும் தேநீரை இன்னொருவன் எடுத்துக் குடிக்கும் போது, அங்கே விஜய் சேதுபதி இருந்ததால் அவனை வெளுத்துவிடுகிறார். உண்மையில் அந்த இடத்தில் இராமையா ஊர்க்கார்களிடம் அடிவாங்கி, புழுதி மண்ணோடும் சிராய்ப்புகளோடும் சிரித்தபடியே கைச்சுமையைத் தூக்கிக் கொண்டு போய், பூட்டுக் குழம்பும் மோதிர அப்பளமும் சாப்பிட்டுக் கிளம்பியிருப்பான்.

படத்தில் தேவையில்லாத இடைச்செருகல், தனது காட்டை விற்று யானை வாங்கி மேய்த்துக் கொண்டிருக்கும் யோகிபாபு பாத்திரம். இக்கதைக்கு யோகியும் யானையும் எந்தவொரு நியாயத்தையும் சேர்க்கவில்லை என்பதோடு எளிய மனிதர்களின் ஊடே அவர்களது ஊர்வலம் தேவையில்லாத ஆடம்பரமே. அதுபோல, குலசாமி நேர்த்திக்கடனுக்காக நெல்லுப் போடும்போதும் நூறுநாள் வேலையில் இருக்கும் ஊர்மக்கள் யாரும் வரமாட்டார்கள் என்பது, காலாவதியான பூச்சி மருந்தை அடித்ததால் பயிர்கள் செத்துப் போவது என்ற சில இடங்களில் குறைகளும் இல்லாமல் இல்லை. இன்னொரு விஷயம், இக்கதையை இயக்குநர், ரஜினிக்குச் சொன்னார் என்று செய்தி உலவுவதாகக் கேள்விப்பட்டேன். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இயக்குநர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

விவசாயம் என்பது புனிதம் அல்ல, ஒரு விதை எத்தனை காலமானாலும் தனக்குத் தேவையான ஒளியும் நீரும் கிடைக்கும்போது தானாக உயிர்பெறும். அது போல, முறைகள் எப்படி மாறினாலும், நவீனம் புகுந்தாலும் ஒரு பயிர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு எப்படியும் மண்ணில் உயிர்பெறும் என்ற கருத்து மனதுக்கு அணுக்கமாகத் தோன்றியது. ஒரு காட்சியில் சிறைக்கைதி ஒருவன் வெறும் மண்ணைப் பாத்திரத்திலிட்டு அதற்கு நீரும் ஒளியும் தரும்போது அதிலிருந்து ஒரு தளிர் துளிர்க்கிறது. “மண்ணில் ஆயிரக்கணக்கான விதை போட்டுருக்கான். உனக்கு வேப்பங்கன்று கொடுத்திருக்கு பாரு!” என்று விவசாயம் கற்க நினைக்கும் அவனிடம் பெரியவர் கூறுகிறார். எனக்கு நேசமித்ரனின் இக்கவிதை நினைவில் வந்தது.

விற்றபிறகும் சங்கையும் நுகத்தடியையும்
பரணுக்குள்
சொல்ல விரும்பாத அவமானத்தைப் போல்
ஒளித்து வைத்திருக்கிறவனின் நம்பிக்கையை
நாளை என்ற சொல் மீது
நத்தைக் கூடு போல் சுமந்து நகர்கையில்
சீழ்கட்டிய குளம்புகளுள்ள குதிரைகள் பூட்டிய தேரில்
ஒரு நாளை அஸ்தமனத்திற்கு இட்டுச் செல்லும் வதை

தன் கடைசி நாணயத்திற்கான மலினச்சீட்டுப்
பேருந்துக்கு
கர்ப்பவதியுடன் காத்திருத்தல்
யாரோ வந்து எல்லோருக்கும் கொடுத்தது போக
கொண்டு முடியாமல் மீதமிருக்கிறது என்றபடி
ஒரு மலைவேம்புக் கன்றை கையளிக்கிற
இவ்வாழ்வு எவ்வளவு அனிச்சையானது!

(ஜெல்லிமீன்கள் கரையொதுங்கும் கடல் - நாட்குறிப்பு, பக்கம்: 101)

Monday, March 8, 2021

ஹோமர் - அமேசான் #pentopublish4 (2021) போட்டிக்கான நாவல் - அறிமுகம்

 

ஒரு பந்தயப் புறா, ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டிய துவக்கப் புள்ளியில் இருந்து தான் அதுவரை பார்த்திராத நிலப்பரப்பு, வானிலை, காற்று, திசை அதோடு கொலைப் பறவைகளின் தாக்குதல் ஆகியவற்றைத் தாண்டி, பந்தய இலக்கான தன் வீட்டை அடைகிறது.

”ஹோமர்” எனும் இந்நாவல் கூடு சேரும் ஒரு பறவையைப் பற்றிய நாவல். ஆனால் அது மட்டுமே அல்ல, மதுரையின் உள்ளூர் அரசியல், அதிலுள்ள போட்டி, அதனால் ஏற்படும் ஒரு கொலை, கொலையில் சம்பந்தப்படும் ஓர் இளைஞனின் தப்பிக்கும் பயணம், கொலையுண்டவரின் குடும்பம் என பல அடுக்குகளாக விரிகிறது நாவல். நாம் இதுவரை பார்க்காத ஒரு புதிய உலகின் வாழ்வையும் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்துகிறது இந்நாவல். வாசிக்க சுவாரஸ்யமான திரில்லராகவும், அதே நேரம் தமிழ்ல் இதுவரை சொல்லாத ஒரு புதிய களத்தில் அழுத்தமான படைப்பாகவும் உருவாகியிருக்கிறது.

ஒரு பறவையின் வாழ்வுக்கும், மனிதனின் இருப்புக்குமான போராட்டத்தை இயல்பான மதுரைப் பேச்சு மொழியில் பேசும் ”ஹோமர்”, இதோ உங்கள் வாசிப்புக்காக.

இந்நாவல் அமேசான் #pentopublish4 போட்டியில் இருக்கிறது. நாவலை வாசியுங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் அமேசானில் 5 ஸ்டார் ரேட்டிங்கும், ஆங்கிலத்தில் சிறு ரெவ்யூவும் எழுத மறக்காதீர்கள்.
 
நன்றி!
பாலகுமார் விஜயராமன்

Monday, November 18, 2019

சிவப்புப் பணம் - அமேசான் #pentopublish2019 போட்டிக்கான புதிய நாவல் (e-book).

 நாவல் (e-book) குறித்து:

சிவப்புப் பணத்தின் மீதான ஆசை, மிகச் சாதாரணமான மூன்று இளைஞர்களை ஒரு சாகசப் பயணத்தை நோக்கி நகர்த்துகிறது. அது அவர்களை நடு இரவில் ஏ.டி.எம். மெஷினைத் தூக்கிச் செல்ல வைக்கிறது, அடர்ந்த வனத்தினூடாக 8000 அடி உயர மலைப்பாதையில் இரவு முழுக்க நடக்க வைக்கிறது, எத்தனையோ அலைச்சல்களில் செத்துப் பிழைத்து வந்தாலும் மீண்டும் சாகசம் செய்யத் துணியும் வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது.

கறுப்புப் பணம் தெரியும், அது என்ன சிவப்புப் பணம்?

மிக வேகமாக மதிப்பு மாறிக்கொண்டிருக்கும் பணம், வியாபார ஏற்ற இறக்கங்களை சமன்படுத்தப் பயன்படும் ரொக்கப் பணம், எதிர்பார்காதபோது கிடைக்கும் அதிர்ஷ்டப் பணம், சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதிக்கப்படும் பணம் என்று பல விளக்கங்களை உள்ளடக்கி இருக்கிறது. அத்தகைய சிவப்புப் பணத்துடனான சாகசப் பயணம் இந்த நாவல்.

ஒரு தேசத்தில் திடீரென பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இனி செல்லாது என்ற அறிவிப்பு வரும்போது நிகழும் அசாதாரண சம்பவங்கள் விறுவிறுப்பான புனைவாக – “சிவப்புப் பணம்” நாவல், உங்கள் பார்வைக்கு.
------

எனது புதிய நாவல் “சிவப்புப் பணம்” #Amazon #pentopublish2019 போட்டியில் இடம்பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு தொடர்பான புனைவு நாவலான இது உங்களுக்கு சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைத் தரும் என நம்புகிறேன்.
இந்த நாவலை (e-book) கீழ்க்காணும் இணைப்பில் வாங்கி ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
நாவலை வாசித்து Amazonல் ”5 Star Rating” மற்றும் positive review (preferrably in english) எழுதவும். உங்கள் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிந்துரை செய்யவும்.
 
நன்றி
பாலகுமார் விஜயராமன்


Thursday, October 17, 2019

தெக்கூரானின் கதை - அசுரன் திரைப்படம் குறித்த பார்வை



'வெக்கை' நாவல் ரொம்ப முன்னாடி வாசித்தது. கதைக்கரு மற்றும் கதையோட்டம் தவிர காட்சிவாரியான நிகழ்வுகள் கிட்டத்தட்ட மறந்துவிட்ட்டது. 'அசுரன்' அந்நாவலைத் தழுவியது என்றதும் நாவலை மறுபடி வாசிக்கும் ஆசையைக் கட்டுப்படுத்தி ஒரு புதிய படமாகப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்தேன். எனவே இது அசுரன் - வெக்கை பற்றிய ஒப்பீடு அல்ல.

படத்தின் முதல் பாதி காட்சிகள் முழுக்க லகானின் பிடி எங்குமே நழுவாமல், கச்சிதமாகக் கோர்க்கப்ப்பட்டிருக்கின்றன. தனுஷ் சிவசாமியின் குணவார்ப்புக்கு நிச்சயம் நியாயம் சேர்த்திருக்கிறார் அல்லது அவரது தனித்தன்மையால் மெருகேற்றி இருக்கிறார். அவரது மூத்த மகனாக வரும் டிஜேய். அருணாசலமும் துடிப்பான ஓர் இளைஞனை இயல்பாகக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். இடைவெளிக்குப் பிரகான முன்னிகழ்வு காட்சிகள், இளமையான தனுஷ், அதில் ஒரு சிறிய காதல், ஒரு பாடல் என்ற வட்டத்திற்குள் நின்றுதான் ஆட முடியும் என்ற நிலையில், மூல நாவலின் ஆன்மாவை சிதைக்காமல், வணிக எல்லை துருத்திக் கொண்டு தெரியாத வண்ணம் அழகாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

முதல் பாதியில் இயல்பாய் வந்திருந்த “மாஸ்” காட்சிகள், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கனமற்று செயற்கையாக இருந்தன என்பதையும் சொல்லத்தான் வேண்டும். திரைக்கதைக்கான முதல் வரைவில் (first draft) இருந்திருக்கக் கூடிய முதல் பாதிக் காட்சிகளைக் காட்டியிலும் பின்பு சேர்த்திருக்க வாய்ப்புள்ள இரண்டாம் பாதி காட்சிகள் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது போலத் தோன்றியன.

இன்றைய இணைய உலகில், ஒரு படம் வருவதற்கு முன்பே, படத்தின் தொழில்நுட்பம், கதையின் அவுட்லைன் மற்றும் படத்தில் பணிபுரிபவர்களின் மனவோட்டம் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு பார்வையாளனுக்கு இருக்கின்றன. வெற்றிமாறன் போன்ற நுண்கலைஞனின் படம் எனும் போது, படம் குறித்த தேடல் இன்னும் விரிவடையவே செய்யும். அப்படி ஏற்றிக்கொண்ட தகவல்கள், படத்தைப் பார்க்கும் போது குறுக்கிடுவதை தவிர்க்க முடிவதில்லை. அசுரன் வெளி வருவதற்கு முன்பான பேட்டி ஒன்றில், இந்தப் படத்தில் தான், முதன்முறையாக இரண்டாம் குழுவை (second unit) வைத்து சில காட்சிகளை எடுத்திருப்பதாகவும், தான் மிகக் குறுகிய காலத்தில் எடுத்த படம் இது எனவும் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார்.

படத்தில் பெயர் போடும் போது, இரண்டாம் குழுவின் இயக்குநர், படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவராகிய மணிமாறன் என்று கண்ணில்பட்டது. படம் முடிகையில் மணிமாறன் பெயர் நினைவிலாட, இது இரண்டு இயக்குநர்கள் இயக்கிய படங்களின் கலவையோ என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அதோடு குறிப்பிட்ட காலத்தில் ஒரு படத்தை தயாரித்து முடித்து வெளியிடும் வழக்கம் கொண்ட தயாரிப்பாளர் தாணுவின் சிக்கன நடவடிக்கைகளால், நுணுக்கங்களுக்குள் (detailing) செல்லாமல், குறிப்பிட்ட கால அளவிற்குள் எடுக்க முடிந்த காட்சிகளை வைத்து, விடுபட்ட இடங்களை தூரக்காட்சி மற்றும் பின்னணி வசனங்கள் மூலமாகக் கதையை நகர்த்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்குமோ என்றும் தோன்றியது. அதும்போக, நடிகர்களின் வாயசைவிற்கும், பின்னணி குரலுக்கும் ஏகப்பட்ட வசன மாற்றங்கள்.

எப்போதும் தேர்வுகளில் 98சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவன், ஏதேதோ நெருக்கடியினால் முழுதாய்ப் படிக்க நேரமில்லாமல் 80சதவீத மதிப்பெண் எடுத்தது போல இருந்தது ‘அசுரன்’. 80சதவீதம் என்பதும் மிகச் சிறந்த மதிப்பெண் என்ற எண்ணத்திலேயே இதைப் பதிவு செய்கிறேன். யோசித்துப் பார்த்தால், தயாரிப்பின் கால அளவு நீட்டம், அதற்குண்டான செலவுகள், கச்சிதத்தை நோக்கி மீண்டும் மீண்டும் மெனக்கெடுதல் ஆகியவற்றால், படம் நன்றாக இருந்தும் அதிகமாகும் தயாரிப்புச் செலவுகளால், வணிக ரீதியாக வெற்றியடைய முடியாமல் போவதைக் காட்டிலும், குறுகிய காலத்தில் நல்ல கதைகளை சீக்கிரமாக படமெடுத்து ஒரு ஸ்பார்க் தெறிக்கவிட்டு வணிகரீதியாகவும் வெற்றிப் படமாக ஆக்குவதே இன்றைக்குத் தேவை என்று தோன்றுகிறது. இத்தகைய படங்களின் வணிக வெற்றி மட்டுமே, தொடர்ந்து இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வருவதற்கான உந்துசக்தி.

இந்த சிறு மனக்குறை கூட, வெற்றிமாறன் ஏற்கனவே நின்றிருக்கும் உயரம் காரணமாகவே. இதைத் தாண்டியும், ‘அசுரன்’ சிறந்த படம் தான். தனுஷ் இறுதிக் காட்சியில் சொல்லும், “படிப்பை மட்டும் தான் நம்மகிட்ட இருந்து புடுங்கிக்க முடியாது சிதம்பரம்” என்னும் வசனம் இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே கருதுகிறேன். சமூக அடுக்கில் கீழே உள்ளவன், படித்து வந்தாலும் அந்தப் படிப்பு பயனற்றுப் போகிறது எனும் போது, அந்த வசனம் காலாவதியான ஒன்று என்ற கருத்தை இணையத்தில் பார்த்தேன். பாதாளத்தில் கிடக்கிறவன் கல்வி என்ற ஒற்றைக் கொம்பைப் பிடித்துத் தான் மேலேறி வர வேண்டியிருக்கிறது. இதற்கு முன் கல்வியின் மூலம் மேலேறி வந்தவர்களுக்கு அதன் போதாமைகள் தெரியலாம். ஆனால் இன்னும் கீழே கிடப்பவனுக்கு அதுதான் ஒற்றை வழி எனும் போது, அது குறித்து அவநம்பிக்கைகளை விதைக்கலாகாது. எனவே அசுரன் சொல்லும் “படிச்சு அதிகாரத்திற்கு வா சிதம்பரம். வந்து உனக்கு செஞ்ச கொடுமைய நீ யாருக்கும் செய்ய நினைக்காதே!” என்னும் செய்தி இன்றைக்கும் முக்கியமானது தான். 


******

Wednesday, October 9, 2019

குருவிகள் திரும்பும் காலம்


அழியும் ஊரின் சாட்சியங்களாய் வெற்றுத் திண்ணையைக் காத்துக்கிடந்த முடமான வயசாளிகளும், வாழ்ந்துகெட்ட ஞாபகத்தின் பாரத்தை சுமந்தபடி எந்தவித எதிர்பார்ப்புகளின் தளிரும் துளிர்விடாதபடியான கட்டந்தரை மனதோடு நடைபிணமாய்த் திரியும் சம்சாரிகளும், அத்துவானக்காட்டிற்குள் மைல்க்கணக்கில் நடந்துபோய் தும்பிக்கை நீள அகப்பை போட்டு உச்சிப்பகல் வரை அடைகாத்து காற்குடம் நிறைந்த கலங்கிய நீரைப் பொக்கிஷமாகப் பொதிந்துவரும் பெண்களும், கொடுக்காப்புளி ஞாபகத்தில் கருவேல நெற்றுகளைப் பறித்துத் தின்ற கசப்பை அடிவயிற்றிலிருந்து குமட்டி ஓங்கரிக்கும் சவலைப்பிள்ளைகளும் தவிர உயிர்ப்பின் நடமாட்டம் என எதுவும் எஞ்சியிருக்காத அந்த ஊரின் சித்திரம் இரண்டு வாரங்களாய் வளர்மதியின் கனவில் அலைக்கழித்தபடியே இருந்தது.

தலைப்பிள்ளையைப் பாதிக் கருவில் பறிகொடுத்த பிறகு, மூன்று வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் அடுத்ததை வயிறு சரியத் தாங்கியிருந்தாள். தனக்கு நடுக்காட்டம் தந்த கெட்ட கனவுகளை விரட்டும் பொருட்டு, கால்மாட்டில் போட்டு வைத்திருந்த விளக்குமாறு சர்ப்பமாகத் தோற்றம் கொண்டு அவள் காலை உரசியபடி இருந்தது. அதனை லேசாக விலக்கித் தள்ளிவிட்டவள்,  தூக்கமும் பிடிக்காமல் திரும்பிப்படுக்கவும் முடியாமல் ஒருக்களித்தபடி, சுண்ணாம்புக் காரை பொக்குவிட்டு பெயர்ந்துபோயிருந்த சுவரை மெல்லிய விளக்கொளியில் வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தாள். அவளின் முதுகுக்குப் பின்னே குப்புறப் படுத்திருந்த தனசேகர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நள்ளிரவைத் தாண்டி, அதிகாலை வேளையில் தன்னையும் அறியாமல் அவளது கண்கள் செருகிய அடுத்த அரைநொடி, பாழ்பட்ட எச்சங்களைச் சுமந்து திரியும் அந்த ஊர் கனவில் வந்ததை அவளால் தவிர்க்கமுடியவில்லை.

ஒரே கட்டிடத்தில், பக்கவாட்டில் கீழே நான்கும் மேலே நான்குமாக இருந்த கூட்டு வீடுகளின் கீழ்த்தளத்தில் கடைசி வீட்டில் அவர்கள் வசித்தனர். பத்துக்கு பனிரெண்டில் ஒற்றை படுக்கையறை, ஒரு ஆள் நின்று சமைக்கும் அளவிற்கான அடுப்படி, நான்கு பேர் உட்காரும் அளவுக்கான ஹால் என்று சிக்கனமாகக் கட்டப்பட்ட தொகுப்பு. அதில் தெருவைப் பார்த்திருக்கும் தலைவாசலை இந்த வாரம் கூட்டிப்பெருக்கிக் கோலமிடவேண்டிய முறை வளர்மதியுடையது. சரியாகத் தூங்காததால், எழும்போதே தலை வெடித்துவிடுவது போன்ற பெருத்த வலி எடுப்பது இந்த இரண்டு வாரங்களில் அவளுக்கு அன்றாட நிகழ்வாகியிருந்தது. தனசேகரை வேலைக்கு அனுப்பிவிட்டு காலை உணவுக்குப் பின் சற்று நேரம் உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்து இருந்தால் தலைவலி சரியாகிவிடும் என்று நினைத்தவளாய் தண்ணீர் வாளியையும் கோலப்பொடி டப்பாவையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். இரண்டு குடம் தண்ணீர் பிடிக்க, ரோட்டுக் குழாயில் வரிசை போட்டு நான்கு மணி நேரம் காத்திருந்து அடித்து வர வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஒருநாள் வாசல் தெளிக்காவிட்டாலும் ஓனரம்மா வேலை மெனக்கெட்டு வீட்டுக்குள் வந்து அரைமணி நேரம் வகுப்பெடுக்கும். வளர்மதி திருமணம் முடிந்த கையோடு இந்த வீட்டில் குடியேறி மூன்று வருடங்களுக்கு மேலாகவிட்டது. வீட்டுக்குள் தண்ணீர் குழாய் இல்லை. வாசலில் இருக்கும் குழாயில் தான் எட்டு வீட்டுக்காரர்களும் முறை வைத்து நல்ல தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் போக புழங்குவதற்கான உப்புத் தண்ணீரை தெருமுக்கில் இருக்கும் அடி குழாயிலிருந்து பிடித்துவர வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை தவிர வேறு பெரிய குறைகளும் இல்லாத சிறிய வீடு. அவர்கள் இருவருக்கு அது போதுமானதாகவே இருந்தது. மற்ற வீடுகளிலும் என்ன வாழ்கிறது. இந்த கோடையில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குப் போன பிறகு, தெருவில் இருக்கும் எல்லா வீடுகளிலும் மோட்டர் போட்டால் காற்றுதான் வருகிறது. வாரத்துக்கு இரண்டு நாள் வரும் காப்பரேஷன் நல்ல தண்ணீர் போக, புழக்கத்துக்கு எல்லோரும் தெருமுக்கில் இருக்கும் அடிகுழாயைத் தான் நம்பி இருக்கிறார்கள்.

முன்வீட்டு அக்கா வளர்மதியின் முகம் வீங்கிப்போய் இருந்ததைப் பார்த்து, நன்றாக நீர் போகவதற்கு பார்லித் தண்ணீர் வைத்துக் குடிக்கச் சொன்னாள். சரியென்று தலையாட்டிவிட்டு, வாசலைப் பெருக்கி பேருக்கு நான்கு கை நீரள்ளித் தெளித்துவிட்டுக் குனிந்து கோலமிடுகையில் சுருக்கென இடுப்பு வலிப்பது போலிருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் வேலையை முடித்து வீட்டிற்குள் வந்து, தனசேகருக்கு மதியத்துக்குக் கட்டிகொடுத்துவிட வேண்டியவற்றையும், காலைக்கானதையும் தனித்தனியாய் சமைத்து எடுத்துவைத்துவிட்டு நிமிர்ந்தாள். தனசேகர் குளித்து முடித்துவந்து சாப்பிட உட்காருகையில் வளர்மதி வழக்கத்தைவிட அதிகம் சோர்ந்துபோயிருப்பதைக் கவனித்தான். மருத்துவமனைக்குச் செல்லலாமா என்றதற்கு வேண்டாமென்றவள், முந்தைய இரவு தனக்கு வந்த கனவினைக் கூறினாள். அதேபோன்று, சென்றவாரம் முழுவதும் அவள் அந்த ஊர் பற்றிய துர்கனவுகளைச் சொன்னபோது உதாசீனப்படுத்தி எரிச்சலடைந்தவன், இந்த முறை ஏதோ ஆழ்ந்த யோசனைக்குச் சென்றான். வெகுநேரமாய் தட்டு காலியாகாமல் இருந்ததைப் பார்த்தவள், அவனைச் சாப்பிட நினைவுபடுத்திவிட்டு, தன் கனவின் தீவிரத்தன்மையை அவன் உணர்ந்ததை எண்ணி பெருமூச்சுவிட்டாள்.

வளர்மதியின் கனவில் வந்த அந்த ஊர் தனசேகரின் பூர்வீக ஊரான பெரியகுட்டம். அவனது பால்யத்தில் பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு மதுரைக்கு வந்தவர்கள், வந்த இடத்தில் வேறூன்றிவிட்டனர். அவனது சிறுவயதில் எப்போதேனும் முளைப்பாரித் திருவிழாவிற்குச் சென்றுவந்தது, அவனது பெற்றோர்கள் இறந்தபின் ஊருக்குச் செல்வது அடியோடு நின்றுவிட்டது. வானம் பார்த்த பூமியில் பசுமை மறைந்து, கரட்டுக்காடாய் மாறிய ஊரிலிருந்து ஒவ்வொரு குடும்பமாய் அருகிலும் தூரத்திலுமாக புலம்பெயர்ந்தபின் ஊரே தரிசாகிப்போனது. அவன் மகிழ்வாய் இருக்கும் அரிய தருணங்களில் அவன் தந்தை அவனுக்குச் சொன்ன, ஊரோடுத் தன்னைப் பிணைத்திருக்கும் சில பால்யக் கதைகளை அவளிடம் உற்சாகம் பொங்கச் சொல்வான். அன்றாடங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து செக்கு மாட்டு வாழ்க்கையாய் நூற்பாலையில் சுற்றிக்கொண்டிருப்பவனுக்குள் ஒளிந்திருக்கும் சிறுவன் எட்டிப்பார்க்கும் அத்தகைய தருணங்களை அவள் தவறவிட்டதே இல்லை. 

பெரியகுட்டம் கிராமத்தை வளர்மதி ஒரு முறைகூட நேரில் பார்த்ததில்லை. ஆனால் தனசேகர் சொன்ன கதைகள் மூலமாக ஒரு அழகிய சித்திரத்தையே மனதிற்குள் வரைந்து வைத்திருந்தாள். அதற்கு மாறாக, முதல் முறை நாள் தள்ளிப்போய் தான் கருவுற்றிருப்பதாய் அவள் நம்பத் துவங்கிய அன்று இரவு அந்த ஊரைப் பற்றிய மங்கலதானதொரு சித்திரம் அவள் கனவில் வந்தது. அக்கனவின் தன்மை இன்னதென்று பிரித்தறிய முடியாமல் பதறிப்போய் வியர்த்து விறுவிறுத்து எழுந்து அமர்ந்தாள். பின் நான்காவது மாதத்தில் மீண்டும் அத்தகைய துர்கனவினவினூடாகவே அடிவயிற்று வலியோடு பாவாடை முழுதும் உதிரம் கசிய கரு கலைந்து நழுவுவதை உணர்ந்தாள். அதன் பின் அத்தகைய கனவுகள் வராமல் இருந்தாலும் கூட, ஒவ்வொரு மாதமும் பத்து நாட்கள், இருபது நாட்கள் தள்ளிப்போவதும், சோதித்துப் பார்க்கும்போது கர்ப்பமில்லை என்பதும் தொடர்கதையாகியது. பின், பிசிஓடிக்காக மாத்திரைகள் எடுக்கத் துவங்கியதும், ஒவ்வொரு மாதமும் சரியான நாளில் தீட்டானது. ஆனால், மாத்திரையின் விளைவா அல்லது அவளின் மனப்பதற்றமா தெரியவில்லை, தீட்டாவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக வயிற்று வலியின் அறிகுறிகள் தெரியும் போதே, எரிச்சலும் தூக்கமின்மையும் அவளை ஆட்டிப் படைக்கத் துவங்கின. அப்படியும் பின்னிரவில் சோர்வினால் கண்ணயர்ந்ததும், அந்த ஊர் பற்றிய துர்கனவுகள் அவளைச் சூழந்துகொள்ளும். அந்த மனப்போராட்டத்திலிருந்து வெளிவரவும் முடியாமல், கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போன்ற மனநிலையிலிருந்து தப்பிக்க எண்ணி ஒரு முறை டாக்டரிடம் கேட்டபோது, பீரியட்ஸை சீராக்க, பக்கவிளைவுகளாய் வரும் அத்தகைய வேதனைகளைக் கடந்துதான் ஆக வேண்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

ஒரு வருடம் மாத்திரை சாப்பிட்ட பின், டாக்டரின் அறிவுரைப்படி மாத்திரையை நிறுத்திய அடுத்த மாதமே மீண்டும் கரு உண்டானது. மாத்திரைகளின் பக்கவிளைவுகளில் இருந்து விடுதலை, அதோடு கரு உருவாகியிருந்தது என்ற இரட்டை மகிழ்ச்சியில் அவள் மனம் அமைதியடைந்தது. அதிலிர்ந்து கடந்த எட்டரை மாதங்களும் முகத்தெளிச்சியும், அமைதியும் கூட, கெட்ட கனவுகளின் அறிகுறிகள் எதுவுமின்றி நிம்மதியாகத் தூங்கி எழுந்தாள். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக பிரசவத்திற்கான நாள் நெருங்க நெருங்க மீண்டும் ஊர் பற்றிய கொடுங்கனவுகள் தினமும் வந்து அவள் தூக்கத்தையும் மனநிம்மதியையும் கெடுத்தது.

மாலை வேலை முடிந்து தனசேகர் வீட்டிற்கு வரும்போது, வளர்மதியின் நெற்றி நிறைய மஞ்சள் காப்பும், குங்குமமும் இருந்ததைப் பார்த்து, ’எங்கெயாவது கோவிலுக்கு போய்ட்டு வந்தியா?’ என்றான். ’சாயங்காலமா ஓனரம்மா வந்தாங்க. நான் சோர்ந்து போயிருக்கதைப் பார்த்து, என்ன ஏதுன்னு கேட்டாங்க. நான் கண்ட கனவாப் பத்தி சொன்னேன். குலதெய்வத்துக்கு ஏதாச்சும் குறையிருக்கும். அதான் பூர்வீக ஊரை அடையாளம் காட்டுதுனு சொன்னாங்க’  என்றாள். அதை கவனித்தும் கவனியாதவன் போல, காக்கி சட்டையைக் கழட்டி கொடியில் போட்டுவிட்டு, கைலிக்கு மாறியபடி, ‘காபி போடு” என்றான். அமர்ந்திருந்தவள் வலது கையைத் தரையில் ஊன்றி மெதுவாக எழுந்தாள். அடுப்பில் பாலை வைத்துவிட்டு, அவன் வாங்கி வந்திருந்த பொட்டலத்தில் இருந்து ஒரு தேய்ங்காய் போளியையும், தூள் வெங்காய பஜ்ஜியையும் ஒரு தட்டில் வைத்து, வாசலில் முகம் கழுவிவிட்டு வந்தவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கியபடி, அடுத்து என்ன என்பது போல லேசாகச் செருமினான். அதற்காகவே காத்திருந்தவள் போல, ’ஏங்க, ஒரு தாட்டி நம்ம குலசாமி கோயிலுக்கு போய்ட்டு வருவோமா?’ என்று மெதுவாகக் கேட்டாள். அவன் என்ன நினைத்தான் என்று அவனது முகக்குறிப்பில் அவளால் உணர முடியவில்லை. அவன் முகத்தையே பார்த்தபடி நின்றாள். அவன் இரண்டு நிமிட மௌனத்திற்குப் பிறகு, ‘பார்ப்போம்” என்று மட்டும் கூறினான்.

தன் ஆயுள் முழுதும் செக்கில் சுற்றி மொளி தேய்ந்து இறந்துபோன காளையின் காற்குளம்பு எலும்பில் ஏற்றி வைத்த பந்தம் அணையப் போவது போல மாடத்தில் படபடத்து எரிந்தபடி இருந்தது. வாசல் திண்ணையில் புரண்டு படுத்திருந்த பிறழ்மனம் கொண்ட பதின்ம வயதினன் ஒருவன், இருளைக் கக்க வரும் வலுசர்ப்பங்களை தன் கால்களைப் பிணைத்திருக்கும் சங்கிலியால் விரட்டியடித்துக் கொண்டிருந்தான். வீட்டின் முன்முற்றத்தின் நடுவே வாழை இலையில் குவித்து வைத்திருந்த அவித்த மொச்சைப் பயிறு படையலைச் சுற்றி ஒப்பாரிப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. படையலுக்கு உரியவனான மூப்பன் வீட்டுக்கு வெளியே முச்சந்தியில், குத்துக்காலிட்டு அமர்ந்து கன்னத்தில் கைவைத்தபடி, மையிருட்டில் தனக்கு முன்னிருக்கும் கொட்டாங்குச்சி நீரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பளிங்கைக் கண்களாய்க் கொண்ட ஊர்க்காவல் நாய்கள் மூப்பனுக்குச் சற்றி தள்ளி நின்றபடி, இடைவிடாமல் ஊளையிட்டபடி இருந்தன. அந்த நாய்களின் ஓலம் வளர்மதியின் செவிப்பறைகளுக்குள் விடாமல் ஒலித்தபடி அவளை எங்கோ துரத்திக்கொண்டே இருந்தது.

பதறியடித்து எழுந்தவளின் அலறல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த தனசேகரையும் அச்சம்கொண்டு எழச் செய்தது. வேகமாக எழுந்தவன், அவள் தலைமாட்டில் வைத்திருந்த தண்ணீர் செம்பை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதை வாங்கி ஒரு மடக்கு குடித்தவள், மீண்டும் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். அவளுக்குப் பின்புறம் அமர்ந்திருந்தவன் மெதுவாக அவளது முதுகைத் தடவிக் கொடுத்தான். அவள் உடல் படபடத்து நடுங்கியதை அவனால் உணர முடிந்தது. அவள் பயம் போக்க, ஊருக்குச் சென்று குலசாமியைக் கும்பிட்டு வர வேண்டும் என்று தீர்மானித்தான்.

மதுரையிலிருந்து கமுதி செல்லும் பேருந்தில் நல்லூர் விலக்கில் இருங்கி அங்கிருந்து மூன்று மைல்தூரம் ஓடைப்பாதையில் நடந்து தனது பெரியகுட்டம் கிராமத்திற்குச் சென்றது அவனக்கு நினைவிருந்தது. இப்போது கமுதி வரை சென்று அங்கிருந்து ஏதேனும் ஆட்டோ பிடிக்கலாம் என்று எண்ணியவனுக்கு, பேருந்து நடத்துநர் நல்லூர் விலக்கிலிருந்தே பெரியகுட்டத்திற்கு ஷேர் ஆட்டோக்கள் இருக்கின்றன என்ற கூறிய தகவல் வியப்பாக இருந்தது. ஆளரவமற்று அழிந்த ஊரில் யாருக்காக ஆட்டோக்கள் ஓடுகின்றன என்ற கேள்வியும் அவனது குழப்பத்தை அதிகரித்தன.

முன்னொரு காலத்தில், விதையில்லா பயிர்களை விளைவிக்கத் துவங்கிய நாளில்தான் அந்த ஊரின் அழிவுக்கான விதை விழுந்தது என்று சொன்ன குருவிக்காரனை குடியானவர்கள் எல்லாம் சேர்ந்து கல்லால் அடித்துத் துரத்தியதாகவும், இரத்தக் காயங்களுடன் அவன் அந்த ஊரை விட்டுச் செல்லும் பொழுது அந்த ஊரிலிருந்த குருவிகள் உட்பட அனைத்து பறவைகளும் அவனுடன் சென்று விட்டதாகவும், அப்போது அவன் காகங்களை மட்டும் ஊரிலிருக்கச் சொல்லி கட்டளையிட்டதால், கோபத்தில் அவை தினமும் விடிகாலையில் ஊரிலுள்ள குடியானவர்களை சபித்துக் கொண்டிருப்பதாகவும் தனசேகரின் தந்தை சொன்ன கதை ஏனோ அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஊர் பற்றிய தந்தையின் கதைகளோடு அவனும், அவன் அருகில் பதற்றமும் கவலையும் சூழ்ந்தவளாக வளர்மதியும் பேருந்தில் பயணித்தனர்.

தற்காலிக பஞ்சத்தைத் தீர்க்க, உலங்கூர்தியில் மூலம் ஊரெங்கும் கருவேல விதைகளைத் தூவ அரசாங்கம் உத்தரவிட்ட நாளில் தாங்கள் பருத்தி போட்ட காடெல்லாம் பாழாய்ப்போனது என்ற தனது தந்தையின் ஓலம் தனசேகரின் மனதில் இப்போது ஒலித்தது. கருவேலமரங்கள் காற்றெங்குமிருந்த ஈரப்பதத்தை உறிஞ்சி வளர்ந்து, பின் தமது தண்டையும், தூரையும் கரிமூட்டமாகி ஊர் முழுவதையும் சுடுகாடாக்கிவிட்டு மூட்டை மூட்டையாய் சுமையூர்திகளில் சவ ஊர்வலம் போன கதைகளையும், இனி அங்கு நமக்கு வேலையில்லை என்று பதறித் திசைமாறிச் சென்ற கருமேகங்களை சமாதானம் செய்து அழைத்துவந்து மழை பெறவைக்கவும், தரிசாகிப் போன நிலங்கள மீட்கவும் வழியில்லாமல், அருகிலும் தூரத்திலுமாக புலம்பெயர்ந்து பசியாற்றப் பழகியிருந்த தனது தலைமுறைக் கதைகளை நினைத்தபடியே அமர்ந்திருந்தவனின் தோளில் சாய்ந்து கண்ணயர்ந்தபடி வந்தாள் வளர்மதி.

நல்லூர் விலக்கில் அவர்கள் இறங்கும்போது அநேகமாக பேருந்தில் பாதி காலியாகி அவர்களுடன் இறங்கியது. தினக்கூலி வேலைக்குச் செல்பவர்களைப் போல இருந்தவர்கள் அங்கிருந்த ஷேர் ஆட்டோக்களில் ஏறினர். தனசேகர் ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் சந்தேகத்தோடு, பெரியகுட்டம் என்று இழுக்க, அவர் ‘ஏறுங்க, எல்லாரும் அங்க தான். ஆளுக்கு பத்து ரூபாய்’ என்று வண்டியைக் கிளப்பினார். பிள்ளைத்தாச்சிக்கு கொஞ்சம் இடம்விட்டு மற்ற பெண்கள் ஆட்டோவை நிறைத்தனர். ஓட்டுநருக்கு அருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்த தனசேகர், ‘பெரியகுட்டத்துல ஏதேனும் வேலை நடக்குதா?’ என்பது போல ஓட்டுநரிடம் மெதுவாய்க் கேட்டான்.
‘என்ன தம்பி வேலைனு சாதாரணமா கேட்டுப்புட்டீங்க. சுத்துவட்டாரமே எவ்ளோ பரபரப்பா ஓடிட்டு இருக்கு. ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க’
‘இல்லண்ணே, நமக்கு சொந்த ஊர் பெரியகுட்டம் தான். ஊருப்பக்கம் வந்து வருஷக்கணக்காச்சு. குலசாமியக் கும்பிட்டுப் போகலாம்னு இப்போதான் வாறோம்’.
‘பெரியகுட்டம் ஊருல மக்க நடமாட்டம் இல்லாம இருந்தது உண்மைதான். ஒரு ஆறுமாசம் முந்தி வடநாட்டு சேட்டு ஆளுங்க ஏக்கர் கணக்குல சுத்துவட்டாரத்து நிலங்களை விலை பேசி வாங்குனாங்க. அத்துவானக் காட்டுக்குள்ள, மானம் பார்த்த பூமியா கிடக்குற தரிசு நிலத்தை ஆயிரக்கணக்குல காசு போட்டு வாங்குறானுக கிறுக்குப் பயலுகன்னு, ஊரக் காலி பண்ணிட்டு எங்கெங்கோ போய் செட்டிலானவுங்க எல்லாம் கூட்டம் கூட்டமா வந்து பத்திரம் முடிச்சுக் கொடுத்தாங்களே. ஊரக் கெட்டிப் புடிச்சுட்டுக் கெடுக்குற கொஞ்சம் குடியானவங்க தான் பாக்கி. உங்களுக்கு அது பத்தி எதுவும் தெரியாதா?”
“இல்லண்ணே, நாங்க ஊரை விட்டுப் போனதும், நிலம் நீச்சு எல்லாத்தையும் பங்காளிங்க பராமரிப்புல விட்டுவிட்டு வந்துட்டார் அப்பா. அதுக்கப்புறம் நான் வந்து போய் இருக்கல. ஊர்க்காரவுங்க யாரு கூடயும் அவ்ளோ நெருக்கத்துல இல்லை. சரி, வடக்கத்தி சேட்டுக எதும் தொழிற்சாலை கட்றானுகளா… பரவால்ல, ஊரு முன்னேறுனா நல்லதுதான்.”
“மயித்துல முன்னேத்துவானுக. எரநூறு வருஷத்துக்கு முந்தி இந்த பகுதி முழுக்க பாம்பாறுன்னு ஒரு பெரிய ஆறு ஓடுன படுகை தம்பி. சுமார் நூறு அடிக்குக் கீழே பெரியகுட்டம் முழுக்க நஞ்சை, புஞ்சை, கரட்டுக்காடு, கருவக்காடு எல்லா இடத்துலயும் சுத்தமா சலிச்ச தங்கம் போல ஆத்து மணல் அடுக்கடுக்கா கொட்டிக் கிடந்திருக்கு. இன்னிக்கு நெலமைக்கு கோடி கொடுத்தாலும் கிடைக்காத சொத்து. அதை வடக்கத்தியானுக எப்படியோ மோப்பம் பிடிச்சு உள்ள வர்றானுக. நம்ம ஆளுகளும் வெவரம் தெரியாம, தண்ணி இல்லாத காட்டை வச்சு என்ன பண்ணன்னு வந்த வெலைக்கு வித்துட்டுப் போறாங்க.”

பேசிக் கொண்டே ஆட்டோ ஓட்டி வந்தவர், பெரியகுட்டம் கிராமத்தின் எச்சமாய் இருந்த சிதிலமடைந்த வீடுகளைக் கடந்து, கிழக்குப் பக்கம் வரண்டு போயிருந்த ஊரணியைத் தாண்டி ஆட்டோவை நிறுத்தினார். முன்னும் பின்னுமாக பத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் வந்து நின்றன. ஆண்களும் பெண்களுமாக அவற்றிலிருந்து இறங்கியவர்கள், கிழக்குப் பக்கமாக நடக்கத் துவங்கினர். ஊரணியைத் தாண்டி ரெண்டு பர்லாங்கு பருத்திக் காடுகளின் வழியே சென்றால் தென்திசை ஓரத்தில் பாம்பாளம்மாள் கோவில் வரும் என்று தனசேகருக்கு நினைவிருந்தது. ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘ஒரு அரை மணி நேரம் காத்திருக்க முடியுமாண்ணே. போய் சாமி கும்பிட்டுட்டு இதே ஆட்டோல விலக்கு வரை வந்துருவோம்’ என்றான். அவர் ’சரி காத்திருக்கிறேன்’ என்றதும் தனசேகரைத் தொடர்ந்து, வளர்மதியும் மெதுவாக ஆட்டோவில் இருந்து இறங்கினாள். சாமி கும்பிட இங்கே எதுவும் கிடைக்காது என்பதால் மதுரையிலிருந்தே தேங்காய், பழம், சூடம் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள். அவளிடமிருந்த கட்டைப் பையை வாங்கியவன், சற்று தூரம் நடந்தனர். கோவில் திசையை உத்தேசித்துத் திரும்பியவன் விநோதமான காட்சிகள் தெரிந்தன.

அங்கே பருத்திக் காடுகள் இருந்த எந்த அடையாளமும் இன்றி, ஏக்கர் கணக்கில் சுமார் நூற்றைம்பது அடிக்குக் குறைவில்லாத ராட்சச பள்ளத்தாக்குகளும், அவற்றைச் சுற்றி நீண்ட ஓடுபாதைகளின் மீது லாரிகள் செல்லும் பாதைகளுமாக மிகப் பெரிய மணல் குவாரியைப் போல அந்த சுற்றுவட்டாரமே காட்சியளித்தன. பத்துப் பதினைந்து ராட்சச கிரேன்களும், ஜே.சி.பி கனரக ஊர்திகளும் நடுவில் அலைந்தபடி இருக்க, சுற்றி நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நின்றிருந்தன. மிகப்பெரிய இயந்திரக் கைகள் பள்ளத்தாக்குகளில் பொதிந்து பரவிக் கிடக்கும் பொன்னிற ஆற்று மணலை அள்ளி அள்ளி, வரிசையாக நின்றிருந்த லாரிகளின் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. 

பருத்திக் காடுகளின் இடையே தென்திசையோரமாய் இருந்த ஒற்றைக் குத்துக்கல் தான் தனசேகரின் குலதெய்வமான பாம்பாளம்பாள் கோவில். இப்போது திசைகெட்டு திணை கெட்டுக் கிடக்கும் அந்தப் பள்ளத்தாக்குகளையும் ஓடுபாதைகளையும் பார்க்க, தனசேகருக்குத் தன் ஈரல்குலையை யாரோ ரம்பம் கொண்டு அறுப்பது போலிருந்தது. அவன் அப்படியே பிரமை பிடித்தவனைப் போல நிற்க, அந்நிலக் காட்சிகளைப் பார்த்த வளர்மதியின் கண்களில் இன்னெதென்று தெரியாமல் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவள் கேவியழும் தேம்பலை உணர்ந்த தனசேகர் சுயநினைவுக்கு வந்தவனாய் அவளைத் தேற்றுவது போலத் தோளோடு அணைத்தான். அவனது இடக்கையில் இருந்த கட்டைப்பையின் பாரம் இன்னும் இன்னும் அழுத்தத் துவங்கியது. மணல் குவாரிக்கு வேலைக்குச் செல்பவர்கள் அவர்களைக் கடந்து நடந்துகொண்டிருந்தார்கள். தான் வாழ வந்த குடும்பத்தின் மூதாதையர்களின் உடல் பொருள் அனைத்துமாக அவர்களுக்குப் பசியாற்றிய விளைநிலங்களின் அடிமடியை அறுத்து அவை குடல் சரியக் கிடக்கும் இந்நிலையைக் காணத்தான் இத்தனை வருடங்கள் கழித்து பாம்பாளம்பாள் தன்னை இங்கே அழைத்தாளா என்றூ விசும்பியபடி இருந்தாள் வளர்மதி. 

குனிந்த தலை நிமிராமல், திரும்பிய இருவருக்குள்ளும் பேசிக்கொள்ள வார்த்தைகள் அனைத்தும் தூர்ந்துபோனதாய்த் தோன்றியது. செல்லும் முன், குலசாமிக்கென தாங்கள் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனாலும் அரூபமாய் பாம்பாளம்பாள் அங்கே தான் எங்கேயோ குடிகொண்டிருக்க வேண்டும் என்று தனது மனதை ஆற்றுப்படுத்திய வளர்மதி, தென்கிழக்கு திசையை நோக்கி கையெடுத்து கும்பிட்டுவிட்டு, நின்ற இடத்திலேயே தேங்காயை உடைத்து, வழிந்த நீரை நிலத்துக்கு விளாவி, குனிந்து சூடம் பாக்கெட் மொத்தத்தையும் அங்கேயே குவித்துப் பொருத்தி கண்களின் ஒற்றிவிட்டு, அந்த மண்ணை எடுத்து நிலக்காப்பாய் நெற்றியிலும், கழுத்திலும், வயிற்றிலும் பூசிக்கொண்டாள். நிலக்காப்பை அடி வயிற்றில் பூசுகையில் பனிக்குடம் நிறைந்து தளும்புவதை, அது உடைந்து ஒரு புதிய உயிர் ஜனிக்கும் தருணம் சமீபிப்பதை அவளால் நன்றாக உணர முடிந்தது. அவளைத் தொடர்ந்து தனசேகரும் சூடத்தைத் தொட்டு கும்பிட, இருவரும் சற்று தூரத்தில் காத்திருக்கும் ஆட்டோவை நோக்கி நடக்கத் துவங்கினர்.

ஆட்டோவை நெருங்கும் போது, குவாரி பக்கமிருந்து கூச்சலும் குழப்பமுமாய் பெருங்குரலெடுத்தபடி ஆண்களும் பெண்களும் வேகமாக ஓடி வந்தனர். இவர்களைக் கடந்து செல்பவர்களை என்ன என்பது போல இவர்கள் பார்க்க, அடுத்து வந்த ஒரு நடுத்தர வயது பெண், “நிலமும் பொம்பளதானே. அவ அடிமடி வரை குதறி எடுத்தா சும்மா இருப்பாளா. மொத்தமா பொங்கிட்டா. நூறு அடிக்கு மேல தோண்டுன அத்தனை பள்ளத்துலயும் ஆயிரக்கணக்குல ஊத்துக்கண் ஒரே நேரத்துல திறந்து நாலு, எட்டு, பதினாறு திசைகள்லயும் மடை வெள்ளமா பீச்சி அடிக்குறா. உள்ள நின்னு மண்ண அள்ளுன ஆளு, அம்பு, சேனை, மெசினு, வண்டி, லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் முக்கி ஏப்பம் விட்டுட்டா. குவாரி முழுக்க வெள்ளக்காடு. சீக்கிரம் வண்டியைக் கிளப்பிட்டு நீங்களும் வெளியேறுங்க.” என்றபடி ஆவேசமாகக் கத்தியபடி அந்தப் பெண் ஓடினாள். இவர்கள் அவள் சொல்வது இன்னதென்று புரிந்து விளங்கிக் கொள்வதற்குள் கிழக்குப் பக்கமிருந்து குவாரித் தடுப்புகளைப் ஊடாக முதலில் ஊர்ந்தும், சற்று நேரத்திற்கெல்லாம் பெருகி ஓடிவந்த ஊற்றுத் தண்ணீர் கீழே பூஜை செய்துவிட்டு மண்ணில் வைத்திருந்த தேய்ங்காய் முடிகளை சுழற்றி அடித்து அள்ளிக்கொண்டு, இவர்களின் கால்களைத் தழுவியபடி ஊரணியை நோக்கி பெருக்கெடுத்து ஓடியது.

****** 
நன்றி: கனலி http://kanali.in/kurivakal-thirumbum-kaalam/