Thursday, May 5, 2022
பயணிகள் கவனிக்கவும் - திரை அனுபவம்
Friday, March 18, 2022
கடைசி விவசாயி !
கடைசி விவசாயி !

தமிழ் சினி்மா விவசாயத்தைக் கொலையாய் கொன்றெடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் விவசாயியை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.
சினிமா
பார்ப்பது போலவே இல்லை, இப்படம் மிக இயல்பாக இருக்கிறது என்று எல்லோரும்
பாராட்டுகிறார்கள். எனக்கு அது மட்டுமே கொஞ்சம் குறையாகத் தோன்றியது. இதே
சரடை இன்னும் சற்று திரைமொழி சேர்த்து, காட்சிகளை இறுக்கக்
கோர்த்திருந்தால் இந்தக் கதை பொதுமக்களின் மனதில் ஆழமாகச் சென்று
சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். படத்தில் ஆசுவாசமான மிகப்பெரிய விஷயம்,
விவசாயியை நல்லவராகக் காட்ட சுற்றி இருப்பவர்களை கொடூரர்களாகச்
சித்தரிக்கவில்லை. மனிதர்கள் எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே. அவரவர்
வாழ்க்கை முறைக்கு அவரவர் நியாயம் சேர்க்கின்றனர். அதிலும் நீதிபதி தான்
சார்ந்துள்ள சட்ட அமைப்பின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்தபடி புழுங்குவதும்
முதியவர் இறந்துவிட்டார் என்று குற்றவுணர்வோடு கைகளைக் கோர்த்து வேண்டியபடி
பரிதவிப்பதும் மிக இயல்பு.
பணியாரத்தை சிணுக்கருக்கியால்
திருப்பிப் போடுகையில் அந்தச் சிறுபெண் ரசித்துச் சிரிக்கும் ஒரு சிரிப்பு,
”என்னவாம்.. உன் வம்சமே கிறுக்குப்பய வம்சமாமே, உன்னை எப்படி கல்யாணம்
பண்ணனு எங்கம்மா சொல்லுச்சு” என்று குடத்துடன் தண்ணீர் எடுக்கச் செல்லும்
பெண் போகுற போக்கில் ஒரு காதலை மறுதலிக்கும் இயல்பு, இராமையா கேட்காமலே
பெரியவர் மூன்று பேருக்கு சோறு பரிமாறி வைக்கும் இடத்தில் அவர் அவனை
எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்ற நுணுக்கம் என்று நிறைய இடங்கள்
ரசிக்க வைத்தன.
ஞானக்கிறுக்கனாக இராமையா பாத்திரத்தை விஜய் சேதுபதி
மிக விரும்பி ஏற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. இராமையாவின் நடையும்
பயணமுமே தனிக்கதை. அந்தப் பாத்திர வார்ப்பும், ஒப்பனையும் அவருக்கு
நன்றாகப் பொருந்துகிறது. அதில் சிறு பிசிறு, அரூபமாய் தன்னுடன் வாழ்ந்து
கொண்டிருப்பவளுக்கு வைத்திருக்கும் தேநீரை இன்னொருவன் எடுத்துக் குடிக்கும்
போது, அங்கே விஜய் சேதுபதி இருந்ததால் அவனை வெளுத்துவிடுகிறார். உண்மையில்
அந்த இடத்தில் இராமையா ஊர்க்கார்களிடம் அடிவாங்கி, புழுதி மண்ணோடும்
சிராய்ப்புகளோடும் சிரித்தபடியே கைச்சுமையைத் தூக்கிக் கொண்டு போய்,
பூட்டுக் குழம்பும் மோதிர அப்பளமும் சாப்பிட்டுக் கிளம்பியிருப்பான்.
படத்தில்
தேவையில்லாத இடைச்செருகல், தனது காட்டை விற்று யானை வாங்கி மேய்த்துக்
கொண்டிருக்கும் யோகிபாபு பாத்திரம். இக்கதைக்கு யோகியும் யானையும் எந்தவொரு
நியாயத்தையும் சேர்க்கவில்லை என்பதோடு எளிய மனிதர்களின் ஊடே அவர்களது
ஊர்வலம் தேவையில்லாத ஆடம்பரமே. அதுபோல, குலசாமி நேர்த்திக்கடனுக்காக
நெல்லுப் போடும்போதும் நூறுநாள் வேலையில் இருக்கும் ஊர்மக்கள் யாரும்
வரமாட்டார்கள் என்பது, காலாவதியான பூச்சி மருந்தை அடித்ததால் பயிர்கள்
செத்துப் போவது என்ற சில இடங்களில் குறைகளும் இல்லாமல் இல்லை. இன்னொரு
விஷயம், இக்கதையை இயக்குநர், ரஜினிக்குச் சொன்னார் என்று செய்தி உலவுவதாகக்
கேள்விப்பட்டேன். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இயக்குநர் மணிகண்டன்
அவர்களுக்கு வாழ்த்துகள்.
விவசாயம் என்பது புனிதம்
அல்ல, ஒரு விதை எத்தனை காலமானாலும் தனக்குத் தேவையான ஒளியும் நீரும்
கிடைக்கும்போது தானாக உயிர்பெறும். அது போல, முறைகள் எப்படி மாறினாலும்,
நவீனம் புகுந்தாலும் ஒரு பயிர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு எப்படியும்
மண்ணில் உயிர்பெறும் என்ற கருத்து மனதுக்கு அணுக்கமாகத் தோன்றியது. ஒரு
காட்சியில் சிறைக்கைதி ஒருவன் வெறும் மண்ணைப் பாத்திரத்திலிட்டு அதற்கு
நீரும் ஒளியும் தரும்போது அதிலிருந்து ஒரு தளிர் துளிர்க்கிறது. “மண்ணில்
ஆயிரக்கணக்கான விதை போட்டுருக்கான். உனக்கு வேப்பங்கன்று கொடுத்திருக்கு
பாரு!” என்று விவசாயம் கற்க நினைக்கும் அவனிடம் பெரியவர் கூறுகிறார்.
எனக்கு நேசமித்ரனின் இக்கவிதை நினைவில் வந்தது.
விற்றபிறகும் சங்கையும் நுகத்தடியையும்
பரணுக்குள்
சொல்ல விரும்பாத அவமானத்தைப் போல்
ஒளித்து வைத்திருக்கிறவனின் நம்பிக்கையை
நாளை என்ற சொல் மீது
நத்தைக் கூடு போல் சுமந்து நகர்கையில்
சீழ்கட்டிய குளம்புகளுள்ள குதிரைகள் பூட்டிய தேரில்
ஒரு நாளை அஸ்தமனத்திற்கு இட்டுச் செல்லும் வதை
தன் கடைசி நாணயத்திற்கான மலினச்சீட்டுப்
பேருந்துக்கு
கர்ப்பவதியுடன் காத்திருத்தல்
யாரோ வந்து எல்லோருக்கும் கொடுத்தது போக
கொண்டு முடியாமல் மீதமிருக்கிறது என்றபடி
ஒரு மலைவேம்புக் கன்றை கையளிக்கிற
இவ்வாழ்வு எவ்வளவு அனிச்சையானது!
(ஜெல்லிமீன்கள் கரையொதுங்கும் கடல் - நாட்குறிப்பு, பக்கம்: 101)
Monday, March 8, 2021
ஹோமர் - அமேசான் #pentopublish4 (2021) போட்டிக்கான நாவல் - அறிமுகம்
”ஹோமர்” எனும் இந்நாவல் கூடு சேரும் ஒரு பறவையைப் பற்றிய நாவல். ஆனால் அது மட்டுமே அல்ல, மதுரையின் உள்ளூர் அரசியல், அதிலுள்ள போட்டி, அதனால் ஏற்படும் ஒரு கொலை, கொலையில் சம்பந்தப்படும் ஓர் இளைஞனின் தப்பிக்கும் பயணம், கொலையுண்டவரின் குடும்பம் என பல அடுக்குகளாக விரிகிறது நாவல். நாம் இதுவரை பார்க்காத ஒரு புதிய உலகின் வாழ்வையும் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்துகிறது இந்நாவல். வாசிக்க சுவாரஸ்யமான திரில்லராகவும், அதே நேரம் தமிழ்ல் இதுவரை சொல்லாத ஒரு புதிய களத்தில் அழுத்தமான படைப்பாகவும் உருவாகியிருக்கிறது.
ஒரு பறவையின் வாழ்வுக்கும், மனிதனின் இருப்புக்குமான போராட்டத்தை இயல்பான மதுரைப் பேச்சு மொழியில் பேசும் ”ஹோமர்”, இதோ உங்கள் வாசிப்புக்காக.
இந்நாவல் அமேசான் #pentopublish4 போட்டியில் இருக்கிறது. நாவலை வாசியுங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் அமேசானில் 5 ஸ்டார் ரேட்டிங்கும், ஆங்கிலத்தில் சிறு ரெவ்யூவும் எழுத மறக்காதீர்கள்.
Monday, November 18, 2019
சிவப்புப் பணம் - அமேசான் #pentopublish2019 போட்டிக்கான புதிய நாவல் (e-book).
கறுப்புப் பணம் தெரியும், அது என்ன சிவப்புப் பணம்?
மிக வேகமாக மதிப்பு மாறிக்கொண்டிருக்கும் பணம், வியாபார ஏற்ற இறக்கங்களை சமன்படுத்தப் பயன்படும் ரொக்கப் பணம், எதிர்பார்காதபோது கிடைக்கும் அதிர்ஷ்டப் பணம், சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதிக்கப்படும் பணம் என்று பல விளக்கங்களை உள்ளடக்கி இருக்கிறது. அத்தகைய சிவப்புப் பணத்துடனான சாகசப் பயணம் இந்த நாவல்.
ஒரு தேசத்தில் திடீரென பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இனி செல்லாது என்ற அறிவிப்பு வரும்போது நிகழும் அசாதாரண சம்பவங்கள் விறுவிறுப்பான புனைவாக – “சிவப்புப் பணம்” நாவல், உங்கள் பார்வைக்கு.
Thursday, October 17, 2019
தெக்கூரானின் கதை - அசுரன் திரைப்படம் குறித்த பார்வை
'வெக்கை' நாவல் ரொம்ப முன்னாடி வாசித்தது. கதைக்கரு மற்றும் கதையோட்டம் தவிர காட்சிவாரியான நிகழ்வுகள் கிட்டத்தட்ட மறந்துவிட்ட்டது. 'அசுரன்' அந்நாவலைத் தழுவியது என்றதும் நாவலை மறுபடி வாசிக்கும் ஆசையைக் கட்டுப்படுத்தி ஒரு புதிய படமாகப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்தேன். எனவே இது அசுரன் - வெக்கை பற்றிய ஒப்பீடு அல்ல.
படத்தின் முதல் பாதி காட்சிகள் முழுக்க லகானின் பிடி எங்குமே நழுவாமல், கச்சிதமாகக் கோர்க்கப்ப்பட்டிருக்கின்றன. தனுஷ் சிவசாமியின் குணவார்ப்புக்கு நிச்சயம் நியாயம் சேர்த்திருக்கிறார் அல்லது அவரது தனித்தன்மையால் மெருகேற்றி இருக்கிறார். அவரது மூத்த மகனாக வரும் டிஜேய். அருணாசலமும் துடிப்பான ஓர் இளைஞனை இயல்பாகக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். இடைவெளிக்குப் பிரகான முன்னிகழ்வு காட்சிகள், இளமையான தனுஷ், அதில் ஒரு சிறிய காதல், ஒரு பாடல் என்ற வட்டத்திற்குள் நின்றுதான் ஆட முடியும் என்ற நிலையில், மூல நாவலின் ஆன்மாவை சிதைக்காமல், வணிக எல்லை துருத்திக் கொண்டு தெரியாத வண்ணம் அழகாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் வெற்றிமாறன்.
முதல் பாதியில் இயல்பாய் வந்திருந்த “மாஸ்” காட்சிகள், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கனமற்று செயற்கையாக இருந்தன என்பதையும் சொல்லத்தான் வேண்டும். திரைக்கதைக்கான முதல் வரைவில் (first draft) இருந்திருக்கக் கூடிய முதல் பாதிக் காட்சிகளைக் காட்டியிலும் பின்பு சேர்த்திருக்க வாய்ப்புள்ள இரண்டாம் பாதி காட்சிகள் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது போலத் தோன்றியன.
இன்றைய இணைய உலகில், ஒரு படம் வருவதற்கு முன்பே, படத்தின் தொழில்நுட்பம், கதையின் அவுட்லைன் மற்றும் படத்தில் பணிபுரிபவர்களின் மனவோட்டம் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு பார்வையாளனுக்கு இருக்கின்றன. வெற்றிமாறன் போன்ற நுண்கலைஞனின் படம் எனும் போது, படம் குறித்த தேடல் இன்னும் விரிவடையவே செய்யும். அப்படி ஏற்றிக்கொண்ட தகவல்கள், படத்தைப் பார்க்கும் போது குறுக்கிடுவதை தவிர்க்க முடிவதில்லை. அசுரன் வெளி வருவதற்கு முன்பான பேட்டி ஒன்றில், இந்தப் படத்தில் தான், முதன்முறையாக இரண்டாம் குழுவை (second unit) வைத்து சில காட்சிகளை எடுத்திருப்பதாகவும், தான் மிகக் குறுகிய காலத்தில் எடுத்த படம் இது எனவும் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார்.
படத்தில் பெயர் போடும் போது, இரண்டாம் குழுவின் இயக்குநர், படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவராகிய மணிமாறன் என்று கண்ணில்பட்டது. படம் முடிகையில் மணிமாறன் பெயர் நினைவிலாட, இது இரண்டு இயக்குநர்கள் இயக்கிய படங்களின் கலவையோ என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அதோடு குறிப்பிட்ட காலத்தில் ஒரு படத்தை தயாரித்து முடித்து வெளியிடும் வழக்கம் கொண்ட தயாரிப்பாளர் தாணுவின் சிக்கன நடவடிக்கைகளால், நுணுக்கங்களுக்குள் (detailing) செல்லாமல், குறிப்பிட்ட கால அளவிற்குள் எடுக்க முடிந்த காட்சிகளை வைத்து, விடுபட்ட இடங்களை தூரக்காட்சி மற்றும் பின்னணி வசனங்கள் மூலமாகக் கதையை நகர்த்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்குமோ என்றும் தோன்றியது. அதும்போக, நடிகர்களின் வாயசைவிற்கும், பின்னணி குரலுக்கும் ஏகப்பட்ட வசன மாற்றங்கள்.
எப்போதும் தேர்வுகளில் 98சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவன், ஏதேதோ நெருக்கடியினால் முழுதாய்ப் படிக்க நேரமில்லாமல் 80சதவீத மதிப்பெண் எடுத்தது போல இருந்தது ‘அசுரன்’. 80சதவீதம் என்பதும் மிகச் சிறந்த மதிப்பெண் என்ற எண்ணத்திலேயே இதைப் பதிவு செய்கிறேன். யோசித்துப் பார்த்தால், தயாரிப்பின் கால அளவு நீட்டம், அதற்குண்டான செலவுகள், கச்சிதத்தை நோக்கி மீண்டும் மீண்டும் மெனக்கெடுதல் ஆகியவற்றால், படம் நன்றாக இருந்தும் அதிகமாகும் தயாரிப்புச் செலவுகளால், வணிக ரீதியாக வெற்றியடைய முடியாமல் போவதைக் காட்டிலும், குறுகிய காலத்தில் நல்ல கதைகளை சீக்கிரமாக படமெடுத்து ஒரு ஸ்பார்க் தெறிக்கவிட்டு வணிகரீதியாகவும் வெற்றிப் படமாக ஆக்குவதே இன்றைக்குத் தேவை என்று தோன்றுகிறது. இத்தகைய படங்களின் வணிக வெற்றி மட்டுமே, தொடர்ந்து இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வருவதற்கான உந்துசக்தி.
இந்த சிறு மனக்குறை கூட, வெற்றிமாறன் ஏற்கனவே நின்றிருக்கும் உயரம் காரணமாகவே. இதைத் தாண்டியும், ‘அசுரன்’ சிறந்த படம் தான். தனுஷ் இறுதிக் காட்சியில் சொல்லும், “படிப்பை மட்டும் தான் நம்மகிட்ட இருந்து புடுங்கிக்க முடியாது சிதம்பரம்” என்னும் வசனம் இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே கருதுகிறேன். சமூக அடுக்கில் கீழே உள்ளவன், படித்து வந்தாலும் அந்தப் படிப்பு பயனற்றுப் போகிறது எனும் போது, அந்த வசனம் காலாவதியான ஒன்று என்ற கருத்தை இணையத்தில் பார்த்தேன். பாதாளத்தில் கிடக்கிறவன் கல்வி என்ற ஒற்றைக் கொம்பைப் பிடித்துத் தான் மேலேறி வர வேண்டியிருக்கிறது. இதற்கு முன் கல்வியின் மூலம் மேலேறி வந்தவர்களுக்கு அதன் போதாமைகள் தெரியலாம். ஆனால் இன்னும் கீழே கிடப்பவனுக்கு அதுதான் ஒற்றை வழி எனும் போது, அது குறித்து அவநம்பிக்கைகளை விதைக்கலாகாது. எனவே அசுரன் சொல்லும் “படிச்சு அதிகாரத்திற்கு வா சிதம்பரம். வந்து உனக்கு செஞ்ச கொடுமைய நீ யாருக்கும் செய்ய நினைக்காதே!” என்னும் செய்தி இன்றைக்கும் முக்கியமானது தான்.



