Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Monday, October 27, 2014

மதுரை வலைப்பதிவர் விழா அனுபவங்கள்


மதுரையில் நேற்று நடந்த வலைப்பதிவர் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். காலை ஒன்பது மணிக்கு துவங்கிய விழா, மாலை நான்கரை மணி வரை சிறப்பாகவே நடந்தது. காலை நிகழ்வில், அனைத்து பதிவர்களும் மேடையேறி தங்களைப் பற்றியும், தங்களது வலைப்பூவைப் பற்றியும் அறிமுகம் செய்தனர். சுமார் இருநூறு பேர் அளவிற்கு இருந்த கூட்டத்தில் பத்து இருபது பேர்களைத் தவிர யாரையும் தெரியவில்லை. “என்னடா மதுரைக்கு வந்த சோதனை, பத்து வருசமா இந்த இணையத்துல தான் வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம்... ஒருத்தர் பேரும் கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே” என்று லேசாக பெருமூச்சு விட்டுக்கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, இவர்கள் எல்லாம் நாம் தமிழ்மணத்தில் இருந்து ”வாலண்டரி ரிடயர்மெண்ட்” வாங்கி வந்த பிறகு அட்மிஷன் போட்டு இப்பொழுது கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் என்று. 

கலகக்காரர்கள் எல்லாம் பதிவுலகை காலி செய்து விட்டு சென்று விட்டதாலோ அல்லது நம்ம ஊர் மதுரையின் வீரத்திற்கு மரியாதை செய்யும் விதமாகவோ தெரியவில்லை, நிகழ்வு மிக நேர்த்தியாகவும் அமைதியாகவும் நடந்தது. ஒரு சண்டையில்ல, சச்சரவில்லை... ஒட்டு மொத்த மதுரை மாநகரமே நேற்று “அமைதிப்பூங்கா”வாக மாறிவிட்டது. நிகழ்ச்சி எந்த அளவுக்கு அமைதியாக சென்றதென்றால் வேடிக்கை பார்க்கும் நாம் கொஞ்சம் சத்தமாக சிரித்தால் கூட, நிகழ்ச்சியை ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் நம் பக்கம் திரும்பி “என்ன தம்பி பிரச்சனை... நிகழ்ச்சியை கவனிங்க!” என்று அறிவுறுத்துவது போலத் தோன்றும் அளவுக்கு.

புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லும் பொழுது, ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக வெளிவரும் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பார்க்கையில் “இந்த புத்தகங்களை எல்லாம் எழுதுவது யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்க்ள், எப்படி இத்தனை புத்தகங்களை பிரசுரித்துக் கொண்டே இருக்கிறார்கள், இவர்களுக்கான வாசகப் பரப்பு எங்கிருக்கிறது” என்று பெரும் மலைப்பாக இருக்கும். நேற்றைய விழாவில் இந்த சந்தேகங்களுக்கான விடை கிடைத்தது. வலைப்பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்யும் போது, சிலர் இருபது முப்பது புத்தகங்கள் வரை வெளியிட்டு தமிழுக்குத் தொண்டாற்றுவதாகக் கூறினர். எனக்குக் கொஞ்சம் “கேராகி” விட்டது. சுதாரித்துக் கொண்டு ”ஜிகிர்தண்டா” குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்

மதிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள். சும்மா சொல்லிக்கூடாது... சப்ஜெக்ட் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் சாலிடாக ஒரு மணி நேரம் பேசினார். வாட்ஸப்பில் பிட்டுப் படம் அனுப்புபவர்களும் வலைப்பதிவர்களும் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டு விட்டார் போல, பார்வையாளர்களுக்கு சில பல அறிவுரைகளை அள்ளித் தெளித்துவிட்டுச் சென்றார்.

பின்பு வலைப்பதிவர்கள் இயக்கி, நடித்த “சில நொடி ஸ்நேகம்” என்ற குறும்படம் வெளியிடலும், திரையிடலும் நடந்தது. அதன் பின், வலைப்பதிவர்கள் எழுதிய நான்கு புத்தகங்களும் வெளியிடப்பட்டது. 

நண்பர்கள், தங்களது வீட்டுத் திருமண விழாவினைப் போல இந்த வலைப்பதிவர் திருவிழாவை அக்கறையோடும் பொறுப்புடனும் நடத்தினர். தமிழ்வாசி பிரகாஷ், சீனா ஐயா உள்ளிட்ட விழாக்குழுவினருக்கு வாழ்த்துகள். இணையத்தின் வழி நிகழ்ச்சி நேரலையிலும் ஒளிபரப்பட்டது. நிகழ்ச்சியின் அரங்க அமைப்பும், அலங்காரமும் மிக நேர்த்தியாக இருந்தது. ”போடியம்” முதல் “ப்ரஜக்டெர் வைக்கும் ஸ்டூல்” வரை அனைத்து ஏற்பாடுகளிலும் இருந்த ப்ரஃபஸனிலிஸம் தனித்தன்மையாகத் தெரிந்தது.  சிறப்பாக அரங்க அமைப்பு செய்த நண்பர் சுப்புரமணி மற்றும் அவரது குழுவினரின் பணி பாராட்டத்தக்கது. அனைவருக்கும் காலையில் மதுரை ஸ்பெஷல் “ஜிகிர்தண்டா”வும், மதிய உணவாக மதுரை மண்ணின் சௌராஸ்ர மணத்திலான நிறைவான உணவும், மாலையில் சூடான டீயும், வடையும் வழங்கப்பட்டது. ”வடை’ கிடைத்த மகிழ்ச்சியில் விடைபெற்று வந்தேன். விழாவை சிறப்பாக நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

*******

Monday, February 24, 2014

பெண்களின் உலகம்


ஆண்களும், பெண்களும் ஒரே உலகத்தில் தான் இருக்கிறார்க்ள். ஆனால் அவர்கள் இருவரின் உலகமும் வெவ்வேறாகவே இருக்கிறது. ஒரு ஆண், 89 என்பதை மிகச்சுலபமாக 90 என்று கற்பிதம் செய்து கொள்கிறான், ஆனால் பெண்ணோ தசம பின்ன கணக்கில் வாழ்பவள். அவளுக்கு எப்பொழுதும் 89.85258 என்பது போலத் தான் நினைவில் வைத்துக் கொள்ளத் தோன்றும். நிதர்சனம் என்னவென்றால் பெண் இவ்வாறு சிந்திக்கிறாள் என்பதே ஆணுக்குத் தெரிவதில்லை. அது தான் பிரச்சனை. நம் இந்திய சமூகத்தில், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் ஏதேனுமொரு விவாதத்தில் கணவன் தன் சார்பாக பேசாமல் மௌனமாக இருந்தான் என்ற ஒரு நிகழ்வு, பெண்ணின் மனதில் ஒரு தழும்பாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியதாக மாறி விடுகிறது. ஆணுக்கோ அப்படி ஒரு விவாதம் நடந்தது என்பதே வெகு விரைவில் நினைவில் இருந்து அழிந்து விடும். எந்தவொரு விஷயத்தையும் ஆணால் எளிதில் பொதுமைப் படுத்திவிட முடிகிறது. ஆணால் பெண்ணுக்கு அந்த விஷயத்தின் நுண்ணிய துளைகளை ஆராய்வது தான் இயல்பாக இருக்கிறது.

மலைகள் பதிப்பகம், ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் நான்கு சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை “யானை காணாமலாகிறது”  என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளது. அதிலுள்ள ஒரு கதை “தூக்கம்”. ச.ஆறுமுகம் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு நடுத்தரவர்க்கத்துப் பெண். எல்லோராலும் விரும்பப்படுகின்ற, அதிர்ந்து பேசாத, பெரிய அளவில் குறைகள் தென்படாத ஒரு “மாதிரி” கணவன், பள்ளிக்குச் செல்லும், தொந்தரவுகள் தராத ஒரே மகன் என்று சிறு குடும்பம். எந்தவித சச்சரவும் இல்லாத அமைதியான வாழ்க்கை. வேலைக்குச் செல்லாத இல்லத்தரசியாக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு, இந்த சீரான சுழற்சி முறை வாழ்க்கை சலிப்படையத் தொடங்குகிறது. ஓர் இரவு தூக்கத்தில் கொடூரமான கனவொன்றினால் நிலைகுலைந்து எழும் அவளால் அதன் பின் தூங்க முடியவில்லை. அந்த சம்பவத்திற்குப் பிறகு தூக்கம் என்பதே வருவதில்லை. தினமும் பகலில் அன்றாட வீட்டு வேலைகளை செய்து, இயல்பாக இருப்பவள் இரவானால் தூங்க முடியாமல் அவதியுறுகிறாள். ஆனால் மறுநாள் காலை எந்த வித அசதியோ உடற்சோர்வோ இன்றி எப்பொழுதும் போலவே இருக்கிறாள். 

ஒரு கட்டத்தில் தூக்கமின்மைக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாமல், இரவை முழுமையாக தனக்கான பிரத்யேக நேரமாக மாற்றிக் கொண்டு, தனக்குப் பிடித்தமான விஷயங்களை செய்யத் துவங்குகிறாள். அவளுக்கு சிறுவயதில், சாக்லேட் திண்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் பல் மருத்துவரான அவளது கணவனை மணந்த பின், சாக்லேட் தின்பதை விட்டு விட்டிருப்பாள். இரவு விழிக்கும் பழக்கம் வந்தவுடன், அவளுக்கு சிறு வயது நினைவுகள் எல்லாம் துளிர் விடத் துவங்குகிறது. இரவு முழுவதும் தனக்குப் பிடித்தமான நாவலை வாசித்தபடியே அவ்வப்பொழுது சாக்லேட்டை சுவைத்து உண்கிறாள். தூக்கத்தில் எந்தவொரு சூழ்நிலையிலும் முழிப்புத்தட்டாத கணவனின் இயல்பு, அவளுக்கு வசதியாய் இருக்கவே, தனது சிறிய காரை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள துறைமுகத்திற்குச் சென்று வேடிக்கை பார்ப்பதையும் வழக்கமாக்கிக் கொள்கிறாள். தனது இந்த இயல்பு மீறிய இந்த செயலைத் தன் கணவனால் கண்டுபிடிக்க முடியவில்லை என அறியும் போது மனப்புழுக்கம் கொள்கிறாள். அதன் பிறகு, தூக்கத்தில் உறங்கும் கணவனின் முகத்தைப் பார்க்கும் போது, அவளுக்கு அது கொடூரமான ஒன்றாகத் தோன்றுகிறது. தன் மகன் தூங்குவதைப் பார்க்கும் போதும், அவ்வாறே தோன்ற சிறிது பதட்டமாகிறாள். பின் மகனின் முகத்தில் தன் கணவனின் சாயல் இருப்பதால் தான் தனக்கு அவ்வாறு தோன்றுகிறது என்று நினைக்க, கணவன் மேலுள்ள வெறுப்பு இன்னும் அதிகமாகிறது. பகல் பொழுதில் தன் சுயத்தில் இருந்து விலகி அன்றாட வேலைகளை ஒரு இயந்திரம் போல செய்வதையும், அவள் அவ்வாறு மாறியிருப்பதை ஒருவரும் உணராமல் அவரவர் வேலையை செய்து கொண்டிருப்பதை நினைத்து மிகுந்த சலனம் அடைகிறாள். ஒரு நிலையில் தான் தன் உடலில் இருந்து வெளியேறி தூரத்திலிருந்து அந்த உடலின் அன்றாட சலிப்புமிக்க செயல்களை கவனிப்பதைப் போன்ற மாயவுணர்வினைப் பெறுகிறாள். அப்பொழுது முறைமைப்படுத்தப்பட்ட ஒரு இயந்திரம் போல, வெளியிலிருந்து செலுத்தும் விசைக்கேற்ப தன் உடல் செயல்படுவதாகவும், தன் ஆன்மா அழிந்து கொண்டிருப்பதாகவும் நம்புகிறாள். ஒரு நாள், பிரியமான தனது சின்ன காரினுள்ளே அவளது உடல் அமர்ந்திருக்க, வெளியிலிருந்து இரண்டு ஆண்கள் அந்தக்காரை அழுத்திக் குறுக்க, அவள் மூச்சு முட்டி நெரிபடுதை அருகில் இருந்து பார்க்கிறாள். அத்துடன் அந்த சிறுகதை முடிகிறது.

மனவொற்றுமை இல்லாமல், சண்டை சச்சரவுகளுடன் இருக்கும் மணவாழ்வில் தான் ஒரு பெண் துன்பமடைகிறாள் என்பதே பொதுப்பார்வை. ஆனால் பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லாத பொழுதும், கணவனது பிரத்யேக கவனிப்பு தன் மீது இருக்க வேண்டும், தனது சிறுசிறு அசைவுகளுக்கும், நுண்ணுணர்வுகளுக்கும் அவன் செவி சாய்க்க வேண்டும் என்பதே ஒரு பெண்னின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த உணர்வானது, இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், வாழ்வுமுறை என்பதை எல்லாம் தாண்டி எல்லா பெண்களுக்குள்ளும் மையப்புள்ளியாக இருக்கிறது என்பதை எங்கோ கிழக்காசியாவில் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டு, பின்னர் ஆங்கிலத்தின் வழி தமிழுக்கு வந்திருக்கும் இந்த சிறுகதை மூலம் உணர முடிகிறது. அதே சமயம், எல்லா நாடுகளில் உள்ள ஆண்களும் கூட ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஒரு ஆணைப் பொருத்தவரை, மனைவிக்குத் தேவையான அல்லது அல்லது தேவையில்லை என்று அவனுக்குத் தோன்றினாலும் அவள் வேண்டுமென்று கேட்பதற்காக வாங்கிக் கொடுப்பது என்பதே பெருங்கருணையுடனும், காதலுடனும் செய்யும் பரிவு மிக்க சாதனை. ஆனால் பெண்ணைப் பொருத்தவரை, அந்தப் பொருளைப் பெற்றுக் கொண்டாலும் கூட, தன் குறிப்பறிந்து செயலாற்றாமல் தான் வாய்திறந்து கேட்பது வரை காக்க வைக்கிறான் என்ற பெருங்கவலையும் கோபமும் உள்ளூர இருந்து கொண்டே இருக்கிறது. இதே மனநிலை இருவருக்கும் நீடிக்கும் போது, மனவாழ்வில் கண்ணுத்தெரியாத விரிசல் விழுந்து, அது வாழ்நாள் முழுமைக்கும் நிரந்தரமாய் தங்கிவிடுகிறது.

இந்தக் கட்டுரை, 23/02/2014 அன்று மதுரையில் நடந்த மலைகள் பதிப்பக நூல்கள் திறனாய்வுக் கூட்டத்தில் ஹாருகி முரகாமியின் “தூக்கம்” சிறுகதையை முன்வைத்து பேசுவதற்காக தயார் செய்திருந்த உரை. வேறு ஒரு நிகழ்விற்கு அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், கூட்டத்திலிருந்து பாதியிலேயே செல்லும்படியாகிவிட்டது. ஆதலால் அங்கே இதனைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதெனாலென்ன, அங்கிருந்த நண்பர்களோடு சேர்த்து, இணைய நண்பர்கள் அனைவரிடமும் பகிர்கிறேன். வாசித்து விட்டு தங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

சொல்ல மறந்து விட்டேன், “யானை காணாமலாகிறது” என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் நான் மொழிபெயர்த்த “மனிதனைத் தின்னும் பூனைகள்” சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. 

******

Wednesday, March 24, 2010

மணற்கேணி போட்டி - வாழ்த்துக்கள் நண்பர்களே !



சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் இணைந்து நடத்திய கருத்தாய்வு போட்டியில் அரசியல்/சமூகம் பிரிவில் நமது தருமி ஐயா வெற்றி பெற்றுள்ளார். அவரது கட்டுரை   சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் 


 இலக்கியப் பிரிவில், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் திரு.பிரபாகர் வெற்றி பெற்றுள்ளார்.  அவரது படைப்பு தமிழர் இசை

அறிவியல் பிரிவில் திரு. இரா.இரஞ்சித் அவர்களின் படைப்பு நவீனகால நுண்ணோக்கிகள் மற்றும்,
நமது டாக்டர்.தேவன்மாயம் அவர்களின் கட்டுரை ஏமக்குறைநோய்(A I D S) வெற்றி பெற்றுள்ளன. 

போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். சிறப்பாக நடத்தியிருக்கும் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். 

வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மதுரைக் காரர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.


Wednesday, February 24, 2010

நெப்ட்யூன் தேசத்து நேசமித்ரன்.



தெளிவான நீரோடை போல சீராக பயணிக்கும் கவிதை மொழி. வாசிக்கும் போது நதிக்கரையோரம் மென் தென்றல் காற்று முகத்தில் வீச, மெல்லிய புன்னகை முகத்தில் பரவ நடைபயிலும் அனுபவம். இது ஒரு புறம். இன்னொரு புறம், சிற்சிறு குன்றுகளாக மேலேறி, மலை உச்சி அடைந்து நுரையீரல் ஆழம் வரை பரவ மூச்சிழுத்து விட்டு, மேலிருந்து கீழே பார்த்து பரவசமடையும் மலையேற்றம்.  கவிஞர் நேசமித்ரனின் கவிதைகள் இரண்டாம் வகை.  கடந்த ஞாயிறு (21/02/2010) மாலை, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் சந்தித்தோம்.  கவிதைகள் பற்றி அவரது பார்வை, என் நினைவிலிருந்து...

இன்று கவிதை என்று எழுதுபவர்கள் பெரும்பாலும் செய்தல் "போலச்செய்தல்". நதியின் வழியெங்கும் கூடவே பயணித்து வருகிறது கூழாங்கல். தனக்குள் நதியின் ஆயுளை ரேகையாக ஒளித்து வைத்திருக்கிறது. மொழி வளத்திற்காக ஒரு கவிஞன் தன் வாய்க்குள் கூழாங்கல்லை வைத்து சுவைத்து சுழற்றுகிறான். கூழாங்கல் நதியின் குளுமையை வார்த்தை வழி கடத்துகிறது. கூழாங்கல் போலவே வழவழப்பாகவும், ரேகையுடனும் தான் இருக்கிறது கோலிக்குண்டு. கூழாங்கல் கிடைக்கப் பெறாதவர்கள் கோலிக்குண்டுகளை வாயினுள் சுழற்றி மொழி விளையாட்டு நடத்த முயற்சிக்கும் போது வார்த்தை மேலும் சிதிலமடையத்தான் செய்யும். மாறாக சில நதிக்கரைப் பயணங்கள் கூழாங்கல்லை கண்டடைய வழிவகுக்கும். இந்த பயணம் என்பது தொடர்ந்த பலதரப்பட்ட வாசிப்பு தான். 

வாசிப்பு என்றால் எல்லாம் வாசிப்பாகுமா ? இலட்சிய வாசிப்பும் இருக்கிறது, இலக்கில்லா வாசிப்பும் இருக்கிறது.  வார்த்தை பிரயோகம் உணர்ந்து, இடம் பொருள் 'ஆ'வல் உணர்ந்து, இன்ன தேவைக்காக வாசிக்கிறோம் என்றுணர்ந்து இலக்கடைவதை இலட்சிய வாசிப்பாகக் கொள்ளலாம். தொடர்ந்த இலட்சிய வாசிப்பு புதிய புதிய வார்த்தைகளைக் கண்டடைய உதவும். இவ்வாறான சில வார்த்தைகளே சூழ் கொண்டு, கரு வளர்ந்து கவிதையைப் பெற்றெடுத்து விடும்.

பெற்றெடுக்கும் வரை தான் கவிதைக்கான முன் பேறுகால பக்குவம் எல்லாம். மொழியை வளைத்து, வளர்த்து ஒரு வார்த்தை நீளாமலும், இடை நிறுத்தாமலும் பத்தியம் பார்த்து வைத்தியம் பார்ப்பதெல்லாம் மகப்பேறு வரை தான். கவிதை பிரசவித்த பின் பெற்றவன் இறந்து விடுவான். அது தான் நல்ல கவிதைக்கான அடையாளம். 

ஒரே ஒரு வார்த்தை ஒரு கவிதைக்கான அடையாளத்தையே மாற்ற முடியும். நம்மில் பலர் ஸ்ரீ எழுதிய "மாமாவின் கவிதை"யை வாசித்திருப்போம். இதில் ஒரே ஒரு வார்த்தையை சேர்க்கும் போது கவிதையின் முகமே மாறி வேறொரு தளத்துக்கு உயர்ந்து விடுகிறது.

"பொதுக் கழிப்பிடங்களின் சுவர்களில்
பேருந்துப் பயண இடை நிறுத்தங்களின்
சாலையோர நீர்க் கழிப்புகளில்
திரையரங்கு இடைவேளைகளில்
என எங்கேயும் பக்கம் பார்த்து
ஒப்பீடு செய்து கொள்கிறேன் .
...................................................
எப்போது பார்ப்பினும்
தவிர்க்க முடியவில்லை,
இன்னும் சற்றே பெரியதாய்
அமைந்திருக்கலாமென்ற நினைப்பை...."

என் பெயர்

இந்த கவிதையில் சேர்க்கப்பட்ட ஒரே வார்த்தை "சுவர்களில்", இறுதியில் நமது நினைப்பை சுக்குநூறாக உடைக்கும் 'குறி'யீட்டுச் சொல் "பெயர்".

பல தரப்பட்ட நினைவுகளைக் கலைத்துப் போட்டு, நடுவில் இணைக்கும் "நார்" போன்று ஒரு வார்த்தையை வைத்து விளையாடும் கவிதை விளையாட்டு நுட்பமானது. வாசிப்பவனே நார் தேடி எடுத்து, உதிர்ந்து கிடக்கும் வார்த்தைகளைக் கோர்த்து சரம் தொடுத்து பூப்பந்து செய்து மணம் நுகர்ந்து கொள்ள வேண்டியது தான். இணைக்கும் நார் தென்படவில்லையென்றாலும் ஒன்றும் மோசமில்லை, உதிரிப் பூக்களுக்கும் அதே மணம் தானே.

இனிதே மணந்தது அந்த ஞாயிறு மாலை. நன்றி நேசமித்ரன்.

Saturday, January 30, 2010

இனிதே நடந்தது பதிவர் பயிலரங்கம்.


மதுரை அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹாலில் கடந்த வெள்ளியன்று (29/01/2010) மாணவர்களுக்கான பதிவர் பயிலரங்கு சிறப்பாக நடந்தது.
பதிவரும், அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான தருமி ஐயா தலைமையில் நடபெற்ற பயிலரங்கில் பதிவுலக நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்வின் சில துளிகள், நினைவிலிருந்து.

தலைமையாசிரியர் ஜெரி ஈசானந்தா,  ஈழத்திற்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் பற்றி நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வு தான், தான் பதிவு எழுத முக்கிய காரணமாக இருந்ததையும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். தனது கல்லூரி பருவத்தில் இருந்த வாசிக்கும் ஆர்வம், இப்போது வலைப்பதிவுகள் படிப்பது மூலம், வெகுவாக அதிகரித்திருப்பதாக சொன்னார். மாணவர்கள் பொதுநல நோக்கோடு சமுதாயத்தை அணுக பதிவுகள் முதற்படியாக அமையலாம் என்றார்.
அவர் குறிப்பிட்ட தடுப்புமுகாம் கவிதைகளிலிருந்து சில வரிகள்...

புதைகுழி மறந்த 
சதைபிண்டங்களிநூடே 
ஊர்ந்து ...நெளியுது 
மானுடம்.

வலைச்சரம் சீனா ஐயா குழுப்பதிவுகள் பற்றிக் கூறினார். ஒத்த கருத்துடைய நண்பர்கள் பொதுவான தளத்தில் புகுந்து விளையாட முடியும் என்றும், உதாரணமாக, வருத்தபடாத வாலிபர் சங்கம், பயமறியா பாவைகள் சங்கம், வலைச்சரம், பேரண்ட்ஸ் க்ளப் இன்னும் பல குழுப்பதிவுகள் பற்றியும், அவற்றை உருவாக்குவது பற்றியும், நண்பர்களை உறுப்பினர்களாக இணைப்பது பற்றியும் சில தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கினார். 

ஐயா பதிவுலகை கலக்கும் "எதிர் கவிதைகள்" பற்றி சொல்லிக் கொண்டிருக்க, கணினியை இயக்கிக் கொண்டிருந்த கார்த்திகைப் பாண்டியன், ஒரு கவிதையையும், அதற்கான எதிர்கவிதையையும் திரையில் காட்ட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சீனா ஐயாவை இரு கவிதைகளையும் மைக்கில் வாசிக்குமாறு பணிக்க, அவர் கவிதைகளை வாசிக்க, ஐயோ கவிதையா, கலவரம் எதும் வெடிக்கப் போகுதோ என் நான் நினைக்கும் போதே.... நல்ல வேளை, மாணவர்கள் சிரித்துக் கொண்டே கவுஜைகளை கடந்து விட்டனர்.


நண்பர் ஸ்ரீ புதிதாக வலைப்பதிவு ஆரம்பிப்பது எப்படி என செயல்முறை விளக்கங்களுடன் செய்து காட்டினார். ஜிமெயில் ஐ.டி. உருவாக்குவதிலிருந்து, ப்ளாகருக்குள் நுழைவது, கெஜ்செட் சேர்ப்பது, இன்னும் பல தொழில்நுட்ப விஷயங்களை எளிமையாக விளக்கினார். மாணவர்கள் கவனித்தார்களா தெரியவில்லை, கலந்து கொண்ட ஆசிரியர்கள் எல்லாம் ரொம்ப ஆர்வமா குறிப்பு எடுத்துட்டு இருந்தாங்க. அமெரிக்கன் கல்லூரி, விஷ்வல் கம்யூனிகேசன்(தமிழில் என்ன?) துறைக்காக http://viscom-ac.blogspot.com/ என்ற வலைப்பூவும் துவங்கப்பட்டது. 


நண்பர் கார்த்திகைப் பாண்டியன் நிகழ்ச்சி முழுமைக்கும் தேவையான, பொருத்தமான ஸ்லைடுகளை கணினியில் இயக்கினார். மேலும் பதிவுலகில் இலக்கியம், நட்பு (தனிதனியா தான், ரெண்டும் சேராதுன்னு பெரியவங்க சொல்லிக்கிறாங்க) பற்றி பேசினார். இலக்கிய மும்மூர்த்திகள் (என்று யாரோ மூன்று பேர் பெயர்கள் சொனார், எனக்கு மனதில் பதியவில்லை) பதிவுலகில் சுறுசுறுப்பாக எழுதுவதாக பேசினார். பதிவுலகில் நீங்கள் காட்டும் உழைப்பு (அதாவது, எழுதுவதில் காட்டும் உழைப்பு) உங்களுக்கு நன்மதிப்பையும், நல்லவேலையும் கூட பெற்றுத்தரும் என்றும் சொன்னார்.  எழுத்து என்பதையும் தாண்டி பதிவுலகம் மூலம் நடைபெறும் ஆக்கப்பூர்வமான  நிகழ்வுகள் பற்றி அருமையாக பேசினார். 

வெறும் ஒத்த கருத்துடைய நன்பர்களுக்குள் நடக்கும் அரட்டை மட்டுமல்ல, இந்த நட்பு மூலமாக சமுதாயத்தில் ஒரு சிறு மாற்றமாவது கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சொல்லித் தெரிய வைக்க முடியாது, உள்ளிருந்து தான் வர வேண்டுமென்றாலும் ஏற்கனவே ஆர்வமுள்ளவர்களுக்கு கார்த்தியின் பேச்சு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கும். முக்கியமாக ஒரு வாத்தியார்த்தனம் இல்லாமல், நண்பர்களிடம் பேசுவது போலவே இயல்பாகவே பேசினார்.


நான், என்னென்ன வகையில் பதிவுகள் இருக்கின்றன் என்றும், என்னென்ன வகையிலும் பதிவுகள் இருக்கலாம் என்றும், பதிவில் என்னென்ன செய்யலாம் என்றும், பதிவில் என்னென்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், யாராரெல்லாம் பதிவு எழுதுகிறார்கள் என்றும், யாரார் வேண்டுமானாலும் பதிவு எழுதலாம் என்றும் எளிமையாக (????) சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தருமி ஐயா பதிவுலகம் பற்றி விரிவான விளக்கமும், துவக்கவுரையும் (பவர் பாயிண்ட் ப்ரசண்டேசன் வயிலாக) தந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தாமதமாக வந்ததால், நான் அவரின் உரையைத் தவற விட்டு விட்டேன். 

இறுதியாக, காட்சி ஊடகத்துறையின் தலைவர், பேரசிரியர் ப்ரபாகர் பேசும் போது, பதிவுலகம் மிகச்சிறந்த மாற்று ஊடகமாக இருக்கும் என்றும், வந்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். 


மொத்தத்தில் நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது. இன்னும் நேரம் கிடைத்திருந்தால், நண்பர்கள் வலைப்பூக்களை திறந்து வைத்து, மாண்வர்களிடம் ஒரு திறனாய்வு நடத்தியிருக்கலாம், மாணவர்களும் (ஊடகத்துறை சார்ந்தவர்கள் என்பதாலோ, இல்லை ரொம்ப பீட்டர் இல்லாமல் நிகழ்ச்சி எளிமையாக சென்றதாலோ) மிகவும் ஆர்வமாகவே கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பங்கெடுக்க வாய்ப்பளித்த தருமி ஐயாவிற்கு நன்றிகள். 

நண்பர்களின் இடுகைகள்:


******

Monday, January 25, 2010

இளம் பெற்றோர்களுக்கான கருத்தரங்கு - மதுரையில்.




நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.


வருகிற 31.01.2010  (ஞாயிறு ) அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்கிறோம்.


நிகழ்ச்சி:    குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கு
தலைமை: மருத்துவர் .ஷாலினி MBBS, DPM, Ph D, FIPS
நேரம் :        மாலை 3 மணி முதல் 6 மணி வரை.


நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புக்கு:
கார்த்திகேயப் பாண்டியன்-9842171138
தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993

பிற்சேர்க்கை:
***

Tuesday, May 26, 2009

மதுரை பதிவர் சந்திப்பு - 24.05.2009


நண்பர் கார்த்திகைப்பாண்டியன், தருமி ஐயா அவர்களின் ஏற்பாட்டில், கடந்த ஞாயிறன்று ரொம்ப சிறப்பா நடந்தது, மதுரை பதிவர் சந்திப்பு.


சாலிசம்பர் அண்ணனை ஏற்கனவே தெரியுமாதலால், சகசமாக ("" போடக்கூடாதுல்ல) பேசினார், ஆனால் பொதுவாக அமைதி தான் ... (ஆனா, அவுங்க கட்சி பற்றிய கேள்விக்கு மட்டும், பட்டாசு .....) 


பதிவில் ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடுகளை சரி செய்வது பற்றி இளையகவி நன்றாக விளக்கினார். (நண்பர்களை விட்டுக் கொடுக்காமல், ஆனால் நயமாக பேசினார்


தனது பதிவுப்பெயருக்கான விளக்கத்தை "chill-peer" கூறியது ரொம்ப குளுமையாக இருந்தது. ( இனிப்பு, காரம் ஸ்பான்சர் நண்பர் தான்


ரொம்ப சாதாரனமாக, ஆனால் விளக்கமான விடை தேவைப்படக்கூடிய கேள்விகளை அசால்ட்டாக கேட்டு கலகலப்பூட்டினார் வால்பையன். (இவருக்கு 19 வயசு தானாம்.) 


பெயருக்கேற்ற மாதிரி எல்லோரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார் டக்ளஸ்.  ( தம்பிக்கு நல்ல timing sense) 


அருண் அவர்கள் ரொம்ப formalities எல்லாம் பார்க்காமல் கலகலப்பாக பேசினார். (கடைசீல, உங்க பேனாவை இளைய கவி கொடுத்தாரா இல்லையா ? )


எல்லோருக்கும் ரொம்ப பாசக்காரத்தம்பி ஆகிவிட்டார் அன்பு... ( என்ன சொன்னாலும் நம்புறாருப்பா, ரொம்ம்ம்ப நல்லவர் :) )


தன்னுடைய கருத்துக்களில் இருந்து மாறாமல் நிலையாக பேசினார் ஸ்ரீதர் ( பூ னும் சொல்லலாம், புய்பம் னும் சொல்லலாம், பாமரன் சொல்ற மாதிரியும் சொல்லலாம், விடுங்க சார் :) )


விவாதித்த விஷயங்களை ஊன்றி கவனித்து கருத்து சொன்னார் சூப்பர் சுப்ரா அவர்கள். ( T-Shirt சூப்பர் சுப்ரா சார்


ரொம்ப அமைதியாக, நிதானமாக பேசினார் தேனீ சுந்தர் அவர்கள். ( அமைதியான தேனீ )


தெளிவான நிர்வாகத்திறமையோடு, மக்கள் பேசுவதற்கு புதிய தலைப்புகளை ஆரம்பித்து வைத்தார் கார்த்திகைப்பாண்டியன். ( typical வாத்தியார் :) "இளைய தருமி" னு பெயர் வாங்கிட்டார். )


வந்திருந்த, வர நினைத்த, வராத எல்லாரும் முன்மாதிரியாய் சொன்னது தருமி ஐயாவைத் தான். (Bovonto வாங்கிட்டு வந்தீங்களா, தெரியல


அவசர வேலை காரணமாக சீக்கிரமே கிளம்பி விட்டதால் தேவன்மாயம் அவர்களையும், சீனா ஐயாவையும் சந்த்திக்க முடியவில்லை


தவிர, நன்பர்கள் முருகன், ராஜா, கார்த்திக் அவர்களும் கலந்து கொண்டனர்


அப்புறம், நான் பாலகுமர்,  சும்மா வேடிக்கை பார்க்கத் தான் சென்று இருந்தேன்.... ஆனால் நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லாமல் நண்பர்கள் அரட்டை அடிப்பது போல, ஒரு சுமூகமான சூழ்நிலை இருந்ததால் சகஜமாக பேச முடிந்தது


அரசுத்துறை, அதிகார வர்க்கம், வரி கட்டுதல், தொலைதொடர்பு,  மென்பொருள், .கலப்பை, தமிழ் எடிட்டர், பின்னூட்டம், மைனஸ் 40 டிகிரி,  zero டிகிரி, கொடைக்கானல், மதுரை, அமைச்சர், சமூகம், கேள்வி, பாமரன், கவுஜ, இன்னும் பல விஷயஙளை கலந்து கட்டி பேசினோம்... 


மொத்ததில் மனநிறைவு தந்த சந்திப்பு...   


நண்பர்களே, மீன்டும் விரைவில் சந்திப்போம்.


 நண்பர்களின் இடுகையையும் படியுங்கள்.


http://dharumi.blogspot.com/2009/05/313.html

http://anbu-openheart.blogspot.com/2009/05/24-05-2009.html

http://abidheva.blogspot.com/2009/05/blog-post_25.html