Friday, May 8, 2015

பந்தயக்குதிரை

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் நுழையும் போது மணி நான்கு. உடனே பேருந்து கிடைத்தால் எப்படியும் விடிவதற்குள் ஊருக்குப் போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டான். எதிர்பார்த்தது போல, பேருந்து நிலையத்தில் எந்தவித அசம்பாவிதத்திற்கான அறிகுறியும் இல்லை. தொலைக்காட்சி செய்தி சேனல்களின் அசுர வாய்க்கு எப்போதும் பெருந்தீனி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. சிறு சலசலப்பைக் கூட பூதாகரமாக்கி பிரளயம் போல் பிரகடனப்படுத்தி விடுகின்றனர். அதையொட்டிய வதந்திகளுக்கு கைகால் முளைத்து ஊரெங்கும் பரவி விடுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளின் எண்னிக்கையை குறைத்திருக்கிறார்களா இல்லை இந்த நேரத்து வழமையான கூட்டம் தானா என்று தெரியவில்லை. எல்லாப்பேருந்துகளும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. இந்த மனிதர்களுக்கு எங்கிருந்து தான் இந்த பதற்றம் தொற்றிக்கொள்ளுமோ தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் அவசரம். சிறு சலனங்கள் கூட இவர்களின் பதற்றத்தினாலேயே பிரளயமாய் வெடித்துக் கிளம்பி விடுகிறது.

திருநெல்வேலி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்ததும், அங்கே ஒரு பெருங்கூட்டமே பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தது. பேருந்து நிலையம் முழுக்க மனிதத் தலைகள் தாம். எல்லோருக்கும் ஏதோ பயண அட்டவணை இருக்கிறது. எந்தெந்த ஊருக்கோ தினமும் இலட்சக்கணக்கான மக்கள் சென்று கொண்டே தான் இருக்கிறார்கள். கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனதேயொழிய பேருந்து எதுவும் வந்தபாடில்லை.

அரைமணிநேரக் காத்திருப்பிற்குப் பிறகு கண்ணில்பட்ட பேருந்து அதன் இடத்தில் வந்து நிற்பதற்குள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சகலரும் முண்டியடித்து ஏதேதோ சாகசங்கள் செய்து தங்களுக்கான இருக்கைகளை தேர்ந்ததை வியப்புடன் பார்த்தபடி நின்றான். ம்கூம்… இது வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்தவனாய் தனியார் பேருந்து நிலையம் பக்கம் நிலைமை எவ்வாறு இருக்கிறது எனப்பார்க்க வெளியே வந்து பார்த்தால், தனியார் பேருந்துகளும் துக்கத்தில் பங்கு கொள்கிறார்கள் போல, ஒரு பேருந்து கூட இயங்கவில்லை. மறுபடியும் பேருந்து நிலைய முகப்பிற்கு வந்த போது வெளியே நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தை நோக்கி மக்கள் படையெடுத்துக் கொண்டிருந்தனர். பார்த்தால்… திருநெல்வேலி செல்லும் பேருந்து. வேகமாகச் சென்றால் தன்னாலும் இடம் பிடிக்கமுடியும் என்ற நம்பிக்கைக் கீற்று ஒளிர பேருந்தை நோக்கி ஓடினான். ஒருவழியாக மூன்று பேர் அமரும் இருக்கையின் ஜன்னலோரத்தைப் பிடித்து விட்டான். அப்பாடா…. இதற்கு முன் இப்படி ஓடி எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்ற நினைப்பு வர, மூச்சு முட்டியபடி மெல்லமாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். சற்று நேரத்திற்கு முன் தான், மக்களின் அவசரம் குறித்து சலித்துக்கொண்டதும், வாய்ப்பு வரும் போது தன்னிச்சையாய் தானும் அவ்வாறு தான் செய்தோம் என்ற நினைப்பும் கலவையாய் தோன்ற லேசாக பெருமூச்செறிந்து கொண்டான். கண் இமைக்கும் நேரத்திற்கெல்லாம், நிறைசூலியாய் உருமாற்றம் கொண்ட பேருந்து அடுத்த சில நிமிடங்களில் கிளம்பியது.

அலுவலகத்தின் வருடாந்திரக் கூட்டத்திற்காக தலைமையிடமான சென்னைக்கு, திருநெல்வேலியில் இருந்து நேற்று அவனோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர் வந்திருந்தார்கள். வழக்கமான பயண அட்டவணைப்படி இன்றும், நாளையும் மீட்டிங்கை முடித்து விட்டு நாளை இரவு ரயிலில் செல்வதாகத் தான் முன்பதிவு செய்திருந்தார்கள். வழக்கு ஒன்றில் முதல்வருக்கு எதிராக தீர்ப்பு வந்து அவர் கைதாகிவிட்டபடியால், பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதாகக் கூறி கூட்டத்தை இன்று மதியத்தோடு ரத்து செய்து விட்டார்கள். நாளை இரவு தான் முன்பதிவு செய்திருப்பதால் அவனுடன் வந்தவர்கள், சென்னையிலேயே தங்கியிருந்து விட்டு நாளை வருவதாகக் கூறிவிட்டனர். வேலை இல்லாத இடத்தில் வெறுமனே அமர்ந்திருக்க அவன் மனம் ஒப்பவில்லை. கூடடையும் நினைப்பு வந்துவிட்டால் போதும், பறவையின் நினைப்பு முழுவதும் கூட்டை நோக்கியே தான் இருக்கும். கிடைக்கும் பேருந்தைப் பிடித்து இன்றே தான் ஊர் செல்வதாகவும், மற்றவர்கள் மெதுவாக வரட்டும் எனக்கூறிக் கிளம்பி விட்டான். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தினமும் இலக்குகளின் பின் துரத்திக் கொண்டோடும் குதிரைப் பந்தயத்திலிருந்து இரண்டு நாள் எதிர்பாரா விடுப்பு கிடைத்திருக்கிறது என்று மனம் மகிழ்ந்திருக்கவே வேண்டும், ஆனாலும் அவனால் அங்கு இருப்புக் கொள்ள முடியவில்லை. அடுக்கடுக்கடுக்காய் பணிச்சுமை காத்திருக்கையில் இரண்டு நாள் வெட்டியாக அறையில் முடங்கிக் கிடக்க மனம் வரவில்லை. விரைவில் வீட்டுக்குச் சென்றால் அடுத்த வாரத்திற்கான தயாரிப்புப் பணிகளை செய்து வைக்கலாம் என்ற எண்ணம். பெரும்பான்மையான நேரத்தில் இப்படித் தான். வேலையை நினைத்துக் கொண்டு பொழுதுபோக்கிற்கும் மனம் செல்லாது. அதே நேரம் வேலை செய்யும் பாவனையில் மடியில் அலுவலக டைரியையோ, கணினியையோ வைத்துக் கொண்டு வேலை செய்யாமல் வெறுமனே அமர்ந்திருந்தாலும் அதிலொரு திருப்தி. மத்திமர் பிழைப்பு !

அரிதாகத்தான் அமைகின்றன இப்படியான முன்னேற்பாடில்லாத பயணங்கள். இந்தக் காத்திருப்பு, கூட்டம், நெரிசல், ஓட்டம், இருக்கை எல்லாம் ஒரு மனநிறைவைத் தந்து ஏதோ சாகசம் நிகழ்த்தியது போலவே தோன்றியது. உண்மையில், வேலைக்குச் செல்ல ஆரம்பித்து வாழ்வின் படிநிலையில் ஓரளவு ஸ்திரத்தன்மை பெற்ற இத்தனை ஆண்டுகளில் வழமையான அலுவலக நேரம், ஒரே மாதிரியான பணிச்சூழல், வசதி வாய்ப்புகள், ஒழுங்குமுறை, முன்பதிவு செய்த பயணம் என்று சிறைக்குள் அடைபட்டு அந்த வாழ்க்கைக்கே தன்னை ஒப்புக் கொடுத்தவனைப் போலவே புழுங்கிக் கொண்டிருந்தவனுக்கு இந்த நேர்கோட்டுத் தன்மையில் இருந்து விலகி இன்று ஒருநாளாவது எதிர்பாராமையை எதிர்கொண்டு வீடு வந்து சேரலாம் என்ற ஆர்வமே மகிழ்ச்சியைத் தந்தது. கடிகாரத்தை சுற்றிய தினசரி ஒட்டங்களின் செக்கு மாட்டுத் தனத்தில் இருந்து ஒரு நாள் விடுப்பு கிடைத்தது போல கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டான். ஆனாலும் மனதின் ஓரம் சிறு பரபரப்பும், தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறோமோ என்ற தயக்கமும் தொற்றிக் கொண்டே வந்தது. கிளம்பும் போதே கூடவந்தவர்கள், தங்கிவிட்டு மறுநாள் போகலாம் என வற்புறுத்தியும், எந்தப்பேருந்தும் ஓடாது என்று பயமுறுத்தியும் கூட அவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை.

ஒரு அறுநூற்றைம்பது கிலோமீட்டர் பயணத்தை எதிர்கொள்ள, அதுவும் மனைவி, குழந்தை, மூட்டை முடிச்சு எதுவுமின்றி தனியனாகச் செல்வது குறித்து இவ்வளவு யோசனை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தவனாய் முகத்திலடிக்கும் எதிர்க்காற்றின் குளுமையை அனுபவிக்கத் துவங்கினான். தான் கிளம்பிய தகவலை வீட்டிற்கு அழைத்து சொல்லி விடலாம் என்று அலைபேசியை எடுத்தான். முதல் நாள் இரவும் பயணத்தில் இருந்ததால் சார்ஜ் போடவில்லை. அலைபேசி முழுவதுமாக சார்ஜ் இறங்கி உயிரை விட்டிருந்தது. சரி, ஒன்றும் பிரச்சனை இல்லை, அதுவுமின்றி காலையில் விடிவதற்குள் சென்று விடலாம் என்ற நினைப்பில் அருகில் இருப்பவர்களிடம் அலைபேசியை இரவல் பெற்று பேசத் தோன்றவில்லை.

பேருந்து இடைப்பட்ட எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் நெடுஞ்சாலை வழியாகவே சென்று கொண்டிருந்தது. மதுரையில் நிறைய மக்கள் இறங்க வேண்டி இருந்ததால், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குப் பேருந்து வந்து நின்றது. வண்டியை விட்டு கீழே இறங்கியவன் உடம்பை முறுக்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அந்த நள்ளிரவின் குளிர்ந்த காற்றும், மிதமான சாரலும் இதமாக இருந்தது. இந்த மாதிரி நேரங்களில் தான் புகைப்பிடிக்க வேண்டும் என்ற ஆசை வரும். குழந்தைகளுக்காக கைவிட்டுவிட்ட ஒரு பழக்கத்தை மீண்டும் துவக்கக்கூடாதென்ற பிடிவாதம் அந்த ஆசையை தடுத்தது. ஆதலால், புகைப்பிடிப்பது போன்று விரல்களை பாவனை செய்து குளிர்ந்த காற்றை வாய்வழியாக நுரையீரல் வரை இழுத்து பின் மெதுவாக மூக்கின் வழியாகவும், வாய்வழியாகவும் வெளியேற்றினான். தொடந்து இது போன்று நான்கைந்து முறை செய்த போது புகை பிடித்தது போன்ற ஒரு திருப்தி கிடைத்தது.

அரை மணிநேரத்திற்கு மேலாகியும் பேருந்து நிலையத்தை விட்டு வண்டி கிளம்பாததால், பேருந்தில் இருந்த மக்கள் சலசலக்கத் துவங்கினர். நடத்துநரிடம் விசாரித்தால், வண்டியை மேற்கொண்டு ஓட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை என்றும் மதுரையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வண்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மீண்டும் எப்பொழுது பேருந்துகள் இயங்கும் என்ற தகவலும் கிடைக்கவில்லை. சிறிது நேரம் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த மக்கள், நேரம் செல்லச்செல்ல பேருந்து நிலையத்தில் அங்குமிங்கும் அலைமோதத் துவங்கினர். தங்கள் ஊர்களுக்குச் செல்ல வழியில்லாமல், மக்கள் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க, அந்த பேருந்து நிலையமே ஒரு பெரிய சிறைச்சாலை போன்றும் அங்குள்ள மக்கள் யாவரும் அந்தகர்கர்கள் போன்று துலாவித் திரிபவர்கள் போலவும் தோன்றியது. தனியொரு மனிதருக்குக் கிடைத்திருக்கும் சிறைவாசத்தை ஒட்டு மொத்தமாக ஒரு மாநிலம் முழுமையும் அனுபவிக்கிறது. அந்த அளவுக்கு மக்களின் இயக்கத்தை அவர்களால் ஸ்தம்பிக்க வைக்க முடிகிறது. வேறு வழியின்றி மக்கள் அனைவரும் பேருந்து நிலையத்திலுள்ளேயே கிடைத்த இடங்களில் சிறு சிறு குழுக்களாக உட்காரவும் படுக்கவும் துவங்கினர். இரண்டு முறை பேருந்து நிலையம் முழுவதும் சுற்றித் திரிந்தவன், வேறு வழியின்றி காற்று நன்றாக வீசும் ஒரு இடமாகப் பார்த்து தானும் அமர்ந்தான்.
இரவு உணவு உண்ணாததால் பசி வயிற்றைக் கிள்ளியது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடியிருந்தபடியால் எதையும் வாங்கவும் வழியில்லை. நேரம் செல்லச்செல்ல பசி அதிகமாகிக் கொண்டேயிருந்தது. நடுநிசியைத் தாண்டிய வேளையில் சிறைச்சாலை போலிருந்த பேருந்து நிலையம் சற்று பழகிய சத்திரம் போலக் காட்சியளிக்கத் துவங்கியது. மக்கள் அனைவரும் அங்கங்கே இருந்த இடத்திலேயே படுத்து உறங்கிவிட்டனர். பசியும் சோர்வும் சேர்ந்து கொள்ள, அமர்ந்த நிலையில் அரைத்தூக்கத்தில் இருந்தவனை யாரோ உலுக்கி எழுப்புவது போலத் தோன்றியது.

அலறியடித்து எழுந்தவன், சடையேறி சிக்குப் பிடித்த முடியுடனும், அழுக்கு அப்பிய நீண்ட தாடியுடனுடம், கிழிந்த ஆடையுடனும் ஒரு பிச்சைக்காரன் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டான். அவனைத் துரத்த நினைத்து குரலெழுப்பினால் தொண்டைக்குழியிலிருந்து எந்தவொரு சப்தமும் எழவில்லை. தனது தோளைத் தொட்டுக்கொண்டிருக்கும் பிச்சைக்காரனின் கையைத் தட்டி விட முயன்றாலும் முடியவில்லை. தன் மனது சொல்வதை உடல் கேட்காமல் இருப்பதை உணர்ந்து, தன்னை அவன் பிடிக்குள் இருந்து விடுவிக்க பெருமுயற்சி செய்தான். ஆனால் தான் செய்யும் முயற்சிகள் அனைத்துக்கும் எதிர்வினையாய் தனது உடல் அந்தப் பிச்சைக்காரனை தொழுது நிற்பது போலத் தோன்றியது. அந்தப் பிச்சைக்காரன் வாய்திறந்து எதுவும் கூறாமல், பேருந்து நிலையத்தை விட்டு மேற்கு நோக்கி நடந்து கொண்டிருந்தான். அவனுக்கோ தனது தோளில் மாட்டியிருந்த பயணப்பையை கீழே தூக்கியெறிந்து விட்டு அந்தப் பிச்சைக்காரனின் கந்தல் மூட்டையை தோளில் தூக்கிக் கொண்டு தானும் அவன் பின்னால் செல்ல வேண்டும் என்று யாரோ கட்டளை இடுவது போலத் தோன்றியது.

அடுத்த கணம் அவன் பிச்சைக்காரனைத் தொடரந்து நடந்து கொண்டிருந்தான். எவ்வளவு தூரம், எத்தனை காலம் என தெரியாமல் வேக வேகமாய் நடந்தவனுக்கு தாகமெடுத்து நா வறண்டு போகவே தன்னையறியாமல் தலை குணிந்தான். பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் தனது நிழல் ஒரு குதிரையின் நிழலை ஒத்து இருப்பதைக் கண்டான். தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பிச்சைக்காரனின் நிழல் ஒரு சமயத்தில் சிங்கத்தின் நிழலைப் போலவும், மறுசமயம் யானையின் நிழலைப் போலவும் தோற்றமளித்தது. தொடந்து நடந்து கொண்டிருக்கையில் யானையின் மீது பவனி செல்லும் சிங்கத்தின் பின் அணிவகுத்துச் செல்லும் குதிரையைப் போல் தன்னை உணர்ந்தான். நிலவை மேகம் முழுவதுமாய் மூடிய ஒரு பொழுதில் யானையில் இருந்து இறங்கிய பிச்சைக்காரன அவன் தூக்கிச் சுமக்கும் கந்தல் மூட்டையை தூர வீசி எறிந்து விட்டு தனதருகில் வருமாறு சைகை செய்தான். மந்திரத்திற்கு கட்டுப்பட்டவனைப் போல, பலம் கொண்ட மட்டும் கந்தல் மூட்டையைத் தூக்கி வீச, அதிலிருந்த கிழிசல் துணிகள் கட்டவிழுந்து கீழே விழுந்த இடமெல்லாம், அல்லிப்பூவாய் பூக்கத் துவங்கியது. அவன் பிச்சைக்காரன் அருகே சென்று பார்த்த பொழுது, கருத்து திரண்டு செழித்து வளர்ந்திருந்த யானை, தனது முன்னங்கால்களை நீட்டிய படி உட்கார்ந்திருக்க, அதன் அடி வயிற்றில் சாய்ந்தபடி சிங்கம் அமர்ந்திருக்க. அருகில் வந்தவன் தன்னையுமறியாமல் மண்டியிட்டு பசிக்கிறது என்பது போல் சைகை செய்ய, அவனைத் தோள் தொட்டு எழுப்பி, யானையின் மத்தகம் நோக்கி பார்த்தது சிங்கம். சமிக்ஞையை புரிந்து கொண்டவனாய், யானையின் முன்னங்கால்களை பற்றிய படி மேலேறி நீண்டு வளர்ந்திருந்த தந்தங்களைப் பிடித்து மத்தகத்தின் மீதேறி அதன் தலையில் பத்மாசனத்தில் அமர்ந்து, ஆழமாக மூச்சிழுத்தபடி காற்றைக் குடிக்கத் துவங்கினான். காற்று உட்புக உட்புக வயிறு என்ற ஒன்றே இல்லாமல் சுருங்கியது. மேலும் மேலும் காற்றை இழுத்து உள் நிறைக்க, தனது அங்கங்கள் ஒவ்வொன்றாய் மறைந்து, தானே ஒரு காற்றுப் பொட்டலமாய் மாறி மேகத்தை நோக்கி மேலே பறப்பது போல உணரத்துவங்கினான்.

சடாரென விழிப்பு வந்து பார்த்தால் அவனை இரண்டு பேர் சேர்ந்து தூக்கிக் கொண்டிருந்தனர். சுய நினைவுக்கு வந்து பதறியடித்து அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன், என்ன நடக்கிறது என்று வினவினான். அவனைத் தூக்கிக் கொண்டிருந்தவர்கள் திருநெல்வேலிக்கான விடிகாலை முதல் வண்டி கிளம்பத் தயாராக இருக்கிறதென்றும் அதன் பொருட்டு அவனை எழுப்பினால், அவன் அசையாமல் கிடந்ததாகவும், தண்ணீரைத் தெளித்துப் பார்த்தால் அதற்கும் மசியாததால் மயக்கத்தில் கிடக்கிறானோ என்று கவலை கொண்டு தூக்கியதாகவும் கூறினர். சற்று நேரம் குழப்பத்தில் இருந்தவன் ஒருவாறு தெளிந்து, தனக்கும் ஒன்றும் நேரவில்லையென்று கூறி அவர்களிடம் இருந்து விலகினான். அருகில் அப்போது தான் திறந்து கொண்டிருந்த கடையில் ஒரு போத்தல் நீர் வாங்கி தன் முகத்தில் அடித்துக் கொண்டான். சற்று தெளிச்சியடைந்தவனாய், தூரத்தில் கிளம்பத்தயாராய் இருந்த திருநெல்வேலி பேருந்தை நோக்கி விரைந்தான். சற்று தூரம் சென்றவன், திரும்ப வந்து கீழே கிடந்த தனது பயணப்பையை தோளில் மாட்டிக் கொண்டு மீண்டும் பேருந்தை நோக்கி ஓடினான்.

பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையைப் பிடித்து அமர்ந்தான். வண்டி கிளம்பி, பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது. புலரும் காலைப் பொழுதின் குளிர்காற்று முகத்தில் சில்லென வீச இடப்பக்கம் திரும்பி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவனுக்கு, கருத்து செழித்து வளர்ந்த யானையொன்று முன்னங்கால்களை நீட்டியவாறு தூரத்தில் அமர்ந்திருப்பது போலத் தெரிந்தது. கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டே இருந்தவனின் பார்வையிலிருந்து யானைமலை மெல்ல மெல்ல மறைய, பேருந்து பாண்டிகோவில் சுற்றுச்சாலையைத் தாண்டி திருநெல்வேலி நோக்கிப் பயணபட்டது.

//சொல்வனம் இணைய இதழில் வெளியான எனது சிறுகதை. நன்றி சொல்வனம்: http://solvanam.com/?p=39499//
******

3 comments: