Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Sunday, July 17, 2016

நான் ஏன் தலித்தும் அல்ல - நூல் அறிமுக விழா


மதுரை, நார்த் கேட் ஹோட்டலில் கடந்த வெள்ளியன்று டி.தருமராஜ் அவர்கள் எழுதிய “நான் ஏன் தலித்தும் அல்ல” என்ற கட்டுரை நூலுக்கான அறிமுக விழா நடந்தது. ஏதேச்சையின் பயணியாக(!) அரங்கிற்குள் நுழைந்தேன். மாணவர்கள், படைப்பாளிகள், பெண்கள் என்று அரங்கு நிறைந்த கூட்டம். ஸ்டாலின் ராஜாங்கம் பேசிக்கொண்டிருந்தார். பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற சொல்லாடல் உருவான விதம், வரலாற்றின் ஊடாக ஆதிக்குடிகளின் இருப்பு குறித்து விளக்கமளித்தார். அடுத்ததாக பேசிய பவனந்தி அவர்கள், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பிற்காகத் தங்கியிருந்த பொழுது தனக்கும் தருமராஜ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதங்கள் பற்றியும், தாங்கள் கொண்டிருந்த கொள்கை கோட்பாடுகள் பற்றியும் கூறினார். இந்த புத்தகத்தில் தான் பொதுவில் விவாதிக்கத் தயங்கும்படியான சில விஷயங்கள் இருப்பதாகவும், அதனை நேர்ப்பேச்சில் தருமராஜ் அவர்களிடம் விவாதிக்க விரும்புவதாகவும் பதிவு செய்தார். அடுத்து பேசிய சுபகுணராஜன் அவர்கள் பார்ப்பனீயத்துக்கு எதிராக வளர்ந்த திராவிட அரசியலின் அசுர வளர்ச்சியையும் பின் திராவிடத்தை தாங்கி/சார்ந்து நின்ற இயக்கங்கள் எவ்வாறு திராவிடக் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தன என்பதையும் சுருக்கமாக கூறினார். அவருமே புத்தகங்கள் குறித்த சில கருத்துக்களை பொதுவில் கூற முடியாது என்றார். அடுத்து புத்தகத்தின் பதிப்பாளரான பத்ரி சேஷாத்ரி பேசினார். உண்மையில் புத்தகத்தின் உள்ளடக்கத்தில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இப்புத்தகம் வெளிவருவதில் தனக்கு உவப்பு இல்லை என்றும், ஆனாலும் பல்வேறு கோட்பாடு, கருத்தாக்கம் கொண்ட பலதரப்பட்ட புத்தகங்களையும் தான் பதிப்பிக்க விரும்புவதாகவும், அதனை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். தருமராஜ் அவர்கள் அடுத்ததாக அயோத்திதாசர் குறித்த ஒரு புத்தகத்தை எழத வேண்டும், அதையும் தன்னுடைய “கிழக்கு பதிப்பகத்திற்காக” எழுத வேண்டுமென்ற வேண்டுகோளையும் வைத்தார்.

இறுதியாக டி.தருமராஜ் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அதுவரை கனமான சூழ்நிலையில் இருந்த அரங்கை தனது மெல்லிய, நட்பான குரலில் இலகுவாக்கினார். ”இந்த புத்தகம் வேண்டுவது ஒரு எளிய நட்பை மட்டுமே, இது ஒரு நட்புக்கான அழைப்பு அவ்வளவு தான், வேறொன்றுமில்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டார். ”இப்புத்தகத்துக்கான தலைப்பு கடும் விவாதங்களையும், முரணான பார்வையையும் ஏற்படுத்தி இருந்தாலும், நான் விரும்புவது சக மனிதர்களிம் ஓர் எளிய நட்பை, காதலை மட்டுமே. என்னை நீங்கள் செய்வதெல்லாம் ஏசல் மட்டுமே. நான் உங்களிடம் எதிர்பார்ப்பது களங்கமற்றை நகைச்சுவையை, பரஸ்பரம் நண்பர்களுக்குள் செய்துகொள்ளும் கேலி கிண்டலை. என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள  உங்களுக்கு எனது தலித் என்ற இந்த அடையாளம் தடையாக இருக்குமானால் உங்களின் நட்பிற்காக நான் அதையும் துறந்து வரத் தயாராக இருக்கிறேன். நான் ஏன் தலித்தும் அல்ல என்று கூறுகிறேன் என்று உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா?” என்று நிதானமாகவும் தெளிவாகவும் கூறினார். “சமூகத்திடன் தான் எதிர்பார்ப்பது விடுதலை அல்ல. விடுதலை ஒருவரை வென்று அவரைக் காயப்படுத்தி அடையக்கூடியது, நான் எதிர்பார்ப்பது சமநிலையுடன் கூடிய சமாதானத்தை. சமாதானத்தில் ஒருவரும் தோற்றவர் அல்ல. அந்த ஒரு இணக்கத்தைத் தான் நான் பெற விரும்புகிறேன். அதனையே இந்தக் கட்டுரைகளும் பேச முயற்சிக்கின்றன” என்றார். இந்தப்புத்தகத்துக்கு, தலித் அல்ல காதலன் என்ற தலைப்பைத் தான் முதலில் வைக்க எண்ணியதாகவும், அது தான் இந்த புத்தகம் சொல்ல நினைக்கும் கருத்து என்றும் கூறினார். நட்பின் அழைப்பாக அமைந்த தருமராஜ் அவர்களின் குரல் பார்வையாளர்களின் தோளில் கைபோட்டு அணைத்துச் சென்றது போலிருந்தது.

அந்த மாலைப்பொழுதை, இனிமையாய் மாற்றிய பேராசிரியர் தருமராஜ் அவர்களுக்கும், அழைப்பு விடுத்த கவிஞர். சமயவேல் அவர்களுக்கும் நன்றி !

Saturday, January 23, 2016

அஞ்சல் நிலையம் - மொழிபெயர்ப்பு நாவல்


எனது முதல் மொழிபெயர்ப்பு நாவலான “அஞ்சல் நிலையம்” தற்பொழுது வெளியாகி இருக்கிறது. புகழ்பெற்ற கவிஞரான சார்லஸ் புகோவ்ஸ்கியின் முதல் நாவல். புனைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், புகோவ்ஸ்கியின் சுயசரிதையாகவே இந்த நாவல் கருதப்படுகின்றது. அரசுத்துறையின் சட்டதிட்டங்களுக்குள் வளைந்து கொடுக்க முடியாத, இயல்பு வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாத, சூதாட்டம், பெண்பித்து, குடி ஆகியவற்றைக் கொண்டாடும் ஓர் எதிர்நாயகனின் வாழ்க்கை இந்த நாவல்.

சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவிலும், இணையம் மூலமும் விற்பனைக்கு உள்ளது. விருப்பமுள்ள நண்பர்கள் வாங்கலாம்.

புதினம்: அஞ்சல் நிலையம்
- சார்லஸ் புகோவ்ஸ்கி ( தமிழில்: பாலகுமார் விஜயராமன் )
விலை:  ரூ.200.00
பதிப்பகம்: எதிர் வெளியீடு

சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்:
அரங்கு எண்: 151 – எதிர் வெளியீடு
அரங்கு எண்: 90 - நாகரத்னா பதிப்பகம்

இணையத்தில் வாங்க:
http://goo.gl/a5JjUn (இணையதளம்: www.wecanshopping.com)

தபால் மூலம் பெற:
VPP / INDIA POST மூலம் புத்தகம் கிடைக்க: +91 8489401887 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது வாட்ஸப் குறுஞ்செய்தி அனுப்பலாம்

மொழிபெயர்ப்பு குறித்த நண்பர்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். வாசித்துவிட்டு சொல்லுங்கள்.
******

Wednesday, January 23, 2013

வலசை (பயணம் 3) - சொல்ல செய்தியொன்று இருக்கிறது



"இவ்வலசை ஒரு சிறப்புக்கவனத்திற்குரிய குழந்தையின் தாய்க்கு இம்மியளவு நம்பிக்கையை பெருக்க முடிந்தால், ஒரு கற்றல் குறைபாடுள்ள குழந்தை ஒரு புதிய சொல்லை கற்பதை எளிதாக்க இக்கல்விமுறை தன் புகட்டுமுறையில் திருத்தங்கள் செய்ய ஒரு விதை விழுந்தால், தன்னளவில் இப்பயணத்திற்கான பொருளடையும்" (பக்கம் 212)

சிறப்புக்குழந்தைகளை பேசுபொருளாகக் கொண்டு வெளிவந்துள்ள “வலசை - பயணம் 3” இதழின் ஒருவரிப்படிமம் தான் மேற்கூறியவை. பல்வேறு திசைகளிலிருந்து ஒற்றை செவி நோக்கி உரைக்கப்படும் ஒருபொருட்பன்மொழியாக ஒலிக்கிறது வலசையின் மூன்றாம் பயணம். வேறுபட்ட சூழல்களில், மொழிகளில், நாடுகளில், இலக்கியங்களில் பேசப்பட்ட ஒற்றைக் கரு உருவமாகி வெளிவந்திருக்கிறது. 

ஒரு தேர்ந்த ஆய்வு நூலைப் போல, களஞ்சியத்தைப் போல, விதை நெல்லைப் போல, கன்னி மூலையில் சேர்த்து வைத்திருக்கும் பொருள் நிறைந்த பெட்டகத்தைப் போல செழிப்புடன் வந்திருக்கிறது இவ்வலசை ஆழ்ந்த வாசிப்பாளர்களுக்கான அடர்த்தியான பெருளை மென்மையான பேசுமொழியில், வரிகளுக்கிடையில் கண்ணுறுத்தாத போதிய இடைவெளி விட்டு அழகாக உருவாக்கியிருப்பது வலசையின் முதல் வாசகர்களின் தீராத வாசிப்பின் விளைபயன் . 

வலசை - மூன்றாம் பயணத்தின் சில பக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம். முழு இதழையும் இன்னும் வாசிக்கவில்லை. அதற்கு நாட்களாகலாம். சொல்லப்போனால் சில பகுதிகள் என்னளவில், நெருங்க முடியாத அளவிற்கு கனமாகக் கூட இருக்கிறது. நீங்களும் இந்த இதழை வாசிக்கும் போது இதே போன்றோ அல்லது வேறுவிதமான சிரமங்களோ எதிர்கொள்ள நேரிடலாம். ஆனாலும் குழந்தைகளை விரும்புகிற உங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் சொல்ல செய்தியொன்றை வைத்திருக்கிறது இவ்வலசை.

வானத்தை அண்ணாந்து பார்க்கும் வானம் தவிர வேறொன்றுமறியாத சிறுவர்கள், எல்லையில்லா வானத்தை தம் சிறகுகளால் மறைத்து வலசை செல்லும் பறவைகளைக் காண்கிறார்கள். தம் கண்களிலிருந்து தொடங்கி, வானமெங்கும் பூத்துக் கிடக்கும் மேகத்தைப் பார்க்கிறார்கள், ஆடுகளைக் கிடையில் அடைப்பதைப் போல மேகத்தை அடைத்து வைக்கிறார்கள். அகன்ற வானத்தின் மேகங்களை ரசித்தபடி தாம் கட்டிய மணல்வீடுகளிலிருந்து வெளியேறும் நீர்மிருகங்களுக்கஞ்சி அவ்ர்கள் ஓடி ஒளியும் பொழுது குழியளவாய் சுருங்கிய ஆகாயம் அச்சிறுவர்களின் வாலாய் திரிகிறது. எல்லையில்லா வானத்தை மேய்த்துக் கொண்டு செல்லும் சிறுவர்களின் உலகிற்கு பயம்கொண்டு சுருளும் வாலாக ஆகாயன் பின் செல்லும் படிமத்தைப் பேசும் ஒரு கவிதை. (மேகத்தைத் தூண்டிலிடும் சிறுவர்கள் - செல்மா பிரியதர்ஸன் - பக்கம் 6)

விதிமுறைகளுக்குள் அடைக்கப்பட்டு போன்ஸாய் மரமாய் கட்டுக்குள் வளர்க்கப்படும் குழந்தைகளைப் பற்றி பேசுகிறது ஒரு கதை (குழந்தை அவள் செய்த முதல் தப்பு -டொனால்ட் பார்த்தலுமே - பக்கம் 7). புத்தகங்களின் பக்கங்களைக் கிழிப்பது குற்றம் எனும் கற்பிதத்தில் தனியறையில் பூட்டி வைக்கும் தண்டனைக்குள்ளாகும் சிறுமி மேலும் மேலும் பக்கங்களைக் கிழித்துக் கொண்டிருக்கிறாள். தண்டனைக்காலம் மலை போல் குவிய, ஒரு முறைநெறிச் சிக்கலுக்கு ஆளாலும் தந்தை கற்பிதங்களை மாற்றி வடிவமைத்துக் கொண்டு மன உளைச்சலிலிருந்து விடுபடுவதாக முடிகிறது. பிற்போக்குத்தனமாய் இருந்த தன் தந்தைக்கு எதிர் செயல்பாடாக பின்னவீனத்துவ முறையில் எழுதப்பட்ட கதை. “வாய்விட்டுப் படி, எழுதிப்பார், சுவரில் கிறுக்காதே” என எண்ணற்ற வழிமுறைகளை, நமக்குக் கற்பிக்கப்பட்டதை நாமும் கண்மூடிக்கொண்டு நமது குழந்தைகளுக்குக் கடத்திக் கொண்டிருப்பது நினைவில் வருவதைத் தடுக்கமுடியவில்லை. 

தேவபாவனைகளின் முணுமுணுப்புடன் வெளிறித் தேய்ந்த தேவதைகள் ஆமோதிக்க, இறுதி ஊர்வலத்தை ஒரு உன்னதமான இசைக்கோர்ப்பாக்கி, மனிதன் என்னும் துன்பவியல் நாடகத்தின் முடிவில் மண்ணரித்துப் போகும் அழகியலை வெளிப்படுத்துகிறது ஒரு கவிதை (வாகை சூடும் புழு - எட்கர் ஆலன் போ - பக்கம் 54). துன்பத்தைக் கொண்டாடும் அகநிலை.

வகுப்பில் கற்றல் குறைபாடுள்ளவனாக சித்தரிக்கப்படும் ஒரு சிறுவன்,  கரும்பலகையில் எழுதியுள்ள எழுத்துக்கள் தலைகீழ் எறும்புச்சாரையைப் போல் நகர்வது ஏன் என தன் ஆசிரியரிடம் கேட்கவும் ஒரு கேள்வி வைத்துள்ளான். ஆனால் அதை உரக்கக் கேட்கவும் துணிவின்றி, ”நீ எதற்கும் லாயக்கற்றவன், நீ இன்னும் கூர்மையாக கவனிக்க வேண்டும்” என்பது போன்ற தொடர்பற்ற அறிவுரைகளால் துவண்டு போய் தனக்கென ஓர் உலகை உருவாக்கிக் கொண்டு அதிலேயே சஞ்சரிக்கத் துவங்கி விடுகிறான். அத்தகைய ஒரு குழந்தையில் உள்ளக் கிடக்கையை சொல்கிறது ஒரு கவிதை (கற்றல் குறைபாடுள்ள குழந்தை - ஜேம்ஸ் மெக்லெய்ன் - பக்கம் 66)

இன்னொரு கவிதையில், பள்ளியில் தன்னைத் திட்டும் அனைத்து ஆசிரியர்களையும் கேலிச்சித்திரங்களாக்கி தண்டனை அளிக்கத் துவங்குகிறாள் சிறுமியொருத்தி. குச்சியைக் கொண்டு அதட்டும் டீச்சரின் உடம்பைக் குச்சியாக வரைகிறாள். கிள்ளும் டீச்சரின் காதை தரை வரை இழுத்து வைக்கிறாள். தலைமையாசிரியரின் தலையை மழித்து அதைக் கரும்பலகையாக்கி அதில் மதிப்பெண் இடுகிறாள். பூனைகளை, நாய்க்குட்டிகளை ஒத்த சேட்டைகளால் வீட்டையே கலவரப்படுத்துகிறாள், கலகலப்பூட்டுகிறாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் உற்சாகமெல்லாம் வடிந்து மௌனமாகிறாள். பள்ளி துவங்கும் நாள் நெருங்குவதை எண்ணி நாங்களும் பெற்றோரும் பதற்றமடைகின்றனர். (வலியின் சித்திரங்கள் - ந.பெரியசாமி - பக்கம் 68)

கல்குழவி கொண்டு மார்பு மொட்டுகளை நசுக்கும் “முலை நீவுதல்” என்னும் நிகழ்வு இன்றும் ஆப்ரிக்க தேசங்களில் உள்ள ஒரு பழக்கம். முறையற்ற கர்ப்பம், கற்பழிப்பு ஆகியவைற்றை தடுப்பதற்காக செய்யப்படுவதாக சொல்லப்படும் இச்செயல் பூப்படையும் சிறுமிகளுக்கு பெரும்பாலும் தம் தாயின் மூலமே நடைபெறுகிறது. மார்புப் புற்று நோய்க்குக் பெரும்காரணியாக இருக்கும் இந்த செயலுக்கு நான்கு மில்லியனுக்கும் மேலான சிறுமிகள் உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அச்சிறுமியரின் வலியைப் பேசும் கவிதை (முலை நீவுதல் - நேசமித்ரன் - பக்கம் 78) நாவற்பழ வாசமும், நீருயிரியைப் போன்று கதகதப்பும் உடைய தன் தாயின் அடிவயிற்றில் முகம்புதைத்து படுத்துறங்கும் வழக்கமுடைய சிறுமி, பூப்பெய்தவுடன் முலை நீவுதலுக்கு உட்படும் பொழுதும் நடுநடுங்கும் கைகளையுடைய தன் தாயின் அடிவயிற்றுக் கதகதப்பை உண்ர்கிறாள். பின்னாளில் புற்று நோய்க்கு தின்னக்கொடுத்த தன் மார்புக் குழிகளை அவளது தாய் வருடும் போது முன்னெப்போதையும் விட நாவற்பழ வாசனை அதிகமாய் கசிவதை உணர்ந்து கண்ணீர் சிந்துகிறாள். 

தன் மனைவியின் பிரசவத்தை எதிர்நோக்கி விரைந்து செல்கின்றான் கணவன். வழியெங்கும் சகுணங்கள் வாழ்த்திசைக்க “மகனாக இருக்கட்டும், மகனாக இருக்கட்டும்” என்று ஆவலுடன் செல்பவனுக்கு மனவளர்ச்சி குன்றிய ஆண்மகவெனக் கூறும் மருத்துவரின் சொல் இடியென இறங்குகிறது. தன் உலகில் இருந்து விலகிவிட்டவனாகவும், இனி ஒருபோதும் தன்னருகே வரமுடியாதவனாகவும் ஆகிவிட்ட மகனைக் குறித்து கண்ட கனவுகளனைத்தையும் புறந்தள்ளி நிற்கும் இளம் தகப்பனைப் பற்றிய கவிதையொன்று. (வாதுமை மரம் - ஜோன் ஸ்டால்வொர்தி - பக்கம் 93)

சர்வ வல்லமை படைத்த ஸ்வஸ்திகையின் கீழ் ஜெர்மனியெங்கும் வேட்டையாடப்படும் யூத அடிமையென அலைக்கழிக்கப்படும் மனதுடன் தன் தந்தையின் வன்கொடுமையால் உழன்று வெதும்பும், தந்தையின் இன்னொரு உருவாக அமைந்த கொடுங்கணவனையும் கொல்ல ஏக்கம் கொள்ளும் இளம்பெண்ணின் குமுறலாக ஒலிக்கிறது இன்னொரு கவிதை. தான் பிறந்த மண்ணும், மண்ணின் மொழியும் கீழ்மையானதாக வெறுக்க வைக்கும் எண்ணம் தழைத்தெழுந்து தன்னை மாயத்துக் கொள்ளுமுன் எழுதிய தற்கொலைக் கவிதையது (அப்பா! - சில்வியா ப்ளாத் - பக்கம் 152)

சூல் கொண்ட நாள் முதல் தொப்புள் கொடியறுத்து முடிச்சிட்டு முதல் சுவாசம் கொண்ட நொடி வரை நேசனும், கார்த்தியும் ஏற்றுக் கொண்ட சிரமங்களை அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் அவர்களின் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும், பொறுமைக்கும் சிரம் தாழ்ந்த வந்தனங்கள். எந்தப்பருவத்தில் ஊட்டச்சத்து கொடுக்க வேண்டுமென்பதில் மட்டுமல்ல எப்போது பத்தியம் இருக்கவேண்டும் என்பதையும் இவர்கள் அறிந்தே வளர்த்தெடுத்திருக்கிறார்கள் இந்த வலசையை. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பர்களே, இன்னும் உயரம் தொடுவீர்கள் !

வலசை - பயணம் 3
பக்கம் 212 (A4 அளவு)
விலை - ரூ 100
தொடர்புக்கு :
nesamithranonline@gmail.com - 9677250213
karthickpandian@gmail.com - 9842171138

******

Wednesday, November 5, 2008

பதிவர்களே ! என் முடிவு சரிதானா ?

எல்லாருக்கும் வணக்கம்ங்க !

நான் பாட்டுக்கு சிவனேன்னு, நான் உண்டு என் வேலை உண்டுன்னு அமைதியா தாங்க இருந்தேன்.. சுமார், ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆர்குட் ல பராக்கு பார்த்துட்டு இருந்தப்ப, யாரோ ஒரு கதைய எங்கருந்தோ சுட்டுப்போட்டுருந்தாங்க. ரொம்பத்தெளிவா, சோர்ஸ் எதுன்னு போடாம விட்டுட்டாங்க. கதை வழக்கமா இருக்குற கதை மாதிரி இல்லாம, close to heart இருந்த மாதிரி ஒரு feeling.

அப்பறம், கொஞ்ச நாள் கழிச்சு மெயில் ல அதே கதை forward ஆகி வந்திருந்தது. ஆனா இப்போ சோர்ஸ் கொடுத்திருந்தாங்க. அந்த link அ பிடிச்சு போய்ப்பார்த்தா...........
B... L... O... G.... blog ... ஆ !!! அட, வெளி உலகத்துக்குத் தெரியாம, இங்க ஒரு மாய உலகமே இயங்கிட்டு இருக்கு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா, link அ பிடிச்சு பிடிச்சு.... இப்போ தினமும் தமிழ்மணம் முகத்துல முழிக்காடி அந்த நாள், முழுமை அடையாத மாதிரி ஒரு illusion.

சரி, இது வரைக்கும் யாருக்கும் எந்த கெடுதலும் இல்ல ...... ஆனா நான் இப்போ எடுத்திருக்க முடிவு... கொஞ்சம் அபாயகரமானது தான். ஆமா, உங்க guess சரி தான், நானும் பதிவர் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. முதல் நாளே ஒரு 1000 ஹிட்ஸ் வந்திருச்சுன்னா அத கணக்கெடுக்க முடியாம போயிறக்கூடாதேன்னு, பாருங்க Hits Counter லாம் போட்டு வச்சிருக்கேன் (என்ன ஒரு தன்னம்பிக்கை !!!)

ஆனா, என்ன எழுத ? அட அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல ... ( உண்மைதாங்க, எழுத மேட்டரே இல்ல !). ஆனாலும், 2 வருசமா யோசிச்சு, கடைசியா "ப்ளாக்" ஆரம்பிக்கனும்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ல, அதுவே பெரிய விஷயம் தானே..

வருசா வருஷம், நான் எழுத ஆரம்பிக்குற டைரிக்கு ஒரு ராசி உண்டு, ஜனவரி 15 ம் தேதி வரை டைரி யா இருக்கும், அப்பறம் பிப்ரவரி 15 ம் தேதில இருந்து, டைரியோட முதல் 15 பக்கங்கள் கிழிக்கப்பட்டு rough note ஆ மாறிடும். பார்க்கலாம், இந்த "ப்ளாக்" எப்படி மாறப் போகுதுன்னு !!!!

இவ்வளவையும் சொல்லிட்டு, என்னை பதிவுலகிற்கு இழுத்துட்டு வந்த அந்த கதை எதுன்னு சொல்லாம இருப்பேனா....... அந்த கதை நம்ம வெட்டியோட "தூறல்"


நன்றி மக்களே !!!

எச்சரிக்கை: "நான் கவிதை எல்லாம் கூட எழுதுவேன் !"


நட்புடன்,
பாலா.