Friday, May 27, 2016

சியாமளா கல்வி அறக்கட்டளை


சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை-கடலூர் வெள்ளத்தின் போது நண்பர்கள் சேர்ந்து சில நிவாரண உதவிகளை செய்தோம். அதன் வரவு செலவு விவரங்களை “சியாமளா கல்வி அறக்கட்டளை”யிலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பி வைத்திருந்தார்கள். செய்த உதவிகளை பொது வெளியில் காட்சிப்படுத்தி விளம்பரம் தேட வேண்டுமா என்ற இயல்பான தயக்கமும், வழக்கமான சோம்பேறித்தனமும் சேர்ந்து கொள்ள அப்படியே போட்டு வைத்திருந்தேன். இன்று இணையத்தில் எழுத்தாளர் வா.மணிகண்டன் அவர்களின் வலைப்பூவில் வந்த பதிவைப்படித்ததும் (http://www.nisaptham.com/2016/05/blog-post_26.html) நல்ல விஷயத்திற்கான விளம்பரம் ஒன்றும் தவறல்ல என்று தோன்றவே வெள்ள நிவாரணப்பணிகளின் முழு விவரங்களை நண்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

சென்னை-கடலூர் வெள்ளத்தின் போது நண்பர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று யோசித்து, கல்லூரி நண்பர்களிடம் கோரிக்கை வைத்தேன். முதலில் பணமாக பெற்றுக்கொள்வதில் பெரும் தயக்கம் இருந்தது. அப்போது ஆபத்பாந்தவனாக அருண்மொழி மேடம் நிர்வகிக்கும் “சியாமளா கல்வி அறக்கட்டளை” மூலம் பணப் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கலாம் என்று முதல் உதவிக்கரம் வந்ததும், ஜி.சி.இ. கல்லூரி நண்பர்கள், பி.எஸ்.என்.எல் நண்பர்கள், சியாமளா கல்வி அறக்கட்டளை கொடையாளர்கள், மற்றும் பல நண்பர்கள் மளமளவென பணத்தை அனுப்பத் துவங்கி விட்டனர். சுமார் பதினைந்து நாட்களுக்குள் ரூ. 1,39,230 வரை வந்தது. அதன் முழு விவரம் கீழே அட்டவணையில் உள்ளது.



நண்பர்கள் நம்மை நம்பி பணம் அனுப்புகிறார்கள். அது உரிய நேரத்தில் உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற  பதட்டம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு வழியாக சரியான தன்னார்வலர்களை கண்டுபிடித்து, சென்னைக்கும் கடலூருக்குமென நிவாரணப்பொருட்களை அலுவலக நண்பர் செந்தில் குமார் ராஜூ, மேலும் குமரேசன், ஜேம்ஸ் ஆகிய நண்பர்கள் மூலமாக கொண்டு சேர்த்தோம். சிவரஞ்சனி, அரவிந்த், ஆண்டியப்பன், கருப்பையா சார் என சில நண்பர்கள் பொருட்களாகவே நிவாரண உதவியை செய்தார்கள். முதலில் நண்பர் மதுரை சரவணன் உதவியோடு, நண்பர்கள் அருணாச்சலம் சார், கடங்கநேரியான் ஒருங்கிணைத்த மதுரை நண்பர்கள் மூலமாகவும், இரண்டாம் கட்டமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் பசுமை நடை குழுவினர் ஒருங்கிணைத்த குழு மூலமாகவும், மூன்றாம் கட்டமாக பி.எஸ்.என்.எல். – டி.எஸ்.ஓ.ஏ சங்க நிர்வாகிகளான நண்பர்கள் சிலாவ் ராவ், ஆதிகோவிந்த் ஒருங்கிணைத்த குழு மூலமாகவும், பின் நான்காவது கட்டமாக நண்பர் ராமஜெயம் மூலமாக ஐ.ஆர். சி.டி.எஸ் குழு வழியாகவும், பின் ஐந்தாவது கட்டமாக நண்பர் “பிக்.ஏ அப்துல் ரஹீம்” மூலமாகவும் அவசர நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தோம். பின் கடந்த பிப்ரவரியில் சென்னையிலுள்ள பார்வையற்றோர் உறைவிடப்பள்ளிக்கு நண்பர் ராமஜெயம் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் தண்ணீர் சுத்தீகரிக்கும் இயந்திரத்தை நிறுவினோம். மீதமிருந்த ரூபாய்க்கு மதுரையில் இருக்கும் நமது சேவாலயம் விடுதி மாணவர்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வாங்கிக் கொடுத்தோம். செலவுக்கணக்கு முழு விவரம் அட்டவணை வடிவில் கீழே உள்ளது.



பள்ளி, கல்லூரி, அலுவலகம், இணையம், இலக்கியம், தொழில், மேற்படிப்பு, அறக்கட்டளை, குடும்பம் என்று வெவ்வேறு வட்டங்களில் நண்பர்களுடன் பழகுகிறேன். அந்தந்த வட்டத்துக்குள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தாலும், எல்லாம் தனித்தனி தீவுகளாகத் தான் இருந்து வந்தன. முதன்முறையாக, வெள்ள நிவாரணப்பணியின் சிறு துளி இந்த வட்டங்களை இணைத்து என்னுள் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. வெள்ள நிவாரணப்பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்றிற்குச் சென்றால், அங்கு எனது அலுவகத்தின் வாடிக்கையாளர் வரவேற்கிறார், பள்ளித்தோழியின் கணவர் வந்திருக்கிறார், அலுவலகத்தின் வேறு பிரிவில் வேலை பார்ப்பவர் தானாக வந்து அறிமுகம் செய்து கொள்கிறார், நடுவில் அவ்வப்பொழுது அலைபேசி அடித்துக்கொண்டே இருக்கிறது, எடுத்துப்பேசினால் வெளிநாடுகளில், வெளியூரில் இருக்கும் கல்லூரித் தோழர்கள் தங்களது பங்களிப்பின் விவரங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர், பொதுமேலாளர் அழைத்து அலுவலகம் சார்ப்பாக என்ன செய்யலாம் என விவாதிக்கிறார். வாட்ஸப் குழுக்களிலும், ஃபேஸ்புக்கிலும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவுக்கரங்களை நீட்டியவாறே இருக்கின்றனர். இது போல உலகமெங்கும் வெவ்வேறு வகையான இணைப்புப் பாலங்கள். நாம் நேரடியாக சொல்லாவிட்டாலும் கூட, யார் மூலமோ கேள்விப்பட்டு தாமாக வந்து உதவிக்கரம் நீட்டும் நண்பர்கள் என்று வட்டம் இன்னும் இன்னும் பெரியதாகிக் கொண்டே இருந்தார்கள். உதவி செய்யத் தயாராய் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கவலை, தான் செய்கின்ற உதவி சரியான நபரிடம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான். ஒருங்கிணைக்கும் பணியில் இருந்த என் மீதும், சியாமளா கல்வி அறக்கட்டளை மீதும் நம்பிக்கை வைத்து உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

இதை ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கான உதவி என்றில்லாமல், தொடர்ந்து இது போன்ற உதவிகளை ஒருங்கிணைக்க எண்ணமிருக்கிறது. முக்கியமாக ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக. ஏற்கனவே மதுரை “சேவாலயம்” மாணவர்களுக்காக செய்து வரும் உதவிகள் போக மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தி கல்வி சார்ந்த உதவிகள் வழங்க, சியாமளா கல்வி அறக்கட்டளையின் அருண்மொழி அம்மா விருப்பம் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து என்னாலான ஒருங்கிணைப்பு பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறேன். இதன் செயல்பாடுகள் குறித்து ”தென்திசை” (thendhisai.blogspot.in) தளத்திலும், ஃபேஸ்புக், வாட்ஸப் மூலமாகவும் அவ்வப்பொழுது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன். உடனடியாக செய்ய வேண்டியது, வரும் கல்வியாண்டில் பள்ளியில் தொடர பணம் செலுத்த முடியாதவர்களைக் கண்டறிந்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

விருப்பமுள்ள நண்பர்கள், அருண்மொழி அம்மா அலைபேசி எண்ணான 9486102324 என்ற எண்ணுக்கு உங்கள் விவரங்களுடன் வாட்ஸப் குறுஞ்செய்தி அனுப்பினால் “சியாமளா கல்வி அறக்கட்டளை” வாட்ஸப் குழுமத்தில் உங்களை இணைத்துக் கொண்டு அறக்கட்டளையின் செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். அல்லது shyamalatrust@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமிருந்தால் அதனையும் தயங்காமல் தெரிவியுங்கள்.

நாம் போகிற போக்கில் செய்கின்ற சிறு உதவி, யாரோ ஒருவருடைய வாழ்க்கையே மாற்றி விடலாம். நல்ல நினைப்பை செல்லும் வழியெங்கும் தூவிச் செல்வோம். சேர்ந்து பயணிப்போம் !

 - வி.பாலகுமார்.
******


No comments:

Post a Comment