தெளிவான நீரோடை போல சீராக பயணிக்கும் கவிதை மொழி. வாசிக்கும் போது நதிக்கரையோரம் மென் தென்றல் காற்று முகத்தில் வீச, மெல்லிய புன்னகை முகத்தில் பரவ நடைபயிலும் அனுபவம். இது ஒரு புறம். இன்னொரு புறம், சிற்சிறு குன்றுகளாக மேலேறி, மலை உச்சி அடைந்து நுரையீரல் ஆழம் வரை பரவ மூச்சிழுத்து விட்டு, மேலிருந்து கீழே பார்த்து பரவசமடையும் மலையேற்றம். கவிஞர் நேசமித்ரனின் கவிதைகள் இரண்டாம் வகை. கடந்த ஞாயிறு (21/02/2010) மாலை, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் சந்தித்தோம். கவிதைகள் பற்றி அவரது பார்வை, என் நினைவிலிருந்து...
இன்று கவிதை என்று எழுதுபவர்கள் பெரும்பாலும் செய்தல் "போலச்செய்தல்". நதியின் வழியெங்கும் கூடவே பயணித்து வருகிறது கூழாங்கல். தனக்குள் நதியின் ஆயுளை ரேகையாக ஒளித்து வைத்திருக்கிறது. மொழி வளத்திற்காக ஒரு கவிஞன் தன் வாய்க்குள் கூழாங்கல்லை வைத்து சுவைத்து சுழற்றுகிறான். கூழாங்கல் நதியின் குளுமையை வார்த்தை வழி கடத்துகிறது. கூழாங்கல் போலவே வழவழப்பாகவும், ரேகையுடனும் தான் இருக்கிறது கோலிக்குண்டு. கூழாங்கல் கிடைக்கப் பெறாதவர்கள் கோலிக்குண்டுகளை வாயினுள் சுழற்றி மொழி விளையாட்டு நடத்த முயற்சிக்கும் போது வார்த்தை மேலும் சிதிலமடையத்தான் செய்யும். மாறாக சில நதிக்கரைப் பயணங்கள் கூழாங்கல்லை கண்டடைய வழிவகுக்கும். இந்த பயணம் என்பது தொடர்ந்த பலதரப்பட்ட வாசிப்பு தான்.
வாசிப்பு என்றால் எல்லாம் வாசிப்பாகுமா ? இலட்சிய வாசிப்பும் இருக்கிறது, இலக்கில்லா வாசிப்பும் இருக்கிறது. வார்த்தை பிரயோகம் உணர்ந்து, இடம் பொருள் 'ஆ'வல் உணர்ந்து, இன்ன தேவைக்காக வாசிக்கிறோம் என்றுணர்ந்து இலக்கடைவதை இலட்சிய வாசிப்பாகக் கொள்ளலாம். தொடர்ந்த இலட்சிய வாசிப்பு புதிய புதிய வார்த்தைகளைக் கண்டடைய உதவும். இவ்வாறான சில வார்த்தைகளே சூழ் கொண்டு, கரு வளர்ந்து கவிதையைப் பெற்றெடுத்து விடும்.
பெற்றெடுக்கும் வரை தான் கவிதைக்கான முன் பேறுகால பக்குவம் எல்லாம். மொழியை வளைத்து, வளர்த்து ஒரு வார்த்தை நீளாமலும், இடை நிறுத்தாமலும் பத்தியம் பார்த்து வைத்தியம் பார்ப்பதெல்லாம் மகப்பேறு வரை தான். கவிதை பிரசவித்த பின் பெற்றவன் இறந்து விடுவான். அது தான் நல்ல கவிதைக்கான அடையாளம்.
ஒரே ஒரு வார்த்தை ஒரு கவிதைக்கான அடையாளத்தையே மாற்ற முடியும். நம்மில் பலர் ஸ்ரீ எழுதிய "மாமாவின் கவிதை"யை வாசித்திருப்போம். இதில் ஒரே ஒரு வார்த்தையை சேர்க்கும் போது கவிதையின் முகமே மாறி வேறொரு தளத்துக்கு உயர்ந்து விடுகிறது.
"பொதுக் கழிப்பிடங்களின் சுவர்களில்
பேருந்துப் பயண இடை நிறுத்தங்களின்
சாலையோர நீர்க் கழிப்புகளில்
திரையரங்கு இடைவேளைகளில்
என எங்கேயும் பக்கம் பார்த்து
ஒப்பீடு செய்து கொள்கிறேன் .
...................................................
எப்போது பார்ப்பினும்
தவிர்க்க முடியவில்லை,
இன்னும் சற்றே பெரியதாய்
அமைந்திருக்கலாமென்ற நினைப்பை...."
என் பெயர்
இந்த கவிதையில் சேர்க்கப்பட்ட ஒரே வார்த்தை "சுவர்களில்", இறுதியில் நமது நினைப்பை சுக்குநூறாக உடைக்கும் 'குறி'யீட்டுச் சொல் "பெயர்".
பல தரப்பட்ட நினைவுகளைக் கலைத்துப் போட்டு, நடுவில் இணைக்கும் "நார்" போன்று ஒரு வார்த்தையை வைத்து விளையாடும் கவிதை விளையாட்டு நுட்பமானது. வாசிப்பவனே நார் தேடி எடுத்து, உதிர்ந்து கிடக்கும் வார்த்தைகளைக் கோர்த்து சரம் தொடுத்து பூப்பந்து செய்து மணம் நுகர்ந்து கொள்ள வேண்டியது தான். இணைக்கும் நார் தென்படவில்லையென்றாலும் ஒன்றும் மோசமில்லை, உதிரிப் பூக்களுக்கும் அதே மணம் தானே.
இனிதே மணந்தது அந்த ஞாயிறு மாலை. நன்றி நேசமித்ரன்.