நிறைசூலி ஆட்டை
தின்னக் கேட்கும் சுடலைமாடன்
ஐந்தாம் நாளாய்
நிற்காத உதிரப்போக்குடன் புதுப்பெண்
வாரிச் சுருட்டி எழும் முன்
நின்று போகும் நடுநிசி தொலைபேசி அழைப்பு
ஈனும் முதல் குட்டியை
மருந்தாய்க் கொள்ளும் ஒரு விலங்கினம்
பொருந்தாக் காம அலைக்கழிப்பை
அழிக்கப் போராடும் மேன்சன்காரன்
சுருதி தப்பி ஒலிக்கும்
ஒருமணி உதிர்ந்த சலங்கை
தற்கொலைக்கு தைரியமில்லாதவனின்
உயிர்க்கொல்லி நோய்
சிறகொடிந்த பட்டாம்பூச்சியை
கொத்தி விளையாடும்
சிறகொடிந்த கரிச்சான் குருவி
பாவிகளை பிடித்து வைத்து தன்
பிரதாபங்களை பட்டியலிடும்
பரிசுத்த புது ஆவி
இதிலொன்றை கேட்டுப் பெற துணிவின்றி
பொருத்தமற்ற ஏதோவொரு தலைப்பை
விருப்பமின்றி தாங்கி நிற்கும்
பொருளற்ற இந்த கவிதை !
படம் உதவி : இணையம்