Saturday, September 19, 2015

கனவுக்கதை – மொழிபெயர்ப்பு கவிதை

கனவுக்கதை - ரபியா அல் பாஸ்ரி
(தமிழில் பாலகுமார் விஜயராமன்)
-------------------------------------------------------------------
எனது நினைவுகளுக்கு அப்பாற்பட்ட அழகிய, பரந்த பசுமைத் தோட்டத்தில் நான் இருப்பதை உணர்ந்தேன். இத்தோட்டத்தில் ஒரு சிறுமி என்னுடன் இருந்தாள். அவள் என்னிடம் “இவ்விடம் எத்தனை அழகுடன் இருக்கிறது, பாருங்கள் !” என்று வியந்தாள்.

அவள், “நீங்கள் இதனைக்காட்டிலும் வியத்தகு அழகுடன் உள்ள மற்றோர் இடத்தைக் காண விரும்புகிறீர்களா ?” என்றாள்

நான் “ஆம்” என்றதும், என் கரம் பற்றி அழைத்துச் சென்றாள். அவ்விடம் இதுவரை மனிதக் கண்கள் கண்ணுற்றிராத மேன்மை பொருந்திய அழகுடன் திகழ்ந்தது. அச்சிறுமி ஒரு கதவைத் தட்டியதும், யாரோவொருவர் வந்து திறந்தார். உடனே நாங்கள் இருவரும் பெருவொளிப் பிரவாகத்தில் நனைந்தோம்

நாங்கள் அங்கே கண்ணுற்ற கன்னிப்பெண்களின் செயல்களின் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவாரென உணர்ந்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் ஒளி நிரம்பிய பரிமாறும் தட்டை ஏந்தியவாறு சென்றனர். என்னுடன் வந்த சிறுமி அவர்கள் என்ன செய்கின்றனர் என்று கேட்டதும், “கடலில் மூழ்கி உயிர்த்தியாகம் செய்த ஒருத்தியை நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம். அவள் இரவில் ஒருபொழுதும், ஓர் இமைப்பொழுதும் உறங்காதவளாக இருந்தாள். நாங்கள் அவளது உடலில் ஈமக்கடனின் வாசனைத் திரவியத்தை பூசப்போகிறோம்.

“அவ்வாறென்றால், சிறிது திரவியத்தை இங்கிருக்கும் என் தோழியின் மீதும் பூசவும்” சிறுமி என்னைச் சுட்டிக்காட்டி கூறினாள்.

“ஒரு காலத்தில், இந்த வாசனைத் திரவியத்தின் நறுமணம் இவள் உடலெங்கும் பரவியிருந்தது, ஆனால் இவள் பயங்கொண்டு அதனை துறந்து விட்டாள்”

உடனே அந்த சிறுமி என் கையை விடுத்து விலகிச் சென்று, திரும்பி என்னை நோக்கிக் கூறினாள்:

”உனது பிரார்த்தனையே உனது ஒளி;
உனது பக்தியே உனது பலம்;
உறக்கம் இவை இரண்டுக்குமான எதிரி.
உனது ஜீவனே வாழ்க்கை உனக்குக்கொடுக்கும் ஒரே வாய்ப்பு.
அதை நீ உதாசீனம் செய்தால், அதை நீ வீணாக்கினால்,
உன் நிலையிலிருந்து நீயே தாழ்ந்து போவாய் !”

பிறகு அச்சிறுமி என் பார்வையிலிருந்து மறைந்து போனாள்

****** 
மூலம்: http://hellopoetry.com/poem/73235/dream-fable/
நன்றி: http://malaigal.com/?p=7177

Tuesday, September 8, 2015

மதுரை புத்தகத் திருவிழா 2015

வழக்கமான உற்சாகத்துடன் நிறைவடைந்திருக்கிறது, இந்த வருட புத்தகத் திருவிழா. காசு கொடுத்து வாங்கும் புத்தகங்களின் தேர்வு எப்போதும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்த பின்பே நிகழும். கொடுக்கும் காசுக்கு பிரயோஜனமா என்ற எண்ணம் எப்போதும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அப்படி வாங்கும் புத்தகங்கள் எப்படி இருந்தாலும்,  எப்பாடு பட்டாவது வாசித்து முடித்து விட்டால் தான் செய்த செலவுக்கு பிரயோஜனம் என்ற நினைப்பு சிறிது காலம் முன் வரை ஊறிப் போயிருந்தது. சமீப காலங்களில் தான், “காசையும் கொடுத்துட்டு இந்த கருமாந்திரத்தையும் ஏன் கட்டி அழ வேண்டும்” என்ற ஞானோதயம் பிறந்து, வாசிக்க சுகப்படாத புத்தகங்களை அப்படியே தூக்கி அலமாரியின் கடைசி அடுக்குகளில் ஒளித்து வைத்து விட்டு, பின் காலம் வாய்க்கையில் வாசித்துக் கொள்ளலாம் என்ற பக்குவம் பிறந்திருக்கிறது.

வாசிப்பின் இத்தனை ஆண்டுகளில், தற்பொழுது புத்தகத் தேர்வுகளிலும் கூட மாறுதல் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. முன்னெல்லாம், சுவாரஸ்யம் என்ற ஒற்றை செயல்திட்டம் மட்டும் தான் குறிக்கோளாக இருக்கும். இப்பொழுது வாசிப்பின் தளம் விரிவடைந்திருப்பதை உணரமுடிகிறது. அது போல, மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்றால் வேற்றுக்கிரக வாசிகள் என நினைத்து ஒதுங்கிப் போய்விடுவதுண்டு. சமீப காலங்களில் அந்தப்பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்த்து பேசுபொருள் போக மொழிபெயர்ப்பின் தரத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் இணையத்தால் கிடைக்கும் “யானைப்பால்”.

இருநூற்றி சொச்சம் அரங்குகளில் மலை மலையாய் புத்தகங்களை குவித்து வைத்திருக்கிறார்கள். எல்லா வகையான புத்தகங்களுக்கும் சந்தை இருக்கத்தான் செய்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து, சிலவற்றை வாங்கிச் செல்லவும் செய்கிறார்க்ள். பெரிதாய் பெயர் அறிமுகமில்லாத ஒரு அரங்கில், உள்நுழைந்து பத்து நிமிடம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே மக்கள் விசாரித்த தலைப்புகளில், வாங்கிச் சென்ற புத்தகங்களில் சத்தியமாய் ஒன்று கூட இதுவரை கேள்விப்பட்டதில்லை.

இத்தகைய சமுத்திரத்தில் நமக்கான புத்தகங்களை தேர்வு செய்வது என்பது, சும்மா இருபது நொடி வாசித்துப் பார்த்து விட்டு சட்டென வாங்கி விடுகிற காரியமில்லை. வாங்க வேண்டும் என்று ஏற்கனவே குறித்து வைத்திருக்கும் புத்தகங்கள் போக, அரங்கில் கண்ணில்படும் புத்தகங்களில் தெரிந்த எழுத்தாளர்கள், படித்த மதிப்புரைகள், ஏற்கனவே நண்பர்களுடனோ, வாசிப்பிலோ அடிபட்ட பெயர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்வேன். இன்னொரு முக்கியமான நிபந்தனை கட்டுபடியாகும் விலை. இப்படி எல்லாம் கலந்து கட்டி இந்த வருடக் கண்காட்சியில் வாங்கியிருக்கும் புத்தகங்கள்.

கொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கி - பாரதி புத்தகாலயம்
மதினிமார்கள் கதை - கோணங்கி - பாரதி புத்தகாலயம்
மறநிறப்பட்டாம்பூச்சிகள் - கார்த்திகைப்பாண்டியன் - எதிர் வெளியீடு
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் - பா.திருச்செந்தாழை - காலச்சுவடு
கீதாரி - சு.தமிழ்ச்செல்வி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சந்துருவுக்கு என்னாச்சு ? - யெஸ்.பாலபாரதி - பாரதி புத்தகாலயம் - புக் ஃபார் சில்ரன்
மாயி-சான் ஹிரோஷிமாவின் வானம்பாடி - தோசி மாருகி (தமிழில் கொ.மா.கோ.இளங்கோ) - பாரதி புத்தகாலயம் - புக் ஃபார் சில்ரன்
பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் – கட்டுரைகள் – மலைகள் பதிப்பகம் (அன்பளிப்பாகக் கிடைத்தது)


பக்க எண்ணிக்கையில் எல்லாம் சிறிய புத்தகங்கள் என்பதால் சீக்கிரம் வாசித்து விடுவேன். சோம்பேறித்தனத்தை ஒத்தி வைத்து விட்டு வாசிப்பனுபவத்தை எழுத வேண்டும்… பார்ப்போம் !
******