Wednesday, March 24, 2010

மணற்கேணி போட்டி - வாழ்த்துக்கள் நண்பர்களே !



சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் இணைந்து நடத்திய கருத்தாய்வு போட்டியில் அரசியல்/சமூகம் பிரிவில் நமது தருமி ஐயா வெற்றி பெற்றுள்ளார். அவரது கட்டுரை   சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் 


 இலக்கியப் பிரிவில், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் திரு.பிரபாகர் வெற்றி பெற்றுள்ளார்.  அவரது படைப்பு தமிழர் இசை

அறிவியல் பிரிவில் திரு. இரா.இரஞ்சித் அவர்களின் படைப்பு நவீனகால நுண்ணோக்கிகள் மற்றும்,
நமது டாக்டர்.தேவன்மாயம் அவர்களின் கட்டுரை ஏமக்குறைநோய்(A I D S) வெற்றி பெற்றுள்ளன. 

போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். சிறப்பாக நடத்தியிருக்கும் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். 

வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மதுரைக் காரர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.


Tuesday, March 23, 2010

என் பிரிய இளம் தம்பதியினரே !

என் கல்லூரி சமயத்தில் வாசித்து, பிடித்துப் போய் விடுதி அறை சுவரில் எல்லாம் மாட்டி இருந்த "கலீல் கிப்ரானின்" திருமணம் பற்றிய வாசகங்கள். இப்பொழுது தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. அழகிய மனக்கதவு திறப்பது போல இருக்கிறது. தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறேன். எப்படி இருக்கிறது என சொல்லுங்கள். 


"திருமணம் பற்றி கலீல் கிப்ரான்" 


என் பிரிய இளம் தம்பதியினரே !


நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் என்பதாகவே பிறந்தீர்கள்,
காலந்தோறும் இரண்டறக் கலந்தே இருப்பீர்கள்.

மரணத்தின் இறகுகள் உங்களை வருடும் தருவாயிலும்,
இல்லறத்தில் இணைந்தே இருப்பீர்கள்.

என் பிரிய இளம் தம்பதியினரே !
எங்கெங்கும் மௌனமாய் வியாபித்திருக்கும் 
இயற்கையின் நினைவலைகளிலும் இன்பமாய் சேர்ந்திருப்பீர்கள்.

ஆனால்,

உங்கள் இணைபிரியா நெருக்கத்திலும் 
சிறு இடைவெளி இருக்கட்டும்.
அந்த இடைவெளியில் உங்கள் இருவருக்குமான 
தனித்துவம் தென்றலாய் வீசட்டும்.

காதலில் திளைத்திருங்கள், அதையே விலங்காக்கி இறுக்கிக் கொள்ளாதீர்கள்.
மாறாக மனதின் கரைகளை முத்தமிட்டு உள்செல்லும்,
நுரையும் அலையுமான கடலைப் போல காதலியுங்கள்.

மகிழ்வின் கோப்பையை ஒருவருக்கொருவர் நிரப்பிக்கொள்ளுங்கள்,
உணவைப் போலவே அன்பையும் பரிமாறிக் கொள்ளுங்கள்,
ஆனால், உங்கள் துணைக்கான உணவிற்கும் 
உங்களையே சார்ந்திருக்கும்படி செய்துவிடாதீர்கள்.

ஜோடிக் குயில்களாய் பாடித் திரியுங்கள், அதே சமயம்
தனிமையின் சங்கீத்திலும் மனமுருகப் பழகிக் கொள்ளுங்கள்.
குழலாயினும் துளைகள் தனித்திருந்தால் தானே இன்னிசை பிறக்கும்.

உங்கள் இதயத்தை உங்கள் துணைக்காகவே அர்ப்பணியுங்கள்,
ஆனால் அதன் சுமையை உங்களை 
அறியாமல் கூட அவர்மீது அழுத்தி விடாதீர்கள். 
உங்கள் இருவர் இதயங்களின் ஒத்த இசையை
வார்த்தைகள் அல்ல, வாழ்க்கை தீர்மானித்துக் கொள்ளட்டும்.

இணைந்தே இருங்கள், சார்ந்திருக்கும் நிலைக்கு சென்றுவிடாதீர்கள்
பிரகாரத் தூண்கள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதில்லை, 
இணைந்தே கலசத்தைத் தாங்கி நிற்கின்றன.

வேம்பும் அரசுமாய் சேர்ந்து வளரலாம் - ஆனால்
ஆலமரமாய் வியாபிக்க நினைத்தால் அதன் நிழலில்
வேறெந்த செடியும் தளிர்விட முடியாது.

**************************************************************************
மூலம்:



"Kalil Gibran on Marriage"

You were born together, and together you shall be forevermore.
You shall be together when white wings of death scatter your days.
Aye, you shall be together even in the silent memory of God.
But let there be spaces in your togetherness,
And let the winds of the heavens dance between you.
Love one another but make not a bond of love:
Let it rather be a moving sea between the shores of your souls.
Fill each other's cup but drink not from one cup.
Give one another of your bread but eat not from the same loaf.
Sing and dance together and be joyous, but let each one of you be alone,
Even as the strings of a lute are alone though they quiver with the same music.
Give your hearts, but not into each other's keeping.
For only the hand of Life can contain your hearts.
And stand together, yet not too near together:
For the pillars of the temple stand apart,
And the oak tree and the cypress grow not in each other's shadow.

**************************************************************************

Monday, March 1, 2010

பெயரில்லாதவை 01/03/2010


சென்ற வாரம், ஒரு கடை திறப்புவிழா அமர்க்களப் படுத்திட்டு இருந்தாங்க. கடை பெயரைப் பார்த்தா, "விர்ஜின் டிஸ்ட்ரிப்யூசன்" ன்னு இருந்த்து. ஒரு நிமிடம் அதிர்ந்து போய், என்னடா மதுரைக்கு வந்த சோதனை ன்னு பார்த்தா, மொபைல் ஃபோன் கடையாம். பேரு வைக்கிறவய்ங்க கொஞ்சம் யோசிச்சு வைக்கக் கூடாதா, பீதியைக் கிளப்புறீங்களேய்யா ?
*******************
எனக்கு ரொம்ப நாளாகவே ப்ளாகரில் இந்த "ஃபாலோயர்ஸ்" என்ற வார்த்தை கொஞ்சம் தர்மசங்கடத்தை கொடுப்பது போலவே இருக்கிறது. போதாக்குறைக்கு இப்போ கூகிள் பஸ்ஸிலும், அட்ரஸ் புக்கிலிருந்து கொஞ்ச நண்பர்களைத் தூக்கி ஃபாலோயர்ஸ் ஆக்கி விட்டிருக்குகிறது. சரி பதில் மரியாதை செஞ்சா சாபம் விமோசனம் கிடைக்கும்னு துரத்தி துரத்தி ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். நாம் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஃபாலோ பண்ணிக்குவோம் ன்னு அக்ரிமெண்ட் போடாத குறை தான். ஃபாலோயர்ஸ் என்ற வார்த்தைக்கு பதில் ஆர்குட்டில் இருப்பது போல "ஃபிரண்ட்ஸ் - நண்பர்கள்" ன்னு இருந்தா நல்லா இருக்கும் போல இருக்கு.
*******************
சமீபத்திய எனது "ட்விட் ஹிட்ஸ்"
"எப்பொருள் யாரார்வாய் கேட்பினும் கொஞ்சம் தள்ளி நின்று கேட்பதறிவு : எச்சில் முகத்தில் தெறிக்காமல் இருப்பதழகு."
"தமிழில் யோசித்து, ஆங்கிலத்தில் டைப்படித்து, அதை தமிழில் பார்த்து, ஒற்றுப்பிழைகளை சரி செய்ய மறுபடியும் ஆங்கிலத்தை தேடி... ஸ்ஸ்ஸ்ஸ் #முடியல்ல"
*******************
சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு இணையதள முகவரி : http://www.view360.in/virtualtour/madurai/ . தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக.
360 டிகிரி அமைப்பு அருமையாக உள்ளது. ஒரு சுற்று பார்த்து வாருங்கள்.
*******************
சச்சினை பாரட்டத் துவங்கிய 200 க்கு சற்றுமுன் வரை எல்லோரும் நிச்சயமாக தோனியை திட்டிக் கொண்டிருந்து தான் இருந்திருப்போம். ஒரு சாதனை நிகழவிருக்கும் தருணம் பற்றி தோனிக்குத் தெரியாமலா இருந்திருக்கும். பிறகும் ஏன் பொறுமையை அவ்வளவு சோதித்தார் ? 360, 370 எடுத்தாலும் தென்னாப்ரிக்கா துரத்திப் பிடித்து விடும், இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம் என நினைத்திருக்கலாம். இல்லை, சச்சினை எதிர்முனையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைத்திருக்கலாம். ம்ம்ம்ம் தெரியல, அவரிடம் தான் கேக்கணும்.
*******************
சென்ற வாரத்தில் மிகவும் கவர்ந்த பன்ச் "சினிமாவே வேணாம், அரசியலுக்கு வரட்டா?"

நன்றி மீண்டும் சந்திப்போம்.
*******************