Friday, February 26, 2016

லாக்கப் - நாவல் வாசிப்பனுபவம்


ஒரு பயணத்தின் இணைப்பு ரயிலுக்காக காத்திருந்த நான்கு மணி நேர இடைவெளியில் சந்திரகுமார் எழுதிய “லாக்கப்” நாவலை வாசித்து முடித்தேன். இரயில் நிலையத்தின் மிகுந்த நெரிசல் நேர சலசலப்புகளுக்கு நடுவே அமர்ந்திருந்தாலும் அந்த நான்கு மணி நேரமும் வியர்வையும், மூத்திரமும் முடை நாற்றமெடுக்கும் காவல் நிலையத்தின் சிறிய இருட்டு அறையில் ஒரு விசாரணைக் கைதியாகவே என்னை உணர்ந்தேன். நீண்ட வர்ணனை, விவரிப்பு, தேர்ந்த எழுத்து நடை என எதுவும் இல்லாவிட்டாலும் கூட உண்மைத்தன்மைக்கு அருகில் இருக்கும் காரணத்தினால் எழுத்தின் வீரியத்தை நாவல் முழுவதுவதே ஆழமாக அனுபவிக்க முடிந்தது.

விசாரணை அறையில், குமார் இத்தனை சித்தரவதை அனுபவிப்பதற்கு பதிலாக பேசாமல், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டால் தான் என்ன என்ற பதைபதைப்பு நமக்குமே ஒட்டிக் கொள்கிறது. இறுதியில் ஐந்து மாதங்கள் விசாரணைக்கைதியாக சிறையில் கழித்து விட்டு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் போது நீதிபதியும் அதே கேள்வியைத் தான் கேட்கிறார். “குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்கள் என்றால், தண்டனைக்காலத்திற்கும் அதிகமாகவே சிறையில் இருந்து விட்டீர்கள் எனக்கூறி விடுதலை செய்கிறேன், என்ன சம்மதமா?” என்கிறார். குமாரும் அவனது நண்பர்களும் அவ்வாறே சம்மதித்து வெளியே வருகிறார்கள். அவர்கள் விடுதலையாகி வெளியே வந்தாலும், இனி வருங்காலத்தில் அவர்கள் போலீசாரால் எதிர்கொள்ளப்படும் கேள்வி ஒன்று இருக்கிறது. அது நாவலில் முன்னரே ஒரு இடத்தில் சுட்டிக்காட்டப்பட்டும் இருக்கிறது. அந்தக் கேள்வி, “ஏற்கனவே ஜெயிலுக்குப் போயிருக்கியா?” ஒருவனை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போலீசாரின் இந்தக் கேள்விக்கு “ஆம்” என்ற ஒற்றை பதில் போதும், அவனை முத்திரை குத்த.

அதிகாரத்தின் கரங்கள் உதிரி மனிதர்களின் கழுத்தை எவ்வளவு அழுத்தமாக நெரிக்கிறது, அதிகாரத்திற்கு உடன்படாதவர்களின் நெஞ்சுரம் எப்படி நசுக்கப்படுகிறது என்பதையும், அத்தகைய உதிரிகள் தங்கள் பிழைப்புக்காகவோ அல்லது அதிகார அமைப்பின் மீது ஏற்படும் தன்னியல்பான பயம் காரணமாகவோ அதிகாரத்தை அண்டிப் பிழைப்பவர்களாக மாறும் போது கிடைக்கும் சலுகைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.

வலியை அச்சு அசலாக எழுத்தில் கொண்டுவந்திருக்கும் எழுத்தாளர் சந்திரகுமார் அவர்களுக்கும், இத்தனை ஆண்டுகள் கழுத்து சரியான நேரத்தில் நாவலை மறுபதிப்பு செய்திருக்கும் “டிஸ்கவரி புக் பேலஸ்” நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள்.

இனி விசாரணை படம் பார்க்க வேண்டும்.

லாக்கப் (நாவல்) – மு.சந்திரகுமார்
விலை: ரூ. 120
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

******