Monday, October 22, 2012

மாற்றான் - போட்டுத் தாக்குறான்


சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக வாழ்ந்திருக்கும் “மாற்றானைக்” காணும் வாய்ப்பு கிட்டியது. சரி, “கழுத, நாமும் ஒரு விமர்சனத்தைப் போடுவோமேனு பார்த்தா” ஒரு விஷயமும் தோணல. சரி ஏன் மாற்றான் என்ற பெயர் எனறு யோசித்துப் பார்த்தேன். அதிலேயே ஒரு நுட்பமான செய்தி ஒளிந்திருப்பது கண்டு வியந்தேன். மரபணுவில் மாற்றம் செய்து பிறந்ததால் வந்த பெயர்க்காரணம் தான் மாற்றான். அப்படியும் “மாற்றான்கள்” என்று வந்திருக்க வேண்டுமே என்றால் சூர்யாவின் விஞ்ஞானி அப்பா எதிர்பார்த்தது ஒரு சூர்யாவைத் தான். இயக்குநனரும் அதை நம்பி “மாற்றான்” என்று பெயர் ரிஜிஸ்டர் செய்து விட்டார். ஆனால் இரட்டையராய் பிறந்து “ஃபிளாப்” ஆக்கிவிட்டனர், படத்தையா என்று தெரியவில்லை, ஆனால் இயக்குநர் சொன்னது அப்பா சயிண்டிஸ்டின் திட்டத்தை மட்டும் தான் என நம்புகிறேன். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் சூர்யா அப்பாவிற்கே தான் ஒரு விஞ்ஞானி என்று இடைவேளி வரை தெரியவில்லை. பிறகு ஒருவாறு வெள்ளைக் கோட்டை மாட்டிக் கொண்டு ஆராய்ச்சி செய்து சமாளித்து விடுகிறார்.

படம் முழுக்க டிவிஸ்ட்டோ, டிவிஸ்ட்டு தான். ஆனால் முதல் ரீலில் டெரர் லுக்குடன் வில்லி போன்று ஒரு வெள்ளைக்கார ஆண்ட்டியை டைட் கிளோசப்பில் காட்டும் போதே நான் பக்கத்து சீட்டைப் பிராண்டிக் கொண்டிருந்தவரிடம் சொல்லி விட்டேன். “இந்த ஆண்ட்டி நல்லவஙகளாத்தான் இருப்பாங்க, பாருங்களேன்”. பின்னர் நான் சொன்னது பலித்தவுடன் அவர் என்னை ஆச்சர்யமாய் பார்க்க, ”அந்த ஆண்ட்டியைப் பார்த்தால் ”டபிள்யூ.டபிள்யூ.எஃப்” டீவி ஷோவில் வரும் ஆயா போலவே இருந்தாங்க. அவுங்க நல்லவங்கன்னா, இவங்களும் நல்லவங்களாத்தான் இருக்கனும்” என்று லாஜிக்காக மடக்கினேன். சரி படத்தில் லாஜிக் இல்லை என்பதற்காக நானும் லாஜிக் இல்லாமல் பேச முடியுமா என்ன!

ஒரு காட்சியில் சும்மா ஒரு கிரிப்புக்காக காஜலின் இடுப்பைப் பிடிக்கும் சூர்யா, அவர் வழக்கமாய் படம் முழுதும் காட்டும் ஒரே ரியாக்‌ஷனனான “சாணியை மிதித்தது போன்ற கண்களின் அகலவிரிப்பையும், உதடு நெளிப்பையும்”  வெளிப்படுத்தவும், சரி இது வேலைக்காகாது என்று தன் சகோதரனை அணைப்பது போன்று சீன் போடுகிறார்.  செண்டிமெண்டுக்கு மடங்காத தமிழ் ஹீரோயின் எந்த படத்திலும் இல்லை என்ற விதிக்கேற்ப காஜலும் லைட்டா வழிக்கு வருகிறார். ஆனால் அப்போது கூட முழு சம்மதம் தெரிவிக்காதவர், சூர்யா ஒரு ரஷ்ய ஆண்ட்டியுடன் டான்ஸ் ஆடும் போது, “ஜெலசி” அதிகமாகி “ஜாயின்” ஆகிவிடுகிறார். ஆயிரந்தான் பல நூறு மொழிகள் பயின்று சுவிஷேச கூட்டங்களில் பிரசங்கம் செய்தாலும் அவளும் ஒரு பெண் தானே !

பிறகு, புது பாஸ்போர்ட் கிடைத்த உற்சாகத்தில் சூர்யா வெளிநாடு சுற்றுப் பயணம் கிளம்ப, கூடவே காஜலும் கைடாக கிளம்புகிறார். அங்கே புரட்சியாளர் லெனினின் ஒன்று விட்ட வகையறாவைச் சேர்ந்த ஒரு ஹெட் கான்ஸ்டபிள் கோல்ட் மெடல் வாங்கிய விளையாட்டு வீரர்களை எல்லாம் டாய்லெட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஹாலில் அடைத்து வைத்திருக்கிறார். அங்கு உள்ள அனைவரும் சேது பார்ட் 2 வில் நடிக்க ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டாய்லட் செல்ல வரும் சூர்யா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, அவர்களின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கிறார். பின்னர் ஈஸ்ட்மென் கலர் மாதிரியான சித்திரத்தில் அவர்களின் சாதனைகளை நினைத்துப் பார்க்கிறார். அதே எஃபெக்டில் பின்னர் தன் அப்பாவிடம் “அத்த்த்த்தனையும் நடிப்ப்ப்ப்ப்பா?” என்று கேட்டு கண்கலங்குகிறார். இதைத்தான் விமர்சகர்கள் “உலக நடிப்புடா சாமி” என்று கூறுகிறார்கள்.

ஆனால் சூர்யாவுக்கு அநியாயத்துக்கு “மாஸ் மர்டரை” தடுத்து நிறுத்தும் அஸைன்மெண்டாக தான் வந்து வாய்க்கிறது. அவரும் ரஷ்யாவுக்குப் பக்கத்திலுள்ள உஸ்கா புஸ்கா என்று ஏதோவொரு நாட்டுக்குப் போய் பெல்லி டான்ஸ் எல்லாம் ஆடி, ராக்கெட் லான்ச்சருக்கெல்லாம் தப்பி, கடைசியில் குஜராத்தில் லேண்டாகி, “போதி தர்மர்” தவம் செய்த குகைக்குள் வசிக்கும் பெருச்சாளிகளுக்கு தீனி வைத்து விட்டு ஜனாதிபதியிடம் விருதெல்லாம் வாங்குகிறார். ஆனால் அப்போது கூட அவர் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு கனவிலும் களங்கம் விளைவிக்க முற்படாதவராக இருக்கிறார். அதற்கு காரணம் இயக்குநர் ஆனந்த் சாரிடம் இருக்கும் கம்யூனிச சிந்தனை தான். நாடி நரம்பெல்லாம் கம்யூனிச வெறி ஊறிக் கிடக்கும் ஒருவரால் மட்டிமே இப்படி ஒரு திரைக்காவியத்தை எடுக்க முடியும் என்று நான் முழுமனதாக நம்புகிறேன். முதலில் கே.எஃப்.சி மூலம் உழைப்பாளர்களின் பசிப்பிணியைப் போக்குவதாகட்டும், பின்னர் “ரஷ்யர்கள் எல்லாம் பேசிக்கலி வெரி குட், பட் எங்களுக்கு திருட்டுத்தனம் சொல்லித்தந்தது எல்லாம் உங்க தமிழ்நாட்டு மாட்டு டாக்டர் தான்” என்று தாத்தா விஞ்ஞானி அப்ரூவர் ஆகி சூர்யாவுக்கு ஆராய்ச்சிக்கூடத்தின் கொல்லைப்புற ரகசிய வழியைக் காட்டி அனுப்பி வைப்பதாகட்டும் இயக்குநரின் சோஷியலிச வெறி கண்ணாபின்னாவென தலைவிரித்தாடுகிறது.

அப்புறம் இயக்குநரிடம் இருக்கும் கெமிஸ்ட்ரி செமயாக படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. “அயன்” படத்தில் கூகிள் செய்தே போதை மருந்தைக் கண்டுபிடித்து, டெல்லி கனேஷ் போன்ற உயர் அதிகாரியை வியக்க வைத்த ஆனந்த் சார் தான், இந்த படத்தில் தாத்தா விஞ்ஞானியின் உருவத்தில் நடித்திருக்கிறார் போல. ”எனர்ஜியான்” பாலை ஆராய்ச்சி செய்ய கம்ப்யூட்டருக்கு ஊசி போட்டு, “மேட்லாப்” அவுட்புட் கிராப் எல்லாம் பார்த்து ஒருவழியாய் பிரச்சனையைக் கண்டுபிடித்து, மாற்று மருந்துக்கான “பிராஜக்ட் ரிபோர்டையும்” கையோடு கொடுத்த்து விட்டு படம் கிளைமாக்ஸை நோக்கி நகருவதற்கு பெரும்பாடு பட்டிருக்கிறார் தாத்தா விஞ்ஞானி.

அப்புறம் சூர்யாவுக்கு பத்து அப்பா என்றொரு புத்தம் புதிய கான்செப்ட். அதிலும் உலக அறிவாளிகளாக தேர்ந்தெடுத்து கலந்து செய்த கலவை. எல்லாருமே பெயர் தெரியாத அப்பாட்டக்கர்களாக இருந்தால் ரசிகர்களுக்குப் புரியாது என்ற காரணத்தால், ரசிகக்கண்மணிகள் அறிந்த உலக விஞ்ஞானிகளான ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களின் பெயர்களை வைத்து வகுப்பெடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர்.

படக்குழுவுக்கு கடைசி வரை படத்தை சன் டீவிக்குக் கொடுக்கப் போகிறோமா, ஜெயா டீவிக்குக் கொடுக்கப் போகிறோமா என்று தெளிவில்லாமலே இருந்திருப்பார்கள் போல. போனால் போகுது என்று பொதுவாக டி.டி.பொதிகை சேனலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் சபாஷ் பெரும் இடங்களில் இதுவும் ஒன்று. 

கே.வி.ஆனந்த் சார் ஒவ்வொரு படத்திலும், தன்னுடைய முந்தைய படங்களையே ஸ்பூஃப் செய்வார். இந்த முறை அவருக்கு எந்த கவலையுமில்லை. மாற்றானை ஸ்பூஃப் செய்தே இன்னும் ஒரு நான்கைந்து படங்கள் செய்யலாம். அப்படி செய்யும் போது இந்த பதிவிலுள்ள பாயிண்ட்டுகளையும் நோட் செய்ய வேண்டும். பதிவுக்கு கிரடிட் கொடுக்காவிட்டாலும் செக் மட்டுமாவது கரெக்ட்டாக அனுப்பி வைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடைசி வரி பன்ச் டயலாக்கிற்கு தலைப்பை பார்த்துக் கொள்ளவும்.

Friday, October 19, 2012

இது தான் சார் வாழ்க்கை!

அண்ணா பல்கலைக்கழக மதுரை மண்டல மையத்தில் ஒரு கருத்தரங்கு. சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசாக தமிழ் புத்தகங்களை வழங்கினார்கள். “அட!” என்று ஆச்சர்யத்துடன் என்ன புத்தகங்கள் என்று எட்டிப்பார்த்தால்... புத்தங்களை தேர்வு செய்தவர் “நீயா நானா” கோபிநாத்தின் வெறித்தனமாக ரசிகர் போல. எல்லாமே அவர் எழுதிய புத்தகங்கள் தாம். அவர் இவர் இலக்குக்குப் போதுமான புத்தங்கள் இன்னும் எழுதவில்லை போல. ஓரிரண்டு புத்தகங்களை நான்கைந்து பிரதி வாங்கி வந்து அடுக்கி விட்டார். ”அட, அடடடடா!!!!”வாகிவிட்டது.

# வாழ்க ப்ராண்ட் செல்லிங்.
**************************************

சென்ற வாரத்தில் ஒருநாள், அலுவலகத்தில் ஒருவர் விடாமல அனைவரும் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி: “நீங்க தி.மு.க வா?, இத்தனை நாளா தெரியாதே !”

அவர்களுக்கு நான் சொன்ன பதில், “நிச்சயமா நான் தி.மு.க இல்ல, அவங்களோட எனக்கும் நிறைய வாய்க்கா வரப்பு தகராறு இருக்கு. ஆனா, சர்க்கஸ் கூடாரம் மாதிரி கூத்தடிச்சிட்டு இருக்குற, நிர்வாகம் சீரழிஞ்சு போய் கிடக்குற, சாதாரண மக்களோட அன்றாட பிரச்சனைகளை மறந்தும் கண்டுகொள்ளாத, ஒரு அமைச்சர் தன் துறையைப் பற்றி கள ஆய்வு செய்யிற அளவுக்குக் கூட நேர அவசாகம் கொடுக்காமல் பதவிகளை சுழற்றி அடிக்கிற, தொலைநோக்குத் திட்டங்களோ, மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசியப் பிரச்சனைகளை சரி செய்வதற்கோ ஏதேனும் போர்க்கால நடவடிக்கைகள் பற்றி யோசிக்கக் கூட முடியாத, கூடங்குளம் போல தீப்பற்றி எரியும் நிகழ்வுகளில் எண்ணெய் ஊற்றும் ஒரு செயல்படாத இருண்ட அரசு நிர்வாகத்துக்கு எதிரா போராட்டம் நடத்தும் மாநிலத்தின் “பெரிய” எதிர்க்கட்சிக்கு நான் வெளில இருந்து ஆதரவு கொடுக்குறேன். அதுக்குத் தான் கருப்பு சட்டை.”

#இவ்ளோ லென்த்தா தம் கட்டி பேச முடியல, சார்ட்டா தான் சொன்னேன் :)

**************************************

பதினாலு மணி நேரம் கரண்ட் இல்லாம தொழில் முடங்கிப் போய் அவனவன் சாக மாட்டாம கெடக்குறாய்ங்க... பொழப்பத்த பத்திரிக்கைக்காரனுவ “மின்சாரத்தடையால் பொதுமக்கள் மெகாசீரியல் பார்க்க முடியாமல் தவிக்கின்றனர்”னு முதல் பக்க செய்தி போடுறான். ”செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தால் கரண்ட் இல்லாட்டியும் பார்க்கலாம்”னு சந்துல சிந்து வேற.... என்ன பொழப்பு இதெல்லாம்?

**************************************


பணிநிமித்தமாக ஒரு மத்திய அரசு நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அரசு நிறுவனம் தானா என வியக்க வைக்கும் வண்ணம் அவ்வளவு தூய்மை. எதிரில் வருபவர்கள் எல்லோரும் “சயிண்டிஸ்ட்” என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். “பாதுகாக்கப்பட்ட பகுதி” என அறிவிக்கப்பட்டு, சிறப்புத் தூய்மையுடன் சில அறைகளும் இருந்தன. குளிரூட்டப்பட்ட அந்த அறைகளில் ஒன்றினுள் எட்டிப்பார்த்தால், சீராக அமைக்கப்பட்ட தடுப்புகளில் எல்லாம் ஏதேதோ போட்டு வைத்து ரகம் ரகமாக ’கொசு’ வளர்க்கிறார்கள். என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதனை என்று விவரம் கேட்டால், புதிய வகை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதற்காக கொசுவை வளர்த்து ஆராய்ச்சி செய்கிறார்களாம். 

“கொசுவுக்கெல்லாம் விஞ்ஞானியா” என்று கேட்க நினைத்தேன், கேட்கவில்லை.

#”இது தான் சார் வாழ்க்கை!” என்று ’டேக்’ மட்டும் போட்டு அமைகிறேன், நன்றி வணக்கம்.
**************************************

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.

அனுஷ்கா முத்தலாக இருக்கிறார் என்று நாக்கின் மீது பல்லைப் போட்டு பேசும் நயவஞ்சகர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன், “அவர் பிஞ்சாக வந்த போது ஆதரவளிக்காமல் துரத்தி விட்ட பாவிகள் தான் நாமெல்லாம் என்பதை மறந்து விடக் கூடாது”.

**************************************

Thursday, October 18, 2012

போஸ்ட்பெய்ட் மார்டனிஸம்

ஃபேஸ்புக் “வாலில்” அவ்வப்போது கிறுக்கியவற்றை வரலாற்றில் செதுக்கும் முயற்சியாக இங்கேயும் பதிந்து வைக்கிறேன்.

**************************************

”செம்பதிப்பு” என்பது கெட்டி அட்டை போட்டு இரண்டு மடங்கு விலை வைத்து விற்பது. 
#புத்தகச்சந்தை  

**************************************
முத்லல ‘பிரதி’யின் மரணம்னு ஆரம்பிச்சாங்க. அப்புறம் ஆசிரியரை சாகடிச்சாங்க. அந்த வரிசைல இப்போ நாம புதுசா ஒன்னு ஆரம்பிக்கிறோம் “வாசகனின் மரணம்” னு.  பாதி படிக்கும் போதே கிழிச்சுத்தூர எறியனும்னு நினைக்கிறவனெல்லாம் ரத்தம் கக்கி சாவான்னு முன்னுரைலயே சொல்லீறோம்.
#போஸ்ட்மார்ட்டமிசம்

**************************************

நம்பிக்கை பொய்க்கும் பொழுதுகளில் எதிர்பாராமல் பெய்யும் ஒரு பெருமழையும், பருவமழை பொய்க்கும் பொழுதுகளில் எதிர்பார்ப்புடன் செய்யும் கடவுளுக்கான ஒரு பலியும் எங்களை நகர்த்திக் கொண்டு செல்கின்றன.
**************************************

சொல்லிவிட்டு செய்தால் மொழிபெயர்ப்பு, சொல்லாமல் செய்தால் படைப்பு.

#இதுதானாய்யா இன்றைய இலக்கியம் ?
**************************************

கொஞ்சம் வயது முதிர்ந்த முற்போக்குவாதிகளிடம் எனக்கு எப்போதும் கொஞ்சம் பிரச்சனை. “சார்” என்று அழைத்தால், ஆங்கில ஏகாதிபத்யத்தில் ஆரம்பித்து வட அமெரிக்கா, கியூபா வழியாக ரஷ்யா, சீனா வரை செல்கிறார்கள். 

ஒருவரை வாய் தவறி ஒருமுறை “தலைவரே!” என்று அழைத்து விட்டேன். அவ்வளவு தான் சினம் கொண்டு சீறி எழுந்து, தமிழனின் அடிமை குணம் என்றுமே மாறாது என கழுவிக் கழுவி ஊற்றிவிட்டார்.

சரி, பெயர் சொல்லி அழைக்கலாம் என்றால் வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பது அழகா என்று மடக்குகின்றனர். ”அண்ணா” என்று அழைக்கலாம் என்றால் ஒரு அரை மணி நேரத்திற்குக் குறையாமல் சமத்துவ லெக்சர் அடிக்கிறார்கள். 

ம்ம்ம்... வேறு வழியில்லை, அப்படி கூப்பிட வேண்டுமென்று தான் அவர்கள் விரும்புகிறார் போலும். எனக்குத்தான் ஒரே கூச்சமாக இருக்கிறது, இருந்தாலும் தம் பிடித்து சிரிக்காமல் சொல்லி விட வேண்டியது தான், “வணக்கம் தோழர்!”
**************************************

மதுரை - இந்த நகரம், தோளில் கை போட்டு அழைத்துச் செல்லும் ஆத்ம நண்பனைப்போன்ற அருகாமையைத் தருகின்றது. இந்த ஈர்ப்பினால் தானோ என்னவோ எந்த வெளியூர் பயணத்தின் போதும் ஒரு அந்நியத்தன்மையும், பாதுகாப்பின்மையும் தானே குடிகொண்டு விடுகிறது.
#மதுரையைச் சுற்றிய கழுதை வேறெங்கும் செல்லாது.
**************************************

கற்காலத்தின் ஒரு பிரதேசத்தில் அரை மணி நேரம் மின்சாரம் வருகிறது, அடுத்த ஒரு மணி நேரம் நிறுத்தப்படுகிறது. இந்த சுழற்சி தொடர்ந்தால் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் மின்சாரம் இருக்கிறது என்று கணக்கிடவும்?
#பொதுஅறிவுகேள்வி
**************************************

Tuesday, October 16, 2012

தற்கொலை - மொழிபெயர்ப்பு கவிதை

தற்கொலை
- ஜோர்ஜ் ஃபிரான்சிஸ்கோ இசிடொரொ லூயி போர்ஹே.

இரவில் ஒரு விண்மீனும் எஞ்சியிருக்காது
ஏன் இரவே கூட எஞ்சியிருக்காது.
நான் இறப்பேன், என்னுடன்
சகிக்கவியலாத இந்த மொத்த
பிரபஞ்சமும் இறக்கும்.
நான் பிரமிடுகளையும், நாணயங்களையும்
கண்டங்களையும், 

அனைத்து முகத்தோற்றங்களையும் அழிப்பேன்.
நான் வரலாற்றினை தூசியாக்குவேன்,
தூசியிலும் தூசியாக.
நான் இப்பொழுது
கடைசி சூரியமறைவை உற்று நோக்குகிறேன்.
கடைசிப்பறவையின் குரலைக் கேட்கிறேன்.
நான் எனது வெறுமையை ஒருவரிடமும்
விட்டுவிட்டுச் செல்லவில்லை.

(தமிழில் - வி.பாலகுமார்)

The Suicide
- Jorge Francisco Isidoro Luis Borges

Not a star will remain in the night.
The night itself will not remain.
I will die and with me the sum
Of the intolerable universe.
I’ll erase the pyramids, the coins,
The continents and all the faces.
I’ll erase the accumulated past.
I’ll make dust of history, dust of dust.
Now I gaze at the last sunset.
I am listening to the last bird.
I bequeath nothingness to no-one.