Tuesday, April 23, 2024

நோ சொல்லுங்க!

"உங்கள் பாட்டி உங்களுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக் கொள்கிறார். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை, என்ன சொல்வீர்கள்?"

"விளையாட்டில் உங்கள் அணிக்கும், எதிர் அணிக்கும் சண்டை வருகிறது. எதிர் அணியைச் சேர்ந்த பையனை அடிக்கச் சொல்லி உங்கள் நண்பர்கள் தூண்டுகிறார்கள். என்ன செய்வீர்கள்?"
 
இப்படி எளிய கேள்விகள் மூலமாகவும், சிறு கதைகள் மூலமாகவும் சிறார்களுடன் உரையாடுகிறது "நோ சொல்லுங்க" புத்தகம். மிக எளிமையான வாக்கிய அமைப்புகளில், சின்னச் சின்ன எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, குழந்தைப் பருவத்தில் இருந்தே பிடிக்காத விஷயங்களில் 'நோ' சொல்லும் பழக்கத்தை எப்படி வளர்ப்பது என்று கூறுகிறது இந்நூல்.  புத்தகம் என்பதை விட எளிமையான பயிற்சிக் கையேடு என்றே கூறலாம்.

முக்கியமாக, 'நோ' சொல்வது சொல் பேச்சுக் கேளாமை இல்லை, தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்பதையும் பெற்றோர்கள் அத்தகைய சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது புத்தகம். குழந்தை பொய் சொல்லிப் பழகாமல் இருக்க முதலில் வீட்டில் அது மறுத்துப் பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதையும், அதனைக் காரணங்களோடு விவரிக்கும் சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்பதையும் பேசுகிறது.

சிறார்களும், பெற்றோர்களும் படிக்க வேண்டிய நூல்.

"நோ சொல்லுங்க" - மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல். 

ஆசிரியர்களும் வாசிப்பு இயக்கச் செயற்பாட்டாளர்களுமான சக.முத்துக்கண்ணன் மற்றும் ச.முத்துக்குமாரி இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

மேஜிக் லாம்ப் பதிப்பாக இப்புத்தகத்தை கொண்டு வந்திருக்கும்
எதிர் வெளியீடு நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை. இத்தகைய சிறந்த புத்தகத்தை மலிவு விலை சிறப்புப் பதிப்பாக வெளியீட்டு குழந்தைகள்/சிறார்/பெற்றோர்கள் மத்தியில் இதனைப் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும்.