Saturday, December 31, 2011

நாளை மற்றொரு நாளே !


"டிமாண்ட்" உள்ள பொருளுக்கு விலையேற்றி விற்பது என்ற கொள்ளை இன்று குறுந்தகவல் வரை வந்து நிற்கிறது. புத்தாண்டு அன்றோ, முதல் நாளோ குறுந்தகவல் அனுப்பினால் அதிக பைசா வசூலாம். நம் மக்கள் அதற்கெல்லாம் சளைத்தவர்களா என்ன. 29ம் தேதி, 30ம் தேதியே வாழ்த்து 'எஸ்.எம்.எஸ்'கள் அனுப்பத் துவங்கி விடுகிறார்கள். இப்படியே அதிக கட்டணங்களுக்கான நாட்களை கூட்டிக் கொண்டே போய் மக்கள் அக்டோபர், நவம்பர் மாதத்திலேயே புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் போல. இருக்கட்டும், நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியாவிட்டாலும், ஜஸ்ட் இன்று உங்களை நினைக்கிறேன் என்ற வகையில் ஒரு குறுந்தகவலும் உவப்பானதே.

ஒரு காலம் இருந்தது. புத்தாண்டு வாழ்த்து சொல்ல, செல்ஃபோனில் உள்ள தொள்ளாயிரத்து சொச்சம் எண்களுக்கும் வரிசையாக குறுந்தகவல் அனுப்புமாறு சிறிய மென்பொருள் "கோட்டிக்காரத்தனம்"  செய்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது, வரும் வாழ்த்துகளுக்கு சம்பிரதாய நன்றி சொல்லும் அளவில் நிற்கிறது. 

பெரிதாக புத்தாண்டு கொண்டாட்டங்கள், சபதங்கள் என்ற ஆடம்பர அலப்பரைகளில் சிக்கிக் கொள்ளும் பழக்கம் இப்போது வரை இல்லை. எல்லாரும் புத்தாண்டை கொண்டாட "மலையேற" விரும்புகையில், நான் மலைதேசத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது வந்த இரண்டு புத்தாண்டு தினங்களில் மலையிறங்கி மதுரை வந்துவிட்டேன். அந்த அளவு தான் நம் கொண்டாட்ட மனநிலை. ஆனால், ஒரு அளவீடாக கடந்த ஆண்டு எதையெல்லாம் கிழித்திருக்கிறோம் என்று கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதுண்டு. வழக்கமாக கிழித்த பேப்பரெல்லாம் கப்பல் விட்டு விளையாண்டதாய் தான் இருக்கும். இந்த ஆண்டு கொஞ்சம் பெரிய கப்பல் எல்லாம் விட்டிருப்பது போலத் தோன்றுகிறது. இல்லற வாழ்வு துவக்கம், மக்கட்செல்வம், புதுவீடு கட்டி குடியேறுதல், கோவில் குடமுழுக்கு, ஆராய்ச்சிப்படிப்பு துவக்கம், முதன்முதலில் அச்சேறிய படைப்பு என எல்லா விதங்களிலும் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது இந்த ஆண்டு.

அப்புறம், ஒரு சரித்திர சாதனையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பத்து திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். திருமண வருடம் என்றால் அப்படித்தானாம் :)

இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நிச்சயம் இந்த 2011 ஒரு மைல்க்கல். அந்த அளவில் என்றும் நினைவிலிருக்கும் என் இனிய நண்பன் இந்த 2011. 

சென்று வா என் நண்பனே! 

பிறக்கவிருக்கும் புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும் பெற்றிட இனிய புத்தாண்டு வாழ்த்துகள். :)

******

Monday, December 12, 2011

"ரஜினி எனும் யானை"



இன்னும் நினைவிருக்கிறது. சிறு வயதில் அப்பா “மாவீரன்” படத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். படம் பார்த்துவிட்டு வந்து என் தம்பி, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து கையில் “மாவீரன்” எனறு எழுதத் துவங்கிவிட்டான். அம்மா நடுவில் தடுத்து நிறுத்தி, கத்தியை பிடுங்கி விட்டு, முதுகில் நாலு சாத்து சாத்தினார். கையில் வழியும் ரத்தத்தைப் பொருட்படுத்தாமல் அழுது கொண்டே, “நான் ரஜினி. அப்படித்தான் பண்ணுவேன்” என்றான். அப்போது அவன் சிறுவன் கூட இல்லை, வெறும் நான்கு வயது குழந்தை. அதிலிருந்து நாங்கள் சினிமா பார்ப்பதற்கே கூட தடை உத்தரவெல்லாம் கூட சில வருடங்கள் அமலில் இருந்தது. எனக்கும், என் தம்பிகளுக்கும் முதன்முதலில் ரஜினியிடம் ஈர்ப்பு வந்தது அந்த படத்தில் தான். இது போன்ற விஷயங்கள் எங்கள் வீட்டில் மட்டுமல்ல, ரஜினியின் பெயரால் ‘கோட்டித்தனம்’ செய்யும் குழந்தைகள் எல்லா வீட்டிலும் நிறையவே இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். எல்லோரும் சொல்வது போல ரஜினி என்பது ஒரு மந்திரச்சொல். தமிழ்நாட்டின் குடும்பங்களில் இந்த நாற்பது வருடங்களில் அவரது ஆளுமையோ, செய்கையோ, பாதிப்போ இல்லாமல் எந்தவொரு குழந்தையும் வளர்ந்திருக்காது. சிலர் பதின்ம வயதைத் தாண்டிய பிறகு ரஜினி ரசிப்பை மனதிற்குள் மட்டும் வைத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் தங்களது “ப்ரஸ்டீஜ் சிம்பலாக” ரஜினி ரசிகன் என்ற விசிட்டிங் கார்டை உபயோகிக்கிறார்கள்.

ரஜினி என்ற கலைஞனை ரசிப்பது, ஏன் விமர்சிப்பது என்பது கூட ஒரு வகையில் சரி தான். கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளிலும் கூட ஏகப்பட்ட சர்ச்சைகளும் உண்டு. இதெல்லாம் அவரவர் தம் மனநிலைக்கேற்ப ரஜினி என்ற நடிகனை, ரஜினி என்ற தனிமனிதனின் கருத்தை ஏற்கவோ, மறுக்கவோ வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இன்னொரு வகை இருக்கிறது. ரஜினி என்ற பிம்பத்தை சந்தைப்பொருளாக்கி கூவிக்கூவி விற்பது. 

சமீப காலமாக ரஜினியின் ரீச் இந்தியா முழுமைக்கும், உலகின் மற்ற சில பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் ரஜினி பிம்பத்தை கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நோக்கம் ரஜினியைப் பாராட்டுவதாகவோ, விமர்சிப்பதாகவோ கூட இருப்பதில்லை. ரஜினியை வைத்து முடிந்தமட்டும் கல்லா கட்டுவது. இவர்களின் வியாபாரத்திற்கு ரஜினி இல்லையென்றால் நாளை புகழின் உச்சத்திலிருக்கும் இன்னொரு பிம்பம். அவ்வளவுதான். முன்பு ஒரு ட்ரெண்ட் இருந்தது. ரஜினியை தாழ்த்தி பேசி பேட்டி கொடுத்தால் பிரபலமடையலாம் என்று. இன்று அடுத்த நிலையாக , யார் அதிகமாக ரஜினியைப் பற்றி பேசுகிறார்களோ அவரே அன்றைய பிரபலம். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களின் ஊத்துக்கு இவர்கள் ரஜினி ரசிகர்களை ஊறுகாய் ஆக்கிக் கொள்வது தான். 

முன்பு ரஜினி உயிருக்குப் போராடி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், கடைநிலை ரசிகர் ஒவ்வொருவரும் அவர் நல்லபடியாக உயிர் பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்க, இந்த வியாபாரிகளோ, “ரஜினி நிச்சயம் குணமடைவார், குணமடைந்து ‘ராணா’ படத்தில் நடித்து மக்களை மகிழ்விப்பார்” என்று அறிக்கை விடும் சாக்கில் அடுத்த படத்துக்கான டெம்ப்போ குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர். அட, பதர்களே! அவர் இனி படமே நடிக்காவிட்டாலும் சரி, நல்ல ஆரோக்யத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே அவரை உண்மையாக நேசிப்பவரின் விருப்பமாக இருக்க முடியும்.

இந்த ஆண்டும் ரஜினியின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் அந்த கொண்டாட்டங்களை நமது ஊடகங்கள் பன்மடங்கு ஊதிப் பெருக்கி ப்ரைம் டைமில் ஒன்றுக்கு பத்து முறை ஒளிபரப்பி ரஜினி பாசம் காட்டுவார்கள். பிறந்தநாள் கொண்டாட்டம் என்று மட்டுமல்ல, ரஜினி சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வையும், ஏன் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மருத்துவமனை காட்சிகள் கிடைத்தால் கூட பாசமுடன் ஒளிபரப்பி, நடுவில் நிறைய விளம்பர இடைவேளை வைத்து ரஜினி என்னும் பிம்பத்தை துண்டு துண்டாக்கி விற்றுக் கொண்டிருப்பார்கள்

இவர்களுக்கு, யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஆனால் ஒரு வேளை, யானை இ’ர’க்க வேண்டிய நிலை வந்தால், கால் காசு போட இந்த வியாபாரிகள் வரப்போவதில்லை என்பது தான் உண்மை.


ரஜினி என்னும் நடிகரின் உண்மை ரசிகனாக, அவருக்கு “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்". அவருக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், நிம்மதியும் நிலைத்திருக்கட்டும்.

******

Saturday, December 10, 2011

மதுரை ”போஸ்டர்”



மதுரை மண்ணின் மைந்தர்களின் ”போஸ்டர் கிரியேடிவிட்டி”க்கு அளவே கிடையாது. இந்த கலாச்சாரம் வேறூன்றி, செழித்து வளர என்றும் பெருந்துணையாய் இருப்பவர்கள் நம் திரைநாயகர்கள் தான். தீபாவளிக்கு அவர்கள் தலைவர் படம் ரிலீசானால் போதும், போஸ்டர்கள் தொடங்கி கட் அவுட், கொடி, தோரணம், பாலாபிஷேகம் இப்போது பீராபிஷேகம் என கலக்குவார்கள், பொங்குவார்கள், வழிவார்கள். அதே போல, தலைவர் படம் வெளிவராத போது துக்க தீபாவளி கொண்டாடவும் தயங்க மாட்டார்கள். இரங்கல் செய்தி போல கண்ணீர் சிந்தும் கண்கள் படமெல்லாம் போட்டும் கறுப்பு பார்டர் கட்டி கொட்டை எழுத்துகளில் “தலைவா, உன் படம் வெளிவராதபோது தீபாவளி ஒரு கேடா!” என உருகியிருப்பார்கள். இதெல்லாம் சும்மா பப்ளிசிட்டிக்காக மட்டும் செய்வதில்லை. உண்மையிலேயே ரசிகர் மன்றத்தினர் முச்சந்திகளில் பந்தல் போட்டு கறுப்புக் கொடியேற்றி, தீபாவளி அன்று முழுதும் தலைவரின் சோகப்பாடல்கள் ஒலிக்க விட்டு, அந்த பந்தலிலேயே இழவு காத்த நிகழ்வுகளெல்லாம் நடந்திருக்கின்றன.

சிறிது நாட்கள் முன்பு நடிகர் ரஜினி உடல்நலமில்லாமல் இருந்த போது சில ஆட்டோக்களின் பின்னால் எழுதியிருந்த வாசகம் நேரடியாக மதுரை மீனாட்சிக்கு வேண்டுகோள் எல்லாம் வைத்தது. “தாயே மீனாட்சி, ரஜினிக்கு சக்தி கொடு!”என்று அந்த வாசகத்தை வாசித்த ஒவ்வொருவரும் தங்களை அறியாமலே ரஜினிக்காக வேண்டிக் கொண்டனர். இப்போது “எமனையே எதிர்த்தவன், எவனையும் எதிர்ப்பான்” என ரஜினி பிறந்த நாள் போஸ்டர் வரை தூள் பரத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“கடவுள் முரளி வாழ்க” - சாலையில் போகும் போது, என் போல் சைடில் பராக்கு பார்த்துக் கொண்டு செல்லும் ஒவ்வொரு மதுரைக்காரனுக்கும் இந்த வார்த்தைகளுக்கென இருக்கும் பிரத்யேக ஃபாண்ட் இந்நேரம் மனதில் தோன்றியிருக்கும். கரிக்கட்டையில் கிட்டத்தட்ட மதுரையின் அனைத்து சந்து பொந்துகளிலும் வருடக்கணக்காக இந்த வார்த்தைகள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரே நபர் தொடந்து சளைக்காமல் நடிகர் முரளியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார், கிட்டத்தட்ட தனிநபர் புரட்சி போல அதுவும் முரளி இறந்த பிறகும் கூட.

நடிகர்கள் போஸ்டர் அடிப்பதன் நீட்சியாக மக்கள் அடுத்த நிலைக்கும் சென்று விட்டனர். கல்யாணம், கருமாதி, காதுகுத்து, பூப்புனித நீராட்டுவிழா என சகலத்துக்கும் போஸ்டர் அடித்து கலக்கிக் கொண்டிருப்பார்கள். அவற்றில் அவர்கள் அடிக்கும் வாசங்கள் தான் இன்னும் ‘ஹைலைட்”. ஃபிளக்ஸ் வராத கற்காலத்திலும், மக்களின் கிரியேடிவிட்டிக்கு குறைவே இருந்ததில்லை. “வீட்ல விஷேசங்க” என தொடங்கி, ”இப்படிக்கு நாட்டுக்கொரு நல்லவன் ரஜினி கொலைவெறி குரூப்ஸ்” என முடிவது வரைக்கும் இடையில் ஏகப்பட்ட அம்புக்ள், ஆர்ட்டீன்கள், புறாக்கள், ஏஞ்சல்கள் என போஸ்டர்கள் கலைகட்டும். பிறகு தற்கால டிஜிடல் யுகத்தில் இந்த கலாச்சாரம் பன்மடங்கி பரிணாம வளர்ச்சியடைந்து திரை நடிகர்களின் ஸ்டில்களில் தலையை மட்டும் வெட்டி விட்டு அதில் நம்மவர்கள் புது அவதாரமெடுத்திருப்பார்கள். பாட்ஷா ரஜினி உடமபில் நமது பால்பாண்டியோ, முத்துக்கருப்பனோ தன் நண்பனின் கல்யாணத்தில் மண்டப வாசலில் பத்துக்கு பதினாறு மெகா சைசில் சொடக்குப் போட்டுக் கொண்டிருப்பதை இப்போதும் பார்க்கலாம். அதிலும் ஒரு வெரைடி. பாட்ஷாவிற்கு அருகில் இருக்கும் நாய்க்கு பதிலாக சிங்கமோ, புலியோ தான் உருமிக் கொண்டிருக்கும். இதை “ப்ராண்ட் இம்ப்ரவைசேன்” என்ற தலைப்பில் ஐ.ஐ.எம். மாணவர்கள் பாடமாகப் படிக்கலாம்.

இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும். நம் அரசியல் தலைவர்களுக்கு தொண்டர்கள் அடிக்கும் பேனர்க்ள் தான் லைம்லைட். காந்தி, பெரியார், அன்ணா, பகத்சிங், வீரசிவாஜி, முருகன், சிவன், ஐயப்பன், காளி, மேரி, மேரி கையில்ருக்கும் குழந்தை என சகலரின் தலையையும் தயவு தாட்சண்யமின்றி வெட்டிவிட்டு தற்கால தலைவர்களின் தலையை பொருத்தும் காலங்களும் வந்துவிட்டன. ஏன் ஒரு முறை சச்சின் தலையைக் கூட வெட்டியிருக்கிறார்கள். ஆனால், சும்மா சொல்லக் கூடாது. நல்லா தமாஷா இருக்கும். இந்த போஸ்டர்களைப் பார்த்து விட்டு நடிகர்கள் கூட அப்போதைக்கப்போது சாமி வேடம் போடுவார்கள். அது தனி ட்ராக். ஆனால் அரசியல்வாதிகள் குறிப்பால் தன்செயல் உணர்த்துவதில் வல்லவர்கள். இவர்கள் சூசகமாக தங்கள் வளர்ச்சியை போஸ்டர்கள் மூலமாகவே தெரிவிப்பார்கள். முதலில் அல்லக்கைகளாக இருக்கும் போது, தலைவரின் படத்தை ஆளுயரம் போட்டு, கால்களுக்குக் கீழே ”உண்மைத்தொண்டன்” என தங்கள் பெயரை மட்டும் போடுவார்கள். பின்பு அல்லக்கை தலைவரின் பார்வையில் பட்ட பிறகு, கீழே பெயருடன் வட்டத்துக்குள் போட்டோவும் சேர்ந்து கொள்ளும். பின்பு வட்டம், நகரம் என கொஞ்சம் சேர்க்க ஆரம்பித்த பிறகு, தலைவருக்கு மாலையோ சால்வையோ அணிவிப்பது போன்று தலைவருக்கு சரி அளவில் போட்டோ எடுத்து போஸ்டர் ஒட்டப்படும். பிறகு செட்டிலான பிறகு, தலைவர் போஸ்டரின் வலது மேல் மூலைக்கு சென்று விடுவார். இவர் ஃபுல் சைசில் நின்று கொண்டிருப்பார். கீழே கால்களுக்கருகில் “உண்மைத்தொண்டன்” என இன்னொரு அல்லக்கை உருவாகி இருக்கும். 

சிலர் விஷயங்களை சிலர் செய்யும் போது, ஒரு சிறிய ஏளன சிரிப்போடு கடந்து விடுவோம். சிலருக்கு ஓவர் ஐஸ் வைத்து, வேடிக்கை பார்க்கும் நமக்கே கூச்சம் வர வைத்து விடுவார்கள். சில அரைவேக்காடுக்ளோ மினிமம் வொர்த் கூட இல்லாத சில்லரைகளுக்கும் “ஆகா, ஓகோ”வென்று போஸ்டர் அடிப்பார்கள். சரி என்று சிறு எரிச்சலோடு அதையும் கடந்து சென்று போக முடியும். ஆனால் இன்று ஒரு போஸ்டரைப் பார்த்தேன். சிரிப்பு வரவில்லை, கூச்சம் வரவில்லை, எரிச்சல் வரவில்லை. சத்தியமாய் சொல்கின்றேன், காறித் துப்ப வேண்டும் போலத் தோன்றியது. அந்த போஸ்டர் “பாரத மாதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தலைப்பிட்டு ஓர் இத்தாலிய பெண்மணிக்கு பாரதமாதா வேடம் போட்டு ஒட்டியிருந்தார்கள். Shame on you, Madurai. 
  
******