Saturday, June 3, 2017

காவி அரசியல்

இன்று "மோடி ஜி கி ஜே, பாரத் மாதா கி ஜே, குஜராத்தை பாருங்க ஜி, பாலாறும் தேனாறும் ஓடுது, உத்தர் பிரதேஷ்க்கு கிடைச்ச முதல்வர் மாதிரி நமக்கெல்லாம் எந்த ஜென்மத்துல கிடைக்குமோ தெரியலயே ஜி" என்று கூவும் காவி கோஷ்டிகள் எல்லாம் எங்கிருந்தோ வந்தவர்கள் கிடையாது. நேற்று வரைக்கும் திமுக, அதிமுக என்று ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து அரசியல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் தாம். 

"இராஜாஜிக்குப் பிறகு தமிழ்நாட்டுல தலைவர்களே இல்லை. வெளியே மார்தட்டி சொல்லிக்க முடியாட்டியும், நம்மவான்னு சொல்லி மனசுக்குள்ள பூரிச்சுக்குறதுக்கு மேடம் இருந்தாங்க, இப்போ அதுவும் இல்லேன்னு ஆனபிறகு மோடிஜி தான் தமிழ்நாட்டைக் காப்பத்தணும்" என்று புல்லரித்துப் போய் இருக்கும் எலைட் கோஷ்டியைப் பற்றி நான் சொல்லவில்லை. இலாபமோ, நஷ்டமோ தன் நேரத்தையும் வாழ்க்கையையும் பணயம் வைத்து களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தொழில்முறை அரசியல்வாதிகளைச் சொல்கிறேன்.


இவர்களுக்கு அரசியல் தான் வாழ்வு. திராவிடக் கட்சிகளில் வரிசை ரொம்ப நீளம், போதாக்குறைக்கு மாவட்டச் செயலாளருக்குப் பிறகு அவர் மகன் மாவட்டச் செயலாளர், வட்டத்திற்குப் பிறகு மகன் வட்டம், ஒன்றியத்துக்குப் பின் மகன் ஒன்றியம் என்று வாரிசு இட ஒதுக்கீடு வேறு. இந்நிலையில் கடைமட்டத்திலிருந்து மேல் அதிகாரத்திற்கு வர நினைக்கும் ஒருவனின் அடுத்த தேர்வு தேசிய கட்சிகள். இந்த அடிபடையில் தான், தொண்டர்களே இல்லாவிட்டாலும் கூட, அமைப்பு முறை குலையாமல் இத்தனை வருடம் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தாக்குப் பிடித்துக் கொண்டு நிற்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, தங்களுக்கு அவர்களின் தயவு தேவைப்படலாம் என்ற எண்ணத்திலேயே அதனை அழிக்கும் வேலைகளை திராவிடக்கட்சிகள் மேற்கொள்வதில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், தேமுதிகவில் இருந்தும், மதிமுகவில் இருந்தும் கொத்துக் கொத்தாக நிர்வாகிகளை இழுத்த பெரிய கட்சிகள், காங்கிரஸ் அடிமடியில் எப்போதும் கை வைத்ததில்லை. 
இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிலுமே காங்கிரஸ் தேய்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், மத்தியில் ஆளுகின்ற பாஜக தான் அரசியல் தொழில்காரர்களின் அடுத்த தேர்வு. (பர்செண்டேஜ் கமிஷன் அரசியலில் எப்பொழுதும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பெரும் பங்கு இல்லை என்பது என் துணிபு).


இயல்பாகவே அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முனையும் ஒருவன், தலைமையின் கொள்கைகளையும், திட்டங்களையும் விதந்தோதவே செய்வான். அவனுக்கு வேறு வழியில்லை. அதே போல, தேசிய அளவில் இருக்கும் தலைமையும், அந்தந்த பிராந்தியத்தை பிரதிநுவப்படுத்துவது மாதிரியான திட்டங்களை அறிவிக்கும். அதை வைத்து உள்ளூர் நிர்வாகிகள், தலைமையிடம் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கின் மூலமே தங்கள் பிராந்தியத்துக்கான நன்மைகள் கிடைக்கிறது என்ற தங்களையும் தங்கள் கட்சியையும், தங்கள் பகுதிகளில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். 


துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் தமிழகத்தை, கூட்டணி கட்சிகள் தயவில் பத்து எம்.பி.கள் வரை கிடைக்க வாய்ப்புள்ள ஒரு மாநிலம் என்பதைத் தாண்டி வேறு எப்படியும் யோசிக்கவில்லை. இந்த நிலையில் பாஜக இன்னும் மோசம். அவர்களைப் பொறுத்தவரை தமிழகம் என்பது புளிக்கும் திராட்சை. ஆனால், பாஜகவின் தேசியத்தலைமையை நம்பி, களத்திலிருக்கும் மாநில, மாவட்ட தலைவர்களின் நிலைமை தான் பரிதாபம். வெளியில் ஜபர்தஸ்தாக பேசிவிட்டு, வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு, அவர்கள் ஒன்று குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருக்க வேண்டும் அல்லது தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்.


தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். நேர்மையான முறையில்  கைகொள்ள நினைத்திருந்தால், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். ஜெ மர்ம மரணத்திற்குப் பிறகான குழப்பம், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம் என்று வரிசையாய் வந்த பிரச்சனைகளின் போதெல்லாம் "நாங்கள் உங்களோடு இருக்கிறோம்" என்ற பிம்பத்தை (பெயருக்காவது) உருவாக்கி இருக்கலாம். ஆனால் இவர்கள் செய்வதெல்லாம், "என்னையா ஒதுக்கி வைக்கிற, உன்னை என்ன செய்கிறேன், பார்!" என்ற வெறுப்பரசியல் தான். ஆனால் இவர்களை நம்பி, களத்தில் இருக்கும் உள்ளூர் தலைவர்கள் தான் பாவம். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், எதற்கெடுத்தாலும், மோடிஜியைப் பார், யோகிஜியைப் பார் என்று ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் எப்படி வீதி வீதியாக கத்திக் கொண்டிருக்க, எலைட் குரூப்போ, டிவியில் விவாத நிகழ்ச்சியில் உண்மைக்குப் புறம்பான புள்ளி விவரங்களை அள்ளி வீசினோமா, அதன் ஹிந்தி மொழிபெயர்ப்பை டெல்லிக்கு அனுப்புனோமா, சில்லரையைத் தேத்துனோமா என்று காரியத்தில் கண்ணாக இருக்கின்றனர்.

ஆனால், இப்பொழுது தெரிகிறது, இவர்கள் தமிழ்நாட்டை மட்டும் குறிவைத்து எல்லாம் அடிப்பதில்லை. இவர்களின் அரசியலே வெறுப்பின் மூலம் வளர்ந்த அரசியல் தான். பிராந்தியங்களின் தனித்தன்மையை ஒழிப்பது இவர்களின் இரத்தத்தில் ஊறியிருக்கிறது. மொழியாகட்டும், கலாச்சாரமாகட்டும், பழக்கவழக்கங்களாகட்டும், உணவு முறையாகட்டும் எல்லாவற்றிலும் இருக்கும் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்தும் வெறி தான் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. 

"நீ செய்வதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், அதைச் செய்ய உனக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட நான் உனக்காகப் போராடுவேன்" என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் தானே நாமெல்லாம். மண்ணின் மக்களுக்கான அரசியல் செய்யாமல், எதேச்சிகரமான உத்தரவுகளைப் பிறப்பித்து, அதன்படி தான் அனைவரும் நடக்க வேண்டும் எனறு கண்களை மூடிக் கொண்டு ஆணையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அழகல்ல. தன் பரிபாலனையின் கீழ் இருக்கும் எல்லா மக்களும் தம் மக்களே என்று எண்ணாத எந்த சாம்ராஜ்யமும், அது எவ்வளவு அசுர பலத்தோடு இருந்தாலும், நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை. வரலாற்றில் நீங்கள் வில்லன்களாகக் கூட அல்ல, கோமாளிகளாகவே பதிவு செய்யப்படுவீர்கள்.


******