Wednesday, January 23, 2013

வலசை (பயணம் 3) - சொல்ல செய்தியொன்று இருக்கிறது



"இவ்வலசை ஒரு சிறப்புக்கவனத்திற்குரிய குழந்தையின் தாய்க்கு இம்மியளவு நம்பிக்கையை பெருக்க முடிந்தால், ஒரு கற்றல் குறைபாடுள்ள குழந்தை ஒரு புதிய சொல்லை கற்பதை எளிதாக்க இக்கல்விமுறை தன் புகட்டுமுறையில் திருத்தங்கள் செய்ய ஒரு விதை விழுந்தால், தன்னளவில் இப்பயணத்திற்கான பொருளடையும்" (பக்கம் 212)

சிறப்புக்குழந்தைகளை பேசுபொருளாகக் கொண்டு வெளிவந்துள்ள “வலசை - பயணம் 3” இதழின் ஒருவரிப்படிமம் தான் மேற்கூறியவை. பல்வேறு திசைகளிலிருந்து ஒற்றை செவி நோக்கி உரைக்கப்படும் ஒருபொருட்பன்மொழியாக ஒலிக்கிறது வலசையின் மூன்றாம் பயணம். வேறுபட்ட சூழல்களில், மொழிகளில், நாடுகளில், இலக்கியங்களில் பேசப்பட்ட ஒற்றைக் கரு உருவமாகி வெளிவந்திருக்கிறது. 

ஒரு தேர்ந்த ஆய்வு நூலைப் போல, களஞ்சியத்தைப் போல, விதை நெல்லைப் போல, கன்னி மூலையில் சேர்த்து வைத்திருக்கும் பொருள் நிறைந்த பெட்டகத்தைப் போல செழிப்புடன் வந்திருக்கிறது இவ்வலசை ஆழ்ந்த வாசிப்பாளர்களுக்கான அடர்த்தியான பெருளை மென்மையான பேசுமொழியில், வரிகளுக்கிடையில் கண்ணுறுத்தாத போதிய இடைவெளி விட்டு அழகாக உருவாக்கியிருப்பது வலசையின் முதல் வாசகர்களின் தீராத வாசிப்பின் விளைபயன் . 

வலசை - மூன்றாம் பயணத்தின் சில பக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம். முழு இதழையும் இன்னும் வாசிக்கவில்லை. அதற்கு நாட்களாகலாம். சொல்லப்போனால் சில பகுதிகள் என்னளவில், நெருங்க முடியாத அளவிற்கு கனமாகக் கூட இருக்கிறது. நீங்களும் இந்த இதழை வாசிக்கும் போது இதே போன்றோ அல்லது வேறுவிதமான சிரமங்களோ எதிர்கொள்ள நேரிடலாம். ஆனாலும் குழந்தைகளை விரும்புகிற உங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் சொல்ல செய்தியொன்றை வைத்திருக்கிறது இவ்வலசை.

வானத்தை அண்ணாந்து பார்க்கும் வானம் தவிர வேறொன்றுமறியாத சிறுவர்கள், எல்லையில்லா வானத்தை தம் சிறகுகளால் மறைத்து வலசை செல்லும் பறவைகளைக் காண்கிறார்கள். தம் கண்களிலிருந்து தொடங்கி, வானமெங்கும் பூத்துக் கிடக்கும் மேகத்தைப் பார்க்கிறார்கள், ஆடுகளைக் கிடையில் அடைப்பதைப் போல மேகத்தை அடைத்து வைக்கிறார்கள். அகன்ற வானத்தின் மேகங்களை ரசித்தபடி தாம் கட்டிய மணல்வீடுகளிலிருந்து வெளியேறும் நீர்மிருகங்களுக்கஞ்சி அவ்ர்கள் ஓடி ஒளியும் பொழுது குழியளவாய் சுருங்கிய ஆகாயம் அச்சிறுவர்களின் வாலாய் திரிகிறது. எல்லையில்லா வானத்தை மேய்த்துக் கொண்டு செல்லும் சிறுவர்களின் உலகிற்கு பயம்கொண்டு சுருளும் வாலாக ஆகாயன் பின் செல்லும் படிமத்தைப் பேசும் ஒரு கவிதை. (மேகத்தைத் தூண்டிலிடும் சிறுவர்கள் - செல்மா பிரியதர்ஸன் - பக்கம் 6)

விதிமுறைகளுக்குள் அடைக்கப்பட்டு போன்ஸாய் மரமாய் கட்டுக்குள் வளர்க்கப்படும் குழந்தைகளைப் பற்றி பேசுகிறது ஒரு கதை (குழந்தை அவள் செய்த முதல் தப்பு -டொனால்ட் பார்த்தலுமே - பக்கம் 7). புத்தகங்களின் பக்கங்களைக் கிழிப்பது குற்றம் எனும் கற்பிதத்தில் தனியறையில் பூட்டி வைக்கும் தண்டனைக்குள்ளாகும் சிறுமி மேலும் மேலும் பக்கங்களைக் கிழித்துக் கொண்டிருக்கிறாள். தண்டனைக்காலம் மலை போல் குவிய, ஒரு முறைநெறிச் சிக்கலுக்கு ஆளாலும் தந்தை கற்பிதங்களை மாற்றி வடிவமைத்துக் கொண்டு மன உளைச்சலிலிருந்து விடுபடுவதாக முடிகிறது. பிற்போக்குத்தனமாய் இருந்த தன் தந்தைக்கு எதிர் செயல்பாடாக பின்னவீனத்துவ முறையில் எழுதப்பட்ட கதை. “வாய்விட்டுப் படி, எழுதிப்பார், சுவரில் கிறுக்காதே” என எண்ணற்ற வழிமுறைகளை, நமக்குக் கற்பிக்கப்பட்டதை நாமும் கண்மூடிக்கொண்டு நமது குழந்தைகளுக்குக் கடத்திக் கொண்டிருப்பது நினைவில் வருவதைத் தடுக்கமுடியவில்லை. 

தேவபாவனைகளின் முணுமுணுப்புடன் வெளிறித் தேய்ந்த தேவதைகள் ஆமோதிக்க, இறுதி ஊர்வலத்தை ஒரு உன்னதமான இசைக்கோர்ப்பாக்கி, மனிதன் என்னும் துன்பவியல் நாடகத்தின் முடிவில் மண்ணரித்துப் போகும் அழகியலை வெளிப்படுத்துகிறது ஒரு கவிதை (வாகை சூடும் புழு - எட்கர் ஆலன் போ - பக்கம் 54). துன்பத்தைக் கொண்டாடும் அகநிலை.

வகுப்பில் கற்றல் குறைபாடுள்ளவனாக சித்தரிக்கப்படும் ஒரு சிறுவன்,  கரும்பலகையில் எழுதியுள்ள எழுத்துக்கள் தலைகீழ் எறும்புச்சாரையைப் போல் நகர்வது ஏன் என தன் ஆசிரியரிடம் கேட்கவும் ஒரு கேள்வி வைத்துள்ளான். ஆனால் அதை உரக்கக் கேட்கவும் துணிவின்றி, ”நீ எதற்கும் லாயக்கற்றவன், நீ இன்னும் கூர்மையாக கவனிக்க வேண்டும்” என்பது போன்ற தொடர்பற்ற அறிவுரைகளால் துவண்டு போய் தனக்கென ஓர் உலகை உருவாக்கிக் கொண்டு அதிலேயே சஞ்சரிக்கத் துவங்கி விடுகிறான். அத்தகைய ஒரு குழந்தையில் உள்ளக் கிடக்கையை சொல்கிறது ஒரு கவிதை (கற்றல் குறைபாடுள்ள குழந்தை - ஜேம்ஸ் மெக்லெய்ன் - பக்கம் 66)

இன்னொரு கவிதையில், பள்ளியில் தன்னைத் திட்டும் அனைத்து ஆசிரியர்களையும் கேலிச்சித்திரங்களாக்கி தண்டனை அளிக்கத் துவங்குகிறாள் சிறுமியொருத்தி. குச்சியைக் கொண்டு அதட்டும் டீச்சரின் உடம்பைக் குச்சியாக வரைகிறாள். கிள்ளும் டீச்சரின் காதை தரை வரை இழுத்து வைக்கிறாள். தலைமையாசிரியரின் தலையை மழித்து அதைக் கரும்பலகையாக்கி அதில் மதிப்பெண் இடுகிறாள். பூனைகளை, நாய்க்குட்டிகளை ஒத்த சேட்டைகளால் வீட்டையே கலவரப்படுத்துகிறாள், கலகலப்பூட்டுகிறாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் உற்சாகமெல்லாம் வடிந்து மௌனமாகிறாள். பள்ளி துவங்கும் நாள் நெருங்குவதை எண்ணி நாங்களும் பெற்றோரும் பதற்றமடைகின்றனர். (வலியின் சித்திரங்கள் - ந.பெரியசாமி - பக்கம் 68)

கல்குழவி கொண்டு மார்பு மொட்டுகளை நசுக்கும் “முலை நீவுதல்” என்னும் நிகழ்வு இன்றும் ஆப்ரிக்க தேசங்களில் உள்ள ஒரு பழக்கம். முறையற்ற கர்ப்பம், கற்பழிப்பு ஆகியவைற்றை தடுப்பதற்காக செய்யப்படுவதாக சொல்லப்படும் இச்செயல் பூப்படையும் சிறுமிகளுக்கு பெரும்பாலும் தம் தாயின் மூலமே நடைபெறுகிறது. மார்புப் புற்று நோய்க்குக் பெரும்காரணியாக இருக்கும் இந்த செயலுக்கு நான்கு மில்லியனுக்கும் மேலான சிறுமிகள் உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அச்சிறுமியரின் வலியைப் பேசும் கவிதை (முலை நீவுதல் - நேசமித்ரன் - பக்கம் 78) நாவற்பழ வாசமும், நீருயிரியைப் போன்று கதகதப்பும் உடைய தன் தாயின் அடிவயிற்றில் முகம்புதைத்து படுத்துறங்கும் வழக்கமுடைய சிறுமி, பூப்பெய்தவுடன் முலை நீவுதலுக்கு உட்படும் பொழுதும் நடுநடுங்கும் கைகளையுடைய தன் தாயின் அடிவயிற்றுக் கதகதப்பை உண்ர்கிறாள். பின்னாளில் புற்று நோய்க்கு தின்னக்கொடுத்த தன் மார்புக் குழிகளை அவளது தாய் வருடும் போது முன்னெப்போதையும் விட நாவற்பழ வாசனை அதிகமாய் கசிவதை உணர்ந்து கண்ணீர் சிந்துகிறாள். 

தன் மனைவியின் பிரசவத்தை எதிர்நோக்கி விரைந்து செல்கின்றான் கணவன். வழியெங்கும் சகுணங்கள் வாழ்த்திசைக்க “மகனாக இருக்கட்டும், மகனாக இருக்கட்டும்” என்று ஆவலுடன் செல்பவனுக்கு மனவளர்ச்சி குன்றிய ஆண்மகவெனக் கூறும் மருத்துவரின் சொல் இடியென இறங்குகிறது. தன் உலகில் இருந்து விலகிவிட்டவனாகவும், இனி ஒருபோதும் தன்னருகே வரமுடியாதவனாகவும் ஆகிவிட்ட மகனைக் குறித்து கண்ட கனவுகளனைத்தையும் புறந்தள்ளி நிற்கும் இளம் தகப்பனைப் பற்றிய கவிதையொன்று. (வாதுமை மரம் - ஜோன் ஸ்டால்வொர்தி - பக்கம் 93)

சர்வ வல்லமை படைத்த ஸ்வஸ்திகையின் கீழ் ஜெர்மனியெங்கும் வேட்டையாடப்படும் யூத அடிமையென அலைக்கழிக்கப்படும் மனதுடன் தன் தந்தையின் வன்கொடுமையால் உழன்று வெதும்பும், தந்தையின் இன்னொரு உருவாக அமைந்த கொடுங்கணவனையும் கொல்ல ஏக்கம் கொள்ளும் இளம்பெண்ணின் குமுறலாக ஒலிக்கிறது இன்னொரு கவிதை. தான் பிறந்த மண்ணும், மண்ணின் மொழியும் கீழ்மையானதாக வெறுக்க வைக்கும் எண்ணம் தழைத்தெழுந்து தன்னை மாயத்துக் கொள்ளுமுன் எழுதிய தற்கொலைக் கவிதையது (அப்பா! - சில்வியா ப்ளாத் - பக்கம் 152)

சூல் கொண்ட நாள் முதல் தொப்புள் கொடியறுத்து முடிச்சிட்டு முதல் சுவாசம் கொண்ட நொடி வரை நேசனும், கார்த்தியும் ஏற்றுக் கொண்ட சிரமங்களை அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் அவர்களின் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும், பொறுமைக்கும் சிரம் தாழ்ந்த வந்தனங்கள். எந்தப்பருவத்தில் ஊட்டச்சத்து கொடுக்க வேண்டுமென்பதில் மட்டுமல்ல எப்போது பத்தியம் இருக்கவேண்டும் என்பதையும் இவர்கள் அறிந்தே வளர்த்தெடுத்திருக்கிறார்கள் இந்த வலசையை. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பர்களே, இன்னும் உயரம் தொடுவீர்கள் !

வலசை - பயணம் 3
பக்கம் 212 (A4 அளவு)
விலை - ரூ 100
தொடர்புக்கு :
nesamithranonline@gmail.com - 9677250213
karthickpandian@gmail.com - 9842171138

******

Tuesday, January 22, 2013

ஃபேஸ்புக் டியடிக்சன் செண்டர்


மணிக்கணக்கில் கணினியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததில் தோன்றிய அரிய குருத்துக்கள்... ச்சீ... கருத்துக்கள்...

***********************************
இணைய நட்புக்கு:

உங்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். உங்கள் மீதான நன்மதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது. உங்கள் வெற்றியை, மகிழ்ச்சியை இணையத்தில் பகிரும் போதெல்லாம் நானும் ஓரமாய் நின்று உங்கள் கொண்டாட்டத்தில் பங்கு கொள்கிறேன், மனதுக்குள் வாழ்த்து சொல்கிறேன். உங்களது பயணத்தில் நீங்கள் அறியாமலேயே நானும் உடன் வந்து கொண்டே இருக்கின்றேன். 
உங்களுக்கான ஒரு தோல்வியை, ஒரு இழப்பை, ஒரு அவமானத்தை, ஒரு பரிதவிப்பை, ஒரு நம்பிக்கை துரோகத்தை நீங்கள் எழுதும் போது உங்கள் தோள் தொட்டு, இறுக அணைத்து முதுகைத் தட்டிக் கொடுத்து, ஒன்றாய் தேநீர் அருந்தி கண்களால் மட்டும் ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருக்கிறது. 
ஆனால் உங்களுக்கு என்னை யாரென்றே தெரியாது.

#இணையம் கானல் நீர் :(

***********************************
பிரபல எழுத்தாளர் பேட்டி:

எப்படி ஒரே நேரத்தில் எல்லாத் தளங்களிலும் உங்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது?

எளியவர்களால் முடியாத சிரமமான காரியம் தான். உள்ளேயிருந்து ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும் சொற்களை ரகம் வாரியாக பிரித்து மூட்டை கட்டுவது தான் என் வேலை. அறிவுரை எழுத்தை நாளிதழுக்குக் கொடுப்பேன். புரட்சி எழுத்தை ஒரு ஃபோட்டோ ஷுட் நடத்தி அதனுடன் இணைத்து வார இதழுக்கு அனுப்புவேன். பயணக்கட்டுரையை பாக்கெட் நாவலாய் மாற்றுவேன். யாரையாவது திட்ட வேண்டுமென்றால் கேள்வி பதில் எழுதுவேன். சுயவொழுக்க வகுப்பெடுப்பேன். கட்டுடைத்தல் பற்றிய கதையும் சொல்வேன். அப்புறம் இவ்வாறெல்லாம் பிழைக்க வேண்டிய இருப்பதை பகடியாய் மாற்றிப் பதிவெழுதி பிறகதை புத்தகமாக்கி உங்கள் தலையில் கட்டுவேன்.

# எழுதிக் கொண்டிருக்காத “எழுத்து வியாபாரி” தொகுப்பிலிருந்து.
#புனைவு 

***********************************

பசித்திருக்குமொரு சிறுத்தையைப் போன்று ஒளிரும் கண்களுடன் என்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது இந்த இரவு. இமைகள் தாழத் துடித்தாலும் ஏதோவொரு பதைபதைப்பில் என்னை ஒப்புக் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

#வேலைநிறையஇருக்கு!

***********************************
அழகாக எழுதிய ஒவ்வொரு பேனாவையும் தீர்ந்த பிறகும் கூடை நிறைய சேமித்து வைத்திருப்பவள் என் மனைவி. இரண்டு வரிகளுக்கு மேல் எழுத நேரிடும் போதெல்லாம் எழுத்துக்களோடு பேனாவையும் சேர்த்து தொலைத்து விட்டு வருபவன் நான். 

#இனியஇல்லறம் :)

***********************************
இலக்கிய ஆளுமையான அண்ணன் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.  சிறுகதை எழுதுவதை introduction, literature review, problem statement, research methodology, problem analysis, conclusion என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்புக்கான நேர்த்தியுடன் எழுத வேண்டுமென்றார்.
“நானெல்லாம் ரிசர்ச் ஆர்டிகிளையே கதை போல தான் எழுதி அனுப்பிட்டு இருக்கேன்” என்று தொண்டை வரை வந்த வார்த்தையை அப்படியே முழுங்கி விட்டு, “சரிண்ணே, சரிண்ணே !” என்று தலையை மட்டும் ஆட்டினேன்.

#தகவல்பிழை  

***********************************
தன்னையறியாமல் கீழிறங்கும் இமையிதழ்களின் வழியே, தண்டவாளப்பயணமாக விரைந்து செல்கின்றன வாசிப்பிலிருக்கும் வரிகள்.

#படிச்சிட்டு இருக்கும் போதே தூங்கி விழுகிறதை எப்படி சமாளிக்குது பாரு, பயபுள்ள !

***********************************

என்னய்யா, சமூக வலைத்தளங்களை கண்காணிக்க ஸ்பெஷல் போஸ்டிங் போட்டோமே, அந்த 402 எங்கய்யா போனார். சத்தத்தையே காணோம்?

சார், அவர் ஃபேஸ்புக்கல பயங்கரமா அடிக்ட் ஆகிட்டாரு சார். நாலு ஃபேக் ஐடி கிரியேட் பண்ணிட்டு லீவு போட்டுட்டு ராத்திரி பகலா ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டே இருக்கார் சார். பாவம், நல்லா இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டார்.

#சைபர்லீக்ஸ்

***********************************
இந்த இரவு கண்கொள்ளுமளவு முழுமையாய் விரிந்து கிடக்கிறது. காலங்களின் ஈரம் அடர்த்தியாய் இறங்கியிருக்கும் சருகுகள் பூத்துக் கிடக்கும் மதிகெட்டான் சோலையில் ஊர்ந்து ஊர்ந்து தடம் தேடிச்செல்லும் பாதங்களை வழிநடத்திச் செல்லும் கொம்பின் துணையைப் போன்றா இருக்கிறதிந்த இணையம்?

***********************************
சக இணைய பயனாளிகளுக்கு:

சும்மா வேடிக்கை பார்க்குற நமக்கே இவ்வளவு அடிக்சன் ஆகுதே, தினமும் மொக்கை ஸ்டேடல் போட்டு எக்கச்சக்க “லைக்” வாங்குறவங்களுக்கு எவ்வளவு போதையா இருக்கும்!

#விரைவில் ஆரம்பம், ஃபேஸ்புக் டியடிக்சன் செண்டர்,  கூகுள் பிளஸ் கிளை.

***********************************

Monday, January 21, 2013

சூறாவளி காற்றில் சுண்டல்


கூகிள் பிளசிலும், ஃபேஸ்புக்கிலும் அவ்வப்பொழுது கிறுக்கியவை, இங்கேயேயும்....

பிறந்த வீட்டுக்கு சென்றால் போதும், பெண்களின் சவுண்டு சிஸ்டம் தானாகவே சிலபல டெசிபல் அதிகரித்துக் கொள்கிறது.

***********************************
இடர்க்காலங்களில் வலியதன் மௌனமும் தன்னை அண்டியிருக்கும் எளியதற்கான துரோகமே !

***********************************
வயிறைக் கட்டி வாயைக் கட்டி சீட்டு கட்டி சிறுகச் சிறுக சேமித்து மொத்தமாய் செலவழிக்கும் நடுத்தரவர்க்கம்.

***********************************
ரோகித் சர்மாவுக்கு எங்கூட்டு சின்னப்பையன் வைத்திருக்கும் பெயர் “சொங்கி மங்கி” :)

***********************************
புதிய வாழ்க்கை முறைக்குப் பழகி விட்டோம். கரண்ட் இருந்தால்   ஒரு பக்கம் ஜெராக்ஸ் எடுக்க ஒரு ரூபாய், கரண்ட் இல்லாவிட்டால் மூன்று ரூபாய்.

யாரைக் குறை சொல்ல ?

***********************************

போங்க தம்பி, நாங்கல்லாம் மிளகா பஜ்ஜிக்கு காரச்சட்னி வச்சு சாப்பிட்றவய்ஙக.. காரக்குழம்புக்கு பட்ட வத்தல் தொட்டுக்கிறவய்ங்க... இங்க வந்து உப்புமாக்கு சக்கரை கேட்டுகிட்டு !

#பிரபல இலக்கியவாதியின் பன்ச்

***********************************
பொருளின் தரத்தை விட,பொருளைப் பற்றிய எதிர்பார்ப்புளை ஏற்றி விட்டு கல்லா கட்டும் வித்தையை எவ்வளவு திறமையாக செய்கின்றனர் திரைத்துறையினர் !

#ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது மச்சி !!!

***********************************
இரண்டு மூன்று வருடங்களாக வியாபாரம் ஆகாமல் இருந்த, பாண்டியராஜனின் ஏதோவொரு படத்தை நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பினார்களே... விஸ்வரூபம் அது மாதிரி இல்லையே!

#கோயிந்துகொஸ்டீன்

***********************************
"எனக்கு என் புருசன் தான், எங்களுக்கு எப்பவும் ........... கடை தான்”  - மதுரையில் இன்று பார்த்த ஒரு விளம்பரம்.

#என்னய்யா இப்படி இறங்கிட்டீங்க !!!

***********************************
நான்: ”நாங்கெல்லாம் சூறாவளி காத்துல சுண்டல் சாப்பிடுறவிங்க, அடைமழைல அவல் சாப்பிடுறவிங்க !”

மைண்ட்வாய்ஸ்: இதெல்லாம் அந்தந்த சீசன்ல எல்லாரும் பண்றது தான். இதெப்போய் பெரிசா சொல்லிக்கிட்டு... பேசாம போப்பா!

#ஸ்டேடஸ்அப்டேட்

***********************************
தன் குறட்டை சத்தம் கேட்டு, தானே அலறியடித்து தூக்கம் கலைந்து எழுந்து உட்காரும் நிலை நம் எதிரிக்கும் வரக்கூடாது.

***********************************
வெளியூர் கிளைகளிலிருந்து வரும் அலுவல தொலைபேசி அழைப்புகளில் பேசுவது “சாரா” இல்லை “மேடமா” என புலப்படாத சமயங்களில் சும்மா பொதுவாகவே பேசி வைத்ததும் வரும் பாருங்க ஒரு சங்கடம் .... 

#அலுவலக அசம்பாவிதங்கள்

***********************************
பெருநகர மூட்டைகளிலிருந்து ஒருவழியாக அவிழ்த்துக் கொண்டு, ஐந்தாறு ஊர்திகளில் தொடர் பயணம் செய்து தாமதமாக வீடு சென்று “அக்கடா” என்று தலை சாய்க்குமுன் நம் வரவுக்காக வாசலையும் அலைபேசியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு, சமைத்த பலகாரங்களோடும் பரிதவிப்போடும் காத்துக் கிடந்த தாய் தகப்பன், பெண்டு பிள்ளைகளின் கண்ணீர் ததும்பும் சிரிப்பில்... கொண்டாடத்தானே பண்டிகை... அன்பும் நேசமும் எங்கெங்கும் பரவட்டும், அனைவருக்கும் வாழ்த்துகள் !

***********************************
யப்பா... இந்த இண்டெலக்சுவல் வேடத்தைப் போட்டுக் கொண்டு எவ்வளவு குட்டிக்கரணங்கள் அடிக்க வேண்டியிருக்கிறது !

***********************************

Friday, January 11, 2013

சூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை



அடைவெறி நீங்காத தாய்க்கோழியின் விரித்த சிறகுகளுக்குள் அரவணைக்கப்பட்டு, தலையை மட்டும் வெளியே நீட்டியபடி கள்ளப்பிராந்தை அண்ணாந்து பார்க்கும் சிறு குஞ்சுகளாகவும், அவற்றை கொடிய உலகில் வாழ்விக்க வழியற்று தானும் அவையும் சேர்ந்து மரிக்க கிணற்றைத் தேடி அலையும் தாய்க்கோழியான நல்லதங்காளாகவும் அறிமுகமாகிறாள் சூர்ப்பணங்கு. ஆண்டாண்டு காலமாய், சென்ம சென்மமாய் அடுப்படிகளிலும், படுக்கையறைகளிலும், இருண்ட வீதி முனைகளிலும், முள்ளுக்காடுகளிலும், திரையரங்குகளிலும், ஊடகங்களிலும், இணையங்களிலும், ஓடும் பேருந்துகளிலும் நார்நாராக கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுடலின் மொத்த வடிவாய் எழுந்து நிற்கிறாள் சூர்ப்பணங்கு. பாழாய் விரிந்து கிடக்கும் பூமியில் ஊட்ட ஒரு வாய்ச்சோறு கிடைக்காமல் தன் ஏழு பிள்ளைகளுடன் மரணத்தை அணைக்கும் தாய், இறுதியில் ஏழு தனங்களைக் கொண்டவளாய் அவதரித்து உலகுக்கு அமுதூட்டுகிறாள். செவ்விற மேலாடை குருதியால் நனைந்த படியும், வெண்ணிற பாவாடை, சாட்டையடிகளுக்கு ஏற்றவாறு முடிச்சுகளை இறுக்குவதுமாக பெண்ணுடலின் மீதான அதிகாரம் தொன்மம் தொட்டு தொடர்ந்து வருவதை அழுத்தமாக பதிவு செய்கிறாள் சூர்ப்பணங்கு.

வைக்கோல் பிரியை கூந்தலாய் கொண்டு, அதிலும் வண்டுகள் ஊறும் உருவகத்தைக் கொண்டவளாய் வருகிறாள். திசைக்கொன்றாய் முளைக்குச்சிகளடித்து அடைப்புகளை ஏற்படுத்தி, அம்முளைக்குச்சிகளை தன் அடிவயிற்றியிலும் ஏற்றிக் கொள்கிறாள். பின் வெறி கொண்டவளாய் முளைக்குச்சிகளை பிடுங்கி எறியவும் செய்கிறாள். விளக்குமாறையும், முறத்தையும், உலக்கையையும் சடங்குகளின் தொடர்ச்சியாய் சுமந்து கொண்டலைபவள், அவற்றை ஆயுதமாக்கி அதிகாரத்தை நோக்கி இடிமுழக்கமும் இடுகிறாள். ஒரு பார்வைக்கஞ்சும் சிறுபெண்ணாகவும், ஆங்காரங்கொண்டாடும் வனப்பேச்சியாகவும் இருவேறு இயல்பை ஒன்றாய்க் கொண்டவளாய் இருக்கிறாள் அணங்கானவள். பர்தாவுக்குள் உடம்பை குறுக்கிக் கொண்டு கண்மூடிய நிலையிலும் கல்விக்காக அலைமோதுகிறாள். நெல்குத்தும் உலக்கையின் ஒலி அதிர அதிர பூமியைப் பிளக்கும் ஆவேசங்கொண்டவளாய் அடுக்குமுறையை அடிபணிய வைக்கிறாள். ஒவ்வொரு வன்கொடுமையின் போதும் தன் சுயத்தை காத்துக் கொள்ளப் போராடும் அவள், மாரிலடித்துக் கொள்கிறாள், உழன்று தவிக்கிறாள், விடுவித்துக் கொள்ளத் துடிக்கிறாள், இறுதியில் ஒவ்வொரு முறையும் தன்னைத் தானே பலிகொடுத்தே மாண்டு போகிறாள். அவள் கண்ணீரில் வடிந்த உப்பு நீர் உலகை ஆட்கொள்கிறது.

இன்று கொடுங்கோலர்களிடமிருந்து மட்டுமல்ல, வீட்டிற்குள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசித்திரியும் பெண்ணியவாதிகளிடமிருந்தும், சர்பமாய்த் தீண்டக் காத்திருக்கும் கலாச்சார காவலர்களிடமிருந்தும் தன்னை மீட்டுக் கொள்ள பெண் போராட வேண்டியிருக்கிறது. நிர்கதியாய் நடுரோட்டில் கிடந்த ஒருத்தியை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சமுதாயம் தான் இன்று அவள் சாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கிறது. சமுதாய அக்கறைக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் ”சிறப்புப்பார்வை”க்கு நடுவில் பெண்ணுடலைத் தான் விற்றுக் கொண்டிருக்கின்றன. அவை பெண்ணை உபயோகித்து விட்டு தூக்கி எறியும் ஒரு பண்டமாக காட்டிக் கொண்டே, பெண்ணுரிமையைப் போற்றி சிறப்புக் கட்டணத்தில் குறுஞ்செய்திகள் அனுப்ப அழைப்பு விடுக்கின்றன. அரசாங்கமும், அதிகாரமும் புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு புணுகு பூசும் வேலையைத் தான் காலம்காலமாக செய்து கொண்டிருக்கின்றன.

”மணல்மகுடி” குழுவினர் நடத்திய சூர்ப்பணங்கு நாடகம் மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவியர் முன்னே நிகழ்த்தப்பட்டது. கோவில்பட்டி ச.முருகபூபதியின் இயக்கத்தில் நடைபெற்ற இந்த நாடகத்தில் நடித்த இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து நடித்திருந்தனர். தேர்ந்த கலைஞனுக்கான நேர்த்தியுடனும், தெளிவான உச்சரிப்புடனும், கணீர் குரல் வளத்துடனும் நூறு சதவீத ஈடுபாட்டுடன் களப்பணியாற்றினர். அமைக்கப்பட்ட மேடை கூட இல்லை, சிறு கற்கள் குத்தும் செம்மண் தரையில் தான் நாடகம் நடந்தேறியது. ஆனாலும் நடித்தவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அருள் வந்து ஆவேசங்கொண்டாடுபவர்களைப் போல அர்பணிப்புடனும், முழு ஈடுபாட்டுடனும் தம்மை முழுமையாக சூர்ப்பணங்கிற்கு ஒப்புக் கொடுத்து விட்டது போலிருந்தது. ஒலியமைப்பும், இசையும், வெளிச்ச வடிவமும் நாடகத்துக்கான நிஜத் தன்மையை அதிகரித்தன.

நாடகக்குழுவினர் சொல்ல வந்த கரு அங்கு கூடியிருந்த மாணவியர்களுக்கு முழுமையாய் சென்று சேர்ந்தது என்பதற்கு நாடகம் முடிந்தவுடன் எரிமலை போல் வெடித்துக் கிளம்பிய அந்த பெண்களின் ஆவேசம் கொண்ட கைத்தட்டல்ள் மட்டும் தான் தற்பொழுதைக்குள்ள ஒரே சாட்சி. ஆனாலும் விதைகள் விழுந்திருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

உதவி: 
http://nesamithran.blogspot.in/2011/12/blog-post.html
http://tamizharivu.wordpress.com/2011/10/07/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/
http://livingsmile.blogspot.in/2011/06/blog-post_28.html
******