Friday, February 19, 2010

மதுரை பெரியாஸ்பத்திரி.



புதிதாக மணமுடித்த இளம் தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு செல்கின்றனர். செல்லும் வழியின் எதிர்புறம் பூக்கடை தென்பட வண்டியை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மனைவிக்கு பூ வாங்க சாலையைக் கடக்கிறான் கணவன், எதிர்புறம் கணவனை நோக்கி வரும் லாரியைப் பார்க்கும் மனைவி, பதட்டத்தில் கத்தியபடி இரண்டடி முன்னால் விரைய, இந்த பக்கமிருந்து வரும் பேருந்தை கவனிக்கத் தவறுகிறாள். ஒரு காதோடு சேர்த்து ஒருபக்க முகத்தில் அடித்து ரோட்டுக்கு வெளியே தூக்கிப் போட்டுவிட்டு விரைகிறது பேருந்து. ரோட்டை கடந்து விட்ட கணவன், திரும்பிப் பார்த்து நிலைகுலைகிறான். மனைவியை மடியிலேந்தி கதறுகிறான். நெடுஞ்சாலை வண்டிகள் ஏதும் நிற்காமல் பறந்து கொண்டே இருக்கின்றன.  முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் இருக்கும் நிலையிலும், பைத்தியமாய் பதறிக் கொண்டிருக்கும் கணவனுக்கு ஆறுதல் சொல்கிறாள், செல்லிலிருந்து 108 ஐ அழைக்க வைக்கிறாள். மருத்துவமனை வந்து அவசர சிகிக்சை நடக்கும் போதும் கைகள் நடுங்கியபடி தன் தலையைத் தாங்கிக் கொண்டு நிற்கும் கணவனை பார்வையால் தேற்றிக் கொண்டிருக்கிறாள் அந்த இளம்பெண்.

ஞாயிறு காலை வீட்டிற்கு சொல்லாமல், திருப்பரங்குன்றம் மலைக்கு நண்பர்களுடன் விளையாடச் செல்கிறான் பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன். வீட்டிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் இருக்கிறது மலை.  நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே பாதி மலை ஏறி விடுகிறான். விளையாட்டின் உற்சாகத்தில் ஒரு பாறையிலிருந்து கால் தவறி கீழே விழுகிறான். தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பயந்து போன மற்ற சிறுவர்கள், மயக்கத்தில் கிடக்கும் அவனை விட்டுவிட்டு ஓடி விடுகின்றனர். சற்று நேரத்தில் எதேச்சியாக அங்கே வரும் சில இளைஞர்கள் ஆட்டோவில் தூக்கிப் போட்டு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். முதலுதவி செய்யப்பட்ட பின், நர்ஸ் அவனது முகவரியை விசாரிக்க, தேம்பி தேம்பி அழுது கொண்டே இருக்கிறான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எட்டு மணிநேரம் ஆன பின்பும் அவனது பெற்றோருக்கு தகவல் சொல்ல முடியவில்லை. அவர்கள் இவனை எங்கே தேடிக் கொண்டிருக்கிறார்களோ?

தான் பெண் பார்க்கச் செல்லும் முதல் பெண்னையே மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என உறுதியாய் இருக்கும்  இளைஞன். ஒரே மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து பார்த்து விட வேண்டும் என பற்பல ஃபோட்டோக்களை அலசி, கடைசியில் ஒரு பெண்ணை பார்க்க தாய், மகன் இருவரும் டூவீலரில் பெண் வீட்டிற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் நாய் குறுக்கிட, ப்ரேக் அடித்து சரிந்த வண்டியிலிருந்து விழுந்த தாயின் பின் தலை நேராக ரோட்டில் மோத ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். வண்டியின் இடிபாடுகளிலிருந்து எழும் மகன், தாயை கொண்டு வந்து சேர்த்து விட்டு, நான்கு மணி நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறான். அந்த பெண்மணிக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

வாரம் ஒரு முறை மட்டும் வரும் மாநகராட்சி குடிநீர் குழாயை ஒட்டி நீண்ட வரிசையில் காலி குடங்கள். தண்ணீர் வரப் போகின்ற நேரம், வரிசை நீள்கிறது, குடங்களை காக்கின்ற ஆட்கள் கூடுகிறார்கள். சின்ன குடம், ஓட்டை குடம், ஏதோ கணக்கு வழக்குப் படி குடங்கள் மாறுகின்றன. மாற்றுக் கருத்துகள் எழுகின்றன, வார்த்தைகள் தடிக்கின்றன், வாக்குவாதம் முற்றுகிறது. குடங்களின் வரிசை கலைக்கப்படுகின்றது. கலைத்த பெண்மணியின் தலை முடி கொத்தாக பிடிக்கப்பட்டு, அருகிலுள்ள மின்கம்பத்தில் அடிக்கப்படுகின்றது. ரத்தம் கொட்டத் துவங்க, காவல் நிலையம் போய் விட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு வருகிறார்கள். முகம் முழுதும் ரத்தம். முன் தலையில், நெற்றிக்கு மேல் பதினான்கு தையல்கள். அந்த வலி எல்லாம் தெரியவே இல்லை போல, அடுத்த 48 மணி நேரத்துக்குள் முடியைப் பிடித்த பெண்மணிக்கு இன்னும் அதிக தையல் போட வைப்பதற்கான சபதங்களைப் பற்றியே விடாது புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இன்னும்......

கணவனிடம் இரும்புத் தடியில் அடி வாங்கி தலை, முகம் முழுதும் கட்டுடனும், இடுப்பிலும் அருகிலுமாய் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும், காவ்ல்துறை வந்து விசாரிக்கும் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாய் சொல்லும்   டிகிரி படித்த பெண்...

பள்ளி விட்டு வரும் போது, ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து ஒரு வாரம் நினைவு தப்பி, இன்று தான் அம்மாவிடம் ரொம்ப பசிப்பதாய் சொல்லி அழும் சிறுமி, அதைப் பார்த்து வெடித்து அழுது, பின்பு சிரிக்கும் தாய்...

செல்போனில் பேசிச் சென்ற சுவாரஸ்யத்தில், பின்னால் வந்த பைக்கை கவனிக்கத் தவறி, தலை குப்புற விழுந்து நான்கு நாளில் பாதி குணமான தைரியத்தில் மருத்துவர் இல்லாத நேரம் பார்த்து செல்போன் எங்கே எனத் தேடும் கல்லூரிப் பெண்...

இன்னும் எத்தனையோ பேர், எத்தனையோ விபத்துகள், எத்தனையோ விதமான சிகிச்சைகள். 

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் ஒரு நாளில் பார்த்த காட்சிகள்.  ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சுமையை இறக்கி வைக்கனும் போல இருந்தது, வைத்து விட்டேன். 

14 comments:

  1. 102 வது வார்டுக்கு போயிருக்கிங்களா தல!?
    அங்க கொஞ்ச நாள் நான் இருந்தேன்! :)

    ReplyDelete
  2. vithiya yaaraala maaththa mudiyum?

    indha kanamana nihalvugalin varisaiyil thaan vaazhkai oodittu irukku...

    remba kastama irukku vaasikkum podhu...

    ur flow is good....

    GH poganum naale bayam enakku....

    ReplyDelete
  3. அன்பின் பாலா

    என்ன செய்வது - விதி வலியது - மருத்துவமனையின் அவசரச் சிகிட்சைப் பிரிவில் கண்டதை - மன வலி நீங்க - இறைக்கி வைக்கப்பட்ட இடுகை - ம்ம்ம்ம்ம்ம் - என்ன செய்வது

    ReplyDelete
  4. பாலா,மனசு கனக்கிறது,ஆழமான,அழுத்தமான பதிவு.

    ReplyDelete
  5. உங்க சுமை இறங்கிவிட்டது ... எங்களுக்கு சுமை கூடி விட்டது !
    ஒரு நாளில் இவ்வளவா??

    ReplyDelete
  6. இந்த ஐவரையுமே படித்து இருக்கிறேன் ஜெரி நல்ல பகிர்வு அஷோக்கின் மீன் குழம்பு கவிதையும் இட்லி கவிதையும் படித்துப் பாருங்கள் மயங்கி விடுவீர்கள்
    துபாய் ராஜாவின் என்னவளே பாலகுமாரின் உரையாடல் போட்டிக்கான அப்பா கவிதை கமலேஷின் இலக்கணக் கனவு கருணாரசுவை இப்பதான் படிக்கிறேன் அவருடைய செல்லமே இந்த ஐந்தும் நான் விருப்பிப் படித்தவை ஜெரி ரொம்ப நன்றி என் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் நிஜமாவே சிங்கங்கள்தான் congrats Baala Kumar

    ReplyDelete
  7. ஆழமான அழுத்தமான பதிவு. மனிதர்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் பல விபத்துக்களை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  8. manathai varuntha vaikirathu. thiruparanm kudra maanavanukku maavatta kalvi athikaari moolam , avan padikkum palliyil , address eduththu ,thakaval thanthathaka ,kalvi ilaakka moolam thakaval . manam valikeerathu.

    ReplyDelete
  9. உனக்கு கீழே உள்ளவர் கோடி என உணர
    வைக்கும் இடம் பெரிய ஆஸ்பத்திரி..
    wheni visited my maama,ஒரு நாள் நான் ஏன் டாக்டர் ஆக முயற்சி பண்ணலையே -ன்னு வருத்தபட்டதுண்டு.

    ReplyDelete
  10. உனக்கு கீழே உள்ளவர் கோடி என உணர
    வைக்கும் இடம் பெரிய ஆஸ்பத்திரி..
    wheni visited my maama,ஒரு நாள் நான் ஏன் டாக்டர் ஆக முயற்சி பண்ணலையே -ன்னு வருத்தபட்டதுண்டு.

    ReplyDelete
  11. இது தான் மருத்துவ "சேவை" என்பது ....

    நகரங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் கால் வைக்க கொஞ்சம் தைரியம் வேண்டும்....அதிலும் அவசர சிகிச்சை பிரிவுக்கு போக நெஞ்சுரம் வேண்டும்....

    "யோவ் மதுரை பெரிய ஆசுபத்திரிக்கு கொண்டு போங்கய்யா , உசுர காப்பாத்தி போடுவங்கய்ய " என்று சுற்று வட்டார பேச்சுக்களில் தலை நிமிர்ந்து நிற்கிறது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ....

    //ஆழமான அழுத்தமான பதிவு. மனிதர்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் பல விபத்துக்களை தவிர்க்கலாம்.//

    உண்மை...

    //உனக்கு கீழே உள்ளவர் கோடி என உணர
    வைக்கும் இடம் பெரிய ஆஸ்பத்திரி..//

    நச் கமெண்ட் !

    -மதன்

    ReplyDelete
  12. //செல்போனில் பேசிச் சென்ற சுவாரஸ்யத்தில், பின்னால் வந்த பைக்கை கவனிக்கத் தவறி, தலை குப்புற விழுந்து நான்கு நாளில் பாதி குணமான தைரியத்தில் மருத்துவர் இல்லாத நேரம் பார்த்து செல்போன் எங்கே எனத் தேடும் கல்லூரிப் பெண்....//

    சிலருக்கு ஏனிப்படி புத்தியே வருவதில்லை??!!

    ReplyDelete
  13. வால்பையன், சத்யா, சீனா ஐயா, ஜெரி அண்ணா, கருணாகரசு, தேனம்மை, ராமசாமி, மதுரை சரவணன், KKPSK, மதன், எம்.எம்.அப்துல்லா, தருமி ஐயா மற்றும் வருகை புரிந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete