தமிழை உலகுக்கு எடுத்துச் செல்லவும், உலகைத் தமிழுக்கு கொண்டு வரவும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சி, சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா. இரண்டாம் ஆண்டாக இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.
தமிழ்ப் படைப்புகள் மற்றும் பதிப்பகங்கள் பற்றிய அறிமுகத்தை விழாவிற்கு வந்திந்த பன்னாட்டு பதிப்பகங்கள் தெரிந்துகொள்ளவும், போலவே பிற உலக மொழிப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வரவும் இவ்விழா ஒருங்கிணைப்பு மேடை அமைத்துக் கொடுத்தது.
மூன்று நாள் நிகழ்வில் நூற்றுக் கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஆர்வமாய் பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஆனால் இது முதற்படி மட்டுமே. இவை ஒப்பந்தங்களோடு நின்றுவிடாமல் மொழியாக்கப் படைப்புகளாக, மொழிபெயர்ப்புக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கைகளைப் பெறுபவைகளாக முழுமை அடைய வேண்டும். அதற்கு பதிப்பாளர்கள், படைப்பாளர்கள் மற்றும் முகவர்களின் தொடர் உழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவை. அப்போது தான் அரசின் இம்முயற்சிகள் முழு வெற்றியடைந்தவை ஆகும்.
இப்போது, ஒரு நினைவோடை... சென்ற ஆட்சியில், உலகத் தரமான அண்ணா நூற்றாண்டு நூலகமே பராமரிப்பின்றி கவலைக்கிடமாகக் கிடந்தது. இந்த அரசு, இருக்கும் நூலகங்களை புணரமைத்து திறம்பட செயல்பட வைப்பது மட்டுமின்றி கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்தது, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவது, முத்தாய்ப்பாக ஆண்டுதோறும் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நடத்துவது என்று அறிவுசார் உலகில் தமிழையும், தமிழ்நாட்டையும் முன்னிறுத்திக் கொண்டே இருக்கிறது.
இத்தகைய அறிவுசார் நிகழ்வுகள் நடத்துவது ஓர் அரசின் கடமை தானே... இதில் கூடவா அரசியல் பேசுவது என்று கேட்பீர்களானால், ஆம் நம் மக்களுக்கு, அதுவும் இத்தகைய நிகழ்வுகளால் பயன்பெறும் இலக்கியச் சான்றோர்களுக்கு எப்போதும் ஞாபக மறதி அதிகம். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாம் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.
மூன்று நாள் விழாவில் ஒரு நாளேனும் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. செறிவான ஓர் அனுபவம் தவறிவிட்டது. குறையொன்றுமில்லை, ஒரு நாள் இத்தகைய அறிவுசார் விழாக்களை எடுத்து நடத்தும், ஒருங்கிணைக்கும் குழுவில் இருப்பேன்.
எந்தவொரு நிறுவனப் பின்புலமும், அதிகாரத் தொடர்புகளும் இல்லாமல், படைப்பாளியாக நாமே கலந்துகொள்ள முடியும் என்பதே இவ்விழாவின் சிறப்பு. உதவி தேவை எனில், தமிழ்நாடு அரசால் பயிற்சி பெற்ற இலக்கிய முகவர்கள் மூலமாகவும் விழாவிற்கு வந்திருந்த பன்னாட்டுப் பதிப்பகங்களை அனுகலாம். அதைச் சொல்லவே இப்பதிவு. அடுத்த ஆண்டு நம்மில் இன்னும் பலர் கலந்துகொள்ள வேண்டும்.
நம் படைப்புகளைப் பற்றி நாம் பேசாவிட்டால், வேறு யார் பேசுவது!
#CIBF2024
#StalinEra
No comments:
Post a Comment