Sunday, January 14, 2024

எங்கள் விஜயகாந்த்

டிசம்பர் 28, 2023 நடிகர் விஜயகாந்த் மறைந்தார்
 அவர் நினைவை ஒட்டொ எழுதியது.
---
தமிழ்த் திரைத்துறையின் ஒரு சகாப்தம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழக நடிகர்களில் அவரைப் போல ஒருவர் அவருக்கு முன்பும் இல்லை, அவருக்குப் பின்னும் இல்லை. அந்தளவு தனித்துவமான ஆளுமையாக விளங்கியிருக்கிறார் விஜயகாந்த்.

ரஜினிக்கும், கமலுக்கும் இளவட்டங்கள் ரசிகப்பட்டாளம் சேர்ந்து கொண்டிருந்த காலத்தில், அமைதியாக அவர்களை விட எண்ணிக்கையில் மிக மிக அதிகமாக பெண்களுக்குப் பிடித்த நடிகராக விஜயகாந்த் வீற்றிருந்தார். இன்று நாற்பதுகளில், ஐம்பதுகளில், அறுபதுகளில் இருக்கும் தமிழகப் பெண்களில் பெரும்பான்மையோர் மனம் கசிந்து ஆத்மார்த்தமாக ஒரு துளிக் கண்ணீரேனும் சிந்தியிருப்பர். தமிழகத்துப் பெண்கள் அந்தளவு தங்கள் மனதிற்கு நெருக்கமானவராக, குடும்பங்களில் ஒருவராக விஜயகாந்த்தை வரித்திருந்தனர்.

தமிழ்த் திரைத்துறையில் இருக்கின்ற ஒருவரால் கூட அவரைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது போல. ஏற்றத் தாழ்வுகளும், அவமானங்களும் மலிந்து போயிருக்கும் திரைத் துறையில் மிக்க பெருந்தன்மையோடும், திறந்த மனதோடும் உண்மையான ஒரு தலைவனாகவே வாழ்ந்திருக்கிறார். கடைநிலை ஊழியர்களின் நலம், தன்னைத் தேடி வந்த அனைவருக்கும் எப்போதும் பசியாற்றும் தன்மை, தனக்கு நியாயம் என்று தோன்றும் விஷயங்களுக்காக எந்தப் பயமும் இன்றி துணிந்து குரல் கொடுப்பது என்று இயல்பிலேயே சிறந்த தலைமைப் பண்புடன் இருந்திருக்கிறார்.

விஜயகாந்தின் திரைத்துறை வாழ்வு முழுமைக்கும், அரசியல் வாழ்வின் துவக்கத்திற்கும் பாதை அமைத்தவர் அவரது உயிர்த் தோழரான இப்ராகிம் ராவுத்தர். தன் நண்பனுக்காக தனது தனிப்பட்ட வாழ்வையே அர்ப்பணித்திருந்தார் ராவுத்தர். விஜயகாந்தும் அவரை முழுமையாக நம்பி தன்னை அவரிடம் ஒப்படைத்திருந்தார். விஜயகாந்த் முப்பது ஆண்டுகள் திரைத் துறையில் பெரும் பெயர் பெறுவதற்கும், சிறந்த ஆளுமையாக நிலைத்து நின்றதற்கும் ஆணிவேராக ராவுத்தர் இருந்தார்.

காலம் அவர்கள் நட்பில் சிறு விரிசல் கொண்டு வர, அதிலிருந்து விஜயகாந்தின் கிரீடம் நழுவத் துவங்கியது. திரைத்துறையில் நிறை வாழ்வு வாழ்ந்து சாதனைகள் புரிந்தவர், அரசியலில் சரியாகச் சென்று கொண்டிருந்த பாதி வழியில் தடம் மாறிவிட்டார். அதன்பிறகு உடலும் மனமும் நலிவுற இறுதி வரை அவரால் மீண்டு வர முடியவில்லை. இப்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு, விஜி தன் பிரியமான நண்பனுடன் சென்று சேர்ந்துவிட்டார். கண்ணீர் அஞ்சலி கேப்டன். என்றும் எங்கள் தலைமுறையின் மனங்களில் நிறைந்திருப்பீர்கள்.  

#Vijayakanth

No comments:

Post a Comment