Friday, July 5, 2013

வாதனை



தாழிமரங்களை வனையோட்டுத் தொட்டிகளில்
வளர்க்கும் அடுக்ககங்களின்
குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்ட
குறுங்கணினிகள் தேவையாய் இருக்கின்றன.

மிளகாய்ச்செடிக்கு 
அடிக்க வைத்திருந்த ரோக்கருக்கும் 
எறும்புப்பொடியின் சுவைதான் இருக்குமென 
எண்ணியவளின் விளையாட்டு
எப்படி முடிந்ததென சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

கனரக வாகனத்தில அடிபட்டு 
குடல்சரிந்து கிடக்கும் குரங்குக்குட்டியை 
செவ்வரளிப்பூ கொண்டு உரசிச்செல்கிறது
மலையை வகுந்து போடப்பட்ட
நெடுஞ்சாலையின் கோரக்காற்று.

ஸ்திரி பார்ட் போடுபவனின் கனவில்
விடாது இம்சிக்கும் கத்திச்சண்டை.

முடிவுறாமல் நீளுமொரு தற்கொலைக்குறிப்பில்
சுருக்கிட்டுக் கொள்ளும் செய்முறையை
விடாமல் அழித்து அழித்து
வரைவுத் திருத்தம் செய்யும்
மொழிபெயர்ப்புக்காரனின் வாதனை
புரிகிறதா உங்களுக்கு!


******
படம் உதவி: http://www.wallpaperswala.com/bonsai-tree/

Wednesday, July 3, 2013

வாட்டர் ரெசிஸ்டெண்ட் வடை

டீக்கடை உளுந்தவடையில் இப்பொழுதெல்லாம் ஏன் பச்சைமிளகாய் சேர்ப்பதில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்க முடியுமா?
#மத்தியானசிந்தனை

************************************************
புதுசா “வாட்டர் ரெசிஸ்டெண்ட் வடை”னு எதும் கண்டுபிடிச்சிருக்காங்களா என்ன? அரை மணி நேரமா ஊற வச்ச பிறகும் ஒரு சொட்டு சாம்பாரைக் கூட உள்ளே விடாமல் தம் கட்டி நிக்குது உளுந்தவடை.

************************************************
ரொம்ப வருசமா ஊத்தப்பத்தை தான் தோசைனு சொல்லி எங்கம்மா ஏமாத்தி இருக்காங்கன்னு ஹோட்டல்ல சாப்பிட ஆரம்பிச்ச பிறகு தான் தெரிஞ்சுது. 
#அது ஒரு காலம், உலகம் தெரிய ஆரம்பிச்ச காலம் !

************************************************
டிபன் பாக்ஸை திறந்தால் புளியோதரைக்கு வெண்டைக்காய் பொரியல்.... குட் காம்பினேசன்.
எப்படி இப்படியெல்லாம் என்று கேட்டால் வெரைட்டி ட்ரை பண்றேனு பதில் வரும், எதுக்கு வம்பு!
#சத்தம் போடாம சாப்பிடனும் குமாரு.

************************************************
"வடை போச்சே” என்று உணரும் தருணங்களில் எல்லாம் இழந்தது உளுந்தவடை தான் என நம்மை அறியாமலே மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறோம். இதைப் புரிந்து கொள்ளாதவரை இந்த இனத்திற்கு விடிவில்லை.
#statuslikeilakiyavaadhis

************************************************

Monday, July 1, 2013

ஃபேஸ்புக் கலவரம் - வெள்ளைக்கொடிக்கு வேலை

ஃபேஸ்புக்கை பற்றி அவ்வப்பொழுது ஃபேஸ்புக்கில் எழுதிய்வை. சேமிப்புக்காக இங்கேயும்.

**************************************
ஃபேஸ்புக்கில் சும்மா வேடிக்கை பார்ப்பதற்கும் கூகுள் ப்ளஸ்ஸில் சும்மா வேடிக்கை பார்ப்பதற்கும் இடையேயான உளவியல் வேறுபாடுகளை யோசித்துப் பார்க்கிறேன்.

**************************************
மேற்பார்வை பார்த்தபடி நெஞ்சு நிமுத்தி, மீசை முறுக்கி சுத்திட்டு இருக்க பெரியாம்பளைக எல்லாம்  கெத்தா மெயின் ரோட்டு வழியாவே போறது தான் நல்லது போல. சும்மா, சில்லுண்டிப் பயலுக ஏன் இப்படி சலம்புறாய்ங்கன்னு முட்டுச்சந்துக்கு வந்து எட்டிப் பார்த்தா... இப்ப பாருங்க மானாவாரியா  லந்தக் கொடுத்து வழிய மறிக்கிறாய்ங்க...

#பெரியமனுசனுக்கு மரியாதை கொடுங்கடான்னு சொன்னா, எங்கண்ணே கேக்குறாய்ங்க!!!
#ஃபேஸ்புக்கலாட்டா

**************************************
என்னை யாரும் “டேக்” பண்ணக்கூடாது.
என் டைம்லனில் எவனாவது கவிதை எழுதினீங்க, பிச்சுப்புடுவேன் பிச்சு.
எதையாவது திரும்பத் திரும்ப ஷேர் பண்ணீங்க, செம காண்டாகிடுவேன்.
வீடியோ லிங்க் அது இதுனு எதுனா போட்டீங்க, கொன்னேபுடுவேன்.
ஐயோ, ஏன் தான் தினமும் எனக்கு இத்தனை பேர் ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து உயிரை வாங்குறீங்களோ?
ரொம்ப சாதாரணமான ஒரு மொக்கை ஸ்டேடஸ். அதுக்குப் போய் நூத்தி சொச்சம் லைக். நீங்களெல்லாம் எப்ப திருந்தப்போறீங்க.

#இல்ல சார், இப்ப கொஞ்ச நாளா தான்... சீக்கிரம் சரியாயிடும்ல சார்?
#நானும் இப்படி எல்லாம் “பிகு” பண்ணலாம்னு தான் பார்க்குறேன், ஆனா ஒரு பயபுள்ள கூட நம்ம பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டுது!
#ஃபேஸ்புக்காமிடி
  
**************************************
ஃபேஸ்புக் பிரபலங்களுக்கு வர்ற கமெண்ட்டுகளைப் பார்த்தா, உண்மையிலேயே ரசிகக் கண்மணிகள் தான் அப்படி சிலாகிச்சுக்கிறாய்ங்களா இல்ல, இதுக்குனு சம்பளத்துக்கு ஆள் கீள் போட்டுருப்போய்ங்களோன்னு ஒரே டவுட்டு.

#ச்சீ.. பொறாமையெல்லாம் இல்ல பாஸ், நாம அதுக்கு சரிப்பட மாட்டோம் !

**************************************
வந்த நாலு லைக்ல மூனு ஃபேக் ஐடியா இருந்தாக்கூட மீதி ஒன்னு ஒரிஜனலாத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் நடமாடும், பெருமை பீத்தக்களையன்களால் நிறைந்திருக்கிறது ஃபேஸ்புக்

#ஃபேஸ்புக்கை ஃபுல் அன் ஃபுல் ஃபிகர் மடிக்கும் இடமென்னே நினைச்சுட்டானுக போல. :)

**************************************
எங்க பெரியாத்தா அப்பவே சொல்லுச்சு, “பெரியாம்பளய எப்பவும் மரியாதை குறைவா பேசாத கண்ணு... நாளப்பின்ன அவுக குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தரும் போது, உனக்கு நாக்கு ஊறும்.. வேண்டாம்னு வீராப்பா இருக்கவும் முடியாது, இப்படித்தா பெருசுனு உரிமையா பிடுங்கித் தின்னவும் கூசும்”னு...
நாந்தான் கேட்கல!

#சமகால “போயட்டு”கள்

**************************************
ஹாய் டெக்கீஸ், நாப்பது நாப்பத்தஞ்சுக்கு மேலுள்ள பெருசுங்க கேர்ள் ஃபிரண்டு புராணம் பாடும் ஸ்டேடஸ்களை மட்டும் தடை செய்யும் ஆப்ஸ் எதுவும் கண்டுபிடிக்க முடியுமா... அர்ஜண்ட் ப்ளீஸ்!

#முடீலிங்கசாமி
#ப்ளஸ் சொக்கத்தங்கம், நான் பேச்சுபுக்கை சொன்னேன் :)

**************************************
போர் மேகங்கள் சூழ்வதைப் பாத்தால், வேடிக்கை பார்ப்போர் சங்கம் சார்பாக அணிசேரா இயக்கம் ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

#வெள்ளைக்கொடிக்குவேலை
#பேச்சுபுக்கு கலவரம்

**************************************

Sunday, June 16, 2013

நீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு!

இந்த வாரம் ரெண்டு படம் போட்டியில் இருந்தது. சித்தார்த்தா ஷிவாவா என்று யோசிச்சாக்கூட ஷிவா தான் லீடிங்ல இருந்தார். ரெண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் மொக்கையா இருக்குனு எக்ஸ்பர்ட் ஒபீனியனும், எக்ஸிட் போல் நிலவரமும் சொல்லுச்சு. சரி, படம் பிடிக்கலைனாலும் தில்லு முல்லு போன்ற க்ளாசிக்கை குதறிட்டாங்கன்னு ஃபீல் பண்ண வேண்டாமேனு “தீயா வேலை செய்யனும் குமாரு” படத்துக்கு கிளம்பினோம்.

படம் முழுவதுமே ஏகப்பட்ட நாஸ்டால்ஜியா. பத்து பதினைந்து வருடம் ஆனப்பிறகு கூட இன்னும் சித்தார்த் ”பாய்ஸ்”ல பார்த்த மாதிரி இருக்கார். அவ்வளவு சார்மிங்கானு கேக்காதீங்க. ஒரு ”ஐட்டத்தை” எதிர்கொள்ள அப்போ எப்படி பயந்தாரோ அதே மாதிரி தான் இப்பவும் பயப்படுறார். இண்டஸ்ட்ரில இத்தனை வருசம் என்னப்பா எக்ஸ்பீரியன்ஸ் எடுத்தீங்க. அப்புறம் சுந்தர்.சி. தன் கம்பெனி ஆர்டிஸ்ட்களுக்கெல்லாம் கொஞ்சம் ரிச் காஸ்ட்யூம் போட்டுப் பார்க்கனும் ஆசைப்பட்டார் போல, “கலகலப்பு” குரூப்ஸை அப்படியே மொத்தமாய் ஐ.டி. என்வராய்ன்மெண்ட்ல இறக்கி விட்டிருக்கார். அஞ்சலி கொஞ்ச நாள் காணாமல் போயிருந்ததால அவர் மட்டும் தான் தலையைக் காட்டலை. 

படத்துல சந்தானத்துக்குத் தான் செம மாஸ். அவர் இண்ட்ரோல என்னா க்ளாப்ஸ் அள்ளுது...மனுசன் பீக் ஃபார்ம்ல இருக்கார். அடிச்சு தூள் பண்றார். என்ன,  “கிரி”ல வடிவேலு வச்சிருந்த பேக்கரியை இப்ப இவருக்கு தான் எழுதி கொடுத்துட்டு போயிருக்கார் போல, நல்லா மெய்ண்டென் பண்ணியிருக்கார். பாஸ்கி எல்லாம் வாயைத் திறக்காமல் நடித்திருப்பதே மிகப்பெரிய ஆறுதல். அதுக்கு பதில் ஆர்.ஜே பாலாஜி கிடைச்ச கேப்ல எல்லாம், கிடா வெட்ற அளவுக்கு இல்லேனாலும் கிச்சடி கிண்டற அளவுக்காவது பெர்பார்ம் செய்திருக்கிறார். ஆனாலும் ஆனானப்பட்ட சந்தானத்துக்கே பல படங்களுக்கப்பறம் தன் ஜோடி கிடைச்சது, இவர் வந்த புதுசுலயே ஃபிகர் உஷார் பன்ணீடுறார், அதுவும் ஹீரோவின் தங்கையை.. ம்ம்ம் ஃபேட் ஆப் த முண்டக்கண் ஃபிகர் ஆப் கான்ஸ்டிட்யூசன் ஆப் இந்தியா

ப்ரொடக்‌ஷன் யூனிட்ல இருந்து, ”நம்ம சுந்தர் சார் படம், சொந்த பந்தத்தோட தவறாம வந்து சூட்டிங் ஸ்பாட்டை சிறப்பிக்கனும்”னு கம்பெனி ஆர்டிஸ்ட் ஒவ்வொருத்தர் வீட்டுக்கா போய் பணம் பாக்கு வச்சு சிறப்பு செஞ்சிருப்பாங்க போல, அவர்களும் குடும்பம் சகிதமாய் வந்து ஃபுல் மீல்ஸ் சாப்ட்டுட்டு திருப்தியா நடிச்சுக் கொடுத்திருக்காங்க. ஃப்ரேம்ல தூரமா அவுட்டாஃப் ஃபோகஸ்ல சும்மா என்வய்ரான்மெண்ட்டுக்கு நிக்கிற ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட நமக்குத் தெரிஞ்ச முகமாத்தான் இருக்காங்க. ஆனா இந்த மொத்த கூட்டத்துலயும் ஒரு ஜீவன் மட்டும் திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி திருதிருனு முழுச்சுட்டே இருக்கு. பொதுவா, சித்தார்த்தை பார்த்தாலே பீட்டர் பாய் மாதிரி தான் தெரியும். அவருக்கெல்லாம் இந்த “அம்மாஞ்சி” கேரக்டர் சுத்தமா செட்டாகவே இல்லை. படம் முழுதும் பொழுதுதன்னைக்கும் சந்தானம் ஓட்டு ஓட்டுனு ஒட்டிட்டு இருக்கார், இவர் என்னடான்னா “தேமே”னு நின்னு குச்சி மிட்டாய் சாப்பிடுற மாதிரி வேடிக்கை பார்க்குறார். ஐய்யயய்யே, இதுக்கு உதயநிதி பரவால்ல போலயே. வேணாம்... இப்படியே இன்னும் இரண்டு படம் ”நடிச்சா” ஃபீல்டவுட் பண்ணீடுவானுக. நீ திரும்ப தெலுங்கு சினிமாவுக்கே போய்ரு குமாரு. பாவம், ஜெயம் ரவியும், ராஜாவும் வேற சரியான படம் கிடைக்காம கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க, அவுங்களுக்காவது ஹெல்ப்பா இருக்கும்

ஜிம்முக்குப் போன சாம்பார், கணேஷ் வெங்கட்ராம் பத்தியெல்லாம் படத்துலயே போதுமான அளவு ஓட்டிட்டதால, நாம் அவரை விட்டு விடுவோம். ஆனா மனசாட்சியே இல்லாமல் அவரை பார்த்து ஜொள்ளு விடும் ஒட்டுமொத்த அலுவலகத்தையும் நினைத்தால் தான் பாவமா இருக்கு. யாராவது ஐ.டி. ஆண்ட்டி முன் வந்து “இந்தப்படத்துல எங்களின் ரசனையை கேவலப்படுத்துற மாதிரி காட்சி வச்சிருக்காங்க. இந்தப்படத்தை தடை செய்யனும்”னு வழக்கு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். முதல் பாதி முழுக்க லெவல் ஒன்னு, லெவல் இரண்டுன்னு “மருதம் க்ரூப்ஸ் ஹோம் ஸ்வீட் ஹோம்” ரேஞ்சுக்கு ப்ளேடு போட்டுட்டு இருந்த சந்தானம் இரண்டாம் பாதில தான் அடிச்சு ஆடிருக்கார். பள்ளிக்கூட ஃப்ளாஷ்பேக் அப்புறம் “வீடா இல்ல விக்ரமன் சார் படமா” டைமிங் எல்லாம் செம செம. மொத்தத்தில் ஒண்டைம் டைம்பாஸர்.

இவ்ளோ பேசுறியே குமாரு... ஹன்சிகாவைப் பத்தி மட்டும் ஒரு தப்பு சொல்ல மாட்றியே, இன்னா விஷயம்?னு யாரும் சவுண்ட் விட்றீங்களா என்ன, எனக்கு எதுவும் கேட்கவே இல்லையே !

******

Tuesday, June 11, 2013

வாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை

“லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” - மு.சங்கையா  - புத்தக வெளியீடு
வரவேற்புரை - வி.பாலகுமார்

"ஒரு பொருள் விற்பனைக்கு வருகிறது. அதற்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது. ஏனெனில் அந்தப் பொருளை உருவாக்குவதற்கு உண்டான சமூக உழைப்பு என்று ஒன்று இருக்கிறது. வணிக மதிப்பு என்பதைத் தாண்டி அந்தப் பொருளுக்கான உண்மையான ஒப்புமை மதிப்பு என்பது அந்தப் பொருளில் நிறைவாகவோ குறைவாகவோ கலந்திருக்கும் சமூக அக்கறை என்ற சாரம்சத்தைப் பொருத்தே அமைகிறது"

இது பொருள், விலை, லாபம் குறித்து கார்ல் மார்க்ஸ் கூறிய வரிகள். வணிக நோக்கில் தயாரிக்கப்படும் ஒரு பொருளுக்கே சமூக அக்கறை தேவையாய் இருக்கையில், வாழ்வியல் அனுபவத்தையோ, ஒரு பயணத்தின் நிகழ்வுகளையோ, ஏன் ஒரு கதையோ இல்லை புதினமோ எதுவாகினும் அதனைப் படைப்பாக பொதுப்பார்வைக்கு வைக்கும் போது அதற்குள் “சமூக அக்கறை” என்பது எந்த அளவில் கலந்திருக்கிறது என்பதே, அந்தப்படைப்பு காலங்களைத் தாண்டி நிலைத்து நிற்பதற்கான சான்று.

அத்தகைய சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதரின் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். உலகில் மாற்றம் என்பது மட்டும் தான் சாஸ்தவமானது. ஒரு சிறிய முன்னெடுப்பும், சீரிய முனைப்பும், தொடந்த ஈடுபாடும் எத்தகைய மாற்றங்களையும் கொடுக்கவல்லவை. அவ்வாறான மாற்றங்கள வளர்ச்சிப் பாதையில் ஏற்றங்களைத் தரும் தருணங்கள் மகிழ்விற்குரியன ஆகின்றன. தொலைத் தொடர்புத் துறையில் ஒரு சிறந்த அதிகாரியாக, அர்ப்பணிப்பு உணர்வுமிக்க தொழிற்சங்கத் தலைவராக, மனித உரிமை ஆர்வலராக பொதுவாழ்வில் பல முகங்களைக் கொண்ட நம் தோழர் மு.சங்கையா இன்று எழுத்தாளர் என்ற இன்னொரு புதிய முகத்தையும் பெறுகிறார். இன்று அவரது முதல் நூலான “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” என்ற படைப்பு வெளியிடப்படும் சிறப்பான நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நூல், ஆசிரியரது லண்டன் பயணக்கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இதனை வெறும் பயணக்குறிப்பு என்று சுருக்கி விட முடியாத படி, பிரிட்டன் தேசத்தின் வரலாறையும் லண்டன் நகரின் பாரம்பரியத்தையும் உள்ளடக்கிய ஒரு மிகச்சிறந்த ஆய்வு நூலாகவும், அதே சமயம் படிப்பதற்கு சுவாரஸ்யமாக எளிய நடையில் ஒரு புதினத்தைப் போன்ற கதை சொல்லல் முறையில் மிக நேர்த்தியாகவும் எழுதப்பட்டுள்ளது.

உண்மையில் தனது பணிநிறைவுக் குறிப்பையே கவிதைக்கான நேர்த்தியுடன் செழுமையாக தயார் செய்து ஒரு சிறு கையேடாக வெளியிட்டவர் தோழர் சங்கையா. "பணி ஓய்வு என்பது ஏற்றுக் கொண்ட பணிக்குத் தான். இன்னும் காலம் இருக்கிறது. களம் மாறுகிறது. மிண்டும் மற்றொரு தளத்தில் சந்திப்போம்" என்ற குறிப்புடன் தான் இருந்தது அவரது “விடைபெறுகிறேன்” என்ற பணிஓய்வுக் கையேடு. அந்த சொற்கள் எத்தனை உண்மை மிக்கதாக இருக்கிறது!. சிறந்த வாசிப்பனுபவமும், நுன்பார்வையும், பொதுவுடைமை சிந்தனையும் உள்ள தோழர் சங்கையா அவர்கள் தனது படைப்பை வாசிப்போர் களத்தின் முதல் வெளியீடாக வெளிவர சம்மதித்திருப்பதை “வாசிப்போர் களத்திற்கான” மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கௌரவமாகவும் கருதுகிறோம்.

தாங்கள் வாசித்த படைப்புகள் பற்றிய ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்காகவும், நேர்மறையான விவாதங்களுக்காகவும், பலதரப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் பி.எஸ்.என்.எல் தோழர்களின் ஒருங்கிணைப்பில் துவங்கப்பட்ட “வாசிப்போர்களம்” அமைப்பு பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பதிப்பகமாக வளர்ந்து தனது முதல் வெளியீட்டை நடத்துகிறது. இதன் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும், உரிய நேரத்தில் தக்க ஆலோசனை சொல்லும், கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நண்பருக்கும் இணைய வெளியில் கூட்டங்களின் விவாதங்களை, நூல் மதிப்புரைகளை வாசிக்கும், தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தியை வழங்கும் ஒவ்வொரு வாசகருக்கும், வாசிப்பின் பால் ஆர்வம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் “வாசிப்போர் களம்” சார்ப்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

“லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” புத்தகத்தின் சில துளிகள்.

1. ”லண்டன் என் கனவில் வராத பிரதேசம். கனவில் வராதது நிஜத்தில் வந்தது காலத்தின் அதிசயம்” - இது தான் இந்தப்புத்தகத்தின் முதல் வரிகள். முதல் வரியில் தொற்றிக் கொள்ளும் சுவாரஸ்யம் நூல் நெடுக காணக்கிடைப்பது நல்ல வாசிப்பனுபவம்.
2. ஆங்கிலம் என்பது நம்மில் பலருக்கு மேட்டுக்குடியினரின், சீமான் சீமாட்டிகளின் மொழி. ஆனால் ஒரு காலத்தில் பிரிட்டனில் “ஆங்கிலம் ஒரு நீச மொழி, குதிரைக்காரன் மொழி” என்று எண்ணப்பட்ட காலங்களும் இருந்தன. அது பற்றிய சுவையான தகவலை புத்தகத்தை வாசிக்கையில் தெரிந்து கொள்ளலாம்
3. வளங்களை, நேரத்தை மிச்சப்படுத்த கடிகாரத்தை ஒரு மணிநேரம் முன்நோக்கி அல்லது பின்நோக்கி நகர்த்தினால் போதும். இது என்ன விளையாட்டு என்கிறீர்களா.. இதற்கான விடையும் புத்தகத்தில் இருக்கிறது.
4. குழந்தை வளர்ப்பில் நிறைய கண்டிப்புகள் கொண்ட நாட்டில் இந்தியப் பெற்றோர்கள் என்ன பாடுபடுகிறார்கள். அவர்களின் மன அழுத்தத்தின் வெளிப்பாடாய் இந்தியாவிற்கு வந்து இறங்கி விமான நிலையத்திலிருந்து வெளிவருவதற்குள் ஏன் குழந்தைகளை மொத்தி எடுத்திறார்கள் என்பதற்கான உளவியல் காரணம் தெரிய வேண்டுமா.. இந்த புத்தகத்தை வாசியுங்கள்
5. லண்டன் டவர் அரண்மனை என்று சொன்னவுடன் நமக்குத் தோன்றுவது என்ன... மாட மாளிகைகள், ஆடம்பர வாழ்க்கை முறை, அந்தப்புரங்கள் இவை தானே... அவற்றின் மறுபக்கமாய், சித்தரவதைக் கூடங்களாய், கொலைக்களங்களாய், மரண ஓலங்களின் வாசல்களாய் இருந்ததைப் பற்றித் தெரிய வேண்டுமா..அதுவும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
6. லண்டன் மெழுகு மியூசியத்தில் “ஐஸ்வர்யா ராயின்” சிலை அவரது நிஜ அழகுக்கு பக்கத்தில் கூட வரவில்லை. அந்த அழகிய முகத்தின் நுண்ணிய பிரதிபலிப்பற்று பொம்மையாய் நின்ற சிலையைப் பார்த்த ஆசிரியரின் ஏமாற்றத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா, அதுவும் இருக்கிறது.
7. “கார்ல் மார்க்ஸின் சமாதி” லண்டனில் இருக்கிறது. உலகில் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதியான அவரின் கல்லறை எவ்வளவு சிறப்பாக பராமரிக்கப்பட்டிருக்கும் என்ற கற்பனையுடன் சென்ற ஆசிரியருக்கு அங்கே ஏற்பட்ட மன உணர்வுகளும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளன.

இப்படி சுவாரஸ்யமாக, எளிய மொழியில் அழகாக கதை கொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை படித்தது ஒரு இனிய வாசிப்பனுபவமாகவே இருந்தது.

நூல்: “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்”
ஆசிரியர்: மு.சங்கையா
வெளியீடு: வாசிப்போர்களம், மதுரை
தொடர்புக்கு: 94861 02431, 94861 00608
மின்னஞ்சல்: skaruppiah.bsnl@gmail.com

நன்றி: வாசிப்போர்களம்  http://vasipporkalam.blogspot.in/2013/06/blog-post_10.html
******

Monday, June 10, 2013

வேண்டாவெறுப்பா பார்த்த குட்டிப்புலியும், ஏனோ தானோனு எழுதும் திரைப்பார்வையும்

வார இறுதி திரைப்படக்கணக்கை தீர்க்க வேண்டி சும்மா போய்ட்டு வரலாம்னு தான் போனேன். பிறகு தான் ஒரு பேனா பேப்பர் கொண்டு வரலையேன்னு ரொம்ப ஃபீலிங்கா போயிடுச்சு. கவுண்ட்டர் காமெடி கொடுக்க வாய்ப்புள்ள காட்சிகள் வரிசையா வந்துட்டே இருக்கு. ச்சே நோட்ஸ் எடுத்து வச்சா ஒரு பதிவுக்குத் தேறுமேனு ஃபீல் பண்ற அளவு போயிடுச்சுன்னா பார்த்துக்கங்க. படம் முழுக்க அவ்வளவு பன்ச்சை பிச்சுப் போட்டு வச்சிருக்காங்க. அடுத்த சூப்பர் ஸ்டார் யார், அடுத்த உலகநாயகன் யார் என்று ஆளாளாளுக்கு சண்டை போட்டுட்டு இருக்காங்க. ஆனா சந்தேகமே இல்ல சார், கன்பார்ம் சார்...  அடுத்த புரட்சி கலைஞர், சசியண்ணன் தான் சார்... என்ன பாடி லேங்குவேஜ், என்ன ரொமாண்டிக் லுக், என்ன ஆக்‌ஷன்... ப்ப்ப்ப்ப்பாஆ. அதுமட்டுமில்ல கறுப்பு கம்பளி போர்த்துன ராம்கி, தொடை தெரிய கைலி கட்டுன ராஜ்கிரண், ஸ்டைலாய் தலையை சிலுப்பும் டி.ஆர், பெத்த தாய் சேலையைப் போர்த்தி தூங்கும் ராமராஜன் இப்படி அவருக்குள் படுக்கப் போட்டிருந்த பல ரூபங்கள் இந்தப்படத்துல தான் முழிச்சிருக்கு. நீங்கலெலாம் நல்லா வரனுண்ணே!

அப்புறம், பெரிசு சிறுசெல்லாம் சிலம்பாட்டம் ஆடுனப்போ நல்லா கம்பை சுத்துனாங்கல்ல, ஒழுங்கா அதோட பந்தயத்தை முடிச்சுட்டு சசியண்ணன் குட்டியா ஒரு புலியாட்டம் போட்டுட்டு போயிருக்கலாம். படம் டைட்டிலுக்கு பொருத்தமாவாது இருந்திருக்கும். அதை விட்டுட்டு அவரும் சிலம்பாட்டம் ஆடுறேனு கம்பை சுத்தி சுத்தி வர, கேமரா கஷ்டப்பட்டு அவரை சுத்தி சுத்தி, ஒரு வழியா சிலம்பு சுத்துற மாதிரியே சமாளிக்க எடிட்டர் எவ்வளவு சிரமப்பட்டாரோ தெரியல.

ஆனா சசியண்ணே,  சுப்பிரமணியபுரத்தில் இருந்தே உங்களுக்கு இதே வேலையா போச்சு. கூட நாலஞ்சு சின்ன பசங்க கூட சேர்ந்து சுத்துனா உங்களையும் யூத்தா ஒத்துக்குவோம்னு என்னவொரு தன்னம்பிக்கை. நியாயப்படி பார்த்தா கனாகாணும் காலங்கள் பாலாவுக்கெல்லாம் நீங்க சித்தப்பா முறை வேணும். அவனுக செட்டோட சேர்ந்து சுத்துறதெல்லாம் கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவரோ ஓவர். அப்புறம், தொடர்ந்து இரண்டு படத்துல வாய்ப்பு கொடுத்தீங்கங்க்றதுக்காக அந்த லட்சுமி ஆண்ட்டி வேணுமினா உங்க ரொமாண்டிக் லுக்குக்கு மயங்கலாம், ஆனா காசு கொடுத்து படம் பார்க்க வந்த நாங்கல்லாம் என்ன பாவம் பண்ணோம், கொஞ்சம் யோசிங்க. அந்த அம்மையாரை பார்ர்கும் போதெல்லாம், மேம்பாலம் மேல நடந்து போற ஆளை  தரைப்பாலத்திலிருந்து பார்ப்பது போல எட்டி பார்க்க வேண்டி இருக்கிறது. அதுவும் அப்பு, பப்பு கோஷ்டி எல்லாம் அவரை சைட்டடிப்பது எல்லாம் ஸ்கூல் பசங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டிட்ட சாக்லேட் கேட்க லுக் விடுவது போல தான் இருக்கிறது. 

எங்கூர் லோக்கல் சேனல்ல எல்லாம் சுரேஷ் பீட்டர்ஸின் “அக்கா மக, அக்கா மக” பாட்டுக்கு மைக்கல் ஜாக்சன் ஆல்பத்தை தான் தோர்த்து வச்ச்சிருப்பாங்க. அந்த ஸ்டைல்ல சசியண்ணனை பார்த்தவுடனே நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு பார்த்தா, ஃப்ரேம்லயே குட்டிப்பசங்க பேஸ்த்தடிச்சுப் போய் பேயறைஞ்ச மாதிரி பார்த்துட்டு இருந்தாங்க. சரி தியேட்டர்ல பார்க்குற நமக்கே இப்படி இருக்கே, இதெயெல்லாம் சூட்டிங் ஸ்பாட்லயே பார்த்த அந்த சின்னப்பசங்க மனசு என்ன பாடுபட்டுருக்கும் யோசிச்சுப் பார்த்தேன்... பாவம் தான். பின்னனி இசையமைக்க தனியா எதுக்கு காசு கொடுக்கனும், பேசாம பழைய பாட்டெல்லாம் எடுத்துப் போட்டா யாரென்ன கேட்கப்போறாங்கன்னு புகுந்து விளையாடி இருக்காங்க. அதுவே கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிப் போச்சு.

உண்மையில், தென் தமிழக கிராமங்களின் ஒவ்வொரு சிறுதெய்வத்திற்கும் ஒரு கதை உண்டு. நம்ப முடியாத பல சுவாரஸ்யமான, பரிதாபமான, அமானுஷ அல்லது கொடூரமான நிகழ்வினால் அவர்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள் என்ற கர்ண பரம்பரைக் கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். இயக்குநரும் அதை தான் படமாக்க நினைத்திருப்பார் போல. ஆனால் அதை செறிவூட்டும் ஒரு நேர்மறைக்கதையாய் சொல்லாமல், சொந்த சாதிப் பெண்களை கிண்டல் செய்தததற்கு, சாதி மானம் காப்பதற்கு என்று பிற்போக்குத்தனமாய் எடுத்து அட போங்கப்பா என்றாக்கி விட்டார். ”அட போங்கப்பா!”

******