Tuesday, June 11, 2013

வாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை

“லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” - மு.சங்கையா  - புத்தக வெளியீடு
வரவேற்புரை - வி.பாலகுமார்

"ஒரு பொருள் விற்பனைக்கு வருகிறது. அதற்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது. ஏனெனில் அந்தப் பொருளை உருவாக்குவதற்கு உண்டான சமூக உழைப்பு என்று ஒன்று இருக்கிறது. வணிக மதிப்பு என்பதைத் தாண்டி அந்தப் பொருளுக்கான உண்மையான ஒப்புமை மதிப்பு என்பது அந்தப் பொருளில் நிறைவாகவோ குறைவாகவோ கலந்திருக்கும் சமூக அக்கறை என்ற சாரம்சத்தைப் பொருத்தே அமைகிறது"

இது பொருள், விலை, லாபம் குறித்து கார்ல் மார்க்ஸ் கூறிய வரிகள். வணிக நோக்கில் தயாரிக்கப்படும் ஒரு பொருளுக்கே சமூக அக்கறை தேவையாய் இருக்கையில், வாழ்வியல் அனுபவத்தையோ, ஒரு பயணத்தின் நிகழ்வுகளையோ, ஏன் ஒரு கதையோ இல்லை புதினமோ எதுவாகினும் அதனைப் படைப்பாக பொதுப்பார்வைக்கு வைக்கும் போது அதற்குள் “சமூக அக்கறை” என்பது எந்த அளவில் கலந்திருக்கிறது என்பதே, அந்தப்படைப்பு காலங்களைத் தாண்டி நிலைத்து நிற்பதற்கான சான்று.

அத்தகைய சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதரின் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். உலகில் மாற்றம் என்பது மட்டும் தான் சாஸ்தவமானது. ஒரு சிறிய முன்னெடுப்பும், சீரிய முனைப்பும், தொடந்த ஈடுபாடும் எத்தகைய மாற்றங்களையும் கொடுக்கவல்லவை. அவ்வாறான மாற்றங்கள வளர்ச்சிப் பாதையில் ஏற்றங்களைத் தரும் தருணங்கள் மகிழ்விற்குரியன ஆகின்றன. தொலைத் தொடர்புத் துறையில் ஒரு சிறந்த அதிகாரியாக, அர்ப்பணிப்பு உணர்வுமிக்க தொழிற்சங்கத் தலைவராக, மனித உரிமை ஆர்வலராக பொதுவாழ்வில் பல முகங்களைக் கொண்ட நம் தோழர் மு.சங்கையா இன்று எழுத்தாளர் என்ற இன்னொரு புதிய முகத்தையும் பெறுகிறார். இன்று அவரது முதல் நூலான “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” என்ற படைப்பு வெளியிடப்படும் சிறப்பான நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நூல், ஆசிரியரது லண்டன் பயணக்கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இதனை வெறும் பயணக்குறிப்பு என்று சுருக்கி விட முடியாத படி, பிரிட்டன் தேசத்தின் வரலாறையும் லண்டன் நகரின் பாரம்பரியத்தையும் உள்ளடக்கிய ஒரு மிகச்சிறந்த ஆய்வு நூலாகவும், அதே சமயம் படிப்பதற்கு சுவாரஸ்யமாக எளிய நடையில் ஒரு புதினத்தைப் போன்ற கதை சொல்லல் முறையில் மிக நேர்த்தியாகவும் எழுதப்பட்டுள்ளது.

உண்மையில் தனது பணிநிறைவுக் குறிப்பையே கவிதைக்கான நேர்த்தியுடன் செழுமையாக தயார் செய்து ஒரு சிறு கையேடாக வெளியிட்டவர் தோழர் சங்கையா. "பணி ஓய்வு என்பது ஏற்றுக் கொண்ட பணிக்குத் தான். இன்னும் காலம் இருக்கிறது. களம் மாறுகிறது. மிண்டும் மற்றொரு தளத்தில் சந்திப்போம்" என்ற குறிப்புடன் தான் இருந்தது அவரது “விடைபெறுகிறேன்” என்ற பணிஓய்வுக் கையேடு. அந்த சொற்கள் எத்தனை உண்மை மிக்கதாக இருக்கிறது!. சிறந்த வாசிப்பனுபவமும், நுன்பார்வையும், பொதுவுடைமை சிந்தனையும் உள்ள தோழர் சங்கையா அவர்கள் தனது படைப்பை வாசிப்போர் களத்தின் முதல் வெளியீடாக வெளிவர சம்மதித்திருப்பதை “வாசிப்போர் களத்திற்கான” மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கௌரவமாகவும் கருதுகிறோம்.

தாங்கள் வாசித்த படைப்புகள் பற்றிய ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்காகவும், நேர்மறையான விவாதங்களுக்காகவும், பலதரப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் பி.எஸ்.என்.எல் தோழர்களின் ஒருங்கிணைப்பில் துவங்கப்பட்ட “வாசிப்போர்களம்” அமைப்பு பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பதிப்பகமாக வளர்ந்து தனது முதல் வெளியீட்டை நடத்துகிறது. இதன் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும், உரிய நேரத்தில் தக்க ஆலோசனை சொல்லும், கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நண்பருக்கும் இணைய வெளியில் கூட்டங்களின் விவாதங்களை, நூல் மதிப்புரைகளை வாசிக்கும், தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தியை வழங்கும் ஒவ்வொரு வாசகருக்கும், வாசிப்பின் பால் ஆர்வம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் “வாசிப்போர் களம்” சார்ப்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

“லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” புத்தகத்தின் சில துளிகள்.

1. ”லண்டன் என் கனவில் வராத பிரதேசம். கனவில் வராதது நிஜத்தில் வந்தது காலத்தின் அதிசயம்” - இது தான் இந்தப்புத்தகத்தின் முதல் வரிகள். முதல் வரியில் தொற்றிக் கொள்ளும் சுவாரஸ்யம் நூல் நெடுக காணக்கிடைப்பது நல்ல வாசிப்பனுபவம்.
2. ஆங்கிலம் என்பது நம்மில் பலருக்கு மேட்டுக்குடியினரின், சீமான் சீமாட்டிகளின் மொழி. ஆனால் ஒரு காலத்தில் பிரிட்டனில் “ஆங்கிலம் ஒரு நீச மொழி, குதிரைக்காரன் மொழி” என்று எண்ணப்பட்ட காலங்களும் இருந்தன. அது பற்றிய சுவையான தகவலை புத்தகத்தை வாசிக்கையில் தெரிந்து கொள்ளலாம்
3. வளங்களை, நேரத்தை மிச்சப்படுத்த கடிகாரத்தை ஒரு மணிநேரம் முன்நோக்கி அல்லது பின்நோக்கி நகர்த்தினால் போதும். இது என்ன விளையாட்டு என்கிறீர்களா.. இதற்கான விடையும் புத்தகத்தில் இருக்கிறது.
4. குழந்தை வளர்ப்பில் நிறைய கண்டிப்புகள் கொண்ட நாட்டில் இந்தியப் பெற்றோர்கள் என்ன பாடுபடுகிறார்கள். அவர்களின் மன அழுத்தத்தின் வெளிப்பாடாய் இந்தியாவிற்கு வந்து இறங்கி விமான நிலையத்திலிருந்து வெளிவருவதற்குள் ஏன் குழந்தைகளை மொத்தி எடுத்திறார்கள் என்பதற்கான உளவியல் காரணம் தெரிய வேண்டுமா.. இந்த புத்தகத்தை வாசியுங்கள்
5. லண்டன் டவர் அரண்மனை என்று சொன்னவுடன் நமக்குத் தோன்றுவது என்ன... மாட மாளிகைகள், ஆடம்பர வாழ்க்கை முறை, அந்தப்புரங்கள் இவை தானே... அவற்றின் மறுபக்கமாய், சித்தரவதைக் கூடங்களாய், கொலைக்களங்களாய், மரண ஓலங்களின் வாசல்களாய் இருந்ததைப் பற்றித் தெரிய வேண்டுமா..அதுவும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
6. லண்டன் மெழுகு மியூசியத்தில் “ஐஸ்வர்யா ராயின்” சிலை அவரது நிஜ அழகுக்கு பக்கத்தில் கூட வரவில்லை. அந்த அழகிய முகத்தின் நுண்ணிய பிரதிபலிப்பற்று பொம்மையாய் நின்ற சிலையைப் பார்த்த ஆசிரியரின் ஏமாற்றத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா, அதுவும் இருக்கிறது.
7. “கார்ல் மார்க்ஸின் சமாதி” லண்டனில் இருக்கிறது. உலகில் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதியான அவரின் கல்லறை எவ்வளவு சிறப்பாக பராமரிக்கப்பட்டிருக்கும் என்ற கற்பனையுடன் சென்ற ஆசிரியருக்கு அங்கே ஏற்பட்ட மன உணர்வுகளும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளன.

இப்படி சுவாரஸ்யமாக, எளிய மொழியில் அழகாக கதை கொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை படித்தது ஒரு இனிய வாசிப்பனுபவமாகவே இருந்தது.

நூல்: “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்”
ஆசிரியர்: மு.சங்கையா
வெளியீடு: வாசிப்போர்களம், மதுரை
தொடர்புக்கு: 94861 02431, 94861 00608
மின்னஞ்சல்: skaruppiah.bsnl@gmail.com

நன்றி: வாசிப்போர்களம்  http://vasipporkalam.blogspot.in/2013/06/blog-post_10.html
******

2 comments:

  1. "லண்டன் -ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்" புத்தகத்தை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை.கிடைத்த பொழுதில் ஒரு 20 சதம் மட்டுமே சென்றிருக்கிறேன். சொந்தகாசில் வாங்கி முழுமையாக படிக்க அண்ணன் கருப்பையாவிடம் அட்வான்ஸ் புக்கிங் செய்திருக்கிறேன். ஆனால் உங்கள் விமரிசனம் அதிக ஆர்வத்தை தூண்டிவிடுவதால் இரவல் வாங்கி படிக்க தோன்றுகிறது. அருமையான விமரிசனம்.

    ReplyDelete
  2. "லண்டன் -ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்" புத்தகத்தை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை.கிடைத்த பொழுதில் ஒரு 20 சதம் மட்டுமே சென்றிருக்கிறேன். சொந்தகாசில் வாங்கி முழுமையாக படிக்க அண்ணன் கருப்பையாவிடம் அட்வான்ஸ் புக்கிங் செய்திருக்கிறேன். ஆனால் உங்கள் விமரிசனம் அதிக ஆர்வத்தை தூண்டிவிடுவதால் இரவல் வாங்கி படிக்க தோன்றுகிறது. அருமையான விமரிசனம்.

    ReplyDelete