Sunday, July 17, 2016

நான் ஏன் தலித்தும் அல்ல - நூல் அறிமுக விழா


மதுரை, நார்த் கேட் ஹோட்டலில் கடந்த வெள்ளியன்று டி.தருமராஜ் அவர்கள் எழுதிய “நான் ஏன் தலித்தும் அல்ல” என்ற கட்டுரை நூலுக்கான அறிமுக விழா நடந்தது. ஏதேச்சையின் பயணியாக(!) அரங்கிற்குள் நுழைந்தேன். மாணவர்கள், படைப்பாளிகள், பெண்கள் என்று அரங்கு நிறைந்த கூட்டம். ஸ்டாலின் ராஜாங்கம் பேசிக்கொண்டிருந்தார். பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற சொல்லாடல் உருவான விதம், வரலாற்றின் ஊடாக ஆதிக்குடிகளின் இருப்பு குறித்து விளக்கமளித்தார். அடுத்ததாக பேசிய பவனந்தி அவர்கள், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பிற்காகத் தங்கியிருந்த பொழுது தனக்கும் தருமராஜ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதங்கள் பற்றியும், தாங்கள் கொண்டிருந்த கொள்கை கோட்பாடுகள் பற்றியும் கூறினார். இந்த புத்தகத்தில் தான் பொதுவில் விவாதிக்கத் தயங்கும்படியான சில விஷயங்கள் இருப்பதாகவும், அதனை நேர்ப்பேச்சில் தருமராஜ் அவர்களிடம் விவாதிக்க விரும்புவதாகவும் பதிவு செய்தார். அடுத்து பேசிய சுபகுணராஜன் அவர்கள் பார்ப்பனீயத்துக்கு எதிராக வளர்ந்த திராவிட அரசியலின் அசுர வளர்ச்சியையும் பின் திராவிடத்தை தாங்கி/சார்ந்து நின்ற இயக்கங்கள் எவ்வாறு திராவிடக் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தன என்பதையும் சுருக்கமாக கூறினார். அவருமே புத்தகங்கள் குறித்த சில கருத்துக்களை பொதுவில் கூற முடியாது என்றார். அடுத்து புத்தகத்தின் பதிப்பாளரான பத்ரி சேஷாத்ரி பேசினார். உண்மையில் புத்தகத்தின் உள்ளடக்கத்தில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இப்புத்தகம் வெளிவருவதில் தனக்கு உவப்பு இல்லை என்றும், ஆனாலும் பல்வேறு கோட்பாடு, கருத்தாக்கம் கொண்ட பலதரப்பட்ட புத்தகங்களையும் தான் பதிப்பிக்க விரும்புவதாகவும், அதனை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். தருமராஜ் அவர்கள் அடுத்ததாக அயோத்திதாசர் குறித்த ஒரு புத்தகத்தை எழத வேண்டும், அதையும் தன்னுடைய “கிழக்கு பதிப்பகத்திற்காக” எழுத வேண்டுமென்ற வேண்டுகோளையும் வைத்தார்.

இறுதியாக டி.தருமராஜ் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அதுவரை கனமான சூழ்நிலையில் இருந்த அரங்கை தனது மெல்லிய, நட்பான குரலில் இலகுவாக்கினார். ”இந்த புத்தகம் வேண்டுவது ஒரு எளிய நட்பை மட்டுமே, இது ஒரு நட்புக்கான அழைப்பு அவ்வளவு தான், வேறொன்றுமில்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டார். ”இப்புத்தகத்துக்கான தலைப்பு கடும் விவாதங்களையும், முரணான பார்வையையும் ஏற்படுத்தி இருந்தாலும், நான் விரும்புவது சக மனிதர்களிம் ஓர் எளிய நட்பை, காதலை மட்டுமே. என்னை நீங்கள் செய்வதெல்லாம் ஏசல் மட்டுமே. நான் உங்களிடம் எதிர்பார்ப்பது களங்கமற்றை நகைச்சுவையை, பரஸ்பரம் நண்பர்களுக்குள் செய்துகொள்ளும் கேலி கிண்டலை. என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள  உங்களுக்கு எனது தலித் என்ற இந்த அடையாளம் தடையாக இருக்குமானால் உங்களின் நட்பிற்காக நான் அதையும் துறந்து வரத் தயாராக இருக்கிறேன். நான் ஏன் தலித்தும் அல்ல என்று கூறுகிறேன் என்று உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா?” என்று நிதானமாகவும் தெளிவாகவும் கூறினார். “சமூகத்திடன் தான் எதிர்பார்ப்பது விடுதலை அல்ல. விடுதலை ஒருவரை வென்று அவரைக் காயப்படுத்தி அடையக்கூடியது, நான் எதிர்பார்ப்பது சமநிலையுடன் கூடிய சமாதானத்தை. சமாதானத்தில் ஒருவரும் தோற்றவர் அல்ல. அந்த ஒரு இணக்கத்தைத் தான் நான் பெற விரும்புகிறேன். அதனையே இந்தக் கட்டுரைகளும் பேச முயற்சிக்கின்றன” என்றார். இந்தப்புத்தகத்துக்கு, தலித் அல்ல காதலன் என்ற தலைப்பைத் தான் முதலில் வைக்க எண்ணியதாகவும், அது தான் இந்த புத்தகம் சொல்ல நினைக்கும் கருத்து என்றும் கூறினார். நட்பின் அழைப்பாக அமைந்த தருமராஜ் அவர்களின் குரல் பார்வையாளர்களின் தோளில் கைபோட்டு அணைத்துச் சென்றது போலிருந்தது.

அந்த மாலைப்பொழுதை, இனிமையாய் மாற்றிய பேராசிரியர் தருமராஜ் அவர்களுக்கும், அழைப்பு விடுத்த கவிஞர். சமயவேல் அவர்களுக்கும் நன்றி !

2 comments:

  1. nandraga irundhadu ungalathu arikkai

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்

    புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

    நன்றி

    நமது தளத்தை பார்க்க Superdealcoupon

    ReplyDelete