Friday, October 24, 2014

நியாயமாரே !!!

கங்காணி, இந்த வருசம் உருப்படி எல்லாம் எப்படி?

ஐயா, சிங்கர் சூப்பர்ல ஒரு பத்து சின்ன உருப்படிங்கைய்யா. அப்புறம் மத்த ரியாலிட்டி ஷோ வகையறாவுல ஒரு பதினஞ்சு. அப்படி இப்படினு ஒரு இருபது முப்பது புது உருப்படிங்க தேறும். இதுகல, ஒரு ரெண்டு மூனு வருசம் களை புடுங்க விட்டுட்டு அடிச்சு பத்தி விட வேண்டியது தான். இந்தவாட்டி ஜோடில எல்லாம் பழைய டிக்கட்டுங்க தாய்யா, ஒன்னும் புதுசு இல்ல...

அந்த ஜட்ஜு?

ஐயோ, அது ரொம்ப பழசுங்கய்யா.

சரி, விடு... துரைமாருங்க திருவிழாவுக்கு வரும் போது பழைய ஆளுங்க எல்லாம் வந்து வரிசைல நிக்கும்ல?

பின்னே, கால்ல சங்கிலி கட்டி தானே வுட்டுருக்கு.. எங்க கூப்பிட்டாலும் வந்து ஒப்பாரி வச்சுட்டு போகுங்க. என்ன ஆளுக்கொரு அவார்டு கொடுக்கனும், அவ்ளோ தான்.

கழுத, காசா பணமா.. அடிச்சு விடு.  முன்ன, பின்னன்னு அதை வச்சு ஒரு வருசம் ஓட்டலாம். ஏங்கங்காணி, இந்த நீயா நானா உருப்படிங்க எல்லாம் கிழடு தட்டி போயிடுச்சேய்யா, பூராப்பேத்தையும் பத்தி உட்டுட்டு புது ஐட்டமா புடிக்க வேண்டியது தானே.

எங்க சாமி, ஒன்னும் செட்டை விட்டு நகர மாட்டுதுக... ராத்திரி பகலா அங்கனயே கெடயா கெடக்குதுக.  எல்லாத்துக்கு வருசக் கூலி பேசி செட் ப்ராப்ர்டியா தான் உக்கார வச்சிருக்கோம், ஒன்னும் பாதகமில்ல. ஆனா சீரியல் கோஷ்டிங்க தொல்லை தாய்யா கொஞ்சம் அதிகமா இருக்கு. சொல்லாம கொள்ளாம திடீர்னு கல்யாணங்கட்டிட்டு வந்துருதுக. அது கூட பரவால்லன்னு ஒரு நாப்பது நாப்பத்ஞ்சு வயசு வரைக்கும் தாவணி கட்டி சுத்த வுட்டு சமாளிக்கிறோம். அதுக வெக்கப்பட்டு நடிக்கிறேனு பூராப்பயலுகளுக்கும் வெசம் வச்சு சாகடிக்குதுக. ஆனா சினிமா ஆசை வந்து பாதில ஓடிப்போற பொடியனுகளை தான் தடுக்க முடியல.

ஓடுற பொடியனுக கால் நரம்பை வெட்டி விடனுமய்யா. மீறிப்போனா கால்ல சூடு வை, அப்படியும் தப்பிச்சு போய்ட்டானா, ஒன்னும் பிரச்சனையில்ல. அடுத்த திருவிழாவுக்கு அவனுகளையே கூப்பிட்டு “பிரைடு ஆஃப் பரதேசி” அவார்டு கொடுப்போம். கூத்தை தொடர “இவனுக்கு பதில அவன்”னு வெய்ட்டிங் லிஸ்ட்ல இருந்து ஒருத்தனை இறக்கிவிடு. ஆனா ஒன்னு, ரொமான்ஸ் பண்றேன்னு சினுங்குறவகளை மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லனும்ய்யா, கருமம் என்னாலயே தாங்க முடியல.

ஐயா, நாம போடுற படத்துக்கெல்லாம் இப்ப மவுசு குறைஞ்சு போச்சுங்கய்யா
என்னய்யா சொல்ற?

பின்ன என்னங்கய்யா,  கும்கில நடிச்ச மாணிக்கமே ரிடயர்ட் ஆகிருச்சு, அல்லியெல்லாம் ஆண்ட்டி பலவருசம் ஆகிருச்சு. நாம இன்னும் இதையே புதுப்படம்னு சொல்லி திருப்பி திருப்பி போட்டு ப்ளேயரை தேய்ச்சுட்டு இருக்கோம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வராட்டி வர்ற வருசத்துல என் கணக்கையும் முடிச்சு விடுங்க. ஊருப்பக்கம் போய் பொதிகைல வயலும் வாழ்வும் பார்த்துக்குறேன்.

அட பொறுமையா இருய்யா, ரொம்ப தான் கோச்சுக்குற.... வாராவாரம் நாம நடத்துற கோட்டு மேட்டர் தான் இண்டர்நெட் முழுக்க பெரிய பேச்சு தெரியும்ல
ஆமா, எல்லாம் யோக்கியனுக அங்க தான் துண்டைப் போட்டுட்டு உக்கார்ந்திருக்கானுக... பூராப்பயலுகளும் நம்ம நல்லா காறி காறி தான் துப்புறானுக, ஆனா ரெண்டு செகண்ட் மூஞ்சி தெரியும்டானு சொன்னா, நாலு ராத்திரி மூனு பகலுக்கும் மேல பல்லுல பச்சத்தண்ணி படாம பூட்டியிருக்க நம்ம ஸ்டுடியோ நிலைக்கதவை புடிச்சு தொங்குனமனியே தான் நிக்குறானுக. அதுல நம்மள யாரும் அடிச்சுக்க முடியாதுய்யா.

அப்போது அடுத்த சீசனுக்கான ஆடிஸன் முடிந்து, வெகு உற்சாகமாக புதியவர்கள் உள்ளே நுழைகிறார்கள். கங்காணி மெயின் கேட்டை இழுத்து மூடுகிறார்.

உள்ளேயிருந்து பரிதாபமான ஓலம் ஒலிக்கிறது.

“டிவில நடிக்கப்போறோம்ங்கிற ஆசைல இந்த நரகுழில வந்து விழுந்துட்டீங்களே, போச்சே, நியாமாரே....... உங்க மொத்த வாழ்க்கையையும் ரிபீட் டெலிகாஸ்ட் போட்டே சாகடிக்கப்போறானுகளே.....   நியாமாரேஏஏஏஏ..............”

******

No comments:

Post a Comment