Monday, August 26, 2013

விருட்சத் திருவிழா



மதுரையைச் சுற்றிய தொன்மையான இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அந்த இடங்களைப் பார்வையிடவும் என்று குழுமிய நண்பர்கள் “பசுமை நடை” என்ற அமைப்பை உருவாக்கி, மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை மலைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பசுமை நடை குழுவினரின் இருபத்தி ஐந்தாவது பயணத்தையொட்டி சிறப்பு ஏற்பாடாக “விருட்சத் திருவிழா” நடைபெற்றது.

நேற்று (25/08/2013 - ஞாயிறு) மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் நடைபெற்ற “விருட்சத் திருவிழா”விற்குச் சென்றிருந்தோம். மலையடிவாரத்தில் அமைந்துள்ள குளத்தின் கரையிலுள்ள ஆலமரங்களின் பிரம்மாண்ட நிழலில், இயற்கையான சூழலில் இனிதே நடந்தது திருவிழா. இந்த அமைதியான சுற்றுப்புறத்தின் காரணமோ இல்லை “பசுமை நடை”யின் இயல்போ தெரியவில்லை, விழா முழுமையுமே நிதானமாக, வெற்று பரபரப்பின்றி, இயல்பான இளைப்பாறுதல் தருவதாய் அத்தனை சுகமாக இருந்தது. விழாவில் பேசியவர்களும் மேடைப்பேச்சு போல நீட்டி முழக்காமல், தேர்ந்த கதை சொல்லிகள் போல் மென்மையாகவே பேசியது கேட்க இதமாக இருந்தது.

பொதுவாக பொதுப்பயன் கருதிய சமூக நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் “ஒளிவட்டம்” பொருந்திய பிரபலங்களின் வரத்து அதிகமாய் இருந்தால், நிகழ்ச்சியின் மையப்புள்ளியை விட்டுவிட்டு இந்த பிரபலங்களைச் சுற்றியே கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். அதனாலேயே அத்ததைய நிகழ்வில் ஒன்ற பார்வையாளர்களுக்கு சிறு மனத்தடங்கல் இருக்கும். ஆனால் நேற்று நடந்த “விருட்சத் திருவிழாவில்” அத்தகைய ஒளிவட்டங்களின்றி ஒரு குடும்ப விழா போன்று ஆளாளுக்கு இழுத்துப் போட்டு அனைத்து வேலைகளையும் இயல்பாக செய்தனர். அதுவும் சுறுசுறுப்பாக இங்குமங்கும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்த இளைஞர்கள் இணையமேற்றுவதிலிருந்து இலையெடுப்பது வரை புகுந்து விளையாடினர்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “விளையாட்டு முகாம்”. கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், களிமண்ணில் பொம்மை செய்தல் என்று அமர்க்களப்படுத்திவிட்டனர். குழந்தைகளைக் குழுக்களாக ஒருங்கிணைத்து, அவர்களை அலுப்படைய விடாமல் தொடர்ந்து உற்சாகமூட்டி பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்திய தன்னார்வலர்களின் பணி பாராட்டுதற்குரியது. தன்னார்வலர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் போன்று தான் தோன்றினார்கள். தங்களுடைய விடுமுறையை இவ்வாறு சமூக நிகழ்வுகளுக்காக, அதுவும் மைய நிகழ்வு தனியாக நடந்து கொண்டிருக்கும் போது இவர்கள் குழந்தைகளை விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான பொழுபோக்கில் ஈடுபடுத்தும் பணிக்காக வந்திருந்து ஆர்வத்துடன் பங்கேற்றது வியப்பாய் இருந்தது. இறுதியில் முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பரிசுப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 

விழாவில், மதுரையைச் சுற்றியுள்ள அரிட்டாபட்டி, அழகர்மலை கிடாரிப்பட்டி, யானைமலை, திருப்பரங்குன்றம், கீழகுயில்க்குடி உள்ளிட்ட பல்வேறு பழமை வாய்ந்த இடங்களைப் பற்றிய ஆவனம், “மதுர வரலாறு” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், தேநீரும், பருத்திப்பாலும், மதியம் உணவும் வழங்கப்பட்டது. மொத்தத்தில் நம் பூர்வீக கிராமத் திருவிழாவிற்கு சென்று ஊர் சுற்றிவிட்டு, குளக்கரையோரத்து ஆலமர நிழலில் காலாற அமர்ந்து சொந்த பந்தங்களிடம் கொஞ்சம் கதைகேட்டுவிட்டு, பார்த்துப் பார்த்து பசியாற்றிய நண்பர்களின் விருந்தோம்பலில் வயிறு நிறைய உண்டு வீடு திரும்பிய மகிழ்வைத் தந்தது நேற்றைய முற்பகல் பொழுது. பிரதிபலன் பாராது விழாவை முன் நின்றும், பின் நின்றும் சிறப்பாக நடத்தியிருக்கும் பசுமை நடை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மனம்நிறைந்த வாழ்த்தும், நன்றியும்.



படங்கள்: நன்றி - இணையம்
******

4 comments:

  1. பதிவிற்கு நன்றி பாலகுமார் அவர்களே.

    நல்லதோர் பதிவு.

    ReplyDelete
  2. இதுபோன்ற நிகழ்வுகள்தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  3. “விருட்சத் திருவிழா" நல்ல நிகழ்வு வாழ்த்துகள்.

    ReplyDelete