Wednesday, September 10, 2014

மதுரை புத்தகக் கண்காட்சி - 2014

சென்ற வாரத்தில் மதுரையில் புத்தகக் கண்காட்சி களை கட்டியிருந்தது. (29/08/2014 முதல் 07/09/2014). சித்திரைத் திருவிழாவிற்குப் போய் அழகரை வெவ்வேறு இடங்களில் வைத்து வேடிக்கை பார்த்து விட்டு வருவது போல் நானும் நான்கைந்து முறை கண்காட்சியை எட்டிப்பார்த்து விட்டு வந்தேன். ஃபேஸ்புக்கின் உபயத்தில்,  அங்கே வந்திருந்த கூட்டத்தில் பத்தில் ஒருவரை ஏற்கனவே பார்த்தது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. நேரடி அறிமுகம் இல்லாதவர்களிடம் போய் பேசுத் தயக்கமிருந்ததால், பேசவில்லை. அப்புறம்  ஆங்காங்கே பிரபலங்களின் ஆட்டோகிராப் படலங்களும், போட்டோகிராப் படலங்களும் சிறப்பாய் நடந்து கொண்டிருந்தன. நமக்குத் தான், அந்த காற்று பட்டால் அலர்ஜி ஆகிவிடுமே. லைம்லைட்டில் இருப்பவர்களிடமிருந்து போதிய தூரம் விலகி மெதுவாய், பாதுகாப்பாக கூட்டத்துக்குள் கலந்து விட்டேன். பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

இந்த வருடம் வாங்கிய புத்தகங்களின் பகுப்பு பயங்கர கலவையாக அமைந்து விட்டது. இந்த புத்தகங்கள் எல்லாம் வாங்க வேண்டுமென்ற என்ற முன்முடிவும் இல்லாமல் கண்ணில்பட்டதில் பிடித்ததை எடுத்திருக்கிறேன். காலச்சுவடு அரங்கில் அறுபது சதவீத கழிவில் நல்ல சில புத்தகங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்தும் கொஞ்சம் வாங்கினேன்

சொல் என்றொரு சொல் / ரமேஷ்-பிரேம்
கெடை காடு / ஏக்நாத்
விலங்குப் பண்ணை / ஜார்ஜ் ஆர்வெல் (தமிழில் க.நா.சு)
நான் காணாமல் போகும் கதை / ஆனந்த்
புதிய சலனங்கள் / இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் (2004)
பனிமூடி மீது ஒரு கண்ணகி / எம்.வி.வெங்கட்ராம்
வெண்ணிற இரவுகள் / ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (தமிழில் ரா.கிருஷ்ணையா)
தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி / சில்வியா பிளாத் (தமிழில் கீதா சுகுமாரன்)
கயம் / குமாரசெல்வா
ஆட்டிஸம் - சில புரிதல்கள் / எஸ்.பாலபாரதி
ஆயிஷா / இரா.நடராசன்

கண்காட்சிக்குள் உள்ளே நுழையும் போதே, புத்தகங்களின் அருமை பற்றி பல்வேறு துறைசார் விற்பன்னர்களின் உரையை ஒலிபரப்ப ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் உரை வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.
"கல்யாண வீட்டுக்குப் போனா மொய் வச்சிட்டு, தாம்பூலப்பை வாங்காம திரும்பி வாரோமா ? புத்தக கண்காட்சிக்கு வந்தா மட்டும் நல்லா சுத்திப்பாத்துட்டு ஒரு புத்தகமும் வாங்காம வெறுங்கையை வீசிட்டு போகலாமா, நீங்களே சொல்லுங்க !”

நம்ம மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக வந்து சுற்றிப் பார்த்து விட்டு, பதிப்பாளர்களுக்கு டாட்டா காட்டி விட்டு போய்விடுகிறார்கள் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.

அதை விட இன்னொரு சுவாரஸ்ய நிகழ்வு, பிரபலங்கள் தங்களை ப்ராண்டாக நிறுவ எவ்வளவு திட்டங்கள் தீட்டி உழைக்கிறார்கள் என்று புரிந்தது. புத்தகங்களை வாங்கி விட்டு வந்து கொண்டிருக்கும் போது, ஒரு இளைஞர் அழைத்தார்

“சார், அந்த ஸ்டாலுக்குக் கொஞ்சம் வர முடியுமா, நீங்க வாங்குன புத்தகத்துல எழுத்தாளர் ............. ஆட்டோகிராப் போட்டுக் கொடுப்பார் சார்”

“இல்லங்க, எனக்கு இண்ட்ரஸ்ட் இல்ல”

“சார், அவரு ஃபேமஸ் ரைட்டர் சார், டீவில கூட அடிக்கடி பார்த்திருப்பீங்களே”

“ஆமா, தெரியும்.. ஆனா அவர் புக் எதுவும் நான் வாங்கலீங்க!”

“பரவால்ல சார், எந்த புக்னாலும் கையெழுத்து போடுவார், ப்ளீஸ் சார்”

“இல்லிங்க, சாரி”

“சார், நீங்க கையெழுத்து வாங்குனா அவருக்கு ஒரு என்கரேஜ்மெண்டா இருக்கும், அதான்”

“இல்லிங்க, பரவால்ல.. ஆமா நீங்க யாரு”

“அவரு ஸ்டாஃப் சார்”

“ஓகேங்க, நீங்க டாட்கெட் அச்சீவ் பண்ண வாழ்த்துகள்... பை”

அவருக்கு ஆறுதல் வாழ்த்து சொல்லி விட்டு நகர்ந்தேன். ம்ம்ம்ம், மக்கள் என்னமா மார்க்கெட்டிங் பண்றாங்க... !

*******************

3 comments:

  1. அந்த பிர்ர்ர்ரபல எழுத்தாளர் பேரையும் சொல்லி இருக்கலாமே !!!!

    ReplyDelete
  2. ஐயா, கெடை காடு படிச்சுட்டு எழுதுங்க.

    ReplyDelete
  3. நாங்க ஆடுமாடு காலத்து ரசிகர்களாச்சே :)
    இப்போ “கெடை காடு” தான் ஓடிட்டு இருக்கு. முடிச்சுட்டு கண்டிப்பா எழுதுவேன்.

    ReplyDelete