Tuesday, September 4, 2012

முகமூடி - நாங்களும் இருக்கோம்


உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக என்று அவ்வப்போது சீன மொழிமாற்றப் படங்களை தமிழ் அலைவரிசைகளில் ஒளிபரப்புவார்கள். மிக சாதாரண வேலை செய்து கொண்டு ஒரு பெரியவர் இருப்பார். அவர் தான் உலகின் மிகச்சிறந்த தற்காப்புக்கலை நிபுணர். அவரிடம் வித்தை கற்ற சீடர்களில் ஒரு ’கெட்ட’ சீடர் தீயவழியில் சென்று, கற்ற தற்காப்புக் கலைகளை சமூகத்தை சீரழிப்பதற்காகவும், பொதுமக்களை கொல்வதற்காகவும், குறுக்கு வழியில் பெரும்பொருள் ஈட்டுவதற்காகவும் பயன்படுத்துவார். அதை தட்டிக்கேட்கும் குருவையும் கொன்று விடுவார். குரு இறப்பதற்கு முன்பாக தன்னிடம் உள்ள அரிய வித்தை ஒன்றை மற்றொரு ’நல்ல’ சீடருக்கு கற்றுக் கொடுத்து விட்டு இறந்து விடுவார். அந்த ’நல்ல’ சீடர் இறுதிக் காட்சியில் ‘கெட்ட’ சீடரை அந்த பிரத்யேக வித்தை மூலமாக வீழ்த்துவார். இடையில் நேர நிரப்பியாக சில கோமாளித்தனங்கள் செய்வார். நாயகியை கவர முயற்சிப்பார். அப்பாவுக்கு கெட்ட பிள்ளையாகவும், தாத்தாவுக்கு நல்ல பிள்ளையாகவும் நடந்து கொள்வார். முடிவில் நாயகியை கைகோர்ப்பார், சுபம்.

வழக்கமாக, நான் பார்க்க நினைக்கும் படங்களுக்கான விமர்சனங்களை முன்னரே படிப்பதில்லை. “முகமூடி”யை பார்க்க எந்த முன்முடிவும் இல்லாததால் இணையத்தில் கிழித்துத் தொங்க விட்டிருந்த அனைத்து தோரணங்களையும் கண்ணாரக் கண்டிருந்தேன். படம் வெளியாகிய முதல் வாரயிறுதியிலேயே பார்க்க வாய்க்கும் என நினைக்கவும் இல்லை. குடும்ப விழாவிற்கான முதல் நாள் இரவு, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏதேனும் புதுப்படம் செலவது மரபு. கண்ணில் தெரிந்தது “முகமூடி” தான். 

பசங்களாக சேர்ந்து ஒரு பத்து பேர் சென்றோம். போகும் போதே “நான் அப்பவே சொன்னேன்ல” விருது பெறும் பொருட்டு படத்தின் சூப்பர் ஹீரோ தன்மையை லைட்டா சொல்லி மக்களை திடப்படுத்தப் பார்த்தேன். ”ப்ளாக்ன்னு ஒன்னு கிடக்கு, பொழுதன்னைக்கும் அதப் படிச்சிட்டு இப்படித்தான் அண்ணன் எதையாவது உளறும்” என்று தம்பிமார்கள் அண்ணனுக்கு மதிப்பளித்து விட்டு படம் பார்க்க ஆர்வமாகினர். நான் எங்கே என்ன குறியீடு இருக்கிறது என்று அலர்ட்டானேன். முதல் காட்சியிலேயே ஒரு பூனையைக் காட்டினார் தமிழகத்தின் ஒரே உலக இயக்குநர். அப்புறம் ஒரு நாய், பிறகு அந்த நாயின் குரைப்பு. பிறகு சிறிது நேரம் கழித்து, “பாருக்குள்” செல்வதற்கு முன் ஹிட்லராக இருந்தவர், வெளியே வரும் போது சாப்ளினாக மாறினார். அப்புறம் கொஞ்ச நேரத்தில் லேசா தலைவலி.  சரி, நிறுத்திக்குவோம், இதுக்குமேல் உற்றுப் பார்த்தால் உலக சினிமா தாங்காது என்று முடிவு செய்து உலகக் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு சும்மா படம் பார்ககத் துவங்கினேன். படம் முடியும் போது மேலே சொன்ன சீன டப்பிங் மாதிரி ஒருவழியாக “சுபம்” சொல்லி அனுப்பினார்கள்.

எனக்கும் என்ன சந்தேகம்னா... சூப்பர் ஹீரோ, சூப்பர் ஹீரோ என்று பயங்கரமாக விளம்பரப்’படுத்தி எடுத்தார்களே, அந்த சூப்பர் ஹீரோவை கடைசி வரை கண்ணிலேயே காட்டவில்லையே. ஒரு வேளை இரண்டாம் பாகம் எதும் வருகிறதா என்று தெரியவில்லை. அப்புறம் அந்த ரோபோ செய்யும் தாத்தா கேரக்டரில் ரஜினியையும், குறுந்தாடி தாத்தா கேரக்டரில் கமலையும் ஏன் உலக இயக்குநர் கிண்டல் அடித்திருக்கிறார் என்று புரியவில்லை.

ஒருவேளை இவர்கள் விளம்பரம் ஏதும் செய்யாமல் சும்மா இருந்திருந்தாலே, இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்காதோ என்று தோன்றுகிறது. தங்களை அறிவாளிகளாக கற்பிதம் செய்து கொள்ளும் சாமானியர்கள் பாவம், இந்தப்பக்கமும் செல்ல முடியாமல் அந்தப்பக்கமும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள் போலும்.

இணையத்தின் எதிர்மறை விமர்சனங்களை முழுதும் சுமந்து கொண்டு படம் பார்த்த எனக்கு, அவ்வளவு ஒன்றும் மோசமில்லை என்று தான் தோன்றியது. ஆனால் இணையம் சாராத பார்வையாளனுக்கு படம் பயங்கர ஏமாற்றத்தையே தந்திருக்கும். உலக இயக்குநரின் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என தெரியவில்லை. 

சுபம் !
******

4 comments:

  1. Nama Helpum panna mattom encourageum panna mattom Iduve oru english flimla bush bushunu oruthan nool vitta mattum papom apdithana nanbare

    ReplyDelete
  2. படம் வெளியான மறுநாள் சென்று நொந்து போனேன். நீங்கள் சொன்னது போல சூப்பர் ஹீரோ இறுதி வரை ஆளையே காணோம். வில்லனாக வரும் நரேன் பரவாயில்லை.

    ReplyDelete
  3. சீன தாத்தா ஒப்பீடு செம.

    ReplyDelete
  4. விமர்சனம் அருமை!!!!!

    ReplyDelete