எனக்கு குறுந்தகவலில் வந்த கேள்வி.
" நான் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்குக் போராடிக் கொண்டிருக்கிறேன் என நினைத்துக் கொள்ளவும், இந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு பாடலை அர்ப்பணிக்க வேண்டுமென்றால் நீ எந்த பாடலைத் தேர்ந்தெடுப்பாய்? என் மேல் உண்மையிலேயே அக்கறை இருந்தால், உடனடி பதில் அவசியம்"
அலுவலக மண்டைக்காய்ச்சலின் உச்சத்தில் இருந்த நேரத்தில் வந்த இந்த குறுந்தகவலுக்கு நான் அனுப்பிய பதில்,
"வெளக்கெண்ணைகளா, சாகப் போற நேரத்துல கூட பாட்டு டெடிகேட் பண்ணாத் தான் சாவீங்களா ? எவனோ ராப்பகலா உருவாக்குனதை நீங்க நோகாம டெடிகேட் பண்ணுவீங்களாக்கும் &%^&%^*& ???"
எதிர்முனையைப் புரிந்த வரையில், "என்ன பாட்டு பிடிக்கும்னு கேட்டா அதுக்குக் கூட திட்டுவீங்க?" என்ற பதிலை எதிர்பார்த்திருந்தேன். நல்ல வேளை, எதிர்முனை என்னை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் நட்பு என்பதால் ஒரு ஸ்மைலி மட்டும் பதிலாக வந்தது.
******
சென்ற வாரம் மதுரை நகர் முழுவதையும் ஒரு போஸ்டர் ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தது. வழக்கம் போல் அண்ணன் "அ"னாவை வாழ்த்தி தான் என்றாலும், "கலைஞரின் குமுகியே வருக!" என்ற வாசகம் புதிதாக இருந்தது. காட்டு யானைகளை கட்டுக்குள் கொண்டு வர பயன்படுத்தப்படும் "கும்கி" யானையாக அண்ணன் இருக்கிறார் என்பதைத் தான் உடன்பிறப்புகள் மெய்சிலிர்க்க புகழ்ந்திருக்கிறார்கள் என யூகிக்கிறேன். வாசகம் தயாரிப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் பதினோரு நபர் குழுவிற்கு மதுரை மக்களின் சார்பாக வாழ்த்துகள். பின்னே, ஒரு இரண்டு நொடியாவது சிரிக்க வைக்கிறார்களே !
******
மெகா சீரியல் கேப்பில் வேறு வழியில்லாமல் விளம்பரம் பார்க்கும் வேலையற்ற என் போன்றோர்க்கு ஒரு அறைகூவல்: "கோடி கோடியாய் நாயகர்களுக்கு கொடுத்து எடுக்கப்படும் விளம்பரங்கள், ஒன்று சுவாரஸ்யமாகவாவது இருக்க வேண்டும், இல்லை விளம்பரப் படுத்தப்படும் பொருள், நடிக்கும் நடிகர் பிம்பத்தையாவது உயர்த்த வேண்டும். இது எதுவும் இல்லாமல் கடுப்பேற்றும் உப்பு சப்பில்லாத நகைக்கடை, அடகுக்கடை விளம்பரங்கள் வரும் போது சேனல் மாற்றி நம் புறக்கணிப்பை தெரிவிப்போம், வாருங்கள்!"
******
மனுஷ்யபுத்திரனின் "அதீதத்தின் ருசி" வாசித்தேன். ( பின்ன சும்மாவா, கவிதைத் தொகுப்பெல்லாம் வாசிப்போமாக்கும்!!!). இரண்டு நாட்களாக மூக்கால் பேசுவது போலவே ஒரு உணர்வு. கவிதை எங்கெங்கும் அவ்வளவு மெல்லினம்.
சட்டென மனதில் ஒட்டிக் கொண்ட இந்த வரிகள், இறங்க மறுக்கின்றன. காரணம் தெரியவில்லை.
"இளமையில் தேவதையாக இருந்தவர்கள்
சாத்தானாக மாறும்போது
பிறந்ததிலிருந்தே
சாத்தானாக இருப்பவர்களை
நடுநடுங்கச்செய்தார்கள்"
******
கடந்த ஞாயிறு கவிஞர் நேசமித்ரனை மதுரைப் பதிவர்கள் சந்தித்தோம். பேச்சினூடே அவர் சொன்ன ஒரு விஷயம் ஏற்புடையதாய் இல்லை. எவ்வளவு மறுத்தும் அவர் பிடிவாதம் பிடிக்கவே வேறு வழியில்லாமல் ஒப்புக்கு சரி என்று ஒப்புக் கொண்டு வந்து விட்டேன். அவர் சொன்ன விஷயம், நான் சுவாரஸ்யமாக எழுதுகிறேனாம், இன்னும் நிறைய எழுத வேண்டுமாம். அது சரி. நான் என்ன வச்சுக்கிட்டா சார் வஞ்சகம் பண்றேன்.
******
நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
******